சாப்பாடு

நாராயணா மிஷனுக்குத் தொண்டூழியத்துக்கு அழைப்பு வந்திருந்தது. கிருஷ்ணன் குறுஞ்செய்தி வந்தவுடனேயே அலுவலகத்தில் தெரிவித்துவிட்டான் – அந்த வார இறுதியில் அலுவலகப்பணி செய்ய இயலாது என்றும் தொண்டூழியம் இருப்பதாகவும் மேலாளருக்கு மின்-அஞ்சல் அனுப்பி விட்டான்.

வார இறுதிப் பணி வருமானம் ஈட்ட உதவும். ‘ஓட்டி’ என்று அழைகப்படும் அப்பணிக்கு இரண்டு மடங்கு நாள் ஊதியம் உண்டு. ஆனாலும் மிஷனுக்கு வாக்கு கொடுத்து விட்டதால் அவனால் தட்ட முடியவில்லை. சென்ற வாரமும் ‘சிண்டா’ ஆதரவில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் தொண்டூழியம் செய்திருந்தான் கிருஷ்ணன்.

நாராயணா மிஷன் அவனுக்கு மன நிறைவு அளிக்கும் ஒன்று. வயதான, உடல் நலிவுற்ற பெரியவர்கள் பலர் அங்கு தங்கியிருந்தனர். அவர்களைப் பார்த்துக்கொள்ள தாதியர் இருந்தாலும் கிருஷ்ணன் போன்றவர்கள் செல்வது சிறு சிறு துப்புரவுப் பணிகள், சுவற்றிற்கு வெள்ளை அடித்தல் போன்ற வேலைகள் செய்யவே.

ஒவ்வொரு முறை கிருஷ்ணன் மிஷன் போகும் போதும் தனது நெடு நாள் கடமை ஒன்று முடிவது போல் உணர்வான். அந்த உணர்வுக்காகவே அவன் மிஷன் ஊழியம் என்றால் உடனே ஒப்புக் கொள்வான்.

சனி முழுவதும் மிஷனில் வேலை இருந்த்து. மின் விளக்குகளைச் சுத்தம் செய்வது, மிஷன் உள் இருக்கும் பெரியவர்களுக்கு வெளியில் இருந்து உணவு வாங்கி வருவது என்று இடுப்பொடிய வேலை. ஆனால் இது ஒரு சுகமான சுமை என்பதை அவன் உண்ர்ந்தே இருந்தான்.

சிராங்கூன் சாலையில் இந்திய உணவுக் கடைக்குச் சென்று உணவு வாங்கி வருவது மட்டுமே இதில் பெரிய வேலை. உணவை அங்கிருந்து கொண்டுவருவது கிருஷ்ணனுக்கு எரிச்சலூட்டியது. எம்.ஆர்.டி, நிலையம் சென்று, தொடர் வண்டியில் உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வர முடியுமோ முடியாதோ. ஏதாவது புது விதி வந்திருந்தால் என்ன செய்வது? திரும்பவும் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு வெளியே வந்து டாக்ஸி எடுக்க வேண்டும்.

டாக்ஸி கிடைப்பது சிராங்கூன் சாலையில் கொஞ்சம் சிரமமான ஒன்று தான். அதுவும் சனிக்கிழமை டாக்ஸி கிடைப்பது ‘சிங்கப்பூர் பூல்’ மூலம் கோடீஸ்வரராவது போன்றது. பெரும்பாலும் நடக்காது.

அப்படித்தான் சில நாட்கள் முன்பு எக்ஸ்போ விற்பனையகத்தில் 42 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக்கொண்டு வந்தான். ஆனால் எக்ஸ்போ எம்.ஆர்.டி. நிலையத்தில் ஏற்ற விட வில்லை. ஏதோ டாக்ஸிப் பயன்பாட்டை அதிகப்படுத்தவென்றே செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு என்று அப்போது தோன்றியது கிருஷ்ணனுக்கு.

ஆனால் மிஷன் தொண்டூழியத்தில் டாக்ஸி செலவு பற்றி கிருஷ்ணன் கவலைப்படவில்லை. அதற்கான நேரம் மட்டுமே அவனை வாட்டியது. எவ்வளவோ செலவு செய்கிறோம், டாக்ஸி செலவு ஒன்றும் பெரிதில்லை என்றுதான் நினைத்தான்.

ஒருவழியாக உணவுப்பொட்டலங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்த்து, உணவைப் பங்கிட்டுப் பெரியவர்களுக்கு அளித்து, அவர்கள் உண்பதை நிறைந்த மனதோடு பார்த்தபடி நின்றிருந்தான். இரவு மணி 9 ஆனது தெரியவில்லை.

தொண்டூழியம் முடித்து ஜூராங் வந்து தன் வீவக வீட்டை அடைந்த போது மணி 10:30. படுக்கையில் சாய்ந்தபடியே கைத் தொலைபேசியை எடுத்தான். 28 அழைப்புகள் வந்திருந்தன. அனைத்தும் சென்னையிலிருந்து.

வந்திருந்த எண்ணை அழைத்தான் கிருஷ்ணன். மறு முனையில் ‘எஸ்.எஸ்.எம். ரெசிடென்சி ஃபார் எல்டர்லி கேர் பெருங்களத்தூர்’ என்றது பெண் குரல். ‘அறை எண் 400’ என்றபடி எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.

‘ஏண்டா கிருஷ்ணா, கார்த்தாலேர்ந்து போனே பண்ணலையேன்னுதான் நான் பண்ணினேன். இன்னிக்கி யரோ பெரியவாள்ளாம் வந்து எங்க ஹோம்ல இருக்கறவாளுக்கெல்லாம் அன்ன தானம் பண்ணினா.  ஆமாம், நீ என்ன சாப்டே ?”, என்றாள் அம்மா.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “சாப்பாடு”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: