கனம் கோர்ட்டார் அவர்களே..

எப்போதும் பூமி க்ருஹத்திலேயே உள்ள ஜஸ்டிஸ் ஸ்வாமிகள் சன்னிதியில் அனேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். க்ஷேமம். சமீபத்திய ஜட்ஜ்மெண்ட் சமாச்சாரத்தில் தேர்தல் கமிஷன் மட்டுமே காரணம் என்று வைதுள்ளீர்கள். ஆகவே, உங்களிடம் இன்ன பிற விஷயங்களையும் கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுகிறேன். எனக்கு எதற்கு வம்பு, இல்லையா?

சாத்துமுதில் புளி சேர்ப்பது நல்லதா? அல்லது ஜீரகம் மட்டும் இட்டு செய்யலாமா? எதில் வாசனை அதிகம் வரும்?அக்கார அடிசிலில் நாட்டுச் சர்க்கரை போடுகிறார்கள். வெல்லமும், பாலும், அன்னமும் மட்டுமே தானே போட வேண்டும்? இதைப் பற்றி ஏதாவது ஜட்ஜ்மெண்ட் இருக்குமா?

காஃபி என்கிற போர்வையில் கபசுரகுடி நீர் கொடுக்கிறார்கள். வித்யாசமே தெரிவதில்லை. இதற்கு ஏதாவது தடை உத்தரவு போட முடியுமா?

ரெம்டிசிவிர் கட்டுப்பாடு போன்று கபசுரப் பொடிக்கும் கட்டுப்பாடு விதித்து, வீட்டுக் கணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

ஆட்கொணர்வு மனு போல, பொருள் கொணர்வு மனு போட வழி உண்டா? ‘வீட்ல தான இருக்கீங்க. டிஃபன் எதுக்கு? நேரா சாப்பாடே சாப்பிடுங்க’ என்கிற கொடுமையில் இருந்து காக்க ‘டிஃபன் கொணர்வு மனு’ போட வழி உண்டா என்று சொல்லுங்கள் ஸ்வாமி.

தெவசத்திற்கு ப்ராம்மணார்த்திற்கு வருபவர்கள் காலை அலம்ப வேண்டுமா? தற்காலத்தில் அவர்களைக் குளுப்பாட்டவே வழி உண்டா? சானிடைசரில் ஆசமனம் பண்ணலாமா?

யாரெயெல்லாமோ என்னென்ன வேலை செய்யவில்லை என்பதைப் பார்த்துக் கருத்து சொல்கிறீர்கள். அதைப் போல, கீழ்க் கோர்ட்டுகளில் ஒரு சிவில் சூட் போட்டால் போட்டவனுக்கு தெவசம் வருகிறதே தவிர ஹியரிங் வருவதில்லை. போட்டவனின் மகனுக்கு தெவசம் முடிவதற்குள் கேஸ் முடிய வழி உண்டா என்று சொல்ல முடியுமா?

எலக்‌ஷன் கமிஷன் ஒரே நாளில் தேர்தல் நடத்தி உங்களின் பெருங்கோபத்திற்கு ஆளாகியுள்ளது. என்ன இருந்தாலும் 30 வருஷம் கேஸ் நடத்தி செத்துப் போனப்பறம் தீர்ப்பு சொன்ன உங்க பெருந்தன்மை கமிஷனுக்கு இல்லை தான்.

எல்லாரும் உங்களை மாதிரி ஆக முடியுமா என்ன?அதுவும் எப்படியான விசேஷம்? எம்.எல்.ஏ. வாக, தேர்தலில் நிற்கணும். தெருத்தெருவா சுத்தணும். செத்து சுண்ணாம்பு ஆனப்பூறம், மக்கள் தேர்ந்தெடுத்தா எம்.எல்.ஏ. அதுக்கப்புறம் முதல்வர் சொன்னா மந்திரி, இல்லேன்னா எந்திரி. கமிஷன்ல ஆஃபீஸரா ஆகணும்னா, பரீட்சை எழுதணும், பாஸ் பண்ணனும், 30 வருஷம் வேலை பார்த்து, கடைசில கமிஷன்ல வர்றதுக்கு வய்ப்பு இருக்கு. ஆனா, உங்களுக்கு அப்படியா? உங்கள்ள யார் நிதிபதின்னு நீங்களே சொல்லுவேள். அதைக் கேக்க முடியாது. அப்பறம் நீங்களே உங்களை அப்பாயிண்ட் பண்ணவாள கொறை சொல்லுவேள். இவ்வளவு இருந்தும், கோர்ட் வாசல்ல யாராவது தும்மினா கண்டப்ட் ஆஃப் கோர்ட்.

போகட்டும். லோகாயதமா பேசுவோம்.இன்னிக்கி ராத்திரி என்ன தளிகை பண்ணறது? ரவா உப்புமா, கொஸ்து பண்ணலாமா? கொரானாவுக்கு சரியா வருமா? இல்ல கொஸ்து பண்ணா பெந்தகொஸ்து கோச்சுப்பாளா?

என்னெழவோ உங்களப் பத்திப் பேசினாலே கொழர்றது.

‘என்ன கண்றாவி இது? கண்ட டிவியும் பார்க்காதேங்கோன்னா கேட்டதானே? கண்டதையும் பார்க்கறது, ராத்திரி தூக்கத்துல ஒளறவேண்டியது. ஹால்ல போய் படுங்கோ, தூங்க முடியல்ல’

வீட்டுக் கணவரைக் காக்க வழி உண்டா?

உங்களுக்கு உண்மையிலேயே ஒர்க் ஃப்ரம் ஹோம் கணவர்கள் மீது அக்கறை உண்டா? மேலே வாசியுங்கள்.

கொரோனா இரண்டாவது அலை வந்துள்ளது கஷ்டம் தான் பிராணவாயுவுக்கே ததிகிணத்தோம் தான். இந்த பயம் எல்லாம் இருக்கிறதுதான். இதையெல்லாம் விடப் பெரிய பயம் ஒன்று உண்டு. அதுதான் கபசுர பயம்.

காலை எழுந்தவுடன் அது காஃபியா அல்லது கபசுர நீரா என்று தெரியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது. ‘இது காஃபி தானா?’ என்று கேட்க பயம். ஒரு வேளை அது காஃபியாக இல்லாமல் கபசுரக் குடி நீராக இருந்தால் ‘உனக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு? நான் போடற காஃபி க.சு.கு.நீர் மாதிரியா இருக்கு? இந்த அழகுல பேப்பர் வேற’ என்று மோவாக்கட்டையை இடித்துக் கொண்டு சென்றால் என்ன செய்வது? காலை டிஃபனுக்குத் தாளம் போட வேண்டுமே என்கிற பயம் இருக்கிறது.

ஒரு வேளை அது நிஜமாகவே காஃபியாக இருந்து ‘இன்னிக்கி ஒரு நாளாவது க.சு.கு.நீர் வேண்டாமே? ரெண்டு ஊசி போட்டாச்சே’ என்று உளறிவிட்டால் என்ன செய்வது? மத்தியான தளிகை சாப்பாட்டுக்கும் பிரச்னை வந்துவிடும். வீட்டில் டிஃபன், சாப்பாடு இல்லை என்றால் வெளியில் செல்லவும் வழி இல்லை. முழு அடைப்பு என்று பிராணனை வாங்குகிறார்கள்.

இதாவது போகட்டும், மற்ற நேரங்களிலாவது நல்லதாகக் காஃபி சாப்பிடலாம் என்றால், இந்த வாட்ஸப் என்கிற வஸ்து வந்து சகலரின் கழுத்தையும் அறுக்கிறது. மாங்கொட்டை கறமிது, காயவைத்த மாங்காய்த் தோல் சாத்துமுது, புளியங்கொட்டைப் பொடி, கடுக்காய் துவையல், அத்தி வேர் கஷாயம், சபீனா சாம்பார், பவழமல்லி பச்சடி, பனை நுங்குத் தோல் கஷாயம், நெல்லி மரப்பட்டை சாதம், கோலப்பொடி ரஸம் என்று என்ன கண்றாவியையாவது யாராவது எழுதி அனுப்பிவிடுகிறார்கள். இந்த அழகில் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேறு. ஊரடங்கு. சாப்பிடவும் முடியாது. சாப்பிடாமல் இருக்கவும் வழி இல்லை. ஹவுஸ் ஹஸ்பண்ட் நிலை என்ன என்று யாருக்காவது கவலை உண்டா?

இதெல்லாம் முடிந்து ஒருவழியாக ராத்திரி சாப்பாட்டுக்கு உட்கார்ந்தால் ‘எதிராளாத்து மாமி சொன்னா. பிரண்டைத் துகையலையும், கொட்டாங்குச்சிப் பொடி பச்சடியும் சேர்த்து சாப்பிட்டா சளி, தும்மலே வராதாம்’ என்று புதியதாக ஒரு பிரம்மாஸ்திரம் வந்து இறங்குகிறது.

இப்போதெல்லாம் ஆக்ஸிஜனுக்குப் புதிய வழிகள் எல்லாமே கூட வாட்ஸப்பில் வருகிறது. என்னவோ திரிகுண பிராணாயாமம் என்று சொல்லி, முதுகை அஷ்ட கோணலாக வளைத்து, கையால் முதுகை வளைத்துச் சுற்றி வந்து வயிற்றைத் தொட்டவாறு மூன்று நிமிடம் மூச்சை இழுத்துப் பிடித்து வேகமாக வெளியிட்டால் உடல் தானே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொள்ளும் என்று யாரோ புண்ணியவான் எழுத, ‘இந்தட்சணம் பண்ணினாலே ஆச்சு, நீங்கதான் ஆர்ட் ஆஃப் லிவிங்ல பிராணாயாமம் எல்லாம் பண்றேளே’, இதையும் பண்ணிப் பாருங்கோ’ என்று மிரட்டி, முதுகுப் புறமாகச் சென்ற கையை மறுபடியும் எடுக்க முடியாமல் போய், பையன் வந்து கையைப் பிடித்து நார்மல் பொசிஷனில் விட வேண்டிய நிலையெல்லாம் ரொம்ப ஓவர்.

இவை தவிர அவ்வப்போது சிறூதானியப் பைத்தியம் பிடித்து ஆட்டி, கம்புக் களி, சிவப்பரிசிக் கஞ்சி, சோள உப்புமா, குதிரைவாலி பொங்கல், கேவுரு கூழ் என்று திடீர் திடீர் என்று மாறும் பெட்ரோல் விலை மாதிரி வந்து விழுகிறது. அவ்வப்போது இஞ்சி, மிளகு, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, வெட்டிவேர் பட்டை, பாகல் இலை என்று இரட்டை இலை தவிர எல்லா இலைகளையும் போட்டு அறைத்துக் கொதிக்கவைத்து ‘குடிச்சாலே ஆச்சு’ தலைகீழாக நின்று அடம் பிடித்தவளிடம் ‘இதுக்கு என்ன பேர்’ என்றால், ‘ இன்னும் வெக்கல. நீங்க சாப்ட்ட அப்பறம் என்ன நடக்கறதுன்னு பார்த்துண்டு புண்யாகவாசனம் பண்ணி பேர் வெக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களை எந்தச் சட்டத்தில் கொண்டுவருவது?

வாட்ஸப்பைப் பார்த்தோமா வேறு வேலைக்குப் போனோமா என்று இல்லாமல் இதென்ன சாப்பாட்டுப் பயங்கரவாதம்? நிஜமாகவே இதையெல்லாம் செய்து சாப்பிடுகிறார்களா என்ன? அவர்கள் வீட்டுக் கணவன்மார்கள் நிலையை நினைத்துக் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்.

‘போறுமே, குதிரைவாலி பொங்கல் + தேங்காய் நார் பச்சடி நன்னாயிருக்குன்னு சொன்னா போறாதோ? இதுக்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் விடணுமான்ன?’ என்று கேட்பவளை என்ன செய்வது?

இந்த விஷயங்களில் உங்கள் அனுபவம் என்ன? சொல்லுங்களேன். ஒர்க் ஃப்ரம் ஹோம் கணவர்களுக்குப் பயன்படும்.

%d bloggers like this: