மாளாபுரம் கோவில் திருப்பணி

மாளாபுரம் கோவில் திருப்பணி – ஒரு பார்வை

சனிக்கிழமை (25-03-2023) பாபநாசம் அருகே உள்ள மாளாபுரம் என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது.

மாளாபுரம் முன்னர் திருமால்புரம் என்று இருந்துள்ளது. பின்ன மால்புரம் என்று ஆகி, தற்போது மாளாபுரம் என்று புழங்கிவருகிறது. சின்னஞ்சிறிய அக்கிரஹாரம் அமைந்துள்ள ஊரில் அமைதி ததும்பும் சூழல். எங்கும் தென்னை மரங்கள் நிறைந்து, குளம் கூட உள்ளது. முக்கியமாகக் குளத்தில் நீர் உள்ளது. மக்கள் அவசரமில்லாத ஒரு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஊரில் புதுக்கோட்டை மன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அக்கிரஹாரம் அமைத்தார். சிவன் கோவில் ஒன்றும், லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் ஒன்றுமாக நிர்மாணித்தார். அக்கிரஹாரத்தாரும், ஊர் மக்களும் கோவிலைக் கவனித்துக் கொண்டனர்.

காலப்போக்கில் எல்லா அக்கிரஹாரங்களையும் போல் மாளாபுரம் அக்கிரஹாரமும் குன்றத் துவங்கியது. பெயரளவில் இன்னும் உள்ளது என்றாலும், கோவில் பாழானது.

பெருமாள், லலிதா என்றொரு பக்தையின் கனவில் தோன்றித் தன் கோவிலைப் புதுப்பிக்க உத்தரவிட்டார். லலிதா பிற வேலைகளில் இருந்ததால் முயலவில்லை. பின்னர் மீண்டும் அதே கனவு வரவே, அவர் தன் குடும்ப ஜோதிடரைத் தொடர்புகொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தனியொருவராகக் கோவிலைக் கட்டத் துவங்கினார்.

ஊர்க்காரர்கள் பலர் வெளியூர்களில் இருந்தாலும், ஓரளவு உபகாரமாக இருந்துள்ளனர். இந்து சமய அற நிலையத் துறையின் உத்தரவைப் பெற்ற லலிதா, கோவில் கட்டும் பணியில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நான் சென்ற போது மாலை 5:30 மணி. அந்தி சாயும் நேரத்தில் அந்தக் கிராமத்தின் அமைதி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது. வாகன இரைச்சல்கள் இல்லாத, கிளிகள், குருவிகள் கத்தும் சூழலைக் கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாளாபுரம் உணர வைத்தது.

கோவில் கட்டுவதுடன் நிற்காமல், ஊரில் உள்ள குழந்தைகளுக்குப் பஜனையும் சொல்லிக் கொடுத்துள்ளார் லலிதா அம்மையார். இந்த மாதிரியான வேற்றுலக நிகழ்வுகளில் மூழ்கியிருந்த போது ஓய்வு பெற்ற தாசில்தார் அம்மையார் ஒருவர் வந்து அறிமுகம் ஆனார். ‘நல்ல விஷயம் பண்றா லலிதா. நீங்கள்ளாரும் உறுதுணையா இருங்க’ என்று சொன்னவர், ‘We can’t take a pie when we leave this place’ என்று சொல்லிச் சென்றது ஏதோ சித்தர் வாக்கு போல் மனதில் ரீங்காகரம் இட்டவண்ணம் இருந்தது.

லலிதா அம்மையார் பல போராட்டங்களுக்கு இடையில் கோவில் நிர்மாணம் செய்து வருகிறார். கோபுர வேலைகள் பாதியில் உள்ளன. த்வஜஸ்தம்பம் முடியும் நிலையில் உள்ளது. மடப்பள்ளி வேலைகள் துவங்கியுள்ளன. சக்கரத்தாழ்வார் சன்னிதியும், ஆண்டாள் சன்னிதியும் துவங்கவுள்ளன. கூடிய விரைவில் சம்ப்ரோக்‌ஷனம் நடத்த முயன்றுவருகிறார் லலிதா அம்மையார்.

கோவிலில் எடுத்த சில படங்களை வெளியிடுகிறேன். கோவில் தொடர்பாக மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் லலிதா அம்மையாரைத் தொடர்புகொள்ளுங்கள். (+91-99520-58324). ஆ..பக்கங்கள் ஆமருவி மூலம் தெரிந்துகொண்டேன் என்று சொல்லுங்கள். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே.

சில படங்கள்

இந்தக் கோவில் பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

அறம் நிலையாத் துறை ஒழிய வேண்டியது ஏன் ?

இந்து அறம் நிலையாத் துறை அழிய வேண்டிய ஒன்று. ஏனென்று அறிந்து கொள்ள மேலே வாசியுங்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை இந்து அறங்கெட்ட துறையில் சில ஊழியர்கள் நாசமாகப் போவார்கள் என்று சாபம் இட்டு எழுதியிருந்தேன். பின்னர் விளக்குகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இன்று எழுதுகிறேன்.

அறங்கெட்ட துறை ஒழிய வேண்டும் என்பது ஏனோ இன்று நேற்று கொடுக்கப்படும் சாபம் அன்று. பல கோவில்களில் துறை செயல்படும் விதம் பற்றி அறிந்தவன் என்பதாலும், இரண்டு கோவில்களின் குடமுழுக்கு, திருத்தேர்ப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் பயணித்தவன் என்பதாலும் பல விஷயங்கள் நேரடியாகத் தெரியும்.

முதல் பத்தியில் உள்ள கோபம் குறித்து :

1000 ஆண்டுகால, சிறிய கோவில் அழிந்த நிலையில் இருந்தது. திருப்பணி செய்ய வேண்டும் என்று ஒரு குடும்பம் 40 ஆண்டுகளாக முயன்றது. ஆரம்பித்த பெரியவர் மறைந்தார். அவரது தம்பி மேற்கொண்டு முயன்றார். தொல்லியல், அ.நி.து. என்று அலைந்து, அவரும் மறைந்தார். கோவில் அப்படியே இருந்தது.

அவரது மகன் ராமு. தன் அப்பாவும், பெரியப்பாவும் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்தார். 6 ஆண்டுகள் முயற்சி. ஒரு வழியாக அ.நி.து. ஒப்புதல் அளித்தது.

பெரும் சிரமத்துடன் பணிகளைத் துவங்கிய அவர், பாலாலயம் செய்ய உத்தரவு கேட்டார். அ நி.து. தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

கோவில் உள்ள மாவட்ட அ.நி.து. ஒப்புதல் அளித்தது. மேற்கொண்டு உத்தரவு வழங்க சென்னைக்கு அனுப்பியது. சென்னைத் துறையின் உறக்கம் கலையவில்லை. மூல மூர்த்தியை நகர்த்தி வைக்க வேண்டும் என்பதால் சென்னை உத்தரவு தேவை.

ராமு பாலாலய வேலைகளுக்கு நாள் குறித்தார். சென்னை அலுவலகத்துக்கு நடக்கத் தொடங்கினார்.

நாள் நெருங்கிவிட்டது. உத்தரவு வரவில்லை.

ராமு பாலாலய ஏற்பாடுகளுக்காக ஊருக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார். முழு நேர வேலையில் இருப்பவர் ராமு.

நாளை பாலாலயம். இன்று பந்தல் முதற்கொண்டு போட்டாகிவிட்டது. ஆட்கள் வந்துவிட்டனர். பாலாலயத்துக்கான பொருட்கள் வந்து இறங்கிவிட்டன.

ராமு சென்னையில், அ.நி.து. அலுவலகத்தில்.

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கமிஷனர் உத்தரவு வேண்டும், உங்கள் கடிதம் வந்து 15 நாட்கள் தான் ஆனது, எனவே மேலும் அவகாசம் தேவை என்று அலுவலர்கள் முகத்தில் அறைவது போல் சொல்கின்றனர்.

மாலை 5:00 மணி. உத்தரவு இல்லை.

மாலை 6:30. மாவட்ட அ.நி.து. அதிகாரியைத் தொடர்பு கொண்டு கெஞ்சுகிறார் ராமு. ‘நாளைக்குக் கார்த்தால ஊர்ல பாலாலயம். எப்படியாவது உத்தரவு வாங்கிக் கொடுங்க’ என்கிறார்.

மாவட்ட அதிகாரியும் சென்னையைத் தொடர்பு கொள்கிறார்.

மேலும் அவமானங்கள், இழுத்தடிப்புகள் என்று சுமார் எட்டரை மணி வரை போகிறது. இடையில் ராமு என்னிடம் உதவி கேட்க, நான் சில அலுவலர்களைத் தொடர்புகொண்டேன். பலனில்லை.

இரவு சுமார் 9:00 மனிக்கு ‘அனுமதி இல்லை’ என்று அறிவிக்கிறார்கள். பாலாலயம் நின்றுபோகிறது.

அந்த நிலையில் தான் நான் ‘அவரகள் நாசமாகப் போவார்கள்’ என்று எழுதியிருந்தேன்.

ராமு மீண்டும் அனுமதி கோருகிறார். ஒரு மாத அவகாசத்தில் அனுமதி கிடைக்கிறது. 40 நாட்கள் கழித்து பாலாலயம் நடக்கிறது.

வாங்கும் சம்பளத்திற்குக் கூட வேலை செய்யாத அரசு அலுவலர்களுக்கு நல்லது எப்படி நடக்கும் ? இவர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளுக்கு என்ன நல்லது நடந்துவிடும் ? அவர்கள் மேல் உள்ள அரசியல்வாதிகளுக்கு ?

ஆகவே, இந்து அறம் நிலையாத் துறை கோவில்களில் இருந்து ஒழிய வேண்டும் என்பது சாபம் மட்டுமல்ல, நிதர்சனத் தேவையும் கூட. அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ‘ஆடிட்’ வேலையை மட்டும் செய்யட்டும்.

மேலும் பேசுவோம்.

–ஆமருவி

19-02-2023

ராமு – பெயர் மாற்றம்.

மேலசோழங்குப்பம் கோவில் – பாழ்பட்ட கதை

மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன.

ரொம்ப பேச வேண்டாம். கோவில் பாழாகியுள்ளது என்றாலே அது தமிழக அரசின் இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் வரும் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆகவே செய்திகளை மட்டும் தருகிறேன். கோபதாபங்கள், உணர்ச்சிப் பீறிடல்கள் என்று எதுவும் பலனில்லை. முடிந்தால் ஏதாவது செய்யலாம். இல்லையெனில் இருப்பதைப் பற்றி எழுதி, மக்களிடம் கொண்டு சேர்த்து அடுத்த கோவில் பற்றி எழுதலாம். தற்காலத்தில் அவ்வளவு தான் முடிகிறது.

பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக அற நிலையத்துறையின் கவனத்துக்குக் கொண்டு வர நான் பட்ட பாடுகள் நானே அறிவேன். எத்தனையோ ஊடகப் பிரிவுகளில் சென்று கேட்டுவிட்டேன். ஹிந்துத்துவ ஊடக வெளிகள் என்று அறியப்படுபவையும் மௌனம் சாதித்தன. ‘யாத்ரிகன்’ என்னும் யூ-டியூப் ஒளிவழி மட்டும் செவி சாய்த்தது. ஆனால், ஹிந்து தர்மத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் ‘தி ஹிந்து’ நாளிதழ் அக்கோவில் பற்றிய என் கட்டுரையை வெளியிட்டது. பின்னர் தற்போது அறம் நிலையாத் துறை ஏதோ செயலாற்றி வருகிறது. கோவில் புனரமைப்பு குறித்த ஆரம்ப கட்ட திட்டமிடல் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஒவ்வொரு முறை வேலைகள் நிற்கும் போதும், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் செல்வாக்குள்ள பெரியவர்களைக் கொண்டு பரிந்துரைக்க வேண்டியுள்ளது. இது பெரும் மனத்தளர்வை ஏற்படுத்துகிறது.

எனவே, பாபு ராயன் பேட்டை கோவில் தவிர மற்ற கோவில்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடலாம் என்று முடிவு செய்து, மற்றுமொரு பாழ்பட்ட பண்டைய கோவில் குறித்து எழுதுகிறேன்.

இந்த முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலசோழங்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில். வழக்கம் போல் பாழ். கேட்பாரற்ற நிலை. மேற்பார்வை இந்து சமய அறம் நிலையாத் துறை.

பதினைந்து ஆண்டுகளாகக் கோவில் பூட்டிக்கிடந்துள்ளது. தற்சமயம் கோவிலைத் திறந்து பார்த்ததில் தாயார் மூலவர் திருமேனி பின்னம் அடைந்துள்ளது தெரிந்தது. தாயாருக்குத் தனி சன்னிதியே உள்ள நிலையில், தாயார் பின்னம் அடைந்தது பெரிய அப-சகுனமாகத் தோன்றவே, பம்பாயைச் சேர்ந்த வெங்கடேசன் என்பார் கோவிலைப் புனருத்தாரணம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்காகக் கோவிலில் உழவாரப் பணி செய்த போது ஐந்து மூட்டைகள் அளவிற்குக் காலி மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. செடிகொடிகள் என்று அனைத்தையும் தன் செலவில் நீக்கியுள்ள் வெங்கடேசன் மற்றும் ஊர்ப் பெரியவர்கள், தாயார் திருமேனி வேண்டும் என்பதற்காக மஹாபலிபுரத்தில் ஒரு சிற்பக் கூடத்தில் செய்யச் சொல்லியுள்ளார்கள்.

திருமேனி தயாராக உள்ளது. ஆனால், புதிய திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய அறம் நிலையாத் துறை அலைக்கழித்து வருகிறது. திருவண்ணாமலை போளூர் / கலசப்பாக்கம் ( வந்தவாசி) பகுதி செயல் அலுவலர் இதற்கான மனுவைச் சென்னை அறம் நிலையாத் துறைக்கு அனுப்ப வேண்டும். அனுப்பியுள்ளார்களா என்று தெரியவில்லை. திருமேனி தயாராக இருந்தாலும் பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் பக்தர்கள்.

கோவில் பழமையானது. ஊரில், 1400 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால், கோவிலின் உண்மையான வயது தெரியவில்லை. சோழன் பெயரில் உள்ள ஊரில் உள்ளதால் சோழர் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தது எண்ணூறு ஆண்டுகளாவது பழமையாக இருக்க வேண்டும் என்பது கோவிலில் சிற்பங்கள், சன்னிதிகளைக் காணும் போது தெரிகிறது.

கோவிலுக்கு சுமார் 15 ஏக்கர் அளவில் நிலங்கள் இருந்துள்ளன. கடந்த காலத்தைக் கவனிக்கவும். மேலும் நிலங்கள் இருந்திருக்கலாம். தற்போது எங்கே என்று தெரியவில்லை. அரசிடம் தகவல்கள் இருக்கும். யாரேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெறலாம். கோவிலுக்குத் தெப்பக் குளமும் இருந்துள்ளது. கவனிக்க: இருந்துள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு போக கொஞ்சம் குளமும் உள்ளது.

ஊர்க்காரர்கள் சொன்னது: “ஶ்ரீமத் இராமானுசர் திருமேனியின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது. மது அருந்திய நிலையில் காலிகள் போட்ட ஆட்டம் இது. தாயாரின் திருமேனி பின்னமும் இவர்களாலேயே தான்.” இராமானுசரது திருமேனி இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. அருகில் உள்ள கல்லூரியின் பேருந்துகள் நிற்கும் இடமாகவும், ஓட்டுநர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் கோவில் வளாகம் இருந்துள்ளது. இந்து சமய அறம் நிலையாத் துறை தனது கோவில்களைக் காக்கும் அழகு இது தான்.

தாயார் சன்னிதியில் அசைவ உணவும் மதுவும் கூடிய கூட்டுக் களிகள் நடந்துள்ளன என்றால் நம்புவீர்களா?

மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன. கோவிலை மக்கள் மதுபானக் குப்பிகளின் கிடங்காகப் பயன்படுத்தும் நிலையில் அரசுகள் மக்களை வைத்துள்ளன. வேதம் நிறைந்த தமிழ் நாடு, கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று பாரதி சொல்வான். பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்வோம் என்றான். நாமோ கோவில் தலத்தை மதுக் குப்பிக் கிடங்காக்கியுள்ளோம். அவன் இன்றிருந்தால் பேனாவால் தன் கண்களைக் குத்திக் கொண்டு மாய்ந்திருப்பான்.

பிற மத மன்னர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை ஹிந்துக் கோவில்களை இடித்துக் கட்டியுள்ளனர் என்பது எவ்வளவு உண்மையோ, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளும் தங்களது அலட்சியத்தினால் நமது பண்பாட்டை அழித்து வருகின்றனர் என்பதும் அதே அளவு உண்மை.

பக்தர்கள் இணைந்து உழவாரப் பணி செய்து சிறிதளவு பார்க்கும் படி செய்துள்ளார்கள். ஆனால், அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. இந்த ஆண்டு புனரமைக்கப் பட உள்ள 1000 கோவில்களில் இந்தக் கோவிலும் உள்ளது என்று சட்டமன்றத்தில் அ.நி.து.அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மே மாதக் கடைசியில் இருக்கிறோம். இன்னும் ஏழு மாதங்களில் என்ன செய்யப் போகிறார்கள், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். கலசப்பாக்கம் அ.நி.து. அலுவலகத்தில் இருந்து கடிதம் சென்னை அ.நி.து. அலுவலகத்திற்குச் செல்வதற்கே அவ்வளவு காலம் பிடிக்கும் போல் தெரிகிறது.

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதாதது ஏன் என்கிற கேள்வி எழலாம். நம் தமிழ் நாட்டு மானம் உலக அளவில் கப்பல் ஏற வேண்டாம் என்கிற கரிசனம் தான் என்பதே என் பதில்.

விருப்பம் உடையவர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் / ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

கோவிலின் நிலை பற்றிய படங்களை இணைக்கிறேன். மேலசோழங்குப்பம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த அவல நிலையைப் பார்த்து அறம் நிலையாத் துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை அதிகாரிகளிடம் / அரசிடம் பேசக்கூடிய பெருமக்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.

கோவில் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் கைங்கர்யத்தில் பங்கு கொள்ளவும் மும்பையில் வசிக்கும் திரு.வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.( +91 – 9 8 3 3 3 8 3 2 2 7 )

பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில், மேலசோழங்குப்பம்

பெருமாள் சன்னிதி மேலசோழங்குப்பம்

இவ்விடத்தில் மதுவுடன் அசைவ் உணவும் உண்டுள்ளனர் காலிகள்.

தாயார் சன்னிதி

திருப்பணி செய்த யாரோ அரசன், அரசி, மகன்.

திருப்பணி செய்த ஏதோ ஒரு அரசன், அரசி, மகன்

தூணில் உள்ள அடியவர் சிற்பம். இராமானுசரோ ?

தூணில் இராமானுசர் ?

மஹா மண்டபத்தின் உள் கூரையில் வேலைப்பாடுகள்

மஹா மண்டபத்தின் உள் கூரையில் வேலைப்பாடுகள்

பெருமாள் தாயார் ஆண்டாள் சன்னிதிகள் பின்புறப் பார்வை
கல்வெட்டும் உள்ளது.
பக்தர்கள் உழவாரப்பணி
உழவாரப் பணிக்கு முன் கோவிலின் நிலை
பெருமாள் விமானம் – இன்றைய நிலை

வழக்கு போடல்லியோ வழக்கு..

இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அதற்காக வழக்கு போடுவேன் என்று கழக வழக்குரைஞர் சொல்லியிருந்தார். அவருக்கு என் பதில் ஃபேஸ்புக்கில்... 

பொக்கிஷம்

10 வருஷங்களுக்கு முன் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் தாயார சன்னிதியில் பூமியில் புதைக்கப்பட்ட உண்டியலில் பல ஆயிரம் வருஷ வைர வைடூரியங்கள் இருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் புரளி கிளப்பி விட, அது வரை அப்படி ஒரு கோவில் இருப்பதையே அறியாத இந்து அற நிலையாத்துறை உயிர்த்தெழுந்து ஆ.டி.ஓ, ரெவென்யூ இன்ஸ்பெக்டர், போலீஸ் மற்றும் அவர்கள் பரிவாரங்கள் புடைசூழ மத்தளம் கொட்ட, விரிசங்கம் நின்றூத, ‘பொக்கிஷத்தை’ கைத்தலம் பற்றக் கனாக்கண்டு ஜீப், கார் முதலிய ரத கஜ வாஹனங்களின் வந்து சேர்ந்தார்கள். ஊர் மக்களைக் காட்டிலும் இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்க, நான்கு பேருக்கு மேல் பார்த்தறியாத ஊரின் பைரவர்கள் ( நாய்கள் ) அரண்டு அடித்துக்கொண்டு கோவிலுக்குப் பின்னால் நந்தவனத்தில் ஓடி ஒளிந்து கொண்ட நல்ல நாளில் ஆர்.டி.ஓ. தலைமையில் உண்டியல் உடைக்கலாம் என்று முடிவானது..

எதற்கும் இருக்கட்டுமே என்று பாம்பாட்டிகளையும் உடன் அழைத்து வரச் செய்தார்கள்.

உண்டியல் லேசில் அசையவில்லை. பெரிய கடப்பாரைகள் கொண்டுவந்து ஆறு பேர் சேர்ந்து பூமியில் இருந்து பெயர்த்து எடுத்தார்கள். அது ஒரு மிகப்பெரிய கருங்கல் பத்தாயம் போல் இருந்தது. அதன் உள் என்ன இருக்குமோ என்ற கவலையில் மக்களை நகர்ந்து நிற்கச் செய்து அதனுள் மெதுவாக ஒரு கம்பியை இறக்கினார்கள். ‘ணங்’ என்ற ஒலி கேட்டதும் ஆர்.டி.ஓ. குதூகலமடைந்தார். சோழ ரத்தினங்கள் அவர் கண் முன் தோன்றின.

கிணறு இறங்குபவர்கள் இருவரை அழைத்து உள்ளே இறங்கிப் பார்க்கச் சொல்லலாம் என்று முடிவானது. அதற்குள் ஏன் அதை ஒரு பக்கமாக சாய்த்துப் பார்க்க்லாமே என்று பெரியவர் ஒருவர் சொன்னார். 4 பேர்  அந்தக் கருங்கல் பேழையை நகர்த்தி ஒரு பக்கமாக சாய்க்க முயற்சித்தனர்.

ஊரே ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது.

‘படீர்’ என்று என்று ஒரு சப்தம். மக்கள் அலறி அடித்து ஓடினர். பேழையை நகர்த்தியவன் ஒருவன் கை தவறி விட்டுவிட்டான்.

ஆயிரம் காலப் பேழை என்று நம்பப்பட்ட அந்தக்கருங்கல் பத்தாயம் உடைந்து விழுந்தது. உள்ளேயிருந்து ‘கல கல’ என்று பல நாணயங்கள் தெறித்து விழுந்தன. சில சங்கிலிகள், சில கொலுசுகள், வளையல்கள், உடைந்த பென்சில், சில ரப்பர், சிலேட்டுக் குச்சி. மஞ்சள் கலர் ரிப்பன், மூக்குக்கண்ணாடியில் ஒரு பக்க கம்பு முதலியன அவற்றுள் சில.

அப்படியே அள்ளிக்கொண்டு சென்றது துறை. பொக்கிஷங்களாம்.

அரைமணி நேரம் கழித்து சன்னிதி வாசலில் நானும் செங்கமலவல்லித் தாயரும் உடைந்த அந்தக் கருங்கல் பேழையைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

%d bloggers like this: