காரல் மார்க்ஸ் கண்ணனின் அவதாரம் ?

வெண்முரசு
வெண்முரசு

நடந்ததா இல்லையா என்று அறிய முடியாத மஹாபாரதத்தை இப்போது விரித்து, விளக்கி விளம்புவானேன் என்று வருத்தப்படுகிறார் மனுஷ்யபுத்ரன். அவருக்கு ஒத்திசைவு நடனம் ஆடுகிறார் ஞாநி. ஜெயமோகன் தன் படைப்புத் திறனை இப்படி இதிகாசங்களில் வீணடிக்கிறாரே என்று ஞாநி கண்ணீர் வடிக்கிறார்.

நடந்ததா என்று கேட்பதற்கு முன் ஒரு ஒரு நிமிடம் யோசிப்போமா ? ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி’யாக இருக்கிறோமே, அது எப்படி ? விண்வெளியில் அந்தரத்தில் நின்றோமா என்ன ? பகுத்தறிவின் பரிணாமத் தாவலால் ஏற்பட்ட மாபெரும் நிற்றலா அது ?

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சியின் பேரெழுச்சியாக ‘வெண்முரசு’ பரிமளிக்கிறது. ஐம்பது ஆண்டுகள் நாத்திகவாதப் பேரலையின் அர்த்தமற்ற கொக்கரிப்புக்களிலும் திரை ஆட்டங்களின் ஆரவாரப் பேரிரைச்சல்களிலும் சிக்குண்டிருந்த தமிழ் மாந்தர் தமது அடக்கிவைக்கப்பட்ட ஆன்மீக, கலாச்சார எண்ணங்களின் விஸ்வரூபத்தை உணர்த்துவதாக ‘வெண்முரசு’ திகழ்கிறது.

நாளொன்றுக்கு 4000 பேர் படிக்கிறார்கள் என்கிறார் ஜெயமோகன். திரைவெளியில் லயித்து, மாட்டு மக்களாக இருந்த தமிழ் மனிதர்களை நாட்டு மக்களாக ஆக்குகிறார் ஜெமோ. மாநில மக்கள் மாநாடுகளிலும் முப்பெரும் விழாக்களிலும் அமிழ்ந்திருந்த காலத்தில், அழியாத காவியத்தின் அபரிமிதமான காட்சியை அவர்களுக்குக் காண்பித்துத் திசை மாற்றுகிறார் ஜெமோ.

மனித முயற்சியின் மகத்தான பேராற்றலுடன் ஆழ்ந்த அறிவும் தீவிர வாசிப்பும் கலந்தால் கிடைக்கும் மகோன்னதப் படைப்பு வெண்முரசு. அதைப் படைக்கும் ஜெமோ வாழ்த்தப்பட வேண்டியவர்.

மொழிவழிப் பிரிவினை பேசிய முட்டாள் மூடர்களின் காட்டுத்தளையில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கும் வேலை செய்கிறார் ஜெமோ.

இடதுசாரிப் பேச்சில் இடறி விழுந்த தமிழ் மகன் இப்போது ‘எது சரி’ என்று கேள்வி கேட்கவைக்கிறார் ஜெமோ.

வசைமாரி பொழிவதும், வம்பு பேசுவதும், காறி உமிழ்வதும் இலக்கியம் என்று நம்பவைக்கப்பட்ட சமூகத்தை நேர்ப்படுத்துகிறார் ஜெமோ.

மாநிலவெறி, மொழிவெறி, இனவெறி என்று தலைவர்களால் வெறி ஏற்றப்பட்டு கட்டுக்கடங்காமல் திரிந்த மூளை மழுங்கிய சமுதாயத்தைக் கிள்ளி விட்டு அறிவுச்சுடர் ஏற்றுகிறார் ஜெமோ.

நாற்பது ஆண்டுகளாக இருந்த எதிர்மறை எண்ண ஓட்டம் அழியுமாறும், சோகையிழந்த சோம்பேறி மனிதர் பண்பாட்டுப் புத்துணர்ச்சி பெறுமாறு, தேஜஸ் இழந்த தேவாங்கு மனிதர் துள்ளி கம்பீர நடை போட உணர்ச்சியளிக்கும் ‘வெண்முரசு’ இந்நாளைய கட்டாயத் தேவை.

‘உனக்கு வரலாறு இல்லை’, ‘உனக்கு நாடே இல்லை’, ‘உன் நாடு ஆங்கிலேயரால் ஒன்றுபடுத்தப்பட்ட பல நாடுகளின் கூட்டு’ என்ற கட்டுக் கதைகளை வரலாறு என்று நம்புவது மதச்சார்பின்மையாம். இந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகளை முன்னகர்த்தி, கலாச்சாரச் செறிவைப் பறை சாற்றும் ஒரு காவியத்தை, இதிஹாசத்தை மீள் பார்வை செய்து, மீள் கட்டமைப்புச் செய்து விரித்துச் சொல்வது தேவை இல்லாதது என்று சொல்வது முற்போக்காம்.

கேட்பவனுக்குக் காது செவிடென்றால் காரல் மார்க்ஸ் கண்ணனின் அவதாரம் என்பார்கள்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: