காஞ்சி மட வழக்கின் பின்னணி – ஒரு அலசல் பார்வை

ஒருபுறம் ஆங்கிலேய அரசும் மிஷனரிகளும் செய்த தொடர் பிரச்சாரம், இன்னொரு புறம் ஆங்கிலேய அரசு தந்த ஊக்கத்தில் பாரதப் பண்பாட்டை இகழத் துவங்கிய ஆங்கில வழியில் பயின்ற மேதாவிகள். இவர்களுடன் சேர்ந்து ஆங்கில வழிக்கல்வியே உயர்ந்தது என்ற எண்ணத்தில் பாரதத்தின் பண்பாட்டுக்கல்வியான வேதக் கல்வி, ஆயுர்வேதம், இஸ்லாமிய சமயக்கல்வி, யுனானி முதலிய மருத்துவக்கலைகள் முதலியனவற்றினை இகழத் துவங்கினர் சாதாரண மக்கள்.

சமயக் கல்வியில் தொய்வு என்றால் மொழியும் தாழ்வுற்றது என்றே பொருள். சைவ சமயம் சார்ந்த ஆதீனங்களின் திருமுறைப் பள்ளிகள் தமிழையும் ஆன்மிகத்தையும் வளர்த்து வந்தன. இவையும் சற்றே தாழ்வு எய்தின.

ஆதி சங்கரரின் வழி வந்த வித்யாரண்யர் என்னும் சிருங்கேரி சங்கர மடத் துறவி விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவக் காரணமானார். ஹரிஹரா, புக்கா என்னும் சகோதரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதலாக இருந்து இஸ்லாமிய அரசுகளின் தாக்கம் டெக்கான் என்னும் இடம் தாண்டி தெற்குப்பக்கம் வரவிடாமல் தடுத்தார். கி.பி. 1331 முதல் 1386 வரை சிருங்கேரி சாரதா பீடத்தலைவராக இருந்த விதயாரண்யர் சனாதன சம்ப்ரதாயம் காக்கச் செய்த பணி மகத்தானதாகும். இவர் தலைமைப் பதவியில் இருந்த கால அளவில் சில மாறுதல்கள் இருந்தாலும் இவரது பணி சிறப்பானது.

பிறகு வெள்ளை அரசுகளின் ஆட்சியின் போது பாரதத்தின் பண்பாட்டை உலகம் அறியச் செய்ய அத்வைத சித்தாந்தத்தின் பிரதிநிதியாக விவேகானந்தர் தோன்றி மிஷனரிகளின் கட்டுப்பாடற்ற மத மாற்றங்களை எதிர்த்தார். “எங்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி மண் எடுத்து இங்கிலாந்து மேல் வீசினால் அது நீங்கள் எங்களுக்கு உங்கள் கல்வி மற்றும் மத மாற்றத்தால் செய்யும் கேட்டின் அளவில் ஒரு துளி கூட் ஆகாது” என்றார். (“If all India stands up and takes all the mud that is at the bottom of the Indian Ocean and throws it up against the Western countries, it will not be doing an infinitesimal part of that which you are doing to us …”) .

ஆங்கிலேயரின் மத மாற்றத்தையும் அவர்களது கல்வி முறையையும் எதிர்த்த அவர், ஆங்கிலக் கல்வி பற்றிக் கூறுவது  “எங்கள் சிறார் உங்கள் பள்ளி சென்றதும் முதலில் அவனது தந்தை ஒரு மூடன் என்று கற்பிக்கப்படுகிறான்; பின்னர் அவனது தாத்தா ஒரு மன நிலை பிறழ்ந்த மனிதர் என்று அறிவுறுத்தப்படுகிறான்; பின்னர் அவனது இந்திய ஞான ஆசிரியர்கள் அனைவரும் நேர்மை தவறியவர்கள் என்று போதிக்கப்படுகிறான்; நான்காவதாக அவனது புனித நூல்கள் அனைத்தும் புளுகு மூட்டைகள் என்று கற்பிக்கப்படுகிறான்; அவன் பதினாறு வயது ஆகும் போது ஒரு எலும்பில்லாத, உயிரில்லாத, எதிர் மறையான எண்ணங்கள் கொண்ட  நடைப் பிணமாக ஆகிறான்..” (“The child is taken to school and the first thing he learns is that his father is a fool, the second thing that his grandfather is a lunatic, the third thing that all his teachers are hypocrites, the fourth that all the sacred books are lies. By the time he is sixteen, he is a mass of negation, lifeless and boneless …”)

அவர் வழியிலேயே காந்திஜியும் மிஷனரிகளின் செயல்களைக் கடுமையாகச் சாடினார்.

காந்தியடிகள் மிழஷனரிகளை ‘சாக்கடை ஆய்வாளர்கள்’ (Gutter Inspector ) என்று கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசினார். காந்தியடிகளையே கோபம் கொள்ள வைத்த பெருமை கிறித்தவப் பரப்பாளர்களைச் சாரும்.

விவேகானந்தர் முதலியோர் இந்திய தத்துவ ஞானம் என்றாலே அது அத்வைதம் என்னும் அளவில் உலக அளவில் பாரதப் பண்பாட்டைக் கொண்டு சென்றனர்.

மிஷனரிகளின் ஆதரவுடனும், ஆங்கில அரசின் ஆசியுடன் புதிதாக ஒரு பிரிவு தோன்றியது. இந்த இருவரின் ஆதரவு பெற்ற அந்த குழு ஆங்கில ஆட்சியை வரவேற்று, விடுதலை வேண்டாம் என்று கூறியது. இந்தக்குழு ஜமீன்தார்களின் ஒரு கூட்டமைப்பாகவே இருந்தது.

அதே நேரத்தில் சங்கர மடங்கள் ஆன்மிக கேந்திரங்களாகத் திகழத் துவங்கின.

தென் இந்தியாவில் காஞ்சி மடம் தனது 68-வது குருவான சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்னும் துறவியின் ஆளுமையின் கீழ் வந்தது. அதுவரை காஞ்சி மடம் ஆன்மீக உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு சிறிய அளவிலான ப்ராம்மணர்களையே அது தனது ஆளுமையின் கீழ் கொண்டிருந்தது.

ஆனால் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கீழ் அது தென் இந்தியாவின் ஆன்மீகக் கேந்திரமாக வளரத் துவங்கியது. இதற்குப் பல காரணங்கள்.

முதலாவதாக சந்திர சேகரர் கல்வியும் ஞானமும். ஆழ்ந்த படிப்பு கொண்டவராக விளங்கினார் அவர். தர்ம சாஸ்த்ரங்கள், வேதம் முதலியனவோடு நிறுத்திக்கொள்ளாமல் பல மொழியறிவும் பெற்றிருந்தார். எதையும் ஆழ்ந்து நோக்கி அதன் உட்பொருளை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

அதே சமயம் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது போராட்ட தியாகிகள் பலருக்கு ஆன்ம குருவாகவும் விளங்கினார். மகாத்மா காந்தியும் இவரைச் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகப் பணியுடன் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டுவந்தார் சுவாமிகள். பசு வதை எதிர்ப்பு, தமிழ் மறைகள் வளர்க்க திருமுறைப் பாட சாலைகள் நிறுவுதல், பாரதத்தின் சில்ப ஆகமக் கலைகள் வளர ஆண்டுதோறும் அதற்கான கலை மாநாடுகள் நடத்துதல் என்று பாரத கலாச்சாரத்தின் அனைத்து நிலைகளிலும் தனது ஆளுமையைப் பரப்பினார் இவர்.

சுதேசி இயக்கம் வலுப்பெற கதர் ஆடை அணிய வேண்டியதை மிகவும் வலியுறுத்தினார். வரதட்சணைக் கொடுமையை ஆகக் கடுமையாக எதிர்த்தார். அதற்கு சாஸ்த்ரங்களில் இடமே இல்லை என்று ஆதார பூர்வமாக வாதிட்டார்.

திருவிழாக் காலங்களில் எழைகளுக்கு உணவளிக்க ‘பிடி அரிசித் திட்டம்’ என்று புதுமையான ஒரு திட்டம் கொண்டு வந்தார். ஒரு நாள் ஒரு கைப்பிடி அளவு அரிசியை தானத்திற்கு என்று எடுத்து வைத்துவிட வேண்டும் என்று தனது பக்தர்களைப் பணித்தார். இது முதலமைச்சர் காமராஜரின் பெருத்த பாராட்டைப் பெற்றது.

சிதிலமடைந்த பல பண்டையக் கோவில்களை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஆவன செய்தார். இவற்றாலெல்லாம் இவர் ‘பரமாச்சாரியார்’ என்று அழைக்கப்பட்டார்.

ராஜாஜி, காமராஜர், வெங்கரட்ராமன், எம்.ஜி.ஆர். முதலிய தலைவர்கள் இவரிடம் தனி மரியாதை கொண்டிருந்தனர். இவரது கருத்து கேட்டு பல அறப்பணிகள் செய்தனர்.

பரமாச்சாரியாரது ஆழ்ந்த கல்வியினால் கவரப்பட்டு பல மேலை நாட்டுப் பல்கலைப் பேராசிரியர்கள் அவரிடம் பாடம் கேட்டனர். ரமண மகரிஷியின் பிரதான சீடரான பல் பிரண்டன் ரமணரிடம் பரமாச்சாரியாரால் அனுப்பப்பட்டார்.

இவை எல்லாவற்றையும் விட, இந்தியாவின் அரரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்ட போது, ஜவஹர்லால் நேரு இந்து சமய மடங்கள், ஆலயங்கள் முதலியன அரசால் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தனது இடது சாரி சித்தாந்த ரீதியாக வலியுறுத்தினார். அதன் பேராபத்தை அனேகமாக இந்தியாவின் வேறேந்த ஆன்மீகத் தலைவரும் உணரவில்லை. அப்போது பரமாச்சாரியார் பாரத தேசத்தின் அனைத்து மடாதிபதிகளையும் கூட்டி நேருவின் இடது சாரிப் போக்கினால் உண்டாகப்போகும் ஆபத்தை விளக்கி சமய சார்பற்ற அரசில் பாரம்பரியமான மடங்களும் ஆதீனங்களும் எப்படிப் பாதுகாகப் பட வேண்டும் என்று ஒரு வரைவு எழுதி அதனை வல்லபாய் படேலிடம் தரச் சொன்னார்.

இதில் முரணென்னவென்றால் கிறித்தவ, இஸ்லாமிய மத ஸ்தாபனங்கள் அந்த சமூகத்திடமே இருக்கும்; இந்து சமய மடங்கள் மட்டும் அவை ஒரே அமைப்பு சாராமல் உள்ளதால் அரசினால் நிர்வாகிக்கப்படும் என்பதே. இதனைத் தக்க காலத்தில் கண்டதால் பரமாச்சாரியார் இந்து தர்ம மடங்களைக் காத்தார்.

காஞ்சி பரமாச்சாரியார் தந்த ஒரே காரணத்தால் படேல் அந்த வரைவை ஏற்றுக்கொண்டு அதனை அரசியல் அமைப்பு எழுதிய கமிட்டியிடம் ஒப்படைத்தார். அதுவரை அவருக்கும் நேருவின் இந்த இந்து சம்ப்ரதாய விரோதப் போக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்றுவரை சங்கர பீடங்களும், வைணவ மடங்களும், ஆதீன மடங்களும் சுதந்திரமாகத் தங்கள் ஆன்மீகப் பணியை நடத்திக் கொண்டுள்ளன என்றால் அதற்கு காஞ்சி பரமாச்சாரியாரே காரணம்.

இதனாலெல்லாம் பரமாச்சாரியாரின் ஆளுமை பாரத தேசம் முழுவதும் பரவியது.எந்த ஒரு சமயம் சார்ந்த நடவடிக்கையும் இவரது கருத்துக்குப் பின்னரே எடுக்கப்பட்டது. இதனாலேல்லாம் அவர் தனது பொறுப்பை துழஷ்பிரயோகம் செய்தார் என்று பொருள் அல்ல.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிக மிக எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டார். பல சமய, இன, சாதி மக்களும் அவர் பால் ஈடுபாடு கொண்டனர்.

காலம் 1986. தமிழகத்தில் மத மாற்றம் அமோகமாக நடைபெற்று வந்தது. மதச் சார்பற்ற அரசுகள் இதனைத் தடுக்கவில்லை. மண்டைக்காடு , மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் கொடுமையான மதக் கலவரங்கள் மூண்டன. இதற்குக் காரணம் மத மாற்றமே என்று நீதி விசாரணை மூலம் தெரிய வந்தது. இதனைக் கண்டு பிடிக்க நீதி விசாரணை எல்லாம் தேவை இல்லை என்றாலும் அரசியலமைப்பு சார்ந்த சமூகமாக இருப்பதால் நீதி விசாரணை தேவைப்பட்டது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நிலைமையின் உக்ரத்தை உணர்ந்தார். கட்டாய மத மாற்று தடைச் சட்டம் கொண்டு வர முயற்சி செய்தார்.

இது புதிய நடைமுறை அல்ல. முன்னமேயே ஒரிசா, ம.பி. முதலிய மாகாணங்களில் அமலில் இருந்த ஒன்றே. ஆனாலும் அன்றைய எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. காரணம் கண்டறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை. பாரத பாரம்பரிய கலாச்சாரத்தை அழிப்பதையே தங்கள் முழு முதல் வேலையாகக் கொண்டுள்ள மத மாற்று சக்திகள் நேரிடையாக இல்லாமல் எதிர்க்கட்சிகள் மூலம் நெருக்கடி ஏற்படுத்த முயன்றன. ஆனாலும் எம்.ஜி.ஆர்.முன் சென்றார்.

அரசின் இந்த கலாச்சார ஒற்றுமை காக்கும் செயலில் முன் நின்று உதவியது பரமாச்சாரியார் அவர்கள். அரசின் வரைவுக்கு சில திருத்தங்கள் அறிவுறுத்தினார். அவற்றை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார். அரசியல் அமைப்பு எழுதப்பட்டபோது பரம்மாச்சாரியாரின் பங்கை அறிந்த எம்.ஜி.ஆர். அவரது சட்டத் திருத்தங்களை ஒப்புக்கொண்டார்.

ஆனால் என்ன ஆயிற்று, என்ன சக்திகள் வேலை செய்தன என்று தெரியவில்லை. சட்டம் நிறைவேறவில்லை. சிறிது காலத்தில் எம்.ஜி.ஆர். இயற்கை எய்தினார். சட்டமும் இயற்கை எய்தியது.

ஆனால் சட்டம் இயற்றப்பட்டுவிட்டால் யாருக்கெல்லாம் அபாயம் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. இந்த சக்திகள் விழித்துக்கொண்டன.

நிலைமை இவ்வாறிருக்க, காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி ஜெயேந்திரர் பாரத சமுதாயத்தின் ஒற்றுமையை காக்க ‘ஜன கல்யாண்’, ‘ஜன ஜாக்ரண்’ என்று இரண்டு அமைப்புக்களைத் துவக்கினார். சாதிகள் கடந்து மக்களை ஒருமைப்படுத்த முயன்றார்.அதுவரை உயர் சாதிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட காஞ்சி மடத் துறவி கிராமக் கோவில்களுக்கும் செல்லவதை வழக்கமாகக் கொண்டார். அக்கிராமக் கோவில் பூசாரிகள் கொடுத்த திருநீறு முதலிய இறை சார்புப் பிரசாதங்களை நேரில் பெற்று அணிந்துகொண்டார்.

ஜெயேந்திரரின் இந்த சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மத மாற்று சக்திகளின் அடி மடியில் கை வைப்பது போல் இருந்தது. அதுவரை எந்தக் காரணம் கொண்டு மத மாற்றம் செய்தனரோ அதுவே ஆட்டம் காணும் போல் தோன்றியது.

இந்த சக்திகள் நாஸ்திக சக்திகளைத் தூண்டின. காஞ்சி மடத்தின் மீது அவதூறு சொல்வது அதிகமானது. ஆனாலும் பரமாச்சாரியாரின் ஆளுமையாலும் பரந்த அறிவாலும் மடத்துக்கு இந்த சக்திகளால் ஆபத்து ஏற்படவில்லை.

1993-ம் ஆண்டு பரமாச்சாரியாரும் இறையடி சேர்ந்தார். காவல் தெய்வத்தின் மறைவு மடத்திற்கு ஒரு பின்னடைவே.

இந்த நிலையில் இரண்டாம் முறையாக ஜெயலலிதா ஆட்சி பதவி ஏற்றது. அவர் மடத்துடன் உறவாடுவது போல் தோன்றியது.

அப்போதைய பா.ஜ.க. அரசுடன் சேர்ந்து அயோத்தியா பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கியிருந்தார் ஜயேந்திரர். இதனாலும் அவரது ஆளுமை பாரதம் முழுவதும் பரவலாக இருப்பது போல் தோன்றியது. நாட்டு நடவடிக்கைகளில் கருத்து கூறும் அளவில் இருந்தார் ஜெயேந்திரர்.

‘ஆடு, கோழி’ முதலியனவற்றைக் கோவில்களில் பலியிடும் வழக்கத்தைத் தமிழக அரசு தடை செய்தது. இதற்க்குப் பின்னும் காஞ்சி மடம் இருந்தது என்று ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏனெனில் ஆதி சங்கரர் மிருக வதையை எதிர்த்தார்.

சில மாதங்களில் தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றுத் தடைச் சட்டம் வந்தது. எம்.ஜி.ஆர். கொண்டுவர இருந்த சட்டம் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. அதனை ஆதரித்து, வழக்கத்திற்கு மாறாக, ஜெயேந்திரரும் அவரது அடுத்த பீடாதிபதியான விஜயேந்திரரும் சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்தினர். இது காஞ்சி மட வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்தது.

இவ்வாறு வெளிப்படையாகக் காஞ்சி மடாதிபதிகள் அரசியல் சட்டத்திற்கு ஆதரவாகக் கூட்டம் நடத்தியபின் மத மாற்று சக்திகள் நிலமையின் ஆபத்தை உணர்ந்தன. வழ்க்கை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்க நேரமில்லாமல் சட்டத்தின் பின்னணி என்று தாங்கள் ஊகித்த காஞ்சி சங்கர மடத்தைக் குறி வைத்தன.

இதற்கு சற்று முன்னர் போப் ஆண்டவர் ( இரண்டாவது ஜான் பால்)  சீனா செல்ல முடிவெடுத்தார். ஆனால் சீன அரசு அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. அதன்பின் அவர் பாரதம் வந்தார். ‘முதல் ஆயிரமாண்டில் ஐரோப்பாவை கிறித்து நாடாக்கினோம்; இரண்டாம் ஆயிரம் ஆண்டில் இரு அமெரிக்காக்களையும் வெற்றி கொண்டோம்; மூன்றாம் ஆயிரத்தில் ஆசியா நல்ல அறுவடைக்குக் காத்திருக்கிறது”, என்று பரதத்தில் கூறினார். மத மாற்று சக்திகளுக்குப் பாதை காட்டினார்.

இரண்டு வருடங்கள் கழித்து அதே சீன அரசு ‘மதங்களுக்கிடையேயான உரையாடல்’ என்று காஞ்சி ஜெயேந்திரரை அழைதது. அவருக்கு தலாய் லாமாவுடன் நல்ல உறவு என்பதும் அதற்கு ஒரு காரணம். ஆனால் ஜெயேந்திரர் போகவில்லை என்பது வேறு விஷயம்.

ஒரு புறம் ஜெயேந்திரர் சேரிகளுக்குச் செல்கிறார்; அவர்களது மத மாற்றத்திற்குத் தடையாக இருக்கிறார்; இன்னொரு புறம் அவர் அயோத்தி பிரச்சினையத் தீர்க்க முயல்கிறார்; அதே சமயம் தமிழ் நாட்டின் மத மாற்று தடைச் சட்டத்தை ஆதரிக்கிறார்; சீன அரசு அவருக்கு அழைப்பு விடுக்கிறது ஆனால் போப்பை சீனாவிற்குள் அனுமதிக்கவில்லை; ஆனால் போப் ஆண்டவரோ ஆசியாவில் அறுவடை என்று கூறிச் சென்றுள்ளார் – இந்த் நிகழ்வுகள் மதமாற்ற சக்திகளுக்கு கலக்கத்த ஏற்படுத்தின.

இவை எல்லாம் போக, நேபாள இராஜ பரம்பரையினர் காஞ்சி பீடாதிபதிகளைத் தங்கள் குருவாகக் கொண்டிருந்தனர். ஆக இவர்களது ஆளுமை பாரத எல்லை தாண்டியும் இருந்தது மத மாற்று சக்திகள் கண்களிலிருந்து தப்பவில்லை.

எனவே, தங்கள் ‘திருப்பணி’களைத் தொடர இந்த சக்திகளுக்கு ஒரே ஒரு பறவை வீழ்ந்தால் போதும் என்று புரிந்தது.

இதனிடையே தமிழகத்த்ன் அன்றைய ஆளும் சக்திகளுக்கும் சங்கர மடத்திற்கும் இடையே சில பிணக்குகள் தோன்றின. அவை சில சொத்துக்கள் தொடர்பானவை என்று வதந்திகள் பரவின.

வெண்ணையும் திரண்டு வந்து தாழியும் உடைந்தால் கேட்கவா வேண்டும் ?

சங்கர ராமன் என்றோரு சங்கர மட அதிருப்தியாளர் கொல்லப்பட்டார்.

பின்னர் நடந்ததை நாடே அறியும்.

ஆங்கிலத்தில்   ” Conspiracy Theory ” (சதித் திட்டம் ) என்பார்கள். இப்படியும் நடந்திருக்கலாம் என்ற ஒரு பார்வையே தவிர இது தான் நடந்தது என்பது அல்ல. சில நிகழ்வுகள் ஒரு கால அடிப்படையில் நடக்கின்றன. அவற்றை அந்த நிகழ்வுகளின் வெளியில் இருந்து பார்த்தால் நமக்கு ஒரு “தன்மை” ( Pattern ) புலப்படும்.

என் பார்வையில் எனக்குப் புலப்பட்ட “தன்மை” இது.

ஒரு நிமிடம்.

“மத மாற்ற தடைச் சட்டம்”  திரும்பப் பெறப்பட்டது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.

காஞ்சி மட வழக்கு – தொடரும் பார்வை

ஆதி சங்கரர் தனது மிகக் குறுகிய ஆயுளில் பாரதம் முழுதும் பயணித்து நான்கு மடங்களை நிறுவினார் ( ஐந்து என்று கூறுவாரும் உளர். ஐந்தாவது மடம் காஞ்சி என்றும் கூறுகின்றனர்). பூரி, சிருங்கேரி, துவாரகா, பத்ரி என்ற இடங்களில் ( பாரதத்தின் நான்கு திசைகளில் ) நிறுவி அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார்.

இதன் மூலம் ஒரு பலன் ஏற்பட்டது. பாரதம் முழுதும் பரவிக்கிடந்த பல தெய்வ வழி பாடும், மிருக பலியும் அழியத் துவங்கின. எந்தக் காரணங்களைக் கொண்டு பௌத்தமும் ஜைனமும் வளர்ந்ததோ அவை அழிந்தன.சிறு தெய்வ வழிபாடே மிருக பலிக்கும் உயிர்ப்பலிக்கும் காரணம் என்பதை உணர்ந்து வேதத்தின் உட்பொருளை விளக்கி ‘சனாதன தர்மம்’ என்று ‘அறு மதங்களை’ ஸ்தாபனம் செய்தார். அதனால் ‘ஷன்-மத-ஸ்தாபனாசாரியா’ என்று அழைக்கப்பட்டார். இவரது பணியால் மட்டுமே ‘சனாதன தர்மம்’ காலத்தின் முக்கியப் பகுதியில் அழியாமல் இருந்தது, இவரது பின்னவரான இராமானுசர் இவரது ஒரு பிரிவை ( விஷ்ணு வழிபாட்டை ) மேல் எடுத்துச் சென்று அதே சமயம் ‘விஸிஷ்டாத்வைதம்’ என்னும் அனனவரையும் ஒன்றிணைக்கும் வழிமுறையைத் தோற்றுவித்தார். ஆதி சங்கரர் இல்லையென்றால் இராமானுசரே இல்லை என்று கொள்ளும் அளவிற்கு அவரது பணி இருந்தது.

ஆனால் பின்னாளில் முகலாய பற்றும் இஸ்லாமிய அரசுகளின் ஆதிக்கம், பின்னர் வந்த ஆங்கில ஆதிக்கம் முதலியனவற்றால் சனாதன தர்மம் பின்னிடைவு அடைந்தது என்பது உண்மையே. மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரி பிப்ரவரி 21835 ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.

மிக நீண்ட அறிக்கையில் மிக முக்கியமானவை  இவை இரண்டு :

“We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern,  –a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. ”

“I would at once stop the printing of Arabic and Sanscrit books. I would abolish the Mudrassa and the Sanscrit College at Calcutta. Benares is the great seat of Brahminical learning; Delhi of Arabic learning. If we retain the Sanscrit College at Bonares and the Mahometan College at Delhi we do enough and much more than enough in my opinion, for the Eastern languages ”

சாராம்சம் இது தான். பாரத நாட்டு மக்களை அடிமைப் படுத்த அவர்களைத் தங்களது கலாச்சாரம் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கு அவர்களது இரு மொழிகளான சம்ஸ்க்ருதம் மற்றும் அராபிய மொழிகளையும் அவற்றின் மூலம் அவர்களைச் சென்றடையும் கல்வியையும் கெடுக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் ஆங்கிலக் கல்வி மூலம் ‘நிறத்தால் இந்தியர்களாகவும் இரத்தத்தால் ஆங்கிலேயர்களாகவும்’ உள்ள ஒரு சமூகத்தை ஏற்படுத்த முடியும். பாரத நாட்டவரின் பண்பாட்டைப் பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுத்தப்பட்டால் பின்னர் சாம்ராஜ்யம் சரிவது வெகு சுலபம். இதுவே அவரது கணக்கு. இதற்குப் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிகழ்விற்குப் பின்பு ஆங்கில வழிக் கல்வி துவங்கியது. இந்தியப் பாராம்பரியம், கல்வி, மருத்துவம், கலை,  வான நூல் ஆராய்ச்சி முதலியன பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதால் ஆங்கிலேய ஆட்சி நன்மை அடையும் என்பது மட்டும் காரணமல்ல. இதன் மூலம் பாரதத்தில் கிறித்துவம் பரவும் என்பதும் தான்.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி ‘மதச் சார்பற்றதாக’ இருந்ததாகத் தானே நாம் படித்துள்ளோம் ? அவர்களிடமிருந்து தான் நாம் “Secularism”  என்கிற பதத்தையே கற்றுக்கொண்டோம் ? என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆங்கில ஆட்சி கிறித்தவம் பரப்ப ஆவன செய்தது என்பதே உண்மை. ஆனால் மதம் பரப்புவது மட்டுமே அவர்களது கொள்கையா என்றால் அது இல்லை.

மதம் பரப்ப அரசு உதவும். மதம் பரவுவதன் மூலம் அரசு செலுத்துவது சுலபமாகி விடும். “நான் உனக்கு உதவுகிறேன், நீ எனக்கு உதவ வேண்டும்” என்கிற கொள்கைப்படி நடந்துகொண்டன ஆங்கில அரசும் மதம் பரப்பும் நிறுவனங்களும்.

இது என்ன அபாண்டமான பழியாக இருக்கிறதே என்று நீங்கள் எண்ணலாம்.

ஆதாரங்கள் பல உள்ளன. சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

சர்.சார்லஸ் ட்ரேவெல்யன் ( Sir Charles Trevelyan ) ஆக மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில அதிகாரி. மிகச் சிறிய வயதிலேயே ஆங்கில அரசால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். சென்னை மாகாணத்தின் ஆட்சியாளர் (Governor General ) ஆனார். அதற்கு முன்னர் பல ஆங்கில அதிகாரிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வியின் தேவை பற்றிக் குறிப்பிட்டார். அவர் ஆங்கில பாராளுமன்றத்திற்குப் பல குறிப்புகளும் அறிக்கைகளும் அனுப்பினார். அவற்றில் ஒன்று “The Political Tendency of the different Systems of Education in use in India” ( இந்திய கல்வி முறைகளின் அரசியல் பார்வைகள்). அற்புதமான ஒரு கண்ணோட்டம் அது. ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இவ்வளவு காலம் ஆண்ட பின்னர் இந்த மக்களுக்கு நாம் ஆங்கிலக்கல்வி அளிக்கவில்லை என்றால் து நமது ஆங்கில ஆட்சிக்கு நாம் செய்யும் துரோகம் என்று கூறுகிறார். ஆனால் அவரே ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார். இதே ஆங்கிலக் கல்வியை வைத்து இந்தியர்கள் நம்மைத் துரத்திவிடுவார்கள் என்றும் கூறுகிறார். அதையும் அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்.

இக்கருத்துக்களை அவர் தெரிவித்த காலம் 1838. அவர் வயது 31.

என்னைப்பொறுத்தவரை ஆங்கில ஆட்சியாளர்களில் ஆக அதிக மதி நுட்பமும் முன்னுரைப்புத் திறனும் கொண்டவர் இவர் என்பது என் கருத்து.

இதுவரை சரி. மதம் பற்றி ஒன்றும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

இதே ஆங்கிலேயர் 31-அக்டோபர் 1881 ( தனது 74 வயதில் ) இங்கிலாந்தில் ஒரு உரை ஆற்றுகிறார். அதில் பௌத்தம், இந்துமதம், கிறித்தவம் முதலியவற்றைப் பற்றிப் பேசுகிறார். அதில் அவரே கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது. இவரா இப்படிப் பேசுகிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

“.. as the Christian religion is the only one capable of correcting the disorders caused by the passions of mankind, and of leading the world to a state of perfection… My own opinion is that the conversion of India into Christianity will take palce in a different way from that generally anticipated..I hope, many of us in this hall will see that the Christian locomotive is placed on Indian rail..”

ஒரு அரசு அதிகாரி, மதச்சார்பில்லாமல் நடந்து கொள்வதற்கு நமக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்த ஆங்கில அரசு அதிகாரிகள் என்று நமது வரலாற்றுப் புத்தகங்கள் கூறியவர், தனது இறுதிக் காலத்தில் இந்தியாவை கிறித்தவ நாடாக ஆக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவர் பதவியில் இருந்த போது என்னவெல்லாம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. விவரம் கிடைத்தவுடன் எழுதுகிறேன்.

இவர் மட்டுமா ? சர்.ரிச்சர்ட் டெம்பிள் (Sir Richard Temple ) என்றொரு அதிகாரி. இவர் ஏப்ரல் 1883 ல் லண்டனில் ஒரு பாப்டிஸ்ட் மிஷனரி சொசைடி (Baptist Missionary Society) என்னும் மத பிரச்சார நிறுவனத்தில் பேசுகிறார் :

“If the tribals are attached rapidly to Christianity,they will form a nucleus around which British power and influence may gather… as patriotic people you may be confident that the missions in India are doing a work which strengethens the imperial foundations of British power..”

இவற்றின் சாராம்சம் இது தான். நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போன ஆங்கில அதிகாரிகள் கூட தங்களின் இந்தியப் பணியின் போது எவ்வாறு கிழக்கத்திய கலாச்சாரத்துக்கும் கல்விக்கும் ஊறு செய்து நமது பெருமையை நாமே அறியாமல் செய்ய அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதும், அது வெளியே தெரியாமல் எப்படி ‘மதச்சார்பின்மை’ பூச்சு கொண்டு பூசி மெழுகினார்கள் என்பதே.

ஆனால் இவை எதுவுமே நமக்குத் தெரிவதில்லையே ஏன் ? இன்னமும் ஆங்கில அரசுகள் மதச்சார்பில்லாமல் நடந்துகொண்டார்கள் என்றும் அவர்களைப்போல் நாமும் அவ்வாறே செய்யவேண்டும் என்றும் கூறும் “முற்போக்காளர்” மற்றும் அவரது “கல்விமுறை” பற்றி என்ன சொல்வது ?

சரி. ஆங்கில அரசாளர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப அரசு இயந்திரம் பயன்படுத்தினார்கள், மதப் பரப்பு இயந்திரமும் அரசு இயந்திரமும் ஒன்றோடொன்று ஒத்து செயல்பட்டன என்றும் கண்டோம்.

இதற்கும் காஞ்சி மட வழக்கிற்கும் தொடர்பென்ன ? தொடர்ந்து காண்போம்.

பண்டைய தமிழர் – ஒரு பார்வை

காஞ்சி வழக்கு குறித்த பதிவுத்தொடரில் பண்டைய தமிழர் எங்ஙனம் ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

தற்காலத்திய அத்வைத மடங்களில் ஒன்றான காஞ்சி மடம், அதன் துறவியரின் சமூக ஆன்மிகப் பணி, இவர்களின் தேவை முதலியன பற்றி அறிந்து கொள்ள இந்த அத்வைத சித்தாந்தமே தோன்றியிராத போது தமிழகம் எப்படி இருந்தது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுவும் ஆரியர் படை எடுப்பு என்ற ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்வும் கலையும் கலாச்சாரமும் வேறாகின என்று நமக்குப் போதிக்கப்பட்டுள்ள வேளையில் சங்க காலம் முதல் தமிழரின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது தேவைப்படுகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட கல்வி ஆரியர் படை எடுப்பின் முன் தமிழர் நிலை மிகவும் முன்னேறிய ஒரு சமூக நிலையாக இருந்தது என்றும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டது என்றும், மூட நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றும் மக்கள் அனைவரும் ஒரு நிகர் சமானமாக எவ்வித சாதிப் பிளவுகளும் இன்றி ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் கூறுகிறது. ஆனால் ஆரியர் படை எடுப்புக்குப்பின், வைதீக பிராம்மணர்களின் சூழ்ச்சியால் தமிழர் பிளவு பட்டனர் என்றும், பல கடவுளர் வழிபாடு புகுத்தினர் என்றும், உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைப் புகுத்தினர் என்றும், மூட நம்பிக்கைகள் பெருகின என்றும் பெண்ணடிமைத்தனம் தோன்றியது என்றும் இதற்குக் காரணம் வட நாட்டிலிருந்து வந்த மாடு மேய்த்த ஆரியர் என்றும் நமது தமிழ்ப் பாட நூல்களும் ‘அறிஞர்களும்’ தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை உண்மையா ? ஆதி சங்கரர் தொடங்கி வைதீக காலம் தொட்டுத்தான் மூட நம்பிக்கைகளும், பெண் அடிமைத்தனமும், சாதிப் பாகுபாடுகளும் தோன்றியனவா ? இவரும் இவர் சார்ந்த வைதீக மதமும் அவரைப் பின்பற்றிய வைதீக மதத்தின் மற்ற பரிணாமங்களும் தான் பாரத தேசத்தின் அத்தனை கேடுகளுக்கும் காரணமா?

இவற்றைப் பார்ப்பதற்கு நாம் சங்க காலத்தை ஒரு அளவு கோலாகக் கொள்வோம். சங்கத்திற்கு முன்னர் தோன்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் ‘தொல்காப்பியம்’, ‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘நற்றிணை’ முதலிய தொல் நூல்களின் வழி நின்று அக்கால சமூகத்தை ஆராய்வோம்.

முற்போக்காளர்கள் கூறுவது : ‘பண்டைய தமிழர் ஒரே கடவுள் வழிபாட்டையே கொண்டிருந்தனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கையே இருந்து வந்தது. ஆரியர்கள் வந்த பின்னரே பல தெய்வ வழிபாடும் பூசை முறைகளும் உயிர்ப்பலி முறைகளும் தமிழகத்தில் தோன்றின’ என்கின்றனர். ஆனால் உண்மை என்ன?

பண்டைத் தமிழகத்தில் ஒரே கடவுளோ அல்லது கடவுளே இல்லை என்றா இருந்ததா?

இல்லை. சங்க நூலான தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின் பெயருக்கு அகராதி போன்று ஒரு பகுதி உள்ளதாகத் தெரிகிறது.

தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர் குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும் தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குப்பிடப்பட்டுள்ளார்.

ஆண் தெய்வங்கள் தவிர ‘கொற்றவை’ என்னும் பெண் தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று வழிபட்டனர் என்று தமிழ் அறிஞர் சாமி.சிதம்பரனார் கூறுகிறார்.

தொல்காப்பியம் ‘மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே ..” என்னும் இடத்தில் கொற்றவை பற்றிக் கூறுகிறது.

இவை தவிர கதிரவன், தீ, நிலவு முதலிய இயற்கைப் பொருட்களையும் தமிழர் கடவுளர்களாக வழிபட்டனர் என்பதை ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வந்தது என்று தொல்காப்பியம் பறைசாற்றுகிறது.

திருமாலை ‘ஆல் அமர் கடவுள்’ என்றும், முருகனை ‘சேயோன்’ என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.  முருகன் ‘சூரனைக் கொன்ற ஒளி பொருந்திய வேர்ப்படையை உடைய முருகன்’ என்று போற்றப்படுகிறான். (சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் )

இத்தெய்வங்கள் தவிர இறந்தோரையும் கடவுளர்களாக வழிபட்டுள்ளனர். அவர்கள் நினைவாக கற்களை நட்டு ( நடுகல் ) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல் ..’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்.

வைதீக மதங்கள் வருகையாலும் ஆதி சங்கரரது ‘அத்வைத’ சமயத்தின் தாக்கத்தாலுமே வேதங்களின் முறைப்படி உயிர்ப்பலிகள் தொடங்கின என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு வந்ததுள்ளது. அது உண்மையா ?

சங்க காலத்தில் முருகனுக்கு ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்து வழிபட்டனர் என்று  குறுந்தொகையில் உள்ளது. (சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி..)

‘வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு’ என்று நற்றிணையில் ( வெறி எடுத்தால்  உன் நோய் தீரும் என்று எண்ணி ஆட்டை அறுத்து உன் அன்னையால் வணங்கப்படும் முருகன்..) வருகிறது.

ஆக பலி இட்டு வணங்குவது வேத காலத்திற்குப் பின் தமிழகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் புனைவே.

மூட நம்பிக்கைகள் வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டது என்று கூறுவதும் அபத்தமே.

மழை வேண்டும் என்று புறநானூற்றில் ‘மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய் மாறி ஆன்று மழைமேக்கு உயர்க  .. ‘ என்று மழை பெய்ய வேண்டி பலி கொடுத்து வணங்குவர் என்றும் வருகிறது.

கோழி, ஆடு முதலியன பலவகையான பலிகளுக்குப் பயன்பட்டன என்று பல பாடல்கள் தெரிவிக்கின்றன.

பலன்கள் வேண்டிக் குரவைக் கூத்து, பாவை நோன்பு முதலியன சங்க காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாலும் அந்தப் புராதனமான நோன்பையே நோற்றாள் என்று வைணவம் குறித்த தொடர்களில் நாம் முன்னமேயே கண்டோம்.

இம்மை, மறுமை முதலியன பல முறை சங்கப் பாடல்களில் இடம் பெறுகிறது. சங்கம் மருவிய காலத்தவரான வள்ளுவரும் வானுலகம், இம்மை, மறுமை, ஊழ்வினை முதலியன குறித்துப் பேசியுள்ளார்.

சகுனம் பார்ப்பதும், நல்ல நாள் பார்ப்பதும் சங்க காலத்திலேயே இருந்த பழக்கங்கள்.

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை ‘ என்று தொல்காப்பியம் களவியல் சூத்திரம் ‘களவு மணம் புரியும் காலத்தில் கெட்ட நேரத்தில் காதலியுடன் சேராமல் இருக்கும் பழக்கம் தலைவனிடம் இல்லை..” என்று கற்பு மணம் புரிந்தோர் நாளும் கிழமையும் பார்ப்பார்கள் என்றும் களவு மணம் புரிந்தோர் அவ்வாறு இல்லை’ என்றும் கூறுகிறது.

பல்லி சொல்லுக்கும் பலன் பார்த்தார்கள் பண்டைத் தமிழர் என்பது கலித்தொகையில் காணக்கிடைக்கிறது.

எரி நட்சத்திரம் பற்றியும் புறநானூற்றில் செய்திகள் உள்ளன. அது தீங்கு நிகழப்போவதை உணர்த்துவதாகக் கொள்ளப்பட்டது. இரும்பொறை என்ற மன்னன் இறந்தபோது கூடலூர் கிழார் என்னும் புலவர் ‘கனை எரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ..” என்னும் புறப் பாடலில் குறிப்பிடுகிறார்.

பால் தயிராகாமல் பாலாகவே உள்ளது; ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடவில்லை; உறியில் இருந்து இறக்கிய வெண்ணையை உருக்கினால் உருகவில்லை; சகுனங்கள் சரியாக இல்லை என்று ஆய்ச்சியர் குரவையில் சிலப்பதிகாரம் கூறுகிறது. இவை சங்கம் மருவிய காலம்.

இவை தவிர பெண்கள் உடன் கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு நோற்றல் முதலியனவும் சங்கப் பாடல்களில் பெருமையாகவே பேசப்படுகிறது. எனவே இவை வைதீக மதத்தைப் பரப்பிய ஆதி சங்கரர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழர் மரபில் இருந்துள்ளன.

அவ்வையார், நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் முதலான பெண் புலவர்கள் இருந்தாலும் பெண்கள் பெரும்பாலும் கல்வியிலும் உரிமைகளிலும் பின்தங்கியே இருந்தனர் என்பதும் தெரிகிறது.

தொல்காப்பியர் ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’ என்று பயமும், வெட்கமும், அறியாமையும் முற்பட்டு நிற்பது எப்போதும் பெண்களுக்கு உரிய குணம் என்று கூறுகிறார்.

வள்ளுவரும் ‘மனைவியின் கீழ்ப்படிந்து நடக்கும் முறையற்ற செயல் எந்நாளும் பெரியோர் கூட்டத்தில் வெட்கம் தரும் செயலாகும் என்பதை ‘இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்’ என்று கூறுகிறார்.

இவை தீமை என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் இவை வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டன என்பதும் பண்டைய தமிழர் வாழ்வில் இவை ஒன்றுமே இருந்ததில்லை என்பதும் உண்மை கலப்பிலாத பொய் என்பதும் நாம் அறிய வேண்டியது ஆகும்.

சரி. இப்பண்டைய தமிழர் வாழ்விற்கும் ஆதி சங்கரர் வழி வந்த காஞ்சி மடத்திற்கும் தொடர்பென்ன ? விரைவில் பார்ப்போம்.

காஞ்சி வழக்கு – ஒரு பார்வையின் தொடக்கம்

முதலில் ஒரு சமர்ப்பணம் – எனக்கும் ஆதி சங்கரர் வழி வந்துள்ள மடங்களுக்கும் அவர்களது சித்தாந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

சங்கர சித்தாந்தம் என்பது ‘அத்வைதம்’ என்று முன்பு கண்டிருந்தோம். சித்தாந்த ரீதியாக அத்வைதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு பிரம்மம் மட்டுமே உண்மை , மற்றது எல்லாமே மாயை, நாம் அனைவரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு, உலகம் என்பது மாயை, பொருள் என்பது இல்லை, ஜடப் பொருள்கள் ஒரு தோற்றப்பிழையே ( Mirage ) என்பது அத்வைத சித்தாந்தம்.

இந்த சித்தாந்தத்தை முன் வைப்பவர்கள் அத்வைத சம்பிரதாயம் சார்ந்துள்ள ஆதி சங்கரர் வழி வந்துள்ள ஐந்து மடங்களைச் சார்ந்த துறவியரும் அவர்களது வழி வந்துள்ளவர்களும். அத்வைத சித்தாந்தம் இக்காலத்தில் பொருள் ரீதியிலான உலகம் என்பதே உண்மை இல்லை என்று சொல்வது பெரும்பாலான மக்களால் ஒப்புக்கொள்ள முடியாதது என்பதே என எண்ணம். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ..” என்பதும் நோக்கத்தக்கது.

அப்படியென்றால் ஆதி சங்கரரும் அவர் வழி வந்த ஐந்து மடங்களும் இந்திய மரபிற்கும் கலாச்சார ஒற்றுமைக்கும் ஒன்றுமே செய்யவில்லையா ? என்ற கேள்வி எழலாம்.

ஆதி சங்கரர் இந்திய தத்துவ மரபிற்கு ஆற்றியுள்ள பணியைப் பற்றியும் அவர் இல்லை என்றால் இந்து மதம் என்று இன்று ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பாக உள்ள ஒரு நிலையும் இல்லாமலே போயிருக்கும் என்று முன்னமேயே இந்தப் பதிவில் பார்த்தோம். அத்வைத சித்தாந்தமே பாரதத்தின் சித்தாந்தம் என்னும் அளவிற்கு உயர்த்திய பெருமை ஆதி சங்கரரைச் சாரும். சுவாமி விவேகானந்தரும் அத்வைத சித்தாந்தத்தையே முன்வைத்துப் பேசினார். அந்த அளவிற்கு மிகச் சிறிய வயதிலேய மிகக் குறுகிய காலத்தில் ஆதி சங்கரர் ஒரு பூமி அதிர்ச்சிக்கு நிகரான கலாச்சாரப் புரட்சி செய்தார்.

சமுதாய அளவிலும் ஜைனமும் பௌத்தமும் தங்களது அழிவை நோக்கி விரைந்து செல்ல ஆதி சங்கரரது அத்வைத சிந்தனையும் ஒரு காரணி என்பதை மறுக்க முடியாது என்று மார்க்சீய சிந்தனையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

சித்தாந்தம் எல்லாம் சரி. அதற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பென்ன ?

தொடர்பு இல்லை என்பதே என் எண்ணம். அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் பொருள் ரீதியில் இல்லாமலே இருந்தன. ஆத்தும ஞானம் பெற ஒருவன் செய்ய வேண்டியன, பிரும்மத்துடன் கலப்பது எப்படி என்பது போன்ற பல உலகியல் ரீதியில் எந்த நோக்கமும் இல்லாததே ‘அத்வைதம்’ என்று ஆதி சங்கரர் போதித்தார்.

ஒரு பாலைவனம் உள்ளது. மேலே சூரியன் பிழம்பாக ஒளிர்கிறது. எங்கு நோக்கினும் நீர் இல்லை. ஆனால் அங்கே சிறிது தூரத்தில் நீர் நிலை தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது இல்லை. இன்னமும் சிறிது தூரத்தில் தெரிகிறது. எனவே மீண்டும் அருகில் சென்று பார்த்தால் அங்கும் இல்லை.

ஆக, நீர் உள்ளது போல் நம் கண்ணுக்குத் தெரிந்தது உண்மையா இல்லையா ?

நம் கண்ணிற்குத் தெரிந்த காட்சி உண்மை. நாம் பார்த்ததும் உண்மை. ஆனால் நீர் இருப்பது உண்மை இல்லை. அது மாயை.

அது போலவே இந்த உலகம் என்பது மாயை. பஞ்ச பூதங்களினால் உண்டான இந்த உலகமும் அதனில் வாழும் உயிர்களும், பாலைவனத்தில் கானல் நீர் போல் மாயை. ஆனால் சுட்டெரிக்கும் சூரியன் உண்மை என்பது போல் பிரும்மம் என்பது மட்டும் உண்மை. சூரியன் ஒளியினால் ஏற்படும் மாயத் தோற்றங்களே உயிர்களும் உலகமும்.

கோனார் தமிழ் உரை அளவில் இருந்தாலும் இது தான் அத்வைத சித்தாந்தத்தின் அடி நாதம். ஆதி சங்கரர் ஏற்படுத்திய இந்த சித்தாந்தத்தை  முன்னிலைப்படுத்தியன ஐந்து பீடங்கள். அவற்றில் ஒன்று காஞ்சி காமகோடி பீடம்.

அவர் வழியிலேயே அவர் ஏற்படுத்திய மடங்கள் செயல்பட்டன என்று கொள்ள முடியுமா என்றால் முழுமையாக இல்லை என்பதே உண்மை.

சரி. அப்படியென்றால் அவரது வழியில் முழுவதும் செல்லாமல் அவர் ஸ்தாபித்த பீடங்கள், குறிப்பாகக் காஞ்சி பீடம் செய்தது என்ன ?

இவை பற்றிக் காணும் முன் அவரால் ஏற்பட்ட மடங்கள் பாரத சமூகத்திற்குச் செய்த பணிகள் என்ன ? அவற்றுக்கும் தற்போது காஞ்சி பீடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கும் காரணம் என்ன ? இந்த வழக்கிற்கும் சமூகத்தில் இந்திய எதிர்ப்பு வாதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ?

பாரத சமூகம் என்ற  அமைப்பு உடைந்து சிதற வேண்டும் என்று விரும்பும் சில அமைப்புகள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குக் காஞ்சி பீடமும் சமூகத்தின் மீது இருந்த அதனின் ஆளுமையும் எவ்வாறு ஊறு செய்தன ; எனவே அவற்றைக் களைய இந்த அமைப்புகள் செய்தவை என்ன ? இதற்கு ‘முற்போக்கு’ சக்திகள் துணை போன கதை என்ன ?

விரைவில் காண்போம்.

%d bloggers like this: