அவிநாசி கோவில் தாக்குதல்

வாசகர்களுக்கு வணக்கம். 

நேற்றும் இன்றும் மனம் ஒரு நிலையில் இல்லை. சொற்களில் நிதானம் தவறியிருந்தால் மன்னிக்கவும்.

‘செப்டம்பர் 11ற்குப் பதிலாக உலகம் டிசம்பர் 13 பற்றிப் பேசியிருக்கும்’ என்றார் அத்வானி. 

இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் பற்றிப் பேசும் போது இதைச் சொன்னார். ‘பயங்கரவாதிகள் உள்ளே வந்திருந்தால், பாரதத்தின் நிர்வாகத் தலைமையும் எதிரணித் தலைமையும், அனேகமாக எல்லா உறுப்பினர்களும் மறைந்திருப்பர்’ என்றார் அத்வானி. 

அது போன்ற நிகழ்வே அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான தாக்குதலும். 

தெய்வத் திரூவுருக்களைச் சேதப்படுத்திய கயவனிடம் வெடிப்பொருட்கள் இருந்திருந்தால் ? ஆயிரம் ஆண்டுப் பழமை உள்ள கோவில், இறைத் திருமேனிகள், சிற்பங்கள், நம் பண்பாட்டுச் சின்னங்கள், கோடிக்கணக்கான மக்களின் ஆதர்ச நம்பிக்கைத் தூண்கள், நம் தமிழகத்தின் / பாரதத்தின் மானம் – எல்லாம் காணாமல் ஆகியிருக்கும். 

ஒருவேளை மேற்சொன்னவாறு நடந்திருந்தால் அதன் விளைவுகள் ? 

கயவனுக்கு மனநிலை சரியில்லை என்கிறது அரசு. மனநிலை சரியில்லாதவன் கோவில் சாத்தப்படும் முன் கோவிலுக்குள் ஒளிந்துகொண்டது எங்ஙனம் ? முருகப் பெருமானின் வேலைப் பிடுங்கி உண்டியலைப் பெயர்த்துள்ளான் என்கிறது செய்தி. மனநிலை சரி இல்லாதவன் செய்யும் செயலா இது? 63 நாயன்மார்களின் வஸ்திரங்களைக் களைந்து அவமானப்படுத்தியுள்ளான். பின்னர் கோவில் கோபுரத்தில் ஏறி ஒளிந்துகொண்டுள்ளான். மனநிலை சரியில்லாதவன் செய்யும் செயலா இது ?  

சிசிடிவி இயங்கவில்லை என்று அரசு சொல்வது வெட்கக்கேடு. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டதாக அமைச்சர் பெருமை பேசுகிறார். கேவலம் சிசிடிவி வேலை செய்கிறதா என்று பார்க்க அதிகாரிகளுக்கு வக்கில்லை. பணம் இல்லை என்று சொல்ல முடியாது. இன்னோவா கார் வாங்க பணம் இருந்ததா ?  

கோவிலைப் பாதுகாக்க வக்கில்லாத அறம் நிலையாத் துறை இதற்குப் பின்னரும் கோவிலை வைத்துக்கொண்டிருப்பது என்ன லட்சணம் ? நிலத்தைத்தான் பாதுகாக்க திராணி இல்லை. கோவிலையே பாதுகாக்க வக்கில்லை. அப்புறம் என்ன இந்து அற நிலையத் துறை ஜம்பம் ? இதற்கு செயல் அலுவலர் ஒரு கேடு. அவருக்கு மேல் ஜேசி, பாசி என்று சீட்டு தேய்க்க என்றே அதிகாரிகள். துறைக்கு ஒரு அமைச்சர் வேறு. கேட்டால் இரண்டாண்டு ஆட்சி, காட்சி என்று எதுகை மோனையில் பேசும் அரசு. 

கோவிலில் ஆள் உள்ளதா என்று பார்த்து வரக் காவல்காரர் இல்லையா ? இரவு கோவிலுக்குள் சப்தம் எழுந்தால் கூடத் தெரியாத அளவிற்கா காவலர்கள் உள்ளனர் ? என்ன கருமம் பிடித்த அரசு அலுவலகம் இது ? 

கண்ட கழிசடைகளையும் அதிகாரத்தில் இருத்தினால் வெளியில் சொல்லக் கூசும் அளவிற்குச் செயல்படுகிறார்கள். 

கோவிலின் செயல் அலுவலர் சோற்றில் உப்பிட்டுத்தான் உண்கிறாரா ? அவருக்கு மேலே உள்ள அதிகாரிகள் இரண்டு முழம் கயிறு வாங்கிக் கொள்ளலாம். வெட்கக்கேடு. 

மக்களின் நிலை அதைவிடக் கொடுமை. எடுத்ததற்கெல்லாம் கடை அடைப்பு, தர்ணா. ஊருக்குப் பெயரே கோவில் பெருமானின் பெயர் தான். ஆனால் ஊரே கப்சிப். 

அரசியல்வாதிகள் ( அண்ணாமலை தவிர ) புடவை வாங்கச் சென்றுள்ளனர் போல. பிறிதொரு மதத்தின் சிறு குடில் சேதப்பட்டால் கூட கொந்தளிக்கும் ஜந்துக்கள் வாய்திறக்கவில்லை. இந்து முன்னணியின் காடேஸ்வரன், ஹிந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தவிர யாருமே பேசவில்லை என்று நினைக்கிறேன். 

தெருவுக்குத் தெரு நிற்கும் சிலையின் மீது பறவை எச்சமிட்டால் கூட கொதித்து எழும் ஊடகங்கள் – வீட்டில் இழவு போல மௌனம். என்ன ஒரு வெட்கம் கெட்ட பிழைப்பு இது ?  

சே..
–ஆமருவி 

அவிநாசி கோவில் சிதைவுகள்

மேலசோழங்குப்பம் கோவில் – பாழ்பட்ட கதை

மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன.

ரொம்ப பேச வேண்டாம். கோவில் பாழாகியுள்ளது என்றாலே அது தமிழக அரசின் இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் வரும் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆகவே செய்திகளை மட்டும் தருகிறேன். கோபதாபங்கள், உணர்ச்சிப் பீறிடல்கள் என்று எதுவும் பலனில்லை. முடிந்தால் ஏதாவது செய்யலாம். இல்லையெனில் இருப்பதைப் பற்றி எழுதி, மக்களிடம் கொண்டு சேர்த்து அடுத்த கோவில் பற்றி எழுதலாம். தற்காலத்தில் அவ்வளவு தான் முடிகிறது.

பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக அற நிலையத்துறையின் கவனத்துக்குக் கொண்டு வர நான் பட்ட பாடுகள் நானே அறிவேன். எத்தனையோ ஊடகப் பிரிவுகளில் சென்று கேட்டுவிட்டேன். ஹிந்துத்துவ ஊடக வெளிகள் என்று அறியப்படுபவையும் மௌனம் சாதித்தன. ‘யாத்ரிகன்’ என்னும் யூ-டியூப் ஒளிவழி மட்டும் செவி சாய்த்தது. ஆனால், ஹிந்து தர்மத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் ‘தி ஹிந்து’ நாளிதழ் அக்கோவில் பற்றிய என் கட்டுரையை வெளியிட்டது. பின்னர் தற்போது அறம் நிலையாத் துறை ஏதோ செயலாற்றி வருகிறது. கோவில் புனரமைப்பு குறித்த ஆரம்ப கட்ட திட்டமிடல் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஒவ்வொரு முறை வேலைகள் நிற்கும் போதும், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் செல்வாக்குள்ள பெரியவர்களைக் கொண்டு பரிந்துரைக்க வேண்டியுள்ளது. இது பெரும் மனத்தளர்வை ஏற்படுத்துகிறது.

எனவே, பாபு ராயன் பேட்டை கோவில் தவிர மற்ற கோவில்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடலாம் என்று முடிவு செய்து, மற்றுமொரு பாழ்பட்ட பண்டைய கோவில் குறித்து எழுதுகிறேன்.

இந்த முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலசோழங்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில். வழக்கம் போல் பாழ். கேட்பாரற்ற நிலை. மேற்பார்வை இந்து சமய அறம் நிலையாத் துறை.

பதினைந்து ஆண்டுகளாகக் கோவில் பூட்டிக்கிடந்துள்ளது. தற்சமயம் கோவிலைத் திறந்து பார்த்ததில் தாயார் மூலவர் திருமேனி பின்னம் அடைந்துள்ளது தெரிந்தது. தாயாருக்குத் தனி சன்னிதியே உள்ள நிலையில், தாயார் பின்னம் அடைந்தது பெரிய அப-சகுனமாகத் தோன்றவே, பம்பாயைச் சேர்ந்த வெங்கடேசன் என்பார் கோவிலைப் புனருத்தாரணம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்காகக் கோவிலில் உழவாரப் பணி செய்த போது ஐந்து மூட்டைகள் அளவிற்குக் காலி மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. செடிகொடிகள் என்று அனைத்தையும் தன் செலவில் நீக்கியுள்ள் வெங்கடேசன் மற்றும் ஊர்ப் பெரியவர்கள், தாயார் திருமேனி வேண்டும் என்பதற்காக மஹாபலிபுரத்தில் ஒரு சிற்பக் கூடத்தில் செய்யச் சொல்லியுள்ளார்கள்.

திருமேனி தயாராக உள்ளது. ஆனால், புதிய திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய அறம் நிலையாத் துறை அலைக்கழித்து வருகிறது. திருவண்ணாமலை போளூர் / கலசப்பாக்கம் ( வந்தவாசி) பகுதி செயல் அலுவலர் இதற்கான மனுவைச் சென்னை அறம் நிலையாத் துறைக்கு அனுப்ப வேண்டும். அனுப்பியுள்ளார்களா என்று தெரியவில்லை. திருமேனி தயாராக இருந்தாலும் பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் பக்தர்கள்.

கோவில் பழமையானது. ஊரில், 1400 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால், கோவிலின் உண்மையான வயது தெரியவில்லை. சோழன் பெயரில் உள்ள ஊரில் உள்ளதால் சோழர் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தது எண்ணூறு ஆண்டுகளாவது பழமையாக இருக்க வேண்டும் என்பது கோவிலில் சிற்பங்கள், சன்னிதிகளைக் காணும் போது தெரிகிறது.

கோவிலுக்கு சுமார் 15 ஏக்கர் அளவில் நிலங்கள் இருந்துள்ளன. கடந்த காலத்தைக் கவனிக்கவும். மேலும் நிலங்கள் இருந்திருக்கலாம். தற்போது எங்கே என்று தெரியவில்லை. அரசிடம் தகவல்கள் இருக்கும். யாரேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெறலாம். கோவிலுக்குத் தெப்பக் குளமும் இருந்துள்ளது. கவனிக்க: இருந்துள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு போக கொஞ்சம் குளமும் உள்ளது.

ஊர்க்காரர்கள் சொன்னது: “ஶ்ரீமத் இராமானுசர் திருமேனியின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது. மது அருந்திய நிலையில் காலிகள் போட்ட ஆட்டம் இது. தாயாரின் திருமேனி பின்னமும் இவர்களாலேயே தான்.” இராமானுசரது திருமேனி இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. அருகில் உள்ள கல்லூரியின் பேருந்துகள் நிற்கும் இடமாகவும், ஓட்டுநர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் கோவில் வளாகம் இருந்துள்ளது. இந்து சமய அறம் நிலையாத் துறை தனது கோவில்களைக் காக்கும் அழகு இது தான்.

தாயார் சன்னிதியில் அசைவ உணவும் மதுவும் கூடிய கூட்டுக் களிகள் நடந்துள்ளன என்றால் நம்புவீர்களா?

மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன. கோவிலை மக்கள் மதுபானக் குப்பிகளின் கிடங்காகப் பயன்படுத்தும் நிலையில் அரசுகள் மக்களை வைத்துள்ளன. வேதம் நிறைந்த தமிழ் நாடு, கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று பாரதி சொல்வான். பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்வோம் என்றான். நாமோ கோவில் தலத்தை மதுக் குப்பிக் கிடங்காக்கியுள்ளோம். அவன் இன்றிருந்தால் பேனாவால் தன் கண்களைக் குத்திக் கொண்டு மாய்ந்திருப்பான்.

பிற மத மன்னர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை ஹிந்துக் கோவில்களை இடித்துக் கட்டியுள்ளனர் என்பது எவ்வளவு உண்மையோ, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளும் தங்களது அலட்சியத்தினால் நமது பண்பாட்டை அழித்து வருகின்றனர் என்பதும் அதே அளவு உண்மை.

பக்தர்கள் இணைந்து உழவாரப் பணி செய்து சிறிதளவு பார்க்கும் படி செய்துள்ளார்கள். ஆனால், அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. இந்த ஆண்டு புனரமைக்கப் பட உள்ள 1000 கோவில்களில் இந்தக் கோவிலும் உள்ளது என்று சட்டமன்றத்தில் அ.நி.து.அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மே மாதக் கடைசியில் இருக்கிறோம். இன்னும் ஏழு மாதங்களில் என்ன செய்யப் போகிறார்கள், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். கலசப்பாக்கம் அ.நி.து. அலுவலகத்தில் இருந்து கடிதம் சென்னை அ.நி.து. அலுவலகத்திற்குச் செல்வதற்கே அவ்வளவு காலம் பிடிக்கும் போல் தெரிகிறது.

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதாதது ஏன் என்கிற கேள்வி எழலாம். நம் தமிழ் நாட்டு மானம் உலக அளவில் கப்பல் ஏற வேண்டாம் என்கிற கரிசனம் தான் என்பதே என் பதில்.

விருப்பம் உடையவர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் / ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

கோவிலின் நிலை பற்றிய படங்களை இணைக்கிறேன். மேலசோழங்குப்பம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த அவல நிலையைப் பார்த்து அறம் நிலையாத் துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை அதிகாரிகளிடம் / அரசிடம் பேசக்கூடிய பெருமக்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.

கோவில் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் கைங்கர்யத்தில் பங்கு கொள்ளவும் மும்பையில் வசிக்கும் திரு.வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.( +91 – 9 8 3 3 3 8 3 2 2 7 )

பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில், மேலசோழங்குப்பம்

பெருமாள் சன்னிதி மேலசோழங்குப்பம்

இவ்விடத்தில் மதுவுடன் அசைவ் உணவும் உண்டுள்ளனர் காலிகள்.

தாயார் சன்னிதி

திருப்பணி செய்த யாரோ அரசன், அரசி, மகன்.

திருப்பணி செய்த ஏதோ ஒரு அரசன், அரசி, மகன்

தூணில் உள்ள அடியவர் சிற்பம். இராமானுசரோ ?

தூணில் இராமானுசர் ?

மஹா மண்டபத்தின் உள் கூரையில் வேலைப்பாடுகள்

மஹா மண்டபத்தின் உள் கூரையில் வேலைப்பாடுகள்

பெருமாள் தாயார் ஆண்டாள் சன்னிதிகள் பின்புறப் பார்வை
கல்வெட்டும் உள்ளது.
பக்தர்கள் உழவாரப்பணி
உழவாரப் பணிக்கு முன் கோவிலின் நிலை
பெருமாள் விமானம் – இன்றைய நிலை

பாபுராயன் பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்

சமீபத்தில் அச்சரபாக்கம் அருகில் உள்ள பாபுராயன் பேட்டையில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விஜய வரதராஜப் பெருமாள் கோவிலின் இன்றைய நிலையை நேரில் கண்டு ஆவணப்படுத்தியுள்ளேன்.

கண்டு கருத்துரையுங்கள். பலரிடம் கொண்டு சேருங்கள்.

உம்மாச்சி ஸ்லோகமும் சாதமும்

நல்ல ஆஜானுபாகுவான கரிய உருவம். பின்னாலிருந்து தான் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. எதிர் வீட்டுக்கு வாடகைக்கு வந்திருப்பார் போல என்று நினைத்துகொண்டிருந்தேன். கூட ஒரு சிறு பையனும் இருந்தான். எதிர் வீட்டில் வெளிப்புறச் சுவரை ஒட்டி ஒரு அறை வெறுமனே இருப்பதால் அதனை 1000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.

எதிர் வீட்டுப் பாட்டி பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் போல. ஆனால் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை. ஆனால் ஒன்று. அவர் சிரமப்பட்டுப் பேசுவது போல் இருந்தது. மெதுவாகப் பேசினார். நீண்ட நேரம் எடுத்துகொண்டு பதில் அளித்தார் போல் இருந்தது. பாட்டியின் உடல் பாஷை பொறுமையின்மையை உணர்த்தியது.

அரை மணி கழித்து அவர் மெதுவாக நடந்து போனார். ஏதோ ஒரு இயந்திரம் நடப்பது போல் தெரிந்தது. செதுக்கி வைத்த கட்டைகள் ஒரு வித ஒப்புக்கொள்ளப்பட்ட அசைவுகளுடன் நடந்தால் எப்படி இருக்கும் ? ரோபோட் போல் நடந்தார்.

பல நாட்கள் அவரைப் பார்க்கவில்லை. பின்னர் ஒரு நாள் மாலை ஒரு சின்ன வண்டியில் இருந்து இறங்கினார் அவர். மெதுவாக நடந்து சென்று எதிர் வீட்டுக் கதவைத் தட்டினார். ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. புரியவில்லை. ஆனால் ஒன்று. அவர் குடி வந்துவிட்டார் என்று தெரிந்தது. வயது ஒரு 40 இருக்கலாம் என்று ஊகித்தேன்.

அவரது  மகன் அடுத்த நாள் மாலை என் வீட்டு வாசலில் வந்து நின்றான். என் மகனைப் பார்த்துச் சிரித்தான். இரு குழந்தைகளும் விளையாடத் துவங்கின.

அந்த வாரம் காலனியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அவரைப் பார்த்தேன். சுவாமி விக்ரஹத்தை நகர்த்திக்கொண்டிருந்தார். ‘ஓ இவர் தான் அர்ச்சகர் போல ‘ என்று எண்ணிக்கொண்டேன். புதியதாக அர்ச்சகர் நியமிப்பதாகப் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

பிறகு பல முறை அவரைப் பார்த்தேன். ஆனால் ஒரு முறை கூட பேச முடியவில்லை. ஒரு நாள் சைக்கிளில் ஏற முயன்றுகொண்டிருந்தார் அவர். அப்போதுதான் கவனித்தேன் அவரது காலை மடக்க அவரால் முடியவில்லை. கையும் மடக்க முடியாத மாதிரியே இருந்தது. ஓடிச் சென்று உதவ எண்ணி அருகில் செல்ல எத்தனித்தேன். அதற்குள் அவரே சைக்கிள் மேல் ஏறி அமர்ந்துவிட்டார். என்னைத் தாண்டிச் செல்லும் முன் ஒரு புன்னகை மட்டும் புரிந்தார். ஏனோ அவர் ஒருவித வலியில் இருப்பதாகப் பட்டது. “ஏறும் போது கொஞ்சம் கஷ்டம்”, என்று சொன்னது போல் காதில் கேட்டது.

சில மாதங்களில் அவரைப்பற்றிய தகவல்கள் கிடைத்தன. செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமமாம். படிக்கவில்லையாம். கொஞ்சம் நிலம் இருந்துள்ளது. இப்போது அதுவும் கரைந்துவிட்டது. ஊரில் வேறு வேலை இல்லாததால் அருகில் இருந்த ஒரு பெருமாள் கோவிலில் ‘மடப்பளி’ வேலை என்று அழைக்கப்படும் ‘சமையல்’ வேலையில் எடுபிடியாக இருந்துள்ளார். பின்னர் ‘விஷ்ணு சஹஸ்ர நாமம்’ மட்டும் கற்றுக்கொண்டு சென்னையில் வாழ்க்கை தேடி வந்துள்ளார். எங்கள் காலனியில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அர்ச்சகர் கிடைக்காமல் திண்டாடியபோது இவரைப் போட்டுள்ளார்கள். சில மாதங்களில் ஒரு சில அர்ச்சனைகளையும் கற்றுக்கொண்டுள்ளார். சஹஸ்ரநாமம், சில அர்ச்சனைகள் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

காலம் ஓடியது. வேலை விஷயமாக நான் ஊர் சுற்றலில் இருந்தேன். இந்தியாவுக்கு எப்போதாவது வரும்போது இந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் இவரது நிலையில் சிறு வளர்ச்சி இருந்தது. தேர்ந்த அர்ச்சகருக்கு உண்டான கம்பீரம் முதலியன இவரிடம் இல்லாவிட்டாலும் அவரது வேலைகளில் ஒரு அக்கறையும் கரிசனமும் இருந்ததைக் கண்டிருக்கிறேன்.

இந்தமுறை சென்னை சென்றபோது இவரைப் பார்த்தேன். ‘வாங்கோ, எப்படி இருக்கேள் ? பையங்கள் எப்படி இருக்கா ? பெருமாள் தயவுல இங்கெ பக்கத்துல ஒரு வீடு வாங்கியிருக்கேன். அவசியம் ஆத்துக்கு வாங்கோ’, என்றார். பையனையும் அருகில் ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகக் கூறினார்.

உண்மையாகவே மன நிறைவாக இருந்தது. அவர் வந்து சேர்ந்தபோது எப்படி இருந்தார், அவர் குடும்ப நிலைமை என்ன ? என்பது நன்கு தெரிந்த எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. மேலும் நன்றாக வர வேண்டும் என்று பெருமாளைப் பிரார்த்தித்தேன்.

ஒரு நிமிடம் யோசித்தேன். இவர் இந்த நிலைமைக்கு வர சுமார் ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளது. பெரிய படிப்பெல்லாம் இல்லை; பணமும் இல்லை; கோவில் வேலையும் அவ்வளவாகத் தெரியாது; குடும்பம் வேறு; ஊரில் வறுமை; ஆனால் பிழைக்க வேண்டும். இன்னமும் கீழே செல்ல வழி இல்லை. மேலே எழும்பித்தான் ஆக வேண்டும். அதற்கான முயற்சி அவரிடம் இருந்தது.

இவர் தனது சொந்த முயற்சியாலேயே மேலே வந்துவிட்டாரா ? அல்லது இவர் வந்து சேர்ந்த சமூகம் அவரைப் பார்த்துக்கொண்டதா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நிச்சயமாக சமூகம் தான் காரணம். அவரிடம் விஷயம் இல்லை என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவரைப் போஷித்தது அந்தச் சமூகம். அவரையும் அவரது குடும்பத்தையும் பட்டினி போடாமல் பார்த்துக்கொண்டது அது.

முன்னரெல்லாம் வேத பாட சாலை என்று உண்டு. வசதியற்ற பல எழைக்குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி விடுவார்கள். வேதம் படித்து வேதத்தை வாழ வைக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை. ஒரு வேளை கூட பிள்ளைகளுக்குச் சோறு போட முடியாத பிராம்மணக் குடும்பங்கள் பல உள்ளன. முன்னேறிய சமூகம் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் இந்த உலகில் பிழைக்க ஒரே வழி பாரம்பரிய மடங்கள் நடத்திய பாட சாலைகள்தான். ஏனெனில் அங்கே உணவும் உறைவிடமும் கல்வியும் இலவசம்.

ஒரு நியதி உண்டு. பிள்ளைக்குப் பூணூல் போட்டுக் கொண்டு விட வேண்டும் என்ற ஒரு நடைமுறை உண்டு. அதற்கும் வசதியில்லாத பல குடும்பங்கள் மடங்களின் ஆதரவில் ‘சமஷ்டி உபநயனம்’ என்று பல பிள்ளைகளுக்கு ஒரு சேரப் பூணூல் போட்டுப் பின்னர் வேத பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர். ( டாம்பீகமாக செலவு செய்து உப நயனம் செய்யும் வழக்க உள்ளவர்கள் ஒரு கணம் சிந்திக்கலாம்).

இன்னொரு வழக்கமும் உண்டு. பாட சாலைப் பிள்ளைகள் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வீட்டில் உணவு உண்ண வேண்டும் என்றும் ஒரு வழக்கம் இருந்துள்ளது. நாங்கள் நெய்வேலியில் இருந்த போது அப்படி எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை ஒரு பையன் வந்து உணவு உண்டு செல்வான். அடுத்த நாள் இன்னொருவர் வீட்டில். வசதி இல்லாதவர்களை சமூகம் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு நியதி இருந்தது.

அப்படி ஒரு பிள்ளையிடம் பேசிக்கொண்டிருந்தேன். லீவு விட்டு விட்டார்களே, ஊருக்குப் போகவில்லையா என்று கேட்டேன். லீவு விட்டாலும் ஊருக்கு வராதே என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றும் வந்தால் அவர்களது ஒரு வேளை உணவும் பகிர்ந்துகொள்ள வேண்டும்; எனவே வர வேண்டாம் என்றும் கூறிவிட்டார் என்று சொன்னான். அந்தப் பையனுக்கு 7 வயது இருக்கலாம். அவன் அருகில் இன்னொரு வாண்டு வேஷ்டி கட்டிக்கொண்டிருந்தது. 5 வயது அதற்கு. ‘எங்கே என்னடா பண்றே?” என்று கேட்டு வைத்தேன். “உம்மாச்சி சுலோகம் கத்துத் தறா. சாதம் போடறா. எப்பயானும் கன்னமுது ( பாயசம் ) குடுக்கறா. அதான் இங்கே இருக்கேன்”, என்று மழலை மாறாமல் சொன்னது அது.

மனது கேட்கவில்லை. ஒரு 50 ரூபாயை அதனிடம் அளித்தேன். ‘அம்மா வைவா. யார் காசு குடுத்தாலும் வாங்கிக்க கூடாதுன்னு சொல்லியிருக்கா”, என்று சொல்லி வேஷ்டியைப் பிடித்துக்கொண்டே ‘அடுத்தது நான் தான் பாட்டிங்’ என்று ஓடியது.

அந்தப்பிள்ளை எந்த விதத்தில் ‘முன்னேறிய’ வகுப்பு என்று அரசாங்கம் கூறுகிறது என்று தெரிந்தவர்கள் கூறலாம்.

பாடசாலைப் பிள்ளைகள் கதைகள் ரொம்பவும் சோகமானவை. அவ்வப்போது அவர்களுடன் நேரம் செலவிடுவது வழக்கம். வெளி நாடுகளில் கிடைக்கும் சில பேனாக்கள் , கலர் பென்சில்கள் முதலியன வாங்கி வந்து அவர்களிடம் தருவது வழக்கம். அப்போது சிலரது குடும்பங்கள் பற்றி விசாரிப்பேன். ‘தான்’ என்ற அகங்காரம் கொண்டுள்ள யவரும் இந்தக் கதைகளைக் கேட்டால் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை ஒரு நொடியில் உணர முடியும். அதுவும் சின்னப் பிள்ளைகள் சொல்லக்கேட்டால் அதைவிட சன்யாசம் என்று ஒன்று தனியாக வாங்கிக்கொள்ள வேண்டாம்.

அர்ச்சகர் விஷயத்திற்கு வருவோம். இவர் சிங்கப்பூர் போன்ற ‘Meritocracy’ மட்டுமே சார்ந்த சமூகத்தில் இருந்திருந்தால் இவரது நிலை என்ன என்று எண்ணிப் பார்த்தேன். தூக்கம் வர வில்லை.

கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்

“அடடா என்ன ஒரு பெருமாள் சேவை ? பெருமாள் என்ன அழகு ? ஒரு முத்தங்கி அலங்காரம் பண்ணியிருந்தாளே, அவா கைக்கு ஒரு காப்பு பண்ணிப்போடணும் ”

“என்ன ஒரு கூட்டம் ! ஏழு மணி நேரம் நிக்க வெச்சு நிக்க வெச்சு அப்புறம் உள்ளே விட்டான். ஆகா, பெருமாள் என்ன சேவை ? சரியா ஒரு நிமிஷம் கூட சேவிக்க முடியல்லே; ஆனால் என்ன ஒரு சேவை தெரியுமா ? ”

“லட்டுக்கே ரெண்டு மணி நேரம் ஆச்சுன்னா பாத்துக்கோயேன்”

“எனக்குத் தெரியாது, எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எனக்கு வி.ஐ.பி. பாஸ் உண்டு. பெருமாளுக்கு அஞ்சு அடி கிட்டே அஞ்சு நிமிஷம் நின்னேன். என்ன ஒரு அனுபவம் தெரியுமா ? எப்போ போனாலும் எனக்கு வி,ஐ,பி. பாஸ் கிடைக்கும்”

“பெருமாள் என்ன எப்போ பார்க்கணும்னு நினைக்கறாறோ அப்போவெல்லாம் கூப்பிடுவார். ஒரு கார் டிரைவ். அங்கே இருப்பேன். பெருமாள் கிட்டே அஞ்சு நிமிஷம் நிப்பேன். மத்தவங்கள்ளாம் ‘ஜருகிண்டி ஜருகிண்டி’னு போயிண்டே இருப்பா”

“மதுரை மீனாட்சியைப் பார்க்கணும்னா ஒரு போன் போதும். நேரே கர்ப்பக்கிருகம் கிட்டே கொண்டு விட்டுடுவான். அம்மாவைப் பார்த்துண்டே எத்தனை நேரம் வேணும்னாலும் நிக்கலாம். ஈ.ஓ. நம்ம தோஸ்து இல்லையா ?”

“அதோ பெருமாள் கையில் இருக்கே ‘வைர அபயஹஸ்தம்’, அது நான் செய்ததாக்கும்”

இப்படியெல்லாம் பேசுபவர்கள் கவனத்திற்கு :

கீழே உள்ள படங்களைக் கொஞ்சம் பாருங்கள்.

நமது கோவில்கள் இறை காட்சி சாலைகள் அல்ல. அம்மையையும் அப்பனையும் அலங்காரம் செய்துவிட்டு அவர்கள் அழகைப் பார்த்து வியக்கவும், இவர்கள் அருகில் நின்று படம் பிடித்துக்கொள்ளவும் அவர்கள் என்ன அருங்காட்சிப் பொருட்களா ? நினைத்துப் பாருங்கள். இவர்கள் இந்தப் பூமி துவங்கி சில நூற்றாண்டுகள் கழித்து இந்த மண்ணில் வந்தவர்கள். நமது முன்னோடிகள். பல நூற்றாண்டுகள் கண்டவர்கள். பல வரலாறு அழிந்து பல வரலாறு உருப்பெறுவதைப் பார்த்தவர்கள். நமக்குப் பின்னும் நடக்கவிருப்பதை உணர்ந்தவர்கள்.

‘தான்’ என்ற அகந்தையில் இறுமாந்திருந்த பல சக்கரவர்த்திகள் மண்ணைக் கவ்வக் கண்டவர்கள். ‘உலகமே என் காலடியில்’ என்று எண்ணி பல வன் செயல்கள் புரிந்த மானிட வன விலங்குகளைப் பார்த்து நகைத்தவர்கள். ஒரு வேளை நம்மைப் பார்த்தும் அப்படியே நகைக்கிறார்களோ என்னவோ !

பல கோவில்கள் வெறும் புற்றாக இருந்து வளர்ந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளன. இந்த புற்று – கோவில் பயணம் நடந்த நேரம் சில ஆயிரம் ஆண்டுகள். ஆக இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த, வீழ்ந்த மாந்தர் கதை அறிந்தவர்கள் இவர்கள்.

kalvettu

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உற்று நோக்கும் இந்தக் கல்வெட்டை செதுக்கியது யார் ? இதை செதுக்கச் சொன்னவன் யார் ? நீங்கள் நிற்கும் கருங்கல் தளம். இந்தத் தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகள் முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம். அல்லது அவர்களுக்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த முதற்சோழப் பரம்பரையினர் இருக்கலாம். இந்த வரலாறை நினைத்துப் பாருங்கள்.

praharam

இந்த பிராகாரத்தைப் பாருங்கள். எத்தனை கல் தச்சர்கள் கை வண்ணம் தெரியுமா இது ? எத்தனை கல் தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள் ஒருங்கிணைந்து கட்டிய வரலாறு என்று எண்ணிப்பார்த்தீர்களா ? அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இதன் அருகில் தான் எங்கோ குடில்கள் அமைத்து கோவில் கட்டி முடியும் வரை வாழ்ந்து வந்தனர் என்பதை எண்ணிப்பார்த்தீர்களா ?அவர்கள் குழந்தைகள் இதன் அருகில் தான் ஆயிரம் வருஷம் முன்னர் விளையாடியிருக்கின்றனர். சில நிமிஷம் இந்த நிகழ்வுகளைக் கண் மூடி எண்ணிப் பாருங்கள். உங்களது டாம்பீகங்களின் அற்பத்தனத்தை உணர்வீர்கள்.

kodimaram

சற்று நிமிர்ந்து பாருங்கள். அதோ அந்த கோபுர வாயில். அதன் அடியில் இருக்கும் வளைந்த கல் தூண் எப்படி கட்டப்பட்டது தெரியுமா ? சற்று யோசித்துப் பாருங்கள். இந்த வளைந்த கல் வாயில் தூக்கி நிறுத்தப்பட்ட போது இங்கே நிகழ்ந்த ஆரவாரம் உங்கள் காதுகளில் கேட்கிறதா ? தோரண வாயில் நிறுத்தப்பட்ட பின் நடந்த கொடிக் கம்பம் நிறுத்த விழாவுக்கு மன்னன் யானை மீதேறி வந்தானே, அதை நினைத்துப் பாருங்கள்.

இதோ, இதுதான் அந்தக் கொடிக்கம்பம். ‘த்வஜஸ்தம்பம்’ என்று வட மொழியில் கூறுவர். இதன் கீழ் தான் ஓதுவார்கள் திருமுறைகளை ஓதிக்கொண்டிருந்தனர். மக்கள் மெய் மறந்து கண்களில் நீர் வழியக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த விழா இதே இடத்தில் தான் நடந்தது. சைவ மறைகள் ஒதப்பட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். காவிரியில் இருந்து யானை மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் யாக சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வேள்விகள் முடிந்தபின் நீரை சிவாச்சாரியார்கள் கும்பங்களின் மேல் ஊற்றினர். குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. மன்னன் மகிழ்ச்சியில் சிற்பிகளுக்கும் தச்சர்களுக்கும் முத்து மாலைகளும், தங்க நகைகளும் பரிசளித்தான். பலருக்கு அருகில் இருந்த நிலங்களைத் தானமாகக் கொடுத்தான்.

மன்னன் அத்துடன் நிற்கவில்லை. ஆடுதுறை, மேக்கிரிமங்கலம், ஆனை தாண்டவபுரம் முதலிய ஊர்களின் நிலங்களை கோவிலுக்கு ‘நிவந்தனம்’ எழுதிவைத்தான். திறமையான வேத விற்பன்னர்களுக்கு ‘சர்வ மான்ய அக்ரஹாரம்’ என்னும் பெயருடைய பகுதியை அளித்தான்.

இந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி இது.

கோவில் கட்டிய மன்னனின் பெருந்தன்மை என்ன ? இன்னொரு கோவில் கட்டும் அளவிற்கு செல்வங்களைப் பணியாளர்களுக்குக் கொடையளித்தான். கோவிலும் ஊரும் விழாக் கோலத்தில் பல நாட்கள் இருந்தன, விழா முடிந்து பல நாட்கள் கழித்தும் மக்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்தக் கோவில் இவ்வாறு கட்டப்படவேண்டிய தேவை என்ன ? பழையாறையில் இருந்த குந்தவைப் பிராட்டி சிவனுக்கான மண் கோவில்களை எல்லாம் கற்கோவில்களாகக் கட்டிக்கொண்டிருந்தார் அல்லவா ? அவற்றைக் ‘கற்றளி’ என்று அழைத்தனர். அப்படி அவரது எண்ணப்படி மண்ணிலிருந்து கல்லான கோவில் தான் இது. இதன் குடமுழுக்குதான் நடந்தது. ஆம். ராஜராஜனின் சகோதரி குந்தவை இருந்தாளே, அவளே தான்.

அந்த மன்னனும் அவனது பரிவாரங்களும் நின்றுகொண்டிருந்த இடத்தில் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.

இன்னொன்று தெரியுமா ? கோவில் கட்டியபின் பல முறை இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாகப் பல போர்கள் நடந்துள்ளன. உறையூரிலும் பழையாறையிலும் இருந்த சோழனின் அரண்மனைகள் அழிந்தன. ஆனால் பழையாறை அருகில் உள்ள இந்தக் கோவில் அப்படியே இருக்கிறது.

அவனது பெருந்தன்மையில் கொஞ்சமேனும் உங்களுக்கு வேண்டாமா ?

அந்த இடத்தில் நின்று கொண்டு நயந்தாராவின் நயங்களைப்பற்றிப் பேசுவது நியாயமா ?

கோவில் உண்டியலில் பத்து ரூபாய் போட்டுவிட்டு அம்பாளிடம் பல ஆயிரம் ரூபாய் பெறுமான வர்த்தகம் பேசுவது தர்மமா ?

கோவிலில் நின்று அதன் வரலாற்றை நினையுங்கள். அதனைக் கட்டிய மன்னனின் எண்ண ஓட்டங்களை எண்ணிப் பாருங்கள். தன் பெயர் ஓரிடத்திலும் வராமல் அம்மையப்பனின் பெயர் மட்டுமே வெளியே தெரியும்படி தன் செல்வங்கள் கொண்டு கட்டிய கோவில் சுவர்களில் உங்கள் காதல் வரலாறு எழுதியே ஆக வேண்டுமா ?

நீங்கள் அலுவலகத்தில் பெறப்போகும் சில நூறு ரூபாய் சம்பள உயர்வுக்கு இறைவனிடமும் இறைவியிடமும் இந்த மகோன்னதமான இடங்களில் பேரம் பேசுவது சின்னத்தனம் இல்லையா ? தெய்வம் சும்மா விடுமோ இல்லையோ கோவிலைக் கட்டிய கல் தச்சர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது. ஏனெனில் அவர்கள் தங்கள் குடும்பம், உறவு, உணவு, கேளிக்கை மறந்து உயிரைக் கொடுத்து கட்டியவை இந்தத் தூண்கள்.

அப்படியே உள்ளே நடந்து ஒரு செவ்வைக்கிழமை மாலை வேளையில் அம்மன் சன்னிதி செல்லுங்கள். யாரும் உடன் வேண்டாம். நீங்களும் அம்பாளும் மட்டும். அந்தத் திரி விளக்கின் ஒளி மட்டுமே. பச்சை உடுத்தி அம்பாள் மோனத்தில் உங்களைப் பார்ப்பது தெரிகிறதா ? சற்று உற்று கவனியுங்கள். காதைக் கொஞ்சம் தீட்டிக்கொள்ளுங்கள். அதோ ஒரு ஓதுவார் மெதுவாகப் பாடுவது கேட்கிறதா ? அவர் இந்த நூற்றாண்டா என்றெல்லாம் ஆராயாதீர்கள். அது தேவை இல்லை. அவர்களுக்கும் அவர்கள் ஓதும் திருமுறைக்கும், ஏன் இந்த அம்பாளுக்கும் கூட காலம் எல்லாம் இல்லை.

இன்று நேற்று இல்லை. சில ஆயிரம் ஆண்டுகள் பல தலைமுறைகள் ஓதுவார்கள் பாடிய பதிகங்கள் இந்தச் சுவர்களில்  பட்டு எதிரொலித்தபடி இருந்துள்ளன. அவற்றை நீங்கள் கூர்ந்து கேட்டால் உணரலாம். ஓதுவார்களின் ஆன்மாக்கள் கோவில்களை விட்டு அகலுவதில்லை.

எந்தத் தேவையும் இல்லாமல், எந்த வேண்டுதலும் இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மையின் முன் நின்று பாருங்கள். அந்த அமைதி. வேறேங்கும் கிடைக்காது அது.

இதை விடுத்து அம்பாள் முன் வெற்று ஆர்ப்பட்டம் தேவையா ? கோவில் ஊழியருக்குப் பணம் கொடுத்து அம்மையின் அருகில் நிற்பதால் நீங்கள் அடையப் போவது என்ன ? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அத்துடன் குந்தவையைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். ஒரு சின்ன ஒப்பீடு செய்ய்யுங்களேன் உங்களைக் குந்தவைப் பிராட்டியோடு. அவள் இப்படிச் செய்திருப்பாளா என்று ?

கோவிலில் உற்சவ சமயங்களில் உங்களுக்கு முதல் மரியாதை என்றோ, ‘முதல் தீர்த்தம்’ என்றோ ஏதாவது ஒன்று  இருந்தால் அது பற்றி இன்னொரு முறை யோசியுங்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவரா என்று எண்ணிப்பாருங்கள். நியாயமாக அந்தக் கல் தச்சனின் குடும்பமோ, சிற்பியின் குடும்பமோ பெறவேண்டியது அது. ‘முதல் தீர்த்தம்’ அல்லது மரியாதை என்று சண்டை பிடிக்கும் முன்னர் குந்தவையையும் பரந்தகனையும் கரிகாலனையும் நினைக்கலாம். அவர்கள் செய்ததில் இந்தக் கோவிலுக்கு நீங்கள் செய்தது தூசியில் அடங்குமா ? நினைத்துப் பாருங்கள்.

கோவில்களின் தெய்வ வடிவங்கள் நீங்கள் அவர்களைப் பார்ப்பதற்காக நிற்கவில்லை. அவற்றின் பார்வை உங்கள் மீது பட வேண்டும் என்றே நிற்கின்றன. ஆக அங்கே உங்கள் படாடோபங்கள் தேவையா ? உங்களது பட்டுப் பீதாம்பரங்கள் அந்த வரலாற்றின் முன் நிற்குமா ?

இந்தக் கோவில்களுக்குச் செல்ல நீங்கள் எம்.பி.ஏ. எல்லாம் படித்து கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றவேண்டிய தேவை இல்லை. ஆண்டு சந்தா என்ற பெயரில் ஒரு சில கார்ப்பரேட் சாமியார்களின் ஐந்து நட்சத்திர வாழ்க்கையைச் சுமக்க வேண்டியதில்லை. ‘கிரியைகள்’ என்ற பெயரிலோ அல்லது ‘காய கல்பப் பயிற்சி’ என்ற பெயரிலோ வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.

வெறுமனே பாசுரங்களையும் பதிகங்களையும் உங்களுக்கு மட்டுமே கேட்கும்படிப் பாடினாலே போதும்.

செல்லுங்கள், மயிலாடுதுறையிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது இந்த வேதபுரீஸ்வரர் கோவில். தேரழுந்தூர் என்னும் வைணவ திவ்யதேசத்தில் வேதபுரீஸ்வரரும் தனக்கென தனியாக ஒரு கோவில் கொண்டுள்ளார். ஊரின் கிழக்கே உள்ளது இந்தக் கோவில்.

திருஞானசம்பந்தர் இக்கோவிலைப் பாடியுள்ளார். ஒரு புறம் பெருமாள் கோவிலும் மறுபுறம் சிவன் கோவிலும் இருந்ததால் எந்தப்பக்கம் செல்வது என்று தேர்முட்டியில் இருந்த விநாயகரிடம் வழி கேட்டதால் அவர் ‘வழி காட்டி விநாயகர்’ ஆனார். இன்றும் இவரும் அருள்கிறார்.

“வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே ” என்று கொஞ்சம் வரலாற்றை சுவாசித்து வாருங்கள்.

ஒரு மனுஷி, சில கோலங்கள்

உங்களுக்கு 70 – 80 வயதில் பாட்டி இருக்கிறார்  என்றால் நீங்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். அவர்களிடம் கேட்டே நீங்கள் இப்பதிவின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ளலாம். இல்லை, அப்படித்தான் படிப்பேன் என்றால் தொடந்து படியுங்கள்.

உங்களில் சிலருக்கு இது மார்கழி மாதம் என்பது நினைவிருக்கலாம். ஒரு சில பழைய பஞ்சாங்கங்களுக்கு இந்த மாதத்தில் வீட்டு வாசிலில் கோலம் போடுவது வழக்கம் என்பதும் நினைவுக்கு வரலாம். ஒரு சில அசட்டு அம்மாஞ்சிகளுக்கு இந்த மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை முதலிய பாசுரங்கள் நினைவுக்கு வரலாம்.

நாம் கோலம் விஷயத்திற்கு வருவோம். வாசலில் கோலம் போடுவது தமிழர்களின் பண்பாடு என்று சொன்னால் அடிக்க வர மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கல் மாவையும், அரிசி மாவையும் ஒன்றாகக் கலந்து அதனைக் கோலமாவு என்று அழைப்பார்கள். இதனைக்கொண்டு வீட்டு வாசலில் பல வடிவங்களில் வரைவார்கள். புள்ளிக் கோலம், நேர்க்கோலம், நெளிவுக்கோலம் என்று பல வகைகள் இருந்ததுண்டு.

அட, மறந்துவிட்டேன். கோலம் போடுவதற்கு முன்பு ‘வாசல் தெளிப்பது ‘ என்ற ஒரு பழைய கற்காலப் வழக்கமும் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் வீட்டிற்கு முன் வாசல் என்று ஒன்று வேண்டும். அது அகலமாகவும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் வீடும்  சின்னதாக உள்ளது. வீட்டு வாசற்கதவைத் திறந்தால் அடுத்த வீட்டு வாசற்கதவு இடிக்கும் ‘பிளாட்’ கலாச்சாரம் பரவி விட்டதால் வாசல் தெளிப்பதாவது ஒன்றாவது ?

பரந்து விரிந்த வீடும் வாசலும் இருந்தபோது மக்கள் மனதும் அப்படியே இருந்தது. புறாக்கூண்டு போன்ற அடுக்குகளில் அடங்கிக்கொண்ட மக்கள் தங்கள் மனதும் அவ்வாறே சுருங்கக் கண்டார்கள் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்கிறீர்களா ? . அத்துடன் மக்களைப் பிற்போக்குத் தனமான செயல்களைச் செய்யச் சொல்கிறேன் என்றும் சிலர் கூறலாம். ஆனால் ஒன்று, ‘ஓரினச் சேர்க்கை சரி ‘ என்று பிதற்றும் ‘முற்போக்கு’ கூட்டத்தில் நான் இல்லை என்பதால், மேலும் கோலம் பற்றித் தொடர்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே கருத்தப்பட்டு வந்தது வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது. கோலம் போடுவதில் வீட்டுக்கு வீடு போட்டி உண்டு. யார் முதலில் கோலம் போடுகிறார்கள், யார் வீட்டுக் கோலம் பெரியதாகவும் அழகாகவும் உள்ளது என்று பல வகைகளில் போட்டி போடுவார்கள். ‘அட, நீ எப்போது போட்டே, நான் பார்க்கவே இல்லையே !’ என்று மற்றவர் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்று விடியற்காலையிலேயே எழுந்து கோலம் போடுவது என்று ஒரு காலம் இருந்தது.

( 90 களில் பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம். ‘விடியற்காலை’ என்பது ஒரு நாளில் காலையில்  நான்கு முதல் ஆறு மணி வரை உள்ள நேரம். நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்போதுதான் நீங்கள் வேலை முடித்தோ அல்லது இணையத்தில் நேரம் செலவிட்டோ தூங்கச் செல்லும் நேரம்.)

அரிசிமாவும் கல் மாவும் கலந்து உள்ள பொடியால் கோலம் போடும் முறை ஏன் ? அதனால் வாசலில் உள்ள அணில், காக்கை, குருவி முதலியன உணவுக்காக அலைய வேண்டியதில்லை. ஈ, எறும்பு முதலியன கூட அரிசிமாவை உணவாகக் கொண்டிருந்தன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவர் கூறுவது இங்கு எண்ணிப் பார்க்கலாம். ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்ற பாரதியும் நினைவுக்கு வரலாம்.

அதுவும் மார்கழி மாதத்தில் கோலத்தின் நடுவில் பூசணிப்பூ வைத்து அலங்கரிப்பார்கள். பல வண்ணக் கோலங்களும் உண்டு.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கோலம் போடுவது பெண்கள் மட்டுமே. அவர்கள் காலை வேளையில் குனிந்து நிமிர்ந்து வாசலில் கோலம் போடுவதால் இடுப்புக்கு வேண்டிய உடற்பயிற்சி கிடைத்துவந்தது. பெண்களுக்குப் பிரசவ நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும் இது என்று பெரியவர்கள் கூறினர். அக்காலத்தில் சுகப்பிரசவம் மட்டுமே நடந்தது என்பதையும் சேர்த்துப் பார்க்கவும். ‘சிசேரியன்’ என்னும் பணம் பறிக்கும் முறை அப்போது தோன்றியிருக்கவில்லை. மக்களும் வானத்துக் கோள்களை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான நேரத்தில் பிள்ளை பெற்றுக்கொண்ட காலம் அல்ல அது. அவர்களுக்கு அவ்வளவு ‘பகுத்தறிவு’ வளர்ந்திருக்கவில்லை.

சரி. இவ்வளவு பீடிகை ஏன் ? விஷயத்திற்கு வருகிறேன்.

இந்தப் படத்தைப் பாருங்கள்.

சுசீலா மாமியின் மார்கழி கோலம்
வருஷம் தோறும் சுசீலா மாமி போடும் கோலம்

இது ஒரு கோலம். ராமானுசர், சங்கரர், மத்வர் என்று மூன்று ஆச்சாரியர்களின் உருவம். அவர்களுக்குக் கீழே தட்டில் வெற்றிலை, வாழைப்பழம் முதலியன. அத்துடன் சங்கும் சக்கரமும். எல்லாமும் கோலத்தில் தான்.

இது மார்கழி மாதத்தில் சென்னையில் எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு 85 வயதான சுசீலா மாமி என்று அழைக்கப்படும் மூதாட்டி அம்மையார் போட்ட கோலம். இவர் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டாள் பாசுரத்திற்கும் ஏற்றாற்போல் கோலம் போடுவார். பாடலுக்கு ஏற்றாற்போல் படம் இல்லையென்றால் இம்மாதிரி பொதுவானதாகவும், புதியனதாகவும் போடுவார். இதற்காக இரவு சுமார் பதினோரு மணி அளவில் தன் வீட்டு முன்னால் சுத்தம் செய்யத் துவங்குவார். பின்னர் ஒரு மூன்று மணி அளவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வாசல் தெளித்துக் கோலம் போடத் துவங்குவார். ஆறு மணி வரை போடுவார்.

அத்துடன் நில்லாமல் அந்தக் கோலத்தை மாடு, நாய் முதலியனவும், மனிதர்களும் அழிக்காமல் இருக்க கோலத்தைச் சுற்றிக் கம்புகளால் ஒரு அரண் அமைத்துவிடுவார். நாள் முழுவதும் வீட்டு வாசலில் இருந்து யாரும் கோலத்தை அழிக்காமல் காவல் காப்பார்.

இவர் போடாத தெய்வ வடிவங்கள் இல்லை. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள், வெறும் ஆண்டாள் மட்டும், தக்ஷிணாமூர்த்தி, நந்தி மீது சிவனும் பார்வதியும், அனுமன், இராம பட்டாபிஷேகம், காளிங்க நர்த்தனம் என்று பல விஷயங்கள் பற்றி இவர் கோலம் அமையும். சென்னையில் எங்கள் பகுதியில் அவரது கோலம் ரொம்பவும் பிரசித்தம்.

இது தவிர தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, பொங்கல் என்று விதம் விதமான நாட்களுக்கு விதம் விதமாகக் கோலம் போடுவார்.

இத்தனைக்கும் அவருக்கு உடல் நிலை சரியில்லை. மூன்று முறை ‘கீமோ-தெரபி’ செய்துகொண்டுள்ளார். ஆனால் மிகவும் மனவுறுதி படைத்தவர். பல ஆண்டுகள் முன்னரே கணவரை இழந்த அவர், மனம் தளராமல் இந்தி கற்று, தான் இந்தி ஆசிரியராக தனது 75 வது வயது வரை பணியாற்றினார். வறுமையில் இருந்த  ஒரு குடும்பத்தின் இரு பிள்ளைகளை எடுத்துத் தன் பிள்ளைகளாகவே வளர்த்து இன்று ஒரு பிள்ளைக்குத் திருமணமும் செய்துள்ளார். இரு மகன்களும்  இன்று நல்ல வேலையில் உள்ளனர். இரண்டு பிள்ளைகளைத் தான் ஒருவராகவே வளர்த்து அவர்களுக்குக் கல்வியும் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ள நிலையில் இந்த இரு பிள்ளைகளும் அவரிடம் உயிராகவே உள்ளனர்.

மாமி ஆண்டுக்கு ஒருமுறை தன் கணவர் நினைவு நாளில் காசிக்குச் சென்று கிரியைகள் செய்து வருகிறார்.

அத்துடன் இல்லாமல் தன் வீட்டின் ஒரு பகுதியில் ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும் தன் பேரனாகவே கருதி வருகிறார்.

இதெல்லாம் தமிழ் சினிமாவில் வருவதுபோல் தோன்றினாலும் இவை அவ்வளவும் உண்மை. இன்றும் இப்படிப்பட்ட மனித தெய்வங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடையே தன் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஒரு அர்த்தத்துடன் வாழும் சுசீலா மாமியை என்னவென்று சொல்வது ?

சென்னையில் ஏன் மழை பெய்கிறது என்று இப்போது தெரிகிறதா ?

%d bloggers like this: