பேசாதீங்க தலைவரே

‘அரசோட சாதனைய ஏன்யா சொல்ல வேண்டாங்கற?

‘தலைவரே, அதுல விவகாரம் உண்டுங்க’

‘தலைவரே, பெண் ஓதுவார் நியமிச்சது பத்தி அதிகம் பேச வேண்டாம்.’

‘ஏன்? ஆட்சியோட சாதனை இல்லையா அது?’

‘2007 லேயே அங்கயற்கண்ணின்னு ஒரு பெண் ஓதுவாரா நியமனம் ஆகியிருக்காங்க. அதால இது முதல் நியமனம் இல்ல’

‘பெண்களுக்கு அங்கீகாரம் கொடுத்த தலைவர்னாவது சொல்லுவீங்களா?’

‘அதும் கஷ்டம் தான். 9ம் நூற்றாண்டுல ஆண்டாள்னு ஒரு பொண்ணு பாசுரமெல்லாம் பாடியிருக்கு. நம்ம கவி ஒலிபெருக்கி கூட ஒளறினாரே, அதே பொண்ணுதான். அதுக்கு முன்னால திருநீலகண்ட யாழ்ப்பாணரோட சேர்ந்து மதங்க சூளாமணியார்னு ஒரு அம்மா முதல் முதல்ல ஓதுவரா இருந்திருக்காங்களாம்’

‘இதெல்லாம் நமக்குத் தெரியாம போச்சே, ஏன்யா?’

‘அதுக்கெல்லாம் பள்ளியோடம் போயி படிச்சிருக்கணும் தலைவரே’ ‘படிச்ச வரைக்கும் கூட இதெல்லாம் புஸ்தகத்துல வரல்லியே?’

‘ பாடபுஸ்தகம் போடறதுக்கு யார நியமிச்சோம்னு பார்த்தா புரியுமுங்க.’

‘இன்னும் விவகாரமான கேள்வி எதாவது வருமா?’

‘ஆமாமுங்க. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்னு சொல்ற அரசாங்கம், அனைவரும் ஆதீனகரத்தராகலாம்னு சொல்ல முடியுமான்னு கேட்டா மாட்டிக்கிட்டோமுங்க. வேளாளர் சமுதாயத்த எதிர்க்க முடியாதுங்க. அதோட, அனைவரும் பாதியாராகலாம், பெண்களும் பாதிரியாராகலாம்னு சொல்ல முடியுமான்னும் கேப்பாங்க’

‘என்னய்யா பயமுறுத்துறே?’

‘இது மட்டும் இல்லீங்க. பெண்கள் முன்ணேற்றம்னு நாம பேசவே முடியாதுங்க’

‘ஏன்யா இப்பிடி குண்டத் தூக்கிப் போடற?’

‘முத்தலாக் நீக்கல் சட்டத்தை எதிர்த்து நாமதாங்க வாக்களிச்சோம். பெண் உரிமைக்காகவே வ்யிர் வாழற நம்ம அக்கா கூட அதிமுக ஓட்டெடுப்புல இருந்து விலகினது அவமானகரமானதுன்னு பேசியிருக்காங்க’

‘புரியலையே, கொஞ்சம் விளக்கமா சொல்லுப்பா’

‘முத்தலாக் நீக்கல் சட்டம் பாஜக கொண்டு வந்தது. உண்மையான பெண் உரிமைவாதின்னா நாம ஆதரிச்சு வாக்களிச்சிருக்கணும். ஆனா, எப்பவும் போல, பாஜக கொண்டுவந்தா எதிர்க்கணும்கற பகுத்தறிவுக் கொள்ளையால எதிர்த்தோம்.’

‘அடடா, தெரியாம போச்சே. இப்ப இதப்பத்தியெல்லாம் கேள்வி கேட்டா என்னையா பண்றது?’

‘கவலைப்படாதீங்க. மத்தியானம் சாப்பாடு உண்டுன்னு திடலுக்கு சொல்லிவிட்டாச்சு. சாப்பாட்டுக்குப் பொறவு அவங்க பேசிப்பாங்க”அது சரி. ஊடகம் கேள்வி கேப்பாங்களே’

‘இதென்ன தேசிய ஆங்கில ஊடகம்னு நினைச்சீங்களா? இவங்க கேக்க மாட்டாங்க. சாப்பாட்டுக்கு முதல் பந்திக்கு வர்றதே அவங்கதான்’

வைஷ்ணவ எழுத்து

பேஸ்புக்கில் திரு.ராம் ராமச்சந்திரன் அவர்கள் ‘வைஷ்ணவ எழுத்தாளர்கள் பிரபந்தம், வைஷ்ணவம் பற்றியே எழுதுகிறார்கள்’ என்றது எனக்குப் புதிய பார்வையை அளித்தது. ( நவீன எழுத்தில் ‘புதிய திறப்பை உருவாக்கியது, புதிய புரிதலை ஏற்படுத்தியது’ என்றெழுத வேண்டும்)

அது என்ன பார்வை என்று நோக்கும் முன், கொஞ்சம் பின்னோக்கிப் பயணம்.

ஆழ்வார்கள், நாதமுனிகள், உடையவர், பிரபந்த உரையாசிரியர்கள், தேசிகன், மாமுனிகள், பின்னர் வந்த தாசர்கள் வரை எல்லாரும் வலியுறுத்தியதை இந்த ஸ்லோகத்தில் சுருக்கலாம் :

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்

அவன் பெயரைக் கேட்பது, அவன் பெயரைப் பாடுவது, அவனையே நினைத்திருப்பது, அவன் திருவடிக்குச் சேவை செய்வது, பூக்களால் அர்ச்சிப்பது, அவனுக்கு தாசனாய் இருப்பது, அவனுக்கே தன்னை அர்ப்பணிப்பது என்பதாக நவ-வித வழிபாடுகளையே சொல்கிறார்கள்.

குறிப்பாக, தற்போது ஆண்டாளைப் பேசுவதே சிறப்பாதலால் அவள் சொல்வதும் இவற்றை ஒட்டியே வருகின்றன –

  1. ‘தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்’
  2. ‘நாட்காலே நீராடி வந்தோம்’
  3. ‘தூயோமாய் வந்து நாம், தூமலர் தூவித் தொழுது’
  4. ‘அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து’
  5. ’கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தி’
  6. ’பாடிப் பறை கொண்டு’
  7. ’தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்’
  8. ‘நாமம் பலவும் நவின்று’
  9. ‘நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்’
  10. ‘முகில் வண்ணன் பேர் பாட’
  11. ‘மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்’
  12. ‘கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்’
  13. ‘பங்கயக் கண்ணானைப் பாடேலோ’
  14. ‘மாயனைப் பாடேலோ’
  15. ‘உன் மைத்துனன் பேர் பாட’
  16. ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’
  17. ‘அருத்தித்து வந்தோம்’
  18. ‘உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’
  19. ‘சிறு பேர் அழைத்தனவும்’
  20. ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’

மதுரகவிகளும் ‘நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன், மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே’ என்று பெருமாளைச் சொல்லாவிட்டாலும் நம்மாழ்வாரைச் சொல்கிறார்.

ஆனால், ஒருவரும் எழுதி வழிபடச் சொல்லவில்லை. ‘புதிய ஏற்பாடாகத் தற்கால வைஷ்ணவர்கள் பிரபந்தம் பற்றியும், வைஷ்ணவம் பற்றியும் எழுதி எழுதியே வழிபடுகிறார்களோ?’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. காஞ்சி பரமாச்சார்யரும் ‘ஶ்ரீராமஜெயம்’ எழுதச் சொன்னார் என்பதும் இதனுடன் ஒன்றி வருகிறது போல் உணர்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

நன்றி வைரமுத்து

வைரமுத்துவால் ஒரு நல்லது நடந்துள்ளது. மனிதர்களை இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்துள்ளது.

‘தமிழ் எழுத்தாளர்கள்’ என்கிற போர்வையில் உலாவரும் முற்போக்கு மாந்தர்களின் வெறுப்பு கலந்த அறியாமை வெளிவந்துள்ளது. உலகெங்கிலும் தமிழ் விருதுகள் பெறும் / வழங்கும் நபர்களின் தரமும் தெரியவந்துள்ளது.

ஆண்டாள் பாடல்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும் கர்னாடக சங்கீதத் துறையில் உள்ள பாடகர்களுக்கு வாய் பேச வராது என்பதும் புரிந்தது.

திரைத்துறையில் உள்ள, கிடைக்கும் போதெல்லாம் தங்களை வைஷ்ணவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும், ‘ஜாம்பவான்கள்’ திடீரென்று சுண்டெலிகளாக விஸ்வரூபம் எடுத்த விந்தை நடந்தது. அதும் வாய்ப்பேச்சு வராத சுண்டெலிகளாக.

அமெரிக்காவின் பாரதி தமிழ்ச் சங்கம், மலேசியாவிலும் , இலங்கையிலும் என்று நாட்டிற்கொரு ஒரு தமிழ்ச் சங்கம் தவிர, உலகில் வேறு எந்தப் பிரதேசத்தில் இருந்தும் அமைப்பு ரீதியாக எந்தவொரு முணுமுணுப்பும் கூட இல்லாமல் இருந்தது பல அனைத்துப் போலிகளையும் அடையாளம் காட்ட உதவியது.

குழப்பி எழுதினாலும் ஜெயமோகனும், சாட்டை போல் நேரடியாக எழுதிய சாரு நிவேதிதாவும், வைரமுத்துவைக் கண்டித்து எழுதிய சுகி.சிவமும் மட்டுமே இலக்கிய / சொற்பொழிவு உலகில் வலம் வரும் பிரபலங்களில் தங்கள் கருத்தைக் கூறத் திராணியுள்ளவர்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

வைரமுத்துவிற்கு நன்றி.

வங்கக் கடல் கடைந்த

‘வங்கக் கடல் கடைந்த’ பாசுரத்தில், இறுதியாகத் தான் யாரென்று உணர்த்துகிறாள் ஆண்டாள். பின்னாட்களில் அறிவிலிகள் தோன்றக்கூடும் என்பதால் தனது குலம், தனது தந்தை, அவர் வாழ்ந்த ஊர் என்று பலதையும் சொல்லி முடிக்கிறாள் #ஆண்டாள்.

எப்படிச் சொல்கிறாள் : ‘அணி புதுவைத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை’ என்று தன்னை வெளிப்படுத்துகிறாள். அந்தணர்களுக்குத் தாமரை மாலை அணியவென்று ஒரு விதி இருக்கிறபடியால் அவ்வாறு மாலை அணிந்த பட்டராகிய வில்லிபுத்தூர் விட்டுசித்தன் வழி வந்த கோதையாகைய நான்’ என்பதாகப் பொருள்.

பெரியாழ்வார் தனது ஆச்சார்யனும் கூட என்பதாலும் ‘பட்டர் பிரான் கோதை’ என்று அவரையும் தன் பெயருக்கு முன் சேர்த்துக் கொண்டுள்ளாள் என்று காலட்சேபக்காரர்கள் சொல்வதுண்டு. ஏனெனில், மற்றைய ஆழ்வார்கள் தங்களைப் பற்றிச் சொல்லும் போது, ‘குருகூர்ச் சடகோபன் சொன்ன’ என்றும்,  ‘தொண்டரடிப்பொடி சொன்ன சொல்’ என்றும், ‘கலியன் சொன்ன சொல்’ என்றும், ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்’ என்றே அமைந்துவருகின்றன. ஆனால் ஆண்டாள் மட்டுமே தனது தந்தையாரின் பெயரையும் சேர்த்துத் தன்னைப் பற்றித் தெரிவிக்கிறாள். ஆண்டாளைப் போலவே தனது ஆச்சார்யனைச் சேர்த்துச் சொன்ன மற்றுமொரு ஆழ்வார் மதுரகவிகள். ‘தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்’  என்பது அவரது ‘கண்ணினும் சிறுத்தாம்பு’ பாசுரத்தில் வருவது.

தான் இயற்றிய 30 பாசுரங்களையும் (சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே)  பாடுபவர்கள் சிவந்த கண்களை உடைய திருமாலின் அருளினால், எல்லாப் பிறவிகளிலும்  எல்லாச் செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ்வர் என்று ஆசீர்வதித்துத் தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்.

அதென்ன சிவந்த கண்கள்? திருப்பாவையில் பல இடங்களில் சிவந்த கண்கள் வருகின்றன. ‘கார்மேனிச் செங்கண்’, ‘பங்கயக் கண்ணன்’, ‘செங்கண் சிறுச் சிறிதே’ என்று கண்ணனின் சிவந்த கண்கள் சுட்டப்படுகின்றன. ‘கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வார் தனது ‘அமலனாதிபிரான்’ பாசுரத்தில் தெரிவிக்கிறார். ஆகவே ஆண்டாள் ‘செங்கண்’ உடையவன் என்று அரங்கனைக் குறிப்பிட்டது சரியே.

கோதை வில்லிபுத்தூரில் தான் வசித்தாள், அவள் பெரியாழ்வாரின் மகள்தான் என்று வேறு யாராகிலும் சொல்லியுள்ளனரா என்று பார்க்கையில் :

வேதாந்த தேசிகன் (கி.பி.1268 – 1369)

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

மணவாளமாமுனிகள் (கி.பி.1370) பாடியுள்ளார்:

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்

பி.கு.: கடந்த 30 நாட்களில்  திருப்பாவை விஷயமாக அடியேன் படித்தது, அடியேனின் பெரியப்பா தேரழுந்தூர் ஶ்ரீ.உ.வே.ராமபத்திராச்சாரியாரின் உபன்யாசங்களில் கலந்துகொண்டு எழுதிவைத்துக் கொண்ட சில செய்திகள், சில காலட்சேபங்களில் கலந்துகொண்டதனால் அறிந்துகொண்டவை, முக்கூர் ஶ்ரீமதழகியசிங்கரின் உபன்யாசங்களில் கேட்டது என்று, அடியேனின் அறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். பிழைபொறுத்து ஆற்றுப்படுத்துவீர். பிழை என்னுடையது, பெருமை ஆண்டாளுடையது.

சிற்றஞ் சிறு காலே

‘சிற்றஞ் சிறு காலே’ பாசுரத்தில் திடீர்த் திருப்பம் ஒன்று நிகழ்கிறது.

28 பாடல்களில் ‘பறை வேண்டும்’ என்று கேட்ட ஆய்ச்சியர் இப்போது ‘பறை வேண்டும் என்பதற்காகவா வந்தோம்? இல்லையில்லை. உன் சேவடிக்குச் சேவை செய்யவே வந்தோம்’ என்று பேசும் இடம் இது.

முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’காரம் போட்டு மோக்ஷம் தரப்போவது யார் என்பதை உறுதி செய்த ஆண்டாள், இப்போது ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்கிறாள். இங்கும் ‘ஏ’காரம் இருக்கிறது. ‘உன்னைத்தவிர யாரிடமும் கையேந்த மாட்டோம்’ என்பதாக, பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது. ‘மறந்தும் புறந்தொழா மாந்தர்’ –

‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம்’ என்னுமிடத்தில் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ‘எற்றைக்கும்’ என்பது வைகுண்டத்தை, பரமபதத்தைக் குறிக்கிறது. ‘ஏழேழ் பிறவி’ என்பது 49 பிறவிகளைக் குறிக்கிறது. ‘ஒருவேளை நீ எங்களுக்கு மோக்ஷம் அளித்தால் (‘பறை தருதியாகில்’) எற்றைக்கும் பரமபதத்தில் உனக்குக் கைங்கர்யம் செய்து வருவோம். ஒருவேளை நீ அங்கிருந்து கிளம்பி வேறு அவதாரங்கள் எடுத்தால், 49 பிறவிகளிலும் எங்களையும் கூட அழைத்து வா’ என்கிறார்கள். ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்னும் நம்மாழ்வார்ப் பாசுரம் நினைவிற்கு வரலாம். தற்போது 10 அவதாரங்கள் முடிந்துள்ளன. இன்னும் 39 இருக்கிறதோ என்கிற தோற்ற மயக்கத்தை இப்பாசுரம் அளித்தால் அதுவும் ஒரு சுவையே.

‘ஏழு பிறவிகள்’ என்பது தமிழர்களின் நினைவடுக்குகளில் ஆழப்பதிந்த ஒன்று. ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ என்னும் வள்ளுவரின் வரிகளையும் நினைவில் கொள்வோம்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் உயர்வானவை. இப்பாசுரத்தில் பகவத் கைங்கர்யம் பேசப்படுகிறது. ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் ‘வயிற்காப்போன்’, ‘ கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போன்’ என்று இரு பாகவதர்கள் ( ஆச்சார்யர்கள்) போற்றப்படுகிறார்கள். எனவே அப்பாசுரம் பாகவத கைங்கர்ய விசேஷத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது ஒரு சுவை.

‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து’ என்னுமிடத்தில், ‘பொழுது விடிவதற்குள் வந்து உன்னைத் தொழுதோம்’ என்னும் பொருள் தெரிகிறது. ஆனால் இதுவரை, ‘பொழுது புலர்ந்துவிட்டது, பறவைகள் கத்துகின்றன, ஆனைச்சாத்தன் கூவுகிறான்’ என்று சொன்னதெல்லாம் பொய்யுரையோ?’ என்னும் எண்ண மயக்கம் ஏற்படலாம். கண்ணனைச் சேர்ந்து, அவனது திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற அவாவினால் பொழுது புலர்வதற்கு முன்னரே நடுநிசியிலேயே ஆய்ச்சியர் எழுந்து வந்துவிட்டனர் என்பதாகப் பொருள் கொள்ளவும் இடமளிக்கும் பாசுரம் இது.

வைணவ மரபில், பெருமாளுக்கு அனைத்து வழிபாடுகளும் முடிந்தபின், அவனது மனதிற்கு இதமளிகும் வகையில் ‘சாற்றுமுறை’ என்று தமிழ்ப்பாசுரங்களைச் சேவிப்பார்கள். அவ்வழக்கின்படி  ‘சிற்றஞ்சிறு காலே’, ‘வங்கக்கடல் கடைந்த’ – இந்த இரு பாசுரங்களையும் சொல்வது இன்றும் நடைபெறும் வழக்கம்.

கறவைகள் பின் சென்று

‘கறவைகள் பின் சென்று’ பாசுரம் ஆய்ச்சியர் தம் அஞ்ஞானத்தைப் பறை சாற்றித் தங்களுக்குச் சரணாகதி அளிக்க வேண்டும் என்று கேட்பதாக அமைகிறது.

வைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சுவைகாகச் சொல்வதுண்டு:

‘கூடாரை வெல்லும்’ பாசுரத்தில் அணிகலன்கள் வேண்டும், பாற்சோறு உண்போம், புத்தாடை உடுப்போம் என்று ஆய்ச்சியர் கண்ணனிடம் கூறினர். அதற்குக் கண்ணன் ‘இம்மாதிரியான சரீர வஸ்துக்களுக்காகவா நீங்கள் என்னிடம் வந்தீர்கள்?’ என்று பரிகாசம் செய்தானாம். அதற்கு ஆய்ச்சியர்,’ மன்னிக்க வேணும், நாங்கள் கல்வியறிவில்லாத, அறிவு குறைந்த ஆய்ச்சியர். எனவே தவறாகக் கேட்டுவிட்டோம். எங்களுக்கு வீடுபேறு வேண்டும். ஆனால், உன்னிடமுள்ள அன்பினால் நாங்கள் உன்னைப் பல செல்லப் பெயர்களாலும், ஒருமையிரும் அழைத்துள்ளோம். இதனால் நீ கோபமுறாமல், எங்களைக் காப்பாயாக’ என்று வேண்டினார்களாம்.

‘உந்தன்னோடு நமக்கு இங்கு உறவு ஒழிக்க ஒழியாது’ என்பதால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமான பிரிக்க முடியாத உறவு பேசப்படுகிறது.

ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் நவ-வித சம்பந்தம் என்று சொல்வர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்  ஒன்பது வகையிலான உறவு நிலைகள் உள்ளன என்பது கோட்பாடு. அவை பின்வருமாறு:

  1. ரக்ஷ்ய் – ரக்ஷ்யக (காப்பவன் – காக்கப்படுபவன்)
  2. பிதா – புத்ர (தந்தை – மகன்)
  3. சேஷ – சேஷி (ஆண்டான் – அடிமை)
  4. பர்த்ரு – பார்யா (கணவன் – மனைவி)
  5. ஞாத்ரு – ஞேய (அறிபவன் – அறியப்படுபவன்)
  6. ஸ்வ – ஸ்வாமி (உடையவன் – உடைமை)
  7. சரீர – சரீரி (உடல் – உயிர்)
  8. ஆதார – ஆதேய (தாங்குபவன் – தாங்கப்படுபவன்)
  9. போக்த்ரு – போக்ய (அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன்)

உன்றன்னைப் பிறவி பெறுந்தனை’,  உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது’,’அன்பினால் உன்தன்னைச் சிறு பேரழைத்தனவும்’ என்று மூன்று முறை இப்பாசுரத்தில் ஆய்ச்சியர் கண்ணனை முன்னைலையில் குறிப்பிடுகின்றனர் (Second Person Singular). இது நேரடியான பேச்சை உணர்த்துவதாயும், ஜீவாத்மா – பரமாத்மாவிற்கிடையில் உள்ள அணுக்கத் தொடர்பை உணர்த்துவதாயும் உள்ளது.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ பாசுரத்தில் ஆய்ச்சியரின் நோன்பு முடிவடைவது குறிக்கப்படுகிறது. நோன்பு முடிந்தமைக்கான அடையாளங்கள் சொல்லப்பட்டன.

இரண்டாம் பாசுரத்தில் (‘வைத்து வாழ்வீர்காள்’) நோன்பு நோற்பதால் செய்யும் கிரியைகள் சொல்லப்பட்டன. இன்றைய பாசுரத்தில் அவை விலக்கப்படுகின்றன. இன்று பாற்சோறு உண்கிறார்கள், நெய் முழங்கை வழியாக ஓடும் அளவிற்கு அக்கார அடிசில் உண்கிறார்கள், புத்தாடை அணிகிறார்கள், சூடகம், பாடகம், தோடு, செவிப்பூ முதலிய பல அணிகலன்களை அணிகிறார்கள். இவை நோன்பு முடிந்ததற்கான அடையாளங்கள்.

இப்பாசுரத்தில் ‘கூடாரை’ என்னும் சொல் உற்று நோக்கத்தக்கது. ‘கூடார்’ என்பவர் எதிரிகள் / பகைவர் என்பது வெளிப்படை. நான்கு வகையான பகைவர்கள் உள்ளார்களாம்.

  1. கண்ணனை அறியாதவர்கள்
  2. அறிந்தும் வந்து அடி சேராதவர்கள்
  3. அறிந்தும் மனம் குழம்பி, அடியார் குழாத்தில் சேராதவர்கள்
  4. அறிந்தும் வேண்டுமென்றே எதிர்ப்பவர்கள் / சேராதவர்கள்

இவர்கள் அனைவரையும் அன்பினால் வென்று தன்னிடம் சேர்த்துக் கொள்பவன் கண்ணன் என்னும் பொருள்பட வருகிறது இச்சொல்.

இது சொல்லாமல் சொல்லும் பொருளும் உண்டு. ‘கூடாரை வெல்லும்’ என்றால், ‘எதிர்ப்பவரை வென்று’ என்று பொருள் படுகிறது. ஆக, ‘கூடியவரிடம் தோற்று’ என்கிற மறைபொருளும் வருகிறது என்பார் உரையாசிரியர். அடியாரின் அன்பினால் அவர்களிம் தோற்று நிற்கிறான் என்கிறாள் ஆண்டாள்.

நெய், சோறு, பால் விஷயத்தில் மகளும் தந்தையும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். பெரியாழ்வார் பாசுரத்தைப் பாருங்கள்.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல

பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

வைஷ்ணவ சித்தாந்தத்தின் படி, இப்பாசுரத்தில் வரும் பொருட்கள் குறிப்பனவாகப் பெரியோர்கள் / காலட்சேபக்காரர்கள் உரைப்பவை:

  1. பறை – பகவத் கைங்கர்யம் / சரீர , புஷ்ப கைங்கர்யம்
  2. கூடாரை வெல்லும் – கண்ணனின் குணங்களான சவுந்தர்யம், சவுசீல்யம், சவுர்யம்
  3. சூடகம் , தோள்வளை – சங்கு சக்கரப் பொறி
  4. செவிப்பூ – த்வயம் என்னும் பக்தி
  5. பாடகம் – காலில் அணியப்படும் அணிகலன் = சரணாகதி
  6. பல்கலன் – அடியாருக்குத் தேவையானபக்தி, ஞானம், வைராக்யம்
  7. ஆடை – ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது என்று உணர்ந்திருத்தல்

இப்பாசுரத்தில் ‘பாடகம்’ என்பது ‘பாத கடகம்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு.

மாலே மணிவண்ணா

‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில் ஜீவாத்மா பரமாத்மாவைச் சேறும் இறுதி நிலை தெரிகிறது. அதற்கான நோன்பிற்குத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

‘நாங்கள் மோக்ஷம் பெற அவாவுடன் தயாராக உள்ளோம். இதற்குத் தேவையான பொருட்களை அருள்வாயாக. உலகை நடுங்க வைக்கும் ஒலி எழுப்பும் பாஞ்சசன்னியம் போன்ற பல சங்குகள், எங்களின் வருகையை அறிவிக்கும் பறை, விடியற்காலையாகையால் ஒளியூட்ட அழகிய விளக்கு, பனியிலிருந்து காக்க விதானம் போன்ற துணிக்குடை, அனைத்திற்கும் மேல் வாழ்த்துப் பாடுவதற்குப் பண்ணிசைப்பார், நாங்கள் வருவதை அறிவுக்கும் கொடி (வேறு எங்கிருந்து வந்து சேர்வோரும் தெரிந்துகொள்ள) என்று அருள்வாயாக,’ என்பதாகப் பொருள்படுகிறது பாசுரம்.

‘பல்லாண்டிசைப்பாரே’ என்பதால் இவ்விடம் ‘பல்லாண்டுப் பாசுரம்’ பாடிய பெரியாழ்வார் குறிப்பிடப்படுகிறார் என்றும் ஒரு பார்வை உண்டு. ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன்’ என்று பின்னர் குறிப்பிடப்போவதை முன்னரே இவ்வாறு சொல்கிறாள் #ஆண்டாள் என்பது ஒரு சுவை.

‘மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்’ என்னும்போது பெரியோர் செய்தவைகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது. முன்னர் ‘செய்யாதன செய்யோம்’ என்று சொன்னது நினைவிருக்கலாம். முன்னோர் செய்யாதன செய்யோம் என்ற பொருளில் இன்றைய பாசுரத்தின் ‘மேலையார்’ விசேஷமான பொருள் தருகிறது. முன்னோர் செய்தவற்றைப் பெருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

‘இத்தனை பொருள்களையும் நான் எப்படித் தர முடியும் இந்த அதிகாலை வேளையில்?’ என்று கண்ணன் கேட்க, அதற்கு ‘நீ பிரளய காலத்தில் ஆலின் இலையில் மிதந்தவன். ஆனால் அச்சிறிய வயிற்றுக்குள் உலகங்களைச் சுமப்பவன். ஆகையால் இவற்றையெல்லாம் தருவிப்பது உனக்கு ஒரு பெரிய செயல் அல்ல’ என்று ஆய்ச்சியர் கூறினார்கள் என்பது காலட்சேபங்களில் சேவிக்கப்படுவது.

ஒருத்தி மகனாய்

‘ஒருத்தி மகனாய்’ பாசுரத்தில் ‘ஒருத்தி’ என்னும் சொல் இருமுறை வந்து, முதல் முறை தேவகியையும், பின்னர் யசோதையையும் குறிப்பதாய் வருகிறது. கண்ணனுடன் ஒரு இரவு மட்டுமே கூட இருந்த தாய்க்கும், இளமைப்பருவம் முழுதும் வளர்த்த தாய்க்கும் ஒரே பெயரிட்டு அழைக்கிறாள்.  பெற்ற தாயும், வளர்த்த தாயும் ஒரு நிறை சமானமானவர்கள் என்பதை உணர்த்தவே ஒரே சொல்லைப் பயன்படுத்தினாள் ஆண்டாள்.

கண்ணனைக் கண்ட ஆய்ச்சியர் அவனது விருத்தாந்தங்களைச் சொல்லத் துவங்குகிறார்கள். ‘நீ கம்சனின் வயிற்றில் நெருப்பென்ன நின்றாய்’ என்கிறார்கள். இதைச் சொல்ல வேண்டிய தேவை என்ன? ‘நீ யாரென்பதை உணர்ந்துகொள். நீயே ஊழி முதல்வன். ஆனாலும் இவ்வவதாரத்தில் பல செயல்களைச் செய்ய வந்தாய். அவற்றுள் ஒன்று கம்ஸ வதம். செய்துவிட்டாய். ஆனால், நீ வந்த காரியம் இன்னும் முடிவுறவில்லை. எங்களுக்குப் பறை கொடு’ என்று நினைவூட்டுகிறார்களாம்.

‘அருத்தித்து வந்தோம்’ என்று சொல்கிறார்களே ஆனால் ஒரு அர்ச்சனையும் செய்யவில்லையே என்றால், சென்ற பாசுரத்தில், ‘தென் இலங்கைக் கோமானைச் செற்றாய் திறல் போற்றி, சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கழல் போற்றி, வேல் போற்றி, குணம் போற்றி’ என்று பல வகையான அர்ச்சனைகள் செய்தார்களே, அதைச் சொல்கிறார்கள். அதையும் நினைவூட்டுகிறார்கள். போற்றிப் பாடலும் முடிந்தது, ஆகவே பறையை நினைவில் கொள்க’ என்று பார்ப்பது ஒரு சுவை.

‘அருத்தித்து வந்தோம், ஆகையால் பறை தா’ என்று கேட்கவில்லை. ‘அவ்வாறு வந்தோம், பறை தருவதாக இருந்தால் கொடு, இல்லையேல் உன் சேவையே ( கைங்கர்யமே) எங்களுக்குப் போக்யம்,’ என்கிற பொருளில் ‘பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி ‘ என்று சொல்கிறார்கள் ஆய்ச்சியர்.

வைஷ்ணவர்களுக்கு மோக்ஷமே பிரதானம். அதையும் விட முக்கியமானது கைங்கர்யம் என்கிற சம்பிரதாய நெறி முன்னிறுத்தப்படுகிறது இப்பாசுரத்தில்.

 

பணத்தாசி

ஐயா,

நீங்கள் யாரை வேண்டுமானாலும் விழாவிற்கு அழையுங்கள். என்ன கண்றாவியையானாலும் பேசிவிட்டுப் போங்கள். ஆனால், உங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத, புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப் பற்றிப் பேசச் சொல்வதற்கு முன், தலைப்புகள் பற்றிய அடிப்படை கொஞ்சமேனும் தெரிந்தவர்களிடம் பேசியிருந்திருக்கலாம். வைணவப் பாடசாலைகளில் பயிலும் 7 வயதுச் சிறுவனிடம் கேட்டிருக்கலாம். அவன் சொல்லியிருப்பான், உங்கள் முகத்தில் அறைந்தது போல், ஆண்டாள் யார் என்று.

வழக்கம் போல் கோட்டை விட்டுவிட்டீர்கள், திராவிடப் புண்-நாக்குகளிடம். போகட்டும்.

ஆண்டாள் யாரென்று நான் சொல்கிறேன்.

அவளது பிறப்பு பற்றித் தெரியவில்லை என்று நீங்கள் அழைத்தவர் சொல்லியிருந்தார். துளசிச் செடியின் அடியில் அவள் கிடைத்தாள் என்பது ஐதீகம். அவள் வில்லிபுத்தூரில் வசித்தாள் என்பதை அவளே சொல்கிறாள். ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன் கோதை சொன்ன’ என்று ‘ஶ்ரீவில்லிபுத்தூரின் விஷ்ணு சித்தரின் மகள் கோதையாகிய நான் சொன்ன தமிழ் மாலை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது திருப்பாவைப் பாசுரத்தை முடிக்கிறாள் ஆண்டாள்.

அவள் ஶ்ரீரங்கத்தில் வசிக்கவே இல்லையே? பெரியாழ்வார் அவளைத் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்றவுடனேயே அவள் அரங்கனைச் சேர்ந்துவிட்டாளே. இதை அவரே சொல்கிறார் : ‘ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால்தான் கொண்டு போனான்’. பெரியாழ்வாருக்கே தெரியாத செய்தி பேச்சாளருக்குத் தெரிந்ததோ? என்னே விந்தை! தன்னைப்போலவே பிறரை எண்ணும் குழந்தை மனம் படைத்த பேச்சாளரோ?

அவளைப் பற்றி அந்தப் பேச்சாளர் ஏதோ சொன்னதாகப் படித்தேன். கொஞ்சம் பேசுவோமா?

ஆண்டாள் பாடுவது இது:

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே’ என்கிறாள். ‘நான் மனிதனுக்கு வாழ்க்கைப் படப்போகிறேன் என்று காதில் விழுந்தால் உயிர் துறப்பேன்’ என்று மன்மதனிடம் சொல்கிறாள். இவளைப் போய் அப்படிச் சொன்னவரை நீங்கள் உங்கள் விழாவிற்கு அழைத்ததுப் பேசச் சொல்லியுள்ளீர்கள்.

அந்தத் தொழில் செய்யும் பெண்களைப் பற்றி அப்பேச்சாளர் சொன்னது இளக்காரமா அல்லது கேலியா என்கிற கேள்விக்குள் நான் செல்லவில்லை. ஆனால் அதே ஶ்ரீரங்கத்தில் இருந்த உண்மையான தாசி செய்தது என்ன தெரியுமா? முஸ்லிம் படைத் தளபதியை, அவனை அரங்க நாதனை நெருங்க விடாமல் செய்ய, அவனை மயக்கி, அவனுடன் உறவு கொள்ள அழைத்து, கோபுரத்தின் மீதேறிக் கொண்டு அங்கிருந்தபடியே அவனை அணைத்துக்கொண்டு கீழே விழுந்து அவனையும் கொன்று, தானும் இறந்தாள். அவள் நினைவாக, அவளது பெயரான வெள்ளாயி என்பதை ஒட்டி, இன்றும் அக்கோபுரம் ‘வெள்ளைக் கோபுரம்’, ‘வெள்ளாயி கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சம்பிரதாயத்துக்காக  ஒரு தாசி செய்த தியாகம் இது.

வைணவத்தில் பரம்பொருளுக்கும் ஜீவாத்மாவுக்கும் ( சரி, பேச்சாளருக்குப் புரியாதுன்னா அடுத்த பத்திக்குப் போங்க எடிட்டர் சார்) உள்ள 9 உறவு நிலைகளை ‘நவ-வித சம்பந்தம்’ என்று சொல்வர். அதில் ஒன்று ‘சேஷ-சேஷி பாவம்’ ( ஆண்டான் – அடிமை). இறைவனை எஜமானன் என்று கொள்கிற இந்த நிலையை இன்று நினைத்துப் பார்த்தால் ஒப்புக்கொள்ள முடியாது. அப்படிக் கண்ணனை யஜமானனாகவும், தன்னை அவனது அடிமையாகவும் பாவித்துப் பாடுவது ஒரு உணர்வு நிலை. ஆண்டாள் அப்படிப் பாடியுள்ளாள்.

இன்னொரு சம்பந்தமும் உள்ளது. ஸ்வ-ஸ்வாமி ( உடைமை, உடையவன்) சம்பந்தம். பல ஆழ்வார்கள் இந்த உறவுமுறை குறித்துப் பாடியுள்ளார்கள். அதுவும் போகட்டும். கணவன் – மனைவி உறவு முறை கூட உண்டு. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோர் தங்களைப் பெண்களாப் பாவித்துக் கொண்டு, பெருமாளைக் காதலனாகப் பாவித்துக் கொண்டு பாடுவதும் உண்டு. ஆக இந்த ஆழ்வார்கள் ஆண்களா, பெண்களா என்றும் கேட்பாரோ அந்தப் பேச்சாளர்?

குலசேகராழ்வார் பாசுரம் ஒன்றுண்டு. ‘கண்டார் இகழன்ழனவே காதலன் தான் செய்திடினும்’ என்னும் பாடலில் தன்னை மனைவியாகவும், திருமாலைக் கண்ணனாகவும் நினைத்துப் பாடுகிறார் மன்னரான குலசேகராழ்வார். Bridal Mysticism என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரி. கல் தோன்றி மண் தோன்றிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பகுத்தறிவுப் பாதையில் போனால் அறிவு தேங்கும் தான்.

ஐயா, இந்த உறவு நிலைகள் என்பன ஶ்ரீவைணவத்தின் குறியீடுகள். பரம்பொருள் ஒன்று, ஜீவன் பல, ஜடப்பொருளும் உண்மை என்கிற மூன்று உண்மைகளையும், ஜீவன், பரமாத்மாவை அடைய என்னென்ன வழிகள் உள்ளன என்றும் சொல்பவை ஆழ்வார் பாசுரங்கள். இவை தத்துவங்களாக இல்லாமல், உறவு நிலைகளின் வழியாக, அனைவருக்கும் புரியும்படியான எழுத்துக்களில் அமைந்திருக்கும். இந்த உணர்வு நிலையிலான பார்வைகள் புரிய சில விஷயங்கள் இல்லாதிருக்க வேண்டும்.

  1. ‘நான்’ என்னும் அகந்தை
  2. மற்ற அனைவரும் புழுக்கள் என்னும் திராவிட நாசிச எண்ணம்

ஆனால், உளுத்துப்போன பகுத்தறிவுப் பல்கலைக் கழகங்களினால் இப்படியான ஆட்களையே உருவாக்கவியலும். என்ன செய்வார் உங்கள் பேச்சாளர்?

வைணவ மரபில் திருமாலின் சக்கரப் பொறி பெற்றவர்கள் ‘தாசர்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்வார்கள். ‘ராமானுஜ ராசன்’, ‘பத்மனாப தாசன்’ என்பதாக அவர்கள் பெயர் இருக்கும். ‘தாஸ்ய நாமம்’ என்பது. பெரியாழ்வார், ‘கோயிற்பொறியாலே ஒற்றுண்டு’,  ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து’ என்று சொல்வது இதைத் தான். ‘முன்னர் எந்தக் குலத்தவனாக இருந்தாலும் அக்கறையில்லை, தற்போது சக்கரப் பொறி பெற்று, அனைவரும் இறைவனின் தாசர்களாய உள்ளோம், நம்மில் வேற்றுமை இல்லை’ என்கிற மிக உயர்ந்த சமூக நீதித் தத்துவத்தை 8ம் நூற்றாண்டில் உணர்த்தியது வைணவ மரபு.

9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண், கல்வியில் சிறந்து, ‘பஃறொடை வெண்பா’ யாப்பில் பாடல் இயற்றியுள்ளாள். அப்பாடல்களில் தேர்ந்த அறிவியல் கருத்துக்கள் தெறித்து விழுகின்றன (‘ஆழி மழைக் கண்ணா’ பாசுரம்). பெண்ணடிமை, பெண் கல்வி மறுப்பு என்று பட்டம் கட்டிய காலத்தில் மழை எப்படிப் பொழிகிறது என்கிற இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானத்தை அப்பெண் எடுத்துரைக்கிறாள். வெளிப்படையான இது கண்ணில் படவில்லை உங்கள் விழாவின் ‘சிறப்புப் பேச்சாளர்’  ‘கவிஞர்’ அவர்களுக்கு. தெரியாது தான். வந்த வழி அப்படி.

களப்பிரர் காலம் என்கிற இருண்ட காலத்தில் தமிழுக்கு எந்த ஏற்றமும் இல்லாதிருந்த போது, அதை நீக்கும் விதமாக வீறுகொண்டெழுந்த பக்தி இயக்கக் காலகட்டத்தின் ஆழ்வார்கள், நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்கள் இல்லையெனில், இன்று தமிழில் நீட்டி முழக்க ‘கவிஞர்’கள் இருந்திருக்க மாட்டார்கள். தமிழும் இருந்திருக்காது. அதனால் என்ன? உருது, அரபி என்று வேறு எங்காவது யாசித்து வயிறு வளர்க்கலாம். வயிறு தானே பிரதானம் திராவிட நாசிசவாதிகளுக்கு?

பணம் பண்ணுவதற்கு ‘வாரணமாயிரம்’ பாடலும் வேண்டும், ஆனால் அதை எழுதியவள் கீழ்மகள் என்று சொல்லவும் வேண்டும். இப்படிப்பட்டவர்களை வைத்து விழா நடத்த ஒரு மன வக்கிரம் வேண்டும். அது அபரிமிதமாக இருப்பது தெரிகிறது. ‘உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்று வாழ்ந்தவர்களைப் பற்றிப் பேசுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.

ஆசிரியரே, எனக்கு எந்த சினிமாக் கழிசடையாலும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. எனவே மனதில் பட்டதைத் தெளிவாக எடுத்துரைக்கத் தயக்கமில்லை. ஏனெனில் நான் ‘பெருந்தமிழன்’ வழியில் வந்த வைணவன். ஆம், பெருந்தமிழன் என்று தன்னை அழைத்துக் கொண்ட  பூதத்தாழ்வார் அடியொற்றி வந்தவன்.

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே

இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

ஒரு பெண் தன் திருமணம் பற்றிப் பாடுகிறாள். அதில் விசிட்ட அத்வைத தத்துவங்கள் அடங்கியுள்ளன, சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது என்று பெரியோரும், கற்றோருமான பெரியவாச்சான் பிள்ளை, பகவத் ராமானுசர் முதலியோர் காட்டுகின்றனர். ஆனால், நீங்கள் அழைத்த பேச்சாளருக்கு உள்ள களி மண் அறிவில் இவற்றில் ஒன்றும் புரியவில்லை, தனது நாய்ப்பிழைப்பு அரசியல் சார்ந்த, தரங்கெட்ட பார்வை ஒன்று மட்டும் புலப்படுகிறது. உங்களுக்கு இம்மாதிரியான மனிதர்(?) பெரியவராகப் போய்விட, அவரை வைத்து விழா நடத்துகிறீர்கள். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது இதுவோ?

உங்களின் இந்தச் செய்கையால் பிதாமகர்கள் ராம்நாத் கோயங்காவும், ஏ.என்.சிவராமனும் சுவர்க்கத்தில் மனவருத்தமுற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை.

அடுத்தமுறை ‘விழா’ நடத்தும் போது, மேடையில் ஆண்டாளின் உருவம் இல்லாமல், ஆடைகள் விலகிய நிலையில் தோன்றும் இந்தி பேசும் தமிழ் நடிகையின் படத்தை வைத்து, இதே போன்ற ‘தரம்’ உடைய ‘அறிஞர்’களைக் கொண்டு பேசச் சொல்லுங்கள். பொருத்தமாக இருக்கும், தமிழும் வளரும்.

பகுத்தறிவுக் குழியில் தமிழைப் புதைப்பவர்களுக்கு ஒரு பெயர் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன கொடுக்கலாம்? ‘பணத்தாசிகள்’? எதற்கும் ‘கவிஞரிடம்’ கேட்டுச் சொல்லுங்கள்.

%d bloggers like this: