ஆழி பெரிது – இந்த நூலுக்கு ஞான பீடம் விருது கிடைக்க வேண்டும். வேறென்ன சொல்ல?
ஒவ்வொரு அத்தியாயமும் புதிய அறிவுக்களஞ்சியம். ஒவ்வொன்றிலும் உள்ள தரவுகள் பிரமிக்க வைக்கின்றன.
நூலின் ஊடே நகைச்சுவை ஒரு இழை போல் செல்வது புரிகிறது. அதிராத, மெல்லிய நகைச்சுவை அது.
வேதத்தில் துவங்கும் பயணம் சோமம் முதலியன கடந்து பாரத ஞான மரபின் பல இழைகளையும் தொட்டுச் செல்கிறது.
பிரபஞ்சத்தை வேதம் எப்படிப் பார்க்கிறது? பிரபஞ்சத்துடன் நமக்குள்ள ஒத்திசைவு என்ன? பல சடங்குகள் ஏன் செய்யப்படுகின்றன? இவற்றிற்கும் வேதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? வேதத்தில் அப்படி என்னதான் உள்ளது? இவை அனைத்திற்கும் விடை ‘ஆழி பெரிது’.
ஆசிரியர் அளிக்கும் விளக்கங்கள் வேத வரிகளுக்கான பொருளுரை அல்ல. பாரதத்தின் ஞானப்பொக்கிஷமாகிய வேதம் எப்படிப் பல நாட்டுக் கலாச்சாரங்களுடனும் தொன்மையான உறவு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். பாரதத்தின் தொன்மங்களுக்கும் கிரேக்க, அராபியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் திறமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஒருசில விஷயங்கள் பற்றி மட்டும் பார்ப்போம்.
‘அன்னம்’ – உணவு பற்றி எவ்வளவு உயர்வான கருத்துக்கள் ? அன்னம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படவேண்டிய தேவை உள்ளதை வேதம் எப்படி உணர்த்துகிறது என்று பேசுகிறார் ஆசிரியர்.
‘சரஸ்வதி’ நதி பற்றி வரலாற்று, விஞ்ஞான, பூகோள, புராண, இலக்கிய அடிப்படையிலான தரவுகள் கொண்டு எழுதப்பட்டுள்ள செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
‘வேதத்தில் பெண் தெய்வங்கள்’ பகுதி அக்ஷர லக்ஷம் பெறும். பெண் தெய்வங்களுக்கு வேதத்தில் உள்ள ஏற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘உஷஸ்’ என்று நாம் அறியும் ‘காலை’ பற்றிய விவரங்கள் நன்றாக ஆய்ந்து சொல்லப்பட்டுள்ளன.
வேதகாலத் தெய்வங்கள் யாவர்? அவர்களுக்கும் கிரேக்க தொல் தெய்வங்களுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமைகள்? இவை இந்த நூலில் பேசப்படுகின்றன.
வேதத்தில் காயத்ரி மந்திரம் பற்றி எங்கு குறிப்பிடப்படுகின்றது? காயத்ரியின் பொருள் என்ன? காயத்ரி, சூரியன், அகல் விளக்கு – இவற்றின் தொடர்புகள் என்ன? அகல் விளக்கு என்னும் குறியீடு காட்டுவது என்ன?
‘சோம பானம்’ என்னும் ஒன்றின் பின் ஆசிரியர் கொடுத்துள்ள செய்திகள், அவற்றிற்கான தரவுகள் – இந்தப் பகுதியை நமது திராவிட அறிவாளர்கள் படிக்க வேண்டும்.
சிந்து சமவெளி நாகரீகத்தில் குதிரைகள் இருந்தனவா? குதிரைகள் பற்றிய செய்திகளின் மகத்துவம் என்ன? குதிரைகள் இல்லை என்று இடதுசாரி, மேற்கத்திய ஆய்வாளர்கள் நிறுவ வேண்டிய காரணம் என்ன? இதற்கும் ஆரியப் படை எடுப்பு சித்தாந்தத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? இவை மிக அருமையாக, எளிமையாக, பிரமிக்கவைக்கும் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன.
வேதகாலக் கவிகள் வானியல் சாத்திரம் அறிந்தவர்களா? வேதத்தின் காலம் என்ன? அதனை மேற்கத்திய ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ளாததன் காரணங்கள் என்ன? இதுவும் சொல்லப்படுகிறது.
தமிழ்ச் சமுதாயத்திற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு? சங்க இலக்கியங்களில் வேதம் இருந்ததா? யார் என்ன பாடியுள்ளார்கள்? இவற்றிற்கான விடை இந்த நூலில் உள்ளது.
வேதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா? அதற்கு எதிரான விவரங்கள் என்ன? வியக்க வைக்கும் ஆராய்ச்சி.
அஸ்வமேத யாகம்,,பசு வழிபாடு, பசுவதை செய்யாமை என்பதற்கும் ஆதாரங்கள். இவை குறித்து அம்பேத்கார் சொன்னது முதலியன பேசப்படுகின்றன.
இப்படி இன்னும் பல..
இடதுசாரி போலி பகுத்தறிவு அறிவுஜீவிகள் மத்தியில், அவர்கள் சொல்வது தான் அறிவார்ந்த விளக்கம் என்று பரவலாக நம்பப்படும் வேளையில், இந்த நூல் நமது பல நூற்றாண்டு உறக்கத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பி எழுந்து உட்காரச் செய்கிறது.
‘நாம் யார்?’ என்கிற கேள்வியை அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் பலமுறை தமது பேருரைகளில் விளக்கியுள்ளார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் வேதாந்தம் குறித்த ஒரு ஈர்ப்பு ஏற்பட அவரது சொற்பொழிவுகள் ஒரு முக்கிய காரணம்.
இன்று அந்த மகான் இருந்திருந்தால் ‘ஆழி பெரிது’ கண்டு புளகாங்கிதம் அடைந்திருப்பார்.
இந்த நூலை இங்கு வாங்கலாம்.
இந்த நூல் வேததினை பற்றிய ஆய்வு என்ற நோக்கில் இருந்தாலும் விஷ்ணு பரத்துவத்தினை நிலை நிறுத்தும் வேதத்தில் உள்ள கடவுள் கொள்கை பற்றிய விஷ்யத்தில் உண்மையை மறைத்து எழுதப்பட்டுள்ளது ,
LikeLike
After reading your earlierreview of this book I immediately purchased it. But I could not complete reading fully. Laziness
LikeLike