கிராமம் நோக்கி நகர்வோமா ?

பணி ஓய்வு பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள், நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும் போதே ( 60-70 வயது), தங்களது பூர்வீக கிராமத்தில் வாடகை வீட்டிலாவது இருந்துகொண்டு, அவ்வூர்க் கோவிலில் ஏதாகிலும் கைங்கர்யம் செய்துவரலாம். 

ஏனெனில், திவ்யதேசங்களிலேயே கைங்கர்யம் செய்ய, அத்யாபகம், வேத பாராயணம், கோவிலில் செய்ய வேண்டிய தீர்த்த, புஷ்ப கைங்கர்யங்கள் செய்ய ஆட்கள் இல்லை. மற்ற சிற்றூர்களிலும் இதே நிலைதான்.

இதே நிலை தான் பல பாடல் பெற்ற சைவக் கோவில்களிலும் என்று தெரிகிறது. தேரழுந்தூரில் உள்ள சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். அதன் நிலைமை படு மோசம்.

நேற்று, ஆதிவண் சடகோபர் திருநக்ஷத்திரத்தின் போது, தேரழுந்தூரில் நாங்கள் நான்கு பேர் மட்டுமே வீதி புறப்பாட்டிற்குச் சென்றோம். வேத, அத்யாபக அதிகாரிகள் இல்லை எனிலும், ஏதோ தெரிந்த சில பாசுரங்களைச் சேவித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதே ஊரில், ஆதிவண் சடகோபர் உற்சவம் மற்றும் தேசிகர் உற்சவத்தில் சுமார் 400 பேர் பங்கெடுப்பர் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன். 

பணி ஓய்வு பெற்று, பின்னர் சென்னை / மும்பை என்று குடியிருத்தல் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்வது போன்றது என்பது அடியேன் நம்பிக்கை. இட நெருக்கடி, தண்ணிர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் என்று பலதும் இடைஞ்சல்களே.

‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஶ்ரீமத் இராமானுசருடைய ஆணை. 

தங்களது பூர்வீக ஊரில் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு திவ்யதேசம், பாடல் பெற்ற ஸ்தலம் என்று சில ஆண்டுகள் செலவிடலாம். நற் போது போக்காக இருக்கும்.

‘அதெப்படி பணி ஓய்வு பெற்ற உடனே கிராமத்தில் இருக்க சௌகர்யப்படும்?’ என்று கேட்கலாம். 40-60 வயது வரை ஓராண்டிற்கு ஒரு முறையாவது சொந்த ஊர்களுக்குச் சென்று, சின்ன இடம் ஒன்றை வாங்கி, சிறிய அளவிலான வீடு கட்டி, அந்த ஊருடன், மக்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது 60வது வயதில் கைகொடுக்கும்.

மருத்துவ வசதி இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. அது உண்மையே. காலஞ்சென்ற என் தாயார் விஷயத்தில் நான் கண்டதும் அதுவே. ஆகவே தான் 60-70 என்கிறேன். இவ்வாறு பலரும் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தால், கிராமப் பொருளாதாரம் செழிக்கும் என்பதுடன், கிராமங்களில் மருத்துவ வசதிகளும் பெருகும். ஓய்வு பெற்ற மருத்துவர்கள் கிராமங்களுக்கு வர மாட்டார்களா என்ன ? 

உலகமே கொரோனாவில் கட்டுண்டு கிடந்த போது, தேரழுந்தூரில் பெரிய பாதிப்பு இல்லை. மற்ற நோய்களும் அப்படியே. ஆக, கிராமத்திற்குச் சென்றால் ஆரோக்யமாக இருக்கலாம். 

யாரையும் குறை சொல்லவில்லை. மனதில் பட்டது. சொல்கிறேன். அவ்வளவுதான். 

-ஆமருவி
02-10-2022

சங்கிலி

‘என்னடா கார்த்தால நாலு மணிக்கு கூப்டிருக்கே?’ வாட்ஸப்ல் மிஸ்டு கால் கண்டு 7 மணிக்கு அழைத்தேன்.


‘ஒரு ஹெல்ப் வேணும்’ என்றான் முரளி சிகாகோவில் இருந்து. குரலில் கொஞ்சம் அவசரம் தெரிந்தது.


‘ஜூலைல மாமனாருக்கு சதாபிஷேகம் வெச்சிருந்தோம்’ என்று துவங்கினான்.


‘வரப்போறயா? வா வா. பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்றேன். 25 வருஷங்களுக்கு முன்னர் பம்பாயில் என் ரூம் மேட்.


‘இல்ல இப்பவே வரேன்… அதான் ஹெல்ப் வேணும்’ என்றான் மணிரத்னம் பாணியில்.
காத்திருந்தேன்.

‘சதாபிஷேகம் நடக்காது. மாமனார் போயிட்டார். கொஞ்ச நாள்ல மாமியாரும் போயிட்டா’ என்றான் குரலில் தடுமாற்றத்துடன்.


காத்திருந்தேன்.


‘மாமியார் பாடிய மார்ச்சுவரில ரெண்டு மூணு நாள் வெக்கணும். ஒய்ஃப் இந்தியா வந்திருக்கா. மச்சினன் எல்லாம் இந்தியாவுக்கு வந்துண்டிருக்கா. அது வரைக்கும் எடம் வேணும். உனக்கு யாரையவது தெரியுமா?’ என்றான்.


‘ஹோட்டலில் ரூம் போட்டு வை, பேயிங் கெஸ்ட் அரேஞ்ச் பண்ண முடியுமா?’ என்பது போல் இதுவும் ஆகிவிட்டது.


என்ன கொடுமை இது? இரண்டு மாதத்தில் சதாபிஷேகம். இப்போது இருவருமே இல்லை.


‘என்னடா பேச்சே இல்லை?’ அவன் கேட்டதில் நியாயம் இருந்தது.


‘கோவிட் ?’ என்றேன்.


‘தெரியல. டெஸ்ட் எடுத்திருக்காங்க. முடியுமா?’ என்றான்.


‘கோவிட் இல்லேன்னா முயற்சி பண்ணலாம்’ என்று அடுத்த செயல்கள் பற்றி யோசித்தேன்.


ஆபத்பாந்தவன் சங்கம் தான். மருத்துவச்சேவையில் உள்ள ஸ்வயம்சேவக் ஒருவரை அழைத்து உதவி வேண்டினேன். பொறுமையாகக் கேட்ட அவர் ‘அவங்களக் கவலைப் பட வேண்டாம்னு சொல்லுங்க’ என்றார்.


தெய்வாதீனமாகக் கோவிட் இல்லை.


யார் யாரையோ பிடித்து, எங்கெல்லாமோ சொல்லி, இரண்டு நாட்கள் மார்ச்சுவரியில் காத்து, நேற்று கரையேறினார் கிருஷ்ணனின் மாமியார்.


முன்களப் பணியாளர்கள் என்பவர்கள் இந்தச் சங்கிலியில் உள்ள அனைவருமே தான். மார்ச்சுவரி ஊழியர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், குப்பை அள்ளுபவர்கள், காவல் துறையினர் என்று நேரடி மருத்துவம் சாராத இத்தனைப் பிணைப்புகள் உள்ள சங்கிலி அது.


அந்தச் சங்கிலிக்கு வணக்கம்.

பிழைத்திருத்தல்

‘பொழச்சுக் கெடந்தா நாளைக்கு வரேன்’.

நமது பேச்சு வாக்கில் நடைபெறும் சாதாரண வழக்கு இது. ‘நாளை’ என்பது அநித்யம் என்பதை மீண்டும் மீண்டும் நமது உள்ள அடுக்குகளில் பதிய வைத்துக் கொண்டே இருந்த உத்தி என்று தோன்றலாம். அதைப் போலவே, அடிக்கடி கடும் பஞ்சங்களின் தாக்கத்திலேயே இருந்ததால் ‘யார் இருப்பார், யார் போவார், எப்போது காண்போம்’ என்னும் தகவல் தெரியாததால் வந்துள்ள வழக்காகவும் இருக்கலாம்.

இன்றைய நிலையில் எதையுமே சொல்வதற்கில்லை. பிழைத்திருந்தால், அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப, இருக்கும் நபர்களுக்கு ஏற்க சிந்திக்கலாம் என்கிற எண்ணம் பலரிடம் தற்சமயம் காணப்படுகிறது. என்னிடமும் தான்.

பேராசிரியர் ஒருவரிடம் உரையாடினேன். அவர் சொன்னது: ‘இப்ப இருக்கோம். நாளைக்கு இதெல்லாம் முடிஞ்சப்பறம் யார் இருக்கமோ, ஒரு போர் வந்து நாடே துவம்ஸம் ஆனப்புறம் எப்பிடி இருக்குமோ அப்பிடி இருக்குமோ என்னவோ. அப்ப ஊர் எப்பிடி இருக்கோ, அதுக்கு ஏத்த மாதிரி வாழ்ந்துக்கணும். இன்னிக்கி, இந்த அளவுக்கு இருக்கோம். இது தான் உண்மை. நாளைக்கி sex ratio எப்பிடி இருக்கும்னு தெரியல்ல. இன்னிக்கி இதைக் கடந்து போகணும். அப்புறம் ஒரு புது உலகம். இப்ப நடக்கற உண்மையெல்லாம் அப்ப இருக்க வாய்ப்பு இருக்கான்னு தெரியல்ல. பார்ப்போம்’ என்றார்.

வங்கிகளில் கடன் வைத்துவிட்டுக் காலமாகும் இளம் வயதினரின் வாரிசுகள் என்ன செய்வார்கள்? இவர்களுக்குச் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளவர்கள் என்ன ஆவார்கள்? வங்கிகள் என்ன நிலை எடுக்கப் போகின்றன? நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது.

35 வயதில் 80 லட்சம் வீட்டுக் கடன் வைத்துவிட்டுக் கொரொனாவிற்குப் பலியான ஐ.டி.ஊழியரின் மனைவி, பிள்ளைகளின் நிலை என்ன? இந்தக் கடனை என்ன செய்வது? யார், எப்படி அடைப்பது? அரசு என்ன செய்ய வேண்டும்? பெரும் குழப்பமாகவே உள்ளது.

திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன தம்பதி. கணவன் தலைவலி என்று படுத்தான். ஒரே நாளில் காணாமல் ஆனான். அந்தப் பெண் செய்வது யாது? அவள் இன்னும் வாழவே துவங்கவில்லை. இந்தப் பெண்களின் நிலை? இருவரின் பெற்றொரின் நிலை? ஒருவேளை அந்தப் பெண் கருவுற்றிருந்தால்? திடீரென்று என்ன மாதிரியான ஒரு உலகத்திற்கு வந்துவிட்டோம்.

பெரியவர்கள் போய்ப் பிள்ளைகள் வாழ்வது ஓரளவு சாத்தியம். 23 மற்றும் 24 வயதுப் பிள்ளைகள் இருவரைத் தொலைத்த 55+ வயதுத் தம்பதிக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது? என்ன கேடு இழைத்தார்கள் இவர்கள். மிச்சம் மீதி இருக்கும் புதிய உலகத்தில் இவர்கள் இருந்தால், எப்படி வாழ்வது? அன்றாட வாழ்க்கை நரகமாகாதா? இந்த இடத்தில் ஆன்மீகவாதிகளின் பங்கு என்னவாக இருக்கும்? ஆன்மீக போதகர்கள் அறிவுரை சொல்லும் நிலையில் இருப்பார்களா? அணுகக்கூடிய ஆன்மீக போதகர்கள் மிச்சம் இருப்பார்களா? தெரியவில்லை. கூட்டாகச் சிந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு வேளை அதிரடியாக நாஸ்திக சமுதாயமாக மாறிவிடுவோமோ? எதிலும் பற்றில்லாத ஹிப்பி சமுதாயம் ஏற்படுமோ? உலகம் கொதி நிலையின் உச்சத்தில் இருந்த 1960களுக்குச் சென்றுவிடுமோ ? நாஸ்திகவாத நாடுகள் வாழ்ந்தனவா? வாழ்வது போல் மேலேறி வீழத்தானே செய்தன? அடக்குமுறை, வன்முறை, பட்டினி.. இவை எப்போதுமே இல்லாத நாஸ்திகவாத நாடுகள் உண்டோ? பட்டினியே இல்லாத ஆஸ்திக நாடுகள் உண்டோ? ஜன நாயகம் மட்டுமே சோறு போடுமா? வல்லூறுத்தனங்கள் அற்ற ஊடகங்கள் உள்ள ஜனநாயகம் ஒரு வேளை மக்களைக் காக்கலாம். சமுதாயச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாகச் சிந்திக்க வேண்டும்.

தத்துவங்களின் வீழ்ச்சியின் துவக்க நிலையோ இது? அன்னியப் படையெடுப்பில் ஒரு சமூகம் அழிந்தது. பஞ்சங்களில் சில லட்சங்கள் சரிந்தன. இந்தக் கொரோனாவில் சமூக, மத, மொழி, இன, சாதி, பாலின வேறுபாடுகள் எதுவும் இல்லாத பேரழிவின் மறுபக்கம் எப்படி இருக்கும்? பார்க்க எஞ்சியிருப்போமா?

மேலும் எழுத மனம் வரவில்லை. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. அரவணைப்பு மற்றும் அன்பு. Empathy. அது ஒன்றுதான் இன்றைய தேவை.

மேலும் சிந்திப்போம்.

கனம் கோர்ட்டார் அவர்களே..

எப்போதும் பூமி க்ருஹத்திலேயே உள்ள ஜஸ்டிஸ் ஸ்வாமிகள் சன்னிதியில் அனேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். க்ஷேமம். சமீபத்திய ஜட்ஜ்மெண்ட் சமாச்சாரத்தில் தேர்தல் கமிஷன் மட்டுமே காரணம் என்று வைதுள்ளீர்கள். ஆகவே, உங்களிடம் இன்ன பிற விஷயங்களையும் கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுகிறேன். எனக்கு எதற்கு வம்பு, இல்லையா?

சாத்துமுதில் புளி சேர்ப்பது நல்லதா? அல்லது ஜீரகம் மட்டும் இட்டு செய்யலாமா? எதில் வாசனை அதிகம் வரும்?அக்கார அடிசிலில் நாட்டுச் சர்க்கரை போடுகிறார்கள். வெல்லமும், பாலும், அன்னமும் மட்டுமே தானே போட வேண்டும்? இதைப் பற்றி ஏதாவது ஜட்ஜ்மெண்ட் இருக்குமா?

காஃபி என்கிற போர்வையில் கபசுரகுடி நீர் கொடுக்கிறார்கள். வித்யாசமே தெரிவதில்லை. இதற்கு ஏதாவது தடை உத்தரவு போட முடியுமா?

ரெம்டிசிவிர் கட்டுப்பாடு போன்று கபசுரப் பொடிக்கும் கட்டுப்பாடு விதித்து, வீட்டுக் கணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

ஆட்கொணர்வு மனு போல, பொருள் கொணர்வு மனு போட வழி உண்டா? ‘வீட்ல தான இருக்கீங்க. டிஃபன் எதுக்கு? நேரா சாப்பாடே சாப்பிடுங்க’ என்கிற கொடுமையில் இருந்து காக்க ‘டிஃபன் கொணர்வு மனு’ போட வழி உண்டா என்று சொல்லுங்கள் ஸ்வாமி.

தெவசத்திற்கு ப்ராம்மணார்த்திற்கு வருபவர்கள் காலை அலம்ப வேண்டுமா? தற்காலத்தில் அவர்களைக் குளுப்பாட்டவே வழி உண்டா? சானிடைசரில் ஆசமனம் பண்ணலாமா?

யாரெயெல்லாமோ என்னென்ன வேலை செய்யவில்லை என்பதைப் பார்த்துக் கருத்து சொல்கிறீர்கள். அதைப் போல, கீழ்க் கோர்ட்டுகளில் ஒரு சிவில் சூட் போட்டால் போட்டவனுக்கு தெவசம் வருகிறதே தவிர ஹியரிங் வருவதில்லை. போட்டவனின் மகனுக்கு தெவசம் முடிவதற்குள் கேஸ் முடிய வழி உண்டா என்று சொல்ல முடியுமா?

எலக்‌ஷன் கமிஷன் ஒரே நாளில் தேர்தல் நடத்தி உங்களின் பெருங்கோபத்திற்கு ஆளாகியுள்ளது. என்ன இருந்தாலும் 30 வருஷம் கேஸ் நடத்தி செத்துப் போனப்பறம் தீர்ப்பு சொன்ன உங்க பெருந்தன்மை கமிஷனுக்கு இல்லை தான்.

எல்லாரும் உங்களை மாதிரி ஆக முடியுமா என்ன?அதுவும் எப்படியான விசேஷம்? எம்.எல்.ஏ. வாக, தேர்தலில் நிற்கணும். தெருத்தெருவா சுத்தணும். செத்து சுண்ணாம்பு ஆனப்பூறம், மக்கள் தேர்ந்தெடுத்தா எம்.எல்.ஏ. அதுக்கப்புறம் முதல்வர் சொன்னா மந்திரி, இல்லேன்னா எந்திரி. கமிஷன்ல ஆஃபீஸரா ஆகணும்னா, பரீட்சை எழுதணும், பாஸ் பண்ணனும், 30 வருஷம் வேலை பார்த்து, கடைசில கமிஷன்ல வர்றதுக்கு வய்ப்பு இருக்கு. ஆனா, உங்களுக்கு அப்படியா? உங்கள்ள யார் நிதிபதின்னு நீங்களே சொல்லுவேள். அதைக் கேக்க முடியாது. அப்பறம் நீங்களே உங்களை அப்பாயிண்ட் பண்ணவாள கொறை சொல்லுவேள். இவ்வளவு இருந்தும், கோர்ட் வாசல்ல யாராவது தும்மினா கண்டப்ட் ஆஃப் கோர்ட்.

போகட்டும். லோகாயதமா பேசுவோம்.இன்னிக்கி ராத்திரி என்ன தளிகை பண்ணறது? ரவா உப்புமா, கொஸ்து பண்ணலாமா? கொரானாவுக்கு சரியா வருமா? இல்ல கொஸ்து பண்ணா பெந்தகொஸ்து கோச்சுப்பாளா?

என்னெழவோ உங்களப் பத்திப் பேசினாலே கொழர்றது.

‘என்ன கண்றாவி இது? கண்ட டிவியும் பார்க்காதேங்கோன்னா கேட்டதானே? கண்டதையும் பார்க்கறது, ராத்திரி தூக்கத்துல ஒளறவேண்டியது. ஹால்ல போய் படுங்கோ, தூங்க முடியல்ல’

‘ஆல்’ சூழ் தேசம்

‘தேர்தல் நடக்கும் போது நீங்கள் வேறு கிரஹத்தில் இருந்தீர்களா?’ என்று நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தைக் கேட்கிறது.

மத்திய அரசு, கொரோனாவைக் காரணம் காட்டி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல்களைத் தள்ளிப் போடச் சொல்லியிருந்தால் முற்போக்கு, இடது சாரி கோஷ்டிகளும் அவற்றின் குழல் ஊதும் ஊடகமும், இதே நீதி மன்றமும் என்ன சொல்லியிருக்கும்?

நேர்மையான எதிர்க்கட்சிகளும், தேசிய உனர்வுள்ள உதிரிக் கட்சிகளும், நல்ல எண்ணம் கொண்ட ஊடகம் இருந்திருந்தால் பிரச்னை இல்லை. இருப்பது எல்லாம் ‘அடுத்த என்ன பிரச்னை குறித்து குதிக்கலாம்?’ என்று ரொட்டித் துண்டுக்கு அலைபவை. உதா: Western Trunk Road.

ஆக, மத்திய அரசு மவுனம் காத்தது. இது தவறு என்று நான் நினைக்கிறேன். ‘இந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமா என்னும் முடிவைத் தேர்தல் கமிஷனிடம் விடுகிறோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். மவுனம் காத்ததற்கும் அதுதான் பொருள் என்றாலும் perception என்று ஒன்று உள்ளது. Justice should not only be done, but also seen to be done என்று சொல்வார்கள்.

மாநில அரசு பரிந்துரைத்திருந்தால் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் சொல்லியிருக்குமா என்பது கேள்விக்குறியே. மாநில அரசுக்குத் தனக்கு அப்படி ஒரு அதிகாரம் இருப்பது தெரியுமா என்றும் தெரியவில்லை. இறுதி முடிவு ஆணையத்திடம் தான் என்றாலும், சொல்வதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், உடனே எதிர்க்கட்சிகள் ‘தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகிறார்கள்’ என்று ஆலாபனை துவங்கியிருப்பார்கள்.

ஆக, இதற்கு இருந்த ஒரே பலிகடா, தேர்தல் ஆணையம் தான். மத்தியும் மாநிலமும் மவுனம் காக்க ( ஆணையம் கொரோனா குறித்த பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகளிடம் கேட்டதா என்று தெரியாத நிலையில்), ஆணையம் தன் கடமையை நிறைவேற்றியது. கமிஷனரும் தன் பணி முடிந்து ஓய்வு பெற்றார். இப்பொது கமிஷனுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த கோர்ட் முயல்கிறது.

கமிஷன் ‘கொரோனா வழிமுறைகளை ஒட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று பலமுறை அறிவித்தது. ஆனால், ஒருமுறை கூட செயலில் இறங்கவில்லை என்பது உண்மை. ‘மாஸ்க் இல்லாமலும், சமூக இடைவெளி இன்றியும் பிரச்சாரம் நடந்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படும், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’ போன்ற ஆணைகளைப் பிறப்பித்திருக்கலாம், ஓரிரு இடங்களில் செய்தும் காட்டியிருக்கலாம். தலைமைச் செயலாளரையே மாற்றும் அதிகாரம் உள்ள கமிஷனுக்கு, இந்த அறிவிப்புகளைச் செய்யவும், வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யவும் அதிகாரம் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

ணையம், மத்திய மாநில அரசுகளிடம் பரிந்துரை, ஆலோசனை கேட்டிருக்கும் என்றே நம்புகிறேன். அரசுகளின் சுகாதார அமைச்சுகள் தேர்தல் நடத்த ஏதுவான சூழல் உள்ளது என்று சொல்லியிருக்கும் என்றே எண்ணுகிறேன். தான் ஒரு Constitutional Entity என்பதால், தனது மாட்சிமையைக் காக்க ஆணையம் மத்திய மாநில அரசுகளைக் காட்டிக் கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

ஆனால், நீதிமன்றம் உத்தம புத்திரன் போல் பேசுவது வியப்பாக இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தானாகவே முன் வந்து எடுத்து நடத்தும் நீதிமன்றம், இந்த விஷயத்திலும் அப்படி நடக்காமல் விட்டது ஏன்? இதற்கு நீதிபதி பதில் சொல்ல வேண்டும்.

நம் நாட்டில் எல்லாமே ‘ஆல்’ போட்டுப் பேச வேண்டியதாக உள்ளது.

எதிர்க்கட்சிகள் நியாயமாகச் செயல்படும் என்கிற நம்பிக்கை இருந்திருந்தால், ஊடகங்கள் அறம் சார்ந்து பேசும் என்கிற நம்பிக்கை இருந்திருந்தால், மத்திய, மாநில அரசுகள் தயவு தாட்சண்யம் இன்றி ஆணையத்திற்கு அறிவுரை வழங்கியிருந்தால்….

எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு அறிவிருந்திருந்தால்…

வீட்டுக் கணவரைக் காக்க வழி உண்டா?

உங்களுக்கு உண்மையிலேயே ஒர்க் ஃப்ரம் ஹோம் கணவர்கள் மீது அக்கறை உண்டா? மேலே வாசியுங்கள்.

கொரோனா இரண்டாவது அலை வந்துள்ளது கஷ்டம் தான் பிராணவாயுவுக்கே ததிகிணத்தோம் தான். இந்த பயம் எல்லாம் இருக்கிறதுதான். இதையெல்லாம் விடப் பெரிய பயம் ஒன்று உண்டு. அதுதான் கபசுர பயம்.

காலை எழுந்தவுடன் அது காஃபியா அல்லது கபசுர நீரா என்று தெரியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது. ‘இது காஃபி தானா?’ என்று கேட்க பயம். ஒரு வேளை அது காஃபியாக இல்லாமல் கபசுரக் குடி நீராக இருந்தால் ‘உனக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு? நான் போடற காஃபி க.சு.கு.நீர் மாதிரியா இருக்கு? இந்த அழகுல பேப்பர் வேற’ என்று மோவாக்கட்டையை இடித்துக் கொண்டு சென்றால் என்ன செய்வது? காலை டிஃபனுக்குத் தாளம் போட வேண்டுமே என்கிற பயம் இருக்கிறது.

ஒரு வேளை அது நிஜமாகவே காஃபியாக இருந்து ‘இன்னிக்கி ஒரு நாளாவது க.சு.கு.நீர் வேண்டாமே? ரெண்டு ஊசி போட்டாச்சே’ என்று உளறிவிட்டால் என்ன செய்வது? மத்தியான தளிகை சாப்பாட்டுக்கும் பிரச்னை வந்துவிடும். வீட்டில் டிஃபன், சாப்பாடு இல்லை என்றால் வெளியில் செல்லவும் வழி இல்லை. முழு அடைப்பு என்று பிராணனை வாங்குகிறார்கள்.

இதாவது போகட்டும், மற்ற நேரங்களிலாவது நல்லதாகக் காஃபி சாப்பிடலாம் என்றால், இந்த வாட்ஸப் என்கிற வஸ்து வந்து சகலரின் கழுத்தையும் அறுக்கிறது. மாங்கொட்டை கறமிது, காயவைத்த மாங்காய்த் தோல் சாத்துமுது, புளியங்கொட்டைப் பொடி, கடுக்காய் துவையல், அத்தி வேர் கஷாயம், சபீனா சாம்பார், பவழமல்லி பச்சடி, பனை நுங்குத் தோல் கஷாயம், நெல்லி மரப்பட்டை சாதம், கோலப்பொடி ரஸம் என்று என்ன கண்றாவியையாவது யாராவது எழுதி அனுப்பிவிடுகிறார்கள். இந்த அழகில் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேறு. ஊரடங்கு. சாப்பிடவும் முடியாது. சாப்பிடாமல் இருக்கவும் வழி இல்லை. ஹவுஸ் ஹஸ்பண்ட் நிலை என்ன என்று யாருக்காவது கவலை உண்டா?

இதெல்லாம் முடிந்து ஒருவழியாக ராத்திரி சாப்பாட்டுக்கு உட்கார்ந்தால் ‘எதிராளாத்து மாமி சொன்னா. பிரண்டைத் துகையலையும், கொட்டாங்குச்சிப் பொடி பச்சடியும் சேர்த்து சாப்பிட்டா சளி, தும்மலே வராதாம்’ என்று புதியதாக ஒரு பிரம்மாஸ்திரம் வந்து இறங்குகிறது.

இப்போதெல்லாம் ஆக்ஸிஜனுக்குப் புதிய வழிகள் எல்லாமே கூட வாட்ஸப்பில் வருகிறது. என்னவோ திரிகுண பிராணாயாமம் என்று சொல்லி, முதுகை அஷ்ட கோணலாக வளைத்து, கையால் முதுகை வளைத்துச் சுற்றி வந்து வயிற்றைத் தொட்டவாறு மூன்று நிமிடம் மூச்சை இழுத்துப் பிடித்து வேகமாக வெளியிட்டால் உடல் தானே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொள்ளும் என்று யாரோ புண்ணியவான் எழுத, ‘இந்தட்சணம் பண்ணினாலே ஆச்சு, நீங்கதான் ஆர்ட் ஆஃப் லிவிங்ல பிராணாயாமம் எல்லாம் பண்றேளே’, இதையும் பண்ணிப் பாருங்கோ’ என்று மிரட்டி, முதுகுப் புறமாகச் சென்ற கையை மறுபடியும் எடுக்க முடியாமல் போய், பையன் வந்து கையைப் பிடித்து நார்மல் பொசிஷனில் விட வேண்டிய நிலையெல்லாம் ரொம்ப ஓவர்.

இவை தவிர அவ்வப்போது சிறூதானியப் பைத்தியம் பிடித்து ஆட்டி, கம்புக் களி, சிவப்பரிசிக் கஞ்சி, சோள உப்புமா, குதிரைவாலி பொங்கல், கேவுரு கூழ் என்று திடீர் திடீர் என்று மாறும் பெட்ரோல் விலை மாதிரி வந்து விழுகிறது. அவ்வப்போது இஞ்சி, மிளகு, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, வெட்டிவேர் பட்டை, பாகல் இலை என்று இரட்டை இலை தவிர எல்லா இலைகளையும் போட்டு அறைத்துக் கொதிக்கவைத்து ‘குடிச்சாலே ஆச்சு’ தலைகீழாக நின்று அடம் பிடித்தவளிடம் ‘இதுக்கு என்ன பேர்’ என்றால், ‘ இன்னும் வெக்கல. நீங்க சாப்ட்ட அப்பறம் என்ன நடக்கறதுன்னு பார்த்துண்டு புண்யாகவாசனம் பண்ணி பேர் வெக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களை எந்தச் சட்டத்தில் கொண்டுவருவது?

வாட்ஸப்பைப் பார்த்தோமா வேறு வேலைக்குப் போனோமா என்று இல்லாமல் இதென்ன சாப்பாட்டுப் பயங்கரவாதம்? நிஜமாகவே இதையெல்லாம் செய்து சாப்பிடுகிறார்களா என்ன? அவர்கள் வீட்டுக் கணவன்மார்கள் நிலையை நினைத்துக் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்.

‘போறுமே, குதிரைவாலி பொங்கல் + தேங்காய் நார் பச்சடி நன்னாயிருக்குன்னு சொன்னா போறாதோ? இதுக்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் விடணுமான்ன?’ என்று கேட்பவளை என்ன செய்வது?

இந்த விஷயங்களில் உங்கள் அனுபவம் என்ன? சொல்லுங்களேன். ஒர்க் ஃப்ரம் ஹோம் கணவர்களுக்குப் பயன்படும்.

கொரோனா பரிகாரங்கள்

வேண்டுகோள் என்றும் சொல்லலாம். கொரோனா காலம் என்பதால் தேவையான ஒன்று என்று எண்ணுகிறேன். முடிந்தால் செய்யுங்கள்.
நம் வீடுகளுக்கு வழக்கமாக வருகிற உபாத்யாயர்கள், சாஸ்திரிகள், திவசத்திற்கு வரும் பிராம்மணார்த்த ஸ்வாமிகள், பரிசாரகர்கள், கோவில் அர்ச்சகர்கள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பண்டாரங்கள்  – இவர்களைத் தொலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு ஏதாவது அவசரப் பணத்தேவை உள்ளதா என்று கேட்டுப்பார்க்கலாம். முக்காலேமூணிவீசம் பேருக்கு ஆயுள் காப்பீடு என்கிற வஸ்து இருக்காது. பலருக்கும் அப்படியென்றால் என்னவென்று தெரிந்திருக்காதும் கூட. முடிந்தால் ஆன்லைனில் எடுத்துக் கொடுக்கலாம். அல்லது ஒரு மாதத் தவணையை அவர்களுக்காகச் செலுத்தலாம் (அல்லது அவர்களுக்குப் பணப் பரிவர்த்தனை மூலம் அனுப்பலாம்). பலரும் பிராம்மணார்த்தம் இருக்க ஒப்புக்கொள்வதே சிறு சம்பாவனைக்காகவும் ஒரு வேளை உணவுக்காகவும் தான். இப்போது 21 நாட்கள் வெளியில் வரவும் முடியாது என்பதால் இந்த உதவி ‘காலத்தினால் செய்த உதவி’ போல் உலகத்தை விடப் பெரியதாகும்.
கோவில் உற்சவங்கள் நிறைந்த பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் வேத பாராயண பண்டிதர்கள், பிரபந்த அத்யாபகர்கள் / திருமுறை ஓதுவா மூர்த்திகள் முதலியோருக்கு வருமானம். இந்த ஆண்டு அதுவும் இல்லை போல் தெரிகிறது. எனவே வரும் காலங்களில் இவர்களிடம் சம்பாவனை குறித்து பேரம் பேசாமல் இருப்பது கொரோனாவிற்கான ஆகச்சிறந்த பரிகாரமாக அமைய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 14 வரை ஏதாவது திதி, விசேஷம் வருமானால் அவர்களுக்குப் பணத்தை அனுப்பி, ‘அடுத்த திதில வந்து பண்ணிவையுங்கோ. இப்ப சம்பாவனையா நினைச்சு வெச்சுக்கோங்கோ’ என்று அனுப்பினால் அவர்களது மனது குளிரும். தர்ம தேவதை மோனலிஸா அளவிற்காவது புன்னகை பூப்பாள்.
இதைப்போல நம் வீடுகளுக்கு அருகில் உள்ள பூக்காரர்கள், இஸ்திரி வண்டிக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், நம் வீட்டுப் பணிப்பெண்கள் முதலியோரின் ஒருமாத மின்சாரக் கட்டணம் / அவர்களது ஒரு நாள் வருமானம் என்று எதையாவது கொடுக்கலாம் – ஜன் தன் கணக்கு மூலமாக ஆன்லைனில்.
மாதச் சம்பளக்காரர்களுக்கு இவை ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால், மேற்சொன்னவர்களுக்கு இவை மிகப் பெரிய உதவி.
அரசு செய்யப்போகிறது தான். நமது பங்கையும் ஆற்றலாம். களேபரங்கள் முடிந்தபின் ‘நாமும் மனிதனாக இருந்திருக்கிறோம்’ என்கிற எண்ணம் வர வாய்ப்புள்ளது. கொரோனாவிற்கான பரிகாரம் இவை என்று கொள்வதும் நல்லதே.
#21dayslockdown
%d bloggers like this: