ஊழலுக்காகச் சிறை சென்றுதிரும்பி வந்த உத்தமர் ஒருவரை, அவர் சிறை செலும் முன்னர் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சென்று சந்தித்து வந்தனர். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் ? அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? என்று யோசித்ததுண்டு.அதற்கான விடை கிடைத்தது.
முன்னேறியதாக அறியப்படும் வகுப்பைச் சேர்ந்த அறிவியல் பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முனைவர் பட்டங்களின் தரம், அவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகள், ஆராய்ச்சிப் பணிக்கான மாநிலத் தேர்வின் தரம், மத்தியத் தேர்வின் தரம், சுய நிதி வகுப்புகள் துவங்க நடக்கும் பேரங்கள், அரசுப் பணியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களின் பணி இட மாற்றங்களின் ரூபாய் மதிப்பு, முனைவர் பட்டங்கள் திருடு போவது, பி.காம். வகுப்புகள் துவங்கக் கல்லூரிகள் காட்டும் ஆர்வம், துணை வேந்தர் நியமனப் பொருளாதாரம் என்று பலதைப் பற்றியும் தெரிந்துகொண்டேன்.
அடிப்படை அறிவியல் (Fundamental Science) துறையில் அரசின் மெத்தனம் ஏன் என்று தெரிந்துகொண்டேன். பல நுணுக்கங்கள் உள்ளன.நுழைவுத் தேர்வுகள் வரவிடாமல் செய்வதில் உள்ள பொருளாதார அரசியல் பிரமிக்க வைக்கிறது.
மேற்சொன்னவற்றை வைத்து 500 பக்க நாவல் எழுதமுடியும். அவ்வளவு தகுடுதத்தங்கள், சிறுமைகள், கீழ்மைகள், மிரட்டல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி அடிப்படையிலான துவேஷங்கள், NAAC தரச்சான்று பெறுவதில் உள்ள கல்வி சாரா நடைமுறைகள் எல்லாம் குமட்டலை வரவழைக்கின்றன.
இவை முன்னேறியதாகப் பறைசாற்றப் படும் மாநிலத்தில் நடக்கும் அவலங்கள். மற்ற மாநிலங்களின் நிலை பற்றி ஊகிக்கலாம்.பாரதத்தில், அதுவும் முன்னேறிய அந்த மாநிலத்தில் இருந்து அறிவியலுக்கான நோபல் பரிசுக்குச் சாத்தியமே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
பெரிய அளவிலான வருத்தம் மட்டுமே மிஞ்சியது.