Tag Archives: ஆதி சங்கரர்
திராவிட இயக்கம் என்னும் அபத்தம்
பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட ஶிஶு ராஸ்வாத்ய ஸததம்
கவீநாம் ப்ரௌடாநா மஜநி கமநீய: கவயிதா
8-9ம் நூற்றாண்டின் ஆதி சங்கரர் இயற்றிய இந்த ஸ்லோகத்தில் சீர்காழியில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ – ‘திராவிடத்தின் குழந்தை’ என்று அழைக்கிறார். முதலில் ‘திராவிட’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டதாகப் பொதுவெளியில் நாம் அறிந்துள்ள பாடல் இது. இதில் ஞானசம்பந்தரும், ஆதிசங்கரருமே தற்கால ‘திராவிட விதி’களின் படி திராவிடர்கள் அல்லர். இருவரும் அந்தணர்கள். ஆதிசங்கரர் ‘திராவிட’ என்னும் சொல்லை ஒரு சாதியையோ, இனத்தையோ குறிப்பிடப் பயன்படுத்தவில்லை.
நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்னும் திருமால் குறித்த 12 ஆழ்வார்களின் பாசுரங்களில், நம்மாழ்வார் எழுதிய ‘திருவாய்மொழி’ பகுதியை ‘திராவிட வேதம்’ என்று அழைப்பது பண்டைய வைணவ மரபு. பின்னாட்களில் பிரபந்தம் முழுமையுமே அப்படி அழைக்கப்பட்டது. ஆழ்வார்களில் முன்னவரான வேளாளர் குலத் தோன்றல் நம்மாழ்வார் குறித்த தனியன் எனப்படும் துதியில் ‘திராவிட வேத சாகரம்’ என்கிற சொல்லாடல் தந்து வியக்க வைக்கிறார் நாதமுனிகள். (ஒன்பதாம் நூற்றாண்டு.)
பக்தாம்ருதம் விஸ்வ ஜனாநு மோதநம்
சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்
நமாம்யஹம் திராவிட வேத சாகரம்
‘திராவிட’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் என்ன?
மனு ஸ்மிருதியில் உரிய காலத்தில் உப-நயனம் (பூணூல் அணிவிப்பது) நடைபெறாத ஷத்ரியன், ‘விராத்ய ஷத்ரியன்’ என்று அறியப்படுகிறான். ஒரு விராத்ய ஷத்ரியனுக்கும், ஷத்ரிய மனைவிக்கும் பிறக்கும் மகன், அவன் வாழும் பிரதேசத்தை வைத்து ‘மல்லா’, ‘கல்லா’, ‘லிக்கிவி’, ‘நட’, ‘கரண’, ‘கஸா’, ‘திராவிட’ என்று வட்டாரங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டான். (மனு ஸ்மிருதி – 10:21, 10:22).
மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் இயற்றப்பட்ட ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூல், தென்னாட்டுப் பிராமணர்களை ‘திராவிட பிராம்மணர்கள்’ என்றே வழங்குகிறது. பல வடநாட்டுப் பிராமணர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘திராவிட்’ என்று சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள். ( கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் போல.) இவர்களின் தென்னகத் தொடர்பை இது தெளிவுபடுத்துகிறது. ஆக, ‘திராவிட’ என்னும் சொல் பிராந்தியத்தைக் குறிப்பது என்பது புலனாகிறது. ( ‘திராவிட இயக்கம்- புனைவும் உண்மையும்’, மலர்மன்னன் பக்: 15.)
சமணப் பிரிவுகளில் ஒன்றான ‘நந்தி கணம்’ சார்ந்தவர்கள் ‘த்ரமிளச் சங்கம்’ அல்லது ‘திராவிடச் சங்கம்’ என்பதாகவே ஒன்றைக் கர்நாடகப் பகுதியில் நிறுவியிருந்ததாகத் தமிழறிஞர் சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் தெரிவிக்கிறார். இதற்குச் சான்றாக அவர் ‘EC Vol.V. Hassan Talku, 131, Arsikera Tq, IEC IV, Gundlupet Tq 27’ என்ற ஒரு சாசனத்தை மேற்கோள் காட்டுகிறார். வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி கி.பி. 5ம் நூற்றாண்டில் மதுரையில் ‘திராவிடச் சங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கினார் என்று தேவசேனர் என்பார் எழுதிய ‘தர்சனாசாரம்’ என்னும் நூலில் காணப்படுகிறது என்றும் சீனி வேங்கடசாமி தெரிவிக்கிறார். வஜ்ரநந்தி, தேவசேனர், தர்சனாசாரம் முதலிய சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்திய சமணர்கள் மதுரையிலும், கர்நாடகத்திலும் ‘திராவிட’ என்னும் பெயர் கொண்ட அமைப்புக்களைத் தென் பாரதத்தில் துவங்கியதால் ‘திராவிட’ என்னும் சொல் பிரதேசத்தைக் குறிப்பதாகும் என்பது தெளிவு.
கி.பி. 1777 – 1819 வரை வாழ்ந்த பிரன்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்னும் ஆங்கில ஆட்சியாளர் தென் பாரதத்தில் பணியாற்றவேண்டுமெனில் தென் மொழிகளில் பயிற்சி வேண்டும் என்று 1812ல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியைத் துவங்கினார். தமிழில் ஆர்வமும் பாண்டித்யமும் கைவரப்பெற்ற இவர், தென்பாரத மொழிகளுக்கிடையே இருந்த ஒற்றுமைகளை ஆய்வு செய்து கண்டறிந்தார். திருக்குறள் மீது தனி அபிமானம் கொண்டிருந்த எல்லீஸ், அதிலிருந்து சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். நாணயம் அச்சடிக்கும் அதிகாரியாக இருந்த அவர், திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம் வெளியிட்டார். ‘எல்லீசன்’ என்று அன்றைய தமிழ் மக்களால் அறியப்பட்ட இவர், ‘நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தைத் துதித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செய்யுள் இயற்றியுள்ளார்’ என்று தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘கிறித்தவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூலில் தெரிவிக்கிறார்.
தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து ஏ.டி.கேப்ம்பெல் (A.D.Campbell) என்பார் எழுதிய நூலிற்கு எல்லீஸ் முன்னுரை எழுதுகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்க்ருதம் முதலிய நான்கு மொழிகளுக்கு ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விவாதிக்கிறார். ( Note to the Introduction and Grammar of the Teloogoo Language by A.D.Campbell, College of Ft.St.George, Madras, 1916.) இவ்வளவு பாண்டித்யம் உடைய ஒருவர், ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆக, ‘திராவிட’ என்னும் சொல், தென் இந்திய மொழிகளை இணைக்கும் ஒரு தொகைச் சொல்லாகக் கூட அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததில்லை என்று அறியலாம்.
ஆனால், பின்னாளில் வந்த கிறித்தவப் பாதிரியார் கால்டுவெல், ‘திராவிட மொழிகள்’ என்கிற பாகுபாட்டை அளித்து, திராவிட மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் தொடர்பில்லை என்பதாக ஒரு பிரிவினைப் பாதையை முன்வைத்தார். மொழித் தொகுப்பைக் குறிக்க ‘திராவிட’ என்னும் பிராந்திய அடையாளத்தைக் கையாண்டு, தேசப் பிரிவினைக்குப் பின்னாளில் வித்திட்ட பலருக்கு வழிகாட்டியாய் இருந்தார் பாதிரியார் கால்டுவெல். (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.)
‘திராவிட’ , ‘திராவிடம் அல்லாத’ என்று இரு பிரிவுகளாக மொழிகளைப் பிரித்தால் மொழிவழியாக பாரத மக்களைப் பிரிக்கலாம், அவர்களைத் தன் மதத்திற்கு மாற்றலாம் என்கிற எண்ணம் கால்டுவெல்லிற்கு இருந்தது. தனது ஒப்பிலக்கண நூலின் முதற்பதிப்பில் எல்லீஸ் பற்றி மேலெழுந்தவாரியாகக் குறிப்பிடும் கால்டுவெல், மூன்றாவது பதிப்பில் எல்லீஸ் பற்றிய குறிப்பை நீக்கினார் என்கிறார் தாமஸ் டிரவுட்மேன் என்னும் மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர். (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras, Thomas R. Trautman.)
கால்டுவெல் அத்துடன் நிற்கவில்லை. ‘The Tinneveli Shanars: Sketch of their religion and their moral condition and characteristics – with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them’ என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். சாணார்கள் வணங்குபவை பேய் பிசாசுகள் என்றும், அவை பிராமணர்கள் வழிபடும் மேனிலைத் தெய்வங்கள் அல்ல என்றும் வாதிடுகிறார். பிராமண , பிராமணரல்லாத என்று இரு பிரிவுகளை உண்டாக்கினால் தென்பாரதம் முழுமையையும் சேசுசபையின் கீழ் கொண்டு வர ஏதுவாகும் என்கிற நோக்கில் செயல்பட்ட பாதிரியார் கால்டுவெல், இன்றைய ‘திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள்’ என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களால் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.
சுயமரியாதை இயக்கம், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றெல்லாம் பிராமணர் அல்லாத மேட்டுக்குடி ஜமீந்தார்களின் சங்கங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்டன. பிராமணர் அல்லாதோருக்காக அரசாங்கத்தில் பேசி, வேலை, கல்வி முதலியவற்றில் அதிக இடங்களைப் பெறுவதற்காகத் துவங்கப்பெற்ற இவை, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடிகளாகச் செயல்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியும், விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியும் பல செயல்களில் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. இவற்றின் தலைவர்களுக்குள் மோதல்களும் போட்டிகளும் மலிந்திருந்தன. அப்போது இவ்வியக்கங்களை ஒருவாறு ஒன்றுபடுத்தி அதன் தலைவரானவர் ஈ.வெ.ரா. இந்தியாவின் சுதந்திரத் தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், திராவிட நாடு என்கிற தனி நாடு வேண்டும் என்றும் உரக்கப் பேசி வந்தார் ஈ.வெ.ரா. ‘பாகிஸ்தான்’ கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தபோது, ‘திராவிடஸ்தான்’ என்னும் ஒரு தேசத்தையும் சேர்த்துக் கேட்குமாறு ஈ.வெ.ரா. கேட்டிருந்தார். ஜின்னா அதைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை என்பது வேறு விஷயம்.
‘திராவிடஸ்தான்’ கோரிக்கை எடுபடாததாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் திராவிட நாட்டை ஏற்காததாலும், ’திராவிடம்’ என்பது தமிழகத்தை மட்டுமே குறிப்பதாகத் தற்போது பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
ஈ.வெ.ரா.வைத் திராவிட இயக்கத் தலைவர் என்பது போலித்தனத்தின் பேருருவம். கன்னட வைணவரான இவர் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று கூறியவர். சிலப்பதிகாரத்தை விலைமாது எனப் பேசியவர்.1 திருக்குறளை ‘ஆரியப் பார்ப்பன நூல்’ என்று அழைத்தார். பின்னர் பலகாலம் கழித்துத் திருக்குறள் பற்றிய தன் கருத்தை மாற்றிக்கொண்டார். வள்ளுவர் சமணர் எனத் தற்காலத்தில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும், ஆரியப் படையெடுப்பு என்பது வழக்கொழிந்து போன ஆங்கிலேயப் புனைவு என்பதும் வேறு விஷயங்கள்.
ஈ.வெ.ரா.வின் திராவிட நாட்டுப் பற்று, அவர் அதனை வலியுறுத்தி வந்த காலத்திலேயே கேள்விக்குரியதாக இருந்தது. ஒரு பக்கம் திராவிட நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராகப் பேசிக்கொண்டிருந்தார். திசம்பர் 4, 1940ல் சேலத்தில் பேசும்போது ஆட்சி அதிகாரத்தில் பிராமணர் அல்லாதோருக்கு உரிய பங்களித்தால் தமது கட்சியினர் அனைவருடனும் தானும் காங்கிரசில் சேர்ந்துவிடுவதாகக் கூறினார். ஆக, அடைந்தே தீர வேண்டியதாக இருந்த ‘திராவிட நாடு’ ஈ.வெ.ரா.வால் காற்றில் பறக்கவிடப்பட்டது.
ஈ.வெ.ரா.வின் வழி வந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட அண்ணாதுரை ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்னும் கோஷத்தை முன்வைத்தார். ‘தனி நாடு’ கோரிக்கையை முன்வைத்தால் இந்திய அரசு இறங்கிவரும் என்று பகல் கனவு கண்ட அவரை, நேரு 1962ல் ‘தேச துரோகச் சட்டம்’ இயற்றியதன் மூலம் பணியவைத்தார். பின்னர் தனி நாடு கேட்ட அண்ணாதுரை 1967ல் இந்திய இறையாண்மையைக் காக்க உறுதிமொழி எடுத்து இந்தியத் திருநாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வராகி, ‘திராவிட நாடு’ என்னும் நகைச்சுவையை முடித்துவைத்தார்.
இந்தியத் தேசியத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் வெற்றுப் பிரசாரமாக மட்டுமே திராவிட இயக்கக் கோஷம் மாறிவிட்டது தற்கால அபத்தங்களில் ஒன்று. இன்று ‘திராவிட’ என்று துவங்கும் எதனையும் பற்றி நினைக்கும்போது உடனே பளிச்சிடுவது அச்சொல்லைத் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் ஊழல் மட்டுமே என்பது நிதர்சனம்.
உதவிய நூல்கள் :
திராவிட மாயை ஒரு பார்வை – சுப்பு
திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – மலர்மன்னன்
அடிக்குறிப்பு:
சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51)
“…இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.”
வைணவன் – சங்கர மடம். என்ன தொடர்பு ?
எனது ‘பழைய கணக்கு’ நூலில் ‘தரிசனம்’ என்றொரு கதை ( கதை அல்ல. நிகழ்வு). காஞ்சி மாஹாஸ்வாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிய நிகழ்வு ஒன்று வரும். இதனைப் படித்துவிட்டு வாசகர் ஒருவர்: ‘வைஷ்ணவனான நீ எப்படி சங்கர மடத்துக்கு போனே?’ என்று கேட்டார். இது ஏதோ எடக்கு முடக்கான கேள்வி என்று வாளாவிருந்தேன். ஆனால் நிஜமான சந்தேகம் போல. மீண்டும் செய்தி அனுப்பியுள்ளார். ஆகையால் பொதுவெளியில் பதில்.
ஐயா, சன்யாசிகள் ந்ருசிம்ஹ ஸ்வரூபம் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் தான் எந்த சன்யாசியைப் பார்த்தாலும் பார்த்த இடத்திலேயே விழுந்து வணங்க வேண்டும் என்னும் வழக்கம் உள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு கனவு வந்தது. நான் ஆற்றில் நீராடச் செல்கிறேன். ஆற்றில் இறங்கி கரையைப் பார்க்கிறேன். ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கரையில் நடந்து செல்கிறார். சிறிது தூரம் சென்று அவரும் ஆற்றில் இறங்குகிறார். நான் ஆற்றில் இருந்து எழும் போது என் கையில் ஜெயேந்திரரது ‘தண்டம்’ (அவர்கள் கையில் வைத்திருக்கும் ஒற்றைக் கழி) அகப்படுகிறது. அதை எடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கரையில் என் அம்மாவைத் தேடுகிறேன். அங்கு ஜெயேந்திரர் நீராடி, விபூதி, வேறு துவராடை அணிந்துகொண்டு என்னைப் பார்த்து சிரித்தபடியே கையைத் தூக்கி ஆசீர்வதித்தபடி செல்கிறார்.
கனவில் கண்டதை என் அம்மாவிடம் சொல்ல, என் தாயார் அடுத்த வாரமே காஞ்சிபுரம் சென்றார். ஜெயேந்திர ஸ்வாமிகளிடம் இதைத் தெரிவிக்க, அவருக்கே உரித்தான அந்தப் பளீர் சிரிப்புடன்,’உங்காத்துல ந்ருசிம்ஹ ஆராதனை உண்டோனோ?’ என்கிறார். ‘ஆஹா, ந்ருசிம்ஹனே எங்கள் ஆராத்ய தெய்வம். நாங்கள் அஹோபில மட சம்பிரதாயம்’ என்று என் அம்மா சொல்ல, பெரியவர், புன்முறுவலுடன், ‘சன்யாசிகள் தரிசனம் ந்ருசிம்ஹ கடாக்ஷ்ம். பையன் நன்னா வருவான்.’ என்று குங்குமப் பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அந்த மாதம் எனக்குத் திருமணம் நிச்சயமானது. இன்று 19-வது திருமண நாள்.
இது ஒருபுறமிருக்க, என் தாத்தா ஸ்வர்க்கீய கனபாடி ஆமருவியாச்சாரியார் காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் கனம் பாடி தங்கத் தோடா பரிசு வாங்கியவர். காஞ்சி, சிருங்கேரி மடங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனது பெரியப்பா ராமபத்ராச்சார்யர் எழுதிய ‘ஆழ்வார்கள்’ பற்றிய பல நூல்களுக்குக் காஞ்சி மடம் ஶ்ரீமுகம் அளித்துள்ளது. ‘பரகாலன் கண்ட பரிமள அரங்கன்’ என்னும் நூலை மஹாஸ்வாமிகள் கண்பார்வை மங்கியிருந்தாலும் முழுதும் படித்துத் தனது சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார்.
தமிழகத்தில் சனாதன தர்மம் தழைக்கக் காஞ்சி மடம் ஆற்றியுள்ள பணி மகத்தானது. அதனாலேயே அது போலி பகுத்தறிவு மதமாற்றச் சக்திகளால் அல்லலுக்குள்ளானது என்பது யாவரும் அறிந்ததே.
To cut the long story short: சன்யாச ஆஸ்ரமம் ஏற்றுள்ள வைதீக மதஸ்தர்களிடையே வேறுபாடு பாராட்டக் கூடாது என்பது நமது சம்பிரதாயம். ‘யதிகள்’ என்று சொல்லி வணங்குவதே முறை. சுபம்.
வைணவம் – ஆதி சங்கரரின் பங்கு
வைணவம் குறித்த முந்தைய பதிவில் ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் மக்களைக் குழப்பியது என்று தெரிவித்திருந்தேன். இந்த இக்கருத்து எனது ஒரு அனுமானம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
இந்தக் கருத்தினை சிலர் நான் ஆதி சங்கரரை அவதூறாகக் கூறியிருப்பதாகக் கருதியுள்ளனர். அவர்களின் இந்த அனுமானம் தவறு. எனது விளக்கம் பின்வருமாறு :
ஆதி சங்கரரின் காலம் ஆழ்வார்களின் காலத்தின் இறுதிக்கட்டம். அதாவது கி.பி.7 – கி.பி. 9 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. 1– கி.பி. 6 காலகட்டத்தில் ஜைனமும் பௌத்தமும் தமிழகத்தில் வேரூன்றி அதன் பின்னர் சமுதாயக் காரணங்களுக்காகவும் சித்தாந்தக் காரணங்களுக்காகவும் அழியத் துவங்கிய நேரம். அவற்றின் அழிவை வேகப்படுத்திய பெருமை ஆதி சங்கரருடையதே. அவரது அத்வைத சித்தாந்தம் கருத்தியல் ரீதியாக ஜைனத்தையும் பௌத்தத்தையும் களைய வழிவகை செய்தது. சங்கரரின் வாதத்தின் முன் பௌத்தர்களின் ‘சூன்ய’ சித்தாந்தம் எடுபடவில்லை. அத்துடன் சேர்ந்து அக்கால சமுதாயக் காரணங்களும் இந்த அழிவிற்கு வழி கோலின.
ஆனால் பௌத்தமும் ஜைனமும் கோலோச்சிய காலத்தில் பாரத தேசம் முழுவதும் அதன் வீச்சு தென்பட்டது. தமிழகத்தில் மட்டும் அந்த அளவு இல்லை. இருப்பினும் அவர்களது ஆளுமை வணிகர்களிடம் இருந்ததை நாம் பார்த்தோம். களப்பிரர் காலம் முடியும் வரை அவர்களது ஆளுமை தென்பட்டது.
ஆனால் தமிழகம் தவிர்த்த வட மாநிலங்களில் சனாதன தர்மம் ( அப்போது இந்து மதத்திற்கு அது தான் பெயர் ) மிகப்பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியதில் ஆகச் சிறந்த பணி ஆதி சங்கரருடையது என்பதில் ஐயமில்லை.
ஆதி சங்கரர் பாரதம் முழுவதும் நடந்து சென்று பல ஜைன பௌத்த குருமார்களை வாதத்தில் வென்று அத்வைத மதத்தை நிலைநாட்டினார். இந்த முயற்சியில் பல சீடர்களையும் பெற்றார். பாரதம் முழுவதும் பயணித்து ஐந்து சக்தி பீடங்களை நிர்மாணித்தார். அவற்றின் மூலம் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். இதன் மூலம் ஜைன பௌத்த மதங்களை சித்தாந்த ரீதியாக வென்றார்.
மாபெரும் அழிவில் இருந்து இந்து மதத்தைக் காத்தார் சங்கரர். அறுவகையான சமயங்களை செழுமைப்படுத்தினார். முன்னமே பல வகைகளில் இருந்த காளி, விஷ்ணு, கணபதி, சூரியன், சிவன் முதலிய தெய்வங்களின் வழிபாட்டை ஆற்றுப்படுத்தினார். எனவே அவர் “ஷண்மத ஸ்தாபனாச்சார்யா” ( ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்தவர் ) என்று போற்றப்பட்டார். பல நூல்களுக்கு உரைகள் எழுதினார்.
சனாதன தர்மம் இன்றளவும் வாழ்வதற்கு ஆதி சங்காரின் பணி மிகவும் இன்றியமையாதது. இந்தியத் தத்துவம் என்றாலே அத்வைதம் தான் என்று கூறும் அளவிற்கு அவரது தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தரும் வேதாந்தம் என்பதை அத்வைத வேதாந்தம் என்று கூறும் அளவிற்கு ஆதி சங்கரரின் வீச்சு இருந்தது.
ஆயினும் அத்வைத சித்தாந்தம் அறிவாளிகளின், புலவர்களின் வாதத்தில் மட்டுமே திகழ்ந்தது என்பதே உண்மை.
சித்தாந்த ரீதியாக சில குழப்பங்கள் இருந்தன என்பதும் உண்மை. பிரும்மம் ஒன்றே என்று கூறினார். உலகமும் மற்ற உயிர்களும் இந்த ஒரு பிரும்மத்தின் பிம்பம் என்றார். ஆனால் உயிர்களிடத்தில் வேறுபாடு இருந்தது நிதர்சனம். ஆண்டான் அடிமை முறை நடைமுறையில் இருந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘Lack of Inclusiveness’ என்று கூறலாம்.
ஆதிசங்கரரின் வாழ்விலேயே இதனைக் காணலாம். ஒருமுறை அவர் நீராடி வரும்போது ஒரு புலையர் குலத்தவன் எதிரில் வந்துள்ளான். அவனை ‘ஒத்து, ஒத்து’ என்று கூறியுள்ளார் சங்கரர். அப்போது அந்தப் புலையன் ‘உங்கள் சித்தாந்தப்படி நானும் நீங்களும் ஒரே பிரும்மத்தின் வேறு வடிவங்கள் என்றால், நான் எதனிடமிருந்து விலகுவது? ‘அன்ன மய கோசமான’ எனது உடம்பிலிருந்து விலகிச் செல்லச் சொல்கிறீர்களா ? அல்லது ‘பிராணமய கோசமான’ ஆத்மாவிலிருந்து விலகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டுள்ளான் என்று சங்கரரின் வரலாறு கூறுகிறது.
ஆதிசங்கரர் தத்துவம் ஞான மார்க்கம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அவர் அறிவுக்கு முதலிடம் கொடுத்தார். லௌகீக விஷயங்களுக்கு இரண்டாம் இடமே கொடுத்தார். இது பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவரது ‘இந்தியத் தத்துவம்’ என்னும் நூலில் ஆதி சங்கரரது கொள்கை “ஆன்மாவற்ற தர்க்கம்” ( Soulless Logic ) என்று குறிப்பிடுகிறார்.
அத்வைதத்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு புனைவு சொல்வதுண்டு. ஒரு அத்வைதி தெருவில் நடந்து சென்றாராம். அப்போது ஒரு காளை மாடு நிதானமிழந்து தெருவில் ஓடி வந்ததாம். அத்வைதியின் நண்பர் ,”ஓய் அத்வைதியே, உமது சித்தாந்தந்தின் படி நீங்களும் மாயை, அந்தக் காளை மாடும் மாயை. எனவே ஒரு மாயை இன்னொரு மாயையை முட்டுவதால் ஒன்றும் ஆகாது. பயப்படாமல் செல்லும்” என்று கூறினாராம். இது வேடிக்கைப் புனைவுதான் என்றாலும் அத்வைத சித்தாந்தம் சிறிது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று காட்டவே இது புனையப்பட்டிருக்க வேண்டும்.
சங்கரரின் ஆயுட்காலம் மிகச் சிறியது. அதனுள் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. சனாதன தர்மத்தின் ஆணி வேரையே அசைத்த ஜைனத்தையும் பௌத்ததையும் சித்தாந்த ரீதியாக வலுவிழக்கச் செய்த பாரதப் பெருமகன் ஆதி சங்கரர். இவர் ஆற்றிய பெரும் பணியினைத் தொடர்ந்தார் இராமானுசர் என்று கூறலாம்.
ஆதிசங்கரரின் பணி உடனடித் தீமையை அகற்றி சனாதன தர்மத்தைக் காத்தது. இராமானுசர் பணி அவர் வாழ்ந்த காலத்தின் நடைமுறைகளை அனுசரித்து அதனை மேலே கொண்டு சென்று அனைவருக்கும் பொதுவான ஒரு ஆன்மிக சக்தியாக உருவாக்கியது என்று கொள்ளலாம்.