நன்றி சிங்கப்பூர்

சிங்கப்பூர் வாசக நண்பர்களே,

அடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில் நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.

கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.

பொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.
இவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.

சங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.

எனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.

நான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.

பல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.

பாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.

என்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.

வாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.

சங்கப்பலகை 12 – நிகழ்வுகள்

சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. 120 வாசகர்கள் வந்திருந்தனர்.

புகழ்பெற்ற எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் ‘தமிழ் இலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் பேருரையாற்றினார்.  பின்னர் வாசகர்களுடன் ஆழமான கலந்துரையாடல் நடேபெற்றது.

பின்னர் தொல்லியலாளர் விஜய்குமார் எழுதிய ‘The Idol Thief’ என்னும் சிலைகள் மீட்பு தொடர்பான நூல் வெளியீடு கண்டது. முன்னதாக நூலாய்வுகளும் நடைபெற்றன. விஜயகுமார் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சரவணபவன் வாசகர்களின்  வயிற்றுக்கு உணவளித்தது, பேச்சாளர்கள் அறிவுக்கு.

காணொளிகள் பின்வருமாறு.

அரவிந்தன் நீலகண்டன் உரை + கேள்விபதில்

‘The Idol Thief’ நூல் வெளியீடு + நூலாய்வு + கேள்விபதில்

 

சங்கப்பலகை 12 அழைப்பிதழ்

சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.

‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.

பின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.

நாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30

இடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.

தவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.

 

 

சங்கப்பலகை – சில குறிப்புகள்

சங்கப்பலகை நிகழ்வுக்கு விடாமல் வருபவர்கள் பலர்.

அதே நேரம் சங்கப்பலகை வாசகர் வட்டக் கூட்டத்திற்கு இதுவரையில் வராதவர்களும் பலர் உள்ளனர். ஒவ்வொரு முறையும் அழைக்கும் போதும் ‘பணி உள்ளது’, ‘அடுத்த முறை வருகிறேன்’, கட்டைவிரல உயர்த்திய படம் என்று எதையாவது அனுப்புவார்கள். என்ன செய்வது ஒன்றரை ஆண்டுகளாக வர முடியாத அளவு வேலை என்று நினைத்துக்கொள்வேன் . ஆனாலும் நான் யாரையும் விடுவதாக இல்லை. எல்லாரையும் ஒவ்வொரு முறையும் அழைத்தே இருக்கிறேன்.

‘தலைப்பெல்லாம் ஒரு ரேஞ்சா இருக்கு சார். சங்கத் தமிழ், சிலம்பு, கம்பன் இப்டியே இருந்தா எப்டி? கொஞ்சம் இறங்கினா நல்லா இருக்கும்’ என்று சொன்னவர் சிலர்.

அனைவரும் வர வேண்டும் என்பதற்காக மனுஷ்யபுத்ரன் லெவலுக்கு இறங்கி அது மாதிரியான தலைப்புகளை வைக்க முடியாது. அது சங்க்ப்பலகையின் கொள்கை முடிவுகளில் ஒன்று.

நமது மொழி சார்ந்த தலைப்புகள், கலை, வேளாண்மை, எழுத்து வடிவங்கள், நில வகைகள் – இவை அனைத்தும் நமது பண்டைய தமிழ் இலக்கியம் சார்ந்து இருத்தல் வேண்டும். அவற்றில் ஆழங்கால் பட்டவர்கள் சில தலைப்புகளில் உரையாற்றுவார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்வு. அவ்வளவுதான் சங்கப்பலகை.

சங்கப்பலகை விஷயமாக இதுவரை யாரிடமும் ஸ்பான்ஸர் கேட்டு நின்றதில்லை. செலவுகள் என்னுடையவை. பேச்சாளர்களுக்கான அன்பளிப்பும் என்னுடையதே. ஒரு மூறை ஒரு நண்பர் பொன்னாடை வழங்கினார். பிறிதொரு முறை இன்னொரு நண்பர் தனிப்பட்ட தனது செலவு என்று சொல்லிப் பேச்சாளருக்குச் சிறு அன்பளிப்பளித்தார். ஸ்பான்ஸர்கள் வேண்டும் என்று நான் கேட்காததற்குக் காரணம் தலைப்புகளையும், பேச்சாளர்களையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாலேயே. கொஞ்சம் ‘சோ’த்தனம் என்று சொல்லலாம்.

சங்கப்பலகையின் ஒரே ஸ்பான்ஸர் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் மட்டுமே. இடம், ஒலி, ஒளி, கணினி உதவி அவர்களுடையது.

பேச அழைக்கப்பட்டவர்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். இதிலும் எந்தவித விட்டுக்கொடுத்தலும் இல்லை.

இனியும் அப்படியே தொடர எண்ணம். தலைப்புகளிலோ, பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலோ எந்த மாறுபாடும் இராது.

‘I know and understand that you are doing some literary work every month. I want to witness and participate in what is actually happening’ என்று மொழி தெரியாவிட்டாலும் நேற்று வந்து ஆதரவளித்த உடன் பணிபுரியும் பிரணய் குமார் என்னும் மைதிலி (பிஹார்)மாநில நண்பருக்கும் நன்றி.

வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

சங்கப்பலகை – ஆண்டுக் கூட்டம்

சங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வாக இன்று ‘சங்கப்பலகை வாயிலாகச் சுயம் அறிதல்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன். கடந்த ஒன்றரையாண்டுக் காலமாக சங்கப்பலகையில்  நடைபெற்ற நிகழ்வுகள், உரையாற்றிய அறிஞர்கள், பேசப்பட்ட தலைப்புகள், அறிந்து கொண்ட செய்திகள், அறிஞர்களின் அறிவுத்திறன் கண்டு மலைத்து நின்ற நேரங்கள், பண்டைத் தமிழ் ஞானத்தில் திளைத்து இறுமாந்திருந்த பொழுதுகள் என்று பலதையும் பேசினேன். இதுவரை பேசிய அனைத்து அறிஞர்களின் காணொளிகளையும் சிறிது நேரம் ஓடவிட்டோம்.

இனி செய்யவேண்டியவை பற்றிய சிறு கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

https://facebook.com/aapages

ஆமருவி
தேசிய நூலக வாரியம் சிங்கப்பூர்

IMG_0846 2

 

சங்கப்பலகை அமர்வு 11 – நிகழ்வுகள்

சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 11வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. பேரா. ஞானம் கணபதி ‘சங்கத் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பிலும், திரு.கண்ணன் சேஷாத்ரி ‘கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்’ என்னும் தலைப்பிலும் பேருரையாற்றினர். நான் வரவேற்புரையும் நன்றியுரையும் அளித்தேன்.

விழா தொடர்பான காணொளிகள்

சங்கத்தமிழர் வாழ்வியல்

 

கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்

சங்கப்பலகை – 10

சங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வு (10) 28-மே-2018 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தொல்லியலாளர் விஜயகுமார் ‘சிலையறிதல்’ என்னும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். சோழர் கால, பல்லவர் காலச் சிலைகளைக் கண்டறியும் முறைகள், நமது சிலைகள் காணாமல் போன விபரங்கள், கடத்தப்பட்டு சிறையில் உள்ள விபரங்கள் என்று பல நிகழ்வுகளை விளக்கிச் சொன்னார். பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. 20 பேர் பங்குகொண்டனர்.

நிகழ்வு தொடர்பான காணொளிகள்:

வரவேற்பு – ஆமருவி

சிலையறிதல் – விஜயகுமார்

கேள்வி பதில்

 

பக்தி இலக்கியத்தில் பெண்கள்

‘பக்தி இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சங்கப்பலகை நிகழ்வு 9 இன்று தேசிய நூலகத்தில் நடந்தேறியது. 40 பேர் வந்திருந்தனர். ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலியோரைப் பற்றி திருமதி. மாதங்கி, திருமதி. மீனாட்சி சபாபதி, திருமதி. உஷா சுப்புசாமி பேசினர்.

கேட்டவர்களை மேலதிகத் தகவல்களைத் தேடிப் போக வைத்ததாக இருந்தன பேச்சுக்கள். அதற்கான தரவுகளையும் பேச்சாளர்கள் அளிக்கத் தவறவில்லை.

பயனுள்ள நிகழ்வாக அமைந்த மாலைப்பொழுது இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் என்று விரிந்து, தமிழ் என்னும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்தது.

வரவேற்பு – ஆமருவி

ஔவையார் உரை – திருமதி. மாதங்கி

காரைக்கால் அம்மையார் – திருமதி. மீனாட்சி சபாபதி

ஆண்டாள் – திருமதி.உஷா சுப்புசாமி

 

சங்கப்பலகை அமர்வு 8

சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது.  புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும்  பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:

எழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.

 

சங்கப்பலகை அமர்வு 7

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் சங்கப்பலகை வாசகர் வட்டமும் லிஷா பேச்சாளர் மன்றமும் இணைந்து நடத்திய வாசகர் கூட்டத்தில் தமிழாசிரியர் துரை.முத்துக்கிருஷ்ணன் ஆற்றிய ‘பரிமேலழகர் காட்டும் வள்ளுவர்’ என்னும் பேருரை.

%d bloggers like this: