காஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்

காஞ்சி காமகோடி பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததா? அது கும்பகோண மடமா? ஆதி சங்கரர் சித்தியடைந்தது எங்கே? என்று பல கேள்விகளுக்கும் ஆதாரபூர்வமான விடை இந்த நூல். #bookreview

‘காமகோடி பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்தே; அதன் முதல் பீடாதிபதியும் அவரே; கி.மு.480ல் அவர் பதவி ஏற்றார்; அன்றுதொட்டு இன்று வரை காஞ்சி காமகோடி பீடம் தொடர்ச் சங்கிலியாய் 2000 ஆண்டுகளாகப் பீடாதிபதிகளைக் கொண்டுள்ளது; ஆனால் சிருங்கேரி மடம் அப்படிப்பட்டதன்று’  என்பதை நிறுவ முயன்று வெற்றியும் பெற்றுள்ளார் ஆசிரியர் வித்துவான் வே.மகாதேவன்,  ‘காஞ்சி மடம் வரலாறு’   என்னும் நூலில். 

மேற்சொன்ன அனைத்தையும் நிறுவ இலக்கியச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள், செப்பேடுகள், கடந்த 2000 ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளின் சமகால எழுத்துச் சான்றுகள் என்று பெரும் முயற்சி தெரிகிறது. சுமார் 10 ஆண்டுகள் இதற்கான ஆராய்ச்சியில் ஆசிரியர் ஈடுபட்டிருந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது இந்த நூல். 

ஆதிசங்கரரின் காலம் கி.மு. 509-477 என்று உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர். இதற்காகத் தர்க்க ரீதியிலான பார்வைகள் பலதையும் வைக்கிறார். அதற்கு மேல் ஆதிசங்கரர் காஷ்மீரம் சென்றது, அங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்தது, பின்னர் காஞ்சிபுரம் வந்து சித்தியடைந்தது என்று பல நிகழ்வுகளுக்கும் வரலாற்று, இலக்கிய ரீதியிலான சான்றுகளைக் காட்டுகிறார் ஆசிரியர். இதற்காக சிவரஹஸ்யம், ப்ருஹத்சங்கரவிஜயம், ப்ராசீன சங்கரவிஜயம், ஆனந்தகிரி சங்கரவிஜயம், வியாசாசல சங்கரவிஜயம், கேரளீய சங்கரவிஜயம், கூடலிச் சிருங்கேரியின் குருரத்னமாலா, மார்க்கண்டேய சம்ஹிதை, ஜைன நூலான ஜீன விஜயம் முதலான நூல்களில் இருந்து சான்றகளைக் காட்டுகிறார் ஆசிரியர்.

ஆதிசங்கரரின் காலத்தை நிறுவுவதற்கு ஆசிரியர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வியக்க வைப்பன.

ஆதி சங்கரரர் துவங்கி, தற்போதுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வரை இடைவிடாத தொடர்ச் சங்கிலியாய்க் குருபரம்பரையை எடுத்துரைக்கிறார். குறிப்பிடத்தக்க செயல்கள் புரிந்த பல பீடாதிபதிகளின் வாழ்க்கைக் குறிப்பை எழுதும் இடங்களில் அந்த பீடாதிபதி வாழ்ந்த காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ இயற்றப்பட்ட குருபரம்பரை தனியன்களைக் குறிக்கிறார். பெரும்பாலும் ‘குருரத்னமாலா’ என்னும் ஸ்தோத்திரத்தையும், ‘புண்ய ஸ்லோக மஞ்சரி’ என்னும் நூலையும் கையிலெடுக்கிறார். பின்னர் அவற்றில் உள்ள ஏதாவதொரு வரலாற்று நிகழ்வுக் குறிப்பையோ, அல்லது அந்த பீடாதிபதியின் குருவைப் பற்றிய குறிப்போ இருந்தால் அதையும் எடுத்துக் கொண்டு, தொடர்ச் சங்கிலியை உறுதிப்படுத்துகிறார். இன்னொரு வகையில், அந்தப் பீடாதிபதியின் காலத்தில் இருந்த அரசன் பற்றிய குறிப்புகள், அவற்றுக்கான செப்புப் பட்டைய ஆதாரம், அல்லது அவ்வரசன் காஞ்சி பீடத்திற்குக் கொடுத்த நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டு ஆவணம் என்று ஏதாவது ஒன்றையாவது முன்னிறுத்தி, பீடாதிபதியின் காலத்தை உறுதிப்படுத்துகிறார். இந்தத் தலைப்பில் முன்னரே வெளிவந்த சில வரலாற்று நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, பல தளங்களிலிருந்தும் ஒளியைப் பாய்ச்ச முயன்றுள்ளார் ஆசிரியர்.    

ஆதிசங்கரர் ஸ்தபித்த ஐந்து மடங்களில் தெற்கில் இரண்டு இருந்திருக்க வேண்டும் என்று நிறுவுகிறார். அதில் ஆம்னாய பீடமாகக் காஞ்சியை முன்னிறுத்துகிறார். கர்னாடகப் பகுதியில் கூடலி சிருங்கேரி என்னும் மடம் ஆதிசங்கரருடன் தொடர்புடையது என்றும், தற்போது சிருங்கேரி சாரதா பீடம் என்று அறியப்படுவது துங்கா சிருங்கேரி என்பதாகவும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறார். அத்துடன், தற்போதைய சிருங்கேரி பீடத்தின் குரு பரம்பரையில் 800 ஆண்டுகள் இடைவெளி இருப்பதையும், ஆகவே, இந்த பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததன்று எனவும் நிறுவுகிறார். 

தற்போது காஞ்சி காமகோடிப் பீடத்தைக் கும்பகோணம் மடம் என்று அழைப்பது பேச்சுவழக்கில் உள்ளது. இதற்கான காரணத்தையும் தகுந்த சான்றுகளுடன் நிறுவும் மகாதேவன், காஞ்சியில் இருந்த மடாதீசர்கள் கும்பகோணத்திற்குச் சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.    

 காஞ்சி பீடத்தின் குரு பரம்பரை பற்றிய செய்திகளில், அப்பீடத்தில் வீற்றிருந்த மஹான்களைப் பற்றியும், அவர்களது சமகாலத்தில் நடந்து வந்த ஆட்சியாளர்கள் பற்றியும் சான்றுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது. முக சங்கரர் என்று அறியப்பட்ட காஞ்சி மடத்தின் 20வது சங்கராச்சார்யர் செய்த அருட்செயல்கள் பெருவியப்பளிப்பன. 

மடத்தின் 38வது சங்கராச்சார்யரான அபிநவ சங்கரேந்திர சரஸ்வதியே காஷ்மீர மன்னனின் குருவாகவும் விளங்குகிறார். வியத்தகு செயல்கள் பல செய்த அவர் காஷ்மீரத்தில் சித்தியடைகிறார். இவரையே ஆதிசங்கரர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தவறாகக் கருதுகிறார்கள். எனவே தான் ஆதிசங்கரரின் காலத்தை கி.பி.8ம் நூற்றாண்டாகக் காட்டுகிறார்கள் என்கிறார் ஆசிரியர். 

கி.பி. 1297-1385 வரை காஞ்சி மடத்தில் கோலோச்சிய வித்யா தீர்த்தேந்திர சரஸ்வதியே கர்னாடகத்தில் வித்யாரண்யர் என்பாரின் குருவென்றும், தனது குருவின் ஆணைப்படி வித்யாரண்யர் சிருங்கேரியில் எட்டு மடங்களை நிர்மாணம் செய்தார் என்றும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்படப் பெரிதும் காரணமானவர் வித்யாரண்யர் என்று நாம் அறிந்ததுதான் என்றாலும், அந்த வித்யாரண்யர் உருவாகக் காரணமே காஞ்சி மடம் தான் எனும் போது நமது வரலாற்றுக் கற்பிதங்களின் தவறுகள் புரிகின்றன. 

காஞ்சி மடமே சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் கிளை தான் என்று பரப்புரை செய்யப்பட்டு, அதுவே உண்மை என்னும் எண்ணம் பலரிடம் இருக்கும் நிலையில், சிருங்கேரி மடம் நிலைபெறுவதற்கே கூட காஞ்சி காமகோடி பீடமே காரணம் என்னும் விதமான ஆதாரங்களை அளித்துள்ள ஆசிரியரின் உழைப்பு மெச்சப்படவேண்டியதே.

பின்னாட்களில் துங்காச் சிருங்கேரி மடத்தார் தமிழகத்திற்குள் தமது ஆளுமையைப் பரப்ப முயன்றதையும், அதற்காகக் கிழக்கிந்தியக் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடர்ந்ததையும் தகுந்த ஆதாரங்களுடன் விவரிக்கிறார் ஆசிரியர். அதிகாரத்தில் பங்கு என்னும் விதமாகப் பார்க்கத் தூண்டும் இடங்கள் இவை.

ஒரு மடம் அமைந்துள்ள சாலையில் பிறிதொரு மடத்தின் தலைவர்கள் செல்வதற்கில்லை என்று அன்னாட்களில் ஒரு விதி இருந்துள்ளது. அவ்விதியை அன்னாளைய அரசும் அமல் படுத்தப் பெருமுயற்சிகள் எடுத்துள்ளது. இந்த வழக்கத்தைக் குறிக்கக்கூடிய ஆங்கில அரசின் ஆவணங்களையும் ஆசிரியர் சுட்டுகிறார். இவற்றின் மூலமும் காஞ்சி மடத்திற்கென்றே இருந்த உரிமைகள், பாத்யதைகள் முதலியவற்றை நிறுவுகிறார். கும்பகோணத்தில் சஞ்சாரம் செய்யவும், மஹாமஹத்தில் பங்கேற்கவும் துங்காச் சிருங்கேரி, ஆமனிச் சிருங்கேரி மடாதீசர்கள் அரசாங்கத்திடம் செய்த விண்ணப்பங்கள்,  அதற்கு அரசிடமிருந்து ‘நீங்கள் கும்பகோணம் சங்கராச்சார்யார் மடம் வழியாகப் பயணித்தல் கூடாது’ என்கிற மாதிரியான உத்தரவுகள் என்று பல ஆவணங்கள் இந்நூலுக்கு வலுவூட்டுகின்றன.

திருவானைக்காவில் அம்பாளுக்குத் தாடங்கப் பிரதிஷ்டை செய்வதில் ஏற்பட்ட குழப்பங்கள், துங்காச் சிருங்கேரி மடத்தார் தமக்கே உரிமை என்று தொடர்ந்த வழக்குகள் முதலியன புதிய தகவல்கள். 

19ம் நூற்றாண்டின் இறுதியில் கும்பகோணத்தில் இருந்து ஶ்ரீமடம் சென்னைக்கும், காஞ்சிக்கும் இடம் பெயர்ந்த நிகழ்வையும் விவரித்துள்ள ஆசிரியர், அதற்கான காரணங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிடத் தவறவில்லை. 

இந்த நூல் ஆசிரியரின் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிப் படிவம். செப்புப் பட்டைய ஆதாரங்கள், அரசாங்க ஆணைகள், கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியங்களில் உள்ள ஆதாரங்கள் என்று பலதையும் மேற்கோள் காட்டி, பெரும் முயற்சியின் விளைவாக உருவானவொன்று. நூலில் மெய்ப்புப் பார்க்கப் பட வேண்டிய இடங்கள் பல உள்ளன – குறிப்பாக ஆண்டுகளைக் குறிக்கும் இடங்களில். 

ஏராளமான ஆதாரங்கள்,  பழைய நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பலதையும் சுட்டி எழுதப்பட்டுள்ள இந்த நூல், காஞ்சி மட  வரலாற்றில் வெளியில் பெரிதும் அறியப்படாத காலங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. 

இதனால் ஒரு மடம் உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்பது போன்ற பிம்பங்கள் வேண்டாம். இந்த நூல் ஒரு மடத்தின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறது. இந்த நூலின் கருத்துக்கள், ஆதாரங்கள்  பலதையும் மருதலித்து இன்னும் சில நூல்கள் இருக்கலாம். ஒரு ஆய்வாளன் இப்படிப் பல நூல்களையும் இன்ன பிற ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டே தனது கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நூலின் பால் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே கருத்தை உருவாக்கிக் கொள்ளுதல் பாரதீய தர்க்க சாஸ்திர மரபன்று. இந்த நூல் மூலம் ஆதிசங்கரர் ஸ்தாபித்த பீடங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமே தவிர, நூலின் அடிப்படையில் மடங்களின்  தரத்தையோ, ஆச்சார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் முதலியவற்றையோ மதிப்பிடுதல் தவறானது.

தமிழ் பாரதீயர்கள் அவசியம் ஊன்றி வாசிக்கவேண்டிய நூல் இது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு  நல்லதொரு ஆராய்ச்சி நூலை வாசிக்க முடிந்தது.                

‘ஶ்ரீ சங்கர மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு’ – வித்துவான் வே.மகாதேவன்.

பி.கு.: இந்த நூல் கிடைக்குமிடம் அருள் பதிப்பகம் +91 97890 72478காஞ்சி மடம் வரலாறு

காஞ்சி வழக்கு – என் அனுமானத்தின் காரணங்கள்

காஞ்சி வழக்கு பற்றிய சென்ற பதிவில் மத மாற்றுக்காரர்களின் உலகளாவிய இயக்கங்களின் மறைமுகக் கை இருக்கலாம் என்று கண்டோம். அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் கண்டோம்.

ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை உண்டா என்று கேட்கலாம். என்னுடைய அலசல் அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை அவற்றின் கால அளவையும் நிகழ்ந்த நேரத்தையும் கருத்தில் கொண்டு எழுப்பப்பட்ட அனுமானங்கள் என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் நான் இந்த அனுமானத்திற்கு வரக் காரணங்கள் என்ன ?

வழக்கு பதிவு செய்யப்பட்ட விதமும், வழக்கு நடத்தப்பட்ட அழகும் அன்றைய அரசின் இவ்வழக்கு பற்றிய கருத்துக்களும், காவல் துறை மற்றும் ஊடகங்களின் நடத்தையுமே என் அனுமானத்திற்குக் காரணங்கள்.

வழக்கு பதிவு செய்யும் முன்னரே ஜெயேந்திரரைக் கைது செய்வதே முக்கியம் என்பது போல் செயல்பட்டது அரசு. அன்றைய முதலமைச்சரும் முந்தைய நாள் வரை காஞ்சி மடத்துடன் இழைந்துகொண்டிருந்தார். திடீரென்று தீபாவளி நாள் அன்று ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். அது வரை அவரே எல்லாத் தொலைக் காட்சிகளிலும் தீபாவளி அன்று நற்செய்தி வழங்கி வந்தார். இந்துமதம் என்றாலே காஞ்சி சங்கராச்சாரியார் என்ற அளவில் இருந்தது அன்று.

தீபாவளி நாள் அன்று அதிரடி முறையில் அவர் கைது செய்யப்படவேண்டிய தேவை என்ன ? தீபாவளி என்பது பாரதத்தின் அனைத்து இந்து சம்பிரதாய மக்களும் புனிதம் என்று கருதும் நாள். எனவே அன்று அந்த சமயத்தின் முக்கியத் தலைவரைக் கைது செய்து யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது என்று எண்ணத் தோன்றுவது இயற்கையே. ஆக, யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது ?

அப்போது என்ன கதைகள் பேசப்பட்டன ? அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து நேபாளத்திற்கு ஹெலிகாப்டரில் தப்ப இருந்தார் என்ற செய்தி பரப்பப் பட்டது. ஆந்திராவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்க இதுவரை ஹெலிகாப்டர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும்.

ஜெயேந்திரர் காஞ்சிபுரம் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரே ‘நக்கீரன்’ என்னும் நாலாந்தர ஏட்டின் உதவித் தலைமை ஆசிரியர் நீதிமன்றத்திற்குள் அமர்ந்திருந்தார். அது எப்படி? அவருக்கு இந்தத் தகவல் எப்படி முன்னரே தெரிந்தது ?

வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்த பிரேம்குமார் என்ற காவல்துறை ஆய்வாளரின் மைத்துனர் இந்த உதவி ஆசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வெளியே விடாமல் இருக்க ஆன மட்டும் முயன்றனர். அரசின் அத்துனைத் துறையும் இதின் பயன் படுத்தப்பட்டன. முதல்வர் நேரடியாக இந்த வழக்கில் ஈடுபட்டார். பிரேம்குமாருடன் நேரடியாக அனைவரும் பார்க்கும் வண்ணம் தனது ஹெலிகாப்டர் அருகில் நின்று பேசினார். அன்று மாலையே இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மிகவும் அதிரடி முறையில் பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது பிரேம்குமார் காலில் காலணி (ஷூ ) அணிந்திருந்தார். விஜயேந்திரர் தான் பூசை முடித்து வருவதாகக் கூறினார். ஆனாலும் விடாப்பிடியாக பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஏன் இவ்வளவு அவசரம் ?

ஜெயேந்திரர் மீது அசைக்க முடியாத சாட்சியங்கள் இருப்பதாக அன்றைய முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தார் (Clinching Evidence).  ஆனால் அந்த சாட்சி என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரு தனி வழக்கு பற்றி முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டியது ஏன் ? யாரைத் திருப்திப் படுத்த ?

சரி, அசைக்க முடியாத சாட்சி என்ன ?

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து 50 இலட்சம் பணம் எடுத்து அது கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது என்பதே அது. இந்தக் காரணம் காட்டியே காஞ்சி முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பிணை (bail)  மறுக்கப்பட்டது.  டெல்லியில் தலைமை நீதிமன்றம் முன் இந்த சாட்சி பற்றிக் கேள்வி எழுந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குப் புத்தகம் கேட்கப்பட்டது. அரசு தரப்பில் அப்படி ஒரு கணக்கு இல்லை என்று கூறப்பட்டது.

அன்று வரை எந்தக் கணக்கு முக்கிய சாட்சியாகக் காண்பிக்கப்பட்டதோ அதுவே இல்லை என்று அரசே கூறியது. நீதி மன்றம் கொதிப்படைந்தது.

பின்னர் அரசு அது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கு இல்லை என்றும் அது இந்தியன் வங்கிக் கணக்கு என்றும் கூறியது. நீதிமன்றம் கணக்குப் புத்தகப் கேட்டது. அதில் 50 இலட்சம் எடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தேதியில் 50 இலட்சம் வைப்பு செலுத்தப் பட்டது என்றும் தெளிவாகியது. மடத்தின் ஒரு நிலம் விற்ற வகையில் பெற்ற பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

ஒரு க்ரெடிட் , டெபிட் ( Credit / Debit ) வித்யாசம் கூடவா அரசிற்குத் தெரியவில்லை ? நம்ப முடியவில்லை.

இல்லாத ஒரு வங்கிக் கணக்கை இருக்கிறது என்று அரசு துணிந்து பொய் கூறியது. பணம்  செலுத்தியதை எடுக்கப்பட்டது என்று மேலும் துணிந்து பொய் கூறியது. இதெல்லம் ஒரு குற்றத்தை நிரூபிக்க அல்ல; ஜெயேந்திரருக்குப் பிணை மறுக்க.

அவரைச் சிறையில் நீண்ட காலம் வைப்பதால் யாருக்குப் பயன் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

அவரைச் சிறையில் வைத்து விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக மயக்க மருந்து கொடுத்துப் பல கேள்விகள் கேட்டது காவல் துறை. அதனைப் பதிவு செய்து அதனைத் தொலைக் காட்சிகளுக்கும் அளித்தது. ஆனால் யார் அதனை அளித்தனர் என்று தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிலையங்கள் தெரிவித்தன. இருந்தும் அந்த ‘விசாரணையை’ ஒளி பரப்பித் தங்கள் ‘தர்ம’த்தை நிலை நாட்டின. இவையும் யாருக்காக என்று தெரியவில்லை.

ஜெயேந்திரருக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் பிணை அளித்து விடுவித்தது. அந்த ஆணையில் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியது உச்ச நீதி மன்றம். புதிய சாட்சிகள் ஒன்றும் இல்லை, வழக்கை நடத்த முயற்சி செய்யாமல் ஜெயேந்திரரைச் சிறையில் வைக்கவே அரசு விரும்புகிறது என்று நீதிமன்றம் சாடியது.

ஜெயேந்திரர் வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே விஜயேந்திரக் கைது செய்தது தமிழக அரசு மீண்டும் வேறு புதிய சாட்சிகள் இல்லாமலே.

இந்திய ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் வாழ்நாளைக் காஞ்சி மடத்தின் சேவையில் கழிக்க நினைத்து அதில் தொண்டூழியம் செய்துவந்த சுந்தரேசையர் என்பவரைக் ‘குண்டர்’ சட்டத்தில் கைது  செய்தது அரசு. பின்னர் அதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாகக் குற்றம் செய்யும் குற்றவாளிகளை நடத்துவது போல் இவரை நடத்தியதை நீதிமன்றம் விரும்பவில்லை.

அத்துடன் இல்லாமல் மடத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது அரசு. மடத்தின் கீழே பல பாட சாலைகள், பசுக் காப்பகங்கள், மருத்துவனமனைகள் முதலியன நடந்து வந்தன. இவை அனைத்தும் பாதிக்கப்பட்டன.

இதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்தத் தீர்ப்பில் அரசின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. (“Action for freezing the accounts of the Mutts is ultra vires, illegal and liable to be set aside”).

தெரிந்தே நீதி மன்றத்தில் பொய் சொல்வது ஒரு அரசின் வேலையா ? இவ்வளவு தூரம் மெனக்கெட்டு பொய் கூறி, நீதி மன்றத்திடம் வாங்கிக் கட்டிகொண்டது யாருக்காக ?

இந்த நேரத்தில் ஊடகங்களின் செயல்பாடு பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது. கொல்கொத்தாவின் சோனாகாச்சியில் நடைபெறும் தொழிலுக்கும் ஊடகங்களின் செயல்பாட்டிற்கும் பெரிய வித்யாசம் இல்லை.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் பார்ப்போம். ‘காலச்சுவடு’ என்னும் ஒரு இலக்கியப் பத்திரிகை. அந்நேரத்தில் அதில் வெளிவந்த ஒரு கட்டுரையில் ஒரு சிறிய பகுதி இது. மேலும் நான் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை.

“கேட்டுக்கொண்டிருந்த நான் சொன்னேன்: “சார், நீங்கள் ஜெயேந்திரரைத் தவறாக நினைக்கக் கூடாது. அவர் எல்லோரையும்தான் சட்டையை அவிழ்க்கச் சொல்கிறார். ஆண்களிடம் வெளியில் வைத்துக் கேட்பார். பெண்களிடம் உள்ளே வைத்துக் கேட்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.” ( நன்றி : தமிழ் ஹிந்து )

காலச்சுவடு என்பது முற்போக்கு இலக்கியச் சூழலில் உள்ள ஒரு பத்திரிக்கை. இதுவே இப்படிச் செயல்பட்டது. மற்றவை பற்றிப் பேசவேண்டியதில்லை.

பத்திரிக்கை தர்மம் என்று கொடி பிடிப்பவர்கள் அப்போது எங்கே போனார்கள் ? யாரைத் திருப்திப் படுத்த இந்தச் செயல்பாடு ?

விஜயேந்திரரையும் ஒரு முன்னாள் நடிகையையும் தொடர்பு படுத்தியும் பத்திரிக்கைகள் பேசின. பெண் உரிமைக்காரர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ‘ஜன நாயக மாதர் சங்கம்’, ‘தேசியப் பெண்கள் ஆணையம்’ முதலியன அப்போது தோன்றவில்லையா ? அல்லது அந்தக் பெண் நடிகை பெண்ணே இல்லையா ?

எதற்காக இந்த அளவு வீழ வேண்டும் பத்திரிக்கைகளும், ஊடகமும், அரசும் ?

என்னிடம் பதில்கள் இல்லை. அனுமானம் மட்டுமே. விடை தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம்.  வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயெந்திரர் விடுதலை ஆனார்கள் என்றாலும் மடத்தின் பெருமையும் ஆளுமையும் குறைந்தது என்பது உண்மை. துறவியரின் பெருமையும் அவ்வாறே.

இனி ஜெயேந்திரர் சமூக சீர்திருத்தங்களில் அவ்வளவு தீவிரமாக ஈடுபடுவாரா என்பது சந்தேகமே. அவரது உடல் நலமும் இடம் கொடுக்காது. மன உரமும் தளர்ந்திருக்கும். பழையபடி காஞ்சி மடம் ‘ப்ராம்மணர்களின்’ கூடாரமாகலாம். ‘நமக்கேன் வம்பு’ என்று அவர்கள் பார்வை உள் நோக்கித் திரும்பலாம். இவை எதிர்பார்க்கக் கூடியவை.

காஞ்சி மடத்தின் இந்தப் போக்கினாலும் பெருமை வீழ்ச்சியாலும் பயன் அடையப்போவது யார் என்பதை அறிந்துகொள்ளப் பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.

பண்டைய தமிழர் – ஒரு பார்வை

காஞ்சி வழக்கு குறித்த பதிவுத்தொடரில் பண்டைய தமிழர் எங்ஙனம் ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

தற்காலத்திய அத்வைத மடங்களில் ஒன்றான காஞ்சி மடம், அதன் துறவியரின் சமூக ஆன்மிகப் பணி, இவர்களின் தேவை முதலியன பற்றி அறிந்து கொள்ள இந்த அத்வைத சித்தாந்தமே தோன்றியிராத போது தமிழகம் எப்படி இருந்தது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுவும் ஆரியர் படை எடுப்பு என்ற ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்வும் கலையும் கலாச்சாரமும் வேறாகின என்று நமக்குப் போதிக்கப்பட்டுள்ள வேளையில் சங்க காலம் முதல் தமிழரின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது தேவைப்படுகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட கல்வி ஆரியர் படை எடுப்பின் முன் தமிழர் நிலை மிகவும் முன்னேறிய ஒரு சமூக நிலையாக இருந்தது என்றும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டது என்றும், மூட நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றும் மக்கள் அனைவரும் ஒரு நிகர் சமானமாக எவ்வித சாதிப் பிளவுகளும் இன்றி ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் கூறுகிறது. ஆனால் ஆரியர் படை எடுப்புக்குப்பின், வைதீக பிராம்மணர்களின் சூழ்ச்சியால் தமிழர் பிளவு பட்டனர் என்றும், பல கடவுளர் வழிபாடு புகுத்தினர் என்றும், உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைப் புகுத்தினர் என்றும், மூட நம்பிக்கைகள் பெருகின என்றும் பெண்ணடிமைத்தனம் தோன்றியது என்றும் இதற்குக் காரணம் வட நாட்டிலிருந்து வந்த மாடு மேய்த்த ஆரியர் என்றும் நமது தமிழ்ப் பாட நூல்களும் ‘அறிஞர்களும்’ தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை உண்மையா ? ஆதி சங்கரர் தொடங்கி வைதீக காலம் தொட்டுத்தான் மூட நம்பிக்கைகளும், பெண் அடிமைத்தனமும், சாதிப் பாகுபாடுகளும் தோன்றியனவா ? இவரும் இவர் சார்ந்த வைதீக மதமும் அவரைப் பின்பற்றிய வைதீக மதத்தின் மற்ற பரிணாமங்களும் தான் பாரத தேசத்தின் அத்தனை கேடுகளுக்கும் காரணமா?

இவற்றைப் பார்ப்பதற்கு நாம் சங்க காலத்தை ஒரு அளவு கோலாகக் கொள்வோம். சங்கத்திற்கு முன்னர் தோன்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் ‘தொல்காப்பியம்’, ‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘நற்றிணை’ முதலிய தொல் நூல்களின் வழி நின்று அக்கால சமூகத்தை ஆராய்வோம்.

முற்போக்காளர்கள் கூறுவது : ‘பண்டைய தமிழர் ஒரே கடவுள் வழிபாட்டையே கொண்டிருந்தனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கையே இருந்து வந்தது. ஆரியர்கள் வந்த பின்னரே பல தெய்வ வழிபாடும் பூசை முறைகளும் உயிர்ப்பலி முறைகளும் தமிழகத்தில் தோன்றின’ என்கின்றனர். ஆனால் உண்மை என்ன?

பண்டைத் தமிழகத்தில் ஒரே கடவுளோ அல்லது கடவுளே இல்லை என்றா இருந்ததா?

இல்லை. சங்க நூலான தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின் பெயருக்கு அகராதி போன்று ஒரு பகுதி உள்ளதாகத் தெரிகிறது.

தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர் குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும் தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குப்பிடப்பட்டுள்ளார்.

ஆண் தெய்வங்கள் தவிர ‘கொற்றவை’ என்னும் பெண் தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று வழிபட்டனர் என்று தமிழ் அறிஞர் சாமி.சிதம்பரனார் கூறுகிறார்.

தொல்காப்பியம் ‘மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே ..” என்னும் இடத்தில் கொற்றவை பற்றிக் கூறுகிறது.

இவை தவிர கதிரவன், தீ, நிலவு முதலிய இயற்கைப் பொருட்களையும் தமிழர் கடவுளர்களாக வழிபட்டனர் என்பதை ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வந்தது என்று தொல்காப்பியம் பறைசாற்றுகிறது.

திருமாலை ‘ஆல் அமர் கடவுள்’ என்றும், முருகனை ‘சேயோன்’ என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.  முருகன் ‘சூரனைக் கொன்ற ஒளி பொருந்திய வேர்ப்படையை உடைய முருகன்’ என்று போற்றப்படுகிறான். (சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் )

இத்தெய்வங்கள் தவிர இறந்தோரையும் கடவுளர்களாக வழிபட்டுள்ளனர். அவர்கள் நினைவாக கற்களை நட்டு ( நடுகல் ) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல் ..’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்.

வைதீக மதங்கள் வருகையாலும் ஆதி சங்கரரது ‘அத்வைத’ சமயத்தின் தாக்கத்தாலுமே வேதங்களின் முறைப்படி உயிர்ப்பலிகள் தொடங்கின என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு வந்ததுள்ளது. அது உண்மையா ?

சங்க காலத்தில் முருகனுக்கு ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்து வழிபட்டனர் என்று  குறுந்தொகையில் உள்ளது. (சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி..)

‘வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு’ என்று நற்றிணையில் ( வெறி எடுத்தால்  உன் நோய் தீரும் என்று எண்ணி ஆட்டை அறுத்து உன் அன்னையால் வணங்கப்படும் முருகன்..) வருகிறது.

ஆக பலி இட்டு வணங்குவது வேத காலத்திற்குப் பின் தமிழகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் புனைவே.

மூட நம்பிக்கைகள் வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டது என்று கூறுவதும் அபத்தமே.

மழை வேண்டும் என்று புறநானூற்றில் ‘மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய் மாறி ஆன்று மழைமேக்கு உயர்க  .. ‘ என்று மழை பெய்ய வேண்டி பலி கொடுத்து வணங்குவர் என்றும் வருகிறது.

கோழி, ஆடு முதலியன பலவகையான பலிகளுக்குப் பயன்பட்டன என்று பல பாடல்கள் தெரிவிக்கின்றன.

பலன்கள் வேண்டிக் குரவைக் கூத்து, பாவை நோன்பு முதலியன சங்க காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாலும் அந்தப் புராதனமான நோன்பையே நோற்றாள் என்று வைணவம் குறித்த தொடர்களில் நாம் முன்னமேயே கண்டோம்.

இம்மை, மறுமை முதலியன பல முறை சங்கப் பாடல்களில் இடம் பெறுகிறது. சங்கம் மருவிய காலத்தவரான வள்ளுவரும் வானுலகம், இம்மை, மறுமை, ஊழ்வினை முதலியன குறித்துப் பேசியுள்ளார்.

சகுனம் பார்ப்பதும், நல்ல நாள் பார்ப்பதும் சங்க காலத்திலேயே இருந்த பழக்கங்கள்.

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை ‘ என்று தொல்காப்பியம் களவியல் சூத்திரம் ‘களவு மணம் புரியும் காலத்தில் கெட்ட நேரத்தில் காதலியுடன் சேராமல் இருக்கும் பழக்கம் தலைவனிடம் இல்லை..” என்று கற்பு மணம் புரிந்தோர் நாளும் கிழமையும் பார்ப்பார்கள் என்றும் களவு மணம் புரிந்தோர் அவ்வாறு இல்லை’ என்றும் கூறுகிறது.

பல்லி சொல்லுக்கும் பலன் பார்த்தார்கள் பண்டைத் தமிழர் என்பது கலித்தொகையில் காணக்கிடைக்கிறது.

எரி நட்சத்திரம் பற்றியும் புறநானூற்றில் செய்திகள் உள்ளன. அது தீங்கு நிகழப்போவதை உணர்த்துவதாகக் கொள்ளப்பட்டது. இரும்பொறை என்ற மன்னன் இறந்தபோது கூடலூர் கிழார் என்னும் புலவர் ‘கனை எரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ..” என்னும் புறப் பாடலில் குறிப்பிடுகிறார்.

பால் தயிராகாமல் பாலாகவே உள்ளது; ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடவில்லை; உறியில் இருந்து இறக்கிய வெண்ணையை உருக்கினால் உருகவில்லை; சகுனங்கள் சரியாக இல்லை என்று ஆய்ச்சியர் குரவையில் சிலப்பதிகாரம் கூறுகிறது. இவை சங்கம் மருவிய காலம்.

இவை தவிர பெண்கள் உடன் கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு நோற்றல் முதலியனவும் சங்கப் பாடல்களில் பெருமையாகவே பேசப்படுகிறது. எனவே இவை வைதீக மதத்தைப் பரப்பிய ஆதி சங்கரர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழர் மரபில் இருந்துள்ளன.

அவ்வையார், நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் முதலான பெண் புலவர்கள் இருந்தாலும் பெண்கள் பெரும்பாலும் கல்வியிலும் உரிமைகளிலும் பின்தங்கியே இருந்தனர் என்பதும் தெரிகிறது.

தொல்காப்பியர் ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’ என்று பயமும், வெட்கமும், அறியாமையும் முற்பட்டு நிற்பது எப்போதும் பெண்களுக்கு உரிய குணம் என்று கூறுகிறார்.

வள்ளுவரும் ‘மனைவியின் கீழ்ப்படிந்து நடக்கும் முறையற்ற செயல் எந்நாளும் பெரியோர் கூட்டத்தில் வெட்கம் தரும் செயலாகும் என்பதை ‘இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்’ என்று கூறுகிறார்.

இவை தீமை என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் இவை வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டன என்பதும் பண்டைய தமிழர் வாழ்வில் இவை ஒன்றுமே இருந்ததில்லை என்பதும் உண்மை கலப்பிலாத பொய் என்பதும் நாம் அறிய வேண்டியது ஆகும்.

சரி. இப்பண்டைய தமிழர் வாழ்விற்கும் ஆதி சங்கரர் வழி வந்த காஞ்சி மடத்திற்கும் தொடர்பென்ன ? விரைவில் பார்ப்போம்.

காஞ்சி வழக்கு – ஒரு பார்வையின் தொடக்கம்

முதலில் ஒரு சமர்ப்பணம் – எனக்கும் ஆதி சங்கரர் வழி வந்துள்ள மடங்களுக்கும் அவர்களது சித்தாந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

சங்கர சித்தாந்தம் என்பது ‘அத்வைதம்’ என்று முன்பு கண்டிருந்தோம். சித்தாந்த ரீதியாக அத்வைதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு பிரம்மம் மட்டுமே உண்மை , மற்றது எல்லாமே மாயை, நாம் அனைவரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு, உலகம் என்பது மாயை, பொருள் என்பது இல்லை, ஜடப் பொருள்கள் ஒரு தோற்றப்பிழையே ( Mirage ) என்பது அத்வைத சித்தாந்தம்.

இந்த சித்தாந்தத்தை முன் வைப்பவர்கள் அத்வைத சம்பிரதாயம் சார்ந்துள்ள ஆதி சங்கரர் வழி வந்துள்ள ஐந்து மடங்களைச் சார்ந்த துறவியரும் அவர்களது வழி வந்துள்ளவர்களும். அத்வைத சித்தாந்தம் இக்காலத்தில் பொருள் ரீதியிலான உலகம் என்பதே உண்மை இல்லை என்று சொல்வது பெரும்பாலான மக்களால் ஒப்புக்கொள்ள முடியாதது என்பதே என எண்ணம். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ..” என்பதும் நோக்கத்தக்கது.

அப்படியென்றால் ஆதி சங்கரரும் அவர் வழி வந்த ஐந்து மடங்களும் இந்திய மரபிற்கும் கலாச்சார ஒற்றுமைக்கும் ஒன்றுமே செய்யவில்லையா ? என்ற கேள்வி எழலாம்.

ஆதி சங்கரர் இந்திய தத்துவ மரபிற்கு ஆற்றியுள்ள பணியைப் பற்றியும் அவர் இல்லை என்றால் இந்து மதம் என்று இன்று ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பாக உள்ள ஒரு நிலையும் இல்லாமலே போயிருக்கும் என்று முன்னமேயே இந்தப் பதிவில் பார்த்தோம். அத்வைத சித்தாந்தமே பாரதத்தின் சித்தாந்தம் என்னும் அளவிற்கு உயர்த்திய பெருமை ஆதி சங்கரரைச் சாரும். சுவாமி விவேகானந்தரும் அத்வைத சித்தாந்தத்தையே முன்வைத்துப் பேசினார். அந்த அளவிற்கு மிகச் சிறிய வயதிலேய மிகக் குறுகிய காலத்தில் ஆதி சங்கரர் ஒரு பூமி அதிர்ச்சிக்கு நிகரான கலாச்சாரப் புரட்சி செய்தார்.

சமுதாய அளவிலும் ஜைனமும் பௌத்தமும் தங்களது அழிவை நோக்கி விரைந்து செல்ல ஆதி சங்கரரது அத்வைத சிந்தனையும் ஒரு காரணி என்பதை மறுக்க முடியாது என்று மார்க்சீய சிந்தனையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

சித்தாந்தம் எல்லாம் சரி. அதற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பென்ன ?

தொடர்பு இல்லை என்பதே என் எண்ணம். அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் பொருள் ரீதியில் இல்லாமலே இருந்தன. ஆத்தும ஞானம் பெற ஒருவன் செய்ய வேண்டியன, பிரும்மத்துடன் கலப்பது எப்படி என்பது போன்ற பல உலகியல் ரீதியில் எந்த நோக்கமும் இல்லாததே ‘அத்வைதம்’ என்று ஆதி சங்கரர் போதித்தார்.

ஒரு பாலைவனம் உள்ளது. மேலே சூரியன் பிழம்பாக ஒளிர்கிறது. எங்கு நோக்கினும் நீர் இல்லை. ஆனால் அங்கே சிறிது தூரத்தில் நீர் நிலை தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது இல்லை. இன்னமும் சிறிது தூரத்தில் தெரிகிறது. எனவே மீண்டும் அருகில் சென்று பார்த்தால் அங்கும் இல்லை.

ஆக, நீர் உள்ளது போல் நம் கண்ணுக்குத் தெரிந்தது உண்மையா இல்லையா ?

நம் கண்ணிற்குத் தெரிந்த காட்சி உண்மை. நாம் பார்த்ததும் உண்மை. ஆனால் நீர் இருப்பது உண்மை இல்லை. அது மாயை.

அது போலவே இந்த உலகம் என்பது மாயை. பஞ்ச பூதங்களினால் உண்டான இந்த உலகமும் அதனில் வாழும் உயிர்களும், பாலைவனத்தில் கானல் நீர் போல் மாயை. ஆனால் சுட்டெரிக்கும் சூரியன் உண்மை என்பது போல் பிரும்மம் என்பது மட்டும் உண்மை. சூரியன் ஒளியினால் ஏற்படும் மாயத் தோற்றங்களே உயிர்களும் உலகமும்.

கோனார் தமிழ் உரை அளவில் இருந்தாலும் இது தான் அத்வைத சித்தாந்தத்தின் அடி நாதம். ஆதி சங்கரர் ஏற்படுத்திய இந்த சித்தாந்தத்தை  முன்னிலைப்படுத்தியன ஐந்து பீடங்கள். அவற்றில் ஒன்று காஞ்சி காமகோடி பீடம்.

அவர் வழியிலேயே அவர் ஏற்படுத்திய மடங்கள் செயல்பட்டன என்று கொள்ள முடியுமா என்றால் முழுமையாக இல்லை என்பதே உண்மை.

சரி. அப்படியென்றால் அவரது வழியில் முழுவதும் செல்லாமல் அவர் ஸ்தாபித்த பீடங்கள், குறிப்பாகக் காஞ்சி பீடம் செய்தது என்ன ?

இவை பற்றிக் காணும் முன் அவரால் ஏற்பட்ட மடங்கள் பாரத சமூகத்திற்குச் செய்த பணிகள் என்ன ? அவற்றுக்கும் தற்போது காஞ்சி பீடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கும் காரணம் என்ன ? இந்த வழக்கிற்கும் சமூகத்தில் இந்திய எதிர்ப்பு வாதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ?

பாரத சமூகம் என்ற  அமைப்பு உடைந்து சிதற வேண்டும் என்று விரும்பும் சில அமைப்புகள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குக் காஞ்சி பீடமும் சமூகத்தின் மீது இருந்த அதனின் ஆளுமையும் எவ்வாறு ஊறு செய்தன ; எனவே அவற்றைக் களைய இந்த அமைப்புகள் செய்தவை என்ன ? இதற்கு ‘முற்போக்கு’ சக்திகள் துணை போன கதை என்ன ?

விரைவில் காண்போம்.

%d bloggers like this: