உயர் வள்ளுவம் வகுப்பு – அனுபவக் குறிப்பு

இலங்கை ஜெயராஜ்

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் இந்திய நேரம் காலை 6:30-8:00 ‘உயர் வள்ளுவம்’ வகுப்பெடுக்கிறார்கள். கம்பவாரிதியால் பயன்பெற்றுவரும் பல நூறு பேர்களில் அடியேனும் ஒருவன்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் திருப்புகழ் பதிகத்தைப் பண் சேர்த்து இசைக்கிறார்கள். தமிழே சுவை. அதில் திருப்புகழ் என்னும் பஞ்சாமிர்தம் சேர்த்து, அதில் பண் என்னும் தேனையும் கலந்து அளிக்கிறார்கள். வார இறுதிக் காலை வேளைகளில் என்ன ஒரு இனிமை!

திருக்குறள் பாயிரம், தொகுப்புரை, இரண்டு குறட்பாக்களுக்கான பரிமேலழகரின் உரைக்கான விளக்கம், அவற்றில் வரும் இலக்கணக் குறிப்புகள், ஒப்பு நோக்க வைக்கும் கம்பராமாயணச் செய்யுள் வரிகள், சில நேரம் திருமுறைகளில் இருந்தும், மூதுரை முதலிய பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் என்று பிரதி வாரமும் காலை நேரம் அருமையாகத் துவங்குகிறது.

தவிரவும், சுமார் 20 மணித்துளிகள் கேள்வி பதில் நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து கேள்விகள், அனுபவக் குறிப்புகள் என்று பலரும் பேசுவர். பலரது வாழ்க்கையை இந்தக் குறள் வகுப்பு மாற்றியமைத்துள்ளதைப் பயன்பெற்றவர்களின் வாயிலாகவே அறிந்துகொள்கிறேன்.

இன்று சிங்கப்பூரில் இருந்து பேசிய தமிழக உடல் உழைப்பாளர் ஒருவர் தான் பெண்களின் மீதான அதீத காமம் உட்பட தீய பழக்கங்கள் அனைத்திற்கும் அடிமையாக இருந்ததையும், அவற்றையெல்லாம் விடுத்துத் தற்போது பரிமேலழகருக்குக்கோவில் கட்டும் எண்ணத்துடன் முயன்றுவருவதாகவும், தன் கிராமத்திலும் தன் வீட்டிலும் அனைவரும் குறள் பயில ஏற்பாடு செய்துள்ளதாகவும் மனமுருகித் தெரிவித்தார்.

இவ்வாறும் பல முறை பலர் பேசியுள்ளனர் என்றாலும், இந்த அன்பரின் குரல் வள்ளுவரின் வாழ்வாங்கு வாழும் தன்மையை உணர்த்துவதாக இருந்தது.

அவசியமான இரு பயணங்கள் வந்தன. எனினும், வகுப்பு நடைபெறுவதால், பயண நேரத்தை ஒத்திப் போட்டேன் என்பதில் எனக்குப் பெருமை. கம்பவாரிதி நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம் கடமை.

இப்படியான குறள் நெறியைப் பயிலும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிட்டியுள்ளது. மற்றைய மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உலகமே வியக்கும் குறள் எழுதப்பட்ட மொழியே நம் தாய்மொழியாகவும் அமைதுள்ளது நமது நல்லூழ் தவிர வேறென்ன?

ஜூம் செயலி எண்: 846 5100 5685 சனி, ஞாயிறு காலை 6:30-8:00

சிங்கைக் கம்பன் விழா-2014

Kamban Vizhaaதேரழுந்தூரில் பிறந்த கம்பனுக்குச் சிங்கையில் விழா எடுத்தார்கள். சிங்கப்பூரின் முதல் கம்பன் விழா அதன் எழுத்தாளர் கழகத்தின் ஆதரவில் நடைபெற்றது. ஒரு நாள் முழுக்கக் கம்பச் சுவை பருக வாய்ப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழித்துக் கம்பன் விழா அனுபவம்.

அந்நாட்களில் தேரழுந்தூரில் ‘கம்பர் விழா’ நடக்கும் ( ‘ர்’ – காண்க ). .மு.இஸ்மாயில், சொ.சத்தியசீலன், புலவர். கீரன், செல்வகணபதி, முனைவர். இராமபத்திரன் ( என் பெரியப்பா ) முதலானோர் பல தலைப்புக்களில் பேசுவர். இளமையில் கல். அது என் இளமையின் மைல்-கல்.

ஒரு முறை சாலமன் பாப்பையா ( அப்போது அவர் மதுரைக் கல்லூரிப் பேராசிரியர் ) சீதை குறித்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ஆனால் அவரோ விருந்தினர், நடுவர். மேடையில் எதுவும் கூற முடியாது. பட்டிமன்றம் முடிந்து
அவரை என் பெரியப்பா எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் இருவரும், அவர்களுடன் வேறு சில அறிஞர்களும் சுமார் 2 மணி நேரம் சீதை பற்றிப் பேசினர். ஆழ்வார்கள், கம்பன், துளசிதாசர், வால்மீகி என்று பலரும்
சீதை பற்றிச் சொன்ன கருத்துக்கள் எல்லாம் பேசினர். அந்த வயதில் முற்றிலும் உள் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஆனால் இந்த விஷயங்கள் குறித்துப் பேசினர் என்பது புரிந்தது.

அது போலவே சிங்கையிலும் நடந்தது. ‘பாத்திரங்கள் பேசினால்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இராம.வைரவன் இந்திரசித்தாகக் கவி பாடினார். ஆனால் மேடையில் ‘வீடணன்’ உருவில் அமர்ந்திருந்த வெண்பா வேந்தர் ஆ.கி.வரதராசனாரை ‘எட்டப்பன்’ என்று சாடிவிட்டார். ‘ஆகா வென்றழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று பாரதி சொன்னது போல வீடணர் பொங்கி எழுந்தார். நிமிடத்தில் வெண்பா இயற்றி இந்திரசித்தரை மறுத்தார். அருமையான பல கவிதைகள் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, சுக்ரீவன், வாலி முதலான பாத்திரங்கள் மூலம் பேசின.

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ‘தேன்’ என்னும் சீரில் முடிந்த கவிதை வரிகள் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருந்தன. சமீபத்தில் கலைஞரிடம் பரிசு பெற்றவர் இவர்.

பட்டி மன்றங்கள் என்றால் தொலைக்காட்சிகளின் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளது ‘பட்டி’ ( மலையாளப் பொருள் கொள்க ) களின் அணிவகுப்பு என்பதைத்தான். ஆனால் கம்பன் விழாப் பட்டி மன்றம், தன் நிலையில் இருந்து விழா மன்றமாக் இருந்தது. காரணம் பங்கேற்றவர்களும் நடுவரும். பங்கேற்ற நால்வரில் மூவர் முனைவர்கள். நடுவரோ உலகறிந்த தமிழறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள். ‘தம்பியருள் சிறந்தவன் பரதனா, இலக்குவனா’ என்பது தலைப்பு. தீவிர சொற்போருக்குப் பின் ‘பரதனே’ என்று தீர்ப்பளித்தார் ஜெயராஜ்.

முன்னதாகக் காலையில் மலேசிய அமைச்சர் சரவணன், சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், சிங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், தவிர பேரா. சொ.சொ.மீ மற்றும் ஜெயராஜ் பேசினர். விழாத் தலைவராக முனைவர்.சுப.திண்ணப்பர் சிறப்புரை ஆற்றினார்.

‘மும்முறை பொலிந்தான்’ என்னும் தலைப்பில் இராவணன் பற்றீப் பேரா.சொ.சொ.மீ.யும், ‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்களும் பேசினர்.

செவிக்கு உணவு இல்லாத ஒரு அரை மணி நேரத்தில், வயிற்றுக்கும் ஈயப்பட்டது ஆனந்த பவன் சார்பில்.

என் கை வண்ணம் எதுவும் இன்றி, கண்ட வண்ணம் நிகழ்ந்த வண்ணம் எழுதியிருக்கிறேன் இந்தத் தேரழுந்தூர்க் கட்டுத்தறி. தவறுகள் கட்டுத்தறியினுடையவை என்பதறிக.

விழாவின் உணர்ச்சிப்பிரவாகப் பெருக்கால் நானும் ஒரு மரபுக் கவிதை எழுதலுற்றேன். என்ன ‘பா’ என்றெல்லாம் கேட்காதீர்கள். தெரியாது.

ஆழிசூழ் உலகுக
கெல்லாம் அஞ்சுவை தந்த கம்பன்
ஆமருவிக்கும் தன் கவிச்சுவை தெரியத் தந்தான்
ஆசுகவிப் புலவர் யாரும் பாங்குடனே பாடக் கேட்டேன்
ஆவெனவே திறந்த வாய் பிளந்த வாறு.

‘மும்முறை பொலிந்தான்’ என்ற தலைப்பில் பேரா.சொ.சொ.மீ. பேச்சு :

‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் பேச்சு :

‘தம்பியரின் சிறந்தவன் இலக்குவனா பரதனா ? பட்டிமன்றம்- இலங்கை ஜெயஆஜ் பேச்சு :

%d bloggers like this: