கம்பன் பார்வைகள் – மலை, மழை கடவுளர்கள்

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை.

போங்க சார். ஆத்மாங்கறீங்க. உயிர் உள்ளதுக்கு மட்டும் இல்ல, உயிர் இல்லாததுக்கும் ஆத்மா இருக்குன்னு நம்பணும்கறீங்க. கொஞ்சம் கூட பகுத்தறிவா இல்லையே..

விசிட்டாத்வைதம் சொல்லும் ஜீவாத்ம, பரமாத்ம, ஜடப்பொருள் ஆகிய மூன்றும் உண்மைகளே என்பதை ஒப்புக்கொள்ள சிறிது பண்பாட்டுப் பயிற்சி தேவை. கம்பன் வழியில் முயன்று பார்ப்போம். 

கோசல நாட்டில் மழை வளம் எப்படி உள்ளது என்பதைக் கம்பன் சொல்வது : 

பம்பி மேகம் பரந்தது, பானுவால்

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;

அம்பின் ஆற்றதும் என்று அகன்குன்றின்மேல்

இம்பர் வாரி எழுந்தது போன்றதே

சிவபெருமானுக்கு மாமன் முறை கொண்ட இமயமலை, கதிரவனின் வெப்பக் கதிர்களால் அனல் போல் ஆனது என்று மேகங்கள் கருதின. எனவே இமயமலையைக் குளிர்விக்க எண்ணி, மலையின் மீது கடலைப் போல் விரிந்து நின்றன என்கிறான் கம்பன். 

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை. 

கங்கையைத் தலையில் கொண்டவன் சிவபெருமான். ஆகவே இமயமலை சிவபெருமானின் மாமனார் ( மாமன்) நிலை பெறுகிறது. 

மனைவி மீது உள்ள மோகத்தால், மருமகன் மாமனைத் தாங்கிப் பிடிப்பது என்கிற உலகியல் நிலையின் படி பார்த்தால், இமயமலை சூரியனின் வெப்பத்தால் உஷ்ணம் அடைவதைக் கண்ட மருமகன் சிவபெருமான், உடனே அதைத் தணிக்க எண்ணி இமய மலை மீது வெண்மேகங்கள் உருவில் கடல் போல் விரிந்தான் என்று வியாக்கியானம் விரிகிறது. 

உடல் முழுதும் வெண்ணீறு அணிந்தவன் சிவபெருமான். ஆகவே வெண்மேகங்கள் சிவனைக் குறிக்கின்றன. ஆனால், வெண்மேகங்களால் குளிர்விக்க இயலாது. அவை கரிய நிறம் உடையனவாக வேண்டும். அதாவது நீர் கொண்டனவாக இருக்க வேண்டும். நீர் உண்ட மேகங்கள்  கரிய நிறம் கொண்டு,  திருமாலின் நிறத்தை  ஒத்து நிற்கும். ‘கார் மேனிச் செங்கண்’ ,’ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து’ – ஆண்டாள் வரிகள் நினைவிற்கு வரலாம்.

அருள் மற்றும் வள்ளல் தன்மை மழை வடிவில் காட்டப்படுகிறது. கருமேகம் மழையாகப் பொழிந்தபின் இல்லாமல் ஆகும். தனக்கென நீரை வைத்துக் கொள்ளாமல் முழுவதும் கொட்டித் தீர்த்துவிடும். நாராயணன் அவ்வகையானவன் என்பதைக் குறிக்கும் விதமாக இருப்பதாக வியாக்கியானம்.

மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பதை ஆண்டாள் ‘ வாழ உலகினில் பெய்திடாய்’ என்று சொல்கிறாள். உலகம் உய்யுமாறு மழை வேண்டும் என்கிறாள் ‘ஆழி மழைக் கண்ணா’ பாசுரத்தில். 

அழிக்கும் கடவுள் சிவ பெருமான். அவன் மழையாகப் பொழியாத வெண்மேகமாக உள்ளான். காக்கும் கடவுள் திருமால். அவன் கரிய மேகமாகக் காட்டப்படுகிறான். 

ஆனால், மேகங்கள் ஒன்றே. அவை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு உருவம் கொள்கின்றன. வெண்மேகம் கரிய மேகமாக ஆகிறது. அவற்றைப் போன்றே, பரப்பிரும்மம் சிவபெருமான் உருவில் அழித்தல் தொழிலையும், திருமால் உருவில் காத்தல் தொழிலையும் செய்கின்றது. 

‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’ என்னும் ஆதி வாக்கியம் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்னும் ஆழ்வார் பாசுரத்தையும் இவ்விடத்தில் ஒப்பு நோக்கின் சுவை பெருகும். 

முதல் வரியை மீண்டும் வாசியுங்கள்.

கம்பன் பார்வைகள் – கவிஞர்களின் ஒருமித்த தரிசனம்

கம்பன் பார்வைகள் – கவிஞர்களின் ஒருமித்த தரிசனம்

கம்பர் ஆண்டாளின் திருப்பாவையை வாசித்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்டாளின் திருப்பாவை மட்டுமல்ல, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோரின் பாசுரங்களிலும் ஆழங்கால் பட்டவராகவே கம்பர் திகழ்கிறார். 

பால காண்டத்தின் ஆற்றுப் படலத்தில் இரண்டாவது பாடலைக் கவனியுங்கள். 

நீற ணிந்த கடவுள் நிறத்தவான் 

ஆற ணிந்து சென் றார்கலி மேய்ந்தகில்

சேற ணிந்த முலைத் திரு மங்கைதன்

வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே.

கோசல நாட்டில் உள்ள மேகம் என்ன செய்கிறது என்பதைக் கம்பர் சொல்வது:

மேகம் செம்மை நிறம் உடையதாக இருக்கிறதாம். அது, திருநீறு அணிந்த சிவபெருமானின் செம்மை நிறத்தைப் போன்று உள்ளதாம். அந்த மேகம், வான் வழியாகச் சென்று கடலை அடைந்து, அதன் நீரை முகர்ந்து கொள்கிறதாம். அவ்வாறு முகர்ந்தபின் அது கருமை நிறம் கொண்டதாக மாறி விடுகிறதாம். அது சந்தனத்தால் ஆன சேற்றைத் தனது தனங்களில் பூசிக்கொண்டுள்ள திருமகளைத் தன் மார்பில் கொண்ட நாராயணனின் நிறத்தை ஒத்திருக்கிறதாம்.

கம்பனின் இந்தப் பாடல் மூலம் கோசல நாட்டில் மழை வளம் மிகுந்து இருந்ததை நாம் உணர முடிகிறது. 

ஒரு மேகம் கடலில் இருந்து நீரை முகர்ந்துகொண்டு மழை பொழிவிக்கிறது என்பதை ஆண்டாளும் தன் பாசுரத்தில் சுட்டியுள்ளது நினைவிருக்கலாம். 

‘ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு, முகர்ந்து, கொடார்த்து ஏரி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்..’ 

இந்தப் பாசுரத்தில் ஆண்டாளும் மேகத்தை நாராயணனின் நிறத்துடன் ஒப்பிடுகிறாள். மழை உருவாகும் விதத்தையும் விவரிக்கிறாள். 

அறிவியல் கருத்து மட்டுமின்றி, உவமையும் ஒன்றாக இருப்பதை குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி உள்ள இந்த இரு பாடல்களும் உணர்த்துகின்றன. 

அன்னாளைய அறிவியல் அறிவு கவிஞர்களுக்கும் கூட இருந்ததை இதனால் உணர முடிகிறது. 

அது மட்டும் அல்லாமல், கவிஞர்கள் மனதில் இயற்கை நிகழ்வுகளில் கூட கடவுளர்களே  தென்பட்டுள்ளது தெரிகிறது. 

பாரதிதாசன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழு கடல் அவள் வண்ணமடா’ என்று உலகம் முழுவதும் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறான். பாரதி இன்னும் ஒரு படி மேலே சென்று ‘ தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா’ என்று தீயின் சூட்டிலும் இறை நிலையைக் காண்கிறான். இயற்கையும் தானும் ஒன்று என்று உணர்ந்த பரிபூரண அத்வைத நிலை இது.

இப்படியான மஹான்கள் நடந்து சென்ற மண் நம்முடைய பாரத மண் என்பதை நினைக்கையில் எழும் உணர்வெழுச்சிக்கு எல்லை உண்டோ ?

#கம்பன் #கம்பன்சுவை #தேரழுந்தூர் #கம்பராமாயணம்

கம்பர் விழா – தேரழுந்தூர் – அழைப்பிதழ்

ஜனவரி 7,8 தேரழுந்தூரில் நடைபெறும் கம்பர் விழா அழைப்பிதழ். அனைவரும் வருக.

சில ஆண்டுகளாக நடைபெறாமலும், நடந்தாலும் சிறிய அளவிலும் நடந்துவந்த தேரழுந்தூர் கம்பர் விழா நிகழும் சுகிருது ஆண்டு மார்கழி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் பெரிய அளவில் நடக்கவுள்ளது. ( ஜனவரி 7,8 சனி மற்றும் ஞாயிறு).

இடம் : தேரழுந்தூர் கம்பர் கோட்டம், சன்னிதித் தெரு, தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ் நாடு.

கம்பனில் ஆழ, அனைவரும் வருக.

ஜனவர் 7 & 8 2023 தேரழுந்தூர் கம்பர் விழா அழைப்பிதழ். கம்பர் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்.

பாழ்பட்டு நிற்கும் கம்பன் இல்லம்

தேரழுந்தூர் கம்பர் மேடு பகுதியில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த இல்லம் இருந்த இடம் த்ற்போது எப்படி உள்ளது ? சிந்திப்போம்.

தேரழுந்தூர் கம்பர் மேடு பகுதியில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த இல்லம் இருந்த இடம் த்ற்போது எப்படி உள்ளது ? சிந்திப்போம்.

ராமன்

‘பட்டையா நாமம் போட்ட பெரியவர் வந்திருக்காருங்க’ என்றாள் சுபா.
‘நம்மளத் தேடிக்கிட்டு யாரு?’ கவுண்டர் யோசனையில் ஆழ்ந்தார். #சிறுகதை #உண்மைநிகழ்வு #கம்பன் #கம்பராமாயணம் #அஹோபிலமடம்

‘என்னங், ஒங்கள தேடிக்கிட்டு நாமம் போட்ட பெரியவர் ஒருத்தரு வந்திருக்காருங்’ சுபா சொன்னாள்.

‘என்னையா? எப்ப வந்தாப்டி? ‘ மில்லில் ஒரு பஞ்சாயத்து. வேப்பம்புண்ணாக்கு வாங்கிச் சென்ற கம்பெனி பணம் அனுப்பவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையில் இருந்த குமாரக் கவுண்டர்  ஏறிட்டுப் பார்த்துக் கேட்டர்.

‘காலம்பற நீங்க மில்லுக்கு கெளம்பின சுருக்குல வந்துட்டாப்டி. ஊட்டு வாசல்லயே உக்காந்திருக்காப்டி. எளுவது வயசு இருக்கும்ங்’

‘சாப்ட எதாச்சும் குடுத்தியாம்ணி? ஐயரா’

‘ஐயரில்லீங். நாம பெருசா போட்டிருக்காங்க. அழுக்கு வேட்டி. ரண்டு நாளா சாப்டல்லியாம். இட்லி சாப்டறீங்களான்னேன். உங்கள பார்த்துப் பேசிப்புட்டு சாப்பிடறேன்னாங்க’ சுபா மூச்சிறைக்கப் பேசி முடித்தாள்.

‘அட கெரகமே. ரண்டு நாளா சாப்டல்லியா? டீத்தண்ணியாச்சும் குடுத்தியா?’ 

‘குளிச்சு, சாமி கும்புட்டுத்தான் டீயுங்கோட குடிப்பாங்களாம். அதான் உங்கள கூட்டிக்கிட்டுப் போக வந்தேனுங்’ 

‘இத பத்து நிமிஷத்துல வந்துடறேன். நீயி போயி சோறு ஆக்கி எல போட்டு வையி’.

 குமாரக் கவுண்டர் மனம் அல்லலில் திளைத்தது. ‘யாரா இருக்கும்? நாமம் போட்ட ஆளு இப்பத்தான் ரண்டு மாசம் முன்னாடி மெட்றாசுலேர்ந்து வந்து ஜீயர் பிருந்தாவனத்தப் பார்த்துட்டுப் போனாப்ல. ஆனா, வயசு எளுபது இல்லையே.’

‘வேப்பம்புண்ணாக்கு நம்முது செயற்கை ஒரம் எதுவும் இல்லாத வர்றதுங்க. நீங்க சொல்ற வெலைக்கு ரசாயன புண்ணாக்கு தான் கெடைக்கும். நம்முது நல்லதுன்னு விகடன்ல பேட்டியெல்லாம் பார்த்திருப்பீங்க இல்ல?’ பேசிக்கொண்டிருந்தாலும் நாமக்காரர் மட்டுமே மனம் முழுதும் வியாபித்திருந்தார். 

‘ஒண்ணு செய்யுங்க. அடுத்த வாரம் வாங்க, கட்டுப்படி ஆகுமான்னு பார்க்கறேன்’ என்று வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு  ஸ்பிளெண்டரில் கிளம்பினார் குமாரக் கவுண்டர்.

ஆள் சுமார் ஆறடி இருப்பார். மெல்லிய கரிய தேகம். நெற்றியை மறைக்கும் திருமண். 

‘ஆருங் நீங்க? எங்கிருந்து வர்றீங்க?’ 

‘ஆங்., இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்ன வந்தேன்’ 

‘காது கேக்கல்லீங்க. சத்தமாப் பேசுங்க’ சுபா சமிக்ஞை காண்பித்தாள். 

எத்தனை கத்திப் பேசியும் அவருக்குப் புரியவில்லை. 

‘தமிழ் படிக்க தெரியுமா?’ கவுண்டர் பேப்பரில் எழுதிக் காண்பித்தார்.

‘நல்லா தெரியும். காதுதான் கேக்காது’ பெரியவர் சொன்னார். கணீரென்ற குரல்.

‘எங்கிருந்து வரீங்க? என்னைய எப்பிடித் தெரியும்?’ மீண்டும் எழுத்து. 

‘விகடன்ல உங்க பேட்டிய படிச்சேன். உங்க நம்பர் கெடைச்சுது. பார்க்கணுமுன்னு தோணிச்சு. பார்க்க வந்தேன்’ ஏதோ உறவுக்காரர் போல் அண்மையில் பேசினார்.

கவுண்டருக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

‘சார், கம்ப ராமாயணத்துக்கு நல்ல உரை எதுங்க?’ இரண்டு மாதங்கள் முன்னர் சென்னையில் உள்ள என்னை அழைத்துக் கேட்டிருந்தார். 

‘அட, நீங்களும் கம்பனுக்குள்ள வந்துட்டீங்களா? நல்லது. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை நல்லது. உங்க மன நிலைக்கு ஏத்த மாதிரி இருக்கும். ஆமா, என்ன திடீர்னு?’ 

’24ம் பட்டம் அழகியசிங்கர் பிருந்தாவனத்த கண்டு பிடிச்சதுலேர்ந்து என்னவோ வைஷ்ணவ சம்பந்தமாவே இருக்குங்க. போன வருஷம் ஜீயர் வந்து ஆசீர்வாதம் செஞ்சாரு.  நீங்க வந்து பிருந்தாவனம் தரிசனம் பண்ணினீங்க. என்னமோ வைஷ்ணவ தொடர்பு ஏற்பட்டுக்கிட்டே இருக்கு’

கொக்கராயன் பேட்டையில் அஹோபில மடத்தின் 24ம் பட்டம் அழகியசிங்கரின் பிருந்தவனம் இருந்ததைக் குமாரக் கவுண்டரும் அவரது உறவினர்களும் கண்டுபிடித்து, அப்போது சிங்கப்பூரில் இருந்த என்னிடம் ‘என்னவோ நாமம் எல்லாம் இருக்குங்க. இது என்னன்னு பாருங்க’ என்று படங்களை அனுப்பியிருந்தனர். திருமண் அஹோபில மடத்தின் பாணியில் இருந்ததைக் கண்டு மடத்துடன் தொடர்புகொள்ளச் சொல்லியிருந்தேன். பின்னர் துரித கதியில் வேலைகள் நடந்து, கொக்கராயன் பேட்டையில் 1776ல் திருநாட்டை அலங்கரித்த 24ம் பட்டம் ஜீயரின் பிருந்தாவனம் புனருத்தரணம் செய்யபப்ட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் சென்று தரிசித்து வந்திருந்தேன்.

‘கம்ப ராமாயணம் புஸ்தகம் கேட்டீங்களே. என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?’ ஒரு மாதம் முன்னர் அவரிடம் கேட்டிருந்தேன்.

‘அதை ஏன் கேக்கறீங்க. இப்பல்லாம் தினமும் பாராயணம் பண்றேன். பொறவு தான் தெரிஞ்சுது, எங்க மூத்த அய்யா கம்ப ராமாயணம் வாசிச்சவராம். அவர் காலத்துல அதுலேர்ந்து கதையெல்லாம் சொல்லுவாராம்,’ என்றார்.

‘ஏதோ பூர்வ புண்ணிய வாசனை இல்லாம கம்பன் வர மாட்டானேன்னு நினைச்சேன்’ என்றேன்.     

‘இப்ப எதுக்கு என்னப் பார்க்க வந்திருக்கீங்க?’ குமாரக் கவுண்டர் பேப்பரில் எழுதிக் காட்டினார்.

‘ பார்க்கணும்னு தோணிச்சி, வந்தேன்’

‘என்ன விஷயமா?’ 

‘நீங்க எனக்கு வேலை கொடுங்க. நான் இங்கேயே தங்கிக்கறேன்’ 

’70 வயசுல வேலையெல்லாம் வேணாமுங்க. நீங்க வேண்டிய மட்டும் தங்கிக்கோங்க’ குமாரக் கவுண்டருக்கு இவரது பின்புலத்தை ஆராய வேண்டும் என்று தோன்றியது.

‘நீங்க மொதல்ல சாப்பிடுங்க. பொறவு பேசிக்கலாம்.’

‘குளிக்கணும். அப்புறம் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சொல்லணும். அப்பறம் தான் சாப்பாடு’ பெரியவர் தீர்மானமாகச் சொன்னார்.

‘இங்க கொஞ்சம் வரீங்களா? எனக்கு புஸ்தகம் வேணும்’ பெரியவரின் குரல். 

 தீர்த்தமாடி, திருமண் தரித்துக் கொண்டிருந்த பெரியவரைக் கண்ட குமாரக் கவுண்டர் பெருமாளின் விஸ்வரூபத்தைக் கண்டதை போல ஒரு சிலிர்ப்பை உணர்ந்தார்.

‘உங்களத்தானே, எனக்கு புஸ்தகம் வேணும்’ பெரியவர் மீண்டும்.

‘ஆங்.. என்ன புஸ்தகம்?’ தன் நினைவிற்கு வந்தவரான கவுண்டர் சைகை காண்பித்துக் கேட்டார்.

‘திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி புஸ்தகம் வெச்சிருந்தேன். காணல. உங்க வீட்டுல இருக்கா?’ 

ஏதோ தெய்வ உத்தரவு போல் தோன்ற குமரக்கவுண்டர் புஸ்தகம் வாங்கிவர ஆள் அனுப்பினார். ஈரோட்டில் பிரபந்தம் கிடைத்தது.

சாப்பிட்டு முடித்தபின் ஒரு தட்டில் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, ஒரு புது வேஷ்டி, அங்கவஸ்திரத்தையும் கொடுத்துப் பெரியவரை நமஸ்கரித்த கவுண்டர், ‘நமக்கு எந்தூருங்க?’ என்றார்.

‘விழுப்புரம் பக்கத்துல கிராமம். பல ஏக்கரா நஞ்சை உண்டு. எல்லாத்தையும் பையன் பேர்ல எளுதி வெச்சுட்டேன். மருமகளோட பிரச்னை. அதான், நாலு வருஷமா நூத்தியாறு திவ்ய தேசத்தையும் ரெண்டு தடவை பார்த்துட்டேன். அடுத்தது பரமபதம் தான். எப்பன்னு தெரியல’ 

தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து, கொக்கராயன் பேட்டை காவிரியில் குளித்து, திருமண் இட்டுக்கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் திருப்பாவை பாடுவது என்று ஒரு வாரம் கழிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் தனது விலாசத்தைக் கொடுக்க மறுத்த பெரியவர், வேறு எதுவும் பேசவில்லை. எப்போதும் பிரபந்தமும் கையாகவுமே இருந்தவர் குமாரக் கவுண்டரின் குழந்தகளுடன் மட்டும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். தனது பேரக் குழந்தைகளுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டார் போல.

வந்த எட்டாவது நாள் அவரது பிரபந்த புஸ்தகத்தில் ஒரு செல்ஃபோன் எண் போல் இருந்த இலக்கங்களைக் குமாரக் கவுண்டர் தொடர்புகொள்ள முயல, ‘ஆங், இப்ப எந்தூர்ல இருக்காரு? அப்பப்ப வீட்ட விட்டு ஓடிடுவார். எப்படியோ எதாவது வைஷ்ணவ கோவில்ல போய் உக்காந்துடுவார். யாராவது இப்பிடி கண்டு பிடிச்சு அனுப்புவாங்க,’ என்ற மருமகள், மறு நாள் டொயோட்டா இன்னோவாவில் வந்து சேர்ந்தார்.

‘அப்பா, வாங்க வீட்டுக்குப் போகலாம்’ என்று மருமகள் சொல்ல, ‘வந்துட்டியா? பெருமாள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டானே’ என்ற பெரியவரிடம் குமாரக் கவுண்டர் ‘சாமி, நீங்க வீட்ட விட்டு வெளில போகாதீங்க. எப்பவாவது வெளில போகணும்னு நினைச்சா, எனக்கு சொல்லி அனுப்புங்க. நான் வந்து அழைச்சுக்கிட்டு வரேன்’

வண்டியில் ஏறி அமர்ந்துகொண்ட பெரியவரைக் கும்பிட்டபடி நின்றிருந்த குமாரக் கவுண்டர் கை காட்ட, சுபா ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி வண்டியின் முன் சென்று காட்டினாள். 

வண்டி சென்ற பின் நெடு நேரம் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்த கவுண்டரிடம் சுபா ‘வந்தவரு பெரிய மனுஷர் போலைங்க. காருக்கு முன்னாடி நம்பர் பிளேட் இருக்குமில்லைங்க, அங்க ‘ராமசாமி ரெட்டியார், ஜமீந்தார்’னு எளுதியிருந்திச்சு’ என்றாள்.

‘சார், கம்ப ராமாயணம் படிக்கறேனான்னு ராமனே வந்து பார்த்துட்டுப் போனான்’ என்றார் குமாரக் கவுண்டர், தொலைபேசியில்.

கம்ப நாடன் கவிதை – இணைய வகுப்பு துவக்கம்

பெருந்தகையீர், வணக்கம்.

முன்னர் அறிவித்தபடி தொடர் கம்பராமாயண வகுப்புகள் இணையவழியில் துவங்கவுள்ளன.

மதுரை விரிவுரையாளர் முனைவர். ஜெகன்னாத் அவர்களின் தொடர் விரிவுரைக்குத் தங்களை அழைக்கிறேன்.

நாள் : ஆகஸ்டு 8, ஞாயிறு, ஆடி அமாவாசை அன்று.

நேரம் : இந்திய நேரம் காலை 11:30 மணி (சிங்கப்பூர் மதியம் 2:00 மணி)

காலம் : ஒரு மணி நேரம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு நிகழும்.

தேரழுந்தூரில் கம்பர்
விரிவுரையாளர் ஜெகன்னாத்

விரிவுரையாளரைப் பற்றிய சிறு குறிப்பு :

வைணவ சமய இலக்கியங்களை முறையாகப் பாடங்கேட்டவர்.

நாலாயிர திவ்யப் பிரபந்த உரைகளில் ஆய்வு மேற்கொண்டவர்.

தமிழ் இலக்கியங்களில் பயிற்சி உடையவர்.

கம்பன் பால் காதல் கொண்டவர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் குறித்தும் கம்பராமாயணக் காப்பியம் குறித்தும் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தொடர் சொற்பொழிவுகளும் ஆய்வுரைகளும் நிகழ்த்தி வருகிறார்.

ஜூம் செயலித் தொடர்பு: Meeting ID: 814 3198 0136 Passcode: 760422

கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்.

நன்றி

ஆமருவி தேவநாதன்

மாளிகையைக் காணவில்லை

தேரழுந்தூரின் வயலையும், நீர் வளத்தையும், அனல் ஓம்பும் அந்தணரையும், தேன் ஒழுகும் கூந்தலை உடைய பெண்டிரையும் கண்ட திருமங்கையாழ்வார் ஊரின் வீதியைக் காண்கிறார். மலைத்து நிற்கிறார்.

கரைகளை உடைய பெரிய கடல் போல் அகலமானவையாக உள்ளனவாம் வீதிகள். வீதிகளைக் கண்டு பிரமித்தவர் அவ்வீதிகளில் உள்ள வெள்ளையடிக்கப்பட்டு உயர்ந்து நிற்கும் மாளிகைகளைக் காண்கிறார். அவற்றின் உயரம் என்னவென்று அறிந்துகொள்ள மேலே அண்ணாந்து பார்க்கிறார்.

வெள்ளைவெளேரென்று வானம் தொட நிற்கும் மாளிகைகளின் உச்சியைக் காண இயலவில்லையாம். ஏன் என்று உற்று நோக்கினால் மாளிகைகளின் உச்சியில் கரும் புகை குடிகொண்டுள்ளதாம். அப்புகை மாளிகைகளின் உண்மையான உயரத்தை மறைக்கின்றதாம்.

எங்கிருந்து வருகிறது புகை? தேரழுந்தூரில் அந்தணர் வழங்கும் ஆகுதியின் புகையோ என்று எண்ணிப் பார்க்கையில் அப்போது மதிய வேளையாதலால் வேள்விகள் நிறைவுபெற்றுவிட்டன. எனவே வேள்விப் புகை அன்று. பின்னர் வேறென்ன புகையாக இருக்கும் என்று சற்று நடந்து சென்று பார்க்கிறார். வீதிகளை அடுத்த தோட்டத்தில் கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பதற்காக, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் ஆலைகள் உள்ளனவாம். புகை அங்கிருந்து வருகிறதாம்.

ஆலைகள் கொண்டு வெல்லம் தயாரிக்கும் அளவிற்குத் தேரழுந்தூரில் கரும்பு விளைச்சல் மிகுதியாக இருந்துள்ளது தெரிகிறது. அப்படிப்பட்ட ஊரில் குடிகொண்டுள்ள இறைவனைப் பற்றி ஆழ்வாரின் எண்ணம் விரிகிறது.

மாலை நேரம் ஆகிவிட்டதால் இன்ப உணர்ச்சிகள் மேலிடுகின்றன. ஆழ்வார் பரகால நாயகியாகத் தன்னைக் காண்கிறார்( நாயக நாயகி பாவம்). ஆமருவியப்பன் தன் அருகில் வந்து புன்முறுவல் பூப்பது போலவும், பின்னர் தன் அருகில் வந்து பஞ்சணையில் அமர்வது போலவும், அதன் பின்னர் பேரின்பத்தை அளிப்பது போலவும் எண்ணுகிறார். இதைப் போன்றே நம்மாழ்வாரும் பராங்குச நாயகியாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு பாசுரங்கள் பாடியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் வேளையில் அவளிடம் சொல்லிச் செல்ல வரும் போது அவளைச் சாந்தப்படுத்த என்னென்ன செய்வானோ, சொல்வானோ, அவை அனைத்தையும் ஆமருவியப்பன் செய்தான் என்பதாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் விரிகிறது. இவ்விடத்தில் திருக்குறளின் காமத்துப் பாலின் பல குறட்பாக்கள் ஒத்து வருகின்றன.

அழகிய அந்தப் பாசுரம் இதோ:

மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்

நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக்

கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,

ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே

Thirumangai

மேற்சொன்ன பாடலில் ‘என் நீலக் கண்கள் பனிமல்க’ என்று திருமங்கை மன்ன சொல்வது போல் உள்ளது சிறப்பு. திருமங்கையாழ்வாருக்கு ‘நீலன்’ என்கிற பெயரும் உண்டு.

அயோத்தியில் நடைபெற்ற செயல்கள் / தொழில்கள் யாவை என்பதைப் பின்வரும் பாடலில் கம்பன் சொல்கிறான்

அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,
நகரின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்

அயோத்தியிலும் கரும்பு ஆலைகள் இருந்தன, அதிலிருந்து நல்ல நறுமணத்துடன் புகை கிளம்பியது என்கிறான். தேரழுந்தூரில் இருந்த கரும்பு ஆலைகளை அயோத்தி மீது ஏற்றிப் பாடுகிறான் என்று கொள்ள இடமுண்டு. ஏனெனில், கம்பன் தேரழுந்தூர்வாசியன்றோ?

பட்டாபிஷேகம் யாருக்கு?

கம்பராமாயணத்தில் பட்டாபிஷேகம் யாருக்கு நடந்தது ?

‘அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி பற்ற
விரை செறி குழலி ஓங்க
வெண்ணை ஊர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி’

கவரி விசுவதைக் கூட விடாமல் சொல்லும் கம்பன், பட்டாபிஷேக நாயகன் இராமனை இப்பாடலில் குறிப்பிடவில்லை. பட்டாபிஷேகம் யாருக்கு என்று கூட குறிப்பிடவில்லை. ஏனெனில் பட்டாபிஷேகம் இராமனுக்கானது அல்ல. அது அறத்திற்கானது. அதனால் தான் இராமனைப் பற்றிக் குறிப்பிடாமல், அரியணையை, தருமத்தின் தனிமை தீர்த்தவனான அனுமன் தாங்குகிறான்.

ஆக, கம்பராமாயணத்தில் இறுதியில் நடக்கும் பட்டாபிஷேகம் அறத்திற்கான பட்டாபிஷேகம்.

பேரா.சொ.சொ.மீ. அவர்களின் சொற்பொழிவில் இந்த வாரம் கேட்டது.

வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

கம்பன் காட்டும் அளவுகோல்

இராமனுக்கும் அனுமனுக்கும் ஒரே அளவுகோல்.

இராமன் ஏகபத்தினி விரதன். எனவே இரு மாதர் நினைவு கூடாது. அனுமன் நைஷ்டிக பிரம்மச்சாரி. எனவே பெண் நினைவே கூடாது. தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள்.

கம்பராமாயணத்தில் –

‘நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்.. ‘ என்று அனுமனைப் பற்றி ஜாம்பவான் சொல்கிறார்.

‘இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும்தொடேன் ‘ என்று இராமன் சொன்னதை சீதை நினைவுபடுத்துகிறாள். அதுவும் அனுமனிடம்.

கருத்தெல்லாம் சொல்ல வரவில்லை. தினமும் காலையில் கம்பராமாயணத்தில் ஜாம்பவான் செய்த அனுமன் துதி சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லும்போது திடீரென்று இந்த ஒற்றுமை மனதில் தோனறியது. எழுதினேன். அவ்வளவுதான்.

விருப்பம் இருப்பவர்கள் ‘மேலை விரிஞ்சன் வீயினும்வீயா மிகை நாளிர்;’ என்று துவங்கும் கிஷ்கிந்தா காண்ட கம்பராமாயணப் பாடலைப் படித்துப்பாருங்கள். தமிழ் சும்மா துள்ளி விளையாடும். உங்களுக்கு #மகிழ்ச்சி ஏற்படும்.

பி.கு: என் பெரியப்பா அமரர்.முனைவர் இராமபத்திராச்சாரியார் தனது இராமாயண உபன்யாசங்களில் இந்தப் பாடலை அச்சடித்து விநியோகிப்பார். பிள்ளைகளுக்கு இப்பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்துவார். அப்படித்தான் நான் கற்றுக்கொண்டேன்.

#கம்பன்டா #மகிழ்ச்சி

கம்பனைப் பாடும் சிங்கைக் கண்ணன்

கண்ணன் சேஷாத்ரி
கண்ணன் சேஷாத்ரி

‘அருமா கடலமுதே’ என்ற ஆச்சரியமான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினார் கண்ணன் இன்று தனது கம்ப ராமாயணத தொடர் சொற்பொழிவில். மாதவி இலக்கிய மன்றத்தின் 50வது நிகழ்வில் இன்றைய கண்ணனின் சொற்பொழிவில் அருமையான பாசுர விளக்கங்களும் கம்பனின் சுவையுடன் சேர்ந்து அக்கார அடிசில் போல் அமைந்தது அவரது பேச்சு.

சிறுபுலியூர் என்னும் சோழ நாட்டுத் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள ‘கிருபாசமுத்திரப் பெருமாள்’ பற்றிய அந்தப் பாசுரம் இதுதான் :

கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே

‘குக தரிசனம்’ என்னும் தலைப்பில் கம்பன், வால்மீகி, ஆழ்வார்கள் மூவரும் குகன் இராமனைக் கண்டடைந்ததை எப்படிப் பார்த்தனர் என்று முக்கோணப் பார்வையில் விளக்கினார் கண்ணன்.

கடவுள் பற்றி நாகூர் ஹனீபாவின் பாடலையும் விட்டு வைக்கவில்லை அவர்.

ஒரு சில சுவையான பகுதிகள் பின்வருமாறு :

இறைவன் நம்மைக் காண்பதற்காக நாம் கோவிலுக்குச் செல்கிறோம். ஏனெனில் அவன் பால் சுரந்து தேங்கியுள்ள பசுவைப் போன்றவன். கன்று வந்து அருந்தாததால் .மடி நிறைந்த பாலுடன் பசு துன்புறுவது போல இறைவன் நமக்காக அருட்பாலுடன் காத்திருக்கிறான். கன்றாகிய நாம் அப்பாலை அருந்தினால் இறைவனுக்கு அதுதான் இன்பம். நமக்கும் தானே !

இராமனிடம் சரணாகதி அடைந்தவர்கள் மூவர். சுக்ரீவன் கிஷ்கிந்தைக்காகச் சரணடைந்தான். வீடணன் இராவணனிடமிருந்து தப்புவதற்காகச் சரணடைந்தான். பரிசாக இலங்கையைப் பெற்றான். ஆனால் எந்தப் பலனையும் எதிர்பாராமல் சரணாகதி அடைந்தவன் குகன் ஒருவனே. அதற்காக இராமன் அவனுக்கு ‘அலைகள் சூழுலகெலாம் உன்னுடையதே’ என்று இந்த உலகத்தையே அளித்தான்.

முடிவில் தனக்குத் தமிழார்வம் அளித்த தன் இளமைக்கால ஆசிரியர்களை நினைவுகூர்ந்து தனது குரு வணக்கத்தைத் தெரிவித்தார் கண்ணன். அந்தப் பண்பு அவரைக் காக்கும்.

இவர் வெகுதூரம் செல்லப்போகிறார். சிங்கையில் கம்பனைப் பற்றிப் பேசுவதே குறைவு. அவற்றுடன் ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பேசிய பாங்கு அருமை. ஒரு தேர்ந்த உபன்யாசகராக ஆவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிகின்றன.

குழந்தைகள் நடனம்
குழந்தைகள் நடனம்

கண்ணனைச் சிங்கைத் தமிழ் அமைப்புகள் சரியாகப் பயன் படுத்திக்கொள்ள அந்த அருமாகடலமுதன் அருள் செய்வானாக. மாதவி இலக்கிய மன்றத்தின் வழியாக இவ்வகையான நல்ல நிகழ்வை அளித்த அதன் தலைவர் திரு.கோவிந்தன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பானாக.

%d bloggers like this: