கம்பராமாயணம் சில பார்வைகள்.
பாலகாண்டம் ஆற்றுப் படலம். பாடல் 13.
ஒரு நூல் எழுதும் போது, அதன் தரிசனம், பார்வை, அது அளிக்கும் இலக்கு யாது என்பதை அதை எழுதுபவன் உணர்ந்திருக்க வேண்டும். கதையின் ஓட்டத்தில் அதை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். நாவல் வடிவில் இருந்தாலும், கிளைக்கதைகள் இருப்பினும், முதன்மைக் கதையின் தரிசனம் கெடாமல் இருக்க வேண்டும்.
அனேகமாக, அந்த மைய தரிசனம் கதையின் முதலில் வலியுறுத்தப்பட்டிருக்கும். ஏதோ ஒரு நிகழ்வின் மூலமாகவோ, அந்த மைய தரிசனத்திற்கு முரணான பார்வைகளின் மூலமாகவோ சொல்லப்பட்டு, அதன் பின்னர் அத்தரிசனம் நோக்கிய தள்ளல் இருந்திருக்கும்.
கம்பராமாயணத்தில் தன் கதையின் மைய ஓட்டத்தைக் கம்பன் பாலகண்டம் ஆற்றுப் படலத்தின் முதலாவது பாடலில் சொல்கிறான்.
பாடல் இதோ :
ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
13, ஆற்றுப்படலம், பால காண்டம், கம்ப ராமாயணம்
மனிதர்கள் தவறு செய்வதற்கு ஐம்புலன்கள் காரணம். ஐம்புலங்கள் வழியாக ஏற்படும் நுகர்ச்சி, அதீத ஆசைகள் என்பனவால் தவறுகள் நிகழ்கின்றன. ஆனால், கோசல நாட்டில் ஓடும் சரயு நதிக்கரையில் அவ்வாறு நிகழ்வதில்லையாம்.
மனிதர்களின் ஐம்புல நுகர்ச்சி வழியான குற்ற எண்ணங்கள் என்னும் அம்புகள் இல்லாததால் கோசல நாட்டில் வாழ்ந்த, குற்றமற்றவர்களும், அணிகலன்களை அணிந்தவர்களுமான பெண்கள் மீதான தவறான பார்வை இல்லாதவர்களாக ஆண்கள் வாழ்ந்தனர். அவ்வகையான எண்ணங்கள் யார்க்குமே இல்லை என்பதால், கோசல நாடே தடம் புரண்டு போகாத நிலையில் இருந்தது.
மக்களின் எண்ணங்கள் சரியாக இருக்குமெனில், நாட்டின் போக்கும் சரியாகவே இருக்கும்.
மக்களின் எண்ணங்கள் சரியாக இருந்ததெப்படி ?
பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்ட இராமன் பிறக்கப்போகிற நாடாக இருப்பதால், கோசல நாட்டின் நிலை ‘பூசலம்பு நெறியின் புறம் செலாக் கோசலம்’ என்கிறார் கம்பர். தசரதனுக்குப் பல மனைவியர் இருந்தனர் எனினும், கம்பன் இராமனையே தன் உதாரண புருஷனாகக் கொண்டு இராமாவதாரம் இயற்றினான் என்பதால், இராமனின் இரு-மாந்தரை-நோக்காக் கொள்கை கொண்டே இந்தப் பாடல் இயற்றினான் என்று கொள்ள வாய்ப்புள்ளது.
‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பதை ஒப்பு நோக்கலாம்.
ஐம்புலன்கள் வழியாகவே துன்பம், தீய எண்ணங்கள் தோன்றும், அவற்றில் இருந்து என்னைக் காப்பாற்று என்று திருமங்கையாழ்வாரும் சொல்கிறார்.
விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன்.
சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் தேரழுந்தூர் கம்பர் மேடு குறித்து ஓர் காணொளி வெளியிட்டிருந்தேன். கம்பர் மேட்டின் தற்போதைய நிலை, மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம், மாநில அரசு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த அளித்துள்ள கோடிகள், தமிழகத்தில் தமிழ் வாழ்ந்த, தேரழுந்தூரில் உள்ள கம்பர் வாழ்ந்த கம்பர் மேடு பகுதியின் சீரழிந்த நிலை என்று பலதையும் சொல்லி வருத்தப்பட்டிருந்தேன்.
நண்பர் கண்ணன் சேஷாத்ரி உடனே தொடர்பு கொண்டார். ‘இந்த ஆண்டு கம்பர் விழா செய்யலாமா, என்ன செய்யணும்?’ என்று கேட்டார். பெரும் பொருட்செலவு ஆகும் விஷயம் அது என்று அறிந்திருந்தேன். ஆதலால் சற்று தயக்கத்துடன் ‘பண்ணலாம். ஆனா..’ என்று பின்வாங்கிப் பேசியிருந்தேன்.
கண்ணன் புதுக்கோட்டை கம்பன் கழகத்தைத் தொடர்புகொண்டார். அதன் செயலர் திரு.சம்பத்குமார் அவர்கள் தேரழுந்தூர் கம்பர் கழகத்தின் ஜானகிராமனைத் தொடர்புகொண்டு இரு கழகங்களும் இணைந்து விழா செய்யலாமா என்று ஆராய்ந்தார்.
பின்னர் சம்பத்குமார், கண்ணன், பாரதி ( புதுகை கம்பன் கழகக் கூடுதல் செயலாளர் ) மூவரும் என்னுடன் கான்ஃபரன்ஸ் முறையில் பேசினர். ‘உங்க காணொளி பார்த்தேன். நீங்க என்ன செய்யணும்னு நினைக்கறீங்க?’ என்று வெளிப்படையாகவே கேட்டார் சம்பத்குமார்.
திடீரென்று 2023 ஜனவரி 7,8 வார இறுதி விடுமுறையில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.
பின்னர் பல தொலைபேசி காஃபரன்ஸ்கள். ஒருமுறை தேரழுந்தூர் சென்று இடங்களைப் பார்வையிடலாம் என்று முடிவானது. ஆனால், இரு பெரும் புயல்கள் வந்தன. பயணம் ஒத்திப்போடப்பட்டது.
நவம்பர் மாத இறுதியில் சம்பத்குமார் மற்றும் பாரதியுடன் தேரழுந்தூர் சென்றேன். கம்பர் மேடு, கம்பர் கோட்டம் முதலியனவற்றைக் கண்டு விழா எவ்விடத்தில், எங்ஙனம் நடத்துவது என்று எங்கள் வீட்டில் சந்தித்துப் பேசினோம். ஜானகிராமன் ஊரில் பெரிய விழா நடத்துவதில் உள்ள நிதர்சனச் சிக்கல்களைத் தெரியப்படுத்தினார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்கராசன் இருந்து ஆலோசனைகளை வழங்கினார். மயிலாடுதுறை தருமையாதீனக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் திருமது. முத்துலட்சுமி அவர்கள் கிராமத்தில் நடத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்களைச் சொல்லி நெறிப்படுத்தினார்.
பின்னர் விழா வேலைகள் மும்முரமாகத் துவங்கின. வாட்ஸாப் குழு துவங்கப்பட்டு, நாங்கள் ஐவரும் அடிக்கடி கலந்துரையாடினோம்.
யார் யாருக்கு என்னென்ன வேலைகள் என்பதைப் பகிர்ந்து கொண்டோம். என்னென்ன நிகழ்வுகள் இருக்க வேண்டும், அவற்றிற்குத் தகுதியானவர்கள் யாவர் என்பதைப் பலமுறை பேசி முடிவெடுத்தோம்.
நாங்கள் தேர்வு செய்த சிலர் வரமுடியாமல் ஆனதால் அழைப்பிதழ் அச்சடிக்கும் வேலை தடைப்பட்டது. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், வேலைகள் ஸ்தம்பித்தன.
அதே நேரம் சம்பத்குமார் அவர்கள் அயராமல் பணியாற்றி, மாற்றுப் பேச்சாளர்கள், விருந்தினர்கள் என்று கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதற்கிடையில் பணிச்சுமை, உறவினர் உடல் நலக் குறைவு என்று பல சிக்கல்கள்.
சிங்கப்பூரில் இருந்து ஜோதி மாணிக்கவாசகம், தி.ரா. வரதராஜன், கண்ணன், ராஜா ராமச்சந்திரன், அமெரிக்காவில் இருந்து கிருஷ்ணன் சேஷசாயி, சென்னை டிரேடிங் ராமமூர்த்தி, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் மற்றும் ‘கம்பன் பாக்களின் அடிமை’ என்று மட்டுமே தன்னைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கொடையாளர் உட்பட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். தேரழுந்தூர், மயிலாடுதுறை சார்ந்த பலரும் கொடையளித்துள்ளனர். நாஞ்சில் பாலு அவர்களின் பேருதவி மற்றும் உழைப்பு அளவிடற்கரியது.
ஜனவரி 5ம் தேதி அன்றே நான் கிளம்பித் தேரழுந்தூர் சென்றூவிட்டேன். களத்தில் ஜானகிராமன் அயராது ஓடிக்கொண்டிருந்தார். பஞ்சாயத்து ஒன்றியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மண்டப அலங்காரங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என்று அவர் பம்பரம் தோற்கும் விதமாகச் சுழன்று வேலை செய்துகொண்டிருந்தார்.
எல்லாவற்றின் பலனாக, முதல் நாள், ஜனவரி 7, ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பர் மூர்த்தி முன் ஒரு வழிபாட்டுடன் துவங்கியது. கோ பூஜையுடன் கம்ப ராமாயண நூல்களின் ஊர்வலமும் நடந்தேறியது. அதற்கு முன்னர் கம்பர் மேட்டில் சிறிய அளவிலான அஞ்சலி செய்தோம்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சுரேஷ் குமார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுவை முன்னாள் சபா நாயகர் சிவக்கொழுந்து, பேச்சாளர்கள் ஜடாயு, மை.பா.நாராயணன், முனைவர். கலியபெருமாள், ரா.சம்பத்குமார், புதுகை பாரதி, முத்துலட்சுமி பாலு, திருச்சி ரா. மாது, ஶ்ரீ.உ.வே. கோஸகன் பட்டாச்சாரியார், திரு.சிவகுமார் , பத்மா மோஹன்என்று பல அருமையான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்று இரண்டு நாட்களும் வெகு விமரிசையாகக் கம்பன் தன் ஊரில் திளைத்து மகிழ்ந்தான்.
தினமலர் நாளிதழ் நிகழ்வுகள் அனைத்தையும் இரண்டு நாட்களும் வெளியிட்டது. மெட்ராஸ்மிக்ஸ்சர் என்னும் நிறுவனம் நிகழ்வுகள் அனைத்தையும் பதிந்துள்ளது. விரைவில் காணொளியாகக் கிடைக்கும்.
விழாவில் தேரழுந்தூர் கம்பர் கழகத்துடன், புதுக்கோட்டை, புதுச்சேரி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருச்சி, சென்னை கம்பன் கழகங்கள் பங்கேற்று, விழா சிறப்பாக நடந்தேறியது.
மாயூரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் இந்தப் பதிவை எழுதுகிறேன். நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. ஆனால், நிகழ்வு உண்மை என்பதால் கம்பன் வானுலகில் இருந்து அருள் புரிந்துள்ளான் என்பதை உணர முடிகிறது.
விழா தொடர்பான காணொலி தயாரானவுடன் வெளியிடுகிறேன்.
விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன். அந்தப் படம் இதோ:
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு.
சென்ற வாரம் தேரழுந்தூர் சென்றிருந்தேன். கம்பர் வாழ்ந்த கம்பர் மேடு பகுதியிலும், கம்பர் கோட்டத்திலும் ஒரு காணொளி பதிவு செய்தேன். கண்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
எப்படியாவது சைவ வைஷ்ணவ ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்.
எப்படியாவது சிறுதெய்வம், பெருதெய்வம் என்று பிளவு படுத்திவிட வேண்டும் என்று விடாமல் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் இவை அனைத்தையும் புறந்தள்ளி, சனாதன தர்மத்தின் பல தெய்வங்களுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் உறவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது தேரழுந்தூர் எனும் வைணவ திவ்யதேசம்.
ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி அன்று தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் இருந்து தளிகை, பெருமாளின் வட்டிலில் புனித தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஆமருப்பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் அவ்வூரில் உள்ள கம்பர் வழிபட்ட விநாயகர் கோவிலுக்குச் செல்கிறார். அங்கு அவரே விநாயகருக்கு அபிஷேகம் செய்து, தளிகை நைவேத்யம் செய்கிறார். இந்தப் பழக்கம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒரு வழக்கம்.
அதை ஒட்டி, இன்று தேரழுந்தூரின் பெருமாள் கோவில் பட்டர் கம்பர் வழிபட்ட விநாயகருக்கு உரிய மரியாதைகளைச் செய்தார்.
கம்பர் வழிபட்ட விநாயகருக்கு மரியாதைகள்
ஒரு காலத்தில் மேள தாளத்துடன் நடைபெற்ற இந்த உற்சவம் தற்போதும் நடைபெறுகிறது.
இதைப் போன்றே, ஆமருவியப்பனின் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கும் முன் ஐயனார் குளத்திற்கு அருகில் எழுந்தருளியிருக்கும் ஐயனார் சுவாமிக்கு ஆமருவியப்பனின் காப்பு அனுப்பப்படும். ஐயனார் கையில் காப்பு ஏறியதும், ஐயனாரின் உற்சவ மூர்த்தி நான்கு வீதியும் எழுந்தருளி, பெருமாளின் உற்சவங்கள் நல்லவிதமாக நடைபெற மற்ற எல்லைக் காவல் தெய்வங்களிடம் விசாரித்து வருவது என்பது ஐதீகம். தற்போது ஐயனாரின் உற்சவர் திருமேனி பாதுகாப்பு கருதி திருவாரூரில் இருப்பதால், வீதிப் புறப்பாடு நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள்.
இதைப் போலவே, ஆண்டுதோறும் உற்சவங்களின் போது கடகடப்பைக் குளம் அருகில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோவிலுக்கும் புடவை, எண்ணெய், அரிசி முதியன ஆமருவியப்பனிடம் இருந்து செல்கிறது.
இதைத் தவிரவும், ஆண்டுதோறும், மாசிப் புனர்வசுவன்று ஆமருவியப்பன் ராமர் வேடம் பூண்டு அவ்வூரின் கிழக்கே எழுந்தருளியுள்ள வேதபுரீஸ்வரர் என்னும் பரமசிவனுக்குச் சேவை சாதிக்கும் உற்சவமும் இன்றளவும் நடைபெற்றுவருகிறது.
வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை தேரழுந்தூர் சென்று வாருங்கள். திருமங்கையாழ்வார் பாடிய ஆமருவியப்பனையும், திருஞானசம்பந்தர் பாடிய வேதபுரீஸ்வரரையும், கம்பர் வழிபட்ட காளி மற்றும் விநாயகரையும் தரிசித்து வாருங்கள்.
தேரழுந்தூரைத் தலை நகராகக் கொண்ட கம்ப நாட்டை அமைத்தே தீருவோம். கம்பருக்குத் தீங்கிழைத்த, தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட சோழ நாட்டின் மீது படை எடுப்போம். இதற்காகத் தேரழுந்தூரின் வடக்குவீதி அரசின் பிரதமர் ஆதரவையும், தேரழுந்தூர் சர்வமான்ய அக்ரஹார அரசின் ஜனாதிபதியின் ஆதரவையும் பெறத் தயங்க மாட்டோம்.
இவ்வளவு ஏன்? கும்பகோண அரசின் முதல் மந்திரியுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இனி கும்பகோணத்தின் படைகளுடன் சேர்ந்துகொண்டு, தஞ்சையை நோக்கித் தேரழுந்தூர்ப் படைகள் எந்நேரமும் முன்னேறும்.
கம்பன் என்றால் அவ்வளவு இளக்காரமா? கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற ஶ்ரீரங்கத்தில் எவ்வளவு எதிர்ப்பு? மறக்க மாட்டோம் அநீதியை. ஆழ்வார் பாசுரங்களைப் பாடலாமாம், கம்பன் எழுத்தைப் பாடக் கூடாதா? கம்பனும் இராமனைப் பற்றித்தானே பாடியுள்ளான்?
கம்பன் மீதுள்ள காழ்ப்பால் அவனது மகன் அம்பிகாபதியைச் சோழன் எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளான்? இதற்கெல்லாம் தீர்வு கம்ப நாடென்னும் தனி நாடு தான்.
என்ன கேட்டோம்? கம்பனின் பாடலை அங்கீகரிக்கச் சொன்னோம். தேரழுந்தூர் என்றால் இளக்காரமா? எங்களைக் கண்டால் தஞ்சை சோழப் பேரரசுக்கு அவ்வளவு இளக்காரமா?
இன்னும் என்ன கேட்டோம்? திருமங்கையாழ்வார் பாடலுக்கு நம்மாழ்வார் பாடலுக்கு உள்ள ஏற்றத்தைத் தாருங்கள் என்றோம். கொடுத்தார்களா சோழ அரச வஞ்சகர்கள்? பாண்டிய நாட்டின் நம்மாழ்வாருக்கும், பெரியாழ்வாருக்கும் உள்ள அந்தஸ்தை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுக்க மனம் இல்லையே உங்களுக்கு?
‘நாயக-நாயகி பாவ’த்தில் திருமங்கை ஆழ்வாரும் தான் பாடியிருக்கிறார். அதென்ன பாண்டிய நாட்டு ‘நாயக-நாயகி பாவ’ பாசுரங்களுக்கு மட்டும் ஏற்றம்? பராங்குச நாயகி என்றால் இங்கே பரகால நாயகி. வண்டு முதற்கொண்டு தூது விட்டுப் பாடியுள்ளார் திருமங்கை. ‘தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை’ பாசுரத்துக்கு ஈடாகுமா உங்கள் பாண்டியப் பாசுரங்கள்?
என்னதான் காரணம்?
ஏனென்றால், திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்ப்பக்கம். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்குறையலூர். என்ன இருந்தாலும் உங்களுக்கு வேற்று நாட்டுக் காரரின் பாசுரங்கள் தான் உசத்தி. அதனால் தானே பாண்டிய நாட்டுப் பெரியாழ்வாரையும், நம்மாழ்வாரையும் கொண்டாடுகிறீர்கள் ?
இதற்கு ஒரே தீர்வு தனி நாடு தான். கம்ப நாடு. இது கம்பனுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் குரல் கொடுக்கும் ஒரே தேசம்.
வெற்றி வேல், வீர வேல். படை எழுக, திரை விலக, கம்பன் புகழ் ஓங்க. போர், போர், தனி நாட்டுக்கான போர்.
‘பரத் ராம். அப்பா தூக்கத்துல ஏதோ உளர்றார பார். ஏஸி போடணுமா கேளூ. தமிழ் நாட்டுல கண்ட அசடுகளும் பேசறதெல்லாம் படிக்காதீங்கோன்னா கேட்டாதானே’
இன்று சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றக் கூட்டத்தில் ‘கம்பன் சொல்லும் செய்தி’ என்னும் தலைப்பில் பின்வரும் கருத்துக்களைப் பற்றிப் பேசினேன் :
‘கம்பன்’ பெயர்க் காரணங்கள்.
கம்பர் மேடு – என்ன ஆயிற்று.
கம்பன் இராம காதை எழுத வேண்டிய தேவை என்ன ?
கம்பன் திருவள்ளுவரை அடியொற்றி எழுதிய பாங்கு.
திருக்குறளிலும் கம்பனிலும் உள்ள கருத்தொற்றுமைகள்.
பின்னர் நண்பர் கண்ணன் சேஷாத்ரி தன் தொடர் கம்ப ராமாயண விரியுரையைத் தொடர்ந்தார். கங்கையின் பல பெயர்களை அறிந்துகொள்ள முடிந்தது. குலசேகர ஆழ்வார் இராமனுக்குப் பாடிய தாலாட்டுப் பாடலையும், கம்பன் திருமங்கை ஆழ்வாரிடமிருந்து எடுத்துக் கையாண்ட ‘வண்ணம்’ என்னும் சொல்லையும் பற்றி திரு.கண்ணன் பேசியது அருமை.
முனைவர் மன்னை.இராசகோபால் இரு உரைகளையும் பற்றிப் பேசினார். முன்னதாக தலைவர் என்.ஆர்.கோவிந்தன் துவங்கி வைத்துப் பேசினார்.
இந்த வாய்ப்பை அளித்த மாதவி இலக்கிய மன்றத்திற்கும் நண்பர் கண்ணனுக்கும், வந்திருந்து ஊக்குவித்த நண்பர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றிகள் கோடி.
வால்மீகியின் இராமாயணத்தை அப்படியே எழுதாமல் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒட்டி நாமெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்படி இராம காதை எழுதிய கம்பன் வாழ்ந்த இடத்தை கழிப்பிட மேடாக வைத்துள்ளது தமிழரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசுகளின் தலையில் குப்பைக் கிரீடம் வைத்தது போல் என்று எனக்குத் தோன்றியது.
மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று நினைத்திருந்தேன். அது இல்லை என்று ஆனது இந்த முறை. ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது தேரழுந்தூர். கம்பர் கோட்டத்தில் தனியாகக் கம்பர் நின்றிருந்தார். துணைக்கு ஒரு சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தத்ன.
1982ல் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட கம்பர் கோட்டம் இன்று திருமண மண்டபமாக மாறியுள்ளது. ‘கேளடி கண்மணி’யில் இருந்து பாடல் ஒலிக்க அதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் கம்பர். எம்.ஜி.ஆர். அரசு கம்பருக்குக் கோட்டம் அமைக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்த பழைய தமிழாசிரியர்களை நினைவு கூர்ந்தேன்.
1982-ல் இந்த இடம் இருந்த நிலை என்ன? என்ன படாடோபம், என்ன மேளச் சத்தம் ? கம்பருக்கு விழா எடுத்துப் பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவிதை வாசிப்புகள் என்று புலவர் கீரன், கி.வா.ஜ, செல்வகணபதி, புலவர்.இராமபத்திரன், மு.மு.இஸ்மாயில் என்று அன்று அணிவகுத்து கம்பரமுதம் அளித்த நிலை என் நினைவில் மீண்டும் தோன்றியது. அமர இடம் இல்லாமல் மக்கள் வீதிகளில் கூட நின்றிருந்தனர். இன்று நான் மட்டும், தனி ஒருவனாக வீதியில் நின்றவாறு கம்பன் சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அன்று மேடையில் பேசியவர்களும் அரூபமாக என்னுடன் நின்று கொண்டிருந்தார்களோ! இருக்கலாம். ஒரு முறை வந்தால் மீண்டும் வரச் செய்யும் ஈர்ப்பு கொண்டது தேரழுந்தூர்.
தனியான கம்பர் – கோட்டத்தில்
கம்பர் கோட்டத்தில் நிற்க மனமில்லாமல் ‘கம்பர் மேடு’ என்று அழைக்கப்பட்ட கம்பர் வாழ்ந்த இடம் நோக்கிப் பயணித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. ஏதாவது மாறி இருக்காதா என்கிற ஏக்கம். செல்லும் போதே மனம் ‘செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியது. கம்பர் மேட்டுக்கு எப்போது போனாலும் மனதில் ஒரு பெருத்த சோகம் ஏற்படும். இம்முறையாவது அப்படி இல்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் விரும்பியது.
நுழைய வேண்டிய சந்தை விட்டு விலகி அடுத்த சந்தில் நுழைய முற்பட்டேன். அங்கிருந்த அம்மாளிடம் கம்பர் மேடு போகும் வழி பற்றி விசாரித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர் முகவாயைத் தோளில் இடித்துச் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
கம்பர் மேடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இனி கம்பர் காடு என்று அழைக்கப்படலாம் என்று தோன்றியது. கட்டணம் வசூலிக்காத கழிப்பறையாக, பரிதாபமாக நின்றிருந்தது கம்பர் மேடு.
கம்பர் காடான மேடு
மாபெரும் இலக்கியமான கம்ப இராமாயணத்தை நமக்கு அளித்து, இராமனின் புகழ் பாட இன்றும் நமக்கு வாய்ப்பளித்த கம்பன் வாழ்ந்த இடம் இதுவே. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்ற போது இருந்ததை விட இப்போது ஒரே ஒரு முன்னேற்றம் – கம்பர் மேட்டைச் சுற்றி இரண்டடி அளவு சுவர் எழுப்பியுள்ளார்கள். அதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.
மூன்று வருடங்கள் முன்பு இருந்தது போலவே ஆடுகளும் நாய்களும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின் காலைக் கடன்கள் கழிப்பிடமாகக் கம்பர் மேடு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ‘கம்பன் என்னும் மானுடன் வாழ்ந்ததும்..’ என்று இறுமாந்து சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால் ரயிலில் தலையை விட்டிருப்பான்.
வெந்த புண்ணில் வேல்
காயத்தில் அவமதிப்பும் சேர்வது போல ‘இந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது- பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று உடைந்து போன பதாகை உள்ளது. இங்கே என்ன கட்டுப்பாடு செய்கிறார்கள், எதைப் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மனித மிருகக் கழிவுகளைப் பாதுகாக்கிறார்களோ!
நாய்களின் காவல்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை அரசு பல பெரிய வண்டிகளைக் கொண்டு வந்து இந்த மேட்டை அகழ்வாராய்ச்சி செய்துள்ளார்கள். இங்கிருந்து பல பழைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்று சில ஆண்டுகளுக்கு முன் காலமான 86 வயதான என் பாட்டி சொல்லியுள்ளார். அவரது சிறு வயதில் இவை நடந்தனவாம்.
கம்பர் மேடு பகுதிக்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்த நாய்கள் என்னை விரட்டி அடித்தன. கம்பன் வாழ்ந்த இடத்திற்குக் காவல் நாய்கள் தான் போல. ‘ஓ மனிதனே, நீ பாதுகாக்கிற அழகை விட நாங்கள் நன்றாகப் பாதுகாப்போம்,’ என்று அந்த நாய் கூறுவது போல் தோன்றியது.
வால்மீகியின் இராமாயணத்தை அப்படியே எழுதாமல் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒட்டி நாமெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்படி இராம காதை எழுதிய கம்பன் வாழ்ந்த இடத்தை கழிப்பிட மேடாக வைத்துள்ளது தமிழரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசுகளின் தலையில் குப்பைக் கிரீடம் வைத்தது போல் என்று எனக்குத் தோன்றியது.
மதுபானம் விற்கும் அரசும் சாதீயம் பேசும் எதிர்க்கட்சிகளும் உள்ள வரை கம்பர் மேடு இப்படி இருப்பதில் வியப்பில்லை தான். ‘மு.க’வில் முடியும் எந்தக் கட்சியும் இதனைச் சரி செய்யப் போவதில்லை. திருக்குறளை வளர்க்கப் பாடுபடும் பா.ஜ.க.வின் தருண் விஜய்யின் பார்வையாவது தேரழுந்தூரின் கம்பர் மேட்டின் மீது பட வேண்டுமே என்று ஆமருவியப்பனை வேண்டிக்கொண்டேன். கம்பர் மேட்டைப் பார்த்து அழுதுவிட்டு வெளியேறினேன். ஆமருவியப்பனின் தேர் வந்துகொண்டிருந்தது. நல்ல சகுனம் என்று தோன்றியது.
ஆமருவியப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று அதனை நோக்கி நடந்தேன். முதலில் ‘தர்ச புஷ்கரணி’ என்னும் குளம் நீர் நிரம்பிய நிலையில் பார்க்கவே பரவசமாக இருந்தது. இந்தக் குளம் இருந்த நிலை என்ன ? ஆடுகளும், சிறுவர்களும் விளையாடும் இடமாக, பாழ்பட்டு இருந்த இந்தக் குளம் இன்று நீர் நிரம்பி வழிவது காணக் கண் கோடி வேண்டும். இந்தக் குளம் இப்படி மாறுவதற்குக் காரணமான மூன்று முதியவர்களுக்கு நம் தலைமுறை பெரும் கடன் பட்டிருக்கிறது.
இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்று கோவில் நல்ல நிலையில் உள்ளது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற குட முழுக்கு நிகழ்விற்குப் பின் பக்தர்கள் வரவு அதிகரித்துள்ளது.
குளம் முன்னர் இருந்த நிலையும் இப்போது உள்ள நிலையும்.
குளம் தற்போதைய நிலை
திருக்குளம் 2008
குளம் மட்டுமா? கோவிலும் தான். பாழ்பட்டுப் போன கோவிலைத் தூக்கி நிறுத்திய அதே மூவர் நம் வணக்கத்துக்குரியவர்கள். கோவில் முன்னம் இருந்த நிலையும் தற்போது உள்ள நிலையும்.
செப்பனிடப்பட்ட கோவில்
பெருமாள் கோவில் முடித்து மாலை வேதபுரீசுவரர் கோவிலுக்குச் சென்றேன். எந்த மாற்றமும் இல்லாமல், வரலாற்று நிகழ்வுகளுக்குச் சான்றாக அதே அமைதியுடன் நின்றுகொண்டிருந்தது முதற்சோழர் காலக் கோவில். ‘கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்‘ என்னும் முந்தைய பதிவு இக்கோவில் பற்றி எழுதப்பட்டதே.
வரலாற்றின் சாட்சியாக நிற்கும் வேதபுரீசுவரர் கோவில்
பல ஆயிரங்கள் செலவிட்டு பாலி, ஹாங்காங் என்று விடுமுறை சுற்றுப் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. சில நூறுகளிலேயே நமது வரலாற்றை அறிய முடியும். ஒரு முறை சென்று வாருங்கள்.
உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.
மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின் கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.
இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை, சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.
அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம் நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.
உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .
பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது, இயற்கைக்கு முன் மனிதனின் ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.
ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில் சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.
‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம் அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.
ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கும் .
‘ஒரு மூன்றெழுத்துப் பெயர்ப் பெண் பற்றி ஒரு கவிஞர் சொன்னார் : ‘தீயவை யாவினும் சிறந்த தீயள்’. அதாவது அயோக்கியர்களிலேயே கடை நிலைப் பெண்பால் அயோக்கியர். அவளது பெயர் ‘சோ’-வில் துவங்கி ‘யா’-வில் முடியும், இடையில் உள்ளது ஒரு மெல்லின மெய்யெழுத்து என்றெல்லாம் கற்பனைக் குதிரையை யாரும் ஓட விட வேண்டாம். பாடப்பட்டவள் கைகேயி; கவிஞர் : கம்பர். இப்ப என்ன செய்வீங்க ?? #பகுத்தறிவு
இந்த முறை தேரழுந்தூர் சென்ற போது கவனிப்பாரற்ற பழைய சிலை ஏதாவது கிடைக்கிறதா என்று சற்று கண்களை அகல விரித்துக்கொண்டு பார்த்தேன்.
நல்ல பௌர்ணமி இரவு அது. கோவிலில் என்னையும் என் தம்பியையும் தவிர ஓரிருவரே இருந்தனர். அவனும் என்னைப்போல் ஒரு வரலாற்றுக் கிறுக்கன். பொழுது போகாவிட்டால் பழையாறை சென்று ஏதாவது சோழர்காலப் பள்ளிப்படை இருக்கிறதா என்று பார்த்து வருவான்.
பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு படி இறக்கத்தில் உள்ள பழைய கல் தூணில் இந்த மானுடனின் வடிவம் தென்பட்டது. நேராகப் பார்ர்க முடியாமல் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் விதமாக உள்ளது. தூணின் மிக அருகில் கைப்பிடிச் சுவர் ஒன்று கட்டியுள்ளதால் இந்தச் சிலை இருப்பது அதுவரை தெரியவில்லை.
முன்னம் பல முறை, அதே இடத்தில் அமர்ந்து ஆமருவியப்பன் கோவிலின் கட்டடக் கலையை வியந்து பேசியதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் மிக அருகில் இருந்த இந்தத் தூண் சிற்பம் கண்களில் படவில்லை.
கண்கள் மூடியிருப்பது போலும், கைகள் கூப்பி இருப்பது போலவும் தெரிகிறது இந்த வடிவத்தைப் பார்த்தால். உடலில் ஆபரணங்கள் அதிகம் இல்லை. ஆனால் முகத்தில் ஒரு பெரிய அமைதி தெரிகிறது. ஏதோ எல்லாவற்றையும் அறிந்து அதனால் வேறு எதுவும் வேண்டாம், இறை அனுபவம் மட்டுமே போதும் என்பது போன்ற ஒரு பேரமைதி இந்த ஆடவரது முகத்தில் தெரிகிறது.
இவர் யார் என்று விசாரித்தேன். அப்படி ஒரு தூண் சிற்பம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.
அவரது கைகளில் ஆயுதம் இல்லை. உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லை. அதிக ஆபரணங்கள் இல்லை. இடையிலும் பெரிய ஆடைகள் எல்லாம் இல்லை. ஒரு துண்டு போல் ஏதோ ஒன்றை அணிந்துள்ளார். கால் பாதங்கள் தெரியவில்லை. எனவே தண்டை முதலியன அணிந்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.
யாராக இருக்கலாம் இவர் ?
ஆமருவியப்பன் கோவில் கட்டிய யாராவது மன்னனாக இருக்கலாமா ? முதலாம் பராந்தக சோழன் கட்டியது என்று அறிகிறேன். ஆனால் அரசனுக்கு உரிய எந்த அலங்காரமும் இல்லை.
அரசன் ஏதாவது போரில் வெற்றி பெற உதவிய போர் வீரனாக இருக்கலாமோ ? ஆனால் ஆயுதங்கள் எதுவும் இல்லை.
அல்லது கோவிலை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்கும் வேலையில் தன் உயிர் இழந்த வீரனாக இருக்கலாமோ ?
அல்லது கோவிலை நல்ல முறையில் கட்டிய ஸ்தபதியாக இருக்கலாமோ ?
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இந்த ஊர்க்காரர் தான்.
கம்பர் இந்தக் கோவிலில் இருந்து தான் கம்ப இராமாயணம் எழுதியுள்ளார். எனவே அவனது உருவமாக இருக்குமோ ? இருக்கலாம். ஆனால் சற்று இளமையாகத் தெரிகிறது. ஆகவே இருக்க வாய்ப்பு குறைவு. அத்துடன் அவ்ருக்கும் அவரது மனைவிக்கும் தனியாக சன்னிதி உள்ளது. எனவே அவராக இருக்க முடியாது.
ஒருவேளை கம்பனின் மகன் அம்பிகாபதியாக இருக்கலாமோ ? சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்த அம்பிகாபதியாக இருக்கலாமோ ? ஆனால் அவனது உருவத்தை இந்தக் கோவிலில் வடிக்க வேண்டிய காரணமென்ன ?
ஒருவேளை அருகில் உள்ள பழையாறையில் இருந்த குந்தவை நாச்சியாரின் அபிமானம் பெற்ற சிற்ப வேலைக்காரராக இருக்கலாமோ ? குந்தவை தான் பல கோவில்களையும் கற்றளிகளாக மாற்றினாள். அவளது ஆசியுடன் இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்த சேனாதிபதி அல்லது ஊழியராக இருக்குமோ ?
இப்படிப் பலவாறு எண்ணிக்கொண்டிருந்தேன்.
அந்த இரவு அமைதியாக இருந்தது. நான் கல் தூண் சிலை முன் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.
எத்தனை ஆயிரம் தலைமுறைகள் இவர் கண் முன்னால் கடந்து சென்றிருக்கும் ?
எத்தனை செறுக்கு மாந்தர்கள் அழிவை இவர் பார்த்தபடி நின்றிருந்திருப்பார் ?
என்னைப் போல் இந்த ஆயிரம் வருடங்களில் எத்துணை பேர் இவரைப் பார்த்தும் பார்க்காமலும் சென்றிருப்பர் ?
இவர் செய்த தியாகம் என்னவோ ? கோவிலுக்கும் கலைக்கும் இவரது பங்களிப்பு என்னவோ ?
எந்த ஒரு பதிலும் பேசாமல் மௌனியாக இதுவரை கடந்து சென்றுள்ள வரலாறுகளுக்கும் வர இருக்கின்ற நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இவர் நின்றுகொண்டிருக்கிறார்.
எத்தனை நேரம் அவர் முன் நின்றிருப்பேன் என்று தெரியவில்லை.
‘இந்த ஆயிரம் ஆண்டுகளில் ஏதோ நீயாவது என்னைப் பற்றி நினைத்தாயே’, என்று அவர் நினைப்பது போல் உணர்ந்தேன்.
வெகு அருகில் யாரோ நன்றியுடன் பெருமூச்சு விடுவது போல் பட்டது.
திடீரென்று என் உடம்பு சில்லிட்டது போல் உணர்ந்தேன்.
சுற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. ஒரு வௌவால் மட்டும் பறந்து சென்றது.
வானில் நிலா மட்டும் காய்ந்துகொண்டிருந்தது. நிலா வெளியில் நானும் இந்தப் பெயர் தெரியாப் பெருமகனும் ஒரு மௌன சம்பாஷணை நிகழ்த்திக்கொண்டிருந்தோம்.
என் மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.
‘நீங்கள் யாரோ எவரோ. இத்தனை ஆண்டுகள் இந்தக் கோவில் எனும் கலைப் பொக்கிஷத்தைக் காவல் காத்தபடி நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீரே காவல் வீரர் ஆகுக. நீரே இதன் சிற்பி ஆகுக. நீரே இந்தப் பரந்த சோழ ராஜ்ஜியத்தின் காவலன் ஆகுக.
இத்தனை ஆண்டுகள் பத்திரமாகக் காத்திருந்து, காவல் இருந்து இந்த வரலாற்றுத் தொன்மத்தை எங்கள் தலைமுறை வரை காத்து வந்துள்ள உமக்கு எனது நன்றிகள்’.