‘திருக்கார்த்தியல்’ – வாசிப்பனுபவம்

இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.

பதின்ம வயதை எட்டாத, விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதைகளின் தொகுப்பே ராம் தங்கம் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதை நூல். பெயர்: திருக்கார்த்தியல்.
 
அலட்டல், அதிக வர்ணனைகள், பொய்மொழி இல்லாமல் சாதாரண நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களைக் கொண்டே மனதைப் பிழியும் கதைகள் பதினொன்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
 
அரசியல் சரி நிலை, மதச்சார்பற்றதாக காட்டிக் கொள்ளும் வெற்று வியாக்கியான வரிகள், அம்பேத்கார் மண் / பெரியார் மண், பொதுவுடமை ஒப்பாரிகள் என்று முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டாடப் பட வேண்டியதற்குத் தேவையான எந்த லாகிரி வஸ்துக்களும் அற்ற, நேர்மையான, மனதில் ஆணியடிக்கும் கதைகள் உள்ளன.
 
இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.
 
‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையைப் படித்த பிறது மனம் ஒரு நிலையில் இல்லை. ஓரிரு கதைகள் மனதில் நிற்கவில்லை.( பெரிய நாடார் வீடு).
 
நாஞ்சில் நாடனின் முன்னுரை சிறப்பு.
 
ஒரே மூச்சில் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள். திருக்கார்த்தியல்

என் பேர் ஆண்டாள் – ஸ்டெம் செல் முதல் அக்கார அடிசில் வரை

‘பஞ்சாமிர்தம்’ என்றால் தெரியும்தானே ? அது தான் சுஜாதா தேசிகனின் ‘என் பேர் ஆண்டாள்’ நூல்.

‘அனுபவம்’, ‘சுஜாதா’, ‘பொது’, ‘பயணங்கள்’, ‘அறிவியல்’ என்று ஐந்து அமிர்தங்களைக் கொண்ட கட்டுரை நூல்.

39 சுவையான கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் என்னை மிகவும் ஈர்த்த சில கட்டுரைகளைப் பார்ப்போம்.

‘என் பேர் ஆண்டாள்’  – நூலின் பெயரில் ஒரு கட்டுரை. இல்லை Cute-உரை. அவ்வளவு Cute. ஆண்டாள் என்று பெயரிடப்படும் ஆசிரியரின் குழந்தை பேசுவது போல் அமைந்துள்ளது. மயில் இறகால் வருடியது போன்ற ஒரு உணர்வு.

‘அமுதன்’ – மகன் பெயர். கட்டுரையின் பெயரும் அதுவே. ‘அமுதன்’ பெயர்க்காரணமும் அது தொடர்பான ஆழ்வார் பாசுரங்களும் ஆக அருமை.

‘தொட்டமளூர்’ என்னும் பயணக்கட்டுரையில் ஒரு மண்டபம். அதில் அக்காலத்தில் புரந்தரதாசர் அமர்ந்து ‘ஜகதோதாரணா’ பாடியிருக்கிறார். தேசிகன் அமர்ந்து ‘ததியோதாரணா’ (தயிர் சாதம் உண்ணல்) என்கிறார். வார்த்தை விளையாட்டில் சுஜாதா மீண்டும். கட்டுரை முடிவு – சுஜாதா கர ஸ்பரிசம்.

‘மேல் கோட்டையில் ஒரு நாள்’ கட்டுரையில் இன்றைய நிலைமையின் நிதர்சனம் – ‘கிராமங்கள் கற்புடன் இருக்கின்றன. ஐ.டி.கம்பெனிகள் இன்னும் வரவில்லை’ என்கிறார். நெத்தியடி வாசகம்.

ராமானுசருக்குள்ள மேல்கோட்டைத் தொடர்பு, கோட்டைக் கோவிலின் விஸ்தீரணங்கள், கோவிலில் தொல்பொருள் துறையின் தொலைந்துபோன நிலை இத்தனையும் விளக்கப்படுகின்றன. முடிவில் – ‘பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்க..’ – மீண்டும் சுஜாதா.

‘ராமானுச நூற்றந்தாதி’ பாடிய திருவரங்கத்து அமுதனார் பற்றிய கட்டுரையின் முடிவு மிகவும் ஆழமான உண்மைகளை உள்ளடக்கியது. மிக அற்புதமான ஸ்ரீவைஷ்ணவ அனுபவத்தை அளிக்கிறது. அடுத்தமுறை ஸ்ரீரங்கம் போகும் போது, அந்த வீட்டிற்குப் போக வேண்டும்.

பூந்தமல்லியில் வாழந்த திருக்க்ச்சி நம்பிகள் பற்றிய கட்டுரை உங்களைக் கரைத்துவிடும். 100 ஆண்டுள் முன்பு வாழ்ந்த அவர், ராமானுசருக்கே ஆசாரியன். அவரது வீடு இன்று இருக்கும் நிலை, அற நிலையத்துறையின் வழக்கமான விளக்கெண்ணை பதில் – உயர் பதவியில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் கொஞ்சம் இந்தப்பக்கம் பார்க்கவும். ஒட்டுமொத்த தமிழர்களுமே தலைகுனிய வேண்டிய தருணம்.

இதெல்லாம் போகட்டும். இராமானுசருக்கு ‘அஷ்டாட்சர’த்தை உபதேசித்தார் திருக்கோஷ்ட்டியூர் நம்பி. இராமானுசர் அதனை உலகிற்கே அறிவித்தார். அந்தத் திருக்கோஷ்டியூரில் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார் தேசிகன். ‘இராமானுசர் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்; நானும் அதே வீட்டிற்குச் செல்கிறேன் ’ என்று புளகாங்கிதம் அடையும் அவர் வீட்டின் நிலையை வர்ணிக்கிறார்.

‘ராக்கெட் வண்டுகள்’ என்னும் வண்டுகள் பற்றிய கட்டுரை அறிவியல், இலக்கியம், ஆன்மீகம் கலந்ததாக உள்ளது. வண்டு பற்றிய குறுந்தொகைப் பாடலான ‘கொங்குதேர் வாழ்க்கை..’யில் துவக்கம் ‘தேமருவு பொழிலிடத்து..’ என்னும் வண்டைத் தூது அனுப்பும் தேரழுந்தூர்ப் பாசுரத்துடன் முடிவு. தேசிகனின் ‘அப்பாவின் ரேடியோ’ நூலில் ‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை நினைவுக்கு வந்தது. தேசிகனுக்கு எங்கள் தேரழுந்தூர் ரொம்ப பிரியம் என்று தெரிகிறது.

‘சுஜாதா’ பற்றிய கட்டுரைப் பகுதியில் மறைந்த எழுத்தாளர் பற்றிய அவரது இறுதி நாட்கள், இறுதிக்கணம் பற்றிய விவரிப்புகள் நெஞ்சை அடைக்கும்.

ஒருமுறை ஆசிரியர் தேசிகனின் தந்தையார் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது அங்கிருந்த தூண்களைத் தொட்டுக்கொண்டே இருந்தாராம். கேட்டதற்கு ‘இந்தத் தூணில் திருமங்கையாழ்வாரும் தொட்டிருப்பார்’ என்று சொன்னார் என்று அந்த வரலாற்றுத் தொடர்பை நினைவுபடுத்தியுள்ளார். நானும் இதே கருத்தை முன்னிறுத்தி முன்னர் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன். அவை இங்கே, இங்கே. தேசிகனின் இந்த நூலைப் படித்தவுடன் புல்லரித்தது.

அழகர் கோவில் என்னும் திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் படைக்க எண்ணியதை நானூறு ஆண்டுகள் கழித்து ராமானுசர் நிறைவேற்றியதையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் சாத்தியக்கூறுகளையும் ஒருங்கே கொண்ட இந்தப் பஞ்சாமிர்தக் கட்டுரை நூலில்.அசோகமித்திரன் பற்றிய கட்டுரையில் தமிழ்ச் சமுதாயம் எழுத்தாளர்களை வைத்துள்ள நிலையும் தெரிகிறது.

முடிக்கும் முன் : தென்கலை, வடகலை என்று இல்லாத வித்தியாசங்களை உண்டு பண்ணி. சண்டை போடும்  நேரத்தில், திருக்கச்சி நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்து அமுதனார் வீடு இவற்றை வாங்கி, வைஷ்ணவ சமயக் கேந்திரங்களாக, பாசுரங்கள் கற்பிக்கும் பாடசாலைகளாக ஆக்கினால் குருபரம்பரை வாழ்த்தும். பெரியவர்களுக்கு அந்த மகரநெடுங்குழைக்காதப் பெருமாள் புத்தி வழங்கட்டும்.

என் பேர் ஆண்டாள் – இங்கே வாங்கலாம்.

பழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத்

உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின்  கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.

இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை,  சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.

அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின்  ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம்   நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .

பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது,  இயற்கைக்கு முன் மனிதனின்  ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை  உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.

ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில்  சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு  ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.

‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம்  அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது  அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.

ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான்  இருக்கும் .

வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.

ஞாநியின் வீழ்ச்சி

எழுத்தாளர் ஞாநியின் தர வீழ்ச்சி வியப்பளிக்கவில்லை.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுபவர் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவது நல்லது என்று நான் நினைத்தது உண்மை தான். ஆனால் இந்து மத துவேஷ வேஷம் போட வேண்டியிருப்பதால் அவர் எடுக்கும் நிலைக்கும் சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் எடுக்கும் நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

தேர்தலில் நிற்கும் வரை அவர் என்னவேண்டுமானால் பேசியிருக்கலாம். அவை திராவிட தேச முற்போக்கு அரசியல் அவலங்களில் ஒன்றாக மன்னிக்கப்படும். ஆனால் வேட்பாளர் என்று ஆனவுடன் எல்லாருக்குமான, எல்லா சமூகத்தினருக்குமான ஒரு பொது மனிதராக அவர் பேச வேண்டும்.

இந்தக் காணொளியில் அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தி சென்றுவிட்டு வந்த 58 மனிதர்கள் ஹிட்லர்கள் என்று பேசுகிறார். அதை அப்படியே சற்று இழுத்து ‘மாதா கோவில் சென்று வருபவர்கள் முசொலினிகள்’ என்றோ, ‘புனிதப் பயணம் சென்று வருபவர்கள் தீவிரவாதிகள்’ என்றோ அவர் சொல்வாரா ? அப்படிச் சொன்னால் அது அபத்தம் இல்லையா ?

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசினால் சிறுபான்மையினர் மகிழ்வார்கள் என்று நினைப்பது சிறுபான்மையினரை அவமானப்படுத்துவது போன்றது. அவர்களது கூட்டு அறிவுத் திறத்துக்கும் விடுக்கும் மிகப்பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்.

தீவிர போலி செக்யூலர் என்று காட்ட எவ்வளவு கீழ்த்தரமாகவும் பேசலாம் என்றால், மரியாதையை இழக்கலாம் என்றால் – இப்படி தேர்தலில் நிற்பது அவசியம் தானா ?

போலி மதச் சார்பின்மையின் அவலங்களின் மொத்த உருவாகக் காட்சியளிக்கிறார் திரு.ஞாநி.

என்ன ஒரு வீழ்ச்சி !

 

பாயா லெபாரில் திரு.சங்கர் ஏன் அழுதார் ?

பாயா லேபார் (paya lebar )  ரயில் நிறுத்தத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் சங்கர் மேலே பார்த்தபடி நின்றிருந்தார். எவ்வளவு நேரமாக அவர் அப்படி நின்றிருந்தார் என்று அவருக்கு நினைவில்லை.

கையில் மேப்புடன் (Map )  வந்த ஒரு வெள்ளைக்காரர் ஏதோ கேட்க சங்கர் அவர் என்ன கேட்கிறார் என்று தெரியாமல் அவரை வெற்றுப் பார்வை பார்த்தார்.

வெள்ளைக்காரர் சற்று பின்வாங்கி ‘ஓ ஐ ஆம் சாரி’ என்று சொல்லிச் சென்றார்.

காரணம் சங்கரின் கண்கள் கலங்கியிருந்தன.

சிங்கப்பூரின் ஒரு ரயில் நிலயத்தில் நெருக்கடியான, மக்கள் புழக்கம் அதிகம் உள்ள நேரத்தில்,;ஒருவர் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் கண்கள் கலங்கியபடி நின்றிருந்தால் யாருக்குத் தான் பாவமாகத் தோன்றாது ? அவருக்கு என்ன சோகமோ என்று யாருக்கும் அனுதாபம் வருவது இயற்கைதானே ?

சங்கரின் கண்ணீருக்கும் அவர் அப்படியே மாலை 7:30 மணிக்குப் பாயா லெபார் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நின்றதற்கும் யார் காரணம் ? அவரிடம் கையில் என்ன இருந்தது ? என்றெல்லாம் நீங்கள் கேட்பது புரிகிறது.

சங்கரின் கண்ணீருக்கான காரணங்கள் இரண்டு. ஒன்று அவர் கையில் இருந்த புத்தகம். இரண்டாவது அதில் இருந்த முதல் கதை.

இவை தவிர மூன்றாவது காரணமும் உண்டு. அது அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன்.

கதை : அறம்.

முதல் கதையைப் படித்தவுடன் தான் சங்கர் பாயா லெபாரில் அழுதபடி நின்றிருந்தார்.அவர் இன்னும் ‘அறம்’ தொகுப்பில் உள்ள ‘யானை டாக்டர்’, ‘நூறு நாற்காலிகள்’ முதலியன படிக்கவில்லை.

இந்த நிகழ்வு சென்ற வியாழக்கிழமை நடந்தது. சங்கர் என் நண்பர்.

‘அறம்’ படித்து கண் கலங்காத மனிதர்கள் மன நல மருத்துவ்ரை நாடுவது நல்லது.

ஞாநியின் தேர்தல்

எழுத்தாளர் ஞாநி தேர்தலில் நிற்கிறார் என்பது ஒரு நல்ல செய்தி. தொகுதி என்னவென்பதெல்லாம் தெரியவில்லை. எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. ஏனெனில் ஞாநி போன்ற சமூக ஆர்வலர்கள் தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள் என்பதே என்னைப் பொருத்தவரை நல்ல செய்தி தான்.

தேர்தல் என்றவுடனே ‘ஆமாம் அவன் மட்டும் என்னவாம், கொள்ளை அடிக்கவில்லையா?’ என்று கேட்டே பழகிப்போன நமக்கு ‘அட, நல்ல மனுஷன் ஒருத்தர் நிற்கிறாரே !’, என்று ஒரு Positive  எண்ணம் ஏற்படுவது ஒரு புதிய அனுபவம்.

அவர் வெற்றி பெறுவாரா, அவர் சார்ந்த கட்சி  நல்லதா என்றெல்லாம் பற்றிப் பேசிப் பயனில்லை என்று நினைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சி வெறும் காட்சியே தவிர அது ஒரு கட்சி அல்ல. தில்லியில் அவர்கள் பதவியில் இருந்த 49 நாட்களில் அதன் தலைவர் வீதியில் இருந்ததே அதிகம். நாடகத்துக்குக் பெயர் போன கட்சி அது. நேர்மை என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் ஆதரவு  பெற்றார்கள். தலைமைச் செயலகத்தில் அரசு நடத்தாமல் தொலைக்காட்சி நிலையங்களில் பழி கிடந்தார்கள். 49 நாட்களில் அவர்கள் செய்துகொண்ட சமரசங்கள் கூசச் செய்தன.

ஆனால் ஞாநி என்ற தனி மனிதரை ஆம் ஆத்மி கட்சி என்ற கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியதில்லை. இவரால் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்தால் உண்டு.

ஞாநி அடிப்படையில் ஒரு போராளி. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இருந்து தனது கொள்கைப் பிடிப்பினால் வெளியேறினார். அக்காலத்தில் இப்போது இருப்பது போல் நிமிடத்திற்கு ஒரு பத்திரிக்கையில் வேலை கிடைக்காது. இருந்தாலும் வெளியேறினார். குடும்பம் சிரமப்பட்டது.

1988-ல் இருந்து கூடங்குளம் அணு உலையை எதிர்த்து வருகிறார். இன்றும் எதிர்க்கிறார். தினமும் இப்போது அதில் மின் உற்பத்தி நடக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டிருக்கிறார்.

2ஜீ வழக்கில் துக்ளக் சோ.ராமாஸ்வாமியைத் தவிர ஆணித்தரமாக எதிர்த்துப் பேசிய ஒரே தமிழ் எழுத்தாளர் இவர் தான்.அப்போது இவர் சாதிப் பெயர் சொல்லி வசை பாடப்பட்டார்.

அடிப்படையில் நல்ல மனிதர். அவர் சிங்கப்பூர் வந்திருந்த போது அவருடன் சுமார் 2 மணி நேரம் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சரளமாக எல்லா விஷயங்கள் பற்றியும் உரையாடினார். நம் உறவினர் ஒருவர் பல நாட்கள் கழித்து வந்து பேசுவது போல் இருந்தது அந்த சந்திப்பு. என் பெயர் பற்றிய பேச்சு வந்தவுடன் ,’தி.ஜானகிராமன் நாவலில் ஆமருவி என்றொரு பாத்திரம் வரும்’ என்று சொல்லி அசத்தினார்.

அவர் கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடில்லை. மோடி எதிர்ப்பு என்ற தளத்தில் கொஞ்சம் தரம் குறைந்தார் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் பற்றிய தனது கருத்துக்களில்- குறிப்பாக எழுத்துரு பற்றி – கொஞ்சம் தி.மு.க. தரத்தில் எழுதினார்.அணு உலை விஷயத்திலும் அவர் கருத்துக்கு எனக்கு எதிர் கருத்து உண்டு. அமெரிக்க இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் சென்னையில் பேச அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மௌனியாகவே இருந்தார். எல்லாவற்றிலும் இடது சாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் அவர், அவர்கள் அ.தி.மு.க.வுடன் செய்து கொண்ட உடன்பாடு பற்றி வாய் திறக்கவில்லை.

தான் ப்ராம்மணன் இல்லை , இடது சாரி தான் என்று எல்லா நேரங்களிலும் காட்டிக்கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருப்பதாக அவர் உணர்ந்திருப்பதாகவே அவரது பேச்சு பல சமயங்களில் இருந்துள்ளது என்பது என் கருத்து. இது தமிழ் நாட்டின் நிதர்ஸன அவலங்களில் ஒன்று.

இருந்தாலும் நான் ஞாநி அவர்களை ஆதரிக்கிறேன். அவர் வெற்றி பெற மாட்டார் என்பது உறுதி ஆகா விட்டாலும், அவரைப் போல் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசினால் ஒரு சில அறிவு பூர்வமான விவாதங்கள் நடக்க வழி ஏற்படும் என்று நினைக்கிறேன்.

நல்ல மனிதர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். ஞாநி நல்லவர்.

ஞாநி பற்றிய என் முந்தைய பதிவுகள் 1 :

ஞாநி பற்றிய என் முந்தைய பதிவுகள் 2 :

சில ஆங்கில நூலாய்வுகள்

என்னைக் கவர்ந்த சில ஆங்கில நூல்கள் பற்றிய என் ஆய்வுகளின் தொகுப்பு.

சிங்கப்பூரின் கல்வி நிலை, மாணவர்கள் படும் அவதி, கல்வி முறையினால் பெற்றோர் படும் அவதி முதலியன பற்றி சிங்கப்பூர் ஆங்கில எழுஎன்னைக் கவர்ந்த சில ஆங்கில நூல்கள் பற்றிய என் ஆய்வுகள்த்தாளர் திருவாட்டி.மோனிகா லிம் எழுதிய (The Good, Bad and the PSLE) நகைச்சுவை ததும்பும்  நூல் பற்றிய என் ஆய்வு கீழே.

https://amaruvi.wordpress.com/2013/12/22/psle/

ஃபாலி நாரிமன் அவர்களின் State of the Nation என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் நூல் பற்றிய என் ஆய்வு.

https://amaruvi.wordpress.com/2014/02/12/state-of-the-nation-book-review/

மைங்க் தார் என்னும் இந்திய எழுத்தாளரின் ‘Cubicle Manifesto” என்னும் நூல் பற்றிய என் ஆய்வு.

https://amaruvi.wordpress.com/2014/02/10/the-cubicle-manifesto-book-review/

அருண் ஷௌரியின் சீனா பற்றிய நேரு தொடங்கி இந்திய அரசின் நிலைகள் பற்றிய நூல் பற்றிய என் ஆய்வு.

https://amaruvi.wordpress.com/2014/01/19/self-deception-indias-china-policies-book-review/

முன்னாள் அமெரிக்க அதிகாரியின் பா.ஜ.க. அரசின் ஜஸ்வந்த் சிங் தொடர்பான, இந்திய அரசின் அணு சோதனைக்குப்பின் நிகழ்ந்த அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் பற்றியும், இந்தியாவின் விட்டுக்கொடுக்காத அணுகுமுறை பற்றிய நூல். அது பற்றிய என் ஆய்வு.

https://amaruvi.wordpress.com/2013/07/20/engaging-india-a-review/

நேரு பற்றிய அவரது மெய்க்காப்பாளரது நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நேருவின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய நூல் பற்றிய என் ஆய்வு.

https://amaruvi.wordpress.com/2014/01/31/i-was-nehrus-shadow-review/

தேவன் என்னும் மாமனிதன்

தற்போது பெரும்பாலும் தமிழ் மக்களால் மறக்கப்பட்டுவிட்ட ஒரு ஹாஸ்ய எழுத்தாளர் தேவன் என்னும் மஹாதேவன். 50 களில் கோலோச்சிக்கொண்டிருந்த அவர் பெரும்பாலும் உயர் மத்திய தர ப்ராம்மணக் குடும்பங்கள், அவர்கள் சார்ந்த கதைகள், அவர்களது தொழில் சார்ந்த நகைச்சுவை நிகழ்வுகள் முதலிய பல விஷயங்கள் பற்றிக் கதைகள் எழுதியுள்ளார்.

‘துப்பறியும் சாம்பு’ அவரது முக்கியத் தொகுப்பு.

;ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’, ‘மிஸ்.மாலதி’ ,’பார்வதியின் சங்கல்பம்’ முதலியன வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட கதைகள்.

‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’ அக்கால ஜுரி முறைப்படி வழக்கு நடக்கும் விதத்தை விவரித்திருக்கும். நீண்ட நாவல் அது. கடைசி வரை சுவாரசியம் குறையாமல் எழுத்தபட்டிருக்கும். அக்கால நீதி முறை நடைமுறையில் இருந்தபோது நாம் இல்லையே என்று நம்மை எண்ண வைக்கும்.

அமரர்.கல்கியுடன் இணைந்து பணியாற்றியவர் திரு.தேவன். ஆனந்த விகடனில் ஆசிரியராகவும் இருந்துள்ளர் அவர்.

சென்னை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் தேவன்.

வெறும் 43 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார் தேவன். அதற்குள் அவர் எழுதிக் குவித்த கதைகள் ஏராளம்.

அவரைப் பற்றி இப்போது ஏன் என்று கேட்கலாம். சில நாட்கள் முன்பு அவரது ஒரு சில புத்தகங்களை மீண்டும் படித்தேன். வாழ்வில் பல ஆண்டுகள் பின்னே சென்றேன்.

வாழ்வின் மிகச் சாதாரணமான விஷயங்களைக் கூட மிகவும் நகைச்சுவையுடன் கூறியிருப்பார் அவர்.

தேவன் கதைகளை ஒரு மீள் வாசிப்பு செய்து பாருங்கள். தமிழகத்தின் பி.ஜி.வோட்ஹவுஸ் ( P.G.WodeHouse ) என்று சாதாரணமாக அழைக்கலாம் இவரை.

இலக்கிய ஆய்வும் வெண்ணை கத்தியும்

‘இலக்கியம்’ என்றால் என்ன என்ற ஒரு கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கம்பன் பற்றி எழுதுகிறாய், வள்ளுவர் வருகிறார், ராகுல் காந்தியும் வருகிறார், பின்னர் ஆழ்வார் வருகிறார், அவருடன் காஞ்சிபுரம் சார்ந்த வழக்கு விபரம் வருகிறது, அத்துடன் பகுத்தறிவு பற்றி எழுதுகிறாய், அடுத்த வாரமே ஆண்டாள் பாசுரம் வருகிறது பின்னர் மீண்டும் ராகுல் காந்தி பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை, அல்லது சிங்கப்பூர் டாக்ஸி குறித்த ஆங்கிலப் பதிவு. ஒரே குழப்பமாக உள்ளது. நீ எழுதுவது என்ன ? இலக்கியமா? இல்லை என்றால் இதை எப்படி அழைப்பது ?

கேள்வி நன்றாகத்தான் உள்ளது. பதில் தான் தெரியவில்லை.

இந்தக் கேள்வி ஏன் எழுந்தது ? நான் எழுதியது சிலருக்குச் சில கேள்விகளை எழுப்பின. நீ ஏன் இப்படி எழுதுகிறாய் ? ஏன் ஒரு தளத்தில் இருந்து எழுதுவதில்லை ? ( ஏன் குரங்கு போல் தாவுகிறாய் என்று பொருள் கொள்ள வேண்டும் ) என்றெல்லாம் கேட்கிறார்கள்.

கேள்வியின் உட்பொருள் இதுதான் என்று நினைக்கிறேன். அதாவது “நீ என்ன பெரிய மேதாவியா?” என்பதாக இருக்கலாம். ( மேதாவி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருளும் உண்டு என்பதைக் கவனிக்கவும் ! )

எது எப்படி இருந்தாலும் ‘இலக்கியம்’ என்றால் என்ன என்றொரு கேள்வி எழுந்தது உண்மை. சிறிது ஆராய்ச்சி செய்தேன். இலக்கு + இயம் = இலக்கியம் என்று புரிந்துகொள்ளலாம் என்று தெரிந்துகொண்டேன். ஒரு தெளிவான, உயர்வான இலக்கைத் தெரிவு செய்து கொண்டு அதனை மொழி வழி இயம்புதல் என்று பொருள் கொள்ளலாம் என்று அறிந்துகொண்டேன்.

இலக்கியத்தில் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் கலக்கலாமா ? என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. சில நண்பர்கள் இவை சார்பில்லாததே இலக்கியம் என்று கூறுகின்றனர்.

இலக்கியம் என்பதே ‘அழகியல்’ தொடர்பானதாகவும் புனைவுகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். எனவே அவற்றில் அரசியல், சித்தாந்தம் முதலியன கூடாது என்றும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஜெயகாந்தன் எழுதியது இலக்கியமா இல்லையா ?

புனைவும் அழகியலும் மட்டுமே இருக்கவேண்டும் என்றால் இப்படி இருக்குமோ ? காந்தியடிகளைப்பற்றிய ஒரு கவிதை எழுத வேண்டும் என்றால் அவரது அழகைப் பற்றிப் பாட வேண்டுமா? மன்மதனுக்கு ஒப்பிட்டுப் பாட வேண்டுமா?

இலக்கியம் என்றாலே நடைமுறை வாழ்வியல் சாராமலே இருக்க வேண்டும் என்று உள்ளதா?

‘கட்டுரைகள்’ இலக்கியம் இல்லையா?  அல்லது சில தலைப்புக்கள் பற்றி மட்டுமே இருந்தாலொழிய கட்டுரைகள் இலக்கியம் என்று கொள்ளப்படாதா?  அதில் சமயம், மொழி, அக்கால அரசு தொடர்பான செய்திகள் இருந்தால் அவை இலக்கியம் இல்லையா?

உதாரணமாக – தேவாரம் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது என்று கொண்டால் அக்கட்டுரையில் தேவாரம் பாடிய அப்பர் பற்றிய செய்திகள் இடம் பெறக் கூடாதா? அத்துடன் அவர் சார்ந்த சமயம் பற்றியன இடம் பெறக் கூடாதா? சிவபெருமான் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இடம் பெறக் கூடாதா ? அக்கட்டுரையை வைணவர்களும் படிப்பார்கள் என்பதால் சைவம் பற்றிய கருத்துக்களும் திருமால் பற்றி வந்துள்ள சில கருத்துக்களும் இடம்பெறக்கூடாதா?

‘தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று சைவர்கள் கூறுவதால் இந்து சமயம் சாராத வாசகர்கள் படித்தால் மனம் புண்படுவர் என்பதால் இந்த வாழ்த்து பற்றிப் பேசக்கூடாதா?

அல்லது வைணவ சமயம் சார்ந்துள்ளதால் அத்வைத சம்ப்ரதாயம் தொடர்பான காஞ்சி மட வழக்கு பற்றி ஆராயக் கூடாதா?  அல்லது காஞ்சி மடம் வெகு விரைவில் தனது ஆளுமையையும் சமூகத்தில் தனது செல்வாக்கையும் இழக்க வேண்டும் என்று விரும்பும் சில சக்திகள் பற்றி சிந்திக்கவே கூடாதா ? அப்படி சிந்திக்க வேண்டி இருப்பதால் வெள்ளையர் ஆட்சி தொடங்கி தற்போது வரை பாரத சமூகத்தின் வீழ்ச்சியை விரும்பும் இயக்கங்கள் பற்றி சிந்திப்பது பாவமா ?

பாரதத்தின் ஞான மரபே தர்க்கம் என்னும் அடிப்படை அமைப்பைச் சார்ந்தது தானே ? கேள்விகள் கேட்கப்படுவது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வே. உபநிஷதம் வேறு என்ன ? சங்கரரும் திருநாவுக்கரசரும் இராமானுசரும் வாதம் செய்து வெற்றி கொண்ட வரலாறு தானே நமது ? ஆக ‘எல்லோருக்கும் ஏற்கப் பேசுவது’ என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை என்பது தானே உண்மை?

இவ்வாறு எல்லாம் எந்த எண்ணப் போக்கையும் நிந்தனை செய்யாமல் எழுதுவதே இலக்கியம் என்றால் பிறந்த குழந்தை சிரித்ததையும் ரோஜாப்பூ மலர்ந்ததையும் மட்டுமே எழுத வேண்டும். இவை தான் இலக்கியமா?

புரியவில்லை.

சில விஷயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. எந்த நிகழ்வையும் ஆராயும்போதும் சமயம், மொழி, சித்தாந்தம் முதலியன பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் எனக்கு உள்ள ஒரே வழிகாட்டி இது தான். முனைப்பாடியார் என்னும் புலவர்  கூறும் சட்டமே நான் பின்பற்றும் வழி. அது இது தான் :

“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்கண்
ஆய்தல் அறிவு உடையார் கண்ணதே, காய்வதன்கண்
உற்ற குணம் தோன்றாதது ஆகும், உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”

விருப்பு வெறுப்பின்றி ஒரு பொருளை ஆராய்ந்து அறிய வேண்டும். விருப்போடு ஆராய்ந்தால் பொருளின் கண் உள்ள குறைகள் தென்படாது; வெறுப்போடு ஆராய்ந்தால் அதனின் கண் உள்ள நல்ல குணங்கள் தென்படாது; அறிவுடையார் அப்படிச் செய்வர்.

இதுவே என் வழிகாட்டி.

இலக்கிய ஆய்வு என்பது வயலில் நெல் அறுக்கும் கத்தி போன்றது; அது நல்ல கதிரை அறுவடை செய்யும். அதற்காக பதர்களையும் ஊடுறுவிகளையும்  அறுத்தெறியும். என் பணி அது போன்றதே; அதை வெண்ணை வெட்டும் கத்தியாக்க விருப்பமில்லை.

நான் எழுதுவது இலக்கியமா இல்லையா என்பது பற்றிக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்கிறதா என்பதே முக்கியம் என்று கருதுகிறேன்.

பாரதியின் இந்த வரியுடன் முடிக்கிறேன். என் நிலை இது தான்.

“தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?”

வீழ மாட்டேன்.

இடியும் மழையும்

Image

இந்த வாரம் ஒரு பெரும் இடி முழக்கத்தில் சிக்கிக் கொண்டேன். துவக்கத்தில் அமைதியாகத் துவங்கியது போகப்போக பெரும் இடியாக மாறி என் சிந்தனையைச் சிதறடித்து பட்டென்று ஓய்ந்தது. ஆனால் அந்த இடி முழக்கத்தின் பாதிப்பு நீங்க கொஞ்ச நேரம் ஆனது. இடியைத் தொடர்ந்து சுகமான ஒரு மழை பொழிந்தது. இவை இரண்டும் இந்த வார நிகழ்வுகள்.

இடி என்று சொன்னது திரு.ஸ்டாலின் குணசேகரன் என்ற ஒரு அதிசய மனிதனின் சொற்பொழிவை. ஈரோடு புத்தகத் திருவிழா நடத்தும் அவர் அமைதியாக ஆனால் தெளிவாக ஒரு கலாச்சாரப் புரட்சி செய்துவருகிறார். தொலைக்காட்சி, கணினி விளையாட்டு, வன்முறையும் விரசமும் மட்டுமே கொண்ட திரைப்படங்கள், படிப்பு என்னும் பெயரில் நிகழும் அறிவு பலாத்காரம் , தெருமுனை அரசு மதுக்கூடம் என்று தமிழகச் சிறார் வீறு நடை போடும் இக்காலத்தில், பள்ளி தோறும் சென்று மாணவர்களை அழைத்துவந்து, ஈரோட்டில் ஆண்டு தோறும் பத்து நாள் உற்சவம் போல் புத்தகத் திருவிழா நடத்தும் திரு.குணசேகரனை என்னவென்பது ?

பிள்ளைகளுக்கு உண்டியல் வழங்கி அதன்மூலம் அவர்கள் சேர்க்கும் பணத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்குப் புத்தகங்கள் அளிக்கும் மனிதரை என்னவென்பது ?

ஆரம்பப் பள்ளியில் சேர்க்கவே பல ஆயிரங்களை ரொக்கமாகக் கேட்கும் இந்தக் கால வணிகக் கல்வி முறையில் ஒவ்வொரு பள்ளியாக ‘இலக்கிய மன்றக் கூட்டம்’ நடத்தி மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் திரு.ஸ்டாலின் குணசேகரன் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

வீதி தோறும் விளக்கு பூஜை நடத்துவது போல் வாசகர் வட்டங்கள் நடத்துங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். இருபது பேருக்கு மேல் கூடாமல் அதே நேரம் கூடும் அனைவரும் அந்த மாதம் தாங்கள் படித்த நூல் பற்றிப் பேசுங்கள் என்று வழிகாட்டுகிறார்.

‘வீடுதோறும் நூலகம்  அமைப்போம்’ என்கிறார்.

வழக்குரைஞரான இவர் ஆறு வருடம் தன் தொழிலைப் புறந்தள்ளி ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற நூல் எழுதியிருக்கிறார். இது தற்போது மூன்று பாகங்கள் வந்து ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தனது நூலின் விதை எது என்று கேட்டபோது தனது நான்காம் வகுப்பு நாட்களில் தனது கல்வி நிலையத்தின் தாளாளரும் தியாகியுமான  திரு.மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களைக் கூறுகிறார். எழுபத்தைந்து வயதிலும் திரு.முதலியார் அவர்கள் நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வாரம் ஒரு முறை காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ நூலைப் படித்துக் குழந்தைகள் புரிந்துகொள்ளும் வண்ணம் கதைகள் சொல்வாராம். அதுவே ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ நூல் எழுத விதையானது என்றார் திரு.குணசேகரன்.

எப்படியாகிலும் சிறுவர்கள் மனதில் வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இவர் பிள்ளைகளுக்கு இளமையிலேயே சிக்கனத்தையும் போதிக்க வேண்டுமென்கிறார். உழைப்பின் உயர்வை உணர்த்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

சிங்கப்பூரில் நேதாஜியின் நினைவிடத்தைப் பார்வையிட்டு வந்த அவர் நேதாஜியின் உணச்சியுடனே பேசியது தான் நான் ‘இடி இடித்தது’ என்றேன்.

மிக நீண்ட நாள் கழித்து ‘தேசியம்’ பேசும் ஒரு தமிழரைப் பார்த்துப் பேசியதில் மனம் நிறைந்தது.

இடி சரி. மழை ?

அடுத்ததாகப் பேசிய பேரா.தி.இராசகோபாலன் அவர்கள் ‘படைப்பவனும் படைக்கப்படும் பொருளும்’ என்ற தலைப்பில் தமிழ் மழை பொழிந்தார். இளங்கோவில் தொடங்கி, கம்பனில் ஊறி, ஆங்கிலப் புலவன் கீட்சில்  (Keats) நுழைந்து, பாரதியில் திளைத்து, பாரதிதாசனில் உறவாடி, பட்டுக்கோட்டையில் இளைப்பாறி, கண்ணதாசனில் பயணித்துக் கடைசியில் வைரமுத்துவில் நிறுத்தினார். என்ன ஒரு விஷய ஞானம் ?

இளந்தூரலுடன் கூடிய ஆரவாரமற்ற ஒரு மழையில் நனைந்தால் அந்த இன்பமே தனி. பேரா.தி.ராசகோபாலன் அவர்களின் பேச்சு அப்படி இருந்தது.

%d bloggers like this: