என்னமா எழுதறார்? ப்பா.
காட்சிப்படுத்தல், பாத்திரங்களின் வர்ணனைகள், மழையில் நீர் தடங்கலின்றிப் பாய்வது போல் நிகழ்வுகளைச் சொற்பித்தல், பத்திக்குப் பத்தி இழையோடும் நகைச்சுவை, அதன் ஊடே மெல்லிய கேலி மற்றும் இயலாமை…என்னைப் பொறுத்தவரை தற்காலத்தில் தமிழின் வோட்ஹவுஸ் என்று இவரைக் குறிப்பிடலாம்.
உதாரணம் பார்ப்போம்:
‘பரமசிவம் பிள்ளை பூஜை அறையில் இருந்து மணியைக் கிலுக்கினார். பூஜை முடியும் தருவாய். பரமசிவம் பிள்ளை பாட்டை நிறுத்தாவிடில் விநாயகரையும் இழுத்துக்கொண்டு ஓடியே போய் விடுவது என்று நினைத்துக்கொண்டு படத்திலிருந்த பெருச்சாளியின் முகத்தில் சற்று ஆசுவாசம் தெரிந்தது’ மூஞ்சுறுவின் பார்வையில் இருந்து எழுதுவது என்பது வாழ்வில் எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வுடன் மட்டுமே பார்க்கும் ஒரு மனிதனால் மட்டுமே இயலும்.
எங்கள் வீட்டில் கூட ‘ரொம்ப நாழி பெருமாளுக்குப் பண்ணிண்டே இருக்காதீங்கோ, பெருமாளுக்குப் பசி வந்து ‘போறும்டா, அமிசேப் பண்ணுடான்னு’ கத்தப் போறார்’ என்று கேலியாகப் பேசுவது உண்டு. ஆனால், ஒருமுறை கூட கருடன் பேசுவது போலத் தோன்றியது இல்லை.
இன்னொரு இடத்தைப் பாருங்கள்:’வடிவு, நான் போயிட்டு வாறேன். வரச் சாயங்காலம் ஆகும். ஒனக்கு என்னவாவது வாங்கியாரணுமா?’ – பரமசிவம் பிள்ளை.
‘ஆமா, நாளைக்கழிச்சு அம்மாசில்லா. ரெண்டு கிலோ கடலைப்பருப்பு, நாலுகிலோ கோட்டயம் சர்க்கரை, ஏலம், கிஸ்மிஸ், ஜவ்வரிசி, அண்டிப்பருப்பு எல்லாம் வாங்கிக்கிடுங்கோ..’
இதே கதையில் வண்டிக்கார ஆறுமுகம் தன் வீட்டை விட்டுக் கிளம்புகிறான்.
‘வரச்சில காப்பக்கா உளுந்தும் அரைக்கிலோ கருப்பட்டியும் வாங்கியாங்கோ. நாளைக் கழிச்சு அம்மாசி..’ நினைவூட்டி வழியனுப்பினாள் மனைவி செண்பகம்.
சற்று வசதியுள்ள பரமசிவன் பிள்ளைக்கும், வண்டிக்காரன் ஆறுமுகத்திற்கும் ஒரே ‘அம்மாசி’ என்கிற அமாவாசை தான். ஆனால், அவர்தம் மனைவியரின் பேச்சின் மூலம் அவர்களது நிலையைத் தெரிவிக்கிறார் தமிழின் மகத்தான எழுத்தாளுமையுள்ள தமிழகத்தின் வோட்ஹவுஸ்.
கதை: சில வைராக்கியங்கள். ஆசிரியர்: நாஞ்சில் நாடன்.
வாசித்துப் பாருங்களேன்.
படிக்க ஒரு புத்தகத்தை …பரிந்துரைத்ததிர்க்கு மிக்க நன்றி!
LikeLike
you are welcome
LikeLike