ஆலமரம் – நாவல் வாசிப்பு அனுபவம்

ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே. 

ஐயங்கார் கதைகள், ஐயங்கார் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவே. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்த இடத்தை விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ நிரப்புகிறது. 

படிமங்கள், நிலைகள், குழப்பங்கள், குறியீடுகள், மிகை எழுத்துகள் என்று எதுவும் இல்லாமல், நேரடிக் கதை சொல்லல் ஆசிரியரின் பலம்.  

ஆலமரம் – நாவல்

மாங்கொல்லை என்னும் தஞ்சை கிராம ஐயங்கார் மிராசுதார் குடும்பம், சுமார் 120 ஆண்டுகளில், வந்து நிற்கும் இடத்தைப் பற்றியதே இந்த நாவல்.  மிராசு சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகித் தெறித்து விழ, தெறித்த ஒவ்வொரு துளியும் எங்கே என்ன செய்தது என்பதே கதை. ‘Period Novel’  என்னும் சட்டகத்துக்குள் வரும் இந்த நீண்ட நெடிய 957 பக்க நாவல், சில இடங்களில் ஆழ்ந்து, மெதுவாகவும், பல இடங்களில் ஓட்டப்பந்தயம் போலவும் ஓடி நிற்கிறது.

தஞ்சை கிராம பிராமண மிராசுகளின் வாரிசுகள் மேற்கொண்ட இடப்பெயர்வுகள அன்னாளைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்டுக் காட்டப்படுகின்றன. நாவல் முழுவதும் தஞ்சை – சென்னை, சென்னை – தில்லி, சென்னை – அமெரிக்கா என்று மக்கள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் கண்கூடாகக் காணும் ஒன்றுதான் என்றாலும், இலக்கிய வடிவில் ஆவணப்படுத்தல் போல் உள்ள இந்த நாவல்  பிராமண இடப்பெயர்வைச் சுட்டும் முறையில் முதன்மையானது.  

தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் வைணவ பிராமணர்களும், ஸ்மார்த்த பிராமணர்களும் கல்வியைப் பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்க்கையில் மேலேறிச் செல்வது நாம் பலரது வாழ்விலும் கண்ட ஒன்றுதான். அது நாவலில் கண்கூடாகக் காட்டப்படுகிறது.  மிராசு வாரிசுகள் கல்வி இல்லாமல் அழிவதும் அல்லது வாழ்க்கையில் முன்னேறாமல் தத்தளிப்பதும், அவ்வாறு கல்வியைப் பற்றிக் கொண்டவர்கள் மேலேறிச் செல்வதும் நாவலில் மட்டும் அல்லாமல் யதார்த்த வாழ்விலும் நிகழும் உண்மைகள்.

கல்வி இல்லாத செல்வம் தரும் அழிவை வாசு பாத்திரமும், செல்வத்துடன் கூடிய நல்ல கல்வி தரும் மேன்மையை மைதிலி பாத்திரமும் சுட்டுகின்றன.  

பாரத விடுதலைப் போர் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. போராட்டத் தியாகிகளுக்கு தமிழ் வைஷ்ணவக் குடும்பங்களில் இருந்த / இல்லாத மரியாதையும் நமக்குத் தெரிவிக்கிறது நாவல். 

ஐயங்கார் விஷயங்கள் பலதும் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளன. நான்கு முறை சேவிக்கும் வடகலை ஐயங்கார் வழக்கம், ஒரு முறை / இரண்டு முறைகள் சேவிக்கும் தென்கலை ஐயங்கார் வக்கம், பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சங்கு-சக்கர தீட்சை முறை, அதைப் பெற்றவர்கள் மட்டுமே திவசம் முதலிய தினங்களில் தளிகை பண்ண அனுமதிக்கப்படும் பண்பாடு, ஐயங்கார் இல்லங்களில் தளிகை பண்ணப்படும் பக்ஷணங்கள், சாத்துமுது ( ரஸம் ) வகைகள் என்று நாவல் முழுவதும் இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றன. 

ஊரின் காவல் தெய்வத்தின் பரிவார தேவதாந்திரம் (வீரன்) ஒன்றின் சிலையை வீட்டின் பின் வைத்த நிகழ்வுடன் துவங்கும் நாவல், முடிவதும் அந்தத் தேவதையின் இடத்தில் தான். இந்த முறை நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. காவல் தெய்வங்களுக்கு வைஷ்ணவ இல்லங்களில், வழக்கங்களில் இடம் இல்லாமை சுட்டப்படுவது அருமை. சமாஸ்ரயணம் பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திர வழிபாட்டில் ஈடுபடாமல் இருப்பது இன்றும் தொடரும் வழக்கமே. 

கல்விப் புலன் அதிகம் உள்ள பாத்திரங்கள் வந்து சென்றாலும்,  அவர்களிடம் தத்துவப் பார்வைகள் முற்றிலும் இல்லாமல் இருப்பது ஒரு வியப்பே. சித்தாந்தக் கலந்துரையாடல்கள் துளிக்கூட இல்லாமல் அக்கால வைஷ்ணவ மிராசுக் குடும்பங்கள் வாழ்ந்துள்ளன என்பது சிறு நெருடலே. ஆனாலும், படிப்பறிவு அதிகம் இல்லாத மிராசுகளுக்கும் அவர்தம் மனைவிகளுக்கும் சித்தாந்தம் தெரியாமல் இருக்கவே வாய்ப்புண்டு என்றும் எண்ணிக்கொள்ளலாம். 

மிராசுகள் தம் மனைவியரை விட்டு, தஞ்சாவூரில் பரத்தை மகளிர் சகவாசம் கொள்வதும் நாவல் மூலம் அறிகிறோம். அக்கால சமூக ஒழுக்கங்களில் ஒன்றாகவே இது சொல்லப்பட்டாலும், அது தொடர்பான ஒரு தலைக்குனிவு இருந்ததையும் நாவல் காட்டுகிறது. அக்காலப் பெண்கள் கணவர்களிடம் அடிபடுவது அமோகமாக நடக்கிறது. அது ஏதோ சாதாரணமான ஒரு நிகழ்வாகச் சொல்லப்படுகிறது என்றாலும், தற்காலத்தில் அம்மாதிரியான சித்திரத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாக உள்ளது.

யாரும் வசிக்காத பெரிய வீட்டை சம்ஸ்க்ருத பாடசாலைக்கு எழுதி வைக்கலாம் என்று வரும் ஒரு கட்டம்,  சுஜாதாவின் ‘கு.சி. பாடசாலை’ விஷயத்தை நினைவுபடுத்துகிறது. விறகு அடுப்பில் தளிகை பண்ணிக் கொண்டிருந்த குடும்பம் குமுட்டி அடுப்பிற்கு முன்னேறி, இறுதியில் காஸ் அடுப்பிற்கு வந்ததையும் நாவல் சுட்டுகிறது.

சுமார் பதினைந்து பேரின் மரணத்தை ஆவணப்படுத்தும் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நீண்டதொரு மௌனமே மிஞ்சியது. 

வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதை என்று ஒரு சொல்லாடலில் கடந்து செல்லலாம் என்றாலும், இந்த நாவல் தமிழ்ச் சூழலில் வேறு யாரும் தொட்டுப் பார்க்காத ஒரு சரடைப் பிடித்து செல்கிறது. ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே. 

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத நாவலாக ‘ஆலமரம்’ திகழ்வது தற்காலக் கீழ்மைகளில் ஒன்று என்று கடந்துசெல்ல வேண்டியது தான். 

நாவல்: ஆலமரம். ஆசிரியர் : விஜயலக்ஷ்மி சுந்தரராஜன். பக்கங்கள்: 957. மணிமேகலைப் பிரசுரம். விலை: ரூ 420. 

பிஎச்.டி. புளித்த கதை

‘பையன் நல்லவன் தான். பார்த்தேன். ஆனா கொஞ்சம் அசடோ?’ என்றார்.

‘இல்லை, நல்ல பையன். சிங்கப்பூர்ல என்.யூ.எஸ்.ல படிச்சிருக்கான். கம்ப்யூட்டர்ஸ்ல மாஸ்டர்ஸ். அசடெல்லாம் இல்லை,’ என்றேன்.

‘இல்லை, நேத்திக்கு பார்த்தேன். சாப்ட்வேர்ல இருக்கேன்னான். ஆனால் நெத்திக்கி இட்டுண்டிருந்தான். அதான் கொஞ்சம் அசடோன்னு தோணித்து,’ என்றார்.

என் தூரத்து உறவுக்காரப் பையனைப் பற்றிச் சொன்னர் பெண்ணைப் பெற்ற இவர். பையன் நெற்றியில் வைணவ அடையாளமான திருமண் இருந்தது அவனுக்கு ‘அசடு’ பட்டம் பெற்றுத் தந்தது.

‘பையன் சூட்டிகை தான். நம்பி பொண் குடுக்கலாம்,’ என்றேன்.

‘அதுக்கில்ல, நேத்தி சாயந்திரம் அவாத்துக்குப் போனேன். பகீர்ன்னுது,’ என்றார். புரியாமல் விழித்தேன்.

‘பையனோட அப்பா குடுமி வெச்சிண்டிருக்கார். அம்மா மடிசார் கட்டிண்டிருக்கா. அதான் பயந்துட்டோம்,’ என்றார் அவருடன் வந்த பெண்ணின் தாயார்.

‘அதால என்ன? அப்பா தானே குடுமி வெச்சிண்டிருக்கார்?’ புரியாமல் கேட்டேன்.

‘நல்ல காலம் அவசரப்படல்ல. மாமியார் மடிசார், மாமனார் குடுமி. எம்பொண்ணு மாடர்னா வளர்ந்தவ. அட்லீஸ்ட் சுடிதார் போட்டுப்பா. இவ்வளவு ஆசாரம் எல்லாம் அவளுக்கு ஆகாது. அதால சம்பந்தம் பத்தி அப்பறம் சொல்றோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்,’ என்றார் அந்த மாதுசிரோமணி.

‘அப்ப நான் என்ன பதில் சொல்றது பையனோட அப்பாவுக்கு?’ என்றேன் சற்று கடுப்புடன்.

‘பொண்ணு மேல படிக்கணுமாம் பிஎச்.டி. பண்றாளாம்னு ஏதாவது சொல்லுங்களேன்..’ அந்த மாது சிரோமணி.

பையனின் தந்தையார் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் வைதீக வாழ்வு வாழத் துவங்கினார். பையனின் தாயாரும் அப்படியே. இது தங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்க ஊறு செய்யும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

பல ஐயங்கார் குடும்பங்களில் மடிசார் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. பாரம்பரியத்தைத் தொடர விரும்பும் ஓய்வு பெற்ற பெரியவர்கள் இதைக் கொஞ்சம் மனதில் கொள்ள வேண்டும்.

அது போலவே, பையன்கள் எவ்வளவு நாகரீகமாக இருந்தாலும் அவனது பெற்றோரும் அரை நிஜார் போட்டுக்கொண்டு நிற்க வேண்டும் என்று எதிர்பாப்பதும் நல்லதில்லை.

அவருக்குப் போன் செய்தேன்.

‘என்ன சொல்றாப்பா பொண்ணாத்துக்காரா? குடுமி, மடிசார் அதனால வேண்டாம்கறாளா?’ என்று துவங்கினார்.

‘இல்ல சார், அது வந்து பொண்ணு மேல படிக்கப் போறாளாம். யூ.எஸ்.ல பிஎச்.டி. சீட் கெடைக்கும் போல இருக்காம்..’ என்றேன்.

‘சரி சரி. வேற இடம் இருந்தா சொல்லு. எல்லா பொண்களும் இப்ப பிஎச்.டி. படிக்க அமெரிக்கா போறா போல இருக்கு. அமெரிக்காவுல ஐயங்கார் பொண்கள் தான் பிஎச்.டி. படிக்க வேணும்னு கேக்கறாப்ல இருக்கு. இதோட நாலு பொண்ணு அப்பிடி போயிட்டா..’ என்று முடித்தார்.

ஐயங்கார் குடும்பங்களில் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பு. அதுவும் மணல்கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி கட்டளைகள் போடுகிறார்கள். அவற்றில் சில:

  1. மாமியார், மாமனார் இருக்கக் கூடாது. (உயிரோடு)
  2. இருந்தாலும் கூட இருக்கக்கூடாது.
  3. முடிந்தவரை யூ.எஸ். க்ரீன் கார்ட் பையனாக இருக்க வேண்டும்.
  4. யூ.எஸ். குடியுரிமை பெற்றிருந்தால் விசேஷம்.
  5. தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும். தான் குறைந்தது முதுகலை (கணினிப் பொறியியல்). எனவே பையன் முனைவர் பட்டம்.
  6. பையன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். இவற்றில் படித்திருக்க வேண்டும். மெட்றாஸ் ஐ.ஐ.டி, அகமதாபாத் ஐ.ஐ.எம். விசேஷம்.
  7. அமெரிக்கப் பல்கலைகளில் ஒரு முதுகலையாவது படித்திருத்தல் வேண்டும்.எம்.ஐ.டி, கால்டெக் விசேஷம்.
  8. சி.ஏ.வாக இருந்தால் அமெரிக்க சி.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.
  9. அமெரிக்காவில் வீடு இருந்தாலும் பையனுக்குக் கடன் இருக்கக்கூடாது. (2008ற்குப் பின்னான ஞானோதயம்)
  10. முடிந்தவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்தியா வர வேண்டும். வந்தாலும் மாமியார் வீட்டில் சில நாட்கள் தான் தங்க முடியும்.
  11. அமெரிக்காவில் தான் குழந்தைப் பிறப்பு. அதற்கு பெண்ணின் பெற்றோர் ஆறு மாதம், அதன் பின் கணவனின் பெற்றோர் ஆறு மாதம் வரலாம். ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் வரக்கூடாது.

அந்த உறவுக்காரப் பையனுக்கு வேறு நல்ல இடத்தில் கல்யாணம் நடந்து தற்போது இருவரும் அமெரிக்காவில். தந்தையும் தாயும் சென்னையில் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடனும். நிராகரித்த பெண் தற்போது அமெரிக்காவில் இன்னும் திருமணமாகாமல். அவளது தாயும் தந்தையும் இந்தியாவில் அதே பழைய பல்லவியைப் பாடிக்கொண்டு.

‘நீங்க அமெரிக்காவுல தானே இருக்கேள்? நல்ல வரனா இருந்தா சொல்லுங்கோ. எம்பொண்ணு பெர்க்லில பிஎச்.டி. பண்ணிண்டிருக்கா. நம்மடவா பையனா நியம நிஷ்டையோட இருக்கற குடும்பமா இருந்தா சொல்லுங்கோளேன்..’ என்றார். என் முகம் அவருக்கு நினைவில் இல்லை என்று தெரிந்துகொண்டேன்.

கல்யாணப் பெண்களே!  அடுத்த முறை வேறு ஏதாவது காரணம் சொல்லுங்கள். பிஎச்.டி. வேண்டாம். புளித்துவிட்டது.

'அப்பாவின் ரேடியோ' – வாசிப்பு அனுபவம்

‘அப்பாவின் ரேடியோ’ என்னும் ஒரு நூல் எங்கோ கிடைத்தது.

முன், பின் அட்டைகள் இல்லை. எழுத்து நடை சுவரஸ்யமாக இருந்த்தால் படிக்கத் துவங்கினேன். சுஜாதாவின் ஏதோ தெரியாத நூல் என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சி அளித்தது நூலின் நடுவில் இருந்த பின் அட்டை. அதில் எழுத்தாளர் சுஜாதா இந்த நூலின் ஆசிரியரைப் பற்றிச் சொல்கிறார். ஆசிரியர் சுஜாதா தேசிகன்.

நிஜ வாழ்வில் தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதாவாம். ஆனால் தேசிகன் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகர். சுஜாதாவே தான் எழுதிய நூல்கள் பற்றிய சந்தேகங்களை இவரிடம் கேட்பாராம்.

ஆக புஸ்தகம் சுஜாதாவினுடையது அல்ல என்பது புலனாகியது. ஆனால் நடை அப்படியே சுஜாதா. கதை முடிவில் உள்ள திருப்பம், அதிகம் செலவாகாமல் சொற்களை அளவாகக் கையாளும் பாங்கு, புதிய பார்வை – அசத்துகிறார் ஆசிரியர். வாழ்க தேசிகன்.

‘அப்பாவின் ரேடியோ’ ஒரு சிறுகதைத் தொகுப்பு. பல கதைகள் என்னை பாதித்தன. அவற்றுள் ஒன்று ‘ராமானுஜலு’. Short and Sweet என்று நச் என்று இருக்கிறது கதை. தற்கால வைஷ்ணவர்கள் சிந்திக்க வேண்டும்.

‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே ராதா கல்யாண வைபோகமே’ ஐயங்கார்களின் கல்யாண ஏற்பாடுகள் பற்றிய நெத்தியடி. அதுவும் ‘ நரசிம்மப்பிரியாவில் தென்கலைன்னா எளக்காரமா பாப்பா’ என்பது உண்மை போல் தான் தெரிகிறது. கடைசியில் பாட்டி ‘இதுவரைக்கும் ஐயங்கார்ப் பையனா பார்த்துப் பண்ணிண்டானே ..’- செம நக்கல்.சுஜாதா படித்திருந்தால் சிரித்திருப்பார்.

‘பாட்டனாரெல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம்’ – இது ஐயங்கார்களின் நிதர்ஸன உண்மை.

‘..திருநட்சத்திரத்துக்குப் போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கைர்யம்’ – நல்ல ஹாஸ்யம்.

‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை. கதையல்ல. அதுவே உண்மை. 40 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்களிடம் வீடுகளை விற்று வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்று ஓய்வு பெற்று தேரழுந்தூர் திரும்ப விரும்பும் பெரியவர்கள் பலரை எனக்குத் தெரியும். எழுத்தாளர் தேசிகனுக்கு எனது விசேஷ வந்தனங்கள். கதையின் துவக்கத்தில் உள்ள திருமங்கையாழ்வார் பாசுரம் கதைக்கு மிகப் பொருத்தம்.

‘பிச்சை’ கதை கண்களில் நீர் வரவழைத்தது. பல குடும்பங்களில் இப்படி நிகழ்ந்துள்ளது உண்மை.

நூலுக்குக் காரணமான ‘அப்பாவின் ரேடியோ’ கதை பல பழைய நினைவுகளை வரவழைத்தது. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ரேடியோ வாங்கப்பட்டது. ஆனால் அது பிலிப்ஸ் ரேடியோ. ரொம்ப நாட்கள் வரை வேலையும் செய்து வந்தது.

மொத்தம் 23 கதைகள். என்னைக் கவர்ந்தவை இவை. இக்கதைகளைப் பற்றி, இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.

சுஜாதா இன்னமும் நம்முடனேயே இருக்கிறார்.

சிங்கப்பூரில் நூலகத்தில் கிடைக்கிறது. சென்னையில் இங்கே வாங்கலாம்.

சாத்துமுது தெரியுமா ?

வைஷ்ணவத் தமிழ் என்று ஒன்று உண்டு. ‘பரிபாஷை’ என்றும் சொல்வர். வேறு மொழி கலப்பில்லாத சுத்தமான தமிழ். அன்றாட வாழ்வில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

‘ரஸம்’ என்பது ‘சாத்துமுது’ ( தக்காளி, புளி முதலியவற்றின் சாறுகளின் அமுது, சாற்றமுது). ‘பாயசம்’ என்பது ‘திருக்கண்ணமுது’ ( திரு+கண்ணன்+அமுது). ‘பொரியல்’ என்பது ‘கறமுது’ ( கறி + அமுது ). ‘கூட்டு’ என்பது ‘நெகிழ்கறமுது’ ( நெகிழ் + கறி + அமுது ). அதுபோல ‘அக்கார அடிசில்’ தற்கால சர்க்கரைப் பொங்கலின் ஒரிஜினல் உருவம். பாலும், அரிசியும் நெய்யும் வெல்லமும் சேர்த்து செய்வது. ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் செய்து கண்ணனுக்குப அளிப்பேன் என்று சொல்கிறாள். தடா என்பதும் அளவு முறை. பெரிய படி என்று சொல்லலாம்.

பெருமாள் உண்ட மீதம் என்பதால் எந்த உணவையும் ‘அமுது’ சேர்த்துச் சொல்வது மரபு.

‘படைத்தல்’ என்று சொல்வது கிடையாது. படைப்பது இறைவன் செயல். எனவே ‘அம்சே பண்ணுதல்’ என்பது பயன்பாட்டில் உள்ளது. இறைவனுக்கு அமுது செய்யப் பண்ணுவது என்பது ‘அம்சே’ பண்ணுவது என்று டுவிட்டர் பாஷையில் வருகிறது. அது போல ‘ஏள்ளப்பண்ணுதல்’ ( எழுந்தருளப் பண்ணுதல் ), ‘திருமேனி பாங்கா ?’ ( உடல் நலம் எப்படி இருக்கிறது ?), ‘தளீப்பண்ற உள்’ ( தளிகை பண்ணுகின்ற உள் அதாவது சமையல் அறை ) என்று இன்னும் பல.

அது போல் ‘சாம்பார்’ என்பதும் கிடையாது. ‘குழம்பு’ தான்.

சில வைஷ்ணவர்கள் ‘இன்னிக்கி கிச்சன்ல என்ன சமையல்? பாயசம் வாசனை வறதே’ என்று கேட்டால் தடா சட்டத்தில் பிடித்துப் போடலாம். .

தென்கலை * வடகலை – ஸ்டார்ட் மீஸிக்

திருமழிசையாழ்வார் தென்கலை சம்பிரதாயத்தை வலியுறுத்துகிறார் என்று சொல்கிறேன்.  கொஞ்சம் கொளுத்திப் போடலாம் என்று எண்ணம். எதிர் வினைகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம் என்று தோன்றியது.

நான்முகன் திருவந்தாதி என்னும் பாடல் தொகுப்பை எழுதினார் திருமழிசையாழ்வார். அதில் ஒரு அந்தாதிப் பாடல் :

“வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து”

இறைவன் பக்தி உழவன். அவனது நிலத்தில் நாம் ஒரு விதையையும் இட வேண்டாம். அவனே நம்மைப் பார்த்துக் கொள்வான். இவ்வாறு இப்பாசுரத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது. வடிவேலு பாஷையில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்கிறார்கள்.

ஜீவாத்மாக்களான நாம் இறைவனை அடைய எந்த முயற்சியையும் செய்ய வேண்டியதில்லை. அவனே நம்மை அழைத்துக்கொள்வான். அது அவனது கடமை என்பதாகப் பொருள் படுகிறது.

இதனை மார்ஜால நியாயம் என்று சொல்கிறார்கள் – அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதன் தாயே அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச் செல்லும். தென்கலை சம்பிரதாயம் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பது தென்கலையாரரின் மார்ஜால நியாயம்.

வடகலையார் மர்க்கட நியாயம் என்னும் நியதியின் அடிப்படையில் இருப்பவர்கள் – அதாவது குரங்கின் நியாயம். குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக்கொள்ள வேண்டும். தாய் குட்டியைத் தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்காளன நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை என்பதாக வடகலையார் நெறி உள்ளது.

திருமழிசை ஆழ்வார் சொல்வது கொஞ்சம் தென்கலையார் பக்கம் இருப்பது போல் தோன்றவில்லை ? என்ன நினைக்கிறீர்கள் ?

குரங்கோ பூனையோ, இரண்டும் இன்று சாஃப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்ஸனம்

என் வேலை முடிந்தது. ஸ்டார்ட் மீஸிக்.

பி.கு.: திருமழிசை ஆழ்வார் 5-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர். தென்கலை வடகலை பேதங்கள் இராமானுசருக்குப் பின் 13-ம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்த இரு பிரிவுகளின் முன்னோடிகளாக முறையே மணவாள மாமுனிகளும் வேதாந்த தேசிகரும் இருந்தனர் என்பது வரலாறு.

இராமானுசர் வந்திருந்த போது

கோபுர வாசல் சுவர்
கோபுர வாசல் சுவர்

என்ன அப்படியே நின்றுவிட்டீர்கள் ? மதிலைப் பார்த்து மலைத்துவிட்டீர்களா ? உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.

பிராகாரம்
பிராகாரம்

இது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.

குதிரை மண்டபம்
குதிரை மண்டபம்

இதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.

அதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.

புரந்தர தாசர்
புரந்தர தாசர்

இவர் யார் என்று பார்க்கிறீர்களா ? புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.

அட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே ! அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ! ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு !

அங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் ? குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது ? இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா ! அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் !

இல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.

நீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே ! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் ? அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் ? இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.

சுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .

அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்
அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்

‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் ! அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.

மேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் ! சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்
ஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.

ஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன ?

மூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.

சூக்ஷ்ம சொரூபமா ? என்ன பேச்சு இது ?

இராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா ? நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.

வயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே ? நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா ? அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது  வைணவம்.

தங்க விமானம்
தங்க விமானம்

என்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ?  சரி, எழுந்திருங்கள்.

என்ன நினைவு இது ? என்ன அருகில் யாரையும் காணோம் ? இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது ? நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே ? இராமானுசர் எங்கே? தேசிகர் எங்கே ? திருக்கச்சி நம்பிகள் எங்கே ? மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்களா ? அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா ? எந்த நூற்றாண்டு இது ?

திடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.

மெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.

கூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.

ஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ ?

கோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்
சேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…

சே, என்ன ஒரு ஹலூசினேஷன்.

"டேய் ஐயரு ராமம் போட்ருக்கார் டா. "

Image“டேய் பார்ரா நாமம், இங்கே வந்தும் போட்டுக்கிட்டுத் திரியறானுங்க” – என் அப்பாவை அழைத்துக்கொண்டு சிங்கபூர் ரயிலில் ஏறிய போது இரு இள வட்டங்கள் கேலி பேசியது காதில் விழுந்தது. ஓர் சீனப் பெண் எழுந்துகொண்டு கொடுத்த இடத்தில் அப்பாவை அமரச் செய்துவிட்டு குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

இந்திய இளைஞர்கள். சிங்கப்பூரர்கள் இல்லை. அவர்கள் உடையும் பேச்சின் சாயலும் அவர்கள் சென்னையிலிருந்து வந்துள்ள மாணவர்கள் என்று அறிவித்தன. சிங்கை தேசியப் பல்கலையில் பயில்பவர்கள் என்று ஊகித்தேன்.

சிங்கபூர்த் தமிழர்கள் கேலி பேசுவதில்லை, தமிழையும் கலாச்சாரத்தையும் மதிக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ள உடல் உழைப்புத் தொழிலாளர்களும் அமைதியாகவே உள்ளனர். தமிழக அதுவும் சென்னை மாணவர்கள் சிலர் தறி கேட்டு அலைவது சிலமுறை கண்டது தான். இருந்தாலும் இந்தமுறை சிங்கையில் நடந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

நெற்றிக்கு இட்டுக்கொள்வதை “திருமண் காப்பு” என்று அழைப்பர். திருமண் நம்மைப் பல இன்னல்களிலிருந்தும் காக்கும் என்பது ஒரு எண்ணம். அதனுடன் அதை அணியும் போது அதற்கு ஏற்றவாறு நடக்கவேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஏற்படும். அதுவே நம்மை கெட்ட வழிகளில் போகாமல் தடுக்கும் என்றும் கொள்ளலாம்.

நாமம் தரிப்பதை ( திருமண் இட்டுக்கொள்வதை )க்  கேலி பேசுவதும், நக்கல் செய்வதும் சாதி சொல்லி “டேய் அய்யர் போறான் பாருடா ” என்று வீதிகளில் அமர்ந்து காலிகள் கொக்கரிப்பதும் எனக்குப் பழக்கம் தான். நெய்வேலியில் இப்படி அடிக்கை நிகழும். வளரும் வயதில் இந்த அனுபவங்கள் ஏராளம்.

பள்ளி செல்லும் போது தினமும் திருமண் இட்டுக்கொண்டு செல்வது வழக்கம். வழியில் பல தரிதலைகள் விசில் அடிக்கும். பழகி விட்டதால் பல சமயம் கோபம் வருவதில்லை. வந்தாலும் ஒரு புண்ணாக்கு பயன் இல்லை என்பது வேறு விஷயம்.

ஒரு  முறை அப்பாவுடன் ஆவணி அவிட்டம் முடித்து சைக்கிளில் செல்லும்போது  ” டேய் பூணூல் பாருடா”, என்ற கத்தல் கேட்டு அப்பா சைக்கிளை நிறுத்தினார். ஒரு பார்வை தான். கேலி பேசிய இருவரையும் காணவில்லை.

இந்த நிகழ்வால் எனக்கு தைரியம் வந்தது. ஒரு முறை நெய்வேலி ஸ்டோர் ரோடு பிள்ளையார் கோவில் விழாவில் கலந்து கொள்ள சைக்கிளில் சென்றேன். நெய்வேலியின் அப்போதைய பிரதான வாஹனம் சைக்கிள் தான். எதிரில் வந்த ஒருவன் “டேய் ஐரே “, என்று கத்தினான். வயது பதினைந்து இருக்கும் எனக்கு., “டேய் ம..ரே “, என்று பதிலுக்குக் கத்திவிட்டு வேகமாக சைக்கிளை மிதித்தேன். உடம்பு ஒரு முறை அதிர்ந்தது. பக்கத்தில் அப்பா. அவர் அருகில் இருப்பதை உணராமல் கெட்ட வார்த்தை சொல்லிக் கத்திவிட்டேன். அப்பா இருவாரம் என்னுடன் பேசவில்லை.

ஆனால் என் தார்மீகக் கோபம் தணியவில்லை. அன்று முதல் வீட்டை விட்டுக் கிளம்பும் போது நன்றாகத் தெரியும்படி திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்டேன். வேண்டும் என்றே முகத்தை நெற்றி தெரியும்படி காட்டியபடி செல்வதை விரும்பி செய்தேன். பல முறைகள் “ஐரே .. ம..ரே” சவடால்கள் நடந்தன.அதில் ஒரு வெற்றிப் பெருமிதம் தான்.

ஆனால் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது என்னை விட வயதான ஒரு பையன் “எப்படி டா நாமம் போடறே ?” என்று கேட்டபடி உரசிச் சென்றான். விடவில்லை நான். துரத்தினேன். ஒருவழியாக அருகில் சென்று, ” இப்பிடித் தாண்டா “, என்று சைக்கிளால் அவன் சைக்கிளை மோதினேன். அவன் விழுந்தான். “ஏண்டா இடிச்சே?” என்று அழுதவாறு கேட்டான். எனக்குப் பாவமாகப் போய்விட்டது.அது முதல் கேலி பேசினால் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ளத் துவங்கினேன்.

கல்லூரியில் “ராகிங்” என்ற பெயரில் நடந்த அழுச்சாட்டியங்களில் ஒன்று ஒரு சீனியர்,” நீ இனிமேல் நாமம் போடக்கூடாது”, என்றது தான். மனதுக்குள் ஒரு அரசியலமைப்புச்சட்ட மேதை என்ற நினைப்பில், “Do you know the right to freedom of religion? It is one of the fundamental rights enshrined in the constitution“, என்று ஒரு முழு மூச்சில் முடித்தேன். ஓங்கி ஒரு அரை விழுந்தவுடன் சுய நினைவுக்கு வந்தேன். ஆனால் ஒரு எதிர்ப்பு காட்டவே தினமும் ஒற்றை நாமாம் ( ஸ்ரீ சூர்ணம் ) இட்டுக்கொள்ள மறந்ததில்லை.

இதில் விசேஷம் என் அப்பாவிற்கு “ஐயர் போறார் டா “, என்றால் கோபம் வரும். கேலி பேசுவதால் அல்ல. “என்னை ஒரு அய்யர்னு சொல்லிட்டானே”; என்று வருத்தப்படுவார். காரணம் தான் ஒரு தீவிர ஸ்ரீ வைஷ்ணவ ஐயங்கார். தன்னை ஒருவன் ஐயர் என்று சொல்லிவிட்டானே என்று ஒரு தார்மீகக் கோபம்.

இப்போதெல்லாம் இந்தியாவில் யாரும் இதற்குக் கேலி பேசுவதில்லை. யாருக்கும் இதற்கெல்லாம் நேரம் இல்லை. வேலை, பிழைப்பு என்று வந்த பிறகு இதிலெல்லாம் ஒரு நாட்டம் இல்லை யாருக்கும். அல்லது பா.ஜ.க.அரசு அமைந்த பின்னர் ஏற்பட்ட மாறுதலாகவும் இருக்கலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். ராமர் கோவில் இயக்கம் நடந்தபோது அதுவரை நெற்றிக்கு இட்டுக்கொள்ளாத பலரும் ஏதாவது இட்டுக்கொள்ளத் துவங்கியதைப்  பார்த்திருக்கிறேன். இதைப்பற்றியெல்லாம் கேலி பேசுவது பெரும்பாலும் வேலை இல்லாத திராவிடர் கழக ஆட்களாகவே இருக்கும்.

இதில் சில வேடிக்கைகள் உண்டு. சில அசடுகள் “, ஐரே ராமம் போற்றுக்கியா?” என்று கேட்டதுண்டு. பாவம். நான் ஐயரும் இல்லை. போட்டுக்கொள்வது ராமம் இல்லை நாமம் என்ற பகுத்தறிவுகூட இல்லாத நிலையில் இருப்பது ஒரு பரிதாபம்.

சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார் நாமம் ஏன் போட்டுக்கொள்கிறேன் என்று.

“என் சார், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ANTI VIRUS வைத்துக்கொள்வதில்லையா? அது போல் தான். யாரும் போடுவதற்கு முன்னால் நாமே போட்டுக்கொள்வது ஒரு பாதுகாப்பு தானே?” என்று சொன்னாலும் நாமம் போடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

இப்போதேல்லாம் நம் இளைஞர்கள் நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லை. “நீரில்லா நெற்றி பாழ்” என்று என் ஆசிரியர் கூறுவார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் “நீர்” என்பதற்கு “வேறு” பல அர்த்தங்கள் உள்ளன. அரசாங்கமே சில “நீர்” விற்பனைக் கடைகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண் பற்றிப் பேச வந்தவுடன் தென்கலை வடைகலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் அதைப்பற்றி ஏற்கெனவே வேறொரு பதிவில் சொல்லிவிட்டதால் இப்போது மறுபடியும் வேண்டாம். ஆனால் வடகலையை விட தென்கலைக் காரர்கள் கொஞ்சம் தடிமனாகவே திருமண் இட்டுக்கொள்கிறார்கள் என்பது என எண்ணம். தென்கலை சம்பிரதாயத்தின் மீதான பற்றாகவும் இருக்கலாம். வடகலையை வெறுப்பேற்றவும் இருக்கலாம். தெரியவில்லை.

ஒருமுறை ஜப்பானில் தோக்கியோ நகரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்த போது என் நிறுவனத் தலைவர் ( ஜப்பானியர் ) என்னைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார். “கோரே வா நான் தேசு கா?” ( இது என்ன? ) என்று நெற்றியைத் தொட்டுக்காட்டி க் கேட்டார். “அனோ இந்தோனோ கமிசமா னோ SYMBOL தேசு” ( இது இந்தியக் கடவுளின் சின்னம்” ) என்று எனக்குத் தெரிந்த ஜப்பானிய மொழியில் தடுமாறிச் சொன்னேன்.அது முதல் என் பெயர் “இந்தோனோ காமி சமா” ( இந்தியாவின் கடவுள் )  என்று வைத்துவிட்டார்.

மறுபடியும் சிங்கபூருக்கு வருவோம். ரயிலில் இருந்த தமிழ் இளைஞர்களை முறைத்துப் பார்த்தேனா? அவர்கள் இருவரும் அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டார்கள். இரு நிறுத்தங்கள் கழித்து இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் வேகமாக அடுத்த பெட்டியின் வாசலுக்குச் சென்று பார்த்தேன். அவர்களைக் கீழே இறக்கி டோஸ் விட எண்ணம். என்னைப் பார்த்தவுடன் அவர்கள் கூட்டத்தின் உள்ளே பதுங்கினார்கள். அவர்கள் பயந்து கொண்டது  தெரிந்தது.

அவர்களைக் கீழே இறக்கிப் போலீசில் சொன்னால் அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும். இது தமிழ் நாடு அல்ல எது நடந்தாலும் என்ன நடந்தாலும் போலீஸ் எல்லாம் முடிந்தபின் வருவதற்கும் மாமூல் வாங்கிச் செல்வதற்கும். பழைய பள்ளிப்பருவக் கோபங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை நாலு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது.

“பாவம் விட்டுடு டா. நம்மூர்ப்பசங்க மாதிரி தெரியறது. போனாப் போறது. தெரியாம சொல்லிருப்பாண்டா”, என்றார் அப்பா.

குரங்குகள் சண்டையிடுவதில்லை

மனித இனத்திற்கு முந்தைய பருவம் குரங்கு என்று நாம் அறிவோம். பகுத்தறிவு மிகுதியால் பரிணாம வளர்ச்சி காரணமாக மனிதனானான் என்று அறிகிறோம்.

குரங்குகள் தங்களுக்குள் பேசுவதற்கு ஒரு மொழி வைத்துள்ளன. அதே போல் ஓராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழி வைத்துள்ளன.

ஆனால் குரங்குகள் தங்களுக்குள் மொழி வேற்றுமையால் சண்டையிடுவதில்லை.அன்பு பரிமாற, உணவு வேண்ட, தத்தம் தொகுதி வரையறுக்க – இதற்கு மட்டுமே அவற்றிற்கு மொழி தேவைப் படுகிறது.

ஒரு குரங்கு இனம் ஒரு நாளும் பிறிதொரு குரங்கு இன மொழியைத் தாழ்த்திப் பேசியதில்ல்லை. மொழி காரணமாக வெறி  அடைவதில்லை.

குரங்கோ அல்லது மற்ற மிருகமோ தனது மொழி தான் உயர்ந்தது என்று மார் தட்டியதில்லை.

ஏன் என்றால் அவற்றிற்குப் பகுத்தறிவு இல்லை.

பகுத்தறிவு படைத்த மனிதன் அப்படி அல்ல.

முன்னேறிய வகுப்பினரன்  முதல் பின்னேறவே விரும்பும் வகுப்பினரன்  வரை மொழி, சம்பிரதாயம் முதலான தனது படைப்புகளைக் கொண்டே வேற்றுமைகளை உண்டாக்கி சண்டை போடுகிறான். தார் பூசிவிடுவதால் ஒரு மொழியை அழித்துவிட முடியும் என்று நம்புகிறான்.  மொழியின் தொன்மை குறித்து பெருமை அடைகிறான். அதனால் வெறி பிடித்து அலைகிறான்.

மொழி தவிர  மதம், இனம் , தோல் நிறம் என்று புதிது புதிதான காரணங்கள் கற்பித்து சண்டை போடுகிறான்.

ஏன் என்றால் மனிதன் பகுத்தறிவு படைத்தவன்.

மேலே சொன்ன கருத்துகள் மிகவும் முன்னேறிய வகுப்பினரான அந்தண  வைஷ்ணவர்கள் தங்களுக்குள் தென்கலை- வடகலை வேறுபாடு, ராமானுஜ தயாபாத்ரம் – ஸ்ரீ சைலேச தயா பாத்ரம், வடகலை க்குள் உள்ள வீராப்பு வேறுபாடு முதலான புண்ணாக்கு வேறுபாடுகள் பற்றின அல்ல.

திவ்யப் பிரபந்தத்தில் எந்தப் பாசுரம் தொடங்குவது, எந்த தொனியில், ராகத்தில் தொடங்குவது, எந்த ஆச்சாரியனை- குரு  பரம்பரையை முன்னிலைப்படுத்துவது , திருமண்ணை எந்த அகலத்தில் இட்டுக்கொள்வது, முதல் தீர்த்தம் யாருக்கு அளிப்பது என்று தற்கால மனித வாழ்வுக்கு ஆதாரமான பிரச்சினைகளை அலசும் ஐயங்கார் அறிவு ஜீவிகளைப் பற்றி நான் பேசவில்லை.

தயிர்வடை உசத்தியா, புளியோதரை உசத்தியா, அக்கார அடிசில் உசத்தியா என்ற ரீதியில் மட்டுமே வாதிடும் அளவுக்கு தத்துவ அறிவு படைத்து ஆனாலும்  எதுடா காரணம் சண்டை போட என்று  அலையும்  தற்கால ஐயங்கார்களைப் பற்றி இங்கு பேசி  குரங்குளை அவமானப் படுத்த விரும்பவில்லை.

நிஜமான குரங்குகளைப் பற்றி மட்டும் பேசுகிறேன். அவைகள் தங்களுக்குள் மேல் சொன்ன அற்ப காரணங்களுக்காக ஒரு போதும் சண்டை போடுவதில்லை.

%d bloggers like this: