நான் இராமானுசன் பகுதி 7

வைஷ்ணவம் ஆரம்பத்தில் இப்படி இருந்ததில்லை என்று சொல்லிய நான் சற்று நிறுத்தினேன்.

இவருக்கு எங்கிருந்து துவங்குவது என்பதில் எனக்கு ஒரு சம்சயம்* இருந்தது.

வேதத்திலிருந்து துவங்கி யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளுக்கு விளக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ஆரியர்கள் என்றோரு இனத்தார் மாடு மேய்த்தபடி பாரசீகம் தாண்டியிருந்து வந்து திராவிட தேசத்தை அடிமைப்படுத்தினார்கள் என்று இன்னும் சில நூறு ஆண்டுகளில் பேசப்படப் போகிறது. அதுவே உண்மை என்றே பலராலும் ஒப்புக்கொள்ளப்படப் போகிறது. எனவே ஆரியர்கள் என்றொரு கூட்டத்தின் மேல் வன்மம் அவிழ்த்துவிடப் படப் போகிறது. அதனால் சரியான வரலாறு தெரியாமல் மிலேச்ச அரசர்கள் அளிக்கப் போகிற வரலாற்றை நம்பப்போகிறார்கள் மக்கள். இந்த என் எழுத்துக்களை நீங்கள் படிக்கும் காலத்திலும் அவ்வாறே மிலேச்ச அரசுகளின் தாக்கத்தால் உங்கள் வரலாறு தெரியாமல் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.

ஒரு வேளை நான் எழுதுவது உங்களுக்குக் கிடைத்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது அல்லவா ?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  இதிஹாசம் என்றாலே பரிகாசம் செய்யப் போகும் ஒரு காலமும் வரப் போகிறது என்று என்னவோ மனதில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இதிஹாசங்களே பொய் என்று ஒரு நீண்ட நெடிய பிரச்சாரம்  நடைபெரும். இதி ஹாசம் என்பது என்ன ? ‘இது நடந்தது’ என்பதே இதி ஹாசம் என்பதன் பொருள்.

இப்படி இதிஹாஸங்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை வேதங்கள். இவை எழுதப்படவில்லை. வேதங்கள் ரிஷிகளால் உணரப்பட்டன. உணரப்பட்டவை உபதேசிகப்பட்டன. ஆனால் எழுதப்படவில்லை. எனவே இவை ‘ஸ்ருதி’ என்று அழைக்கப்பட்டன ( ஸ்ருதி என்பது காதால் கேட்கப்படுவது என்று அர்த்தம்). தமிழில் கூட வேதங்களை ‘எழுதாக் கிளவி’ என்று சொல்வார்கள்.

இந்த வேதங்களின் சாரங்கள் உப-நிஷத்துக்கள் எனப்பட்டன. ‘உப-நிஷதம்’ என்றால் ‘அருகில் அமரவைத்தல்’ என்று பொருள். இவை கேள்வி- பதில் வடிவில் இருப்பன. பாரத கலாச்சாரத்தில் கேள்வி-பதில் என்பது ஆணிவேர். எதையும் கேள்வி கேட்கலாம். 108 உப-நிஷதங்கள் உள்ளன என்று தெரிகிறது.

‘ஸ்வாமி, தேவரீர் திடீரென்று வேதத்தின் அருகில் போகிறீரே, தங்கள் தத்துவம் என்ன ஆனது ?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள். ஜைனத் துறவிகளும் ஆவலுடன் தலை அசைத்தனர். ஒரு சேர ஜைனமும் அத்வைதமும் அணிதிரண்டு வருவது போல் உணர்ந்தேன். கூட்டத்தில் பௌத்தர்கள் யாராவது உள்ளனரா என்று பார்த்தேன். ஏனெனில் அவர்களும் இருந்தால் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடை அளிக்கலாம் அல்லவா ?

நமது மடத்திற்கு யாரும் வரலாம். ஆத்ம விசாரத்தில் ஈடுபட ஒரு வேகம் வேண்டும்; ஒரு உள் உணர்வு வேண்டும்; அறிவுத்தேடல் வேண்டும். அது மட்டுமே ஒரே தகுதி.

பதில் தொடர்ந்தேன்.

‘வேதம் பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதன் உள்ளே உள்ள விஷயங்கள் அனேகம் பேருக்குப் புரிவதில்லை. அதன் உண்மை ஒன்று தான். ‘ஒன்று’ என்பது தான் அந்த உண்மை. புரியவில்லையா ? பலது என்பதெல்லாம் இல்லை. இருப்பது ஒன்றே’, என்று சொல்லி நிறுத்தினேன்.

‘பார்த்தீர்களா , எங்கள் ஆதி சங்கரர் சொன்ன ‘ஒரு பிரும்மம்’ விஷயத்திற்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பிரும்மம் ஒன்று தான்’, வெற்றிக் களிப்புடன் சொன்னார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, சற்று பொறும். நானும் சங்கரரும் சொன்னது ஒன்று தான். நானும் அவரும் வேதம் என்ன சொன்னதோ அதைத்தான் சொன்னோம். ஆனால் வேறு விதமாகச் சொன்னோம். அதில் அவரது வாதத்தில் சிறிது தவறு உள்ளது.

வேதம் என்ன சொன்னது ? ஆறு அங்கங்கள் கொண்ட நான்கு வேதங்கள் சொன்னது ‘பிரும்மம் ஒன்று’ . அதைப் பலவாறு விளக்கியது உப-நிஷத்துக்கள். உப-நிஷத்துக்களின் சாரம் பிரம்ம சூத்திரம். நானும் சங்கரரும் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினோம். அதில் எங்கள் அணுகுமுறை வேறு. அனுமானங்கள் வேறு. ஆனால் உண்மை ஒன்று’.

‘ஆனால் நீங்கள் உண்மை மூன்று என்று ‘தத்துவ-த்ரயம்’ என்று எழுதியுள்ளீர்களே ?’, என்றார் ஸ்ரௌதிகள்.

‘ஆமாம். மூன்றும் உண்மை தான். ஆனால் அந்த மூன்றும் ஒன்று தான்’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஜைன சன்னியாசிகளும் சற்று குழம்பியதாகவே தெரிந்தது. ஸ்ரௌதிகளும் குழம்பியே காணப்பட்டார். கூரத்தாழ்வார் மட்டும் புன்னகைத்தபடி,’ இன்று எங்களுக்கு நல்ல பல காலக்ஷேப விஷயங்கள் அர்த்தமாகின்றன. நாங்கள் ரொம்பவும் தன்யர்களானோம்’, என்று கீழே விழுந்து சேவித்தார்.

கூரத்தாழ்வார் நம் சிஷ்யரானாலும் அவர் என்னை ஸேவிப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடம் தான். அவர் சிஷ்யர் என்றாலும் கைங்கர்யத்தில் உயந்தவர். சம்பிரதாயத்திற்காகத் தன் நேத்ரங்களை ( கண்களை ) இழந்தவர். சோழனின் சைவ மத ஈடுபாடு அப்படி இருந்தது.

உபன்யாசத்திற்கு வருகிறேன்.

‘சங்கர பகவத் பாதர் சொன்னது, பிரும்மம் மட்டுமே உண்மை. எனவே அவர் வேதத்தையும், உப-நிஷதத்தையும் ஒட்டி அதன் உண்மையைக் கூறுகிறார். ஆனால் வேறு ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார்.

நான் சொல்வது பிரும்மம் ஒன்று தான். அத்துடன் உயிர்களும், உலகமும் உண்மையே. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றே. ஏனெனில் நமது உயிருக்கு உடல் நமது உடம்பு. அது போல் நமது உயிரை இறைவன் தனது உடம்பாகக் கொள்கிறான். இது சரீர- சரீரி பாவம். நமது ஆத்மா சரீரம். அவன் சரீரி. அவன் இன்றி நமது உயிரும் இல்லை, நமது உடம்பும், ஜடப் பொருட்களும் இல்லை. எல்லா உடல்களிலும் உள்ள உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாய் இருக்கிறான். ஆகவே அவன் ஒருவனே உண்மை என்பது சரியே’, என்று சொல்லி நிறுத்தினேன்.

அனைவரும் புரிந்த மாதிரி சற்று தெளிந்த முகத்துடன் தென்பட்டனர்.

‘அத்வைத சித்தாந்தத்தில் ‘பிரதி பிம்ப வாதம், அவச்சேத வாதம், ஏகான்ம வாதம் என்றெல்லாம் படிக்கிறோமே, அவை பற்றி சிறிது சாதிக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று துவங்கினார் ஒரு ஜைன சன்யாசி.

அவர் அத்வைதம் பற்றியும் அதன் பல வாதங்கள் பற்றியும் கேட்டது ஆச்சர்யமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு தத்துவத்தின்படி வாழ்ந்தாலும், மற்ற தத்துவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, துவேஷ மனப்பான்மை இல்லாமல் தர்க்க ரீதியாக அணுகும் ஒரு மனப்பான்மை இந்தப் பாரத தேசத்தில் என் காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பரந்த நோக்கு அடியோடு அழிந்து போகும் காலம் இந்த தேசத்தில் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. ஒரு கையில் வாளையும் இன்னொரு கையில் மிலேச்ச மத புஸ்தகத்தையும் கொண்டு சாதாரண மக்களை நெருக்கும் காலம் வர இருக்கிறது. இன்னொரு புறம், நன்மை செய்கிறேன் என்ற போர்வையில் இன்னொரு மிலேச்ச மதத்தில் சேர்க்க அலையும் ஒரு கூட்டம் வரவிருக்கிறது. இவை எல்லாம் கலி காலத்தின் கோலங்கள்.

‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம், அவச்சேத வாதம் முதலியன அத்வைதத்தின் சாரத்தை விளக்க வந்த விளக்கப் பிரிவுகளே. இவையும் அத்வைதத்துக்குள் அடக்கம்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.

 

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: