ராமன்

‘பட்டையா நாமம் போட்ட பெரியவர் வந்திருக்காருங்க’ என்றாள் சுபா.
‘நம்மளத் தேடிக்கிட்டு யாரு?’ கவுண்டர் யோசனையில் ஆழ்ந்தார். #சிறுகதை #உண்மைநிகழ்வு #கம்பன் #கம்பராமாயணம் #அஹோபிலமடம்

‘என்னங், ஒங்கள தேடிக்கிட்டு நாமம் போட்ட பெரியவர் ஒருத்தரு வந்திருக்காருங்’ சுபா சொன்னாள்.

‘என்னையா? எப்ப வந்தாப்டி? ‘ மில்லில் ஒரு பஞ்சாயத்து. வேப்பம்புண்ணாக்கு வாங்கிச் சென்ற கம்பெனி பணம் அனுப்பவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையில் இருந்த குமாரக் கவுண்டர்  ஏறிட்டுப் பார்த்துக் கேட்டர்.

‘காலம்பற நீங்க மில்லுக்கு கெளம்பின சுருக்குல வந்துட்டாப்டி. ஊட்டு வாசல்லயே உக்காந்திருக்காப்டி. எளுவது வயசு இருக்கும்ங்’

‘சாப்ட எதாச்சும் குடுத்தியாம்ணி? ஐயரா’

‘ஐயரில்லீங். நாம பெருசா போட்டிருக்காங்க. அழுக்கு வேட்டி. ரண்டு நாளா சாப்டல்லியாம். இட்லி சாப்டறீங்களான்னேன். உங்கள பார்த்துப் பேசிப்புட்டு சாப்பிடறேன்னாங்க’ சுபா மூச்சிறைக்கப் பேசி முடித்தாள்.

‘அட கெரகமே. ரண்டு நாளா சாப்டல்லியா? டீத்தண்ணியாச்சும் குடுத்தியா?’ 

‘குளிச்சு, சாமி கும்புட்டுத்தான் டீயுங்கோட குடிப்பாங்களாம். அதான் உங்கள கூட்டிக்கிட்டுப் போக வந்தேனுங்’ 

‘இத பத்து நிமிஷத்துல வந்துடறேன். நீயி போயி சோறு ஆக்கி எல போட்டு வையி’.

 குமாரக் கவுண்டர் மனம் அல்லலில் திளைத்தது. ‘யாரா இருக்கும்? நாமம் போட்ட ஆளு இப்பத்தான் ரண்டு மாசம் முன்னாடி மெட்றாசுலேர்ந்து வந்து ஜீயர் பிருந்தாவனத்தப் பார்த்துட்டுப் போனாப்ல. ஆனா, வயசு எளுபது இல்லையே.’

‘வேப்பம்புண்ணாக்கு நம்முது செயற்கை ஒரம் எதுவும் இல்லாத வர்றதுங்க. நீங்க சொல்ற வெலைக்கு ரசாயன புண்ணாக்கு தான் கெடைக்கும். நம்முது நல்லதுன்னு விகடன்ல பேட்டியெல்லாம் பார்த்திருப்பீங்க இல்ல?’ பேசிக்கொண்டிருந்தாலும் நாமக்காரர் மட்டுமே மனம் முழுதும் வியாபித்திருந்தார். 

‘ஒண்ணு செய்யுங்க. அடுத்த வாரம் வாங்க, கட்டுப்படி ஆகுமான்னு பார்க்கறேன்’ என்று வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு  ஸ்பிளெண்டரில் கிளம்பினார் குமாரக் கவுண்டர்.

ஆள் சுமார் ஆறடி இருப்பார். மெல்லிய கரிய தேகம். நெற்றியை மறைக்கும் திருமண். 

‘ஆருங் நீங்க? எங்கிருந்து வர்றீங்க?’ 

‘ஆங்., இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்ன வந்தேன்’ 

‘காது கேக்கல்லீங்க. சத்தமாப் பேசுங்க’ சுபா சமிக்ஞை காண்பித்தாள். 

எத்தனை கத்திப் பேசியும் அவருக்குப் புரியவில்லை. 

‘தமிழ் படிக்க தெரியுமா?’ கவுண்டர் பேப்பரில் எழுதிக் காண்பித்தார்.

‘நல்லா தெரியும். காதுதான் கேக்காது’ பெரியவர் சொன்னார். கணீரென்ற குரல்.

‘எங்கிருந்து வரீங்க? என்னைய எப்பிடித் தெரியும்?’ மீண்டும் எழுத்து. 

‘விகடன்ல உங்க பேட்டிய படிச்சேன். உங்க நம்பர் கெடைச்சுது. பார்க்கணுமுன்னு தோணிச்சு. பார்க்க வந்தேன்’ ஏதோ உறவுக்காரர் போல் அண்மையில் பேசினார்.

கவுண்டருக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

‘சார், கம்ப ராமாயணத்துக்கு நல்ல உரை எதுங்க?’ இரண்டு மாதங்கள் முன்னர் சென்னையில் உள்ள என்னை அழைத்துக் கேட்டிருந்தார். 

‘அட, நீங்களும் கம்பனுக்குள்ள வந்துட்டீங்களா? நல்லது. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை நல்லது. உங்க மன நிலைக்கு ஏத்த மாதிரி இருக்கும். ஆமா, என்ன திடீர்னு?’ 

’24ம் பட்டம் அழகியசிங்கர் பிருந்தாவனத்த கண்டு பிடிச்சதுலேர்ந்து என்னவோ வைஷ்ணவ சம்பந்தமாவே இருக்குங்க. போன வருஷம் ஜீயர் வந்து ஆசீர்வாதம் செஞ்சாரு.  நீங்க வந்து பிருந்தாவனம் தரிசனம் பண்ணினீங்க. என்னமோ வைஷ்ணவ தொடர்பு ஏற்பட்டுக்கிட்டே இருக்கு’

கொக்கராயன் பேட்டையில் அஹோபில மடத்தின் 24ம் பட்டம் அழகியசிங்கரின் பிருந்தவனம் இருந்ததைக் குமாரக் கவுண்டரும் அவரது உறவினர்களும் கண்டுபிடித்து, அப்போது சிங்கப்பூரில் இருந்த என்னிடம் ‘என்னவோ நாமம் எல்லாம் இருக்குங்க. இது என்னன்னு பாருங்க’ என்று படங்களை அனுப்பியிருந்தனர். திருமண் அஹோபில மடத்தின் பாணியில் இருந்ததைக் கண்டு மடத்துடன் தொடர்புகொள்ளச் சொல்லியிருந்தேன். பின்னர் துரித கதியில் வேலைகள் நடந்து, கொக்கராயன் பேட்டையில் 1776ல் திருநாட்டை அலங்கரித்த 24ம் பட்டம் ஜீயரின் பிருந்தாவனம் புனருத்தரணம் செய்யபப்ட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் சென்று தரிசித்து வந்திருந்தேன்.

‘கம்ப ராமாயணம் புஸ்தகம் கேட்டீங்களே. என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?’ ஒரு மாதம் முன்னர் அவரிடம் கேட்டிருந்தேன்.

‘அதை ஏன் கேக்கறீங்க. இப்பல்லாம் தினமும் பாராயணம் பண்றேன். பொறவு தான் தெரிஞ்சுது, எங்க மூத்த அய்யா கம்ப ராமாயணம் வாசிச்சவராம். அவர் காலத்துல அதுலேர்ந்து கதையெல்லாம் சொல்லுவாராம்,’ என்றார்.

‘ஏதோ பூர்வ புண்ணிய வாசனை இல்லாம கம்பன் வர மாட்டானேன்னு நினைச்சேன்’ என்றேன்.     

‘இப்ப எதுக்கு என்னப் பார்க்க வந்திருக்கீங்க?’ குமாரக் கவுண்டர் பேப்பரில் எழுதிக் காட்டினார்.

‘ பார்க்கணும்னு தோணிச்சி, வந்தேன்’

‘என்ன விஷயமா?’ 

‘நீங்க எனக்கு வேலை கொடுங்க. நான் இங்கேயே தங்கிக்கறேன்’ 

’70 வயசுல வேலையெல்லாம் வேணாமுங்க. நீங்க வேண்டிய மட்டும் தங்கிக்கோங்க’ குமாரக் கவுண்டருக்கு இவரது பின்புலத்தை ஆராய வேண்டும் என்று தோன்றியது.

‘நீங்க மொதல்ல சாப்பிடுங்க. பொறவு பேசிக்கலாம்.’

‘குளிக்கணும். அப்புறம் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சொல்லணும். அப்பறம் தான் சாப்பாடு’ பெரியவர் தீர்மானமாகச் சொன்னார்.

‘இங்க கொஞ்சம் வரீங்களா? எனக்கு புஸ்தகம் வேணும்’ பெரியவரின் குரல். 

 தீர்த்தமாடி, திருமண் தரித்துக் கொண்டிருந்த பெரியவரைக் கண்ட குமாரக் கவுண்டர் பெருமாளின் விஸ்வரூபத்தைக் கண்டதை போல ஒரு சிலிர்ப்பை உணர்ந்தார்.

‘உங்களத்தானே, எனக்கு புஸ்தகம் வேணும்’ பெரியவர் மீண்டும்.

‘ஆங்.. என்ன புஸ்தகம்?’ தன் நினைவிற்கு வந்தவரான கவுண்டர் சைகை காண்பித்துக் கேட்டார்.

‘திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி புஸ்தகம் வெச்சிருந்தேன். காணல. உங்க வீட்டுல இருக்கா?’ 

ஏதோ தெய்வ உத்தரவு போல் தோன்ற குமரக்கவுண்டர் புஸ்தகம் வாங்கிவர ஆள் அனுப்பினார். ஈரோட்டில் பிரபந்தம் கிடைத்தது.

சாப்பிட்டு முடித்தபின் ஒரு தட்டில் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, ஒரு புது வேஷ்டி, அங்கவஸ்திரத்தையும் கொடுத்துப் பெரியவரை நமஸ்கரித்த கவுண்டர், ‘நமக்கு எந்தூருங்க?’ என்றார்.

‘விழுப்புரம் பக்கத்துல கிராமம். பல ஏக்கரா நஞ்சை உண்டு. எல்லாத்தையும் பையன் பேர்ல எளுதி வெச்சுட்டேன். மருமகளோட பிரச்னை. அதான், நாலு வருஷமா நூத்தியாறு திவ்ய தேசத்தையும் ரெண்டு தடவை பார்த்துட்டேன். அடுத்தது பரமபதம் தான். எப்பன்னு தெரியல’ 

தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து, கொக்கராயன் பேட்டை காவிரியில் குளித்து, திருமண் இட்டுக்கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் திருப்பாவை பாடுவது என்று ஒரு வாரம் கழிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் தனது விலாசத்தைக் கொடுக்க மறுத்த பெரியவர், வேறு எதுவும் பேசவில்லை. எப்போதும் பிரபந்தமும் கையாகவுமே இருந்தவர் குமாரக் கவுண்டரின் குழந்தகளுடன் மட்டும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். தனது பேரக் குழந்தைகளுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டார் போல.

வந்த எட்டாவது நாள் அவரது பிரபந்த புஸ்தகத்தில் ஒரு செல்ஃபோன் எண் போல் இருந்த இலக்கங்களைக் குமாரக் கவுண்டர் தொடர்புகொள்ள முயல, ‘ஆங், இப்ப எந்தூர்ல இருக்காரு? அப்பப்ப வீட்ட விட்டு ஓடிடுவார். எப்படியோ எதாவது வைஷ்ணவ கோவில்ல போய் உக்காந்துடுவார். யாராவது இப்பிடி கண்டு பிடிச்சு அனுப்புவாங்க,’ என்ற மருமகள், மறு நாள் டொயோட்டா இன்னோவாவில் வந்து சேர்ந்தார்.

‘அப்பா, வாங்க வீட்டுக்குப் போகலாம்’ என்று மருமகள் சொல்ல, ‘வந்துட்டியா? பெருமாள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டானே’ என்ற பெரியவரிடம் குமாரக் கவுண்டர் ‘சாமி, நீங்க வீட்ட விட்டு வெளில போகாதீங்க. எப்பவாவது வெளில போகணும்னு நினைச்சா, எனக்கு சொல்லி அனுப்புங்க. நான் வந்து அழைச்சுக்கிட்டு வரேன்’

வண்டியில் ஏறி அமர்ந்துகொண்ட பெரியவரைக் கும்பிட்டபடி நின்றிருந்த குமாரக் கவுண்டர் கை காட்ட, சுபா ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி வண்டியின் முன் சென்று காட்டினாள். 

வண்டி சென்ற பின் நெடு நேரம் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்த கவுண்டரிடம் சுபா ‘வந்தவரு பெரிய மனுஷர் போலைங்க. காருக்கு முன்னாடி நம்பர் பிளேட் இருக்குமில்லைங்க, அங்க ‘ராமசாமி ரெட்டியார், ஜமீந்தார்’னு எளுதியிருந்திச்சு’ என்றாள்.

‘சார், கம்ப ராமாயணம் படிக்கறேனான்னு ராமனே வந்து பார்த்துட்டுப் போனான்’ என்றார் குமாரக் கவுண்டர், தொலைபேசியில்.

தோசை சாப்பிடறேளா?

‘கூடிய சீக்கிரம் குடி வந்துடுங்கோ’ சியாமளா மாமி சிரித்தபடி சொன்னது கண்களிலேயே நின்றது. 

‘ ஶ்ரீமதி, என்ன சொல்ற? ஆத்தப் பார்த்தியே என்ன நினைக்கற?’ 

‘சொல்ல என்ன இருக்கு? ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த மாமாவும் மாமியும் இந்த வயசுல எப்பிடி இருக்கா பாருங்கோ. தன்மையா, அனுசுரணையா பேசறா. கீழ அவா இருக்கா. மேலாத்த வாடகைக்கு விடறா. அதிகம் பிக்கல் பிடுங்கல் இல்ல. லாக்டவுன் சமயத்துல வீடு மாத்தணும். அது ஒண்ணுதான் கஷ்டம்.’ ஶ்ரீமதி சொன்னது முதல் லாக்டவுன். 

‘ஆச்சு. வந்தாச்சு. வீடு பிடிச்சிருக்கு. மனுஷாளும் நல்லவாளா இருக்கா. அந்த மாமா ரொம்ப தன்மையாப் பேசறார். மயிலாப்பூர் மயிலாப்பூர்னு சொன்னோம். நல்ல இடமா கெடச்சதே பெருமாள் அனுக்ரஹம் தான்.’

 பெருமாள் கோவிலுக்கு அருகில் வீடு கிடைத்து, வீட்டு ஓனர்கள் நல்லவர்களாகவும் கிடைக்க பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

‘உங்களுக்கு பையன் இருக்கான்னு சொன்னேளே, எங்க இருக்கான்?’

‘எல்லா பிராமணாளுக்கும் வர வியாதி தான். என்.ஆர்.ஐ. வியாதி. ஃபின்லாண்ட்ல இருக்கான். போகவேண்டாம்னா யார் கேக்கறா? ஆனா, ஜாதகத்துல இருக்கு, எட்டாத எடத்துல தான் இருப்பான்னு’ என்றார் சோதிடம் தெரிந்த ஓனர். 

‘நான் 55ல இஞ்சினியரா சேர்ந்தப்போ, சம்பளம் நூத்தியெம்பது ரூபா தொண்ணூறு நயா பைசா’ என்று துவங்கினார் என்றால் ஒரு மணி நேரம் போகும். 

நான்கு மாதங்கள் கழித்து ‘என்ன, டி.வி.ய ஹால்ல வெச்சிருக்கே?’ என்றார். 

‘இல்லியே, இங்கயேதானே இருக்கு?’

‘பெட் ரூம்ல இருந்து வெளில கொண்டு வந்துட்டியா?’ 

தன் நெற்றிப் பொட்டிற்கு அருகில் விரலைச் சுற்றி ஶ்ரீமதி ஜாடை காட்டி, ‘அவாத்துல இருக்கறதா நினைக்கறார்’ என்றாள்.

ஒரு மாதம் கழித்துக் கதவிடித்து, ‘ஒரு டூ தவுசண்ட் ருபீஸ் இருக்குமா?’ என்றார் ஓனர் மாமா. 

சியாமளா மாமியிடம் சொல்ல, மாமி கண் கலங்கி, ‘இப்பல்லாம் பல நேரம் இப்பிடித்தான் இருக்கார். நேத்திக்கி கீழ எறங்கிப் போறேன்னு சொல்லிட்டு கல்யாண் நகர்ல நின்னுண்டு இருக்கார். என்ன பண்றதுன்னே தெரியல’

இரண்டு மாதங்களில் எங்கு பார்த்தாலும் பணம் கேட்கத் துவங்கினார். ‘கொடுத்துட்டேனே’ என்றால் ‘ஓ, சரி நான் பர்ஸ்ல வெச்சுட்டேன் போல’ என்று செல்லத் துவங்கினார்.

அப்போது சுரேஷ் ஃபின்லாந்தில் இருந்து வந்து இறங்கவும், லாக்டவுன் 2 துவங்கியது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக  வந்திருந்தான். சுமார் நாற்பது வயதிருக்கலாம்.  

‘அங்க பண்ணிக்க நாலஞ்சு வருஷம் ஆகும். கிட்னி கிடைக்கறதே கஷ்டம். அதுவும் ஏஷியன் குரூப்போட சேராது. பல தொல்லைகள். அதால இங்க வாடான்னுட்டேன்’ என்ற சியாமளா மாமியின் நெற்றியில் கவலைக் கோடுகள் தெரிந்தன. 

ப்ரிலிமினரி செக் அப் என்று சென்றவன் அட்மிட் ஆகி, விரைவில் கொரோனாவால் காணாமல் ஆனான். 

‘வந்த வேகத்துலயே போயிட்டான். நான் இருக்கறச்சே இவன் எதுக்குப் போகணும்?’ சியாமளா மாமிக்குத் துக்கம் கேட்டு ஆறுதல் சொல்ல வார்த்தைப் பற்றாக்குறை. 

‘தோசை வார்த்திருக்கா. ஒண்ணு சாப்பிடறேளா?’ என்றார் ஓனர் மாமா.

ஹிந்தி படித்த அழகு

‘ஜி, மேரா நாம் ஆமருவி ஹை’ என்றேன்.

‘உனக்கு எப்படிடா ஹிந்தி தெரியும்?’ என்றார் புதிய ஆசிரியர் வெங்கட்ராமன்.

‘ஒரு வருஷமா இத மட்டும் தான் படிச்சேன்’ என்றேன். 

‘ஒரு வருஷம் படிச்சியா? அப்ப, இந்த லெஸனப் படி, வாய்விட்டு’ என்றவர் புஸ்தகத்தில் ஒரு பாடத்தைக் காட்டினார்.

‘… ‘

‘வாய விட்டு படிப்பா. மனசுக்குள்ள இல்ல’ என்றவர் உற்றுப் பார்த்து, ‘மொதல்ல புஸ்தகத்த நேரா வெச்சுக்கோ. தலகீழா வெச்சுண்டா படிக்க முடியாது’ என்றார். 

எனக்கு இரண்டும் ஒன்றுதான் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

ஒரு முழு ஆண்டு  ஹிந்தி வாசித்து, பின் ஏன் இந்த நிலை?

கொஞ்சம் ஃப்ளாஷ்பாக். 

ரெண்டாம்பிளாக் கார்ப்பரேஷன் ஸ்கூலில் மாலையில் ஹிந்தி வகுப்பு எடுக்க தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா வாடகக்கு எடுத்திருந்தது. அங்குதான் ஹிந்தி வகுப்பு எடுப்பார்கள். 

ஆமாம். எடுப்பார்கள். பலர் எடுப்பர். 

ப்ராத்மிக்கிற்கு மத்யமா எடுக்கும், மத்யமாவிற்கு ராஷ்டிரபாஷா, பிரவேசிகா ராஷ்டிரபாஷாவிற்கு என்று முறைவைத்துக் கொண்டு பாடம் நடத்துவர். ஆக, அங்கு பலரும் அத்யாபக், அவர்களே வித்யார்த்தி. 

இந்த அழகில் நான் ப்ராத்மிக் சென்று சேர்ந்தேன். என்னுடைய ஆசிரியர், மன்னிக்கவும் ஆசிரியன் ராம்பிரசாத். என்னைவிட ஒரு வயது சின்னவன். நாலாங்கிளாஸ். அவன் எனக்குப் பாடம் நடத்த வேண்டும். ஏனெனில் அவன் மத்யமா மாணவன்.  இப்படியான ஹிந்தி வளர்ப்பில் ஈடுபட்டிருந்தது தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார ஸபா.

ரெண்டாம்பிளாக்கில் உண்மையான ஹிந்தி வாத்யார் வாரம் ஒருமுறை வருவார். மாலை ஆஃபீஸ் முடிந்து, வீட்டுக்குப் போகப் பிடிக்காத ஒருவரைப் பகுதி நேர ஆசிரியராகப் போட்டிருந்தது ஸபா. மாலை ஐந்தரைக்கு வர வேண்டியவர் துரிதமாக ஆறரைக்கெல்லாம் வந்து ‘மாதம் மும்மாரி பொழிகிறதா’ டைப்பில் ‘இன்னிக்கி பாடம் நடந்துதா’ என்று கேட்டுவிட்டு ஆறேமுக்காலுக்குக் கிளம்பிவிடுவார். நானும் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டிற்குச் சென்று ‘ஹிந்தி கிளாஸ் முடிஞ்சுடுத்தும்மா’ என்று அறிவித்துவிட்டு அம்புலிமாமாவைத் தேடுவேன். 

‘அம்புலிமாமா என்ன வேண்டியிருக்கு? இன்னிக்கி படிச்ச ஹிந்திய ஒரு தடவை படிக்கலாமோல்லியோ?’ அம்மா.

‘கிளாஸ்லயே படிச்சுட்டேம்மா’ 

என் ஹிந்தி அறிவு ‘க, க்க, க, க, ஞா’ (அங்கங்கே அழுத்திக் கொள்ளவும்) என்கிற அளவிற்கு முன்னேறியிருந்தது.

இப்படியாகத் துவங்கிய ஹிந்திப் பயிற்சியின் பலனையே நீங்கள் முதல் சில வரிகளில் கண்டீர்கள்.

வெங்கட்ராமன் எட்டாம்பிளாக் பள்ளியில் உண்மையிலேயே ஆசிரியர். பொழுது போகாமல் பாடம் சொல்ல வரவில்லை.  ஏதோ இன்று ஹிந்தி புரிகிறதென்றால் அவரே காரணம். ஆனால், ஹிந்தித் தேர்வுகளில் பாஸ் பண்ணினதுக்கு அவர் காரணம் இல்லை. 

ப்ராத்மிக் தேர்வில் ஹிந்தி வார்த்தைகள் தெரியாத போது ஆங்கிலத்தில் எழுதிப் பூர்த்தி பண்ணிவிட்டேன். ஆனால், மத்யமாவில் நிறைய ததிகினத்தோம் போட வேண்டியதாக இருந்தது. மனப்பாடம் செய்வது வழக்கம் இல்லை என்பதால் சிரமப்பட்டேன். எகிறி எகிறிப் பாஸாகியது. 

ராஷ்டிரபாஷா புட்டுக்கும் என்று தெரியும். கொஞ்சம் சஞ்சலமாகவே தேர்வை நெருங்கினேன். ‘ னேன்’ இல்லை, ‘ னோம்’. பன்மை. 

பரீட்சை ஹாலில் ஏகக் களேபரம். என் பெயர் (ஆமருவி) புரியாததால் பெண்கள் ஹாலில் போட்டுவிட்டனர்.  பெண்களுடன் சேர்ந்து எழுதமாட்டேன் என்று சொல்லி தர்ணா செய்தேன் (அப்போது வயது 12, சே).  போனால் போகிறதென்று ஆண்கள் ஹாலுக்கு அனுப்பினார்கள். 

ஒரு பெஞ்சில் இருவர் அமர வேண்டும். ஒருவர் ராஷ்டிரபாஷா, மற்றொருவர் பிரவேசிகா. பெஞ்ச் ஒன்றிலும் இடமில்லாததால் கடைசியாக ஒரு பெஞ்சில் ஒருவன் மட்டுமே அமர்ந்திருந்தான். 

‘அங்க இடம் இருக்கு சார்’ என்றேன். ‘போயி உக்காந்துக்கோ. உன் பக்கத்துல இருக்கறவன் பிரவேசிகாவான்னு கேட்டுக்கோ’ என்று சொல்லும் முன் இடத்தைக் காலி செய்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

ராஷ்டிரபாஷாவில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன் என்பதை நம்ப யாரும் தயாராக இல்லை. 

பிரவேசிகாவில் அவ்வளவு கஷ்டப்படவில்லை. நோட்ஸ் எடுத்து வைத்திருந்தேன். பரீட்சை ஹாலிலும்.

இது தவிர சி.பி.எஸ்.ஈ.யில் மூன்றாவது மொழி ஹிந்தி. ஹிந்தி பிரச்சார ஸபாவில் படித்ததால் எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்கிற அளவில் கொஞ்சம் உபயோகம் இருந்தது.  ஆனால் அறிவுப்பேராசானுக்கு அந்த பாக்யம் இல்லை. 

அவன் மந்தாரக்குப்பம் என்னும் பகுதியில் இருந்து வந்து செல்ல சுமார் ஒருமணி நேரம் ஆகும். அவனுக்கு ஹிந்தி களாஸ் போகவெல்லாம் நேரமில்லை. ஆக, மூன்றாவ்து மொழி அவனுக்கு வேப்பங்காய். பெரும்பாலும் ஏதாவது சேட்டை செய்துவிட்டு வகுப்பிற்கு வெளியிலேயே நிற்கும் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்.

இப்படியான வேளையில் காலாண்டுப் பரீட்சை வைத்தார்கள். ‘எப்டிடா எழுதறது?’ என்று அப்பாவியாக கேட்டான் அறிவு.

‘ஈஸியா வழி சொல்றேன்’ என்று வலுவில் அறிவுரை வழங்க வந்த கிச்சி சொன்னது, ‘மொதல்ல கேள்வில இருக்க எல்லாத்தையும் எழுதிக்கோ. அப்பறம் முதல் வார்த்தை எப்டியும் ‘க்யா’, ‘கவுன்’ நு இருக்கும். இல்ல செண்டென்ஸ்ல எங்கியாவது ‘க்யா’, ‘கவுன்’ இருக்கா பாரு. அதை மட்டும் அழிச்சுட்டு உனக்குத் தோணினத எழுது’ என்றான்.

‘இவ்ளோதானா ஹிந்தி?’ என்ற அறிவுப்பேராசானின் சந்தோஷத்தைக் கெடுக்க விருப்பம் இல்லாமல் மவுனமாக இருந்துவிட்டேன்.

காலண்டுப் பரீட்சை முடிந்து, பேப்பர் கொண்டுவந்தார் ஆசிரியர் வாரீஸ் ஜெஹான் ( ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்). எங்கள் பேப்பர் எல்லாம் வந்துவிட்டது. நாங்கள் வரைந்ததற்கு ஏற்றவாறு ஏதோ வந்திருந்தது. அறிவுப்பேராசானின் பேப்பர் மட்டும் வரவில்லை.

‘சப் கோ பேப்பர் மிலா?’ என்று ஆசிரியர் கேட்க, வழக்கம் போல் நாங்கள் பேந்தப் பேந்த விழித்ததை ‘மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்று எடுத்துக்கொண்டார் ஜெஹான். 

கடைசியாகப் பையின் உள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்தார். ‘க்,க, கா, ககி, கீ, கு, கூ’ என்று பல ஒலிகளுடன் சிரிக்கத் துவங்கினார். சுமார் ஐந்து நிமிடங்கள் சிரித்து, வியர்த்து, விறுவிறுத்து, மூச்சு வாங்கி, ஒருவாறு நாற்காலியில் அமர்ந்தார். 

‘யே அறிவு கா பேப்பர் ஹை. கிச்சி, யஹான் ஆவோ, இஸ் பேப்பர் கோ படோ’ என்றார். நாங்கள் (வழக்கம் போல்) மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். 

‘கிச்சி, கம் ஹியர் அண்ட் ரீட் திஸ் பேப்பர் அலவுட்’ என்றார்.  கிச்சி எழுந்து நின்று பேப்பரை வாங்கிக்கொண்டான்.

முதல் வரியை மவுனமாகப் படித்தவன் கீழே விழுந்துவிடுபவன் போல சிரித்தான். (கண்ணாடியை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு). காரணம் தெரியாமல் நாங்களும் சிரித்தோம். அவனால் வாசிக்க முடியவில்லை.

பேப்பரை என்னிடம் நீட்டினான். 

கேள்வி : துமாரா நாம் க்யா ஹை ?

பதில்    : துமாரா நாம் காகா ஹை.

‘ஏண்டா இப்பிடி எழுதின? மிஸ்ஸு பேரு ‘காகா’வா? அவங்க வெள்ளையாதானே இருக்காங்க?’

‘எனக்குத் தெரிஞ்ச ஒரே எழுத்து ‘கா’. எதுக்கும் இருக்கட்டும்னு இன்னொரு தடவை ‘கா’ ந்னு எழுதினேன். சாரி வரைஞ்சேன் ‘ அறிவு நேர்மையாகச் சொன்னான். 

‘மத்த எந்தக் கேள்விக்கும் பதிலே எழுதல்லயே, ஏன்?’

‘இத வரஞ்சு முடிக்கறதுக்கே முப்பது நிமிஷம் ஆச்சு’ 

சிரித்து, ஓய்ந்து, பசியெடுத்து உணவு உண்ணும் வேளையில் அறிவு எங்கள் பெஞ்சிற்கு வந்தான்.

‘ஒரு டவுட்டுடா’ 

‘சொல்லு’ என்றேன்.

‘பரீட்சைல அந்த முதல் கேள்விக்கு என்ன அர்த்தம்?’

பி.கு. ராஷ்ட்ரபாஷா பரீட்சை ஹாலில் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்தவன் கிச்சி. அவனும் ராஷ்டிரபாஷா. யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

‘திருக்கார்த்தியல்’ – வாசிப்பனுபவம்

இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.

பதின்ம வயதை எட்டாத, விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதைகளின் தொகுப்பே ராம் தங்கம் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதை நூல். பெயர்: திருக்கார்த்தியல்.
 
அலட்டல், அதிக வர்ணனைகள், பொய்மொழி இல்லாமல் சாதாரண நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களைக் கொண்டே மனதைப் பிழியும் கதைகள் பதினொன்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
 
அரசியல் சரி நிலை, மதச்சார்பற்றதாக காட்டிக் கொள்ளும் வெற்று வியாக்கியான வரிகள், அம்பேத்கார் மண் / பெரியார் மண், பொதுவுடமை ஒப்பாரிகள் என்று முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டாடப் பட வேண்டியதற்குத் தேவையான எந்த லாகிரி வஸ்துக்களும் அற்ற, நேர்மையான, மனதில் ஆணியடிக்கும் கதைகள் உள்ளன.
 
இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.
 
‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையைப் படித்த பிறது மனம் ஒரு நிலையில் இல்லை. ஓரிரு கதைகள் மனதில் நிற்கவில்லை.( பெரிய நாடார் வீடு).
 
நாஞ்சில் நாடனின் முன்னுரை சிறப்பு.
 
ஒரே மூச்சில் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள். திருக்கார்த்தியல்

சாமி

‘சித்தப்பா,  இத்தன நாழி கழிச்சு நீங்க தேரழுந்தூர் போக வேண்டாம். சொன்னா கேளுங்கோ. பாண்டிச்சேரில பஸ் ஏறினதுலேர்ந்து நீங்க தூங்கிண்டே வரேள். வாங்கோ, இன்னிக்கி ராத்திரி நம்மாத்துல படுத்துக்கோங்கோ. நாளைக்குக் கார்த்தால தேரழுந்தூர் போய்க்கலாம்’ மாயவரம் பஸ் ஸ்டாண்டில் சித்ரா* கெஞ்சினாள்.

‘என்ன சொல்ற நீ? தேரழுந்தூர்ல சித்தி ஒடம்புக்கு முடியாம இருக்கா. ஜூரம் அடிக்கறதுன்னு சொல்றா. நான் போயே ஆகணும்.’

‘போங்கோ சித்தப்பா. நாளைக்குக் கார்த்தால போங்கோ. இங்கேர்ந்து அரை மணி நேரம் தானே. இப்ப பதினோரு மணி ஆறது. டவுன் பஸ்ஸும் கிடைக்காது,’ முடிந்தவரை போராடிப் பார்த்தாள் சித்ரா.

‘முடியவே முடியாது. காவேரிப் பாலம் வரைக்கும் போயிட்டா ஜங்ஷன்லேர்ந்து கும்பகோணம் போற டவுன் பஸ் எதாவது வரும். நான் கோமல் ரோடு போய், அங்கீருந்து போற வர வண்டி எதுலயாவது போயிடுவேன். நீ ஆத்துக்குப் போ. தனியா வேற போற..’

‘நன்னா இருக்கு. பதினோரு மணிக்கு ஜங்ஷன் பஸ் வர்றதே துர்லபம். அதுல கோமல் ரோடுல வேற நிக்கப் போறேளா. 78 வயசாறதா இல்லியா. பிடிவாதம் பிடிக்காதீங்கோ.’

‘என்ன சாமீ? எங்க போகணும்? என்ன பிரச்னை?’ அதுவரை அருகில் நின்றிருந்த காதர் கேட்டார்.

‘ஒண்ணுமில்ல, தேரழுந்தூர் போகணும், பஸ் வரல்ல. அதான்..’

‘இதுக்கு மேல பஸ் வராது. ஒண்ணு பண்ணுங்க ஆட்டோ பிடிச்சு காவேரிப் பாலம் போனா ஒரு வேளை பஸ் வரலாம். டே மஜீது, ஆட்டோ வருமா பாருடா’

‘இல்ல ஆட்டோவெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.’

‘போங்க சாமி. காசு ரொம்ப கேப்பானேன்னு பாக்கறீங்களா? இருங்க இதோ வரேன்.’

‘வாங்க ஏறிக்கங்க. பின்னால ஒக்காருவீங்கல்ல? மஜீது, பின்னாடியே டிவிஎஸ் 50ல வாடா.காவேரிப் பாலம் கிட்ட கொண்டு விடுவோம். பெரியவரு விழுந்துடாம பார்த்துக்கிட்டே வா. நீங்க போங்கம்மா. அட்டோ எடுத்துடுங்க. நான் கொண்டு விடறேன் ஐயாவ.’

‘பார்த்துப் போங்க. ஹார்ட் பேஷ்ண்ட் இவர். எங்க சித்தப்பா’

‘புரிஞ்சுதும்மா. நீங்க பேசறத கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். சாமி, ஏறிட்டீங்களா? பின்னாடி கம்பிய புடிச்சுக்குங்க.’

பாண்டிச்சேரியில் அன்று காலை ஏழு மணிக்கு வர வேண்டிய வாத்யார் மதியம் பதினொரு மணிக்கு வந்து   பெரியப்பாவிற்குத் திவசம் முடிய மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. பிறகு கிளம்பி, இரவில் மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தேரழுந்தூர் செல்ல வேண்டும்.

‘இறங்கிக்கோங்க சாமி. மஜீது, ஜங்ஷன்ல பஸ் வருதா பாருடா. இரு, அங்க ஒரு டவுன் பஸ் தெரியுது. சாமீ, பஸ் கும்மோணம் போவுது. கோமல் ரோடுல இறங்கிடறீங்களா?’

‘சரிங்க. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் போய்க்கறேன்.’ அப்பா.

‘விடுங்க சாமி. கண்டக்டர், ஐயாவ கோமல் ரோடுல இறக்கி விட்டுடுங்க. பெரியவரு, கண்ணு அவ்வளவா தெரியாது. பார்த்து இறக்கி விட்டுடுங்க. சாமி, அப்ப நான் வறேன். இந்தாங்க. வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்க. வரேங்க.’ பாய் கிளம்பிச்ச் சென்றார்.

கோமல் ரோடில் அரை மணியாக நிற்கிறார் அப்பா. தேரழுந்தூர் செல்ல பஸ் இல்லை. மணி 11:40. கோமல் ரோடு டீக்கடையும் மூடிக்கொண்டிருந்தார்கள்.

‘சாமி, இப்ப இங்க வண்டி ஒண்ணும் இல்லியே, தேரழுந்தூர் போகணுமானா காலைலதான் பஸ் வரும்’ டீக்கடைக்காரர் அக்கறையுடன் தகவல் சொல்ல அப்பாவிற்கு இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்று நினவு. ஒருவேளை போட்டுக்கொண்டோமோ? பிரஷர் மாத்திரையும் போட்டுக்கலையே..

‘ஐயா, எங்க போகணும்?’ டூவீலர் நின்றது. வேட்டி அணிந்த 20 வயது ஆடவன் கேள்வி.

‘தேரழுந்தூர்ப்பா. பஸ் ஒண்ணும் வரல்ல..’

‘என்னங்க, பன்னண்டு மணிக்கி ஏதுங்க பஸ்ஸு? நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா?’

வண்டி மெதுவகவே சென்றுகொண்டிருந்தது. குளிர் முகத்தில் அறைய, கண்களை மூடிக்கொண்டிருந்தார் அப்பா.

‘சாமி, தேரடி வந்துடிச்சு. எங்க போகணும் உங்களுக்கு?’

‘இங்கயே இறங்கிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்பா. நான் வரேன்’

‘அட இருங்க சாமி. உங்க வீடு எங்க சொல்லுங்க. விட்டுட்டுப் போறேன்.’ பிடிவாதமாக அந்த ஆண்.

‘இல்லப்பா, இங்கேரருந்து நூறு அடிதான். சன்னிதித் தெருல தான் இருக்கு. நான் போய்க்கறேன். நீ இன்னும் போகணுமே..’

‘அட என்ன கஷ்டங்க சாமி. ஏறுங்க. எங்க அப்பான்ன கொண்டு விட மாட்டேனா?’

‘உன் பேரென்னப்பா?’ வீட்டு வாசல் வரையில் கொண்டு விட்டுச் சென்றவனைக் கேட்டார் அப்பா.

‘சுடலை சாமி. நான் வரேன். ஜாக்ரதையா உள்ள போங்க. இனி ராவுல வராதீங்க.’ பைக் திரும்பும் சப்தம் தூரத்தில் கேட்டது.

தூரத்தில் ஏதோ கிராமத்து ஒலிபெருக்கியில் முனகல்:

‘கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி,

மாட சாமி, சாமியும் நான் தான், பூசாரி நீதான், சூடம் ஏத்திக் காமி.’

முதல் பக்கம்

வாசுதேவன் நம்பூதிரி, பெயருக்கு ஏற்றாற் போல், உயர்ந்த சாதியில் பிறந்தவர். ரொம்ப உயர்ந்த சாதியாதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாதம் மட்டும் உண்டு. அந்த ஒரு வேளைக்காக மற்ற வேளைகள் பட்டினி இருக்கும் குடும்பம். இருக்கும் என்ன இருக்கும்? இருந்து தான் ஆக வேண்டும். செந்தமிழில் சொல்வதானால் ‘சோத்துக்கு சிங்கி அடிப்பது’ – நேயர்களுக்குப் புரியலாம்.

பெரிய ஞானஸ்தன் இல்லை என்றாலும் பி.காம் இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் அளவுக்குப் படிப்பு வந்தது. கொஞ்ச நாள் கூட்டுறவு வங்கியில் தாற்காலிக பியூன் வேலை. பின்னர் அதற்கான தகுதிகள் இல்லையென்று சொல்லி அனுப்பிக் குஞ்சு கிருஷ்ணன் கோவிலில் வேலை கொடுத்தார்கள். குஞ்சு கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யத் தகுதி உண்டு என்று பொருள் கொள்க.

ஒரு பெண்ணும் ஆணுமாக இரு தங்க விக்கிரகங்கள் பிறந்தன. சோறிருந்தால் மட்டுமே விக்கிரகமானாலும் பளபளக்குமாதலால் விக்கிரகங்கள் வதங்கியேயிருந்தன. அறிவு மட்டும் பிரகாசமாயிருந்தால் போதும் என்று குஞ்சு கிருஷ்ணன் நினைத்தான் போல. குழந்தைகள் படிப்பில் பிரகாசித்தனர்.

பாலக்காட்டையர் மனையில் சமையல் செய்யக் கூப்பிட்டார்கள். சாரதைக்குப் போக இஷ்டம். ஆசாரக் குறைவென்று சொல்லி நம்பூதிரி சமூகக் கட்டுப்பாடு தடுத்ததால் அந்த வருமானமும் இல்லை.

தரித்ரம் பின்னாலேயே வரும் என்பதை நிரூபிக்க வேண்டி, நேராகச் சென்ற லாரி தானாகத் திரும்பி, தெருவோரம் சென்றுகொண்டிருந்த நம்பூதிரியின் காலைக் காவு கொண்டது. கையில் வீட்டில் சமைத்த சாதம் இருந்ததைக் கண்டுபிடித்த சமூகம், குஞ்சு கிருஷ்ணனுக்குக் கோவிலில் நீராடியே சமையல் செய்து நைவேத்யம் செய்யவேண்டிய நம்பூதிரி வீட்டில் இருந்து சோறு கொண்டு சென்று நைவேத்யம் செய்ததைக் கண்டு பிடித்துப் பணி நீக்கம் செய்தது.

இருந்த வேலையும், இலவச இணைப்பாய் ஒரு காலும் போன நம்பூதிரி, சாரதையின் நகையை வைத்து ஒரு பெட்டிக் கடை வைத்தார். நாற்சந்தியின் அருகில் இல்லாததாலும், உத்தமோத்தம வைசிய வியாபார யுக்திகள் கைவரப் பெறாத நம்பூதிரியின் கடையும் நொடித்து, உள்ளதும் போனது.

குடும்பம் குடியிருக்கும் சாரதையின் பூர்வீக வீட்டை விற்கலாம் என்றால் அதற்கு அவள் உடன்படவில்லை. ‘பிதுரார்ஜிதம் ஏதாவது ஒன்றாவது இருக்கட்டும், பெண் குழந்தை வேறு இருக்கிறதே’ என்ற சாரதையின் கெஞ்சலில் இருந்த நியாயம் நம்பூதிரிக்குப் புரிந்தது.

நம்பூதிரி, ஒற்றைக் காலுடன், ஊர்ப் பெரிய மனிதரான எம்.எல்.ஏ.யின் இரு கால்களிலும் விழுந்ததால் அவரது குடும்பக் கோவிலில் பட்டனானார். 200 ரூ சம்பளம்.

குழந்தைகளின் பள்ளிப் படிப்பில் நல்ல முன்னேற்றம். படிப்புச் செலவிலும் தான். நம்பூதிரி வீட்டை விற்றுவிடும் படி சாரதையிடம் கெஞ்சினார். வீடும் போனால் நடுத் தெருதான் என்பதால் சாரதை ஒப்புக்கொள்ளவில்லை.

‘வெள்ளிக் கிழமைக்குள் பணம் கட்ட வேண்டும்’ என்று பிள்ளைகள் இருவரும் சொல்ல, ‘இன்னிக்குள்ள முடிஞ்சுடும்’ என்று சொல்லிச் சென்ற நம்பூதிரி ஆசாரியின் கடையில் நல்ல மாம்பிடி போட்ட கத்தியை வாங்கினார்.

‘அப்பா வந்துட்டார்’ என்று வந்து நின்ற மகளின் கழுத்தில் கத்தியைச் சொருகிய நம்பூதிரி, இரண்டே வெட்டில் மகனையும் சாரதையையும் சாய்த்தார். மனைவி போகும் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தன்னை விளக்கேற்றினார்.

‘பிச்சை எடுக்க விடமாட்டேன்’ என்று சொன்னபடியே அவர் எரிந்ததாக மறு நாள் பேப்பரில் செய்தி வந்தது, ஐந்தாவது பக்கத்தில்.

‘அரசு வேலையில் இட ஒதுக்கீடு தொடரும்’: பாஸ்வான் அறிவிப்பு. முதல் பக்கத்தில்.

——————————————–

20-10-1997 அன்று டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதிய கதை.

மாலே மணிவண்ணா

‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில் ஜீவாத்மா பரமாத்மாவைச் சேறும் இறுதி நிலை தெரிகிறது. அதற்கான நோன்பிற்குத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

‘நாங்கள் மோக்ஷம் பெற அவாவுடன் தயாராக உள்ளோம். இதற்குத் தேவையான பொருட்களை அருள்வாயாக. உலகை நடுங்க வைக்கும் ஒலி எழுப்பும் பாஞ்சசன்னியம் போன்ற பல சங்குகள், எங்களின் வருகையை அறிவிக்கும் பறை, விடியற்காலையாகையால் ஒளியூட்ட அழகிய விளக்கு, பனியிலிருந்து காக்க விதானம் போன்ற துணிக்குடை, அனைத்திற்கும் மேல் வாழ்த்துப் பாடுவதற்குப் பண்ணிசைப்பார், நாங்கள் வருவதை அறிவுக்கும் கொடி (வேறு எங்கிருந்து வந்து சேர்வோரும் தெரிந்துகொள்ள) என்று அருள்வாயாக,’ என்பதாகப் பொருள்படுகிறது பாசுரம்.

‘பல்லாண்டிசைப்பாரே’ என்பதால் இவ்விடம் ‘பல்லாண்டுப் பாசுரம்’ பாடிய பெரியாழ்வார் குறிப்பிடப்படுகிறார் என்றும் ஒரு பார்வை உண்டு. ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன்’ என்று பின்னர் குறிப்பிடப்போவதை முன்னரே இவ்வாறு சொல்கிறாள் #ஆண்டாள் என்பது ஒரு சுவை.

‘மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்’ என்னும்போது பெரியோர் செய்தவைகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது. முன்னர் ‘செய்யாதன செய்யோம்’ என்று சொன்னது நினைவிருக்கலாம். முன்னோர் செய்யாதன செய்யோம் என்ற பொருளில் இன்றைய பாசுரத்தின் ‘மேலையார்’ விசேஷமான பொருள் தருகிறது. முன்னோர் செய்தவற்றைப் பெருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

‘இத்தனை பொருள்களையும் நான் எப்படித் தர முடியும் இந்த அதிகாலை வேளையில்?’ என்று கண்ணன் கேட்க, அதற்கு ‘நீ பிரளய காலத்தில் ஆலின் இலையில் மிதந்தவன். ஆனால் அச்சிறிய வயிற்றுக்குள் உலகங்களைச் சுமப்பவன். ஆகையால் இவற்றையெல்லாம் தருவிப்பது உனக்கு ஒரு பெரிய செயல் அல்ல’ என்று ஆய்ச்சியர் கூறினார்கள் என்பது காலட்சேபங்களில் சேவிக்கப்படுவது.

குரு

புரொபசர்  சனாவுல்லா பொறுமைசாலி தான். ஆனால் அன்று தீப்பிழம்பாய் நின்றார்.

‘வேர் ஈஸ் ஹி?’ என்று கர்ஜித்தார். அந்த ‘ஹி’ = சக்தி.

பி.ஈ. இரண்டாமாண்டு நான்காம் செமஸ்டரின் இரண்டாவது மாதம். சக்தி ஒரு மாதமாகக் கல்லூரிக்கு வரவில்லை..

விஷயம் இதுதான்.

சக்திக்குப் படிப்பு வரவில்லை. கட்டை, குட்டையாய், தரையை மட்டுமே பார்த்து ஒற்றைச் சொற்களில் பதில் சொல்பவனிடம் டிரான்ஸ்பார்மர்கள் பற்றி செமினார் எடுக்கச் சொன்னால் என்ன செய்வான்? எலக்றிக் சர்க்யூட்ஸ் பாடத்தை ஒரு நாள் மட்டுமே கேட்டுக் காணாமல் போனான் சக்தி.

ஹாஸ்டலிலும் காணவில்லை என்றவுடன் புரொபசர் பயந்தார். எங்கள் வகுப்பின் சுப்புவை சக்தியின் ஊருக்கு அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். திருப்பத்தூர் தாண்டி ஏதோ ஒரு கிராமம். மொத்தமாய் இருபது குடிசைகள் இருந்ததாம். எல்லாரும் பனையேறித் தொழிலாளர்கள். சக்தி என்ற பெயருடன் யாரும் இல்லை என்று சொன்னார்களாம்.

புரொபசர் விடவில்லை. போலீசுக்குப் போகலாம் என்றார். எதற்கும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்று சமாதானம் ஆனார்.

அடுத்த வாரம் சக்தி வந்திருந்தான். சனாவுல்லா அழைத்துப் பேசினார். கல்லுளிமங்கன் மாதிரி அழுத்தமாய் அமர்ந்திருந்தானெ தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களிடமும் ஒரே ஒற்றை பதில் தான். எதற்கும் நேரடியான பதில் இல்லை. நாங்களும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை.

அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவனிடம் ‘மொத்தம் 12 அரியர் இருக்கு. எழுதினதே 12 எக்ஸாம் தான். எப்ப க்ளியர் பண்றது?’ என்கிற ரீதியில் நாங்கள் பேச்சுக் கொடுத்த போது, ‘பாத்ரூம் போய் வருகிறென்’ என்று போனவன் திரும்ப வரவில்லை. ஹாஸ்டலிலும் இல்லை.

அந்த வகுப்பில் தான் சனாவுல்லா தீப்பிழம்பாய் நின்றது.

நாட்கள் சென்றன. செமஸ்டர் பரீட்சை வந்தது. எல்லாரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஹாஸ்டலில் சக்தி தென்பட்டான். ஆனால் மறு நாள் பரீட்சைக்கு வரவில்லை.

பரீட்சை முடிந்ததும் ஒரு மாலை வேளையில் சுப்பு சொன்னான்,’சக்தி இனிமே வர மாட்டான். நான் அவன் ஊருக்குப் போன போது அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘அப்பாவோட கூட பனை மரம் ஏறப் போறேன். எனக்குப் படிப்பு வரல்ல. ஆனா அப்பப்ப வந்து ஸ்காலர்ஷிப் பணத்த வாங்கிப்பேன்’ அப்டின்னு சொன்னான்’ என்றான்.

‘அவன் படிச்சா அவங்க பேமிலிக்குத் தானேடா நல்லது?’ என்றேன்.

‘எப்டிடா படிப்பான்? பி.ஈ. சீட் குடுத்தா மட்டும் போதுமா?  ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா? அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு  கவர்மெண்டு? வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான்.  இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன்?’ சுப்பு அழுதுவிடுவான் போல் இருந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன். ‘அன்னிக்கி நீ புரொபசர்ட்ட பொய் சொன்னியாடா?’ என்றேன்.

‘ஆமா. அவனைப் பார்த்தேன்னு சொல்லியிருந்தா அவனோட ஸ்காலர்ஷிப் என்ன ஆகுமோன்னு எனக்குப் பயமா இருந்தது. பாவம்டா அவன். அப்பிராணி. ஏண்டா இப்பிடியெல்லாம் கஷ்டப்படணும் ?’ என்று அழுதவாறே கேட்டான் சுப்பு.

‘அவன் வீடு பார்த்தியா?’ என்று மெதுவாகக் கேட்டேன்.

‘அந்த 20 கொட்டாய்ல அவனுதும் ஒண்ணு’ வாய் விட்டே அழுதான் சுப்பு.

அடுத்த இரண்டு ஆண்டுகளும் சக்தி கல்லூரிக்கே வரவில்லை என்றாலும், புரொபசர் சனாவுல்லாவின் தலையீட்டால் ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்துக் கொண்டிருந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

*மாணவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

கோலம்

‘உள்ள போக முடியாது பாட்டியம்மா’ காக்கி உடை ஊழியனின் குரல் கோலப்பாட்டிக்குப் புரியவில்லை. 91 வயதில் புரிய வேண்டிய அவசியமில்லை.

‘ஏண்டாப்பா, நன்னாருக்கியா? ஒம்புள்ள என்ன பண்றான், படிக்கறானா?’

‘ஐயோ பாட்டி, அது எங்கப்பா. நான் தான் அந்தப் பையன். நல்லாருக்கேன். நீ வெளில போ, கூட்டம் சாஸ்தியா இருக்கு’ குமார் தள்ளாத குறையாகச் சொன்னான். ‘செவிட்டுப் பாட்டிக்கி எப்பிடி சொல்றது?’

‘செத்த நாழி ஆகும்கறயா? பரவால்ல, நான் நின்னு சேவிச்சுட்டுப் போறேன். பெருமாள் எனக்காக காத்திண்டிருப்பார். ‘

‘பாட்டீ… உள்ள போக முடியாது. வரிசைல நிக்கணும். 3 மணி நேரம் ஆவும். நீ போயி பொறவு வா’ மென்று முழுங்கினாலும் குரல் கணீரேன்று சொன்னான் குமார்.

‘என்ன குமார், பாட்டிய மட்டும் உள்ள விடேன். பாவம் வயசாச்சு, கூட்டத்துல நிக்க முடியாது,’ 65 வயதுக் கல்யாணி பாட்டிக்காக்க் கெஞ்சிப் பார்த்தாள். மாமியார் பிடிவாதம் அவள் அறிந்ததே.

‘மாமி, நீங்க சாதா நாள்ல வாங்க. வரிசைல நிக்க வாணாம். பாட்டிய சைடு வழியா அனுப்பறேன். ஆனா, இன்னிக்கி ஒரு டிக்கட்டு 200 ரூவா. ஸபெஷல் தரிசனம்.’ கீழே குனிந்துகொண்டு சொன்னாலும் குமாருக்கு ஏனோ மனது உறுத்தியது. ஆனலும் அற நிலைய ஆணையர் சும்மா விட மாட்டார் என்பதால் கறாராகவே நடந்து கொண்டான்.

கல்யாணி பொறுமை இழந்தாள். ‘ஏண்டா குமார், உனக்கு பாட்டியத் தெரியாது? நன்னா இருக்கறச்சே கோவில் முழுக்க கோலம் போடுவாளோல்லியோ. ரொம்ப சொல்லி, இப்பல்லாம் கோலம் போட முடியாது, வெறும சேவிக்க மட்டும் உள்ள விடுவான்னு பேசி, சமாதானம் பண்ணி அழைச்சுண்டு வந்திருக்கேன். நான் வெளிலயே நிக்கறேன். பாட்டிய மட்டும் ஸ்பெஷல் என்ட்ரன்ஸ் வழியா விடேன். கார்தால்லேர்ந்து சாரதியப் பாக்காம ஒண்ணும் சாப்பிடமாட்டேன்னு அடம் புடிச்சு வந்திருக்கா..’ கல்யாணி விடுவதாக இல்லை.

‘அது சரி மாமி. என்னிக்கோ கோவில்ல கோலம் போட்டாங்கன்னு இன்னிக்கி ஸ்பெஷலா தரிசனம் பண்ண விட முடியுமா? பணம் கட்டினவங்க கோபிக்க மாட்டாங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,’ என்று தர்க்கத்தில் இறங்கினான் குமார்.

‘என்னடா சொன்ன?’ கல்யாணியின் குரல் உயர்ந்தது. ‘எப்பவோ கோலம் போட்டாளா? தெரியுமாடா உனக்கு? உங்கப்பா இங்க வேலைக்கு சேர்ச்சே பாட்டி கோலம் போட ஆரம்பிச்சு நாப்பது வருஷமாச்சு. போன வருஷம் வரைக்கும் போட்டிண்டிருந்தா. கூன் விழுந்ததால போட முடியலயேன்னு நாங்கள்ளாம் வேண்டாம்னு சொல்லிட்டோம்.  80 வருஷமா போட்டுண்டிருக்கா. அதோ பார், கருடாழ்வார் சன்னிதிக்குக் கீழ சிமெண்ட்ல கோலம் பதிச்சிருக்காளே அது பாட்டி போட்ட கோலத்தோட டிசைன்..’ என்று கருடன் சன்னிதியைப் பார்த்தவள் ‘பாட்டீஈஈஈ..’ என்று கத்தியவாறே ஓடினாள்.

கருடனுக்கு முன், கையில் கோலப் பொடியுடன் நின்றிருந்த பாட்டி,’ ஏண்டி கல்யாணி, எங்கடீ போயிட்ட? என்னமா பெருமாள் சேவை ஆச்சு தெரியுமா? கண்ணுலயே நிக்கறது?’ என்று கருடனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

‘பெருமாள் சேவையா? தளிகை அம்சே பண்றாளேன்னு பெருமாளுக்குத் திரை போட்டிருக்கான்னா. நீங்க எங்க பெருமாள் சேவை பார்த்தேள்?’ என்றாள் கல்யாணி சைகையில்.

21390427_10156552525697802_1788266588_o

‘நன்னாருக்கு. நீ அங்க யாரோடயோ பேசிண்டிருந்தயோன்னோ? நான் மளமளன்னு இங்க கோலம் போட ஆரம்பிச்சேன். கை கடுக்கம், கோலம் சரியா வரல்ல. இப்பிடி பண்றயே பெருமாளேன்னு கருடனப் பார்க்கறேன், சாட்சாத் பக்ஷிராஜன், அவனுக்கு மேல சங்கும் சக்கரமுமா மீசை வெச்சுண்டு உக்காண்டிருக்கான் சாரதி, பார்த்த சாரதி. அடீ வாடீ கல்யாணின்னு சொல்றதுக்குள்ள நீயே வந்துட்ட. பாரு எப்பிடி ஏள்ளியிருக்கார் பார் பெருமாள்..’ என்றாள் கோலப்பாட்டி, அமைதியாய் நின்றிருந்த கருடனைப் பார்த்தவாறு.

‘சேவை ஆயிடுத்து, வா ஆத்துக்குப் போகலாம்’ என்ற பாட்டியின் கையில் இருந்த கோலமாவுப் பொட்டலத்தை வாங்கிய கல்யாணி, கண்கள் கலங்கியபடி அதைப் பிரித்தாள். கசங்கிய பேப்பரில் பாசுரம் :

“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,

தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் – தமருகந்து

எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,

அவ்வண்ணம் அழியா னாம்.”

சொந்தம்

‘இதென்ன, ப்ராமினா? அப்பா பேர் ஏதோ ஐயங்கார்னு போட்டிருக்கு? இங்க வாங்க மிஸ்டர்,’ என்றார் டேவிட் ஞானாசீர்வாதம்.

கடலுர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் இருந்து ஸ்டேட் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல் எல்.டி.ஸி (Lower Division Clerk) வேலைக்குப் போகச் சொல்லி வந்த இண்டர்வியூ கார்டை பார்த்தபடியே வந்தான் 17 வயது தேவா. 1962ல் இப்படி இண்டர்வியூ கார்ட் வந்தால் வேலை உறுதி.

‘பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார். பத்தானியாத்து கடனை அடைச்சுடலாம். நன்னா பார்த்து வேலை செய்டா. நல்ல பேரோட நன்னா இரு,’ வாழ்த்தி அனுப்பியிருந்தாள் அம்மா.

‘நீயும் வாம்மா கடலூருக்கு. வந்து எனக்குத் தளிகை பண்ணிப்போடு,’ எப்படியும் வரப் போவதில்லை, கேட்டு வைப்போம், வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நப்பாசையில் கேட்டான் தேவா. நார்மடிப் புடவையுடன் அவள் வீட்டை விட்டே வருவதில்லை என்றாலும் அம்மாவாயிற்றே, அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தான்.

‘நன்னாருக்கு. நீ போய் வேலை செஞ்சுண்டு தனியா இருந்தா ரெண்டு காசு சேரும். அப்பாவோட காரியத்துக்கு வாங்கின கடன், பத்தானியாத்துக் கடன்னு ஏகப்பட்டது இருக்கு. என்னையும் அழைச்சுண்டு போனா, பொண்ணையும அழைச்சுண்டு வரணும். செலவு ஆகாதா? இதெல்லாம் எப்படி அடைக்கறது?’ என்ற எதிர்பார்த்த பதில் கிடைத்தது.

‘என்ன மிஸ்டர், இஸ் யுவர் பாதர்  அன் ஐயங்கார்? ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி?’ என்ற டேவிட் ஞானாசீர்வாதம் அப்போது தான் நிமிர்ந்து, திருமண்ணுடன் நின்ற தேவாவை முதல் தடவையாகப் பார்த்து, கண்கள் விரிந்தார்.

‘ப்ளடி ஹெல். ஐம் சாரி மை பாய். இந்த எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல கொழப்பிட்டாங்க. இந்த எல்.டி.சி. போஸ்ட் ரிஸர்வ்ட் கம்யூனிட்டிக்கு. உங்க பேர் கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா இருக்கு. ப்ராமின்லயும் தேவநாதன்னு பேர் வைப்பாங்களா?’ என்றார்.

‘ஆமாம் ஸார். இங்க பக்கத்துல திருவஹீந்திரபுரம்னு ஒரு ஊர். அந்த பெருமாள் பேர் தேவநாதன்,’ வாய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, மனது பத்தானியாத்துக் கடன், கோபால் முதலியார் மாட்டுக் கடன் என்று கணக்குப் போட்டது.

‘ஓகே. ஐம் சாரி. நான் உங்கள முதல்லயே பார்த்திருக்கணும். யூ மே ஹாவ் டு லீவ்’ என்றவர் கீழே குனிந்து கொண்டார்.

‘அப்ப என் வேலை? நீங்க டைப் அடிக்க சொன்னதா ப்யூன் சொன்னாரே?’ வேலையை எப்படி விடுவது ?

‘அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் பையன் பார்த்துப்பான். நீ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் போப்பா.’

திடீரென உலகம் இருண்டு, கால்களில் வலு இன்றி சேரில் அமர்ந்த தேவாவின் தோளைத் தொட்ட டேவிட் ஞானாசீர்வாதம், ‘ஆர் யூ ப்ரம் எ புவர் பேமிலி?’ என்றார், தேவாவின் வேஷ்டியையம் கால் செருப்பையும் பார்த்தபடி.

எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸில் சூப்பரிண்டெண்ட், ‘மிஸ்டர் தேவநாதன், உங்க கேஸ் பத்தி டேவிட் சொன்னார். அடுத்த மாசம் நெய்வேலில எல்.டி.சி. வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. உங்க பேர மொதல்ல போடச் சோல்லியிருக்கார். நீங்க அவருக்குச் சொந்தமா?’ என்றார்.

‘சொந்தம் தான். ஒரு வகையில், எல்லாரும்’  நினைத்துக் கொண்டான் தேவா.

%d bloggers like this: