ஜெயமோகன் மற்றவர்களையும் கௌரவிக்க வேண்டும்

சோஷியல்பிராப்ளம், பொலிடிக்கல் பிராப்ளம், மாரல் பிராப்ளம் எல்லாம் எகனாமிக் பிராப்ளம் அல்ல என்ற தெளிவை அடையவைப்பார்கள். மோடி என்ற ஒரே மனிதர் நான்கு பிராப்ளமாகவும் ஒரேசமயம் ஆகமுடியும் என்று உணர லைசாண்டர் சார் உயிருடன் இல்லை.

”கல்வி’ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரையில் மேற்சொன்ன வரிகள்.பிரதமர் மோதி, போகிற போக்கில் எழுத்தாளர் பயன்படுத்தும் ஒரு சொல்லாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அன்றாட வாழ்வியலில் ஒன்றாக மோதியின் பெயர் உருப்பெற்று வந்துள்ளது நல்லதே.

ஆனால், ‘மோடி’க்குப் பதிலாகக் கழகத்தின் கடைக்கோடி வட்டச்செயலாளர் பெயர் இருந்திருந்தால், கருத்துரிமை இந்நேரம் பிணை கோரி நின்று (பாலிமர் நினைவிருக்கலாம்), நிற்கும் நேரத்தில் ‘ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு’ பிரசங்கம் நிகழ்த்தியிருக்கும். இது நிதர்ஸனம்.

‘மோடி’யின் பெயரைப் பயன்படுத்தக் கூடாதா என்பதன்று. வேறு யார் பெயரையும் பயன்படுத்த முடியாது என்பதே நிதர்ஸனம் என்பதே இங்கு நிலை.

நேருவைப் பற்றி ஷங்கர் கார்ட்டூன் வரைந்தார், அவர் இருந்த காலத்திலேயே. சுமார் 4000 கார்ட்டூன்கள். அதைப் பற்றி நேரு சொன்னது: ‘Shankar has that rare gift… he points out, with an artist’s skill, the weaknesses and foibles of those who display themselves on the public stage. It is good to have the veil of our conceit torn occasionally’.

ஆனால், தமிழகத்தில் யாரைப் பற்றியும் எழுத, வரைய முடியாது.

உளறிக்கொட்டும் அமைச்சரைக் கேள்வி கேட்டால் ப்ளாக் செய்கிறார். அடிப்படைப் பொருளாதார அறிவில் சிக்கல். நிதித்துறை கோவில் துறை பற்றிப் பிதற்றல் மற்றும் தனிநபர் அவதூறு. கோவில் துறை வட மாநிலத்தவரைப் பழிக்கிறது. கல்வித்துறை, அரசு உதவி பெறாத, நடுவண் அரசப் பாடத்திட்டத் தனியார் பள்ளியை அரசு கைகொள்ளும் என்கிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழகத்திற்குக் கிடையாது என்கிறது. உச்ச் நீதி மன்ற ஆணை தெரிந்துதான் சொல்கிறார்களா? குடிமைப் பணி செயலர்கள் என்று படித்தவர்கள் யாருமே இல்லையா?

பொறுப்பு கண்ணியத்தை அளிக்க வேண்டும். அதுவும் பொதுவெளியில் வார்த்தைகள் மீது அதிகக் கவனம் தேவை. இவர்களுக்கு யார் புரிய வைப்பது? இவற்றை அரசியல் தலைவர்கள் உணர, அவர்களையும் ஜெயமோகன் தனது கட்டுரைகளில் சேர்த்துக் கொண்டு கௌரவிக்க வேண்டும். வெண்முரசியற்றியவர் செய்யாமல் யார் செய்வது?

ராஹுல் காந்தியின் சொற்களைக் கொண்டு மற்றுமொரு நகைச்சுவை நாவல் கூட எழுதலாம். கேஜ்ரிவாலின் 180 டிகிரி பல்டிகளைச் சுட்டி ‘தலைகீழ் பார்வைகள்’ என்னும் தலைப்பில்கட்டுரைகள் புனையலாம். மம்தா பானர்ஜியின் ஆட்டங்களைக் கொண்டு ‘சாக்த பூமியில் ஊழியாட்டங்கள்’ என்றோ, பெண் அமைச்சருக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த முன்னேறிய கேரளத்தைப் பற்றி ‘ஷைலஜ மஹாத்மியம்’ வரையலாம். இன்னும் எவ்வளவோ.

எந்தத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தியும் பகடி செய்ய உரிமை உள்ளது. தரக்குறைவாக, மரியாதைக் குறைவாக இருக்கலாகாது. அவ்வளவே.

நேருவின் சொற்களின் படி ‘அகம்பாவம் என்னும் முகத்திரை அவ்வப்போது கிழிக்கப்படுவது நல்லது’.

மோடிக்குப் பொருந்துவது எந்தத் தாடிக்கும் பொருந்துமன்றோ?

ஜெயமோகனின் கட்டுரை இங்கே

யானை, சறுக்கல் இன்னபிற..

எழுத்தாளர் ஜெயமோகன் குடியுரிமைச் சட்டம் பற்றிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னூட்டங்கள், பதில் உரைகள் ஏற்கப்படா என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் பதிவு.
 
பா.ஜ.க. தனது லாபத்திற்காகவே இதனைக் கொண்டுவந்துள்ளது என்கிறார். ஆனால், இதனைச் செயல் படுத்துவோம் என்று சொல்லாமல் செய்யவில்லை. பல ஆண்டுகளாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் இருந்ததைச் செயல்படுத்தியுள்ளது. சொல்லாமலா செய்தார்கள்? வாக்குறுதி அளித்ததைச் செயல்படுத்தியுள்ளார்கள். வாக்குறுதியின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றவுடன் மக்கள் ஆணையைச் செயல்படுத்துகிறார்கள். செயல்படுத்தவில்லை என்றால் ஏன் என்று கேட்பதும், செயல்படுத்தினால் குற்றம் என்பதும் சரியா?
 
இதற்கென்று தனியாகச் சட்டம் தேவையா? சாதாரண சென்ஸஸ் எடுக்கும் போதே செய்யலாமே என்று கேட்டுள்ளார் ஜெயமோகன். சட்டம் இல்லாமல் செய்தால் ‘எப்படிச் செய்ய முடியும்?’ என்று கேட்பதும், சட்டம் போட்டுச் செய்தால் சட்டம் தேவையா என்பதும் முரணன்றோ? சொல்லாமலே செய்திருக்கலாம் என்கிறார் ஜெயமோகன். அப்படிச் செய்வது நேர்மையா?
 
பா.ஜ.க. தனது தேர்தல் லாபத்திற்காகவே இவ்வாறு செய்துள்ளது என்கிறார் ஜெயமோகன். பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது பா.ஜ.க.விற்குச் சாதகமாக இருப்பதால் அது கூடாது, ஆனால், அதுவே மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக இருந்தால் சரியா? உ.தா: இட ஒதுக்கீடு நீட்டிப்பு. ஒரு தலைமுறை இடஒதுக்கீடு பெற்றபின் அந்தக் குடும்பம் ஒதுக்கீட்டில் இருந்து விலக வேண்டும் என்று மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், அவ்வாறு செயல்படுத்தாமல் நீட்டித்துக்கொண்டே இருப்பது சரியன்று என்று தெரிந்தே அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன. இதனை நீட்டிப்பவர்கள் தங்கள் லாபத்திற்காகவே செய்கிறார்கள் என்று கொள்ளலாமா? ஒரு சட்டம் பா.ஜ.க.விற்குச் சாதகமாக இருப்பது குற்றமா? வாக்குறுதியை நிறைவேற்றுவது தவறா? வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தில் இருந்து ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் 5 லட்சம் நிரப்புவேன் என்று பிரதமர் மோதி சொன்னதாக இன்றும் கேள்வி கேட்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
இந்தச் சட்டத்தால் இந்துக்கள் ஒற்றுமை பெற்று, பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்னும் தொனியில் உள்ளது அவரது கட்டுரை. இந்துக்கள் முட்டாள்கள் என்று சொல்வது போல் உள்ளது இது. ஒரு வேளை சாதிகளின் அடிப்படையில் ஒன்றுதிரட்டலாம் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தனது ‘சமூக நீதி கலந்த பஹுத் அறிவை’க் காட்டியது நினைவுக்கு வருகிறது.
 
பொருளியல் வீழ்ச்சியை மறைக்கவே பா.ஜ.க. குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது என்கிறார். கடந்த 29 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது மிகவும் கீழ் நிலையில் உள்ளது சீனாவின் பொருளியல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகெங்கிலும் நிகழ்ந்துள்ள வீழ்ச்சி. சிங்கப்பூரில் வேலை இழப்பு கூடியுள்ளது. இது இந்தியாவை மட்டும் பாதிக்கும் விஷயமன்று என்று தெரிந்திருக்க வேண்டாமா?
 
ஒருசில நிறுவனங்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார். அவை யாவை என்றும் சொல்லியிருக்கலாம். அனில் அம்பானியின் நிறுவனங்கள் போண்டியாகும் நிலையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
இவை அனைத்தையும் மனுஷ்யபுத்திரன் சொல்லியிருந்தால் கடந்துசென்றிருக்கலாம்.
 
ஜெயமோகன் சறுக்கியுள்ளார். அவருக்குப் பிடித்த யானை நினைவிற்கு வருகிறது. #CAA

முகங்களின் தேசம் (எ) பாரத தரிசனம்

ஜெயமோகனின் ‘முகங்களின் தேசம்’ நூலை அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் எம்.ஆர்.டி. ரயிலில் தினம் ஒரு கட்டுரை என்பதாகப் படித்து வந்தேன். ஒவ்வொரு நாளும் மிகுந்த மன எழுச்சியை அடைய இக்கட்டுரை வாசிப்பு உதவியது. சில கட்டுரைகளைப் பற்றிய எனது அனுபவங்கள்:

img__89046_std‘ஆல்’ – மனித மனதின் உயர்வைக் காட்டுகிறது. ஒரு வகையில் இரு மனங்களின் உயர்வையும், மற்றொரு மனதின் தாழ்வையும் ஒருசேர உணர்த்துகிறது. பிச்சை வாங்கும் நிலையில் உள்ளவன் பிச்சை அளிக்கிறான். பிச்சை பெற்றவன் தனது கடனை அடைக்கிறான். வாயும் வயிறும் நிறையும் வண்ணம் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை உங்கள் கண்களை நிறைக்கும்.

சீக்கிய ஞான மரபின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான  ‘உண்டியளித்தல்’  பேரறமாக விஸ்வரூபம் எடுத்து நம்மை ஆட்கொள்கிறது ‘அன்னையின் சிறகுக்குள்’ கட்டுரையில். இத்தகைய ஞான மரபுகள் தோன்றிய பாரத பூமியில் பிறந்தோமே என்று கண்களில் நீர் மல்க புத்தகத்தில் அடுத்த கட்டுரைக்குச் செல்ல முயற்சித்தேன். முடியவில்லை. கட்டுரையில் இருந்த அந்த சீக்கியப் பெரியவரின் பென்சில் ஓவியத்தை நன்றியுடன் பார்த்தவண்னம் இருந்தேன்.

‘கோப்ரா’ கட்டுரையில் ஆகும்பேயில் கொட்டும் மழையில் உணவு தேடிச் செல்லும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் குழு ‘ஷெனாய்’ என்னும் கொங்கணி பிராமணரின் மெஸ் ( அந்த ஊரின் ஒரே மெஸ்) காட்டப்படுகிறது. கடையைச் சாத்திவிட்ட அந்த வயதான உரிமையாளர் குழுவினர் முழுவதும் நனைந்துவிட்டதையும், காலையில் இருந்து ஒன்றும் உண்ணாமல் இருப்பதையும், தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ளதையும் அறிந்து, உறங்கச் சென்விறுவிட்ட தனது மனைவியை எழுப்பி, அடுப்பு மூட்டி உப்புமா தயாரித்து வழங்குகிறார். தொழில் என்பதைத் தாண்டி, மானுட அறம் என்னும் விழுமியம் கண் முன் தோன்றும் இடம் இது.

சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த இடங்களைப் பார்க்கச் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள் என்று ஜெயமோகன் எழுதியுள்ளது உள்ளத்தை உருக்குவன. சாலையில் கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்த போது வயல் வரப்பில் அமர்ந்துகொண்டிருந்த மராத்திய விவசாயியிடம் பேசுகின்றனர். உடன் பயணிக்கும் நாஞ்சில் நாடனுக்கு மராத்தி மொழி தெரியுமாகையால் பேச்சு தொடர்கிறது. ‘விவசாயம் எப்படிப் போகிறது?’ என்ற கேள்விக்கு ‘நஷ்டம் தான்’ என்கிறார் விவசாயி. இருந்தும் ஏன் செய்கிறீர்கள் என்றதற்கு,’ இந்தக் கோதுமை எங்கோ யாருக்கோ உணவாகிறது. எனக்கு லாபமில்லை என்றாலும் யாருடைய பசிக்கோ நான் உணவாக்க வேண்டிய கடமை உள்ளது,’என்று அந்த முதிய விவசாயி சொன்னது நாஞ்சில் நாடன் மட்டுமல்ல யாரையுமே கண் கலங்க வைப்பது. அந்த விவசாயியை கீதையின் கண்ணனாகவே பார்க்கத் தோன்றுகிறது. (பலன் கருதாமல் கடமையாற்றுதல்).

‘ருத்ரம்மா’ கட்டுரை காட்டும் பெண்முகம் யாரென்று ஊகிக்க வேண்டியதில்லை. வறண்ட தேசமாகிய வரங்கல் பகுதியைக் காக்க வந்த தேவியாகவே ருத்ரம்மா திகழ்கிறார். தனது சேனையைக் கொண்டு நாடு முழுவதும் ஏரிகளை வெட்ட வைத்த அந்த அன்னையால் இன்றும் அவளது குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். (தமிழகத்தில் வீராணம் ஏரியும் அப்படிப் போர்வீரர்களால் கட்டப்பட்டது தான்).

‘நமது முகங்கள்’ கட்டுரையில் தமிழகத்தின் தரம் தாழ்ந்த நிலை மனதை இறுக்குகிறது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்னும் திராவிட அரசியல் பீற்றல் உண்மைதான் போலும். கலாச்சாரத்திலும், பொது இடங்களில் பெண்களிடம் நடந்துகொள்வதிலும் தமிழகம் தேய்ந்துதான் போய்விட்டது. ஈரோட்டுப் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக இருக்குமோ என்று யாராவது ஆராயலாம்.  ‘நமது விருந்தோம்பல்..’ கட்டுரையைத் தமிழக ஆட்சியாளர்கள் என்று யாராவது இருந்தால் படிக்கக் கொடுக்கலாம். கேரளாவும் இக்கட்டுரையில் சாடப்பட்டுள்ளது. ஒருவேளை ‘கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்’ தோன்றியதால் இன்னமும் நாகரீகம் அடையாமல் இருக்கிறோமோ? என்று எண்னத் தோந்றுகிறது.

‘ஒருங்கிணைவின் வளையம்’ நம்மை உண்மை வரலாற்றை நோக்கி இட்டுச் செல்கிறது. தென் பாரதத்தில் நமது கலாச்சாரமும், கோவில்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதற்கு சிருங்கேரி சாரதா பீடம் ஆற்றியுள்ள மகத்தான பணி நம் கண் முன் தெரிகிறது. சிருங்கேரி பீடத்தின் வித்யாரண்யரின் முயற்சி இல்லாதிருந்தால் விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்டிருக்காது. வடக்கைச் சூறையாடிய இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் தெற்கையும் அழித்தொழித்திருப்பார்கள். சிருங்கேரி பீடத்திற்கும், அதன் ஸ்தாபகரான ஆதி சங்கரருக்கும் கண்ணிர் மல்க நன்றி சொல்ல வைக்கும் கட்டுரை இது. உண்மையில் இது ஒரு வைணவக் கோவில் பற்றியது என்பது ஒரு சுவாரஸ்யம்.

‘ஆழத்தின் முகங்கள்’ நம்மை சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முற்பட்ட லோத்தல் நிலத்திற்குக் கொண்டு செல்கிறது.  பெரும் ஒழுங்கோடும், நுண் வடிவமைப்புடனும் கட்டப்பட்டுச் செயல்பட்டு வந்த அந்த நாகரீகத்தின் எச்சங்களைப் பற்றி ஜெயமோகன் எழுத்தில் காட்டும் காட்சிகள் மீண்டும் மீண்டும் நம் கனவுகளில் உயிர்த்தெழுந்து, கடந்த காலத்தைப் பற்றிய பிரமிப்பை நம்முள் விதைக்கின்றன. அந்நிலத்தைக் கடந்து, கடும் பாலைவனப் பிரதேசத்தில் பயணிக்கும் எழுத்தாளரின் குழு, மாடு மேய்க்கும் நாடோடிக் கூட்டத்துடன் ஒன்றிணைந்து தேநீர் அருந்துகிறது. முகம் தெரியாத அந்தச் சாமானிய மக்கள் முகம் தெரியாத பயணிகளுக்கு ஆதரவாக ‘ஆவோ பாய் ஆவோ’ என்று வரவேற்று உபசரிப்பதை நமது பாரத மண்ணின் மகத்துவங்களில் ஒன்றாகக் கருதலாம். இத்தனைக்கும் அந்த மக்கள் கடும் குளிருக்கும், மணல் வீச்சுக்கும் ஏற்றாற்போல் முகம் வெளியில் தெரியாதபடி கீழே குனிந்து அமர்ந்திருக்கின்றனர். அந்த இடத்தில் ஜெயமோகன் பார்த்தது மானிட முகங்களை அல்ல, லோத்தல் பிரதேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்து மறைந்த நமது மூதாதையின் முகங்களை.

ஆந்திரத்தில் விஜயநகரப் பேரரசு ஆண்ட கோதாவரி நதிக்கரையில், கிஞ்சித்தும் தமிழறியாத கோவில் பூசகர் ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரத்தைப் பாடுவதையும், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை விஜயநகர அரசர்களின் பின்னவர்களான நாயக்க மன்னர்கள் கட்டிக் காத்ததையும் ஒருங்கே இந்நூலில் காண முடிகிறது. இரண்டு நிகழ்வுகளையும் இணைப்பது மொழித் தடைகளைக் கடந்த ஆன்மீக ஒருங்கிணைப்பு என்னும் சரடே என்பதை உணரும் தருணத்தில் மயிர்க்கூச்சேற்படுவதைத் தடுக்க இயலவில்லை. கிருஷ்ணதேவராயரால் ஆந்திரத்தில் ஆண்டாளும், நாயக்க மன்னர்களால் தமிழகத்தில் கிருஷ்ணதேராயரும் இன்னும் வாழ்வதை மானசீகமாக ஜெயமோகன் குழுவினர் உணர்கின்றனர். நானும் தான். ஆமுக்த மால்யதா புரியாவிட்டால் என்ன? ஆண்டாள் பாசுரம் இருக்கிறதே.

‘ஏழரைப் பொன்’ கட்டுரை, தயாளுவான ஒரு தாய் ஆண் வடிவெடுத்துத் தாயுமானவனாக நின்று, ஜெயமோகனைக் காத்த நெகிழ வைக்கும் ஒன்று. இதில் வரும் பெரியவரைப் போல் நானறிந்த சிலர் இருக்கின்றனர். ஒருவர் என் தந்தை.

ஜெயமோகனும் நண்பர்களும் இந்தியாவின் எந்த ஊரிலும், எந்த நேரத்திலும் உணவுக்கோ, இருப்பிடத்துக்கோ அல்லலுறவில்லை. எந்த நேரத்திலும் ‘கன்னியாகுமரியில் இருந்து வருகிறோம்’ என்றால் உணவு, தங்குவதற்கு ஏதோ ஒரு இடம் என்று கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுக்க இவர்கள் தொடந்து வரவேற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் – கன்னியாகுமரியின் பிள்ளைகளாக, பாரத தேவியின் பிள்ளைகளால்.

மணிப்பூர், அஸாம், காஷ்மீர், குஜராத், மஹாராஷ்டிரம், ஆந்திரம், திபெத், லடாக், பூடான், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், ராஜஸ்தான் என்று விரியும் ஜெயமோகனின் மனித முகங்களின் தரிசனங்களை மையப்படுத்திய பயணம் அவரைக் கொண்டு சேர்த்தது  பாரதம் என்னும் ஞானப் பெருந்தேவியின் பிள்ளைகளிடத்தில். அத்தனை பிள்ளைகளும் அவளது அத்தனை முகங்கள். அத்தனை முகங்களிலும் அன்னையின் கருணையும், அருளும்.

முகங்களின் தேசம் = பாரத தரிசனம்.

‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்

ஜெயமோகனும் நண்பர்களும் தாரமங்கலத்தில் இருந்து புத்த கயா வரை சென்ற சாலைவழிப் பயணத்தின் அன்றாடத் தொகுப்பே ‘இந்தியப் பயணம்’ என்னும் நூல். அன்றாடப் பயண நிகழ்வுகள், பயணத்தின் போது கண்ணில் படும் காட்சிகள், சுற்றுப்பறம், தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உபி, பிஹார் என்று வேறுபடும் நிலங்களின் வர்ணனைகள், மாறும் சீதோஷ்ண நிலைகள், அவ்விடங்களில் கிடைக்கும் கள் முதலிய பானங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்லும் இப்பயணக் குறிப்புகள் அவ்வூர்களின் கோவில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் அளிக்கத் தவறவில்லை.

பாரதத்தின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குச் செல்லும் ஜெயமோகன், தான் கண்ட கோவில்கள், கோட்டைகள் என்று அவற்றின் வரலாறு, ஆண்ட மன்னர்கள் பற்றிய குறிப்புகள் என்று அன்றாடம் எழுதுகிறார். தமிழகம் தவிர்த்த இத்தனை மாநிலங்களின் சிறு வரலாறு குறித்து இத்தனை தகவல்களை அவர் எப்படித்தான் நினைவில் வைத்துள்ளார் என்பது மலைப்பாகவே உள்ளது.

தாரமங்கலத்தில் சைவத்தில் துவங்கும் இவரது பயணம், ஆந்திராவில் வைணவத் தலங்களில் நிகழ்ந்து, புத்த கயாவில் பவுத்தத்தில் முடிவது, பாரதத்தின் பரந்துபட்ட சமயங்களின் ஒத்திசைவைக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.

india-payanam-10002242-800x800ஆந்திராவில் அஹோபிலம் குறித்த பயணக் குறிப்புகளில் தற்போதைய அஹோபில மடத்தின் ஆரம்ப கால நிகழ்வுகள் குறித்த சரியான செய்திகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு. செஞ்சு பழங்குடியினர் வாழும் அஹோபில மலைகளுக்குக் காஞ்சிபுரத்தில் இருந்து தனியாளாகச் சென்று, பழங்குடியினரை வைணவர்களாக்கி, அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு சமயமாக வைணவத்தை வளர்த்த ஆதி வண்சடகோப ஜீயர் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளன. ஆனால் அஹோபில மடம் தென்கலை வைணவர்களுக்கானது என்பது தவறு. அது வடகலை வைணவர்களுடைய பிரதான மடம். தமிழ் மொழிக்கு அம்மடம் அளித்து வரும் முதன்மையையும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பயணிக்கும் போது அம்மாநிலத்துச் சாலைகள் பற்றிக் குறிப்பிடுவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. அவசியம் பா.ஜ.க. அரசு கவனிக்க வேண்டிய ஒன்று இப்பகுதி.

பயணிக்கும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடிச் சென்றுள்ள தமிழர்களைச் சந்திக்கிறார் ஆசிரியர். ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்னும் வெற்றுக் கோஷத்தைக் கண்டிக்கும் விதமாக உள்ளவை இப்பகுதிகள்.

கோவில் இடிபாடுகள் என்றாலே இஸ்லாமிய மன்னர்களின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. அவ்வாறே அவர் காட்டும் கோவில்களும், பண்டைய கல்வி நிலையங்களும் இடிந்து தத்தமது பழைய வரலாற்றைக் கூறுகின்றன.

ஜெயமோகனின் கூரிய பார்வை நம்மைப் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் இந்து அரசர்கள் ஆண்ட போதும் இஸ்லாமிய மசூதிகளுக்கு இடம் அளித்தார்கள் என்னும் தகவலைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  பெனுகொண்டா நகரில் பாபையா தர்க்கா இருந்துள்ளதைச் சுட்டும் ஆசிரியர், ஷெர் கான் மசூதியை 1564ல் சதாசிவ ராயர் கட்டினார் என்று கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறார். மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை பற்றி இன்று ஓலமிடும் இடதுசாரிகளும் பகுத்தறிவாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய பகுதி இது.

பல கோவில்களைப் பற்றிக் கூறும்போதெல்லாம் தமிழ் நாட்டுக் கோவில்களுடன் அவற்றை ஒப்பிட்டுக் காட்டுவது பாராட்டும்படி உள்ளது. வாஜ்பாய் துவங்கிய தங்க நாற்கரச் சாலைத் திட்டம் எப்படி காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டது என்பதைத் தனது ஆந்திர, மத்தியப் பிரதேசச் சாலைகள் பற்றிய குறிப்புகளில் வெளிப்படுத்துகிறார் ஜெயமோகன்.

விறுவிறுப்பாகவும், அவசரமாகவும் எழுதப்பட்ட அன்றாடக் குறிப்புகள் என்பதால் சில இடங்களில் மேலதிக வர்ணனைகள் இல்லாமல் இருக்கிறது. நூலாக வெளியிடும் போது அவற்றைச் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பாரத தரிசனத்தைத் துவங்கும் யாருக்கும் பயனளிக்கும் நூல் ‘இந்தியப் பயணம்’. இதை இங்கே வாங்கலாம்.

என்ன மாதிரியான அறம் ?

இரண்டு மாதங்களாக ‘செய்தி உபவாசம்’ ( News Fast ) என்று இருந்துவருகிறேன். படிப்பதற்கு ஏற்ற, கொந்தளிப்பற்ற மனநிலையையும் , அதற்கான அவகாசத்தையும் இது தருகிறது என்று உணர்கிறேன்.

இந்த உபவாசக் கடட்ளையில் ஜெயமோகனின் வலை தளத்தையும் சேர்க்க வேண்டி இருக்கும் போலத் தெரிகிறது. தற்போது அவரது நேர்மை குறையும் நேரம் போல இருக்கிறது. முதலில் திரை நாயகர் ஒருவர் சார்பாக, ஒருதலைப் பட்சமாக எழுதினார். தற்போது வைணவ அடையாளங்கள் பற்றிய கட்டுரை குறித்து.

சாதி மேட்டிமைவாதம் என்று சொல்கிறார். வேதாந்த தேசிகனின் ‘ஆஹார நியமம்’ வழி நடப்பவர்கள் பலர் இன்றும் உள்ளனர். ‘ஆசாரக் கோவை’ என்னும் பொது சுகாதாரத்தை வலியுறுத்தும் தமிழ் நூல் சொல்லும் விதிகள் கடுமையானவை தான். இவை வழிகாட்டிகள். தொழில் சார்ந்த, மரபுகள் சார்ந்த ஆசாரங்கள்.

விமானம் ஓட்டுபவர் இன்ன உடையில் இருக்க வேண்டும், மது அருந்தியிருக்கக் கூடாது, போதைப் பொருட்களை உட்க்கொண்டிருக்கக் கூடாது என்பது விதி. அத்தனையும் ஆசார விதிகள், அவற்றைப் புறந்தள்ள வேண்டும் என்று சொல்லலாமா? கைலி கட்டிக்கொண்டு பிளேன் ஓட்டுவது தவறு என்று ஒருவர் எழுதினால் அதை ‘பைலட்களின் சாதி மேட்டிமைவாதம்’ என்று சொல்லலாமா?

மின்னியல் சோதனைச் சாலையில் மாணவர்கள் ரப்பர் ஷூ அணிந்து தான் வர வேண்டும் என்பது ஆதாரவிதி. பெண்கள் தங்கள் ஜடையை சோதனைச் சாலைக்கான மேற் சட்டைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதும் விதியே. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறு உண்டு. இதை மின்னியல் துறையினரின் சாதி மேட்டிமை வாதம், பெண் அடக்குமுறை என்று சொல்லலாமா?

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மது அருந்தியிருத்தல் கூடாது என்கிற விதி இருக்கலாம். அதுவும் தவறு என்று கொள்வதா? மருத்துவர்களின் சாதி மேட்டிமைத்தனம் என்று கொள்வதா?

வைதீகர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் இப்படி இருந்தார்கள் என்றும், இன்று அப்படி இல்லையே என்று அங்கலாய்ப்பதாக அந்தக் கட்டுரையில் வரும். இதில் தவறென்ன இருக்கிறது? அர்ச்சகர் வீதியில் நின்று புகைபிடித்தவாறே அபிஷேகம் செய்வதுதான் சாதி மேட்டிமைத்தனம் இல்லாத செயலா?

இப்படி எழுதுவது என்னமாதிரியான அறம் என்று தெரியவில்லை.

கமலஹாசன், ஜெயமோகன் மற்றும் தாலிபானிய சிந்தனைகள்

கமலஹாசனின் மஹாபாரத கருத்துக்களால் அவர் சந்திக்கும் வழக்கு பற்றிய ஜெயமோகனின் கருத்து கண்டனத்திற்குரியது.

ஆமாம். இந்த ஞான மரபில் நாஸ்திகம் உண்டுதான். சார்வாகம், லோகாயதம் இங்கிருந்தே தோன்றின. ஜாபாலி முனிவரையும், அவைதீக மதஸ்தர்களான பௌத்தரையும் ஜைனரையும் போற்றும் பண்பாடு நம்முடையது. அதற்காக ஒரு நடிகர், வெளி நாட்டுத் திரைப்படங்களைத் திருடி நடிக்கும் நடிகர், பெரிய பண்பாட்டு அறிவுஜீவி போல் மஹாபாரதத்தையம் அதைக் கொண்டாடும் நாட்டையும் இழித்துரைப்பாராம். அதை எதிர்த்து வழக்கு போடக்கூடாதாம். போட்டால் முல்லாவாம்.

வழக்கு தானே போட்டார்? வன்முறையில் இறங்கினாரா என்ன? வழக்கு போடுவது ஜனநாயக வழிமுறை தானே ? அதில் என்ன தவறு கண்டார் ஜெயமோகன்?

‘பெண்ணை வைத்து சூதாடிய நூலைக் கொண்டாடிய தேசம்’ என்றார் கமலஹாசன். அந்த நூலில் ஒரு பெண்ணை இழிவு படுத்தியதற்காக மூண்ட மாபெரும் போர் பற்றியும் வருகிறது. மாற்றான் மனைவியைக் கவர்ந்ததால் அழிந்த மன்னனைப் பற்றியம் ஒரு நூல் இருக்கிறது. அது இராமாயணம். அதையும் இந்த நாடு கொண்டாடுகிறது. அது அந்த நடிகருக்குத் தெரியவில்லை அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்.

கமலஹாசனுக்காக சுய தர்மத்தை அடகு வைக்க வேண்டிய தேவை சாதாரண மனிதனுக்கு இல்லை. எனவே வழக்கு போடுகிறான். வழக்கு தான் போடுகிறானே தவிர கமலஹாசனின் வீட்டை முற்றுகை இடவில்லை; அவரை அவமதிக்கவில்லை; வன்முறை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் மனம் புண்பட்ட ஒருவன் செய்வது தான் என்ன?

வழக்கு இழுத்தடிக்கும் என்கிறார். ஆகவே வழக்கு தவறாம். இனிமேல் ஒரு கொலை நடந்தாலும் வழக்கு போட வேண்டாமா?

ஆட்சி அதிகாரம் வந்ததால் தெம்பு வந்துள்ளது என்கிறார் ஜெயமோகன். இது தான் முல்லாத்தனம். ஆட்சி ஏற்பட்டுவிட்டதால் 2ஜி வழக்கை மூடி விடலாமா?

பல இன சமூகங்கள் வாழும் நாட்டில், ஒரு சாராரையும், அவர்களது நம்பிக்கைகளையும் இழிவு படுத்திப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும், வெளி நாட்டுத் திரைப்படங்களைத் திருடிப் படம் எடுக்கும் ஒரு நடிகர், பெருவாரியான மக்களின், ஒரு பெரும் கலாச்சாரத்தின் வெளிப்பாடான ஒரு இதிகாசத்தை அருவருப்பான சொற்களால் சாடுவது தவறில்லை; ஆனால் அதை எதிர்த்து ஒரு மடாதிபதி வழக்கு தொடர்வது தவறு. அதற்காக அவருக்கு எதிராக வழக்குகள் போட வேண்டும், அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பது தான் தாலிபன் சிந்தனை வெளி.

சிந்தனைத் தெளிவும், இந்து ஞான மரபுகளில்  ஆழ்ந்த பயிற்சியும், மொழி வளமும் கைவரப் பெற்ற ஜெயமோகனின் தடுமாற்றம் அதிர்ச்சியளிக்கிறது. சினிமாவுக்காக சுயத்தை இழப்பது என்ன மாதிரியான அறம் என்று தெரியவில்லை.

அருகர்களின் பாதை – book review

9788184936797_b

One word to describe this book – ‘magnificent’.

Well known Indian Tamil writer Jeyamohan exemplifies in the art of describing places and events in this so-called travelogue so much so that one gets a feel of having traveled with his team all along.

This travelogue is on the trail of ancient Jain monasteries and temples. Jains in ancient India exemplified in the art of trade and established the now famous trade routes. Jeyamohan and his friends go in search of this ancient trade route and, in the process, explore the monasteries and caves where Jain monks lived and preached from.

Being an expert in the philosophical history of India, Jeyamohan excels in the art of describing the philosophical connection at each place of his visit. Not only are we enthralled by the beauty of his Tamil language but also by the juxtaposition of metaphor and thought.

The Jain trail takes place over a period of one month and covers the entire western length of the physical India of the present.

Everywhere we are treated to the enormity of the temples or caves, the philanthropy of the Jain establishments in treating the pilgrims who come visiting them, the splendor of the institutions – either ruined or not yet – and the extremes of weather that the magnificent country India has to offer.

We are also audience to a repetition – the repetition in the destruction of temples by Islamic invaders and the re-construction by enterprising Jains.

Barbaric invader Allauddin Khilji finds a mention again and again for the wrong reasons. Whenever Jeyamohan mentions a temple, there is always an Islamic invasion that would have resulted in its destruction and a subsequent rebuild. The details of destruction get so frequent that you begin to expect one such when Jeyamohan visits a new place. The volumes of history destroyed by the Sultanates and Mughal zealots is simply unfathomable.

That such structures were, time and again, destroyed by pre-Mughal and Mughal invaders and have been re-built, time and again, paints a picture in contrast — foreign forces aiming at destruction and local spiritual forces aiming at re-construction and reconciliation. And there in lies the resilience of the continuous culture of India for the last 10,000 years or so.

That such a magnificent Jain trail that has existed in India and has been so cleverly hidden by successive governments in the name of ‘secularism’ is a sad commentary on the Nehruvian version of education and governance. Though we are left in awe at the different places that Jeyamohan visits because of the splendor of the structures that he describes, what pains is the enormity of efforts that successive regional and central governments have taken to hide these stupendous wonders from the common man of the country — by way of not having incorporated these in history text books.

Jeyamohan describes the common man in Maharashtra and Gujarat who welcomes strangers with open arms and a smile, and offers food and tea even at odd times of the day. That, as Jeyamohan correctly depicts, is the chord of humanity which runs through the civilization that is India.

The other uniform thread that runs through the narrative is the peaceful coexistence of Jainism and Vaishnavism in the states of Gujarat and Rajasthan. The interoperability of icons in both the religions is a lesson in the belief that unity of divinity is the founding philosophical base of India.

Jeyamohan also mentions the ‘Golden Quadrilateral’ – the four way link expressways that the Vajpayee government built ( subsequently abandoned by the Congress governments) and its benefits to India.

Among the many Hindu and Jain kings mentioned, Raja Hamir Dev of Ranthambore needs special mention. He sacrificed his kingdom and himself in order to keep his word to safeguard a couple from the strangleholds of Allauddin Khilji.

Selfless kings like Hamir Dev of Rajasthan and the Solankis of Gujarat epitomize the spirit of India.

Kudos to the author for his painstaking travel and, more than that, his equally, if not more, painstaking documentation of his travel to the minutest of detail and for this philosophical-historical treatise.

The book can be bought here.

வெள்ளை யானை – நூல் மதிப்புரை

vellai yaanaiஜெயமோகன் ‘வெள்ளை யானை’ என்னும் பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். தாது வருஷத்துப் பஞ்சம் பற்றிய இந்தக் கதையில், உண்மையும் பல புனைவுகளும் நிரம்பி எது உண்மை, எது புனைவு என்று தெரியாத வண்ணம் உள்ளது.

பஞ்சம் வந்தது உண்மை. மக்கள் பட்டினி கிடந்து மடிந்தது உண்மை. தாழ்த்தப்பட்டோர் பெரிய அளவில் மடிந்தது உண்மை. அதே சமயம் அனைத்து மக்களும் அவதிப்பட்டு அவர்களிலும் பலர் மடிந்தது உண்மை. தாதுக் கும்மி என்று தஞ்சை பக்கம் இப்போதும் பாடக் கேட்கலாம்.

கதை: ஒரு ஐரிஷ் அதிகாரி பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகச் சென்னை வருகிறான். அவன் பார்வையில் பஞ்சம் விரிகிறது. மக்கள் துயர் அவன் பார்வையில் எழுதப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டி வரவழைக்கப்பட்டு இந்தியாவின் கனவான்களுக்கு மது அருந்த வழங்கப்படுவது ஒரு தொழில். அதற்கு அந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் எப்படிப் பட்டினியால் அவதிப்படுகின்றனர், சாதி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்று அந்த அதிகாரியின் பார்வையில் விரிவதாக நாவல் பயணிக்கிறது.

நெஞ்சை உலுக்கும் பஞ்சக் காட்சிகள், சாதி அமைப்பின் கொடூரம் எல்லாம் மிகைப்படுத்தல்களுக்கிடையே வெளிப்படுகின்றன. கதை மாந்தர்கள் சிலர் நாடகப் பாணியில் பேசுகின்றனர். சில உண்மை வரலாற்று நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்ட கதையும், செனேட் ஹால் கட்டப்பட்ட கதையும் இந்தச் சோகச் சித்தரிப்பில் இடம்பெறுகின்றன.

ஐஸ்கட்டியை ‘வெள்ளை யானை’ என்று ஒரு படிமமாகச் சொல்வது அருமை. இங்கு ஜெயமோகன் ஜொலிக்கிறார். ஆனால் முரஹரி ஐயங்கார் பாத்திரம் கதையில் ஒட்டவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. ஷெல்லியின் வரிகள் கதை ஓட்டத்திற்கு மெருகு சேர்க்கிறது.

பஞ்சம் அறியாத நமது தலைமுறையினருக்கு அது பற்றி அறிந்துகொள்ள இது ஒரு நல்ல தொடக்கம். மதுஸ்ரீ முகர்ஜீ எழுதிய Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II என்ற நூலை இதை அடுத்து படிக்கலாம்.

அந்த நூல் பற்றிய எனது மதிப்புரை இங்கே.

படைப்பூக்கம் பெற என் உத்தி

”அந்த குறளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன்.

‘சம்பந்தம் இருக்குண்ணா குறளை எல்லாரும் சொல்லுகானுக? குறள்னாக்க ஞாபகம் வாற எடத்துல சும்மா எடுத்து போடறதுக்குண்டான ஒண்ணாக்கும். எனக்க கிட்ட கேக்கேரே கருணாநிதிட்ட கேப்பேராவே?’

‘அறம்’ தொகுதியில் ‘பூமேடை’ கதையில் பூமேடை ராமையா என்னும் தியாகி சொல்வதாக வரும் ஒரு பேச்சு. சம்மட்டி அடி என்றால் இது தான். இக்கதையைக் கருணாநிதி படித்திருப்பாரா தெரியவில்லை.

அதே போல் இன்னொன்று. பூமேடை சொல்வதாக வருவது: ‘அன்னைக்குள்ள தியாகியெல்லாம் இன்னைக்குப் பிக்பாக்கெட்டாக்கும். அப்ப அன்னைக்குள்ள பிக்பாக்கெட் இன்னைக்குத் தியாகி தானே?’ இது ஒரு சுத்தியல் அடி.

இன்னொன்று: ‘இது நம்ம சுதேசி கோர்ட்டு. மேலே சீலிங் ஃபேனெல்லாம் உண்டு. காந்தி படம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு.. மத்தபடி அதே டவாலி, அதே பளைய பேப்பரு. அதே சட்டம். ஒரு ஐயராக்கும் ஜட்ஜு. பழைய தண்டனைய பாக்காரு. பிரிட்டிஷ் சர்க்காரு நடைமுறைகளை அப்பிடியே ஃபாலோ பண்ணணுமுன்னுல்லா சுதேசி சர்க்காருக்க சட்டம்?’ விடுதலை பெற்ற பின் நமது சட்டத்தின் நிலையை இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

தியாகி பென்ஷன், மொழிப்போர் பென்ஷன் வாங்கியிருக்கலாமே என்னும் கேள்விக்குப் பூமேடை சொல்வது: ‘அது செத்தவனுக்குப் போடுற வாய்க்கரிசில்லா? நான் இப்பமும் சீவனோட இருக்கறவனாக்கும் வே. காந்திக்கு பென்ஷன் குடுத்தா வாங்கிட்டிருப்பாரா?’

‘பூமேடை’ கதையில் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஜெயமோகன் ஜொலிக்கிறார்.

எத்தனை முறை படித்தாலும் ‘அறம்’ தொகுப்பு திகைப்பை ஏற்படுத்தும் படைப்பு. சுமார் 8 முறை படித்திருப்பேன். புதிய படைப்பு ஏதாகிலும் செய்ய முயலும் போது ஒரு மன ஒருமை ஏற்பட நான் நாடுவது ‘அறம்’ தொகுப்பை.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

விஷ்ணுபுரம் – ஒரு விவாதம்

சைவம்னா ஏதோ சாப்பாடுன்னு ஆயிட்டு. அதுக்கு மேல தெரியல. வைஷணவன்னா வைசியாளான்னு கேக்கறோம். அந்த அளவுலதான் நாம இருக்கோம். இது கல்வி முறை பிரச்சினையே தவிர விஷ்ணுபுரம் பிரச்சினை இல்லை,’ என்றேன்.

‘இன்னிக்கி அவசியம் பார்க்க வர்றீங்க,’ அண்ணாச்சியின் குரலில் அவசரமும் கோபமும் தெரிந்தது.

மதிய உணவு வேளையில் நாங்கள் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

‘எலே மக்கா, நீரு விஷ்ணுபுரம் நாவல் பத்தி ஒசத்தி எழுதினீரேன்னு அதப் படிச்சா, ஒரு எளவும் புரியல. என்னதான்யா சொல்றாரு ஜெயமோகன்? மூணு கதவுங்கறார், விஷ்ணுங்கறார், திடீர்னு ஆழ்வார்ங்கறார், வைசேஷிகம், சார்வாகம்கறார். இத்தனையும் சொல்லிட்டு, கடைசில என்னவா முடிக்கறாருன்னே தெரியல,’ என்று சற்று கோபமாகவே சொன்னார் அண்ணாச்சி.

சற்று அமைதியாயிருந்தேன். ‘என்னா ஒரு பேச்சும் காணோம்? நீரு சொன்னதால ‘அறம்’ படிச்சேன். அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே,’ என்ற தன் நியாயமான கருத்தை முன்வைத்தார் அண்ணாச்சி.

‘அண்ணாச்சி சொல்றது வாஸ்தவம் தான். விஷ்ணுபுரம் கொஞ்சம் கடினமான நாவல் தான். ஆனா அது மாதிரி தற்சமயம் தமிழ்ல வேற எதுவும் வரல்ல. ‘அறம்’ங்கறது சிறுகதைத் தொகுப்பு. வேற வேற வித்துக்கள் இருக்கும் ஒரு ஒரு கதைலயும். ஆனா விஷ்ணுபரம் அப்பிடி இல்லை. யுகங்கள் கடந்த பார்வை அது. ரெண்டு யுகங்கள் முழுக்க பயணிக்கணும் இல்லையா. அதால ஒரு அயற்சி ஏற்படறது சகஜம் தான். ஆனா அதுல இருக்கற தத்துவ தரிசனம் தான் முக்கியமே தவிர கதைன்னு பார்த்தா பெருசா ஒண்ணும் இருக்காது,’ என்றேன்.

‘நல்லா பேசுதீரு. ஒரு வரில சொல்லும் வே விஷ்ணுபுரம் கதைய,’ என்று சவாலாகப் பேசினார் அண்ணாச்சி.

‘விஷ்ணு புரண்டு படுக்கறாரு. யுகம் மாறுது. அவ்வளவு தான் கதை,’ என்றேன்.

‘இத சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு நீட்டி முழக்கணும்? ஏதுக்கு வளவளன்னு எழுதணும்?’, என்று கோபம் குறையாமல் கேட்டார் அவர்.

‘அண்ணாச்சி, இலக்கியம்னா என்னான்னு நெனைக்கீக? அது என்ன பேசுபுக்கு ஒத்தவரியா? ‘தமிளா எந்திரி நாளைக்கி நீ மந்திரி இல்லாட்டி நான் சுந்தரி’ அப்புடின்னு கவிதை எளுதி பட்டம் வாங்குற வைரமுத்து கவிதையா? இது இலக்கியம் இல்லில்லா? இலக்கியம்ங்கறது வாழ்க்கை அண்ணாச்சி’ என்றேன்

‘அப்பா வைரமுத்து கவிஞர் இல்லியா? அவுரு செய்யுறது இலக்கியம் இல்லியா? என்னவே சொல்லுதீய?’ என்று பொரிந்தார் அண்ணாச்சி.

‘அண்ணாச்சி, இப்பம் நீங்க பேசுகது பாலிடிக்ஸ். இது இலக்கியம் இல்லை.

இலக்கியம் படிக்கறது நாம பிளேன்ல போவது மாதிரி. பிளேன் கிட்ட நாம நம்மள ஒப்புவிக்கறோம் இல்லையா. அது ஆரம்பத்துல சொணக்கமா மெதுவா போகுது, பிறகு திடீர்னு வேகம் பிடிச்சு சட்டுனு எழும்புது, ரொம்ப நேரம் சலனமில்லாம பதறாம பறக்குது, அப்பப்ப சின்ன அதிர்வுகள், பிறகு சட சடன்னு இறங்கி சில சமயம் அமைதியாவும் சில சமயம் ஒரு அதிர்வுடனும் தரைதொடுது. நாம இத்தனையையும் அதுக்குள்ள இருந்து அனுபவிக்கறோம் இல்லையா. அது மாதிரி தான் இலக்கியமும். நாம நம்மள முழுமையா அதுகிட்ட ஒப்புக் கொடுக்கணும். அது போற போக்குல எல்லாம் போகணும். இலக்கியம்ங்கறது முழுமையான அனுபவம். தமிழ்ப் படம் பார்க்கற மாதிரி ரெண்டு ஃபைட்டு, ரெண்டு பாட்டு, தாலி செண்டிமெண்ட், சுபம்னு முடியாது. இலக்கியம் நம்ம வாழ்க்கை மாதிரி அண்ணாச்சி. பிரமாதமான திருப்பங்கள் இல்லாம சீராவும் இருக்கும், சில நேரங்கள்ல் சின்ன மாற்றங்களும் ஏற்படும்,’ என்றேன்.

ரொம்ப பேசிவிட்டேனோ என்று நினைத்தேன்.

‘புரிஞ்சா மாதிரி இருக்கு. ஆனா தத்துவம் நெறைய பேசறாரே ஜெயமோஹன். அதெல்லாம் நம்ம வாழ்க்கையில இருக்கா என்ன? எதுக்கு அந்தக் கஷ்டம் எல்லாம்?’ என்று கேட்டார் அண்ணாச்சி.

‘அது நம்ம கல்விமுறைல இருக்கற பிராப்ளம் அண்ணாச்சி. சைவம், சாக்தம், சாங்கியம், வைசேஷிகம், அத்வைதம், துவைதம் இதெல்லாம் என்னன்னே தெரியாத தலைமுறைகளா கடந்த 300 வருஷங்களா ஆயிட்டோம். இப்ப சைவம்னா ஏதோ சாப்பாடுன்னு ஆயிட்டு. அதுக்கு மேல தெரியல. வைஷணவன்னா வைசியாளான்னு கேக்கறோம். அந்த அளவுலதான் நாம இருக்கோம். இது கல்வி முறை பிரச்சினையே தவிர விஷ்ணுபுரம் பிரச்சினை இல்லை,’ என்றேன்.

அண்ணாச்சி சற்று யோசிப்பது போலத் தெரிந்தது.

‘அண்ணாச்சி, விஷ்ணுபுரம் மாதிரி ‘கொற்றவை’ ன்னு ஒரு நாவல். அவரோடது தான். சிலப்பதிகாரக் கதை. சுத்த தமிழ்ல. படிச்சுப் பாரும். ரொம்ப கஷ்டம். ஆனா அந்த அனுபவம் கடைசில பேரானந்தமா இருக்கும். நம்ம மொழியோட வளம் தெரியும். சொற்களோட ஆளுமை தெரியவரும். ‘லாலாக்கு டோல் டப்பி மா’ னு பாட்டு கேக்கற நம்ம தமிழ்ச் சமுதாயத்துல இப்படி ஒரு எழுத்தாளர் இருக்காறேன்னு நாம கொண்டாடணும் அண்ணாச்சி,’ என்றேன்.

‘படிச்சுட்டு சொல்றேன் சாமி,’ என்றார் அண்ணாச்சி.

%d bloggers like this: