உத்தராயணச் சிந்தனைகள்

இந்திய தேசியச் சிந்தனையாளர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நெடிய பதிவு.பொறுத்தருள்க.

இந்திய தேசியச் சிந்தனையாளர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நெடிய பதிவு.பொறுத்தருள்க.
 
சிங்கப்புரின் தந்தை அமரர் லீகுவான்யூ அவர்கள் ராஹுல் காந்தியிடம், ‘உன்னைச் சுற்றி உன்னைவிட அறிவுடையவர்களைக் கொண்டிரு’ என்று அறிவுறுத்தியிருந்ததாக ‘India Rising’ நூலையெழுதியவரும் Straits Times இதழின் இணைஆசிரியருமான ரவி வெள்ளுர் சொல்கிறார்.
 
ராகுல் காந்தி  அதைக் கேட்கவில்லையென்று தோன்றுகிறது.  இல்லையென்றால் துபாயில் இப்படிப் பேசியிருக்க மாட்டார்.
 
‘காந்தியடிகள் தான் அஹிம்சை முறையைக் கற்றுக் கொண்டது இஸ்லாம்,கிறித்தவம்,யூதம் முதலிய இந்தியத் தத்துவங்களில்   இருந்தே..’ 
 
தகவல் பிழைகள் இருக்கலாம்.ஆனால் அடிப்படையான பண்பாட்டு அறிவு சற்றும் அற்ற ஒருவரே இப்படி ஒரு பேச்சு எழுதிக்கொடுத்திருக்க முடியும்.
 
பவுத்தம்,ஜைனம் இவையெல்லாம் பாரதத்தில் தோன்றிய தரிசனங்கள் இல்லை. அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியானவையாக இருக்கலாம். திருக்குறளில் ‘கொல்லாமை’ என்னும் அதிகாரம் இல்லை.. .என்பதால் அப்படி எழுதிக் கொடுத்துவிட்டார்கள் போல.
 
‘வைஷ்ணவ ஜனதோதேனேகஹியே’ என்ற காந்தியடிகளின் பிரியமான பாட்டெழுதிய பதினைந்தாம் நூற்றாண்டு நரஸி மேத்தா
பாரஸீகக் கவிஞ்ரோ என்று தில்லி ஜவஹர்லால் பல்கலையில் விசாரித்துப் பார்க்க வேண்டுமோ என்னவோ. இந்தப் பாடலில் இருந்து அவர் அஹிம்சையைக் கற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல..
காங்கிரஸ் கட்சி அழிய வேண்டும் என்று நான் விரும்பவில்லை.தேசியக் கட்சிகள் அழிவது நல்லதன்று.ஆனால், ராஹுல் காந்தி இம்மாதிரி பிதற்றிக் கொண்டிருந்தால் அது நடந்துவிடும் போல் தோன்றுகிறது. தேர்தல் வெற்றிகள் ஒரு பொருட்டல்ல.
 
காங்கிரஸ் கட்சியில் படித்தவர்கள் சேர வேண்டும். இந்தியப் பண்பாடுகளில் ஊறியவர்கள் காங்கிரஸிலும் சென்று சேர வேண்டும்.ஒரு படி மேலேபோய் ‘Inflitration’ கூட பண்ண வேண்டும் என்று சொல்வேன்.ஒரேயடியாக JNUவாசிகள்,Doon Schoolவாசிகள் அதிகரித்துவிட்டதால் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு நாலாந்தர லெட்டர் பேட் கட்சிக்கும் வேறுபாடு தெரியாமல் போய்விட்டது.
இந்திய தேசிய சிந்தனாவாதிகள் காங்கிரசிற்குள் நுழைய வேண்டும். 1948 காங்கிரஸ் செயற்குழுவில் வல்லபாய் படேல் இதை வலியுறுத்துகிறார். RSS அங்கத்தினர்கள் காங்கிரஸில் சேர வேண்டும் என்கிறார் படேல்.  
 
அவர் சொல்கிறார் “In the Congress, those who are in power feel that by virtue of authority they will be able to crush the RSS. You cannot crush an organisation by using the danda [stick]. The danda is meant for thieves and dacoits. They are patriots who love their country. Only their trend of thought is diverted. They are to be won over by Congressmen with love.”
அவர் மேலும் சொல்வது “the only way for them(RSS) is to reform the Congress from within, if they think the Congress is going on the wrong path.”
 ஆனால் பண்டித நேருவின் முயற்சியால் இது வெற்றி பெறவில்லை.  பின்னர் இந்திய தேசியச் சிந்தனையாளர்களும், காங்கிரசும் இரு வேறு துருவங்களில் பயணித்தன. விளைவு : இன்று நம்மிடையே இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் எச்சம்.
 
காங்கிரஸ் கட்சி என்றாலே ஏதோ பிரிவினைவாதக் கட்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அதன் தமிழகத் தலைவர்கள் முயல்கிறார்கள் அல்லது பிரிவினை வாதிகளுடன் கூட்டுச் சேர்கிறார்கள். ஆ.ராஜா, ஸ்டாலின் இருவரும் பிரிவினையை ஆதரித்துச் சமீபத்தில் கூட
 பேசியுள்ளனர். அதே வேகத்தில் தில்லியின் காங்கிரஸ் கட்சித் தலைமையிடமும் கூட்டணி பற்றிப் பேசுகின்றனர்.
மத்தியத் தலைமைக்கு ஒத்து ஊதும் தலைவர்களாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர் என்பது புதிய தகவல் அன்று தான். ஆனால், உயர் பல்கலைகளில் உள்ள தேசியச் சிந்தனை உள்ள மாணாக்கர், பா.ஜ.க. பற்றிய நல்ல எண்ணம் கொண்டுள்ளது போல், காங்கிரஸ் பற்றியும் நல்லெண்ணம் கொள்ளுமளவிற்கு நல்லவர்கள் அக்கட்சியில் சேர வேண்டும்.  அப்போது தான் ராஹுல் காந்திக்கு நல்ல பேச்சு-எழுதுபவர்கள் கிடைப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி காப்பாற்றப் பட வேண்டும். தேச ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகள்,அமைப்புகள் காப்பாற்றப் பட வேண்டும். அது பாரத தேசத்திற்குச் செய்யும் சேவை. நாசகாரக் கம்யூனிஸ்டுகள், மக்களின் சாதீய உணர்ச்சிகளைத் தூண்டி அவற்றில் குளிர் காயும் புலிப் பணக் கட்சிகள், சினிமா நடிகர்களின் அமைப்புகள் என்பன தேசத்திற்கு நன்மை செய்ய வந்தவையன்று. 
 
சபரிமலை விஷயத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டும் இறுதியாகக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுள்ளன. காங்கிரஸின் இந்த நிலை  தேசத்தின் பண்பாட்டின் மீதுள்ள பக்தியால் ஏற்பட்ட விளைவு என்று எண்ணும் அளவிற்கு நான் அசடன் அல்லன்.
ஆனால், இரு கட்சிகளுமே பண்பாடு சார்ந்த ஒற்றுமையக் காக்கும் விஷயங்களில் ஒரே நிலைப்பாடு எடுக்க வேண்டும். அதற்குத் தேசியத்திலும், நமது பண்பாட்டுக் கூறுகளிலும் தேர்ச்சியும் நம்பிக்கையும் பெற்ற ஊழியர்கள் / தொண்டர்கள் / தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வேண்டும்.
ஒற்றை வரியில் சொல்வதானால் : ஆண்டாள் பற்றி ஒரு மன நலம் குன்றியவர் பேசிய போது முதலில் வீதிக்கு வந்து போராடுபவர்களாக, ஆண்டாளுக்காகக் குரல் கொடுப்பவர்களாகக் காங்கிரஸார் இருக்க வேண்டும். தற்போது Utopia போல் தோன்றலாம். ஆனால் பக்தவத்சலம் / காமராஜ் / ராஜாஜி முதலானோரின் ஆட்சிக் காலத்தில் இருந்த காங்கிரஸ் இவ்வாறு செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சுருக்கமாக: வல்லபாய் படேலின் கனவு நனவாக வேண்டும்.
வலுவான பா.ஜ.க., அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் அதே பலம் பொருந்திய,  தேசியச் சிந்தனை கொண்டவர்கள் உள்ள காங்கிரஸ் என்று இரு தூண்களின் மேல் பாரதம் உயர்ந்து நிற்க வேண்டும்.
 
வந்தேமாதரம்.
 
பி.கு.: இது தேச நலன் தொடர்பான பதிவு. கட்சிச் சார்பு / சாய்வு எதுவும் இல்லாமல் படிக்கவும். கிண்டல் / நக்கல் செய்பவர்கள் வேறு பாத்திரக் கடைக்குப் போகலாம்.

ராகுல் காந்திக்கு சில சனி தோஷ பரிகாரங்கள்

captஏழரை சனி, அஷ்டமத்து சனி என்று சனி பல வகைப்படும். இதில் ஏதாவது ஒன்று வந்து நம்மை எட்டிப் பார்த்தாலே நம் கதி அதோகதி தான். முழுசாகக் கூட பார்க்க வேண்டாம். ஒன்றரைக் கண் பார்வையை போதுமானது. நாம் சைக்கிளில் போனாலே ஹெல்மட் போடாத வழக்கு வந்து சேரும். அவ்வளவு சக்தி அந்த சர்வ வல்லமை பொருந்திய சனி பகவானுக்கு உண்டு.

அப்படியாகப்பட்ட சனி பகவானின் பார்வையின் தீக்ஷண்யம் இவ்வாறு இருக்க, இந்த சனி பகவானின் பல உருவங்களும் ஒரு சேர நம்மைப் பார்த்தால் ? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அல்லவா ?

அப்படிப்பட்ட சூழலில் உள்ளவர் தான் திருவாளர் ராகுல் காந்தி. பல வகைப்பட்ட சனி கிரகங்கள் ஒரு சேர அவரைப் பார்க்கின்றன.

இவரைப் பார்க்கும் சனிக் கிரகங்கள் என்ன ? அதற்கான பரிகாரங்கள் என்ன ?

முதலாமவர் மணி சங்கர் ஐயர். இவரால் அனுகூலம் என்பது ஒரு கடுகளவு கூட என்றைக்கும் இருந்ததில்லை. இவரை நாம் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இவரது பார்வை ஒரு துளி கூட நம் மீது படாமல் இழுத்துப் போர்த்திக்கொண்டு இருக்க வேண்டும். இவரது பழைய தொகுதியான மயிலாடுதுறையை இவர் சிங்கப்பூராக மாற்றியமைத்த விந்தையை இன்னும் அந்த ஊர் மக்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சர்வ சக்திகளின் இருப்பிடமான இந்த சனி பகவான் திறந்த வாய் மூட மாட்டார்.  ஒவ்வொரு முறை இவர் வாய் திறந்தாலும் ஒரே களேபரம் தான். அவருக்கு அல்ல. அவரது கட்சிக்கு.  சமீபத்தில் ‘சாய் வாலா’ – ‘தேனீர் விற்பவர்’ என்று மோதியை இவர் போற்றிப் புகழ்ந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவிருந்த ஒரு சில தேனீர் கடைக்காரர்களும் இப்போது மோதி பக்கம் சென்றுவிட்டனர் – ‘ஓஹோ, மோதி நம்ம ஆளு போல’ என்று நினைத்துக்கொண்டு.

பரிகாரம் : மணி சங்கரரை ஆப்கானிஸ்தானுக்குத் தூதராக அனுப்பலாம். தாலிபான்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க ஒரே வழி இது தான். (ஒபாமா கவனிப்பாராக).

திக் விஜை சிங் : இந்த சனி பகவான் தற்போது சற்று வீரியம் குறைந்து காணப்படுகிறார். மணி சங்கர சனி பகவானின் தீக்ஷண்யம் சற்று அதிகமாக இருப்பதால் இவரது சக்தி கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது. இருந்தாலும் இவர் சாதரணமானவர் அல்லர். இவரது வீரியம் வாய் வழியாக அவ்வப்போது வெளிப்பட்டு,காங்கிரஸின் வாய்ப்பைப் பாதிக்கும். சமீபத்தில் உ.பி.யில் இந்த சனி பகவான் ராகுலின் கூடவே இருந்து பெரிய பள்ளம் தோண்டினார். பள்ளம் தோண்டும் கலையில் சாமர்த்தியர் இந்த சனி பகவான்.

பரிகாரம் : இலங்கைக்கு இந்திய தூதராக இவரை அனுப்பலாம். அல்லது இரண்டு வருடம் இலங்கை அரசிற்கு இவரைக் கடன் கொடுக்கலாம். இராஜபஷே இந்து மகா சமுத்திரத்தில் தானாகவே மூழ்கினார் என்று விரைவில் செய்தி வந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். திக் விஜையாரது பராக்கிரமம் அவ்வளவு பெரியது. ராகுல் கவனிப்பாராக.

ப.சிதம்பரம் : இந்த சனீஸ்வரர் எது சொன்னாலும் தீமையே பயக்கும். இவருக்கு அனுகூலப் பார்வை என்று ஒன்று இல்லவே இல்லை. உதாரணமாக ‘பங்குச் சந்தை நன்றாக உள்ளது’  என்று அவர் சொன்னால் அதே தினம் வரலாறு காணாத வீழ்ச்சி பங்குச்சந்தையில் ஏற்படும். ‘இந்தியப் பொருளாதாரம் மேலே உயர்கிறது’ என்று இவர் சொன்னால் அன்றே உலக வங்கி இந்தியாவைப் பற்றி அபாயகரமான ஒரு செய்தியை வெளியிடும். அவ்வளவு வாக்கு சக்தி இவருக்கு ( வாக்கு என்றதும் நினைவுக்கு வருகிறது – இவர் நிற்கும் தேர்தல்கள் இரண்டு முறை வாக்குகள் எண்ண வேண்டும்).

பரிகாரம் : சீனாவிற்கு ‘பொருளாதார’ அறிவுரை கூற இவரை அனுப்பலாம். சீனாவை அடக்க இதை விட்டால் வேறு வழி இல்லை. ஒரு மாததில் சீனா கடன் கேட்டு இந்தியாவிடம் கை ஏந்தும் நிலைக்குக் கொண்டு வந்து விடுவார் இந்த சனி பகவான்.

சஷி தரூர் – இந்த சனி பகவான் நல்லவர். சொந்த சோகங்கள் இவரை வாட்டுன்றன. ஆனால் இவரும் வாக்கு ஸ்தானத்தில் பலம் பொருந்தியவர். எனவே கொஞ்ச நாளைக்கு இவரால் கஷ்டம் இல்லை. அதே சமயம் பலனும் இல்லை.

பரிகாரம் : மீண்டும் ஐக்கிய நாடுகள் சபைக்கே அனுப்பி விடலாம். சத்தம் கொஞ்சம் குறையும்.

வீர்ப்ப மொய்லி : இந்த சனி பகவான் சொன்னால் தான் செய்வார். நல்லவர் தான். ஆனால் ரொம்பவும் அழுச்சாட்டியம் செய்து பின்னர் ஒத்துக்கொள்வார். இவரால் பயன் இல்லை. ஆனால் உபத்திரவங்கள் ரொம்பவும் அதிகம். ‘ரிலையன்ஸ்’ என்று எங்கே எழுதி இருந்தாலும் அங்கே அவரைப் பார்க்கலாம்.

பரிகாரம் : வட கொரியா அனுப்பலாம். வேலையும் இருக்காது; பேசுவதற்கும் வாய்பில்லை.

ரேணுகா சௌதிரி – இவர் பெண்பால் சனி பகவான். ரொம்ப பராக்கிரமம் பொருந்தியவர். பேசிப் பேசியே சாவடிப்பார். ஆனால் கடைசிவரை நம்மை ஆதரித்துப் பேசுகிறாரா, எதிர்க்கிறாரா என்றே தெரியாது. ஆனால் பேசிக்கொண்டே இருப்பார். அடிக்கடி சிரிப்பார். காரணம் தெரியாது ( அவருக்கும் )

பரிகாரம் : தமிழ் நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கலாம். காங்கிரசின் பல கோஷ்டிகள் வேஷ்டியைக் கிழித்துக்கொண்டு சண்டை போடும் போது இவர் இருப்பதால் குறைந்தபட்சம் வேஷ்டியாவது கிழியாமல் இருக்கும். மேலும் இவர் சென்னைக்கு வந்து ‘சத்திய மூர்த்தி பவனில்’ பேசத் துவங்கினால் வேறு யாரும் பேச முடியாது. வாசன் கோஷ்டி, தங்க பாலு கோஷ்டி,  சிதம்பரம் கோஷ்டி, கார்த்தி கோஷ்டி, கலைஞர் கோஷ்டி ( ஆம் இருப்பதிலேயே கலைஞர் கோஷ்டி தான் பெரியது) என்று பல கோஷ்டிகள் இருப்பதால் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சோனியாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடவேண்டிய ஒரு தேசியக் கடமை இருப்பதால் ரேணுகா சனி அம்மையார் தான் சரியான தேர்வாக இருப்பார்.

கபில் சிபல் – இந்த சனி பகவானாரும் வாக்கிற்கு ( பேச்சு ) அதிபதி. இவரால் பேசாமல் இருக்கவே முடியாது. பல் தேய்க்க வாய் திறந்தாலே பேசத் துவங்கிவிடுவார். ஆனால் எப்பொழுதும் ‘ஜீரோ’, ‘ஜீரோ’ என்று ஒரு மந்திரம் மாதிரி சொல்லிக்கொண்டிருப்பார். தற்போது கூட 62,000 கோடி என்பது வெறும் ‘ஜீரோ’ என்று கண்டுபிடித்தார். உலகமே வியந்தது.

பரிகாரம் : பல பஞ்சாங்கங்களையும் தேடிவிட்டேன். பரிகாரம் தெரியவில்லை.

இவ்வளவு சனி பகவாங்கள் இருந்தாலும் ராகுல் தினமும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதால் அந்த சனி தோஷமும் அவருக்கு தினமும் ஏற்படுகிறது. எனவே அவர் கண்ணாடி பார்க்காமல் இருப்பது நல்லது. ‘சொந்த சனி’க்குப் பரிகாரம் இல்லை என்று பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது.

இதன் பிறகு ‘தாய் சனி’, ‘மாப்பிள்ளை சனி’ என்று இரண்டு சனி பகவாங்கள் உள்ளனர். இவற்றின் செயல்பாடுகள் வெளியில் தெரியாது. ஆனால் சிறிது காலம் கழித்து பலன்கள் தெரிய வரும். இவற்றிற்கும் பரிகாரம் இல்லை. இவை அஷ்டமத்து சனிகள். காலைச் சுற்றிய பாம்புகள் மாதிரி கடிக்காமல் விடாது.

ஆனால் இவ்வளவு சனிதோஷங்கள் இருந்தாலும், அவரை ஒன்றும் செய்யாதபடி இருக்க ஒரு சர்வ சனி தோஷ நிவாரண மந்த்ரம் ஒன்று உள்ளது. இதனை தினமும் மூன்று முறை மனம் ஒன்றி ஜபித்தால் இரண்டு மாதத்தில் பலன் தெரியும்.

“சனீஸ்வராய வித்மஹே சகல கஷ்டாய தீமஹே

தன்னோ விஜய காந்தப் ப்ரசோ தயா ஆது”

இந்த மந்திரத்தைப் பராயணம் பண்ணும்போது நாக்கை மடித்துக் கொண்டு செய்ய வேண்டும். அதே சமயம், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், முஷ்டியை உயர்த்திக்கொண்டும் இருக்க வேண்டும்.அது ரொம்பவும் முக்கியம்.

%d bloggers like this: