நான் இராமானுசன் பகுதி 12

ஸரீரம் அஸக்தமாக இருப்பதாகவே நானும் உணர்ந்தேன். ரொம்ப நாழிகை வார்த்தை சொல்லியாகிவிட்டது. தத்துவ விசாரம், பாரத ஞான மரபுத் தேடல்கள் என்றால் நேரம் போவதே தெரிவதில்லை.

கூட்டம் கலைந்தது. மீண்டும் அடுத்த பௌர்ணமி அன்று ஸதஸ் * வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் அபிப்ராயப்பட்டனர். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதனால் ஒரு அறிவிப்பு செய்தேன்..

‘அடுத்த ஸதஸில் நாம் பாரத ஞான ஸம்பிரதாயத்தை மேலும் ஆராய்வோம். அது வரை பண்டிதர்கள் நமது மடத்திலேயே தங்கியிருந்து மடத்தின் ஓலைச் சேகரிப்பு பண்டாரத்தில் இருந்து வேண்டிய ஓலைச் சுவடிகளைப் பார்த்துக்கொள்ளலாம். பொது மக்களும் தங்கள் சந்தேகங்களை முன்னமேயே தெரிவிக்கலாம். பண்டிதர்கள் அவை குறித்தும் தயாராவார்கள். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் மற்றும் அவரது பரிவாரத்தினர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருக்கலாம்’.

ஸ்ரௌதிகள் தான் அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார்.

சாயங்கால அனுஷ்டானங்கள் முடிந்து அவற்றின் பின் ஸ்ரம பரிகாரம் செய்துகொண்டிருந்த போது கூரத்தாழ்வார் வந்திருந்தார்.

‘தேவரீர் ரொம்பவும் வருத்திக்கொள்கிறது. இந்த விவாதங்கள் இப்போது முடியப்போவதில்லை. சற்று ஓய்வாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று சொன்னார்.

‘சொல்வது சரிதான். ஆனால் ஆசார்யன் என்று ஒரு ஸ்தானம் வைத்துக்கொண்டு வழி சொல்லாமல் இருந்தால் எப்படி ? வேண்டிய மட்டும் அனைவரும் என்னிடமிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு நானே தடையாக் இருக்க முடியாதே கூரா..நாளை கருட சேவை. அரங்கன் கருட வாகனத்தில் எழுந்தருளப் போகிறான். இந்த வருஷம் நான் சேவிக்கிறேன். அடுத்த வருஷம் எப்படியோ. எனவே இருக்கும் போதே முடிந்தவரை எல்லார் சந்தேகங்களையும் தீர்த்துவிட வேண்டும்’, என்று சொன்னேன்.

கூரன் விழுந்து ஸேவித்துச் சென்றார்.

நெடு நேரம் உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் வந்து சென்றன. அத்வைத ஸித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதி சங்கரர் பௌத்த தத்துவத்தைஉம் தரிசனத்தையும் ஆழக் கற்று அதன் அடிப்படையிலேயே பௌத்த மதஸ்தருடன் வாதிட்டு பௌத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’ யில் பௌத்த மத கோப்புகள் உள்ளன. ‘சங்கர பாஷ்யம்’ பௌத்த ஸம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தது. இவரை ‘பிரஸன்ன பௌத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர்.

இளம் வயதில் என் முதல் ஆச்சார்யர் யாதவப் ப்ரகாஸர் அத்வைதியே. பெரும் ஞானஸ்தர். ஆனால் கொஞ்சம் முன்கோபி. ஆச்சாரிய நிந்தனை கூடாது தான். ஆனால் அவரது எண்ணங்கள் சரியானவை அல்ல. தனது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்பதில் அவர் உறுதியாயிருந்தார். ஆனால் நமது ஸம்பிரதாயம் எப்போதுமே வாதம், பிரதிவாதம், ஞான விசாரம் முதலியனவற்றை ஆதரித்தே வந்துள்ளன. ஒருபோதும் ஒரே கருத்தே முழுமை, உண்மை என்பது தவறு. உண்மை என்று தோன்றுவது சிறிது காலம் கழித்து உண்மை இல்லை என்று நிரூபணமாகும். பிறிதொரு தத்துவம் தோன்றும். பின்னர் அதுவும் மறையும். ஆனால் பிரும்மம் ஒன்று மட்டுமே மாறாது. இதுவே நமது பாரத சம்பிரதாயம்.

இன்று நடந்த ஸம்பாஷணைகள் மனதில் தோன்றின. ‘மீமாம்ஸை’ பற்றிக் கவனம் திரும்பியது. ஸ்ரௌதிகள் ‘ மோக்ஷம் பெற மீமாம்ஸங்களில் உள்ள வேள்விகள் தேவை இல்லையா?’ என்று கேட்டிருந்தார். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு ? மீமாம்ஸையில் எந்தெந்த பலன் வேண்டி எந்தெந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. எல்லாமே வேள்விகள் தான். மனிதனுக்கு என்ன தேவை என்றாலும் ஏதாவது ஒரு வேள்வி செய்தால் அந்த வேள்விக்குரிய தெய்வம் பிரத
யட்சம் ஆகும். அந்தந்த பலன்களை அளிக்கும். தெய்வங்களும் யாகத்துக்குக் கட்டுப்பட்டவை. அப்பலன்கள் ‘அபூர்வம்’ என்று அழைக்கப்படும். அபூர்வம்’ என்பது ‘பூர்வம் இல்லாதது’, ‘ முன்னே இல்லாதது’ என்று அர்த்தப்படும். ஆக, பலன்கள் வேண்டி செய்ய வேண்டிய யாகங்களைச் செய்தால் அந்தந்த தெய்வங்கள் அபூர்வமான பலன்களை அளிக்கும். இதுவே மீமாம்ஸையின் சாரம்.

இதற்கும் அத்வைதத்திற்கும் சம்பந்தம் என்ன ? ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ? ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் ? அவச்யமே இல்லையே. எனவே மீமாம்ஸை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்களுக்கு ?

இந்த தெய்வங்கள் எல்லாம் தேவை என்றால் அப்புறம் அத்வைதம் என்ன ? ஓருண்மை என்ன ?  ஏகான்ம வாதம் என்ன ? அதெப்படி தத்துவம் ஒன்றாகவும் வழிமுறை வேறாகவும் இருக்க முடியும் ? தத்துவம் என்னவென்றால் ஓருண்மை, இரண்டில்லாதது என்பது. ஆனால் நடைமுறையோ பல தெய்வ வழிபாடு, இவ்வுலகத் தேவைகளுக்காகப் பல தெய்வ வேண்டுதல்கள், அதற்காக மீமாம்ஸை வேறு வேண்டுமாம்.

மீமாம்ஸை சொல்வது என்ன ? கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் – இவை தானே மீமாம்ஸைகளில் உள்ளவை ? செயல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன ? அவற்றின் தெய்வங்கள் யாவர் ? வேள்விகளின் போது ஓதவேண்டிய மந்திரங்கள் என்ன ? பலன்கள் என்ன ? இவை தானே பூர்வ மாமாம்ஸை என்பது ?

செயல்கள் அவற்றின், மூலம் நாம் அடையும் பலன்கள் – இவற்றை வலியுறுத்துவதால் இதன் பெயர் கூட ‘கர்ம மாமாம்ஸை’ என்று வழங்கப்படுகிறதே. பலன்கள் இந்த உலகத்தில் கிடைப்பதால் அந்தப் பலன்களும் மாயை தானோ ? மாயை என்பதால் அந்தப் பலன்களே தேவை இல்லையே. பலன்கள் தேவை இல்லை என்றால் அவற்றிற்கான தெய்வங்கள் தேவை இல்லை,வேள்விகள் தேவையே இல்லையே. இவை எதுவுமே தேவை இல்லை என்றால் பூர்வ மீமாம்ஸையே தேவை இல்லையே.

மீமாம்ஸையில் பிரும்மத்திற்கே ஏற்றம் இல்லை. அத்வைதியானால் மீமாம்ஸகராக இருக்க முடியாது; மீமாம்ஸகரானால் அத்வைதியாக இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க, அத்வைதிகள் மீமாம்ஸை பின்னர் செல்வது ஏன் ?

அடிப்படையே ஆட்டம் காண்கிறதே !

இப்படியே பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

கூரன் வந்து எழுப்பியவுடன் தான் பொழுது விடிந்து இருப்பதை உணர்ந்தேன்.

————————————————————————————

ஸதஸ் — கூட்டம், சபை, வாதம் நடக்கும் இடமும் வாதமும்.

நான் இராமானுசன் பகுதி 11

‘நான் இராமானுசன்- பகுதி 10′

‘நான் இராமானுசன்- பகுதி 9′

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7′

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5′

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3′

‘நான் இராமானுசன்- பகுதி 2′

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

நான் இராமானுசன் – பகுதி 1

நல்ல மழை அடித்து முடித்து வானம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது. மழை ஒரு வாரமாக ரொம்பவும் பலமாக இருந்ததால் எங்கும் வெள்ளம். பாடசாலைகள் கூட மூடியிருந்தன. காவிரி எந்த நேரமும் கரை புரண்டுவிடும் என்று எதிர் பார்த்தனர். யுக முடிவு போல் அவ்வளவு மழை என் வாழ் நாளில் பார்த்ததில்லை. மழையைக்கண்டு பசு மாடுகள் மிரண்டதை மக்கள் ‘நல்ல சகுனம் இல்லை’ என்று பேசிக்கொள்கின்றனர்.

குடியானவர்கள் கழனி வேலைகளுக்குப் போக முடியவில்லை. வீடுகள் அடித்துக்கொண்டு செல்லப்பட்டன என்று சொன்னார்கள். அரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தைத் திறந்துவிடச் சொன்னேன். சில ஆயிரம் பேர் அங்கே தங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தளிகை ஏற்பாடு செய்ய சோழனின் அரண்மனைப் பரிசாரகர்கள் வந்திருந்தனர்.

அது தவிர, நமது மடம் விசாலமாக இருந்ததால் பல நூறு பேர் ஐந்து நாட்களாக இங்கேயே தங்கியிருந்து பண்டிதர்களின் உபன்யாசங்களையும் எனது பேச்சையும் கேட்டபடி இருந்தனர். இன்று தான் அவர்கள், மழை விட்டுவிட்ட படியால், தங்கள் வயல்கள், தோப்பு துரவுகள் எப்படி உள்ளன என்று பார்த்துவரக் கிளம்பினார்கள். எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது. ரொம்ப நாள் எண்ணமான என் கதையை எழுதத் துவங்குகிறேன்.

இன்று கலி யுகம் 4238-வது வருஷம், பிங்கள வருஷம் என்று தமிழ் வருஷங்களில் சொல்வர். நான் பிறந்து இரண்டு பிங்கள வருஷங்கள் வந்துவிட்டன. போன முறை பிங்கள வருஷம் நடக்கும்போது என் அறுபதாவது வயதில் அனேகமாக விஸிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக உபதேசிக்கத் துவங்கிவிட்டேன். சன்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்டாயிற்று. அதற்குப் பிறகு இன்னொரு அறுபது வருஷங்கள் கடந்துவிட்டன.

நீங்கள் இதைப் படிக்கும்போது சில மாதங்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் கூடக் கடந்திருக்கலாம். என்னைபற்றியும் நம் மடத்தின் செயல்பாடுகள் பற்றியும் நீங்கள் அறிந்திருந்தால் ஆச்சரியம் தான். அதனினும் நான் இப்போது எழுதும் நடை உங்களுக்குப் புரியும் வண்ணம் இருக்குமோ என்றுமே எனக்கு சந்தேகம் உண்டு. தமிழ் பாஷையே நாங்கள் பேசும்படியாகவே இருக்குமோ என்பதும் சந்தேகமே. நான் எழுதியதை நீங்கள் தமிழில் தான் படிக்கிறீர்களா என்றும் தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எனது அந்திம காலம் நெருங்கிவிட்டது. அதனால் கொஞ்சம் அவசரமாகவே எழுத வேண்டியுள்ளது. நடந்துள்ள எல்லாவற்றையும் எழுத வேண்டுமா , அது என்னால் முடியுமா என்றும் தெரியவில்லை. ஏனோ இந்த எண்ணங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன.

ஆயிற்று. நூற்றி இருபது வருஷம் ஆயிற்று. கொஞ்சமா நஞ்சமா நிகழ்வுகள்? எவ்வளவு அனுபவங்கள்? எவ்வளவு தரிசனங்கள்? நினைத்துப் பார்த்தால் ‘நமக்கா இதெல்லாம் நடந்தது!’ என்பது போல் வியப்பாக உள்ளது.

‘எனக்கு நடந்தது’ என்று சொல்வதே தவறோ என்று தோன்றுகிறது. ‘எனக்கு நடத்துவிக்கப்பட்டது’ அல்லது ‘என்னை சாட்சியாக வைத்து நடந்தேறியது’ என்றோ வேண்டுமானால் சொல்லலாம் என்று தோன்றுகிறது. எப்படியோ, என் காலத்தில் பல மாறுதல்கள் நடைபெற்றன. அந்த மாறுதல்கள் நடக்க வேண்டும் என்று முன்னர் பல யுகங்களுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விதியினை என்னை ஒரு கருவியாக்கி நடத்திக் காட்டப்பட்டது என்று சொல்வது சரியாக இருக்கும்.

அப்படி நடத்திக் காட்டியது யார் ? நடத்தியவரைப் பற்றியும், கருவியாகிய என்னைப் பற்றியும் அறிந்துகொள்ள இவ்வளவு காலம் ஆகியுள்ளது எனக்கு. பூரணமாக அறிந்துகொண்டேனா என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த சந்தேகம் இப்போது இல்லை. அறிந்துகொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.

நான் பிறந்தபோது என் உடனிருந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. என் வாழ்வின் பல பகுதிகளிலும் பருவங்களிலும் என்னுடன் பயணித்த பலரும் தற்போது இல்லை. இவர்கள் அனைவரின் வாழ்க்கைகளின் சாட்சியாக, அனுபவங்களின் கருவூலமாக நான் மட்டும் இன்னும் அமர்ந்திருக்கிறேன்.

எத்தனை நேரம் மிச்சம் என்பது தெரியவில்லை. முடிவு நெருங்குவது அறிகிறேன். சமீபத்தில் தான் என்று உணர்கிறேன், ஆதலால் விரைகிறேன்.

மடத்தில் மழையை முன்னிட்டுத் தங்கி இருந்தவர்கள் அனைவரும் சென்று விட்டனர். நானும் உறங்காவில்லியும் தான் இருக்கிறோம். எந்த நேரமும் அவன் எனக்கு விசிறிக்கொண்டே இருக்கிறான். நான் இருக்கும் வரை என்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான் போல. நான் இப்போது எழுதும்போது கூட கையில் அகல் விளக்குடன் நிற்கிறான்.

உறங்காவில்லி அவன் மனைவி பொன்னாச்சி இருவரும் முன்னரே பரமபதித்து விட்டனர் என்று மற்ற சீடர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவன் என்னுடனே இருப்பது போலவே படுகிறது. அவன் போனது எனக்கு ஞாபகம் இல்லை. உடன் இருந்தவரை எவ்வளவு கைங்கர்யம் செய்துள்ளான் ?

அது போகட்டும்.

கடந்த பல வருடங்களாகவே என் எண்ணங்களை எழுதி வைக்க வேண்டும் என்று எண்ணம். பிரபந்தம், கீதை, பிரம்ம சூத்திரம் என்று எல்லாவற்றிற்கும் பாஷ்யம் எழுதுவதே பெரிய பிரயாசையாக இருந்தது. அது தவிர கோவில் சீரமைப்பு, சமூக வேலைகள் என்று பல வேலைகள். ‘வைகானசம்’ அழித்து ‘பாஞ்ச ராத்ரம்’ கொண்டுவரவே என் வாழ் நாளின் பெரும் பகுதி செலவானது என்று கூரத்தாழ்வான் சொன்னார்.

ஆனால் ஒன்று மட்டும் நிதர்ஸனம். எழுதுவதை இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாது என்று தோன்றுகிறது.

நான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை.

பல, நீங்கள் ஏற்கெனவே அறிந்தவையாகவும் இருக்கக்கூடும்.நான் இவ்வாறு கூறினேன் என்றோ வேறு ஒரிருவர் இவ்வாறு கூறியிருந்தார்கள் என்றோ நீங்கள் கேட்டிருக்கலாம்; படித்திருக்கலாம். ஆனால் நான் சொன்னதைத்தான் நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது.

நான் நினைத்தது, பேசியது, ஆலோசித்தது, எனக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரிவது – இவை பற்றி எல்லாம் எழுதி வைக்க வேண்டும் என்று பிரயத்தனப் படுகிறேன். அரங்கன் திருவுள்ளம் என்னவென்று தெரியவில்லை.

எனவே, முடிந்தவரை, என்னால் முடியும் வரை, என் முடிவு வரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

'நான் இராமானுசன்' – ஒரு துவக்கம்

ராமானுஜர்
ராமானுஜர்

பல முறை யோசித்தது உண்டு. தெங்கலை, வடகலையார் இப்படி அடித்துக்கொள்கிறார்கள். அது ஏன் ?  வைஷ்ணவம் என்பது வெறும் திருமண் வேறுபாடு மட்டுமா ?  இல்லை அதற்கு மேலும் வேறுபாடுகள் உள்ளனவா ? வேறுபாடுகளின் தாத்பர்யம் என்ன ? இந்த வேறுபாடுகள் உண்மையில் பொருள் உள்ளவை தானா ? இதனால் யாருக்கு என்ன பயன் ?

சரி, வேறுபாடுகள் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டாலும் முன்னம் எப்போதாவது வேறுபாடுகள் இல்லாமல் இருந்துள்ளனவா ? அல்லது ஆரம்பம் முதலே இந்த வேறுபாடுகளுடனேயே தான் இந்த வைணவ மதம் உருவானதா ?

இப்படிப் பல கேள்விகள் என்னுள் இருந்தன.

பலமுறை பலருடன் பேசியதும், பல நூல்களில் படித்ததும், சில உபன்யாசங்களில் கேட்டதும் இவை எல்லாவற்றையும் வைத்து ஒரு முடிவுக்கு வர முயன்றேன்.

அந்த முடிவு இதுதான்.

எதுவும் தோன்றும் போது இரண்டாகத் தோன்றுவதில்லை. முதலில் ஒன்று தோன்றுகிறது. பிறகு இரண்டாகவோ அல்லது இன்னும் பலவாகவோ விரிவடைகிறது. கிறித்தவம் முதலில் ஒன்றகவே இருந்துள்ளது. பின்னர் கத்தோலிக்கம், புரொடஸ்டான்டு என்று இரண்டாகவும் இப்போது இன்னும் பல திருச் சபைகளும் என்று பிளவுபட்டு, விரியடைந்து உள்ளது. இஸ்லாமும் அப்படியே. அராபிய தேசத்தில் தோன்றியது ஒன்று; ஆனால் ஷியா, சன்னி என்று இரண்டாக விரிந்தது. இந்தியா வந்தவுடன் சூஃபி என்று ஒரு மரபும் தோன்றியது. இன்னும் பல பிரிவுகள் இருக்கலாம். பௌத்தமும் ஒன்றாகத் தோன்றி பின்னர், ஹீனயானம், மஹாயானம், தேராவாதம் என்று பலவாறாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.

அது போல் வைஷ்ணவமும் பிளவு பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அதற்கு முன், வைஷ்ணவத்தின் அடி நாதமான விஷிட்டாத்வைதம், அதன் ஆணி வேறான இராமானுசன் இவை பற்றி ஆராயலாமே என்று சில மாதங்கள் முன்பு ஒரு மார்க்சீய எழுத்தாளர் எழுதியதைப் படித்தபின் ஒரு உத்வேகம் பிறந்தது. அதைத் தொடர்ந்து, நான் அறிந்த அளவில், படித்த அளவில் வைஷ்ணவம் பற்றி சில மாதங்கள் எழுதியிருந்தேன்.  ஆனால் அதை ஒரு மூன்றாம் நபர் பார்வையில், ஒரு சமுதாய நோக்கில் மட்டுமே எழுதியிருந்தேன்.

முதலில் தோன்றிய வைஷ்ணவ தத்துவம் என்ன, பின்னர் எப்படியெல்லாம் விரிந்து தற்போது எப்படி உள்ளது என்பதை இராமானுசரே சொன்னால் எப்படி இருக்கும் என்று ஒரு எண்னம் தோன்றியது.(ரா.கி.ரங்கராஜனின் ‘நான் கிருஷ்ணதேவராயன்’ பாணியில் )

அதன் விளைவே இந்த ‘நான் இராமானுசன்’ தொடர். ஒரு கதை போல் எழுத முயன்றிருக்கிறேன்.  சில தவறுகள் இருக்கலாம்; சில விஷயங்களின் கால அளவுகளில் கூட பிழைகள் இருக்கலாம். இது ஒரு முயற்சியே. தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

எங்கள் ஊர் ஆமருவியப்பனின் அருளுடன் துவங்குகிறேன்.

வைணவம் – ஆதி சங்கரரின் பங்கு

வைணவம் குறித்த முந்தைய பதிவில் ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் மக்களைக் குழப்பியது என்று தெரிவித்திருந்தேன். இந்த இக்கருத்து எனது ஒரு அனுமானம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

இந்தக் கருத்தினை சிலர் நான் ஆதி சங்கரரை அவதூறாகக் கூறியிருப்பதாகக் கருதியுள்ளனர். அவர்களின் இந்த அனுமானம் தவறு. எனது விளக்கம் பின்வருமாறு :

ஆதி சங்கரரின் காலம் ஆழ்வார்களின் காலத்தின் இறுதிக்கட்டம். அதாவது கி.பி.7 – கி.பி. 9 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. 1– கி.பி. 6 காலகட்டத்தில் ஜைனமும் பௌத்தமும் தமிழகத்தில் வேரூன்றி அதன் பின்னர் சமுதாயக் காரணங்களுக்காகவும் சித்தாந்தக் காரணங்களுக்காகவும் அழியத் துவங்கிய நேரம். அவற்றின் அழிவை வேகப்படுத்திய பெருமை ஆதி சங்கரருடையதே. அவரது அத்வைத சித்தாந்தம் கருத்தியல் ரீதியாக ஜைனத்தையும் பௌத்தத்தையும் களைய வழிவகை செய்தது. சங்கரரின் வாதத்தின் முன் பௌத்தர்களின் ‘சூன்ய’ சித்தாந்தம் எடுபடவில்லை. அத்துடன் சேர்ந்து அக்கால சமுதாயக் காரணங்களும் இந்த அழிவிற்கு வழி கோலின.

ஆனால் பௌத்தமும் ஜைனமும் கோலோச்சிய காலத்தில் பாரத தேசம் முழுவதும் அதன் வீச்சு தென்பட்டது. தமிழகத்தில் மட்டும் அந்த அளவு இல்லை. இருப்பினும் அவர்களது ஆளுமை வணிகர்களிடம் இருந்ததை நாம் பார்த்தோம். களப்பிரர் காலம் முடியும் வரை அவர்களது ஆளுமை தென்பட்டது.

ஆனால் தமிழகம் தவிர்த்த வட மாநிலங்களில் சனாதன தர்மம் ( அப்போது இந்து மதத்திற்கு அது தான் பெயர் ) மிகப்பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியைத் தடுத்து  நிறுத்தியதில் ஆகச் சிறந்த பணி ஆதி சங்கரருடையது என்பதில் ஐயமில்லை.

ஆதி சங்கரர் பாரதம் முழுவதும் நடந்து சென்று பல ஜைன பௌத்த குருமார்களை வாதத்தில் வென்று அத்வைத மதத்தை நிலைநாட்டினார். இந்த முயற்சியில் பல  சீடர்களையும் பெற்றார். பாரதம் முழுவதும் பயணித்து ஐந்து சக்தி பீடங்களை நிர்மாணித்தார். அவற்றின் மூலம் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். இதன் மூலம் ஜைன பௌத்த மதங்களை சித்தாந்த ரீதியாக வென்றார்.

மாபெரும் அழிவில் இருந்து இந்து மதத்தைக் காத்தார் சங்கரர். அறுவகையான சமயங்களை செழுமைப்படுத்தினார். முன்னமே பல வகைகளில் இருந்த காளி, விஷ்ணு, கணபதி, சூரியன், சிவன் முதலிய தெய்வங்களின் வழிபாட்டை ஆற்றுப்படுத்தினார். எனவே அவர் “ஷண்மத ஸ்தாபனாச்சார்யா”  ( ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்தவர் ) என்று போற்றப்பட்டார். பல நூல்களுக்கு உரைகள்  எழுதினார்.

சனாதன தர்மம் இன்றளவும் வாழ்வதற்கு ஆதி சங்காரின் பணி மிகவும் இன்றியமையாதது.  இந்தியத் தத்துவம் என்றாலே அத்வைதம் தான் என்று கூறும் அளவிற்கு அவரது தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தரும் வேதாந்தம் என்பதை அத்வைத வேதாந்தம் என்று கூறும் அளவிற்கு ஆதி சங்கரரின் வீச்சு இருந்தது.

ஆயினும் அத்வைத சித்தாந்தம் அறிவாளிகளின், புலவர்களின் வாதத்தில் மட்டுமே திகழ்ந்தது என்பதே உண்மை.

சித்தாந்த ரீதியாக சில குழப்பங்கள் இருந்தன என்பதும் உண்மை.  பிரும்மம் ஒன்றே என்று கூறினார். உலகமும் மற்ற உயிர்களும் இந்த ஒரு பிரும்மத்தின் பிம்பம் என்றார். ஆனால் உயிர்களிடத்தில் வேறுபாடு இருந்தது நிதர்சனம். ஆண்டான் அடிமை முறை நடைமுறையில் இருந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘Lack of Inclusiveness’  என்று கூறலாம்.

ஆதிசங்கரரின் வாழ்விலேயே இதனைக் காணலாம். ஒருமுறை அவர் நீராடி வரும்போது ஒரு புலையர் குலத்தவன் எதிரில் வந்துள்ளான். அவனை ‘ஒத்து, ஒத்து’ என்று கூறியுள்ளார் சங்கரர். அப்போது அந்தப் புலையன் ‘உங்கள் சித்தாந்தப்படி நானும் நீங்களும் ஒரே பிரும்மத்தின் வேறு வடிவங்கள் என்றால், நான் எதனிடமிருந்து விலகுவது?  ‘அன்ன மய கோசமான’ எனது உடம்பிலிருந்து விலகிச் செல்லச் சொல்கிறீர்களா ? அல்லது ‘பிராணமய கோசமான’ ஆத்மாவிலிருந்து விலகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டுள்ளான்  என்று சங்கரரின் வரலாறு கூறுகிறது.

ஆதிசங்கரர் தத்துவம் ஞான மார்க்கம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அவர் அறிவுக்கு முதலிடம் கொடுத்தார். லௌகீக விஷயங்களுக்கு இரண்டாம் இடமே கொடுத்தார். இது பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவரது ‘இந்தியத் தத்துவம்’ என்னும் நூலில் ஆதி சங்கரரது கொள்கை “ஆன்மாவற்ற தர்க்கம்” ( Soulless Logic ) என்று குறிப்பிடுகிறார்.

அத்வைதத்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு புனைவு சொல்வதுண்டு. ஒரு அத்வைதி தெருவில் நடந்து சென்றாராம். அப்போது ஒரு காளை மாடு நிதானமிழந்து தெருவில் ஓடி வந்ததாம். அத்வைதியின் நண்பர் ,”ஓய் அத்வைதியே, உமது சித்தாந்தந்தின் படி நீங்களும் மாயை, அந்தக் காளை மாடும் மாயை. எனவே ஒரு மாயை இன்னொரு மாயையை முட்டுவதால் ஒன்றும் ஆகாது. பயப்படாமல் செல்லும்” என்று கூறினாராம். இது வேடிக்கைப் புனைவுதான் என்றாலும் அத்வைத சித்தாந்தம் சிறிது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று காட்டவே இது புனையப்பட்டிருக்க வேண்டும்.

சங்கரரின் ஆயுட்காலம் மிகச் சிறியது. அதனுள் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. சனாதன தர்மத்தின் ஆணி வேரையே அசைத்த ஜைனத்தையும் பௌத்ததையும் சித்தாந்த ரீதியாக வலுவிழக்கச் செய்த பாரதப் பெருமகன் ஆதி சங்கரர். இவர் ஆற்றிய பெரும் பணியினைத் தொடர்ந்தார் இராமானுசர் என்று கூறலாம்.

ஆதிசங்கரரின் பணி உடனடித் தீமையை அகற்றி சனாதன தர்மத்தைக் காத்தது. இராமானுசர் பணி அவர் வாழ்ந்த காலத்தின் நடைமுறைகளை அனுசரித்து அதனை மேலே கொண்டு சென்று அனைவருக்கும் பொதுவான ஒரு ஆன்மிக சக்தியாக உருவாக்கியது என்று கொள்ளலாம்.

%d bloggers like this: