சிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை

சிங்கப்பூர் இலக்கியத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடலாமா? என் பார்வை.

சுனீல் கிருஷ்ணன் சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயமோகனும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு மறுப்பு, விளக்கம் அளித்து நண்பரும் சிங்கப்பூர் எழுத்தாளருமான சித்துராஜ் பொன்ராஜ் இரண்டு பதிவுகள் எழுதியிருந்தார்.

சிங்கப்பூருக்கு வரும் எந்தத் தமிழக எழுத்தாளரும் சிங்கப்பூர் இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்து, எழுத்தாளர்களை விதந்தோத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. (இதைப்பற்றி 2016ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.) அவ்வாறு செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் இருந்து எழுதுபவர்களும் நினைக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

சுனீல் மற்றும் ஜெயமோகனின் விமர்சனத்திற்கு ஆட்பட்டுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்களை நான் அறிவேன். Both ends of the spectrum உண்டு. அருமையாக எழுதுபவர்களும் அவ்வாறு எழுதாதவர்களும் என்று இரு துருவங்கள் சிங்கையிலும் உண்டு. நிற்க.

சூர்யரத்னா எழுதுவது இலக்கியம் அன்று, ராணிமுத்துவில் வரும் பத்திக் கதை போன்றது என்ற ஜெயமோகனின் கூற்று அவரளவில் சரியே. ஆனால், சூர்யரத்னா ஜெயகாந்தன் கிடையாது. அவர் எழுதும் சூழல் ஜெயகாந்தன் எழுதிய சூழலை ஒட்டியது அன்று. அன்றாட வாழ்க்கைத் துன்பங்கள் அற்ற சமூகம் சிங்கப்பூர் சமூகம். பிரச்னைகள் அற்ற சமூகத்தில் ஜெயகாந்தன் தர இலக்கியம் எழுவது எங்ஙனம் சாத்தியம்? சூரியரத்னா அவர்களது நடைமுறை வாழ்க்கையை ஒட்டி எழுதுகிறார். அந்த நாட்டின் அளவில் அது அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. ஆகவே அது சிங்கப்பூர் இலக்கியமே.

ஷானவாஸ் உணவுக் கடைகள், உணவு தொடர்பான தொழில் செய்து வருபவர். தனது தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். அவர் தனது தொழில் வழியாகக் காணும் சிங்கப்பூரைத் தனது எழுத்தில் காட்டுகிறார். ஆகவே அதுவும் சிங்கப்பூர் இலக்கியமே.

ஜெயந்தி சங்கர் பாவனைகள் இல்லாமல் எழுதுபவர். மொழிபெயர்ப்புகள் செய்கிறார். சிங்கப்பூர் தொடர்பான சீன மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். சிங்கப்பூர்க் கதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். அவரது பார்வையில் தென்படும் சிங்கப்பூரை அவர் நமக்குக் காட்டுகிறார். சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதுவும் இலக்கியமே.

சித்துராஜ் பொன்ராஜின் வீச்சு அதிகம். அதிகம் வாசிப்பவராகவும், உலக இலக்கியங்களில் பயிற்சி உடையவராகவும், தமிழ், சம்ஸ்க்ருதம், கன்னடம், ஸ்பானிஷ் என்று பல மொழிகளில் தேர்ச்சி உடையவருமான சித்துராஜ் பொன்ராஜ் தனது பார்வையில் சிங்கையின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார். பக்தி இலக்கியங்களிலும் ஆர்வம் உடைய அவரது பார்வை விசாலமானது.

மாதங்கி யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிப்பவர். இவரும் ஜெயந்தி சங்கரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கையில் குடியேறியவர்கள். நடுத்தர மக்களின் வாழ்வைச் சித்தரிப்பதாக இவர்களது எழுத்தைப் பார்க்கிறேன்.

சித்ரா ரமேஷ், குமார், அழகு நிலா என்று பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சித்ரா பெண்ணியம் தொனிக்க எழுத வேண்டும் என்று பிரயத்னப்பட்டு எழுதுகிறார். குமார் கவிதைகள் எழுத முயன்று தனது பார்வையைப் பதிவு செய்கிறார். அழகுநிலாவின் எழுத்துகள் நேர்மையானவை. புனைவு, அபுனைவு என்று இரண்டையும் எழுதும் அவர், தனது கட்டுரைகளுக்குச் செறிவூட்டுவதற்காகப் பெரும் முயற்சி செய்பவர்.

கவிதைகள் எழுதுபவர்கள் பலர் உள்ளனர். நான் கவிதையின் பக்கம் போவதில்லை. பலதும் வேண்டும் என்றே பொய்யுரைப்பதாகத் தோன்றுவதால் அப்படி.

இத்தனை பேர் தான் எழுதுகிறார்களா என்கிற கேள்வி எழலாம். மொத்த நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம். இதில் இந்தியர்கள் 7%. சுமார் 3,85,000 இந்தியர்களில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் இருந்து வந்து தற்போது எழுதுபவர்கள் மேற்சொன்னவர்கள். இன்னும் சிலரும் எழுதுகின்றனர். அவர்களை நான் வாசித்ததில்லை.

எழுதும் பிறர் திருமுறைகள், கம்பன் சார்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் அறிஞர்கள் என்னும் வகையினர்.இலக்கியவாதிகள் அல்லர். பெரியவர் அ.கி.வரதராசன் இவ்வகையைச் சேர்ந்தவர்.

எழுதுபவர்கள் முதலில் வாசிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தீவிரமாக வாசித்தபின் எழுத்து வாய்க்கும். மேற்சொன்ன எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீவிர வாசிப்பு வாய்த்தவர்கள், அப்படி வாய்த்தவர்களில் இருந்து கிளர்ந்து எழுந்து எழுதுபவர்கள், எழுதியதைப் புத்தகமாக வெளியிடுபவர்கள் என்று எண்ணிக்கை Drill Down Effectல் குறைந்துகொண்டே வந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை 15 என்று நின்றால் வியப்பதற்கில்லை.

எழுதும் 15 பேரில் யாரும் ஜெயகாந்தன் போல், புதுமைப் பித்தன் போல் எழுதவில்லை, எனவே இலக்கியம் இல்லை என்று சொல்வது சரியா?

அப்படி எழுதும் 15-20 பேரும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு, ஒரு சட்டகத்தின் உள்ளே இருந்தபடியே எழுதுகிறார்கள். சிலதை எழுத இயலாது. உதா: ‘காவி கார்ப்பரேட் மோதி’ என்று கீழைக்காற்று பதிப்பகத்தின் நூல் உள்ளது. நெற்றியில் திலகத்துடன் மோதி, கையில் சூலம், அதில் காவிக் கொடி, அதன் மேல் மண்டையோடு. இப்படிப்பட்ட அட்டைப்படத்துடன் தமிழகத்தில் வெளியிட முடியும். சிங்கையில் அதைப் போன்ற நூல்கள் வெளிவர வாய்ப்பில்லை. பணமதிப்பிழப்பை முன்வைத்துத் தமிழில் நாவல் எழுத முடியும். அங்கு அதைப் போன்று செய்ய வாய்ப்பு குறைவே. சுத்திகரிக்கப்பட்ட கருத்துகளையே எழுத முடியும். ஆக, கற்பனை விரிவது எங்ஙனம்? கற்பனை + நிகழ் அரசியல் விமர்சனங்கள் அற்ற பண்படுத்தப்பட்ட பார்வையுடனேயே எழுத முடியும் எனும் போது இலக்கிய ஆழம் கிடைப்பதெப்படி?

கடல் அளவு கருத்துக்களஞ்சியம் இல்லை. சிறிய, சுத்திகரிக்கப்பட்ட குளத்தின் அளவே உள்ளது. குளமும் ஆழமில்லை, நீர் வரத்து கட்டுப்பாடிற்குள். சுத்தப்படுத்தப்பட்ட நீர். குளத்தில் உள்ள மீன்கள் சுவை குறைவாக இருக்கலாம். ஆனால் அவை மீன்கள் அன்று என்பது சரியா?

சிங்கை அரசு எப்போது விழிப்புடன் இருக்கின்றது. சமூக நல்லிணக்கம், மொழி, இன வேறுபாடுகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுதல், தீவிரவாதம் தலையெடுக்காமல் கண்காணிப்பு, மதங்களுக்கிடையே சமரசப் போக்கையே முன்னிறுத்துதல் என்று எந்தப் பிளவும் நிகழா வண்ணம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறது. சுருக்கமாக ஒரு No-Nonsense அரசு. ஏனெனில் சமூக நல்லிணக்கம் தானாக நிகழந்ததன்று என்பதை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே உள்ள அரசு அந்நாட்டரசு. தமிழகத்தில் உள்ளதைப் போல எந்தக் குப்பையையும் எழுதலாம், எந்த இனத்தாரையும், மொழியாரையும் கேவலப்படுத்தலாம் என்பதற்கான சூழல் அங்கு இல்லை. இனங்களுக்கு இடையேயான பிளவுகளைப் பயன்படுத்தி ஒப்பாரிக் காவியம் படைக்க வழியில்லை. எனவே ‘உயர்ந்த’ இலக்கியம் உருவாக வழியில்லை ( உயர்ந்த என்றால் என்ன என்பது தனியாக ஒரு கட்டுரைக்கான பொருள்).

உதரணமாக: தமிழகத்தில் தீப்பொறி பறக்கப் பேசும் பேச்சாளர்கள் சிங்கை சென்றால் வழவழவென்று ‘ஒற்றுமை’, ‘நல்லிணக்கம்’ என்றே ஜல்லியடிக்கவே வேண்டும். அது தான் சிங்கை. மீண்டும் தமிழகம் வந்து ‘சுடுகாடாக மாறும், ஆயுதம் ஏந்துவோம்’ என்று முழக்கம் இடுவர். அது தான் தமிழகம்.

உண்மையை ஒப்புக்கொள்வோம். சிங்கப்பூரில் தமிழ் இல்லாமல் தினமும் வாழ்ந்துவிட முடியும். அன்றாட வாழ்க்கைக்குத் தமிழின் தேவை இல்லை. பெருவாரியான சிங்கைத் தமிழர்கள் சிங்லிஷ் கொண்டே வாழ்ந்துவிட முடியும். பள்ளிகளிலும் தமிழை -Functional Tamil – என்கிற அளவிலேயே கற்பிக்கிறார்கள். Higher Tamil உண்டு. அதை விருப்பப்பட்டு எடுத்துப் பயில வேண்டும். அத்துடன் தமிழுடனான தொடர்பு அறுந்துவிடுகிறது. இதைத் தவிர்க்கவும், தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கவும் சிங்கைத் தமிழர்களும் அரசும் முனைந்து இலக்கியத்திற்கான பரிசுகள், கோப்பைகள், ஊக்கத் தொகைகள் என்று வழங்கித் தமிழைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதுவே சிங்கையில் தமிழின் நிலை. இதில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலியோர் உருவாக வாய்ப்பில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. இதுவே நிதர்ஸனம்.

இன்னும் 50 ஆண்டுகளில் சிங்கப்பூரில் தமிழில்  பேசுவார்களா என்கிற கேள்வி அம்மக்களின் நினைவுகளில் என்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளில் அவர்கள் இருக்கிறார்களே தவிர, இலக்கியத்தை ஜெயகாந்தன் அளவிற்கு மேம்படுத்த அவர்கள் முயற்சிப்பதில்லை. அதற்கான சூழலும், தேவையும் அங்கு இல்லை.

இதெப்படி உனக்குத் தெரியும் என்று வினவலாம். சிங்கையில் 10 ஆண்டுகள் வசித்துள்ளேன். அங்குள்ள குறிப்பிடத்தக்க பெரியோருடன் பழகியுள்ளேன். அளந்தே பேசும் அப்பெரியோர் மனதில் ‘தமிழை வாழும் மொழியாக்குவதெப்படி? சிங்கையின் 100வது விடுதலை ஆண்டில் தமிழில் பேசுவோர் இருப்பரா? தமிழ் சிங்கையில் தொடர்ந்து திகழ வேறென்ன செய்ய வேண்டும்?’ என்ற எண்ணமே ஓடுகின்றது.

இந்த நிலையில் சிங்கப்பூரின் இலக்கியத் தரத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு. ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது சரியன்று.

பி.கு.: ‘நீ என்ன இலக்கியவாதியா? உன்னை யார் கேட்டார்கள்?’ என்போர் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லவும். ஜெயமோஹன் 2016ல் சிங்கை வந்திருந்த போது செய்திருந்த சில இலக்கிய விமர்சனங்கள் பற்றி அப்போது நான் எழுதியது இங்கே.

இலக்கிய ஆய்வும் வெண்ணை கத்தியும்

‘இலக்கியம்’ என்றால் என்ன என்ற ஒரு கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கம்பன் பற்றி எழுதுகிறாய், வள்ளுவர் வருகிறார், ராகுல் காந்தியும் வருகிறார், பின்னர் ஆழ்வார் வருகிறார், அவருடன் காஞ்சிபுரம் சார்ந்த வழக்கு விபரம் வருகிறது, அத்துடன் பகுத்தறிவு பற்றி எழுதுகிறாய், அடுத்த வாரமே ஆண்டாள் பாசுரம் வருகிறது பின்னர் மீண்டும் ராகுல் காந்தி பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை, அல்லது சிங்கப்பூர் டாக்ஸி குறித்த ஆங்கிலப் பதிவு. ஒரே குழப்பமாக உள்ளது. நீ எழுதுவது என்ன ? இலக்கியமா? இல்லை என்றால் இதை எப்படி அழைப்பது ?

கேள்வி நன்றாகத்தான் உள்ளது. பதில் தான் தெரியவில்லை.

இந்தக் கேள்வி ஏன் எழுந்தது ? நான் எழுதியது சிலருக்குச் சில கேள்விகளை எழுப்பின. நீ ஏன் இப்படி எழுதுகிறாய் ? ஏன் ஒரு தளத்தில் இருந்து எழுதுவதில்லை ? ( ஏன் குரங்கு போல் தாவுகிறாய் என்று பொருள் கொள்ள வேண்டும் ) என்றெல்லாம் கேட்கிறார்கள்.

கேள்வியின் உட்பொருள் இதுதான் என்று நினைக்கிறேன். அதாவது “நீ என்ன பெரிய மேதாவியா?” என்பதாக இருக்கலாம். ( மேதாவி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருளும் உண்டு என்பதைக் கவனிக்கவும் ! )

எது எப்படி இருந்தாலும் ‘இலக்கியம்’ என்றால் என்ன என்றொரு கேள்வி எழுந்தது உண்மை. சிறிது ஆராய்ச்சி செய்தேன். இலக்கு + இயம் = இலக்கியம் என்று புரிந்துகொள்ளலாம் என்று தெரிந்துகொண்டேன். ஒரு தெளிவான, உயர்வான இலக்கைத் தெரிவு செய்து கொண்டு அதனை மொழி வழி இயம்புதல் என்று பொருள் கொள்ளலாம் என்று அறிந்துகொண்டேன்.

இலக்கியத்தில் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் கலக்கலாமா ? என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. சில நண்பர்கள் இவை சார்பில்லாததே இலக்கியம் என்று கூறுகின்றனர்.

இலக்கியம் என்பதே ‘அழகியல்’ தொடர்பானதாகவும் புனைவுகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். எனவே அவற்றில் அரசியல், சித்தாந்தம் முதலியன கூடாது என்றும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஜெயகாந்தன் எழுதியது இலக்கியமா இல்லையா ?

புனைவும் அழகியலும் மட்டுமே இருக்கவேண்டும் என்றால் இப்படி இருக்குமோ ? காந்தியடிகளைப்பற்றிய ஒரு கவிதை எழுத வேண்டும் என்றால் அவரது அழகைப் பற்றிப் பாட வேண்டுமா? மன்மதனுக்கு ஒப்பிட்டுப் பாட வேண்டுமா?

இலக்கியம் என்றாலே நடைமுறை வாழ்வியல் சாராமலே இருக்க வேண்டும் என்று உள்ளதா?

‘கட்டுரைகள்’ இலக்கியம் இல்லையா?  அல்லது சில தலைப்புக்கள் பற்றி மட்டுமே இருந்தாலொழிய கட்டுரைகள் இலக்கியம் என்று கொள்ளப்படாதா?  அதில் சமயம், மொழி, அக்கால அரசு தொடர்பான செய்திகள் இருந்தால் அவை இலக்கியம் இல்லையா?

உதாரணமாக – தேவாரம் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது என்று கொண்டால் அக்கட்டுரையில் தேவாரம் பாடிய அப்பர் பற்றிய செய்திகள் இடம் பெறக் கூடாதா? அத்துடன் அவர் சார்ந்த சமயம் பற்றியன இடம் பெறக் கூடாதா? சிவபெருமான் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இடம் பெறக் கூடாதா ? அக்கட்டுரையை வைணவர்களும் படிப்பார்கள் என்பதால் சைவம் பற்றிய கருத்துக்களும் திருமால் பற்றி வந்துள்ள சில கருத்துக்களும் இடம்பெறக்கூடாதா?

‘தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று சைவர்கள் கூறுவதால் இந்து சமயம் சாராத வாசகர்கள் படித்தால் மனம் புண்படுவர் என்பதால் இந்த வாழ்த்து பற்றிப் பேசக்கூடாதா?

அல்லது வைணவ சமயம் சார்ந்துள்ளதால் அத்வைத சம்ப்ரதாயம் தொடர்பான காஞ்சி மட வழக்கு பற்றி ஆராயக் கூடாதா?  அல்லது காஞ்சி மடம் வெகு விரைவில் தனது ஆளுமையையும் சமூகத்தில் தனது செல்வாக்கையும் இழக்க வேண்டும் என்று விரும்பும் சில சக்திகள் பற்றி சிந்திக்கவே கூடாதா ? அப்படி சிந்திக்க வேண்டி இருப்பதால் வெள்ளையர் ஆட்சி தொடங்கி தற்போது வரை பாரத சமூகத்தின் வீழ்ச்சியை விரும்பும் இயக்கங்கள் பற்றி சிந்திப்பது பாவமா ?

பாரதத்தின் ஞான மரபே தர்க்கம் என்னும் அடிப்படை அமைப்பைச் சார்ந்தது தானே ? கேள்விகள் கேட்கப்படுவது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வே. உபநிஷதம் வேறு என்ன ? சங்கரரும் திருநாவுக்கரசரும் இராமானுசரும் வாதம் செய்து வெற்றி கொண்ட வரலாறு தானே நமது ? ஆக ‘எல்லோருக்கும் ஏற்கப் பேசுவது’ என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை என்பது தானே உண்மை?

இவ்வாறு எல்லாம் எந்த எண்ணப் போக்கையும் நிந்தனை செய்யாமல் எழுதுவதே இலக்கியம் என்றால் பிறந்த குழந்தை சிரித்ததையும் ரோஜாப்பூ மலர்ந்ததையும் மட்டுமே எழுத வேண்டும். இவை தான் இலக்கியமா?

புரியவில்லை.

சில விஷயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. எந்த நிகழ்வையும் ஆராயும்போதும் சமயம், மொழி, சித்தாந்தம் முதலியன பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் எனக்கு உள்ள ஒரே வழிகாட்டி இது தான். முனைப்பாடியார் என்னும் புலவர்  கூறும் சட்டமே நான் பின்பற்றும் வழி. அது இது தான் :

“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்கண்
ஆய்தல் அறிவு உடையார் கண்ணதே, காய்வதன்கண்
உற்ற குணம் தோன்றாதது ஆகும், உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”

விருப்பு வெறுப்பின்றி ஒரு பொருளை ஆராய்ந்து அறிய வேண்டும். விருப்போடு ஆராய்ந்தால் பொருளின் கண் உள்ள குறைகள் தென்படாது; வெறுப்போடு ஆராய்ந்தால் அதனின் கண் உள்ள நல்ல குணங்கள் தென்படாது; அறிவுடையார் அப்படிச் செய்வர்.

இதுவே என் வழிகாட்டி.

இலக்கிய ஆய்வு என்பது வயலில் நெல் அறுக்கும் கத்தி போன்றது; அது நல்ல கதிரை அறுவடை செய்யும். அதற்காக பதர்களையும் ஊடுறுவிகளையும்  அறுத்தெறியும். என் பணி அது போன்றதே; அதை வெண்ணை வெட்டும் கத்தியாக்க விருப்பமில்லை.

நான் எழுதுவது இலக்கியமா இல்லையா என்பது பற்றிக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்கிறதா என்பதே முக்கியம் என்று கருதுகிறேன்.

பாரதியின் இந்த வரியுடன் முடிக்கிறேன். என் நிலை இது தான்.

“தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?”

வீழ மாட்டேன்.

சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுகள்

சென்ற வாரம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி. வாசிப்பில் நமது கடந்த கால நிகழ்வுகளின் தொனி ( nostalgia) என்பது தலைப்பு.

மிக நிறைவாக இருந்தது இந்த நிகழ்ச்சி. நன்றி திருமதி.சித்ரா ரமேஷ்.

பேச்சாளர்கள் பலரின் பேச்சுக்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தன. பலவற்றுடன் என்னைத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது.

திருமதி.சித்ராவின் பேச்சு மனிதன் தனது பேராசைக்காகவும், சுயநலத்துக்காகவும் செய்யும் செயல்களால் மற்ற உயிர் இனங்கள் படும் பாட்டை கண் முன் நிறுத்தியது. இயற்கையை இயற்கையாக விட வேண்டியது தானே என்ற அவரது கேள்வி நியாயமானது தானே ? ஜெயமோகனின் ‘யானை டாக்டர் ‘ படிக்க வேண்டும்.

திருமதி அழகு நீலாவின் பேச்சு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு சேட்டை செய்யும் ஒருவர் இருக்கிறார். வணிக ரீதியான இந்த உலகம் அவர்களை உதவாக்கரைகள் என்று உதாசீனப்படுத்தி முத்திரை குத்தி இருப்பது உண்மை. இயல்பாகப் பார்த்தால் அந்த மாதிரி மனிதர்களால் இயற்கைக்கு ஒரு கெடும் நிகழ்வதில்லை, மாசு படுவதில்லை.வெற்றி பெற்றவர்களால் மாசு அடைகிறது என்பது வேண்டுமானால் உண்மை.

திருமதி.பாரதியின் பேச்சில் பதின்மவயதின் புரிதலின்மை தெரிந்தது. இந்த வயதின் தனிமைப்படுதலை எதிர்ப்பதாகக் கூறியது அருமை.

திரு.குமாரின் பேச்சு பல பேருக்குப் பல பழங்கால நினைவுகளை வரவழைத்திருக்கும். எல்லாராலும் எல்லா வற்றையும் சொல்ல முடியாது. ஆனால் குமார் கூறியது போல் பல நிகழ்வுகள் நமது வாழ்விலும் நடந்திருக்கும் என்பது உண்மை.

திரு.ஷாநவாஸ் பேச்சு ஆசிரிய இழப்பை முன்னிறுத்தியது.

திரு கண்ணபிரான் பேச்சு அனுபவ உண்மைகளை உணர்த்தியது.ஒரு முன்னோடி சமுதாயத்தின் உணர்வுகள் பளிச்சிட்டது.

மிக நல்ல ஒரு ஞாயிறு மதிய வேளை நடந்து முடிந்தது.

அடுத்த வாரம் எழுத்தாளர் ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்.

%d bloggers like this: