சிங்கப்பூர் பெருமாள் கோவிலில் நாமத்வார் அமைப்பின் ஏற்பாட்டில் பூஜ்யஶ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் சீடர் எம்.கே.ராமானுஜம் ‘Ancient Wisdom and Timeless Happiness’ என்னும் தலைப்பில் இன்றிரவு அருமையான சிறப்புரையாற்றினார்.
ஸம்ஸ்க்ருதம், தமிழ், ஆங்கில் மூன்றிலும் புலமை பெற்றவராகக் காணப்படும் ராமானுஜம், சங்கராத்வைத நூல்கள், பாகவதம், மஹாபாரதம், இராமாயணம் என்று வெளுத்து வாங்குகிறார். கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தவர், ஊழ்வினையைத் தெய்வானுக்ரஹத்தால் மாற்ற முடியும் என்று நிரூபணங்களுடன் தெரிவித்தார்.
பெரிய பதவியில், பெரும் பொருள் ஈட்டும் நிலையில் இருந்த இவர், தற்போது தன்முனைப்புப் பேச்சு, தார்மீகப் பேருரைகள் என்று நிகழ்த்திவருகிறார்.
‘தெய்வதான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்’ என்னும் குறளில் தெய்வம் என்பது கடவுள் என்பதாக இருக்காது என்னும் பொருள் படும்படிப் பேசினார். ஏனெனில், சம்ஸ்க்ருதத்தில் தெய்வம் என்பது Destiny, ஊழ், கர்மா என்னும் பொருளையும் தரும் என்பதாகச் சொன்னது சிறப்பு. வினைப்பயனை இறையருளால் மாற்ற முடியும், அதற்கு ‘முயற்சி’ என்பதை ‘சிரத்தை’ என்னும் பொருளில் பார்த்தால் புரியும் என்பதாகப் பேசினார். ‘தெய்வ’ என்னும் சொல் மஹாபாரதத்தில் ஊழ், கர்மா, Destiny என்று வருமிடங்களைச் சொன்னது சிறப்பு.
‘ஊழையும் உப்பக்கம் காண்பார்’ குறளையும் இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
காணொளி உள்ளது. நாமத்வார் அமைப்பினர் எடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டால் நான் இணைப்பு தருகிறேன்.
இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?
‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – சிங்கப்பூர் கிளை’ என்று போட்டிருக்கலாம் என்று தமிழக எழுத்தாளரொருவர் ஒட்டுமொத்த சிங்கப்பூர் இலக்கியக் கழகங்களின் தரத்தையும் சேதப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளதை நண்பர் ஒருவரின் பதிவில் கண்டேன். தமிழக எழுத்தாளரின் பதிவில் என்னால் எழுத இயலவில்லை. எனக்கு அனுமதியில்லை. ஆகவே தனிப்பதிவு.
முதலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற ஒன்று சிங்கப்பூரில் இல்லை என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரத்தை சிங்கப்பூரில் உள்ள எவ்வளவு பேர் வாசித்தார்கள் என்று தெரியவில்லை. இரட்டைப் படையில் இருக்கலாம். ( நான் வாசித்தேன், ஆய்வுக் கட்டுரை எழுதினேன் என்பது எனது தனிப்பட்ட அனுபவம்). சில பகுதிகளைத் தவிர, விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இதையே தெரிவித்திருந்தேன்.
மாலன் ஒருமுறை சிங்கப்பூர் வந்திருந்தபோது சிங்கப்பூர் இலக்கியம் வளரவும், சிங்கப்பூரில் இருந்து இன்னமும் சிறப்பான சிறுகதைகள் வரவும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார். காரணம் இலக்கியம் என்பது வாழ்வாதாரத்தை வேண்டி மக்கள் அல்லல் படும் போது எழுவது. சிங்கப்பூரில் அம்மாதிரியாக, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த அல்லலுற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே அவர்கள் அத்தேவைக்கான போராட்டத்தை இலக்கியமாக வடிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லியிருந்தார். 2010ம் ஆண்டு என்று நினைவு. தேசிய நூலகத்தில் நடந்த கூட்டமொன்றில் இதைத் தெரிவித்திருந்தார். நான் அப்போதே இதைப் பதிவும் செய்திருந்தேன்.
பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராமல் அதனால் ஏற்படும் அல்லல்கள், எம்.ஆர்.டி. வண்டி தினமும் காலதாமதமாக வருவதால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகள், அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் பல மைல்கள் நடந்தே சென்று குடிநீர் கொணர்வது, பெண்கள் இரவில் தனியாக வரும் போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், சாதி ரீதியிலான கொடுமைகள், அரசாங்க அதிகாரிகளின் மெத்தனம் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கடை நிலையில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவன் போதிய நிதி வசதி இல்லாததால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் போவது என்பது போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இருந்தால் அதை வைத்து இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று ஒப்பாரிக் காவியம் செய்யலாம். விருதுகள் வாங்கலாம்.
ஆனால், மேற்சொன்ன எதுவும் நடக்கவில்லையென்றால் என்னதான் இலக்கியம் படைப்பது? தினமும் எம்.ஆர்.டி. ரயில் குறித்த நேரத்தில் இயங்குகிறது, ஒரு வேளை ஒரு மணி நேரம் பழுதானால் நிறுவனத்தின் தலைவருக்கு வேலை போய்விடுகிறது அல்லது நிறுவனம் பெருத்த தண்டனைக்கு உள்ளாகிறது, மின் தட்டுப்பாடு இல்லை, ஒரு மின் நிறுவனத்தின் மீது அதிருப்தி என்றால் அடுத்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம், வானில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படுகிறது, அமைச்சர்களையும், எம்.பி.க்களையும் எளிதில் சந்தித்துப் பேசலாம், அரசு நிறுவனங்களில் ஊழல் இல்லை, அரசு அலுவலகங்களில் குறித்த நேரத்தில் வேலைகள் நடைபெறும் என்று இருந்தால் எப்படித்தான் இலக்கியம் செய்வது?
இருக்க வீடில்லை என்று குடிசைகளில் வாழ வேண்டிய பிரஜைகள் இல்லை. அனைவருக்கும் வீடுகள் கொடுத்துவிட்டார்கள். பிரஜைகளுக்கு அரசுப் பள்ளிக் கல்வி அனேகமாக இலவசமாக உள்ளது. போராட்டம் கரகாட்டம் என்று ஜல்லியடிக்க நேரமில்லை, வழியுமில்லை, தேவையுமில்லை. அப்புறம் இலக்கியம் என்று உலகத் தரத்தில் ஒப்பாரிக் காவியம் படைக்க மக்களால் எப்படித்தான் இயலும்?
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தைத் ‘தமிழ் மொழி மாதம்’ என்று வகுத்து, அம்மாதம் முழுவதும் தமிழ் மொழி வளர்வதற்கான நிகழ்வுகள் அனைத்தையும் செய்து வரும் தேசம் சிங்கப்பூர். தீவு முழுவதும் தமிழ் விழாக்கள், வாசிப்புப் பட்டறைகள், பயிலரங்குகள் என்று ஊரே விழாக் கோலம். விழா என்றதும் போஸ்டரெல்லாம் கிடையாது, வெறும் அறிவிப்புகள், பள்ளி கல்லூரிகளில் பரப்புரைகள், உணவகங்களில் அறிவிப்புப் பதாகைகள், ஒளிவழியில் ஓரிரு அறிவிப்புகள், இலக்கிய வட்டங்களில் செய்திகள். அவ்வளவே.
‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ என்று இருந்தால் அப்புறம் இலக்கியம் வழியாக எதற்கான தீர்வைத் தேடுவது?
‘தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் நாடு செய்ய வேண்டியதனைத்தையும் சிங்கப்பூர் செய்துவருகிறது. எங்களால் இதற்கு மேல் செய்ய முடியாது. முடிந்தவரை தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் தனது பெயரை வெளியிட விரும்பாத சிங்கப்பூர்ப் பேராசிரியர் ஒருவர்.
யூனிகோட் முறையில் இணையத்தில் / கணினியில் தமிழில் எழுதுபவர்கள் / வாசிப்பவர்கள் சிங்கப்பூருக்கு நெஞ்சார நன்றி கூற வேண்டும். யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துரு உருவாகப் பெரிய காரணம் சிங்கப்பூர். infitt என்று தேடிப்பாருங்கள். இணையவழித் தமிழுக்குச் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் இணைந்து செய்துள்ள உதவிகள் தெரியவரும். இத்தனைக்கும் தமிழர் எண்ணிக்கை குறைவாக உள்ள தேசம்.
இதெல்லாம் போகட்டும். பேட்டைக்குப் பேட்டை நூலகம் வைத்துள்ளார்கள். எந்த நூலகத்திலும் இரவு 9 மணி வரை நூல் எடுக்கலாம். நாள் முழுவதும் திரும்ப ஒப்படைக்கலாம். அதிகாரத்துவ நான்கு மொழிகளிலும் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. விடுமுறை என்றால் மட்டும் என்றில்லாமல், வேலை நாட்களிலும் மாலை நேரங்களில் நூலகத்தில் பிள்ளைகளைக் காணலாம். தனியாகச் செயலி கொண்டு நூல்களைப் படிக்கவும் உதவுகிறது நூலக வாரியம். அதன் சேவைகளை முழுவதும் பயன்படுத்தியவன் இதை எழுதிக்கொண்டிருக்கிறான்.
மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், தமிழில் நல்ல நூல்கள் வெளியாக வேண்டும், தமிழ் வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் வாசகர்கள் / எழுத்தாளர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழில் பேசவே தேவை இல்லாத சூழலில், பேசாமலே இருந்தால் மொழியின் பயன்பாடு குறைந்து விடுமே என்கிற அக்கறையில் ‘தாய் மொழிச் சேவைகள்’ என்று தனியாக ஒரு பிரிவையும் நூலக வாரியம் நடத்துகிறது.
இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?
உண்மையில், தமிழகத்தில் இருந்து வெளியாகும் போராட்ட இலக்கியம், அழுகாச்சி இலக்கியம், எதிர்மறை இலக்கியம், இடது சாரி இலக்கியம் முதலியவைகளால் நவீன சிங்கப்பூரர்களை உள்ளிழுக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வில் இந்த அழுகாச்சிகளை எந்த விதத்திலும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதுவும் மில்லினியல்ஸ் எனப்படும் இணைய இளையர்கள் மத்தியில் தமிழ் நாட்டின் அதிர்ச்சி + அழுகை இலக்கியம் எடுபடவில்லை. இது நான் கண்டது.
எனவே தமிழக எழுத்தாளரின் கவலை நியாயமானதே. சிங்கப்பூரின் இலக்கியத் தரம் அதலபாதாளத்திலேயே உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் அழுமூஞ்சி இலக்கியங்கள் அங்கு எடுபடவில்லை. சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்தில் தமிழகத்தின் தாக்கம் இருப்பதால் அவ்வெழுத்தில் எனக்கு ஒவ்வாமை உண்டு. ஆனாலும் அவ்வகையான தாக்கங்களில் இருந்து வெளிப்பட்டு, மீண்டு, சிங்கப்பூருக்கேயான எழுத்தைப் பல எழுத்தாள நண்பர்கள் செய்துகொண்டெ இருக்கிறார்கள். சித்துராஜ் பொன்ராஜ், மாதங்கி, ஜெயந்தி சங்கர், அழகுநிலா, ஷாநவாஸ் போன்ற, சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதும் தற்கால எழுத்தாளர்களால் சிங்கைத் தமிழ் இலக்கியம் சிறப்புறும். இவர்களைத்தவிர இன்னும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இன்னமும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தற்கால வாசகனைப் பூரணமாகச் சென்றடைய முடியவில்லை என்பதையும் நான் கண்டுள்ளேன்.
ஆக, சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் என்றொரு இயக்கம் உள்ளது. அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கான வாசகர்கள் உள்ளூரில் உள்ளனர். சிங்கப்பூரைக் கருவாகக் கொண்ட எழுத்துக்களை அவ்வாசகர்கள் வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர். அவர்களுக்கு ஒப்பாரி இலக்கியம் தேவையில்லை. சிங்கப்பூரின் இலக்கியம் அங்கிருந்தே உருவாகட்டும். மற்ற நாட்டு மாரடிக்கும் அழுகைகள் அங்கு வேண்டாம். அதற்கான தேவையும் அங்கு இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். தேடிப்பிடித்து வாசிக்கும் தேர்ந்த வாசகர்களும் உள்ளனர். நான் அறிந்தவரையில் இவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டு வாசிப்பும் நடத்துவதுண்டு. ஜெயமோகனின் மஹாபாரதத்தைக் கூட்டு வாசிப்பு முறையில் அனுபவித்தவர்களை நான் அறிவேன்.
சில மாதங்களுக்கு முன் வாரந்தோறும் நூலகம் செல்லும் (பள்ளிக்குச் செல்லும்) என் மகனிடம் அவன் தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லையே என்று வருத்தப்பட்டேன். ‘Show me a Harry Potter equivalent, Rick Riordan equivalent in Tamil’ என்றான்.
இதைத் தமிழக எழுத்தாளரின் நையாண்டிக்கான பதிலாக எடுத்துக் கொண்டேன்.
அடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில் நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.
கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.
பொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.
இவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.
சங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.
எனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.
நான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.
பல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.
பாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.
என்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.
வாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.
சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.
‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.
பின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.
*திருமதி.சுபா செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜைக்கு சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றார். 15 பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.
ஒரு தம்பதி பூஜைக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்று எண்ணிவிட்டுக் கோவிலின் நிர்வாகியான மூத்த பெண்மணியிடம் ‘எல்லாரையும் கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க, நான் இதோ வரேன்’ என்று சொல்லிச் சென்றார்.பூஜை முடிந்து பெண்கள் அமர்ந்திருந்தனர்.
‘ரொம்ப நேரம் ஆயிட்டா, ஆமாவா?’ என்றபடியே வெளியில் சென்ற தம்பதிகள் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் வந்தனர். கையில் பெரிய பை.
‘பூஜைக்கு வந்தவங்கள்ளாம் வரிசையா வாங்க,’ என்று அழைத்து, வந்திருந்த ஒவ்வொரு சுமங்கலிக்கும் ஒரு புடவை, வெற்றிலை, பாக்கு, பூ என்று வைத்துக் கொடுத்துள்ளார். 15 பெண்களுக்கும் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி.
கொடுத்து முடித்தவுடன் அந்தப் பெண், மூத்தபெண் நிர்வாகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார். ‘நல்லா இருப்பீங்க,’ என்றவாறே அவரது நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து ஆசீவத்தித்த அந்த மூத்த நிர்வாகி,’ ஏதாவது நேர்த்திக் கடனா? உங்க பேர் என்ன?’ என்று கேட்க, காலில் விழுந்த பெண், ‘அம்மன் கிட்ட ஒரு வேண்டுதல். ஒண்ணொண்ணா நிறைவேறிக்கிட்டே வருது. அதான் நேர்த்திய செலுத்தலாம்னு வந்தோம்,’ என்றார். கண்கள் பனிக்க.
‘அம்மன் கடாட்சம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு. உங்க பேரென்னம்மா?’ இது மூத்த நிர்வாகி.
‘பாத்திமா அஹமது’
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
மதம் வேறுபடுத்துகிறது. பண்பாடு இணைக்கிறது. பண்பாடு மதங்களைக் கடந்தது. சிங்கப்பூர் அதை நமக்கு உணர்த்துகிறது.
*பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் எங்கள் பகுதியில் வசிக்கும் இந்தியர்.
அஸ்தி கரைத்தல் என்பது நமது நீத்தார் கடன்களில் தலையாய ஒன்று. உலக வாழ்வை நீத்தவரது ஸ்தூல சரீர எச்சங்கள் இயற்கையின் கூர்களோடு ஒன்றி இரண்டறக் கலப்பது என்பதிலும், அஸ்தி ( மீதம் இருப்பது ) என்பது ( ஜடப் பொருள் ), இயற்கையில் உள்ள ஜடப்பொருட்களுடன் கலப்பது என்பதிலும் இருந்து எழுந்து வரும் கருத்தாக்கம்.
பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியும் அப்படியானதே. முன்னர் நேரு, காந்தி, இந்திரா காந்தி முதலானவர்களின் அஸ்தி தேசத்தின் பல இடங்களில் தேசத்தின் நீர் / மண் இவற்றுடன் ஒன்றாக்கப்பட்டது.
காந்திஜியின் அஸ்தி சிங்கப்பூர் வரை எடுத்து வரப்பட்டு கரைக்கப்பட்டது. சீனப் பெரும்பான்மையான சிங்கப்பூரில் ஒரு மஹாத்மாவின் அஸ்தி கரைக்கப்பட்டதை எந்த மதத்தினரும் / நாகரீகத்தினரும் எதிர்க்கவில்லை. தங்கள் நாட்டில் ஒரு மஹானின் அஸ்தி கரைந்ததை இன்றும் நினைவுகூர்கிறார்கள். அதற்காக புல்லர்டன் ஹோட்டல் அருகில் உள்ள க்ளிப்போர்டு பியர் பகுதியில் நினைவகமும் ஏற்படுத்தியுள்ளனர்.
கிழக்கத்திய சம்பிரதாயங்கள் இந்திய சீன ஜப்பானிய தேசங்களை உள்ளடக்கியவை. பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் ஆத்மா குறித்த நம்பிக்கைகள், பல உருக்களில் உள்ள இறை ஒருமை, தத்துவ வளர்ச்சி மற்றும் கட்டமைத்தல் முதலியவற்றில் ஒன்றுபட்டே உள்ளன.
வாஜ்பாயின் அஸ்திக்கு நாகாலாந்தில் உள்ள நம்பிக்கை சார்ந்த எதிர்ப்புகள் நமது பண்பாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத ஒரு (அ)நாகரிகத்தின் வெளிப்பாடே என்பதை உணர்ந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
சிங்கப்பூர் தக்ஷிண பாரத ப்ராம்மண சபா(SDBBS) வழக்கம் போல் இந்த ஆண்டும் யஜுர் உபாகர்மாவுக்கென்று மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நான் மூன்றாவது கோஷ்டியில் (10 மணி) பங்கு பெற்றேன். 900 பேர் வந்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்கு முன்னர் 2 கோஷ்டிகள் முடிந்துவிட்டிருந்தன. காமோகார்ஷீ ஜபம் முதல், காண்டரிஷி தர்ப்பணம், இறுதியில் வேத ஆரம்பம் வரை நிறுத்தி நிதானமாக சபா வாத்யார் மைக் மூலம் நடத்தி வைத்தார். சங்கல்பம் செய்து வைக்கும் போது பூர்ணா புஷ்களாம்பா ஸமேத தர்மஸாஸ்தா துவங்கி, இனி ஒரு ஸ்வாமி இல்லை என்னும் படியாக அனைவரையும் வேண்டிக்கொண்டு செய்துவைத்தார். பரமேஸ்வரப் ப்ரீர்த்தியர்த்தம் சொன்னவுடன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் சொல்லத் தவறவில்லை. தலை ஆவணி அவிட்ட வடுக்கள் ஹோமம் செய்தனர். சில வாண்டுகள் ஹோமம் செய்யும் அண்ணன் அருகில் கள்ளப்பூணுல் போட்டுக்கொண்டு வால்த்தனம் செய்துகொண்டிருந்தன. சின்ன வேஷ்டி கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்து பஞ்ச பாத்திரங்களில் விஷமம் பண்ணிக்கொண்டிருந்த சின்னக் கண்ணனைத் துரத்திக் கொண்டு அவன் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். சபாவில் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், ருத்ரம், சமகம் வகுப்புகள் துவங்குகிறார்கள். பாரதி வேதம் வளர்த்த தமிழ் நாடு என்று பாடினான். இப்போது இருந்தால் சிங்கப்பூரைப் பாடியிருப்பான். சிங்கப்பூரில் யஜுர் உபாகர்மா இன்னும் எனக்கு எத்தனை முறை வாய்த்திருக்கிறது என்று தெரியவில்லை. சிரத்தையுடன் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.
மாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம்.
பிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.
சூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் கடல் முழுதுமே தனக்குச் சொந்தம் என்று கூறி, அக்கடற் பகுதியில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து, புதிய தீவுகளை உருவாக்கி, அதில் தனது விமானப் படையின் விமானங்களையும் தரை இறக்கியுள்ளது. இதனால் வியட்னாம், பிலிப்பன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அமைதியிழந்துள்ளன.
அத்துடன் சீனா மற்ற நாடுகளான இலங்கை, சூடான், திஜோப்தி முதலான நாடுகளில் துறைமுகங்கள் கட்டப் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகள் திருப்பித் தர இயலாத கடன்கள் அவை. கட்டத் தவறினால் துறைமுகங்கள் சீனாவிடுடையவையாகும் அபாயம். இதனால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மலாக்கா நீர்வழி முதலானவை சீனாவின் ஆதிக்கத்தில் வீழும் அபாயம், இவ்வழிகளில் நடக்கும் வணிகம் முழுவதும் சீனாவின் கைக்குச் செல்லும் விபரீத நிதர்ஸனம். இவற்றால் இவ்வழியில் உள்ள நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.
வட கொரியா என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவையும் ஜப்பானையும் பலமுறைகள் பணியவத்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நிலையில் வட கொரிய – அமெரிக்க சந்திப்பு நிகழுமா என்னும் கேள்வி உள்ளது. அமெரிக்கா சீனாவையே இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைக்குக் காரணம் என்று சொல்லியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் படைகள் தெற்காசியாவில் இருந்து வெளியேறும் என்றும் டி.பி.பி. என்னும் அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்ததை அடுத்தும் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
சீனா தனது சோஷலிசப் பொருளாதாரத்தை விடுத்துச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும், அதனால் அதன் தலைக்கனம் அதிகரித்து தெற்காசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்று 1970களிலேயே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. அதனால் ஆசியான்(ASEAN) என்னும் தெற்காசிய னாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டார். இந்தியாவைச் சீனாவுக்கான Counter Weight என்று சரியாகக் கணித்த தீர்க்கதரிசி லீ, இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரில் குளிர் காய்ந்துகொண்டிருந்த இந்திரா காந்தி லீயின் பேச்சிற்கு மசியவில்லை. லீ இது குறித்துத் தன் நூலில் குறிப்பிடுகிறார்.
Media compares Modi with Lee Kuan Yew
இந்த நேரத்தில் லீயின் மதி நுட்பம், ஹென்றி கிஸ்ஸிஞ்சரின் செயல் திறன் இரண்டுமாகச் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனைச் சீனாவிற்கு அழைத்துச் செல்கிறது. அதுவரை பேசாத இரு துருவங்கள் பேசிக்கொள்கின்றன. பின்னர் சீனாவில் டெங் ஜியாபெங் பதவியேற்கிறார். சிங்கப்பூரின் லீ குவான் யூ அவருக்கு மதியுரை அளித்துச் சீனாவைக் கம்யூனிசப் போக்கிலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றுகிறார்.
பின்னர் 1991ல் சோவியத் யூனியன் உடைகிறது, உலகம் ஒரு துருவப் பார்வைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் நரசிம்மராவ் Look East Policyயை முன்வைக்கிறார். இந்தியா நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் பயணிக்கிறது. சிங்கப்பூரின் பிரதமர் கோ சொக் தொங் அவர்களின் சீரிய முயற்சியால் இந்தியா ஆசியான் நோக்கி நகர்கிறது.
பிரதமர் வாய்பாய் கோ சோக் தோங் சந்திப்பு, பின்னர் 2005ல் CECA – Comprehensive Economic Cooperation Agreement – என்னும் ஒப்பந்தம் என்று இந்திய-சிங்கப்புர் வர்த்தகப் புரிந்துணர்வுகள் நடைபெறுகின்றன. தடையற்ற வர்த்தகம் என்னும் நிலை நோக்கி இரு நாடுகளும் நகர்கின்றன. 2018ல் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் வருகையில் CECAவின் இரண்டாவது தளம் கையெழுத்தானது. 30 பொருட்களுக்கான சுங்கத் தீர்வை குறைப்பு, வர்த்தகம் அதிகரிப்பு என்று பலமுனைகளில் ஒத்துழைப்பு சீரடையப் பெரு முயற்சி என்று நடந்தேறியது.
ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி ஆசியான் கூட்டமைப்பின் தேவை, கடல்வழிப்பதைகளில் அனைத்து நாடுகளுக்கும் உரிமை, நாடுகளிடையேயான சச்சரவுகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுதல், நரசிம்ம ராவ் சொன்ன ‘கிழக்குப் பார்வை’, ஆசியானிக்கான இந்தியாவின் உறுதுணை என்று தெற்காசிய நாடுகளுக்குத் தெம்பளிக்கும் வகையில் பேசினார். சிங்கப்பூர் மருவதற்கு முன் இந்தோநேசியா சென்று அங்கு சபாங் துறைமுகம் அமைக்க உதவி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோதி சொல்லாமல் சொன்னது என்ன?
தென்சீனப் பகுதி அப்பகுதியின் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள பகுதி.
அனைவருக்கும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு.
யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை ( சீனாவிற்குச் செய்தி)
ஆசியான் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதுணை செய்யும்
அமெரிக்கா இப்பகுதியில் இருந்து விலகினாலும், நாங்கள் இருக்கிறோம்
அமெரிக்க சந்தை(TPP) இல்லாவிட்டாலும் எங்கள் நாட்டுச் சந்தை உள்ளது
பாரதம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் இவை இணைந்த நாற்கரக் கூட்டு (Quadrilateral Alliance) என்ற ஒரு பார்வை உள்ளது. இது சீனாவிற்கெதிரான பாதுகாப்பு அரண். சீனாவின் OBOR – One Belt One Road – திட்டத்திற்கு எதிரான / இணையான ஆனால் சீனாவைச் சாராத ஒரு வணிக, ராணுவக் கூட்டு இது. இதற்கும் சிங்கப்பூரின் பங்களிப்பு தேவையே. ஏனெனில் ஆப்பிரிக்காவில் துவங்கி மலாக்கா கடல் வழி வரையில் உள்ள பாதையில் சிங்கப்பூர் சிறப்பான பொருளியலுடன் இயங்கும் துறைமுக நகரம். ஆகவே இதன் உதவியும் தேவை என்பது வெளிப்படை.
இது தவிர, சிங்கப்பூருடனான ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாயின. சிங்கப்பூர் – இந்திய வர்த்தகம் கடந்த ஓராண்டில் 14% அதிகரித்து 25பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. இது 2005ல் 16.6 பில்லியன் என்று இருந்து, 2017ல் 25 பில்லியன் என்று உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு 36.3 பில்லியன் டாலர் ( உலக நாடுகளில் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது).
கவனிக்க வேண்டியது : சிங்கப்பூர் முதலீடு 2014ல் 22.7 பில்லியன் டாலர். 2017ல் 36 பில்லியன் டாலர். இது மிக கூர்ந்து நோக்கத்தக்கது.
இது தவிரவும், சிங்கப்பூர் ஆந்திர மாநிலத்தில் அமராவதி நகரை வடிவமைத்து வருகிறது. FinTech என்னும் வங்கித் தொழில் நுட்பத்துறையில் சிங்கப்பூர் இந்தியாவுடன் நல்ல பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் Smart Nations திட்டத்திற்கு சிங்கப்புர் மிகச் சிறந்த அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும், அனுபவ அறிவையும் வழங்கிவருவதும் அறிந்ததே. இது தவிரவும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சிங்கப்பூரின் Hyflux நிறுவனம் குடிநீர் தொடர்பான பணிகளில் உதவி வருவதும், இந்தியத் துறைமுகங்கள் மேம்பாட்டிற்குச் சிங்கப்பூரின Keppel Corporation தனது மதியுரைகளை வழங்கி வருவதும் நாம் அறிந்ததே.
நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் (NTU) இந்திய முதலீட்டாளர் 4 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இதனால் NTUவிற்கும், IIT-Madras, IISc-Bangaloreற்கும் தொடர்பு ஏற்பட்டு, மாணவர்கள் மூன்று பல்கலைகளையும் இணைத்த முனைவர் பட்டப் படிப்புக்களைப் பெறவியலும். இதுவும் மோதியின் பயணத்தின் போது நடந்த ஒன்று.
PM Modi and PM Lee Hsien Loong
சிங்கப்பூரில் NETS என்னும் பணப் பரிமாற்றச் சேவை உள்ளது. கடைகளில் இதன் மூலம் அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தவியலும். இந்தியாவில் அவ்வாறே RuPay என்னும் வழிமுறை உள்ளது. இனி NETS அட்டைகளின் வழி இந்தியாவிலும், RuPay அட்டைகளின் வழி சிங்கப்பூரிலும் பணப் பரிமாற்றச் சேவை, பொருட்களை வாங்குதல் முதலிய சேவைகளைப் பெறலாம். இதனால் Visa, MasterCard முதலான அமெரிக்க நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் சேவையாகும். இதுவும் பிரதமர் மோதியின் வருகையின் போது நிகழ்ந்த ஒன்று. (பிரதமர் சிங்கப்புர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமைக் கழகத்தில் ஒரு ஓவியத்தைத் தனது RuPay அட்டை மூலம் வாங்கினார்)
இம்முறை கையெழுத்தான சில ஒப்பந்தங்கள்:
இந்தியத் தாதிமைப்(Nursing) படிப்புக்கான அங்கீகாரம்
இணையப் பாதுகாப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
போதைப் பொருள் தடுப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாதுகாப்புத் துறை – புரிந்துணர்வு ஒப்பந்தம்
Enterprise Singapore – National Skills Development Corp கூட்டியக்க ஒப்பந்தம்
சிங்கப்புரில் தாதியர்களுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது. ஆகவே இந்தியாவில் தாதிமைப் பயிற்சி / அனுபவம் உடையவர்கள் பலருக்குச் சிங்கப்புரில் வேலைக்கான ஏற்பாடு தாதியர்களுக்குப் பெருத்த உவகையளிக்கும்.
இந்திய Start-up நிறுவனங்கள் தற்போது 4760 உள்ளன. இது உலகில் மூன்றாவது எண்ணிக்கை. இந்த நுறுவனங்களுக்கான துவக்க நிதி 2016ல் 4.06 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் 2017ல் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் Start-up கூட்டியக்கத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. தனது Start-up நிறுவனங்கள் இந்திய Start-upகளுக்கான பங்குச் சந்தையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 10,000 நிறுவனங்கள் என்றூ உயர வாய்ப்புள்ளது என்று சிங்கப்புரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
நான்யாங் தொழில் நுட்பப் பல்கலையில் நேர்காணலில் பிரதமர் சிறப்பான மதியுரை வழங்கினார். இந்திய-சிங்கப்பூரிய மாணவர்களிடையே ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனால் பல புதிய புத்தாக்கச் சிந்தனைகள் உதயம் ஆகும் என்றும் சொன்னார். இம்முறை சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் இரு நாட்டு மாணவர்களின் அறிவுத்திறத்திற்கும் விருந்தாய் அமைந்தது இந்த மதியுரை.
இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை அளிக்கவிருக்கிறது. வியத்னாம் பகுதியில் உள்ள ONGC நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முதல் மலாக்கா கடல் வழி வரையிலான கடல்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தியக் கடற்படைக்கு இச்சேவை மிகவும் பயனளிக்கும்.
ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி கடல் வழி / வான் வழிப் பாதுகாப்பு குறித்துப் பேசியதையும், அமெரிக்க அரசு பசிபிக் கமாண்ட் (PACOM) என்னும் தனது பிரிவை இந்தோ-பசிபிக் கமாண்ட்(US Indo-Pacific Command) என்று மாற்றி அமைத்துள்ளதையும் ஒப்பு நோக்கினால் உலகம் செல்லும் திசையும் அதில் இந்தியாவின் முக்கிய நிலையும் புரியும்.
இவை குறித்து மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.
சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது. புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும் பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:
எழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.
தொடந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று சிங்கப்பூர் எம்.ஆர்.டி. ரயிலில் நிற்கக் கூட இடம் இல்லை. மழை வேறு. ஊட்ரம் பார்க் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க, நீல விழிகள் கொண்ட ஐரோப்பியப் பெண் கைக்குழந்தையுடன் ஏறினாள். கூட்டத்தில் ‘பிராம்’ வண்டியை நுழைக்க பெரும் முயற்சி தேவைப்பட்டது. வயதானவர்கள் / கர்ப்பிணிப்பெண்கள் அமரும் 2 இருக்கைப் பகுதியில் அமர்ந்தாள்.
‘சமஸ்கிருதத்திற்கான போராட்டம்’ நூலில் ஆழ்ந்திருந்த என் பாதத்தில் எதோ அழுத்தத்தை உணர்ந்தேன். அருகில் நின்றிருந்த சீன முதியவர் – 80 வயது இருக்கலாம் – தன் ஊன்றுகோலை என் காலில் வைத்து அழுத்திக்கொண்டிருந்தார். மெதுவாக இறக்கி வைத்தேன். அவருக்குத் தான் அப்படிச் செய்தது கூட தெரியவில்லை. அந்த முதியவரின் ஒரு கால் நிலை இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தது.
அப்போதுதான் கவனித்தேன். அந்தப்பெண் ஒரு இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த பகுதியில் யாரும் நிற்கக்கூட இல்லை எனபதையும் உணர்ந்தேன். ‘ஒரு இடத்தில் அமருங்கள்’ என்று அந்தப் பெரியவரிடம் சொன்னேன். அவர் சீனத்தில் ஏதோ சொன்னார். ‘அடுத்த ஸ்டேஷனில் இறங்கப்போகிறேன்’ என்பதாக இருக்கலாம் என்று ‘சமஸ்கிருதத்திற்கான போராட்ட’த்தில் ஆழ்ந்தேன்.
10 நிமிடங்கள் கழித்துப் பார்த்தேன். பெரியவர் இன்னும் நின்று கொண்டிருந்தார்.அந்தப் பெண் 2 இருக்கைகளில் அமர்ந்திருந்தாள்.
ஒரு இடத்தைக் காலில் செய்யுமாறு சொல்ல, பொறுக்க முடியாமல் ஒரு அடி முன்னேறினேன். பெரியவர் என் கையைப் பிடித்து ஏதோ சொன்னார். சீனம் புரியாததால் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. ‘யாரும் ஒன்றும் சொல்லாமல் இப்படி நிற்கிறார்களே’ என்று கோபம் மேலிட, அப்பெண்ணைப் பார்த்தேன்.அவள் பெரிய துணியால் மூடியபடி குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள்.
பெரியவர் இப்போது என் கை பிடித்து மீண்டும் எதோ சொன்னார். கடைசியில் ‘ஸே ஸே’ ( நன்றி) என்றது புரிந்தது. ‘நான் போக வேண்டியவன். நிற்கலாம். குழந்தை வாழ வேண்டியது. அது சௌகர்யமாக உண்ணட்டும்’ என்பதாக ஏதாவது சீன / கிழக்காசிய அறமாக இருக்கலாம் என்று நினைத்துகொண்டேன்.
நான் இறங்கும் இடம் வந்தது. பெண் இன்னமும் இரு இருக்கைகளில் அமர்ந்திருந்தாள். குழந்தை அவள் மடியில் சௌகர்யமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. பெரியவர் ‘ஸே ஸே’ என்றார்.
நடைமேடையில் இறங்கிய பின் பெரியவரைப் பார்த்தேன். பற்கள் இல்லாமல் பளீரென்று சிரித்தார். அவரது ஒரு கால் இன்னமும் ஆடிக்கொண்டிருந்தது.