காலஞ்சென்ற நெல்லை கண்ணன் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்.
சிங்கப்பூர் இலக்கிய நாட்களில் இருந்து பழக்கம். கம்ப ராமாயணம் குறித்து சில மின் அஞ்சல் தொடர்புகள் உண்டு. பல பாடல்களை மீண்டும் வேறு நடையில் எழுதி அனுப்பி, பொருள் சரியாக வருகிறதா என்று அவர் கேட்டிருந்த காலங்கள் உண்டு.
அவருடனான முதல் தொடர்பு அவரை ஒர் இலக்கிய விழாவிற்காக வரவேற்று நான் எழுதியிருந்த சில குறள் வெண்பாக்கள் வழியாக. ஒரு வெண்பா ‘ நீவா சனி’ என்ற முடிந்ததாக நினைவு. இதை எழுதியது யார் என்று கேட்டு, கூப்பிட்டுப் பாராட்டினார். கிரேஸி மோகன் வடமொழிச் சொற்கள் கொண்டு வெண்பா இயற்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.
நெல்லை கண்ணன்
‘ஆமருவி’ என்பதை ஏதோ புனைபெயர் என்று நினைத்து ‘பெற்றோர் இட்ட பெயர் என்ன?’ என்றார். இயற்பெயரே அதுதான் என்றதும், சொந்த ஊர் தேரழுந்தூர் என்றதும் முக மலர்ச்சியுடன் பேசத் துவங்கினார் கண்ணன். ‘ திருமங்கையாழ்வார் பாசுரம் ஒண்ணு சொல்லுங்க’ என்றவர் நான் காலணியைக் கழற்றிவிட்டு சொல்லத் துவங்கிய போது தானும் எழுந்து நின்று கேட்டார். கையைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் துளிர்க்க ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி. வைணவர்கள் எங்கே போனாலும் பிரபந்தம்னா இளகிடுவாங்க’ என்று மனம் உருகிப் பேசிக்கொண்டிருந்தார்.
மதுரை ஆதீனம் வழக்கில் களப்பணி ஆற்றிய பெருமை உடையவர்.
பின்னாளில் கடுமையான சாதீயப் பார்வை கொண்டவராகவும், பெரும் மோதி எதிர்ப்பாளராகவும் தன்னைக் குறைத்துக் கொண்டார் என்பது பெரும் வருத்தமே.
அரசியலில் பல அணிகளில் பல நேரங்களில் இருந்தவரான நெல்லை கண்ணன், சமயத்துக்குத் தகுந்த அரசியல் நிலை எடுப்பது என்பதால் தனது மாண்பைக் குறைத்துக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருக்கவில்லை. அவரது அரசியல் நிலைகளும், பேச்சில் நிதானம் இன்மையும் காரணங்கள்.
தொடர்ந்து நல்லாசிரியராக இருந்து இளைய தலைமுறையினர் பலருக்கும் வழி காட்டியாக இருந்திருக்க வேண்டியவர் தன் நிலையில் இருந்து தாழ்ந்து, பலரது மதிப்பில் இறங்கி, மறைந்தார்.
பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலி.
‘50% இந்திய எம்.பி.க்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்’ என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளது தவறானது. ராஜ்ய சபாவை விட்டுவிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நக்கல் அடித்துவிட்டுச் செல்வது எளிதான செயல். ஆனால், நாம் அப்படிச் செய்யப்போவதில்லை.
அவர் மற்றொன்றும் சொல்லியிருக்கலாம். சிங்கப்பூரில் பிரதமர், அமைச்சர்கள் முதலியோரின் கல்வித் தகுதி, அவர்களது தொழில், நிர்வாக அனுபவங்கள், சம்பளம் முதலியனவற்றையும் சொல்லியிருக்கலாம். அமெரிக்க அதிபரின் சம்பளத்தை விட தனது சம்பளம் அதிகம் என்பதையும் சொல்லி, நாட்டின் அளவிற்கு ஏற்ற சம்பளம் தானா என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம்.
சிங்கப்பூரில் உள்ள ஊடகங்கள் எத்தனை, மற்ற ஜனநாயகங்களில் எத்தனை என்பதையும் பேசியிருக்கலாம்.
சிங்கப்பூரில் பிரதமரையோ, மந்திரிகளையோ, அரசின் கொள்கைகளையோ எதிர்த்து ஃபேஸ்புக் பதிவிட்டவர்கள் மன நல மருத்துவமனைக்குச் செல்வது ஏன் என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம். அவர் குறிப்பிட்டுள்ள ஜனநாயகங்களில் அப்படி நடைபெறுகிறதா என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேசத் தந்தை அமரர் லீ குவான் யூ அவர்கள் ஜவகர்லால் நேருவைப் பற்றிச் சொன்னதையும் சொல்லியிருந்திருக்கலாம்.
நேருவின் சோஷலிசக் கொள்கைகள் பற்றிச் சொல்லும் போது “It was my good fortune that I had several of these failed economies to warn me of this danger before I was in a position to do any harm in government,’ என்கிறார் லீ குவான் யூ. நேருவின் இந்தியாவை இன்றும் கொண்டிருந்தால் கியூபாவிடம் பிச்சை எடுக்க வேண்டியது தான்.
நேருவின் சோஷலிசம் பற்றி மேலும் சொல்லும் போது, “Like Nehru, I had been influenced by the ideas of the British Fabian society. But I soon realized that before distributing the pie I had first to bake it. So I departed from welfarism because it sapped a people’s self-reliance and their desire to excel and succeed. I also abandoned the model of industrialization through import substitution. When most of the Third World was deeply suspicious of exploitation by western MNCs (multinational corporations), Singapore invited them in. They helped us grow, brought in technology and know-how, and raised productivity levels faster than any alternative strategy could,” என்கிறார் லீ.
தேசம் சோஷலிசத்தில் தூங்காமல் இருந்திருந்தால், இன்று முழுமையான வல்லரசாகியிருக்கலாம். சோஷலிசத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டதால் சிங்கப்பூர் இன்று ஒளிர்கிறது. இதையும் பிரதமர் லீ சியன் லூங் கருத்தில் கொண்டு பேசியிருக்கலாம்.
இஸ்ரேலில் தற்போது பல கட்சிகள் சேர்ந்துமே கூட அரசு அமைக்க முடிவதில்லை என்பதைச் சொல்லியுள்ள பிரதமர், சிங்கப்பூரில் எத்தனை முறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன என்பதைப் பற்றியும் சொல்லியிருந்திருக்கலாம்.
ஒப்பீடு செய்வது என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஒப்பிட வேண்டியது தானே சரி?
என்னதான் சொன்னாலும், சிங்கப்பூர் போன்றதொரு தேசம் மற்றொன்று இவ்வுலகில் இல்லை. தண்ணீர் முதல் சகலத்தையும் இறக்குமதி செய்யும் தேசம் இன்று வளமான தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு அந்த தேசத்தின் தலைவர்கள் ஊழல் கறை படியாதவர்கள் என்பதே காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு ஊழல் கறை படியாமல், தேர்ந்த வல்லுநர்கள் மட்டுமே அரசில் பங்குகொள்ள முடியும் என்றும், ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய போரையே அமரர் லீ குவான் யூ நடத்தினார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்வது அவசியம்.
ஊழலுக்கு எதிரான அம்மாதிரியான போரைத் தற்போது நரேந்திர மோதி நடத்தி வருகிறார் என்பதையும் நாம் நினைவில் நிறுத்தி, சிங்கப்பூர் பிரதமரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.
பிரதமர் லீ சியன் லூங்கின் கருத்து அவர் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தில் ஒரு உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டதே தவிர, உள் நோக்கம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் சொன்னதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது என்பதையும் நமது எம்.பி.க்கள் உணர வேண்டும்.
‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு .. அடடா இப்பிடி எதுக்குமே உயில் எழுதாமப் போயிட்டியேடா.’யாரோ அருகில் இருந்து சொல்வது போல் ஒலித்தது. மனசாட்சியாக இருக்கலாம்.
அடித்த 103 டிகிரி ஜுரத்தில் நான் தான் சொன்னேனா, இல்லை யாரோ அருகில் இருந்து சொன்னார்களா என்று தெரியவில்லை. அதுவும் ராத்திரி 2 மணிக்குப் பினாத்தினால் நினைவு எப்படி இருக்கும் ?காலம் முடிந்துவிட்டதா? இனிமேல் அவ்வளவுதானா? வீட்டிற்குள் வைப்பார்களா இல்லை நேரே… இன்னொரு மனம் கேட்டது. பதில் தான் இல்லை.
எப்டியாவது எழுந்து இந்த உயில் சமாச்சாரத்தை முடிச்சுடலாமே. ப்ளீஸ். எழுந்திருக்கப்பார்ரா ஆமருவி. எழுந்திரு. எஸ்.யூ.கேன். எஸ்.யூ.கேன். ஒபாமா தோன்றிச் சொன்னார்.
நீங்களே வக்கீல் தானே. சார், நீங்க கொஞ்சம் எழுதிடறீங்களா? டயம் முடிஞ்சுடும் போல இருக்கே.’அப்பாரண்ட்லி நீங்க ப்ராப்பர்ட்டீஸ் டாக்குமெண்ட்ஸ் மூணு காப்பி கொடுங்க. மிஷல் செக் பண்ணி சொல்லுவா. ஒரு வாரத்துல முடிச்சுடலாம்.’
‘ப்ளீஸ். இன்னிக்கே முடிஞ்சுடும் போல இருக்கே. ஒரு வாரமெல்லாம் தாங்காதே’ ஹீன ஸ்வரத்தில் கெஞ்சியது யாரோ எங்கோ சொல்வது போல கேட்டது.
‘அது பரவாயில்ல. ஆஸ் பர் அமெரிக்கன் லா, வீடியோ வில் ஈஸ் வாலிட். இப்ப ஒரு வீடியோ எடுத்துக்கலாம். இவர்கிட்ட ஒரு ஆத்தரைசேஷன் சைன் வாங்கிக்கலாம். அப்பறம் ஃபில் பண்ணி நோட்டரைஸ் பண்ணிக்கலாம். ஹௌ ஈஸ் தட்?’ என்று கேட்டுத் தனது நட்சத்திரப் புன்னகையை உதிர்த்தார்.
‘யோவ், இங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன். எல்லா எலும்பு மேலயும் லாரி ஓடின மாதிரி வலிக்குது. என் கைய வெச்சே கேஸ் அடுப்ப பத்தவைக்க முடியும் போல கொதிக்குது. சீக்கிரம் எழுதிக்குடுய்யா’
‘ஆக்சுவலி, த பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் தான் அமெரிக்க கான்ஸ்டிட்யூஷனோட ஆதார நம்பிக்கை. யூ நோ. ஃபவுண்டேஷனல் பிலீஃப். ஈவன் மிஷல் வில் அக்ரீ. வோண்ட் யூ டியர்?’
‘யோவ், பொண்டாட்டிய அப்பறம் கொஞ்சிக்கோய்யா. சீக்கிரம் எழுதுய்யா.’ நான் சொல்வது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
சிங்கப்பூர் தனது நீர்த் தேவைகளுக்கு என்ன செய்கிறது? தெரிந்துகொள்வோம். #Singapore
‘You know, you can drink the water direct from the tap.’ டாக்ஸி ஓட்டுநர் லிம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.
‘What lah? See ghost already ya? Why mouth open so wide?’ லிம் மேலும் கேட்டதும் திறந்த வாய் மூடிக்கொண்டது. ‘Yes, I mean what I say lah. You drink water from tap and fall ill, I pay you $100’ என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது. இன்னும் பலப்பல ஆச்சரியங்கள் என்னை ஆட்கொள்ளப்போவதை உணராமல் மோன நிலையில் அமர்ந்திருந்தேன்.
‘சிங்கப்பூரில் எத்தனை ஆறுகள் உள்ளன?’ என்று கேட்டவுடன் திரும்பிப் பார்த்த லிம் ஒரு விரலைக் காண்பித்தார். ரஜினிகாந்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலே என் நினைவுக்கு வந்தது.
‘ஆறுகள் எவ்வளவு?’ என்றேன் மறுபடியும்.
‘ஒன்லி ஒன்’ என்றார் ஒற்றை விரலை மீண்டும் ஆட்டியவாறே.
‘அது போதுமா?’ என்றேன் ஆச்சரியத்துடன்.
‘போதாது. ஆனால் அதுவும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் தண்ணீரை மலேசியாவில் இருந்து வாங்குகிறோம்’ என்றார் சிரிப்புடன். ‘காற்று தவிர அனைத்தும் வாங்குகிறோம். அதுதான் சிங்கப்பூர்’ என்று சொல்லி மகிழுந்தை நிறுத்தினார்.
சிங்கப்பூர் முழுவதற்குமான நீர்த் தேவை நான்கு குழாய்களில் இருந்து பெறப்படுகிறது. அவையாவன:
1. வெளி நாட்டு நீர் – மலேசியாவில் இருந்து பெறப்படும் நீர், சுத்திகரிக்கப்பட்டு, உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
1961 மற்றும் 1962ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் மலேசியா இடையே இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. 99 ஆண்டுகள் நிகழ்வில் இருக்கும் ஒப்பந்தங்களால் மலேசியாவின் ஜோஹோர் மாநிலம் சிங்கப்பூருக்கு நீர் வழங்கும். சிங்கப்பூர் நீரை சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நடந்தது வேறு. சுத்திகரித்த நீரைத் தனது பயன்பாடு போக மலேசியாவிற்கே விற்றுப் பணம் பார்த்தது சிங்கப்பூர். இல்லாத ஒன்றை வாங்கி, பயன்படுத்தி, மீதம் உள்ளதை விற்றவருக்கே விற்பது திறமையன்றி வேறென்ன?
மலேசியாவிலிருந்து ஒரு நாளைக்கு 250 மில்லியன் கேலன் நீரை, ஆயிரம் கேல்ச்ன் மூன்று செண்ட் என்னும் விலையில் பெற்று, சுத்திகரித்து, தனது பயன்பாட்டுக்குப் போக, பெற்றுக்கொண்டதில் 12% சுத்திகரிக்கப்பட்ட நீரை மலேசியாவிற்கு ஆயிரம் கேலன் ஐம்பது செண்ட் என்னும் விலையில் விற்க வேண்டும் என்பது உடன்பாடு. இதற்கான கட்டமைப்புகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீரை இறைக்கும் இயந்திரக் கட்டமைப்புக்கள் என்று கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டு அதற்கான பெரும் பகுதி செலவையும் ஏற்றுக்கொண்டது.
1990ல் சிங்கப்பூர் லிங்கூ அணையைக் கட்டியது. இது மலேசியாவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஜோஹோர் ஆறு வற்றிவிடும். இதனால் கடல் நீர் உட்புகுந்துவிடும். அதைத் தடுக்க, ஆண்டுதோறும் பொழியும் மழை நீரை லிங்கூ அணை தேக்கி வைக்கிறது. கோடைக்காலத்தில் நீரை ஜோஹோர் ஆற்றில் விடுகிறது. இதனால் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து நீர் கிடைக்க வழி செய்யப்படுகிறது. முன்னோக்கிச் செயல்படுவது என்பது இதுவே.
மலேசியாவிடமிருந்து பெறும் நீர் மட்டுமே சிங்கப்பூரின் நீர் ஆதாரமன்று. 721 சதுர கிமீ அளவே உள்ள நாட்டில் 8000 கிமீ அளவிற்கு நீர் சேகரிப்பு வாய்க்கால்கள் அமைத்துள்ளார்கள். இவை மழை நீரை நீர்த்தேக்கங்களுக்குச் கொண்டு செல்கிறார்கள். வானிலிருந்து விழும் ஒவ்வொரு மூன்று துளி மழை நீரில் இரண்டை சிங்கப்பூர் சேமிக்கிறது என்கிறார் தற்போதைய பிரதமர் லீ ஸியன் லூங். உலக வரைபடத்தில் ஒரு சிறு சிவப்புப் புள்ளி என்று அழைக்கப்படும் சிங்கப்பூரில் 17 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. தெருவில் நடந்து செல்லும்போது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கு துவங்குகிறது’ என்னும் வாசகங்கள் கண்ணில் தென்படுகின்றன. மழை நீரைச் சேகரிக்கும் புதைகுழாய் உள்ளதை நினைவுபடுத்துவன.
நீர்த்தேக்கங்கள் மட்டும் தானா? இன்னும் வேறென்னவெல்லாம் உள்ளன?
2. மழை நீர் – 720 சதுர கிமீ அளவுள்ள நாடு தனது மொத்த அளவையும் மழை நீர்ப் பிடிப்பு பகுதியாகப் பாவிக்கிறது. வானில் இருந்து விழும் நீர் ஒவ்வொன்றும் நிலத்தடிக் குழாய்கள் முலம் 17 நீர்த்தேக்கங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சுத்திகரிக்கப்பட்டு நாட்டு மக்களின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீர்த்தேக்கங்களில் நீரின் சுத்தத்தை இடைவிடாமல் கண்காணித்த வண்ணமே உள்ளனர். நீரில் உள்ள உப்பின் அளவு, நீரில் இயற்கையாக உள்ள பாசிகள் மற்றும் நுண் உயிரினங்கள் என்று அனைத்தையும் ரோபோக்கள் மூலம் கண்காத்து வருகின்றனர். ரோபோக்கள் வாத்து வடிவில் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கங்களில் அங்குமிங்கும் அலந்துகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றின் காலுக்கடியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு நீரின் அளவு, வெள்ள அபாய அறிவிப்புகள் முதலியனவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். நாட்டில் தெருவோரங்களில் உள்ள நீர்ப் பிடிப்பு ஜல்லிக் கம்பிகளின் மீது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கிருந்தே துவங்குகிறது’ என்ற வாசகம் தென்படுகிறது. இவ்வகையாக, ஒரு தேசமே நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள நிலை உலகில் வேறேங்கும் இல்லை எனலாம்.
நீர்த்தேக்கம் பாழடைந்தும், செடிகள், விழுதுகள் நிறைந்தும், சமூகக் கேடான செயல்கள் நடைபெறும் இடமாகவும் இருப்பதைப் பல இடங்களில் கண்டிருந்த எனக்கு, பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் வீடு இருக்கிறது, பார்க்கிறீர்களா என்று கேட்ட அந்த வீட்டு முகவரிடம், ‘நீர்த்தேக்கம் இருந்தால் கொசு முதலியவை இருக்கலாம். எனவே வேறிடம் பார்க்கலாமே’ என்றிருந்தேன். முகவர் ஆச்சரியத்துடன் நோக்கினார். ‘நீர்த் தேக்கம் இருந்தால் கொசுக்கள் இருக்க வேண்டுமா? என்ன நியாயம் இது?’ என்றவர், மேலும் தொடரவில்லை. ‘பண்டான் தேக்கத்தின் அருகில் அருமையான அரசு குடியிருப்பு இருக்கிறது. காட்டுகிறேன். சுற்றுப்புறம் பிடிக்கவில்லையென்றால் வேறு வீடு பார்க்கலாமே’ என்றவரிடம் அரை மனதாக ஒப்புக்கொண்டேன்.
மகிழுந்து பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் சென்றது. ஒரு நொடியில் சுற்றுச் சூழலே மாறிவிட்டிருந்ததை உணர்ந்தேன். கீழிறங்கிப் பார்க்கையில் கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான். சுமார் நான்கு தொடர் ஓட்டக் குழுவினர் என்னைக் கடந்து சென்றனர். மிதிவண்டியில் வந்த விளையாட்டு வீரர்கள் போல் தோற்றம் அளித்த சிலர் பண்டான் ஏரியில் படகுப் போட்டிகள் நடத்தும் குழுவினராம். ஏரி எப்படியுள்ளது என்று பார்க்கலாமா என்று முகவரிடம் கேட்க, அவர் பாதை காண்பித்தார். ஏரியைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் அமைத்திருந்தனர். மதிகளில் புற்செடிகள், அவற்றின் ஊடே படிக்கட்டுகள். படிகளின் மீதேறினால் 6 கி.மீ. சுற்றளவுள்ள ஏரியின் பிரும்மாண்டம். மறையும் கதிரொளி, செக்கர் வானம், மாபெரும் ஏரியின் கொள்ளளவு முழுவதும் கொண்ட ததும்பும் நீர். பூமித்தாயின் கருணைக் கொடை பேருருக்கொண்டு என்னை வரவேற்றதாக உணர்ந்தேன். அத்துணைத் தண்ணீரை அவ்வளவு அருகில் நான் கண்டிருக்கவில்லை. மீன்கள் துள்ளிக் குதிக்கும் பேரெழில். சடாரெனப் பறந்து வந்து மீனைக் கொத்திச் செல்லும் நாரைகள், மகிழ்ச்சியுடன் மதகின் மீது ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள், ஆங்காங்கே பாதுகாப்புக்கான அறிவிப்புகள், ‘மீன் பிடிக்கத் தடை’ வாசகங்கள் என்று அத்துணைக் காட்சிகளையும் ஒருசேர உள்வாங்கிக்கொள்ளத் தடுமாறினேன் என்பது உண்மை.
சற்றே நடந்து சென்றால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் பூங்கா, அதன் அருகில் நீர்த்தேக்கத்திற்கு மழை நீரை எடுத்து வரும் கால்வாய்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், கால்வாயின் மீதுள்ள சிறு குப்பைகளை நீக்கும் காற்றடித்த ரப்பர் குழாய்கள், கால்வாயில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் (நீரின் அளவு, குப்பைகளை வலைகளைக் கொண்டு அகற்றுதல் முதலிய பணிகளைச் செய்வர்) என ஒரு மாய உலகம் என் கண் முன் விரிந்தது. இந்த இடத்தையா வேண்டாம் என்றோம் என்று சற்று வெட்கப்பட்டேன். பண்டான் அருகில் இருந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தேன்.
நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் வினோதமான பறவைகள் வருவதுண்டு. அவை மலேயா பகுதியின் பூர்வகுடிப் பறவைகளாம். தினமும் இவற்றுடன் உரையாடியிருக்கிறேன். இவை தவிரவும் நீர் நாய்கள், மீன்கள் என்று தினமும் இயற்கைக் காட்சிகளால் நிரம்பியதாகவே எங்கள் வாழ்க்கை அமைந்தது. வேடிக்கை என்னவென்றால் அவை அனைத்துமே செயற்கையாக அமைக்கப்பட்ட இயற்கை.
ஓரிருமுறை மலேய உடும்பைக் கண்டு முதலையோ என்று பயந்திருக்கிறேன். ‘No lah, we don’t have crocodiles in our reservoirs. They are mostly garden lizards. However, stay away from them for your own safety’ என்று தனது ஓட்டத்தினூடே சில மணித்துளிகள் நின்று அறிவுரை கூறிச் சென்ற சீன மூதாட்டி தற்போது நினைவிற்கு வருகிறார்.
ஆச்சரியப்படத்தக்க இன்னொரு செய்தியும் உள்ளது. 1960, 70களில் சிங்கப்பூரின் வணிக மையங்களான நியூட்டன் சர்க்கஸ், ஆர்சர்ட் சாலை முதலியன வெள்ள நீரில் மூழ்கின. காரணம் இவை கடல் மட்டத்தை விடத் தாழ்வான பகுதிகள். இயற்கையின் இந்த தடையையும் சிங்கப்பூர் தகர்த்தெறிந்தது. ‘Storm Water Storage’ என்னும் திட்டத்தால் அப்பகுதிகளில் உள்ள உபரி நீரைப் பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் மூலம் சற்று தூரத்திற்கு எழுத்துச் செல்லப்படுகின்றன. குழாய்கள் சற்று சரிந்த நிலையில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் உபரி நீரைப் பூமியின் புவியீர்ப்பு சக்தி மூலமே தேசத்தின் ஒரு பகுதில் இருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கே தனியாக அமைக்கப்பட்டிருந்த வெள்ள நீர் சேகரிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு. பின்னர் பூமிக்கு மேலே மோட்டார் பம்புகள் மூலம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து நீர்த்தேக்கங்களுக்கான கால்வாய்களுக்குள் செலுத்தப்படுகின்றன. வெள்ளத்தை வென்றதாகவும் ஆயிற்று, வெள்ள நீரைத் தேக்கியதாகவும் ஆயிற்று.
மரீனா கால்வாய் மரீனா நீர்த்தேக்கமாக மாறிய கதையைச் சொல்லாமல் சிங்கப்பூரின் நீர் மேலாண்மையைக் கடந்து செல்லவியலாது. இங்கு கடலுக்கே அணை போடப்பட்டுள்ளது. மரீனா கால்வாய் வழியே மேலதிக மழை நீர் கடலைச் சென்றடையும். அந்த நீரைத் தேக்கினால் என்னவென்று சிந்தித்தார் சிங்கப்பூரின் தந்தையும் முதல் பிரதமருமாகிய லீ குவான் யூ. மரீனா கால்வாக்குக் அணை கட்டுவது சாத்தியமா என்று ஆராயத் தனது பொறியாளர்களை ஊக்குவித்தார். விளைவு, மரீனா கால்வாய் வழியே கடலுக்குச் செல்லும் நீர் தடுக்கப்பட்டது. சுமார் 10,000 ஹெக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதி உருவானது. அதிக மழையின் போது சிங்கப்பூரின் சைனா டவுன், ஜலன் புசார் முதலிய பகுதிகளில் பொழியும் மழை நீர் இக்கால்வாய் வழியே கடலைச் சென்றடையும். தற்போது தடுக்கப்பட்ட நிலையில் நீர் வீணாகவில்லை. அதிக மழை பொழிந்து, அதே நேரம் கடல் வற்றமும் (low tide) ஏற்பட்டால், மரீனா அணைக்கட்டின் 9 மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கடலில் கலக்கிறது. உயர் அலை (high tide) நேர்ந்தால், ராட்சத நீர் இறைப்பான்கள் மூலம் உபரி நீர் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. அப்படியாயினும் மரீனா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு ஒரே அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் அதிக அளவில் படகு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு, மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் இவ்வணைக்கு அமெரிக்கச் சூழியல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாதிரியான பெருவியப்பளிக்கும் பொறியியல் சாதனைகளைப் பெரும் முயற்சி செய்தாவது செயலாக்க வேண்டிய தேவை என்னவென்ற கேள்வி எழலாம். அதற்கு நாம் 1965ம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடான போது, அப்போதைய மலேசியத் தலைவர் துன்கு அப்துல் ரஹ்மான் இங்கிலாந்து தூதரிடம் சொன்னது: ‘மலேசியா நினைப்பதைச் சிங்கப்பூர் செய்ய வேண்டும். இல்லையெனில் நீரை நிறுத்திவிடுவோம்’. இந்த அச்சுறுத்தல் தன் தலை மீது தொங்கும் கத்தியென்றுணர்ந்த லீ குவான் யூ, தனி நாடான உடனேயே நீர் ஆதாரங்களில் தன்னிறைவை அடையும் வேலைகளில் இறங்குவிட்டார். அதற்கு மரீனா தடுப்பணை ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் ‘Leaving no stone unturned’ என்றொரு வாசகம் உண்டு. அவ்வகையானவையே சிங்கப்பூரின் நீர் ஆதாரப் பெருக்கத்திற்கான முயற்சிகள்.
பொழியும் மழையைத் தேக்கி வைக்கலாம். ஆனால், மழை பொழிய வேண்டுமே. சிங்கப்பூரின் தந்தை லீ குவன் யூ தடாலடியானதொரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இனி யாரும் மரம் வெட்டக் கூடாது. மரம் வெட்டினால் சிறை மற்றும் கடும் அபராதங்கள், சாலை விபத்துக்களில், சாலையோர மரங்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால் கடும் அபராதங்கள்’ என்று அதிரடி நடவடிக்கைகளை எழுத்தார். பலன்: நாடு பூங்காவானது. சாலையில் வாகனங்களில் செல்கையில் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தவிர பொட்டல் வெளிகள் என்று கிஞ்சித்தும் இல்லாதபடி நாடே பச்சை மயனானது. இதனால் மழை தவிரவும் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று, நாட்டின் வெப்பம் இரண்டு டிகிரி அளவிற்குக் குறைந்தது; அதனால் சில தொற்று நோய்க் காய்ச்சல்கள் குறைந்தன. இரண்டு, வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட மாசு கணிசமாகக் குறைந்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தார் காலஞ்சென்ற பிரதமர் லீ. காற்று மாசடைவதைத் தடுக்கவும் நாட்டின் வெப்பத்தைக் குறைக்கவும் லீ சிங்கையைப் பசுமையாக்க முனைந்தார். அதன் பலனாக மழையும் பொய்க்காமல் வாரி வழங்குகிறது. அதனால் ஆண்டுதோறும் பெறும் 2400 மிமீ மழையை அனேகமாக முழுவதுமாகவே தேக்கி வைக்கிறது சிங்கப்பூர்.
சிங்கப்பூரைப் பசுமையாக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் பூமத்திய ரேகையின் மீதும் அதன் அருகிலும் அமைந்திருக்கும் நாடுகளுக்கு விஜயம் செய்தனர். அந்த நாடுகளில் என்னென்ன மரங்கள், தாவரங்கள் வளர்கின்றன என்று கண்டறிந்து, அவற்றைச் சிங்கப்பூரில் வளர்க்கத்துவங்கினர். ஏனெனில் சிங்கப்பூரும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தேசம் என்பதால்.
3. கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம்: இதன்மூலம் தேவையான அளவு கடல் நிரைக் குடி நீராக்கித் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மார்ச் 2019 வரை மூன்று கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சிங்கப்பூரின் நீர்த் தேவையில் 30% வரை அளிக்கின்றன. 2020ம் ஆண்டிற்குள் மேலும் இரண்டு நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அரசு இயற்றியுள்ள முன்வரைவுத் திட்டத்தின் படி 2060ம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையில் 30 விழுக்காடாவது கடலில் இருந்தே பெறப்பட வேண்டும். அரசும் தனியார் நிறுவனங்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
தற்போதுள்ள மூன்று சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றில் நவீனத் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்க மிக அதிகமான அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. இதனைக் குறைக்கும் விதமாக முடிந்த இடங்களில் எல்லாம் சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளை நிறுவியுள்ளது சிங்கப்பூர். ‘எலக்ட்ரோ-டிஅயொனைசேஷன்’ என்னும் முறையைக் கண்டறிந்து, கடல் நீரை மின்காந்த அலைகளின் ஊடே செலுத்தி, அதன் மூலம் அதில் உள்ள உப்புகளைக் களைய முற்பட்டு அதனைத் தனது துவாஸ் சுத்திகரிப்பு மையத்தில் பொதுப் பயனீட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது.
அத்துடன் கடலோரத்தில் உள்ள மாமரங்கள் கடல் நீரிலிருந்து நன்னீரை எப்படிப் பிரித்தெடுக்கின்றன என்று கண்டறிந்து ‘பயோமிமிக்’ முறையில் செயற்கையாக அதனைச் செய்ய இயலுமா என்றும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது அரசு. அத்துடன் இயூரிஹலின் மீன் வகைகள் ( பல வகையான நீர் நிலைகளிலும் வாழும் மீன்கள்) எவ்வாறு உப்பு நீரை நல்ல நீராக்குகின்றன என்று கண்டறீயும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இம்மாதிரியான இயற்கை முறைகளைக் கையாண்டால் குறைந்த மின்சாரச் செலவில் கடல் நீரைச் சுத்திகரிக்க இயலும் என்பதால் அம்முறைகளைக் கற்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.
ஒரு க்யூபிக் மீட்டர் அளவு சுத்திகரிப்பு நீரை உற்பத்தி செய்ய ஐம்பது காசுகள் முதல் ஒரு டாலர் வரை செலவாகிறது என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்தச் செலவையும் குறைக்கவே மேற்சொன்ன நடைமுறைகள்.
4. கழிவு நீர் சுத்திகரிப்பு: நாட்டு மக்கள் பயன்படுத்தி நீரை, உலகிலேயே மிகவும் அதிகமான தரக்கட்டுப்பாடுகள் கொண்ட சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு குடிநீராக மாற்றி அதனைப் பயன்படுத்துவது. மனிதர்கள் பருகும் தரத்தில் இருந்தாலும் தற்போது வரை இது மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இவ்வாறாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர், இரண்டாம் குழாயான நீர்த்தேக்கங்களுக்குச் சிறிய அளவில் அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வினியோகிக்கப்படுகிறது.
மக்கள் பயன்படுத்திய நீர் என்பதால் அந்த நீரும் மூன்றடுக்கு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மெம்ப்ரேன் எனப்படும் மெல்லிய நீர் சலிப்பான்கள் மூலம் பலமுறை சுத்தப்படுத்தப் படுகிறது. இதன் மூலம் திடக் கழிவுகள், நுண் கழிவுகள் முதலியன நீக்கப்படுகின்றன. பின்னர் அந்த நீரின் ஊடாக அல்ட்ரா வயலட கதிர்கள் செலுத்தப்படுகின்றன. இதனால் பாக்டீரியா, வைரஸ் முதலான நுண் கிருமிகள் நீக்கப்படுகின்றன. இம்மாதிரிப் பல முறைகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் 2060ம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.
இவ்வகையாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றி அதன் தொழில் துறைப் பயன்பாட்டாளர்கள் கூறுவதைத் தெரிந்துகொண்டாலே அந்த நீரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இயலும். இதற்காக அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என். சிங்கப்பூரில் உள்ள பயன்பாட்டாளர்களைப் பேட்டி கண்டது. இவ்வகையான நீரைப் பெரிய அளவில் பயன்படுத்தும் Systems on Silicon நிறுவனத் தலைவர் சி.வி.ஜெகதீஷ் சொல்வது, ‘சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை எங்கள் தொழிற்சாலையில் தொழில் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறோம். அரசு நிறுவனமான பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB – Public Utilities Board) அளிக்கும் இந்த நீரை நாங்கள் மூன்று முறைகள் மறு சுழற்சி செய்து பயன்படுத்திப் பின்னரே கழிவு நீர் வாய்க்காலில் விடுகிறோம்’ என்கிறார்.
இம்முறையில் பெறப்படும் நிரைப் பற்றி தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ கொள்கை ஆய்வுக் கழகத்தின் (Lee Kuan Yew School of Public Policy) பேராசிரியர் அசித் பிஸ்வாஸ், ‘சிங்கப்பூரின் இந்த மறுசுழற்சி முறைகளை உலக நாடுகள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கடைசிச் சொட்டு நீரையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும். இவ்வாறு மறுசுழற்சி செய்வதற்குப் பெரிய அளவிலான மின்சக்தி தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் குறைந்த மின்சக்தியில் நகழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதைப் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்’ என்கிறார்.
‘NeWater’ – ‘புதுநீர்’ என்றழைக்கப்படும் மறுசுழற்சி நீரை ஒரு க்யூபிக் மீட்டர் அளவு உற்பத்தி செய்ய முப்பது முதல் ஐம்பது சிங்கப்பூர் காசுகள் செலவாகிறது என்கிறது அரசு.
1974ல் புது நீருக்கான முயற்சிகள் துவங்கியிருந்தன. ஆனால், தொழில் நுட்பச் செலவுகள் மிக அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அது மீண்டும் துவக்கப்பட்டு 2002ம் ஆண்டு நனவானது. ‘புது நீர்’ குறித்துப் பேசுகையில் லீ குவான் யூ சொன்னது: ‘இதைச் சாதிக்கத் தேவையான தொழில்நுட்பம் எப்போதாவது ஏதாவது வகையில் உருவாகும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.’ காலஞ்சென்ற தீர்க்கதரிசியின் நம்பிக்கை தற்போது உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருக்கிறது.
2061ம் ஆண்டு மலேசியாவுடனான நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் வரை காத்திருக்காமல், நீர் ஆதாரங்களின் தன்னிறைவை எட்டிவிட முயல்கிறது சிங்கப்பூர். 2014ம் ஆண்டு நாட்டின் நீர்த்தேவையில் 30% மறுசுழற்சி நீரால் ஈடுகட்டப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.
நீரைக் கொணர்வது, சுத்திகரிப்பது என்பது வரை சரி. ஆனால், உபயோகம் எப்படி? அங்கே சிக்கனம் பேணப்படுகிறதா? என்றால் அங்கும் பெருவியப்பே காத்திருக்கிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும் நீர்மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் கடந்த மாதம் பயன்படுத்தியுள்ள நீரின் அளவு, தேசம் முழுமைக்குமான சராசரிப் பயன்பாட்டின் அளவு முதலியன மாதாந்திர அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு குடும்பம் தான் அதிகமாகப் பயன்படுத்திய மாதங்கள் யாவை என்று அறிந்து, அதற்கேற்றாற்போல் பயன்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தற்போது வீடுகளில் கழிவறை, சமையல் அறை முதலிய இடங்களில் உள்ள குழாய்களிலும் நீர்மானிகள் பொருத்தப்படுகின்றன. நீராடுவதற்கு, கழிப்பிடப் பயன்பாட்டிற்கு, சமையலுக்கு என்று தனித்தனியாக எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது. உலகில் வேறெந்த நாட்டிலும் சிங்கப்பூர் அளவிற்கு நீர் மேலாண்மை செய்யப்படுகிறதா என்பது கேள்வியே.
நீர் மேலாண்மையில் தான் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையில் திறன் வாய்ந்த நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது சிங்கப்பூர். அவற்றின் மூலம் மத்தியக் கிழக்கு நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள், பாரதத்தின் குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்கள் முதலியவற்றில் நீர் ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சிகளிலும், உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. உதா: சிங்கப்பூரின் ஹைஃபளக்ஸ் என்னும் நீர் மேலாண்மை நிறுவனம் ஜப்பானிய நிறுவனமான இத்தோச்சுவுடன் இணைந்து குஜராத்தின் பாருச் பகுதியில் நாளொன்றுக்கு 88 மில்லியன் கேலன் அளவிற்குக் கடல் நீரிலிருந்து நன்னீர் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றினாள் தனக்கு அன்னியச் செலாவணி கிடைக்க வழி செய்வதுடன், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்னும் கருதுகோளின் வழி தனக்குத் தெரிந்த, தன்னிடமுள்ள திறமையை உலகமும் பயன்படுத்திக் கொள்ளத் தன்னிடமுள்ள 180 நீர் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் 26 நீர் தொடர்பான ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழிசெய்து வருகிறது சிங்கப்பூர். நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கங்கள், நீர் மேலாண்மை குறித்த புத்தாய்வுகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நீர் தொடர்பான தொழில் முனைவோருக்கான பயிலரங்குகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்று உலகில் பல நாடுகளையும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கச் செய்துவருகிறது சிங்கப்பூர்.
இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத நாடு இன்று உலகின் மற்றெல்லா நாடுகளுக்கும் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. நீர் மேலாண்மை அவற்றில் ஒன்று. அவ்வளவே.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் இந்திய நேரம் காலை 6:30-8:00 ‘உயர் வள்ளுவம்’ வகுப்பெடுக்கிறார்கள். கம்பவாரிதியால் பயன்பெற்றுவரும் பல நூறு பேர்களில் அடியேனும் ஒருவன்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் திருப்புகழ் பதிகத்தைப் பண் சேர்த்து இசைக்கிறார்கள். தமிழே சுவை. அதில் திருப்புகழ் என்னும் பஞ்சாமிர்தம் சேர்த்து, அதில் பண் என்னும் தேனையும் கலந்து அளிக்கிறார்கள். வார இறுதிக் காலை வேளைகளில் என்ன ஒரு இனிமை!
திருக்குறள் பாயிரம், தொகுப்புரை, இரண்டு குறட்பாக்களுக்கான பரிமேலழகரின் உரைக்கான விளக்கம், அவற்றில் வரும் இலக்கணக் குறிப்புகள், ஒப்பு நோக்க வைக்கும் கம்பராமாயணச் செய்யுள் வரிகள், சில நேரம் திருமுறைகளில் இருந்தும், மூதுரை முதலிய பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் என்று பிரதி வாரமும் காலை நேரம் அருமையாகத் துவங்குகிறது.
தவிரவும், சுமார் 20 மணித்துளிகள் கேள்வி பதில் நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து கேள்விகள், அனுபவக் குறிப்புகள் என்று பலரும் பேசுவர். பலரது வாழ்க்கையை இந்தக் குறள் வகுப்பு மாற்றியமைத்துள்ளதைப் பயன்பெற்றவர்களின் வாயிலாகவே அறிந்துகொள்கிறேன்.
இன்று சிங்கப்பூரில் இருந்து பேசிய தமிழக உடல் உழைப்பாளர் ஒருவர் தான் பெண்களின் மீதான அதீத காமம் உட்பட தீய பழக்கங்கள் அனைத்திற்கும் அடிமையாக இருந்ததையும், அவற்றையெல்லாம் விடுத்துத் தற்போது பரிமேலழகருக்குக்கோவில் கட்டும் எண்ணத்துடன் முயன்றுவருவதாகவும், தன் கிராமத்திலும் தன் வீட்டிலும் அனைவரும் குறள் பயில ஏற்பாடு செய்துள்ளதாகவும் மனமுருகித் தெரிவித்தார்.
இவ்வாறும் பல முறை பலர் பேசியுள்ளனர் என்றாலும், இந்த அன்பரின் குரல் வள்ளுவரின் வாழ்வாங்கு வாழும் தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
அவசியமான இரு பயணங்கள் வந்தன. எனினும், வகுப்பு நடைபெறுவதால், பயண நேரத்தை ஒத்திப் போட்டேன் என்பதில் எனக்குப் பெருமை. கம்பவாரிதி நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம் கடமை.
இப்படியான குறள் நெறியைப் பயிலும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிட்டியுள்ளது. மற்றைய மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உலகமே வியக்கும் குறள் எழுதப்பட்ட மொழியே நம் தாய்மொழியாகவும் அமைதுள்ளது நமது நல்லூழ் தவிர வேறென்ன?
ஜூம் செயலி எண்: 846 5100 5685 சனி, ஞாயிறு காலை 6:30-8:00
‘உன் அறிவுரையெல்லாம் மோதிகிட்ட சொல்லு. எங்களுக்கு வேண்டாம். தமிழ் நாடு எல்லாத்துலயும் முன்னோடி. நீ வாய மூடு’
‘சினிமா பத்தி எழுதுடா. ஒரு நடிகையோட கதைன்னு எழுது. #MeTooவெச்சு சுவாரஸ்யமா எழுது. சீக்கிரம் சினிமா எழுத்தாளரா ஆகலாம். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதுடான்னா கேக்கமாட்டேங்கற..’
வாசகர்கள் பலவிதம். அவர்களது கருத்துகளும் அவ்வாறே.
1. ‘ரொம்ப காட்டமா எழுதறீங்க. இந்தியா வந்துட்டீங்க. கொஞ்சம் பார்த்து எழுதுங்க. சொல்றது சரிதான். ஆனா இங்க நிலைமை அப்படி.’ அக்கறையுடன் சொல்லும் பேராசிரியர் இவர்.
2.’உனக்கு திருக்குறள் மட்டும் தான் தெரியுமா? மத்ததெல்லாம் தெரியாதா? போய்ப் படி தம்பி’ இப்படி ஒரு புதியவர்.
3. ‘என்ன? திருக்குறள்ல இருக்கற ஹிந்து மதக் கருத்துக்களே உன் கண்ணுக்குத் தெரியாதா? என்னவோ சமணம், பௌத்தம்நு பேசறியே..’
4. ‘உன் அறிவுரையெல்லாம் மோதிகிட்ட சொல்லு. எங்களுக்கு வேண்டாம். தமிழ் நாடு எல்லாத்துலயும் முன்னோடி. நீ வாய மூடு’ – அடிக்கடி திட்டும் அன்பர்.
5. ‘நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ திருப்பாவை, பிரபந்தம்னு மட்டும் எழுது. ஸாடையர் வேண்டாம், அரசியல் வேண்டாம். உன் ஏரியா அது இல்ல.’ பண்பட்ட சிவப் பழம் ஒரு அன்பர்.
6. ‘உன்னோட தமிழ் எழுத்த விட, இங்கிலீஷ் தடாலடியா இருக்கு. தொடர்ந்து இங்கிலீஷ்லயே எழுது’ – பல வாசகர்கள்.
7. ‘You have a subtle sense of humour and that shows in your writings. Write humour. Nothing else’ சிங்கை எழுத்தாளர் ஒருவர்.
8. ‘I am watching what you write. Though I like what you say, I don’t agree with your tenor. Be cautious’ – சுமார் 75 வயதாகும் என் பள்ளி ஆசிரியர்..
9. ‘மீத்தேன் பத்தி ஏன் எழுதல? ஹைட்ரோ கார்பன் பத்தி ஏன் எழுதல? ஃபாஸிச மத்திய அரசுக்கு ஆதரவு ஏன்? புரட்சி வெடிச்சா ஒனக்கெல்லாம் இருக்குடீ’ ‘தோழர்’ ஒருவரிடமிருந்து உள்பெட்டிச் செய்தி.
10. ‘சினிமா பத்தி எழுதுடா. ஒரு நடிகையோட கதைன்னு எழுது. #MeTooவெச்சு சுவாரஸ்யமா எழுது. சீக்கிரம் சினிமா எழுத்தாளரா ஆகலாம். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதுடான்னா கேக்கமாட்டேங்கற..’ பள்ளித் தோழர் ஒருவர்
இத்தனை பேரையும் ஒருசேர திருப்திப்படுத்த முடியாது என்று அறிவேன். சில வகையறாக்களை நான் எழுதவியலாது. அதில் ஒன்று சினிமா, நடிகை, விளையாட்டு. சமீபத்திய சேர்க்கை – நிகழ்கால அதிர்வுகள். ஆனால் ஒன்று. என்ன எழுதினாலும் யாரையும் எப்போதும் காயப்படுத்தும் நோக்கம் இதுவரை இருந்ததில்லை. கருத்து ரீதியாகக் காயம் அடைந்தால் நான் பொறுப்பேற்கவியலது.
கொட்டிக்கிடக்கும் எதிர்மறைச் செய்திகள் / கருத்துகளைத் தாங்கிவரும் ஊடக வெளியில் பயனுள்ள சில செய்திகளையும், நூல்களைப் பற்றியும் சொல்லிவருகிறேன். சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ என்பதாக அவ்வப்போது தவறுகளைச் சுட்டவும் செய்கிறேன். அவ்வளவே.
வாசகர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முக்கியமானதே என்பதைத் திடமாக நம்புகிறேன். தொடர்ந்த ஆதரவிற்கும் ஆற்றுப்படுதலுக்கும் நன்றி.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு.. மொழி அரசியல் அசிங்கமானது. பன்மொழிப்புலமை நன்மை பயப்பது..படித்துக் கருத்துரையுங்கள்.
உள்துறை மந்திரி அமித் ஷா ‘ஹிந்தி திவஸ்’ அன்று அனைவரும் ஹிந்தி கற்க வேண்டும், தாய் மொழியுடன் ஹிந்தியையும் கற்க வேண்டும். ஏனெனில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்பதால் பாரதத்தின் முகமாக ஹிந்தி அமைகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மொழியாக ஹிந்தி திகழ வேண்டும் என்று சொல்லியுள்ளார். நான் இந்தச் செய்தியை வரவேற்கிறேன்.
அன்னிய மொழியான ஆங்கிலத்தை வரவேற்போம் ஆனால் ஹிந்தி வேண்டாம் என்பது ‘பஹுத்’ அறிவுவாதிகளுக்கானது. அன்னிய மொழியான ஆங்கிலத்துடன் நமது தேசத்தின் இணைப்பு மொழியான ஹிந்தியை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. நெல்லூர் தாண்டினால் வாய்ப்பூட்டு போடப்படும் தமிழர்கள் ஹிந்தி கற்பதன் மூலம் ஓரளவிற்கு வெளி மாநிலங்களில் சகஜமாக வாழ உதவும். மற்ற மாநிலங்களில் தொழில் செய்யவும் உதவி செய்யும்.
மூன்று மொழிக் கொள்கை உன்னதமானது. எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மூன்றும் பயிலவும், பின்னர் விருப்பப்பட்ட மொழிகளைப் பயிலவும் வழி செய்ய முடிந்தால் நல்லது. இவற்றுடன் ஜப்பானிய, சீன மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்றால் இன்னமும் நல்லதே. தமிழக மாணவர்கள் பயன்பெறுவர்.
பொதுவாக ஒரு மொழியில் பூரண தேர்ச்சி இருப்பின் பிற்தொரு மொழியை எளிதில் கற்க இயலும். ஆகவே பாரதியின் கூற்றுப்படி ‘யாமறிந்த மொழிகளிலே..’ என்று சொல்ல வேண்டுமானால் பன்மொழித்திறமை அவசியமே.
இந்த நிகழ்வில் தி.க.தலைவர் சிங்கப்பூரைத் துணைக்கு இழுத்துள்ளார். ‘சிங்கப்பூர் போன்று நான்கு மொழிகளிலும்..’ என்று வியாக்கியானம் செய்துள்ளார். சிங்கப்பூர் ஒருபோதும் தனது அயல் நாட்டு உறவுகளில் ஆங்கிலம் தவிர வேறெதையும் பயன்படுத்தியதில்லை. சீனம் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் எனது நண்பர். சீனாவுடன் தொடர்புகொள்ள சீனத்தைப் பயன்படுத்துகிறார்கள் போலும்.
சிங்கப்பூரில் நிரந்தரவாசம் செய்ய விண்ணப்பம் கூட ஆங்கிலத்திலேயே இருத்தல் வேண்டும். தமிழில் பிறப்புச்சான்றிதழ் இருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழில் உள்ள சான்றிதழை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியத் தூதரகத்திடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது சிங்கப்பூர். ‘சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் உள்ளதே?’ என்று கேள்வி எழுப்பி இருந்தேன். ‘இது தான் சட்டம். வேண்டுமானால் ஆங்கிலத்தில் கொண்டுவா’ என்று அனுப்பினர். ஏப்ரல் மாதம் முழுவதையும் தமிழ் மொழிக்காக ஒதுக்கியுள்ள நாடு, நிர்வாகம் தொடர்பாக இப்படிச் செய்கிறது. இதில் தவறில்லை. ஏனெனில் அது நிர்வாகத்தை எளிமையாக்குகிறது. பொதுமொழியாக ஆங்கிலம் பயன்படுகிறது. அவ்வளவுதான்.
ஆகவே தமிழக அரசியல் வியாதிகள் உளறாமல் இருத்தல் நலம்.
தமிழக மாணவர்களாகிய நினைவில் கொள்ள வேண்டியது:
நீங்கள் எத்தனை மொழிகளைக் கற்கிறீர்களோ அவ்வளவு பயன் பெறுவீர்கள். ஹிந்தி, மராத்தி, ஜப்பானிய மொழி முதலியனவற்றை ஓரளவு கற்றிருந்ததால் நான் பெற்ற பலன்கள் ஏராளம். நீங்களும் பயன் பெற அழைக்கிறேன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி தவிர, விருப்பப்பாடமாக சீனம் அல்லது ஜெர்மன் கற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
என் நண்பரின் உடன் படித்த ராமுவுக்குப் படிப்பு வரவில்லை. 8ம் வகுப்பில் 3 ஆண்டுகள் இருந்தான். பல ஆண்டுகள் சென்றபின் +2 முடித்தான். வேறு எதுவும் கிடைக்காததால் பி.ஏ. ஆங்கிலம் பயின்றான். சென்னையில் ஒரு தையல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து உபரி நேரத்தில் ஜெர்மன் பயின்றான். இரண்டாண்டுகளில் ஜெர்மனுடன் சேர்த்து ஃப்ரென்ச் பயின்றான். நண்பரின் உந்துதலால் ஜப்பானிய மொழி பயின்றான். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சொன்னது: ‘ராமுவைப் பிடிக்கவே முடியல. மெயில் அடிச்சா ஜப்பான்ல இருக்கேங்கறான், ரெண்டு நாள் கழிச்சு ஸ்பெயின், அடுத்த வாரம் ஜெர்மெனில.. இப்பிடி பறக்கறான். ஊர்ல பல ஏக்கர் வாங்கிப் போட்டுட்டான். டூர் கைடா இருக்கானாம்’ என்றார். இன்று அவன் ஒரு சுற்றுலா நிறுவனத்தை நிர்வகிக்கிறான் என்று கேள்விப்பட்டேன்.
ஆக, மொழி அரசியலில் கலக்காமல், முடிந்த அளவு அதிகமான மொழிகளில் தேர்ச்சி பெறுங்கள். உலகம் உங்களை அரவணைக்கக் காத்திருக்கிறது. அதற்கு முதலில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியைக் கற்கத் துவங்குங்கள்.
சிங்கப்பூர் இலக்கியத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடலாமா? என் பார்வை.
சுனீல் கிருஷ்ணன் சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயமோகனும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு மறுப்பு, விளக்கம் அளித்து நண்பரும் சிங்கப்பூர் எழுத்தாளருமான சித்துராஜ் பொன்ராஜ் இரண்டு பதிவுகள் எழுதியிருந்தார்.
சிங்கப்பூருக்கு வரும் எந்தத் தமிழக எழுத்தாளரும் சிங்கப்பூர் இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்து, எழுத்தாளர்களை விதந்தோத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. (இதைப்பற்றி 2016ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.) அவ்வாறு செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் இருந்து எழுதுபவர்களும் நினைக்கவில்லை என்பதை நான் அறிவேன்.
சுனீல் மற்றும் ஜெயமோகனின் விமர்சனத்திற்கு ஆட்பட்டுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்களை நான் அறிவேன். Both ends of the spectrum உண்டு. அருமையாக எழுதுபவர்களும் அவ்வாறு எழுதாதவர்களும் என்று இரு துருவங்கள் சிங்கையிலும் உண்டு. நிற்க.
சூர்யரத்னா எழுதுவது இலக்கியம் அன்று, ராணிமுத்துவில் வரும் பத்திக் கதை போன்றது என்ற ஜெயமோகனின் கூற்று அவரளவில் சரியே. ஆனால், சூர்யரத்னா ஜெயகாந்தன் கிடையாது. அவர் எழுதும் சூழல் ஜெயகாந்தன் எழுதிய சூழலை ஒட்டியது அன்று. அன்றாட வாழ்க்கைத் துன்பங்கள் அற்ற சமூகம் சிங்கப்பூர் சமூகம். பிரச்னைகள் அற்ற சமூகத்தில் ஜெயகாந்தன் தர இலக்கியம் எழுவது எங்ஙனம் சாத்தியம்? சூரியரத்னா அவர்களது நடைமுறை வாழ்க்கையை ஒட்டி எழுதுகிறார். அந்த நாட்டின் அளவில் அது அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. ஆகவே அது சிங்கப்பூர் இலக்கியமே.
ஷானவாஸ் உணவுக் கடைகள், உணவு தொடர்பான தொழில் செய்து வருபவர். தனது தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். அவர் தனது தொழில் வழியாகக் காணும் சிங்கப்பூரைத் தனது எழுத்தில் காட்டுகிறார். ஆகவே அதுவும் சிங்கப்பூர் இலக்கியமே.
ஜெயந்தி சங்கர் பாவனைகள் இல்லாமல் எழுதுபவர். மொழிபெயர்ப்புகள் செய்கிறார். சிங்கப்பூர் தொடர்பான சீன மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். சிங்கப்பூர்க் கதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். அவரது பார்வையில் தென்படும் சிங்கப்பூரை அவர் நமக்குக் காட்டுகிறார். சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதுவும் இலக்கியமே.
சித்துராஜ் பொன்ராஜின் வீச்சு அதிகம். அதிகம் வாசிப்பவராகவும், உலக இலக்கியங்களில் பயிற்சி உடையவராகவும், தமிழ், சம்ஸ்க்ருதம், கன்னடம், ஸ்பானிஷ் என்று பல மொழிகளில் தேர்ச்சி உடையவருமான சித்துராஜ் பொன்ராஜ் தனது பார்வையில் சிங்கையின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார். பக்தி இலக்கியங்களிலும் ஆர்வம் உடைய அவரது பார்வை விசாலமானது.
மாதங்கி யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிப்பவர். இவரும் ஜெயந்தி சங்கரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கையில் குடியேறியவர்கள். நடுத்தர மக்களின் வாழ்வைச் சித்தரிப்பதாக இவர்களது எழுத்தைப் பார்க்கிறேன்.
சித்ரா ரமேஷ், குமார், அழகு நிலா என்று பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சித்ரா பெண்ணியம் தொனிக்க எழுத வேண்டும் என்று பிரயத்னப்பட்டு எழுதுகிறார். குமார் கவிதைகள் எழுத முயன்று தனது பார்வையைப் பதிவு செய்கிறார். அழகுநிலாவின் எழுத்துகள் நேர்மையானவை. புனைவு, அபுனைவு என்று இரண்டையும் எழுதும் அவர், தனது கட்டுரைகளுக்குச் செறிவூட்டுவதற்காகப் பெரும் முயற்சி செய்பவர்.
கவிதைகள் எழுதுபவர்கள் பலர் உள்ளனர். நான் கவிதையின் பக்கம் போவதில்லை. பலதும் வேண்டும் என்றே பொய்யுரைப்பதாகத் தோன்றுவதால் அப்படி.
இத்தனை பேர் தான் எழுதுகிறார்களா என்கிற கேள்வி எழலாம். மொத்த நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம். இதில் இந்தியர்கள் 7%. சுமார் 3,85,000 இந்தியர்களில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் இருந்து வந்து தற்போது எழுதுபவர்கள் மேற்சொன்னவர்கள். இன்னும் சிலரும் எழுதுகின்றனர். அவர்களை நான் வாசித்ததில்லை.
எழுதும் பிறர் திருமுறைகள், கம்பன் சார்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் அறிஞர்கள் என்னும் வகையினர்.இலக்கியவாதிகள் அல்லர். பெரியவர் அ.கி.வரதராசன் இவ்வகையைச் சேர்ந்தவர்.
எழுதுபவர்கள் முதலில் வாசிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தீவிரமாக வாசித்தபின் எழுத்து வாய்க்கும். மேற்சொன்ன எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீவிர வாசிப்பு வாய்த்தவர்கள், அப்படி வாய்த்தவர்களில் இருந்து கிளர்ந்து எழுந்து எழுதுபவர்கள், எழுதியதைப் புத்தகமாக வெளியிடுபவர்கள் என்று எண்ணிக்கை Drill Down Effectல் குறைந்துகொண்டே வந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை 15 என்று நின்றால் வியப்பதற்கில்லை.
எழுதும் 15 பேரில் யாரும் ஜெயகாந்தன் போல், புதுமைப் பித்தன் போல் எழுதவில்லை, எனவே இலக்கியம் இல்லை என்று சொல்வது சரியா?
அப்படி எழுதும் 15-20 பேரும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு, ஒரு சட்டகத்தின் உள்ளே இருந்தபடியே எழுதுகிறார்கள். சிலதை எழுத இயலாது. உதா: ‘காவி கார்ப்பரேட் மோதி’ என்று கீழைக்காற்று பதிப்பகத்தின் நூல் உள்ளது. நெற்றியில் திலகத்துடன் மோதி, கையில் சூலம், அதில் காவிக் கொடி, அதன் மேல் மண்டையோடு. இப்படிப்பட்ட அட்டைப்படத்துடன் தமிழகத்தில் வெளியிட முடியும். சிங்கையில் அதைப் போன்ற நூல்கள் வெளிவர வாய்ப்பில்லை. பணமதிப்பிழப்பை முன்வைத்துத் தமிழில் நாவல் எழுத முடியும். அங்கு அதைப் போன்று செய்ய வாய்ப்பு குறைவே. சுத்திகரிக்கப்பட்ட கருத்துகளையே எழுத முடியும். ஆக, கற்பனை விரிவது எங்ஙனம்? கற்பனை + நிகழ் அரசியல் விமர்சனங்கள் அற்ற பண்படுத்தப்பட்ட பார்வையுடனேயே எழுத முடியும் எனும் போது இலக்கிய ஆழம் கிடைப்பதெப்படி?
கடல் அளவு கருத்துக்களஞ்சியம் இல்லை. சிறிய, சுத்திகரிக்கப்பட்ட குளத்தின் அளவே உள்ளது. குளமும் ஆழமில்லை, நீர் வரத்து கட்டுப்பாடிற்குள். சுத்தப்படுத்தப்பட்ட நீர். குளத்தில் உள்ள மீன்கள் சுவை குறைவாக இருக்கலாம். ஆனால் அவை மீன்கள் அன்று என்பது சரியா?
சிங்கை அரசு எப்போது விழிப்புடன் இருக்கின்றது. சமூக நல்லிணக்கம், மொழி, இன வேறுபாடுகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுதல், தீவிரவாதம் தலையெடுக்காமல் கண்காணிப்பு, மதங்களுக்கிடையே சமரசப் போக்கையே முன்னிறுத்துதல் என்று எந்தப் பிளவும் நிகழா வண்ணம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறது. சுருக்கமாக ஒரு No-Nonsense அரசு. ஏனெனில் சமூக நல்லிணக்கம் தானாக நிகழந்ததன்று என்பதை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே உள்ள அரசு அந்நாட்டரசு. தமிழகத்தில் உள்ளதைப் போல எந்தக் குப்பையையும் எழுதலாம், எந்த இனத்தாரையும், மொழியாரையும் கேவலப்படுத்தலாம் என்பதற்கான சூழல் அங்கு இல்லை. இனங்களுக்கு இடையேயான பிளவுகளைப் பயன்படுத்தி ஒப்பாரிக் காவியம் படைக்க வழியில்லை. எனவே ‘உயர்ந்த’ இலக்கியம் உருவாக வழியில்லை ( உயர்ந்த என்றால் என்ன என்பது தனியாக ஒரு கட்டுரைக்கான பொருள்).
உதரணமாக: தமிழகத்தில் தீப்பொறி பறக்கப் பேசும் பேச்சாளர்கள் சிங்கை சென்றால் வழவழவென்று ‘ஒற்றுமை’, ‘நல்லிணக்கம்’ என்றே ஜல்லியடிக்கவே வேண்டும். அது தான் சிங்கை. மீண்டும் தமிழகம் வந்து ‘சுடுகாடாக மாறும், ஆயுதம் ஏந்துவோம்’ என்று முழக்கம் இடுவர். அது தான் தமிழகம்.
உண்மையை ஒப்புக்கொள்வோம். சிங்கப்பூரில் தமிழ் இல்லாமல் தினமும் வாழ்ந்துவிட முடியும். அன்றாட வாழ்க்கைக்குத் தமிழின் தேவை இல்லை. பெருவாரியான சிங்கைத் தமிழர்கள் சிங்லிஷ் கொண்டே வாழ்ந்துவிட முடியும். பள்ளிகளிலும் தமிழை -Functional Tamil – என்கிற அளவிலேயே கற்பிக்கிறார்கள். Higher Tamil உண்டு. அதை விருப்பப்பட்டு எடுத்துப் பயில வேண்டும். அத்துடன் தமிழுடனான தொடர்பு அறுந்துவிடுகிறது. இதைத் தவிர்க்கவும், தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கவும் சிங்கைத் தமிழர்களும் அரசும் முனைந்து இலக்கியத்திற்கான பரிசுகள், கோப்பைகள், ஊக்கத் தொகைகள் என்று வழங்கித் தமிழைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதுவே சிங்கையில் தமிழின் நிலை. இதில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலியோர் உருவாக வாய்ப்பில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. இதுவே நிதர்ஸனம்.
இன்னும் 50 ஆண்டுகளில் சிங்கப்பூரில் தமிழில் பேசுவார்களா என்கிற கேள்வி அம்மக்களின் நினைவுகளில் என்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளில் அவர்கள் இருக்கிறார்களே தவிர, இலக்கியத்தை ஜெயகாந்தன் அளவிற்கு மேம்படுத்த அவர்கள் முயற்சிப்பதில்லை. அதற்கான சூழலும், தேவையும் அங்கு இல்லை.
இதெப்படி உனக்குத் தெரியும் என்று வினவலாம். சிங்கையில் 10 ஆண்டுகள் வசித்துள்ளேன். அங்குள்ள குறிப்பிடத்தக்க பெரியோருடன் பழகியுள்ளேன். அளந்தே பேசும் அப்பெரியோர் மனதில் ‘தமிழை வாழும் மொழியாக்குவதெப்படி? சிங்கையின் 100வது விடுதலை ஆண்டில் தமிழில் பேசுவோர் இருப்பரா? தமிழ் சிங்கையில் தொடர்ந்து திகழ வேறென்ன செய்ய வேண்டும்?’ என்ற எண்ணமே ஓடுகின்றது.
இந்த நிலையில் சிங்கப்பூரின் இலக்கியத் தரத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு. ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது சரியன்று.
பி.கு.: ‘நீ என்ன இலக்கியவாதியா? உன்னை யார் கேட்டார்கள்?’ என்போர் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லவும். ஜெயமோஹன் 2016ல் சிங்கை வந்திருந்த போது செய்திருந்த சில இலக்கிய விமர்சனங்கள் பற்றி அப்போது நான் எழுதியது இங்கே.
சிங்கப்பூரில் நான் வசித்த 9.5 ஆண்டுகளில் ஊரில் இருந்த நாட்களில் அனேகமாக எல்லா நாட்களும் நூலகம் சென்று வந்திருந்தேன். இந்த பாக்யம் எத்தனை பேருக்குக் கிட்டியிருக்கும் என்று தெரியவில்லை.
கிளிமெண்டி ரயில் நிலையத்தில் இறங்கி என் வீடு இருந்த வெஸ்ட் கோஸ்ட் டிரைவ் வரை 10 மணித்துளிகள் நடக்க வேண்டும். ரயில் நிலையத்திலேயே நூலகம் உள்ளது. பணி முடிந்து சுமார் 8:30 மணிக்குக் கிளிமெண்டியில் இறங்கினால் நூலகம் மூடும் 9:00 மணி வரை ஏதாவது மேய்ந்துகொண்டிருப்பது வழக்கம்.
‘புதியதாக வந்தவை’, ‘திருப்பப் பட்டவை’ என்று ஏதாவது புதிய நூல் கண்ணில் படும். அப்படி நான் வாசித்த நூல்கள் சுமார் 270 இருக்கும்.
நானாகத் தேடுப் போய்ப் பிடித்துப் படித்த நூல்கள் என்று சுமார் 120 இருக்கும்.
எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டு வந்து படித்த நூல்கள் பல உண்டு. அடிக்கடி சென்ற நூலகம் விக்டோரியா தெரு தேசிய நூலகம். அது ஒரு கருவூலம். அவ்வளவுதான்.
வெளிநாட்டுக்காரன் என்பதால் ஒவ்வொரு முறையும் 8 நூல்களே கடன் வாங்க இயலும். நிரந்தரவாசிகளுக்கு 16. சிங்கப்பூரர்கள் 32. பள்ளி விடுமுறை நாட்களில் இவை அப்படியே இரட்டிப்பாகும்.
பள்ளி விடுமுறையின் இறுதி நாளில் அவசியம் குடும்பமாகச் சென்று 16 நூல்களைஅள்ளிக் கொண்டு வந்ததுண்டு. மூன்று வாரங்கள் கழித்தே தர வேண்டும் என்பதால்.
ஒவ்வொரு வார இறுதியிலும் குடும்பத்துடன் நூலகம் செல்லும் வழக்கமும் இருந்தது. நூலகத்தில் சண்டை. எனக்கு ஒரு நூலே கிடைக்கும். பிள்ளைகளுக்கு 6. மனைவிக்கு 1.பெரியவன் பாரதத்தில் கல்லூரிக்குச் சென்ற பிறகு சண்டை கொஞ்சம் குறைந்தது.
இதைத் தவிர மின் நூல்களையும் Overdrive மூலம் கடன் வாங்க இயலும். பேச்சுப் புத்தகமும் கேட்கலாம்.
நூல் ஏதாவது தேடிக் கிடைக்கவில்லை என்றால் கிளிமெண்டி நூலக ஊழியர்களிடன் சொல்லிச் செல்வேன். அவர்கள்தொலைபேசியில் அழைத்து எடுத்துத் தருவார்கள். இதை அவர்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் சிங்கப்பூரர்கள் அப்படித்தான். கருமமே கண்ணாயினார்.
சிங்கப்பூரை விட்டு வந்ததில் எனக்கிருக்கும் ஒரே பெரிய வருத்தம் நூலக வசதி மட்டுமே. Library@Clementi Mall
சில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
மாணவர்களே, இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் சிங்கப்பூர்ல் Changi City Point, Singapore என்னும் இடம். கட்டாந்தரையாக இருந்த நிலம். இன்று இயற்கையும் செயற்கையும் கொஞ்சும் இடமாக உள்ளது.
செயற்கையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட வியக்கவைக்கும் ஒரு ரயில் நிலையம், வானளாவ நிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழியர்கள் அமைதியாக நடந்து சென்று வேலை செய்ய ஏதுவான நிலை, எப்போதும் கொட்டும் தண்ணீர், எப்போதுமே போகாத மின்சாரம். இவை ஏதோ தற்செயலாக நிகழ்ந்தவை அன்று. ஆட்சியாளர்களாலும் கடுமையாக உழைக்கும் அறிவுடை மாந்தர்களாலும் உருவாக்கப்பட்டவை.
ஏன் நிலத்தை அபகரிக்கிறார்களே, நிலத்தில் குழாய் பதிக்கிறார்களே, கட்டடம் எழுப்புகிறார்களே என்று யாரும் ஓலமிடுவதில்லை. அரசு நல்லது செய்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.
தடையில்லா மின்சாரம் வேண்டும், குழாய் திறந்தால் நீர் வேண்டும், இருக்க இடம் வேண்டும், நள்ளிரவிலும் பெண்கள் தனியாக வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்றால் அதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது, மக்களின் ஒத்துழைப்பும் தேவை.
சிங்கப்பூரை விட பல ஆயிரம் மடங்குகள் பெரிய அளவுள்ள அருகாமை நாடுகள் ‘சிங்கப்பூர் செய்வதை நம்மால் ஏன் செய்ய முடிவதில்லை? சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது? அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது? தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது?’ என்று யோசிக்கின்றன. காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் சிங்கப்பூர் செய்துகாட்டியுள்ளது. மூன்றாம் தர நாடாக இருந்து, 30 ஆண்டுகளில் முதல்தர நாடாக முன்னேறியுள்ளது.
உலகில் Per Capita Income மிக அதிக அளவில் உள்ள ஒரு நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.
காரணம்: போராட்டங்கள் இல்லை, வெற்று வாய்ச்சவடால்கள் இல்லை, வன்முறை இல்லை. இவற்றில் எல்லாம் ஈடுபட மகக்ளுக்கு நேரமோ தேவையோ இல்லை.
அடுத்த முறை உங்களைப் போராட்டத்துக்கு யாரேனும் அழைத்தால் மேற்சொன்ன கேள்விகளைக் கேளுங்கள்.
சிங்கப்பூர் விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவும் விடுதலை பெற்றது. அப்போதே உலக அளவில் சர்க்கரை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது கியூபா. இலங்கை 1948ல் விடுதலை பெற்றது. தற்போது இந்த மூன்று நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
சில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
காரணம்: மனித முயற்சியால், ஊழல் அற்ற அரசியலால், மக்களின் கடின உழைப்பால் இரண்டு தலைமுறைகளுக்குள் செழிப்பாக வளர்ந்த தேசம் சிங்கப்பூர் மட்டுமே.
சிந்தித்துப் பாருங்கள். வெற்றுப் போராட்டங்கள் வீணாக முடியும். தேச நலன் பேண, உங்களை வாழ்வில் முன்னேற்றிக் கொள்ள, அரசியல்வாதிகள் அறிவிக்கும் போராட்டங்களைத் தவிர்த்துக் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
நாளைய உலகம் உங்கள் கையில். தொடர்ந்து பேசுவோம். வாழ்த்துக்கள்.