பாரதியின் தத்துவ வெளி

பாரதி என்றாலே புரட்சி, தேசீயம், விடுதலை, பெண்ணுரிமை என்றே அடையாளப்படும் வகையில் ஒரு கருத்தியல் தன்மை நம்மிடம் காணப்படுகிறது. ஆனால் பாரதியின் படைப்புக்களில் அவனது ஆழ்ந்த தத்துவ தரிசனம் தென்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரே மாதிரியான தரிசனங்களாக இல்லாமல் பல வகைகளிலும் அலைக்கழிக்கப்படும் தத்துவத் தேடல்களில் ஈடுபட்டவன் போல் தென்படுகிறது.
ஸ்மார்த்த பிராம்மண சமூகத்தில் பிறந்ததால் அவர் அத்வைத ஸம்பிரதாயத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆதி சங்கரர் ஏற்படுத்திய ‘அத்வைதம்’ என்பது ‘இரண்டற்ற’ நிலையில் உலகையும், உயிர்களையும், இறையையும் நோக்குவது. அதாவது, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு பிரும்மத்தின் பிரதிபலிப்புக்களே என்பது அது. அவ்வாறு இவ்வுலகில் திகழும் அனைத்தும் ‘ஜீவாத்மா’ என்று வகைப்படுத்தப்படும். ஆனால் அவை அனைத்தும் ‘மாயை’.
அவை அவற்றின் தோற்றுவாயான பரம்பொருளில் கலந்துவிடும். அனைத்தும் ஒரே பிரும்மத்தின் பிரதிபிம்பங்கள் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதே அந்த தத்துவம்.
பாரதியின் இந்த அத்வைத தத்துவப் பற்று அவனது ‘காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்னும் வரி தெளிவுபடுத்துகிறது. உயிருள்ள காக்கையும் குருவியும், உயிரற்ற மலையும் பாரதியுடன் ஒன்றானவை என்று கூறுகிறான். எல்லாம் ஒரே பரமான்மாவின் பிரதிபலிப்புகள் என்னும் அத்வைத தத்துவம் இதன் மூலம் தென்படுகிறது.
‘நிற்பதுவே நடப்பதுவே..’ என்னும் ஆழ்ந்த பொருளுடைய தத்துவப் பாடல் அவனது அத்வைத மன நிலையை உணர்த்தினாலும் அப்பாடலின் பிற்பகுதி சற்று கலங்கிய மன நிலையை உணர்த்துகிறது :
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே … நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே … நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?
வானகமே இளவெயிலே மரச்செரிவே … நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? அங்கு குணங்களும் பொய்களோ ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே … நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் … இந்தக் காட்சி நித்தியமாம்.”
பறக்கும், நிற்கும், நடக்கும் அனைத்துமே சொற்பனம் என்னும் கனவுதானோ என்று கேள்வி எழுப்புகிறான் பாரதி. அத்துடன் ‘தோற்ற மயக்கம்’, ‘காட்சிப் பிழை’ என்னும் சொல்லாடல்களில் ஆதி சங்கரரின் ‘மாயை’ என்பதை
உணர்த்துகிறான் பாரதி. ‘ஞாலமும் பொய் தானோ’ என்று சொல்லும் போது ‘உலகம் மாயை’ என்னும் அத்வைத சித்தாந்தம் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆனால் பாடலின் கடைசி வரியில் ‘காண்பதிலே உறுதி கொண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை’ என்பதால் ‘கண்ணால் காண்பதே உண்மை’ என்ற பொருள் கொண்ட ‘சார்வாக’ தத்துவம் தென்படுகிறது. உலகம் ஜடப்பொருட்களால் ஆனது. ஆன்மா என்பதெல்லாம் இல்லை. ஜடப் பொருட்கள் ஐந்து பூதங்களின் சேர்க்கையால் உண்டானது. கண்களுக்குத் தெரிவது உண்மை. தெரியாதது என்பது இல்லவே இல்லை. ‘மாயை’ என்பதெல்லாம் பொய் என்னும் சித்தாந்த வெளிதான் ‘சார்வாகம்’ என்ற இந்திய ஞான மரபு. ‘இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று சொல்வதன் மூலம் பார்வையில் இருப்பதே சத்தியம் என்னும் ‘சார்வாகம்’ அடிக்கோடிடப்படுகிறது.
இவ்வாறு தத்துவ வெளியில் இரண்டு நிலை எடுத்த பாரதி, தெய்வங்கள் எல்லாவற்றையும் புகழ்ந்து பாடுகிறான். காளி, பராசக்தி, கண்ணன், திருமால், முருகன், கணபதி, சரசுவதி, அல்லா, யேசு என்று எல்லா தெய்வங்களையும் போற்றிப்பாடுகிறான். ‘அத்வைத’ சித்தாந்தத்தில் பற்றுள்ளவனாக இருந்தால் உருவ வழிபாடு தேவை இல்லை. ஒரே நேரத்தில் அத்வைதியாகவும், பல தெய்வ வழிபாட்டாளனாகவும் விளங்குகிறான்.
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்று ரஷ்யப் புரட்சியில் காளியை அழைக்கிறான். பாஞ்சாலி சபதத்தில் ‘ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்..’ என்று திரௌபதி பராசக்தியை அழைப்பது போல் எழுதுகிறான். அதே நேரத்தில் ‘மாடனைக் காடனை வேடனைப் போற்றி’ மயங்க வேண்டாம், பல ஆயிரம் வேதங்கள் அறிவே தெய்வம் என்று சொல்வதைக் கேளுங்கள்’ என்றும் அறிவுரை சொல்கிறான்.
ஒரு நேரம் சில தெய்வங்களைப் போற்றியும் இன்னொரு நேரம் அறிவே தெய்வம் என்றும், பிறிதொரு நேரம் தூய அத்வைத நோக்கமும் கொண்டு பாரதியின் பாடல்கள் அமைந்துள்ளன. கவிஞன் பல நேரங்களில் ஒரே நிலை எடுக்க இயலாது என்பது தெளிவு. அதையே பாரதியின் பாடல்களும் உணர்துகின்றன. ஆனால் அவற்றின் மூலம் அவனது ஆன்மீகத் தேடல் பாதை புலனாகிறது, தத்துவ தரிசனப் பயணம் புலப்படுகிறது என்று சொல்லலாம்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “பாரதியின் தத்துவ வெளி”

  1. Azhantha aaraichi. Pala thathuvangalai solliyathu , thathuvangalai ariya thoondiyathu. If you can tell about each and every thathuvam in detail it will be useful to us.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: