அப்பட்டமான அழுச்சாட்டியத்தை அந்த உபன்யாசகர் பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
தாம்பிராஸ் மீது எனக்கு என்றும் மரியாதை இருந்ததில்லை. நான் அதன் உறுப்பினன் அல்லன்.
அந்தச் சங்கம் நடத்திய கூட்டம் ஒன்றில், உபன்யாசகர் கல்யாணராமன் நாடார்கள் குறித்துப் பேசிய ஒரு நிமிடக் காணொளியைக் கண்டேன். அபத்தம்.
உபன்யாசம் செய்பவர் ஆசாரிய பீடத்தில் இருந்து பேசுகிறார். நொடி நேர ஹாஸ்யம் என்கிற அளவில் கூட அந்தப் பீடம் அவமதிக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உபன்யாசகரது கடமை.
அப்படியிருக்க, அப்பட்டமான அழுச்சாட்டியத்தை அந்த உபன்யாசகர் பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
பிராம்மணத்துவம் ஒரு உயர்ந்த நிலை. அதை அடைய முயல வேண்டும். பட்டா எழுதிக் கொடுப்பது போல் யாரும் உயர்ந்த பிராம்மணனாகப் பிறப்பதில்லை. இது அடிப்படை அறிவு.
அந்த உபன்யாசகரை ஆன்மீக விழாக்களுக்கு அழைக்காமல் இருப்பதும், அவரது சிஷ்யர்கள் அவரைப் பகிஷ்காரம் செய்வதும் அவசியம்.
அவருக்கு வேண்டியவர்கள் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பின்வரும் பாசுரங்களை அவரிடம் வாசிக்கக் கொடுக்கலாம் :
அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும் நுமர்களைப் பழிப்பராகில் நொடிப் பொழுதோர் ஆங்கே அவர்கள் தான் புலையர் போலும் அரங்கமா நகருளானே
(‘நான்கு வேதங்களை ஓதிய அந்தணர்களில் தலைவராக இருப்பினும், இழி நிலையில் உள்ள உங்களைப் பழித்து ஒரு சொல் சொன்னாலும் அந்த அந்தணரே புலையராக ஆவார் என்று சொன்னீரே அரங்க மாநகர் அப்பனே’)
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும் வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில் கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே
(‘சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை’)
பால காண்டத்தின் ஆற்றுப் படலத்தில் இரண்டாவது பாடலைக் கவனியுங்கள்.
நீற ணிந்த கடவுள் நிறத்தவான்
ஆற ணிந்து சென் றார்கலி மேய்ந்தகில்
சேற ணிந்த முலைத் திரு மங்கைதன்
வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே.
கோசல நாட்டில் உள்ள மேகம் என்ன செய்கிறது என்பதைக் கம்பர் சொல்வது:
மேகம் செம்மை நிறம் உடையதாக இருக்கிறதாம். அது, திருநீறு அணிந்த சிவபெருமானின் செம்மை நிறத்தைப் போன்று உள்ளதாம். அந்த மேகம், வான் வழியாகச் சென்று கடலை அடைந்து, அதன் நீரை முகர்ந்து கொள்கிறதாம். அவ்வாறு முகர்ந்தபின் அது கருமை நிறம் கொண்டதாக மாறி விடுகிறதாம். அது சந்தனத்தால் ஆன சேற்றைத் தனது தனங்களில் பூசிக்கொண்டுள்ள திருமகளைத் தன் மார்பில் கொண்ட நாராயணனின் நிறத்தை ஒத்திருக்கிறதாம்.
கம்பனின் இந்தப் பாடல் மூலம் கோசல நாட்டில் மழை வளம் மிகுந்து இருந்ததை நாம் உணர முடிகிறது.
ஒரு மேகம் கடலில் இருந்து நீரை முகர்ந்துகொண்டு மழை பொழிவிக்கிறது என்பதை ஆண்டாளும் தன் பாசுரத்தில் சுட்டியுள்ளது நினைவிருக்கலாம்.
‘ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு, முகர்ந்து, கொடார்த்து ஏரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்..’
இந்தப் பாசுரத்தில் ஆண்டாளும் மேகத்தை நாராயணனின் நிறத்துடன் ஒப்பிடுகிறாள். மழை உருவாகும் விதத்தையும் விவரிக்கிறாள்.
அறிவியல் கருத்து மட்டுமின்றி, உவமையும் ஒன்றாக இருப்பதை குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி உள்ள இந்த இரு பாடல்களும் உணர்த்துகின்றன.
அன்னாளைய அறிவியல் அறிவு கவிஞர்களுக்கும் கூட இருந்ததை இதனால் உணர முடிகிறது.
அது மட்டும் அல்லாமல், கவிஞர்கள் மனதில் இயற்கை நிகழ்வுகளில் கூட கடவுளர்களே தென்பட்டுள்ளது தெரிகிறது.
பாரதிதாசன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழு கடல் அவள் வண்ணமடா’ என்று உலகம் முழுவதும் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறான். பாரதி இன்னும் ஒரு படி மேலே சென்று ‘ தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா’ என்று தீயின் சூட்டிலும் இறை நிலையைக் காண்கிறான். இயற்கையும் தானும் ஒன்று என்று உணர்ந்த பரிபூரண அத்வைத நிலை இது.
இப்படியான மஹான்கள் நடந்து சென்ற மண் நம்முடைய பாரத மண் என்பதை நினைக்கையில் எழும் உணர்வெழுச்சிக்கு எல்லை உண்டோ ?
விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன்.
சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் தேரழுந்தூர் கம்பர் மேடு குறித்து ஓர் காணொளி வெளியிட்டிருந்தேன். கம்பர் மேட்டின் தற்போதைய நிலை, மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம், மாநில அரசு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த அளித்துள்ள கோடிகள், தமிழகத்தில் தமிழ் வாழ்ந்த, தேரழுந்தூரில் உள்ள கம்பர் வாழ்ந்த கம்பர் மேடு பகுதியின் சீரழிந்த நிலை என்று பலதையும் சொல்லி வருத்தப்பட்டிருந்தேன்.
நண்பர் கண்ணன் சேஷாத்ரி உடனே தொடர்பு கொண்டார். ‘இந்த ஆண்டு கம்பர் விழா செய்யலாமா, என்ன செய்யணும்?’ என்று கேட்டார். பெரும் பொருட்செலவு ஆகும் விஷயம் அது என்று அறிந்திருந்தேன். ஆதலால் சற்று தயக்கத்துடன் ‘பண்ணலாம். ஆனா..’ என்று பின்வாங்கிப் பேசியிருந்தேன்.
கண்ணன் புதுக்கோட்டை கம்பன் கழகத்தைத் தொடர்புகொண்டார். அதன் செயலர் திரு.சம்பத்குமார் அவர்கள் தேரழுந்தூர் கம்பர் கழகத்தின் ஜானகிராமனைத் தொடர்புகொண்டு இரு கழகங்களும் இணைந்து விழா செய்யலாமா என்று ஆராய்ந்தார்.
பின்னர் சம்பத்குமார், கண்ணன், பாரதி ( புதுகை கம்பன் கழகக் கூடுதல் செயலாளர் ) மூவரும் என்னுடன் கான்ஃபரன்ஸ் முறையில் பேசினர். ‘உங்க காணொளி பார்த்தேன். நீங்க என்ன செய்யணும்னு நினைக்கறீங்க?’ என்று வெளிப்படையாகவே கேட்டார் சம்பத்குமார்.
திடீரென்று 2023 ஜனவரி 7,8 வார இறுதி விடுமுறையில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.
பின்னர் பல தொலைபேசி காஃபரன்ஸ்கள். ஒருமுறை தேரழுந்தூர் சென்று இடங்களைப் பார்வையிடலாம் என்று முடிவானது. ஆனால், இரு பெரும் புயல்கள் வந்தன. பயணம் ஒத்திப்போடப்பட்டது.
நவம்பர் மாத இறுதியில் சம்பத்குமார் மற்றும் பாரதியுடன் தேரழுந்தூர் சென்றேன். கம்பர் மேடு, கம்பர் கோட்டம் முதலியனவற்றைக் கண்டு விழா எவ்விடத்தில், எங்ஙனம் நடத்துவது என்று எங்கள் வீட்டில் சந்தித்துப் பேசினோம். ஜானகிராமன் ஊரில் பெரிய விழா நடத்துவதில் உள்ள நிதர்சனச் சிக்கல்களைத் தெரியப்படுத்தினார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்கராசன் இருந்து ஆலோசனைகளை வழங்கினார். மயிலாடுதுறை தருமையாதீனக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் திருமது. முத்துலட்சுமி அவர்கள் கிராமத்தில் நடத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்களைச் சொல்லி நெறிப்படுத்தினார்.
பின்னர் விழா வேலைகள் மும்முரமாகத் துவங்கின. வாட்ஸாப் குழு துவங்கப்பட்டு, நாங்கள் ஐவரும் அடிக்கடி கலந்துரையாடினோம்.
யார் யாருக்கு என்னென்ன வேலைகள் என்பதைப் பகிர்ந்து கொண்டோம். என்னென்ன நிகழ்வுகள் இருக்க வேண்டும், அவற்றிற்குத் தகுதியானவர்கள் யாவர் என்பதைப் பலமுறை பேசி முடிவெடுத்தோம்.
நாங்கள் தேர்வு செய்த சிலர் வரமுடியாமல் ஆனதால் அழைப்பிதழ் அச்சடிக்கும் வேலை தடைப்பட்டது. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், வேலைகள் ஸ்தம்பித்தன.
அதே நேரம் சம்பத்குமார் அவர்கள் அயராமல் பணியாற்றி, மாற்றுப் பேச்சாளர்கள், விருந்தினர்கள் என்று கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதற்கிடையில் பணிச்சுமை, உறவினர் உடல் நலக் குறைவு என்று பல சிக்கல்கள்.
சிங்கப்பூரில் இருந்து ஜோதி மாணிக்கவாசகம், தி.ரா. வரதராஜன், கண்ணன், ராஜா ராமச்சந்திரன், அமெரிக்காவில் இருந்து கிருஷ்ணன் சேஷசாயி, சென்னை டிரேடிங் ராமமூர்த்தி, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் மற்றும் ‘கம்பன் பாக்களின் அடிமை’ என்று மட்டுமே தன்னைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கொடையாளர் உட்பட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். தேரழுந்தூர், மயிலாடுதுறை சார்ந்த பலரும் கொடையளித்துள்ளனர். நாஞ்சில் பாலு அவர்களின் பேருதவி மற்றும் உழைப்பு அளவிடற்கரியது.
ஜனவரி 5ம் தேதி அன்றே நான் கிளம்பித் தேரழுந்தூர் சென்றூவிட்டேன். களத்தில் ஜானகிராமன் அயராது ஓடிக்கொண்டிருந்தார். பஞ்சாயத்து ஒன்றியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மண்டப அலங்காரங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என்று அவர் பம்பரம் தோற்கும் விதமாகச் சுழன்று வேலை செய்துகொண்டிருந்தார்.
எல்லாவற்றின் பலனாக, முதல் நாள், ஜனவரி 7, ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பர் மூர்த்தி முன் ஒரு வழிபாட்டுடன் துவங்கியது. கோ பூஜையுடன் கம்ப ராமாயண நூல்களின் ஊர்வலமும் நடந்தேறியது. அதற்கு முன்னர் கம்பர் மேட்டில் சிறிய அளவிலான அஞ்சலி செய்தோம்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சுரேஷ் குமார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுவை முன்னாள் சபா நாயகர் சிவக்கொழுந்து, பேச்சாளர்கள் ஜடாயு, மை.பா.நாராயணன், முனைவர். கலியபெருமாள், ரா.சம்பத்குமார், புதுகை பாரதி, முத்துலட்சுமி பாலு, திருச்சி ரா. மாது, ஶ்ரீ.உ.வே. கோஸகன் பட்டாச்சாரியார், திரு.சிவகுமார் , பத்மா மோஹன்என்று பல அருமையான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்று இரண்டு நாட்களும் வெகு விமரிசையாகக் கம்பன் தன் ஊரில் திளைத்து மகிழ்ந்தான்.
தினமலர் நாளிதழ் நிகழ்வுகள் அனைத்தையும் இரண்டு நாட்களும் வெளியிட்டது. மெட்ராஸ்மிக்ஸ்சர் என்னும் நிறுவனம் நிகழ்வுகள் அனைத்தையும் பதிந்துள்ளது. விரைவில் காணொளியாகக் கிடைக்கும்.
விழாவில் தேரழுந்தூர் கம்பர் கழகத்துடன், புதுக்கோட்டை, புதுச்சேரி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருச்சி, சென்னை கம்பன் கழகங்கள் பங்கேற்று, விழா சிறப்பாக நடந்தேறியது.
மாயூரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் இந்தப் பதிவை எழுதுகிறேன். நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. ஆனால், நிகழ்வு உண்மை என்பதால் கம்பன் வானுலகில் இருந்து அருள் புரிந்துள்ளான் என்பதை உணர முடிகிறது.
விழா தொடர்பான காணொலி தயாரானவுடன் வெளியிடுகிறேன்.
விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன். அந்தப் படம் இதோ:
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு.
வறுமை, கல்வி இன்மை, வேலை இல்லாத் திண்டாட்டம், அனைவருக்கும் கல்வி, பெண் சிசுக்கொலை, தீண்டாமை, சாதி அரசியல் என்று எந்தப் பிற்போக்கு அம்சங்களும் இல்லாத ஒரு சம தர்ம சமூகமாக மாறி விட்டோம்.
ஆகவே, ‘Consent Age’ பற்றிக் கவலைப்படுகிறோம். ‘Consent Age’ என்றால் ‘உடல் ரீதியான உறவுக்கான வயது’ என்று கொள்ளலாம். இணக்க வயது என்பது சரியாக இருக்குமோ ?
‘Consent Age’ குறைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்கிறது.
பெண்கள் 18 வயதுக்குப் பிறகு தான் Consent சாத்தியம் என்று POSCO சட்டம் சொல்கிறது. அந்தச் சட்டத்தில் அதற்கான வயதை 16ல் இருந்து 18 ஆக உயர்த்தியுள்ளார்கள். இது தவறு என்கிறது உச்ச நீதி மன்றம். ஏனெனில், POSCO சட்ட வழக்குகளில், பையனுக்கும் பெண்ணுக்கும் காதல் என்று தெரிவதால் வழக்குகள் தள்ளுபடியாகின்றன என்கிறது நீதி மன்றம்.
இது உண்மைதான்.
ஆனால், கிராமப்புறங்களில் ஆண் ஆதிக்க சமூகப் பழக்கங்கள் இன்னமும் நிலவும் சூழல்களில், இணக்க வயது வராத பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை தானே ? அந்தக் குழந்தைகளை அரசு + நீதிமன்றம் பாதுகாக்க வேண்டாமா ? அவர்களுக்கான வரப்பிரசாதமாக POSCO சட்டம் உள்ளது.
நகர்ப்புறப் பள்ளிகளில் கூட பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைகள் நடைபெறுகின்றன. அவற்றில் இருந்தும் ஒரு பாதுகாப்பாகவே இந்தச் சட்டம் உள்ளது.
இணக்க வயதை 16ஆகக் குறைத்தால், குற்றம் இழைப்போருக்கு இது ஒரு பெரும் வசதியாகப் போய்விடும். தவறையும் செய்துவிட்டு, குழந்தைகளை மிரட்டி, ‘இணக்கத்தோடுதான் உடன்பட்டேன்’ என்று சொல்லச் செய்வது சுலபம்.
எனவே, இந்தப் போலி முற்போக்குப் பாசாங்குகள் எதுவும் இல்லாமல், இந்தச் சட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் கடுமையாக அமல் படுத்தப் பட வேண்டும்.
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாம் மிகவும் ‘முன்னேறிய’ சமூகமாக நம்மைப் பாவித்துக்கொள்ளப் போகிறோம் ? இந்த முற்போக்கு போன்ற போலி பாவனை ன் சமூக அசிங்கம் போல வேறொன்று இல்லை.
ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே.
ஐயங்கார் கதைகள், ஐயங்கார் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவே. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்த இடத்தை விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ நிரப்புகிறது.
படிமங்கள், நிலைகள், குழப்பங்கள், குறியீடுகள், மிகை எழுத்துகள் என்று எதுவும் இல்லாமல், நேரடிக் கதை சொல்லல் ஆசிரியரின் பலம்.
ஆலமரம் – நாவல்
மாங்கொல்லை என்னும் தஞ்சை கிராம ஐயங்கார் மிராசுதார் குடும்பம், சுமார் 120 ஆண்டுகளில், வந்து நிற்கும் இடத்தைப் பற்றியதே இந்த நாவல். மிராசு சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகித் தெறித்து விழ, தெறித்த ஒவ்வொரு துளியும் எங்கே என்ன செய்தது என்பதே கதை. ‘Period Novel’ என்னும் சட்டகத்துக்குள் வரும் இந்த நீண்ட நெடிய 957 பக்க நாவல், சில இடங்களில் ஆழ்ந்து, மெதுவாகவும், பல இடங்களில் ஓட்டப்பந்தயம் போலவும் ஓடி நிற்கிறது.
தஞ்சை கிராம பிராமண மிராசுகளின் வாரிசுகள் மேற்கொண்ட இடப்பெயர்வுகள அன்னாளைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்டுக் காட்டப்படுகின்றன. நாவல் முழுவதும் தஞ்சை – சென்னை, சென்னை – தில்லி, சென்னை – அமெரிக்கா என்று மக்கள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் கண்கூடாகக் காணும் ஒன்றுதான் என்றாலும், இலக்கிய வடிவில் ஆவணப்படுத்தல் போல் உள்ள இந்த நாவல் பிராமண இடப்பெயர்வைச் சுட்டும் முறையில் முதன்மையானது.
தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் வைணவ பிராமணர்களும், ஸ்மார்த்த பிராமணர்களும் கல்வியைப் பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்க்கையில் மேலேறிச் செல்வது நாம் பலரது வாழ்விலும் கண்ட ஒன்றுதான். அது நாவலில் கண்கூடாகக் காட்டப்படுகிறது. மிராசு வாரிசுகள் கல்வி இல்லாமல் அழிவதும் அல்லது வாழ்க்கையில் முன்னேறாமல் தத்தளிப்பதும், அவ்வாறு கல்வியைப் பற்றிக் கொண்டவர்கள் மேலேறிச் செல்வதும் நாவலில் மட்டும் அல்லாமல் யதார்த்த வாழ்விலும் நிகழும் உண்மைகள்.
கல்வி இல்லாத செல்வம் தரும் அழிவை வாசு பாத்திரமும், செல்வத்துடன் கூடிய நல்ல கல்வி தரும் மேன்மையை மைதிலி பாத்திரமும் சுட்டுகின்றன.
பாரத விடுதலைப் போர் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. போராட்டத் தியாகிகளுக்கு தமிழ் வைஷ்ணவக் குடும்பங்களில் இருந்த / இல்லாத மரியாதையும் நமக்குத் தெரிவிக்கிறது நாவல்.
ஐயங்கார் விஷயங்கள் பலதும் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளன. நான்கு முறை சேவிக்கும் வடகலை ஐயங்கார் வழக்கம், ஒரு முறை / இரண்டு முறைகள் சேவிக்கும் தென்கலை ஐயங்கார் வக்கம், பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சங்கு-சக்கர தீட்சை முறை, அதைப் பெற்றவர்கள் மட்டுமே திவசம் முதலிய தினங்களில் தளிகை பண்ண அனுமதிக்கப்படும் பண்பாடு, ஐயங்கார் இல்லங்களில் தளிகை பண்ணப்படும் பக்ஷணங்கள், சாத்துமுது ( ரஸம் ) வகைகள் என்று நாவல் முழுவதும் இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றன.
ஊரின் காவல் தெய்வத்தின் பரிவார தேவதாந்திரம் (வீரன்) ஒன்றின் சிலையை வீட்டின் பின் வைத்த நிகழ்வுடன் துவங்கும் நாவல், முடிவதும் அந்தத் தேவதையின் இடத்தில் தான். இந்த முறை நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. காவல் தெய்வங்களுக்கு வைஷ்ணவ இல்லங்களில், வழக்கங்களில் இடம் இல்லாமை சுட்டப்படுவது அருமை. சமாஸ்ரயணம் பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திர வழிபாட்டில் ஈடுபடாமல் இருப்பது இன்றும் தொடரும் வழக்கமே.
கல்விப் புலன் அதிகம் உள்ள பாத்திரங்கள் வந்து சென்றாலும், அவர்களிடம் தத்துவப் பார்வைகள் முற்றிலும் இல்லாமல் இருப்பது ஒரு வியப்பே. சித்தாந்தக் கலந்துரையாடல்கள் துளிக்கூட இல்லாமல் அக்கால வைஷ்ணவ மிராசுக் குடும்பங்கள் வாழ்ந்துள்ளன என்பது சிறு நெருடலே. ஆனாலும், படிப்பறிவு அதிகம் இல்லாத மிராசுகளுக்கும் அவர்தம் மனைவிகளுக்கும் சித்தாந்தம் தெரியாமல் இருக்கவே வாய்ப்புண்டு என்றும் எண்ணிக்கொள்ளலாம்.
மிராசுகள் தம் மனைவியரை விட்டு, தஞ்சாவூரில் பரத்தை மகளிர் சகவாசம் கொள்வதும் நாவல் மூலம் அறிகிறோம். அக்கால சமூக ஒழுக்கங்களில் ஒன்றாகவே இது சொல்லப்பட்டாலும், அது தொடர்பான ஒரு தலைக்குனிவு இருந்ததையும் நாவல் காட்டுகிறது. அக்காலப் பெண்கள் கணவர்களிடம் அடிபடுவது அமோகமாக நடக்கிறது. அது ஏதோ சாதாரணமான ஒரு நிகழ்வாகச் சொல்லப்படுகிறது என்றாலும், தற்காலத்தில் அம்மாதிரியான சித்திரத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாக உள்ளது.
யாரும் வசிக்காத பெரிய வீட்டை சம்ஸ்க்ருத பாடசாலைக்கு எழுதி வைக்கலாம் என்று வரும் ஒரு கட்டம், சுஜாதாவின் ‘கு.சி. பாடசாலை’ விஷயத்தை நினைவுபடுத்துகிறது. விறகு அடுப்பில் தளிகை பண்ணிக் கொண்டிருந்த குடும்பம் குமுட்டி அடுப்பிற்கு முன்னேறி, இறுதியில் காஸ் அடுப்பிற்கு வந்ததையும் நாவல் சுட்டுகிறது.
சுமார் பதினைந்து பேரின் மரணத்தை ஆவணப்படுத்தும் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நீண்டதொரு மௌனமே மிஞ்சியது.
வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதை என்று ஒரு சொல்லாடலில் கடந்து செல்லலாம் என்றாலும், இந்த நாவல் தமிழ்ச் சூழலில் வேறு யாரும் தொட்டுப் பார்க்காத ஒரு சரடைப் பிடித்து செல்கிறது. ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே.
தமிழகத்தில் அதிகம் அறியப்படாத நாவலாக ‘ஆலமரம்’ திகழ்வது தற்காலக் கீழ்மைகளில் ஒன்று என்று கடந்துசெல்ல வேண்டியது தான்.
‘நமக்கு தென்னாசிய அரிஸ்டட்டிலும், பேரறிஞர் தம்பியும் கத்துக்குடுத்த சமூக நீதி அரிச்சுவடி பிரகாரம், நாம முர்முவுக்குத் தானே ஓட்டு போடணும் ? ஆனா, ஆதிக்க சாதிக்காரருக்கு ஓட்டுப் போட வெச்சு, அதுக்கப்புறமும் ‘சமூக நீதி காத்த நொண்ணை’, ‘திராவிட மாடல் சாம்பார்’நு நாம தொடர்ந்து கொழம்பறமாதிரி வெச்சுட்டாரு பாருங்க.. அதச் சொன்னேன்’
‘இதுல கொழம்ப என்ன இருக்கு? பிராமணர்கள ஒழிக்கணும்னு சொன்னபடியே ராஜாஜி கால்ல விழுந்து ஓட்டு வாங்கினோம். பட்டியல் இனத்தக் காப்போம்னு சொல்லியே பிராமண இந்திரா காந்திய ஆதரிச்சோம். ஹிந்தி ஒழிகன்னு சொல்லி, நாம நடத்தற ஸ்கூல்கள்ல ஹிந்தி சொல்லிக்குடுத்து டப்பு பார்த்தோம். பண்டாரப் பரதேசிகள்னு சொல்லிட்டு வாய் உலர்றதுக்குள்ள பாஜகவோட 99ல கூட்டணி வெச்சோம். 2003ல மோதி நல்லவர்னு தலைவர் சொல்லி பேட்டியெல்லாம் குடுத்தாரு. ஆனா இப்ப மோதிய எதிர்க்கறோம். இதுல நமக்குக் கொழப்பமே இல்லியே..
காங்கிரசோட ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு சொன்னாரு தலைவரு. கூடா நட்பு கேடாய் முடிந்ததுன்னு சொன்னாரு. ஒடனே கூட்டணியும் வெச்சுக்கல்லியா ? கொஞ்சமாவது பகுத்தறிவோட யோசிப்பா..கொழப்பமாம் கொழப்பம்.
ஒண்ணும்மில்லையா, முரசொலி மாறன் ஆஸ்பத்திரிலயே இருந்த வரைக்கும், செலவப் பார்த்துக்கிட்டு பாஜகவோட கூட்டணில இருந்தோம். அவர் காலமான ஒடனே காங்கிரசோட போகல்லியா.. கட்சிக்கே கொழப்பம் இல்லியே, நீ ஏன் கொழம்பற?’
‘என்ன இருந்தாலும் முர்மு பட்டியல் பழங்குடிப் பெண். அவங்கள எதிர்த்து, உயர்சாதி மேட்டுக்குடி முன்னாள் பாஜகவுக்கு ஓட்டுப் போடும் படி செஞ்சுட்டாரே மோதி, அதையும் நாம சுயமரியாதை இல்லாம ஃபாலோ பண்றோமேன்னு கொஞ்சம் நெருடலா இருக்கு..’
‘அட போப்பா. பெட்ரோல ஜி.எஸ்.டி.ல கொண்டு வரணும்னு நம்ப எம்பி சொல்றாரு. கொண்டு வரக் கூடாதுன்னு நம்ம அமைச்சர் சொல்றாரு. ரெண்டு பேரும் ஒரே கட்சி தானே? ரெண்டு பேரும் சந்திச்சுக்கும் போது நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டு போகல்லியா? பொழப்பு நடக்கணும்னா இதுல மானம் எல்லாம் பார்க்கக் கூடாது. முன்ன ஒண்ணு சொல்லணும். பின்ன அதையே எதிர்க்கணும். ரெண்டுமே தெரியாத மாதிரியே ஓட்டிடணும்.. புரியுதா?’
‘நீங்க தலைவருங்க.. முன்ன பின்ன இருக்கலாம். ஆனா, நாங்க தொண்டனுங்க இல்லியா? ஊர்ல ஒரு பயலும் மதிக்க மாட்றான்..’
‘இதப்பாரு.. அக்கா என்ன சொல்லிச்சி? நாங்க ஆட்சிக்கி வந்தா எங்க ஆளுங்க நடத்தற சாராய ஆலைய முடுவோம்னிச்சா ? ஆனா மூடினோமா? இப்ப கேட்டா நமுட்டு சிரிப்பு, பொறவு ஒரு வணக்கம். அப்டியே ஓட்டம். அது மட்டுமா? ஆட்சிக்கு வந்த ஒடனே சீட்டுல ஒக்காரறதுக்கு முன்னாடி டாஸ்மாக் ஒழிப்பு ஃபைலுல கையெழுத்துன்னு சொன்னோம். செஞ்சமா ? அதால, ரொம்ப பதட்டப்படாம இதெல்லாம் கடந்து போகும்னு பேரறிஞர் தம்பி சொன்னாருன்னு நெனைச்சுகினு போயிடு..புரியுதா ? ‘
‘புரியற மாதிரி இருக்கு.. ஆனா, வீட்டுக்காரி கூட எளக்காரமா பாக்குறா.. அதான்..’
‘இதுக்கெல்லாம் நம்ம நியூஸ்காரங்களப் பார்த்துக்கோ.. அவங்க நிம்மதியா சாப்புட்டு தூங்கல ? ஸ்டெர்லைட் விஷயத்துல மக்கள் அதிகாரம் குரூப்ப ஆதரிச்சு எழுதினாங்க, பேசினாங்க. ஏன்? அப்ப நாம ஆட்சில இல்ல. இப்ப கள்ளக்குறிச்சி விஷயத்துல அதே குரூப்புக்கு பங்கு இருக்குன்னு போலீஸ் சொல்லுது. இப்ப காதுல விழாத மாதிரி நிக்கல அவங்கள்ளாம். ஏன்? ரெண்டுக்கும் சோறு கெடைக்கறது ஒரே எடத்துல தான். அதால கம்முனு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இல்லாத மானம், ரோஷம் ஒனக்கு வந்திரிச்சா ? எதாவது கட்சி மாறிட்டியா என்ன?’
‘இல்லீங்க, அவங்கள்ளாம் படிச்சவங்க.. மானம் ரோசம் எல்லாம் பார்த்தா பொழப்பு நடக்குமா? ஆனா நான் அப்டி இல்லியே..’
‘இதுக்குதான் நாலு எளுத்து படின்னு சொல்றது. புரியிதா ஏன் படி படின்னு சொல்றாங்கன்னு? இந்த மாதிரி கொழம்பாம இருக்கறதுக்கு தான் எழுதப் படிக்கச் சொல்றாங்க..இது தான் #திராவிடமாடல். புரியுதா?’
‘ஒண்ணு மட்டும் புரியுதுங்க.. சின்ஹாவோ முர்முவோ, யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரு சங்கிக்கு மட்டுமே ஓட்டு போடறது நம்ம தலை எழுத்தா ஆயிடுச்சி பார்த்தீங்களா? இது என்ன மாடலா இருக்குமுங்க?’- ஆமருவி (www,amaruvi,in)
மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன.
ரொம்ப பேச வேண்டாம். கோவில் பாழாகியுள்ளது என்றாலே அது தமிழக அரசின் இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் வரும் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆகவே செய்திகளை மட்டும் தருகிறேன். கோபதாபங்கள், உணர்ச்சிப் பீறிடல்கள் என்று எதுவும் பலனில்லை. முடிந்தால் ஏதாவது செய்யலாம். இல்லையெனில் இருப்பதைப் பற்றி எழுதி, மக்களிடம் கொண்டு சேர்த்து அடுத்த கோவில் பற்றி எழுதலாம். தற்காலத்தில் அவ்வளவு தான் முடிகிறது.
பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக அற நிலையத்துறையின் கவனத்துக்குக் கொண்டு வர நான் பட்ட பாடுகள் நானே அறிவேன். எத்தனையோ ஊடகப் பிரிவுகளில் சென்று கேட்டுவிட்டேன். ஹிந்துத்துவ ஊடக வெளிகள் என்று அறியப்படுபவையும் மௌனம் சாதித்தன. ‘யாத்ரிகன்’ என்னும் யூ-டியூப் ஒளிவழி மட்டும் செவி சாய்த்தது. ஆனால், ஹிந்து தர்மத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் ‘தி ஹிந்து’ நாளிதழ் அக்கோவில் பற்றிய என் கட்டுரையை வெளியிட்டது. பின்னர் தற்போது அறம் நிலையாத் துறை ஏதோ செயலாற்றி வருகிறது. கோவில் புனரமைப்பு குறித்த ஆரம்ப கட்ட திட்டமிடல் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஒவ்வொரு முறை வேலைகள் நிற்கும் போதும், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் செல்வாக்குள்ள பெரியவர்களைக் கொண்டு பரிந்துரைக்க வேண்டியுள்ளது. இது பெரும் மனத்தளர்வை ஏற்படுத்துகிறது.
எனவே, பாபு ராயன் பேட்டை கோவில் தவிர மற்ற கோவில்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடலாம் என்று முடிவு செய்து, மற்றுமொரு பாழ்பட்ட பண்டைய கோவில் குறித்து எழுதுகிறேன்.
இந்த முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலசோழங்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில். வழக்கம் போல் பாழ். கேட்பாரற்ற நிலை. மேற்பார்வை இந்து சமய அறம் நிலையாத் துறை.
பதினைந்து ஆண்டுகளாகக் கோவில் பூட்டிக்கிடந்துள்ளது. தற்சமயம் கோவிலைத் திறந்து பார்த்ததில் தாயார் மூலவர் திருமேனி பின்னம் அடைந்துள்ளது தெரிந்தது. தாயாருக்குத் தனி சன்னிதியே உள்ள நிலையில், தாயார் பின்னம் அடைந்தது பெரிய அப-சகுனமாகத் தோன்றவே, பம்பாயைச் சேர்ந்த வெங்கடேசன் என்பார் கோவிலைப் புனருத்தாரணம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்காகக் கோவிலில் உழவாரப் பணி செய்த போது ஐந்து மூட்டைகள் அளவிற்குக் காலி மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. செடிகொடிகள் என்று அனைத்தையும் தன் செலவில் நீக்கியுள்ள் வெங்கடேசன் மற்றும் ஊர்ப் பெரியவர்கள், தாயார் திருமேனி வேண்டும் என்பதற்காக மஹாபலிபுரத்தில் ஒரு சிற்பக் கூடத்தில் செய்யச் சொல்லியுள்ளார்கள்.
திருமேனி தயாராக உள்ளது. ஆனால், புதிய திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய அறம் நிலையாத் துறை அலைக்கழித்து வருகிறது. திருவண்ணாமலை போளூர் / கலசப்பாக்கம் ( வந்தவாசி) பகுதி செயல் அலுவலர் இதற்கான மனுவைச் சென்னை அறம் நிலையாத் துறைக்கு அனுப்ப வேண்டும். அனுப்பியுள்ளார்களா என்று தெரியவில்லை. திருமேனி தயாராக இருந்தாலும் பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் பக்தர்கள்.
கோவில் பழமையானது. ஊரில், 1400 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால், கோவிலின் உண்மையான வயது தெரியவில்லை. சோழன் பெயரில் உள்ள ஊரில் உள்ளதால் சோழர் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தது எண்ணூறு ஆண்டுகளாவது பழமையாக இருக்க வேண்டும் என்பது கோவிலில் சிற்பங்கள், சன்னிதிகளைக் காணும் போது தெரிகிறது.
கோவிலுக்கு சுமார் 15 ஏக்கர் அளவில் நிலங்கள் இருந்துள்ளன. கடந்த காலத்தைக் கவனிக்கவும். மேலும் நிலங்கள் இருந்திருக்கலாம். தற்போது எங்கே என்று தெரியவில்லை. அரசிடம் தகவல்கள் இருக்கும். யாரேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெறலாம். கோவிலுக்குத் தெப்பக் குளமும் இருந்துள்ளது. கவனிக்க: இருந்துள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு போக கொஞ்சம் குளமும் உள்ளது.
ஊர்க்காரர்கள் சொன்னது: “ஶ்ரீமத் இராமானுசர் திருமேனியின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது. மது அருந்திய நிலையில் காலிகள் போட்ட ஆட்டம் இது. தாயாரின் திருமேனி பின்னமும் இவர்களாலேயே தான்.” இராமானுசரது திருமேனி இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. அருகில் உள்ள கல்லூரியின் பேருந்துகள் நிற்கும் இடமாகவும், ஓட்டுநர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் கோவில் வளாகம் இருந்துள்ளது. இந்து சமய அறம் நிலையாத் துறை தனது கோவில்களைக் காக்கும் அழகு இது தான்.
தாயார் சன்னிதியில் அசைவ உணவும் மதுவும் கூடிய கூட்டுக் களிகள் நடந்துள்ளன என்றால் நம்புவீர்களா?
மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன. கோவிலை மக்கள் மதுபானக் குப்பிகளின் கிடங்காகப் பயன்படுத்தும் நிலையில் அரசுகள் மக்களை வைத்துள்ளன. வேதம் நிறைந்த தமிழ் நாடு, கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று பாரதி சொல்வான். பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்வோம் என்றான். நாமோ கோவில் தலத்தை மதுக் குப்பிக் கிடங்காக்கியுள்ளோம். அவன் இன்றிருந்தால் பேனாவால் தன் கண்களைக் குத்திக் கொண்டு மாய்ந்திருப்பான்.
பிற மத மன்னர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை ஹிந்துக் கோவில்களை இடித்துக் கட்டியுள்ளனர் என்பது எவ்வளவு உண்மையோ, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளும் தங்களது அலட்சியத்தினால் நமது பண்பாட்டை அழித்து வருகின்றனர் என்பதும் அதே அளவு உண்மை.
பக்தர்கள் இணைந்து உழவாரப் பணி செய்து சிறிதளவு பார்க்கும் படி செய்துள்ளார்கள். ஆனால், அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. இந்த ஆண்டு புனரமைக்கப் பட உள்ள 1000 கோவில்களில் இந்தக் கோவிலும் உள்ளது என்று சட்டமன்றத்தில் அ.நி.து.அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மே மாதக் கடைசியில் இருக்கிறோம். இன்னும் ஏழு மாதங்களில் என்ன செய்யப் போகிறார்கள், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். கலசப்பாக்கம் அ.நி.து. அலுவலகத்தில் இருந்து கடிதம் சென்னை அ.நி.து. அலுவலகத்திற்குச் செல்வதற்கே அவ்வளவு காலம் பிடிக்கும் போல் தெரிகிறது.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதாதது ஏன் என்கிற கேள்வி எழலாம். நம் தமிழ் நாட்டு மானம் உலக அளவில் கப்பல் ஏற வேண்டாம் என்கிற கரிசனம் தான் என்பதே என் பதில்.
விருப்பம் உடையவர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் / ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
கோவிலின் நிலை பற்றிய படங்களை இணைக்கிறேன். மேலசோழங்குப்பம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த அவல நிலையைப் பார்த்து அறம் நிலையாத் துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை அதிகாரிகளிடம் / அரசிடம் பேசக்கூடிய பெருமக்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.
கோவில் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் கைங்கர்யத்தில் பங்கு கொள்ளவும் மும்பையில் வசிக்கும் திரு.வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.( +91 – 9 8 3 3 3 8 3 2 2 7 )
பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில், மேலசோழங்குப்பம்
பெருமாள் சன்னிதி மேலசோழங்குப்பம்
தாயார் சன்னிதி
திருப்பணி செய்த ஏதோ ஒரு அரசன், அரசி, மகன்
தூணில் இராமானுசர் ?
மஹா மண்டபத்தின் உள் கூரையில் வேலைப்பாடுகள்
பெருமாள் தாயார் ஆண்டாள் சன்னிதிகள் பின்புறப் பார்வைகல்வெட்டும் உள்ளது.பக்தர்கள் உழவாரப்பணிஉழவாரப் பணிக்கு முன் கோவிலின் நிலைபெருமாள் விமானம் – இன்றைய நிலை
We conducted a detailed temple cleaning activity at Baburayan Pettai Varadaraja Perumal Temple for three days between 05-Feb-2022 and 07-Feb-2022.
The temple is mostly dilapidated. Most of the praharams are under thick weed growth for the last hundred years. The fourth and fifth praharam were impenetrable. We cleared the praharams and found some ancient structures as well.
We didn’t climb atop any structure to clear the growth. They remain as they have been so far. We cleared the outer spaces ( praharams) so that the architects could begin their job of estimation and restoration planning.
Here are some pictures on the temple cleaning (உழவாரப் பணி).
An ancient watch tower or bell tower found in Praharam 5
Ancient light tower unearthed in Praharam 5Praharam 5 after clearing 100 year old bush and weedsPraharam 4 cleared of many decades old bush, weeds and undergrowthTemple well accessible after clearing the weedsPraharam 4 cleared near the old demolished Thayar sannidhi Praharam 5 clearing – yet another viewTemple Madappalli (kitchen) made accessible after clearingDemolished Thayar Sannidhi granite stones Light Tower that came to light in Praharam 5 after clearingGlorious Sunset seen from Praharam 4 – all cleared in the Temple Cleaning exercise Clearing and Levelling between gopuram 1 and 2View from Praharam 4 after clearing the areaRed :Shri.Ramajayam. Orange: Shri.Anbarasu (both stayed at site) Yellow: Reader Sathish and Amaruvi.
சமீபத்தில் அச்சரபாக்கம் அருகில் உள்ள பாபுராயன் பேட்டையில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விஜய வரதராஜப் பெருமாள் கோவிலின் இன்றைய நிலையை நேரில் கண்டு ஆவணப்படுத்தியுள்ளேன்.