விடுதலை – பாகம் – 1 – சினிமா விமர்சனம்

விடுதலை – பாகம் 1 – திரை விமர்சனம். ( வசவுகள் துவங்கலாம் ). குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை.

இதை வாசித்துவிட்டு என்னை வசவுகளால் குளிப்பாட்டலாம். ஆனால், யாராவது சொல்லியாக வேண்டும். நான் சொல்கிறேன்.

விடுதலை என்னும் சினிமாவைப் பற்றி இனிமேல் யாரும் எதுவும் சொல்வதற்கில்லை என்று ஆகிவிட்டது. தமிழில் வந்துள்ள சமூகப் படங்களில் இதைப் போல் ஒன்று இல்லை, சமூக நீதியைப் பறை சாற்றுகிறது, தமிழ் மக்களின் போராட்ட உணர்வைக் காட்டுகிறது, உண்மைக் கதை, தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட பார்வை — இப்படியே பல விமர்சனங்களைக் கண்டேன்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் மேல் பல வகைகளில் கட்டப்பட்ட கதையே விடுதலை என்றும் வாசித்தேன். ஜெயமோகனே இதனைத் தெளிவுபடுத்தினார். ‘கதை மட்டுமே என்னுடையது. மற்றபடி படம் வெற்றிமாறனுடையது மட்டுமே.’ ஜெயமோகனை சங்கி என்றும், பாட்டாளி மக்களின் பகைவன் என்றும் வசைபாடும் கூட்டமும் ‘இது ஜெயமோகனின் படம் இல்லை. அவரது அரசியல் எதுவும் இல்லை. இது தமிழ்ப் பழங்குடிகளின் அழித்தொழிப்பு பற்றிய கதை தான். நல்லவேளை ஜெயமோகன் இதில் இல்லை’ என்று சாட்சியம் அளித்தார்கள்.

கொஞ்சம் குழப்பத்தில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன்.

கொஞ்சம் தமிழர் விடுதலைப் படை, கொஞ்சம் தமிழரசன், கொஞ்சம் வீரப்பன், கொஞ்சம் தமிழ்த் தேசியம், கொஞ்சம் போராட்ட சூழியல், கொஞ்சம் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று கலப்படமாக இருந்தது விடுதலை – பாகம் 1.

எல்லாம் கொஞ்சம் தானா ? இல்லை. அரசாங்க, போலீஸ் எதிர்ப்பு ரொம்ப அதிகம். அளவுக்கு அதிகம். அதுவும் போலீஸ் எதிர்ப்பு, போலீஸ் அராஜகம் என்று வயிற்றைப் பிரட்டும் வரை கொடுத்துள்ளார்கள்.

இவை மட்டும் தானா ? இல்லை. மலைவாழ் பெண்களின் சித்தரிப்பு. எப்போதும் அவர்களிடம் அத்துமீறும் காவல் துறையினர். எப்போதும் அவர்களைக் கற்பழித்துக் கொண்டே இருக்கும் காவல் அதிகாரிகள். எப்போதும் அவர்களை நிர்வாணமாகவே நிற்கவைத்து அடிக்கும் காவல் அதிகாரிகள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை எத்தனையோ குறியீடுகள் மூலம் சொல்லலாம். சினிமா எடுப்பவர்களுக்குக் குறீயீடா தெரியாது ? ஜெய்பீம் படத்தில் பாமகவைச் சுட்டும் விதமாக குரு என்றொரு பாத்திரம், பின்னர் அக்னிக் கலசம். அவ்வளவுதான். அக்கட்சியைச் சொல்லியாகிவிட்டது. பாமக கூட்டம் நடப்பதைப் போல் ஏன் ஒரு காட்சி வைக்கவில்லை ? அதே போல் அசட்டு வக்கீல் ஒருவரைக் காட்ட, பிராமணர் போல் தோற்றம் அளிக்கும் ( உருவம் + மொழி + சிவ நாம உச்சாடனம் ). அப்பாத்திரம் தேவை இல்லாத ஒன்று என்றாலும், பிராமணர்களை எப்படியாவது இழிவு படுத்த வேண்டாமா ? சொருகு ஒரு கேரக்டரை. யார் கேட்கப் போகிறார்கள். அந்தப் பாத்திரக் குறியீடு என்ன ? உயர்குடி வக்கீல்கள் அந்தப் போராட்டத்திற்கு ஊக்கம் அளிக்கவில்லை என்று எப்படிச் சொல்வது ? ஒரு அசட்டு வக்கீல் வைத்தால் போயிற்று.

ஆனால், தலித் மீதான வன்முறை என்றால் கண்டிப்பாக கற்பழிப்பு, வன்கொடுமை காட்டப்பட வேண்டும். அதுவும் அதீத வன்முறையுடன். இவை நடக்கவில்லை என்பதால் அல்ல. இவற்றை இப்படிக் காட்டினால் மட்டுமே தமிழ்ச் சமூகம் நம்பும் என்கிற ஒரு டெம்ப்ளேட் போல்.

பல டெம்பிளேட்கள் உள்ளன. பிராமணன் என்றால் ஸ்திரீ-லோலனாக இருக்க வேண்டும், குயுக்தியுடன் செயல்பட வேண்டும், சிண்டு முடிந்துவிட வேண்டும், பண பலத்திற்கு முன் அடிபணிந்து நிற்க வேண்டும், கெட்ட எண்ணம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். சாதி பார்ப்பவனாக இருந்தே ஆக வேண்டும். இந்த டெம்ப்ளேட் மாறினால் அவன் பிராமணன் ஆகமாட்டான். உதா: தளபதி படத்தில் சாருஹாசன். திரௌபதி படத்தில் பத்திரப் பதிவு அலுவலர். தேவர் மகன் படத்தில் மதன் பாப்.

அதே போல், அதீத வன்முறை காட்டாமல் தலித் விஷயங்கள் பேச முடியாது என்பது சட்டம். ஒன்று கதாபாத்திரம் அதீத கோபத்துடன் இருக்கும். பார்க்கும் எவருடனும் சண்டையிடும். சட்டத்தை மீறும். ஏனெனில், சமூகக் காரணங்கள். கமலஹாசன் சொல்வது போல ‘சமூகக் கோபம்’. Therefore justified. இந்த வன்முறையைக் கையாள, அரசு, காவல்துறை மூலம் அதீத வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும். அதில் குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை. 70 வயதான கவர்னர், தன் பேத்தி வயதுள்ள ஒரு பெண் பத்திரிக்கையாளரைக் கன்னத்தில் தட்டினார் என்பதால் வெகுண்டெழும் மாதர் சங்கங்கள், பெண்ணீய இயக்கங்கள் தலித் பெண்கள் இப்படி காட்டப்படுவதைக் கண்டுகொள்வதில்லை என்பதைக் காட்டிலும் இம்மாதிரியான காட்சிப்படுத்தல்களைச் சிலாகித்துக் கொண்டாடுவது என்ன முற்போக்கோ தெரியவில்லை.

வெற்றிமாறன் கையாளும் உத்தி அருமையானது. கதையை ஒரு நாவலில் / சிறுகதையில் இருந்து எடுப்பார். பின்னர் அனேகமாக அனைத்து விதமான தேச எதிர்ப்புக் குழுக்களின் சொல்லாடல்களையும் சேர்த்துக் கதம்பமாக ஆக்கி, பிழியப் பிழிய அழுது அரற்றி, கோபம் கொப்புளிக்க அரசை எதிர்க்கத் தூண்டும் விதமாக மக்களை உசுப்பேற்ற ஒரு திரைக்கதையை எழுதுவார். இயக்கம் வெகு சிரத்தையாக இருக்கும். காட்சிகள் தத்ரூபமாகவும், குரூர ரசம் சொட்டும் விதமாகவும் இருக்கும். படம் பிய்த்துக் கொண்டு ஓடும்.

ஏய்ப்புகள், சுரண்டல்கள் நடக்கவில்லையா என்று கேட்கலாம் ? அவற்றைக் காட்டக் கூடாதா என்றும் கேட்கலாம். நடந்தன. நடக்கின்றன. காட்ட வேண்டும். ஆனால், எதைக் காட்டுவது ? எப்படிக் காட்டுவது ?

விருமாண்டி திரைப்படத்தில் நாயக்கர் சமூகத்திற்கும் தேவர் சமூகத்திற்கும் பிரச்னை என்பது போல கமலஹாசன் எடுத்திருப்பார். ஆனால், ஒரு முறையாவ்து நாயக்கர் சமூகப் பெண்ணை இம்மாதிரி காண்பித்திருக்க முடியுமா ? இல்லை, தேவர் பெண்ணை ? கதை ஓட்டம் அப்படி இல்லையே எனலாம். ஆனால், இடை நிலை சாதிப் பெண்கள் யாரையாவது இம்மாதிரி நிர்வாணமாக அடி வாங்கி, பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து, கொல்லப்பட்டு என்று காட்டியிருக்கிறார்களா ? அவர்களுக்கு நடக்கவில்லை என்று கருதினால் கூட, அவர்களை அவமானப்படுத்துவது போல் எதையும் செய்ய மாட்டார்கள். ( உண்மையில் தென் மாவட்டங்களில் பிரச்னை தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் தான். ஆனால், அவ்விடத்தில் தலித்துகளைக் காட்ட முடியாது என்பதால் நாயக்கர்களை காட்டினார் கமலஹாசன். ‘கமலின் கலப்படங்கள்’ என்றொரு நூல் உள்ளது. வாசித்துப் பாருங்கள்.)

ஆனால், பட்டியல் இனப் பெண்கள் என்றால், ஆதிவாசிப் பெண்கள் என்றால் பாலியல் வன்கொடுமை, நிர்வாணம், அடிதடி இத்யாதி. உண்மையில் தலித் இயக்கங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இதை எதிர்த்துத்தான் என்பேன். இப்படிக் காட்டுவதால் அரசியல் உரிமைகள், ஆதாயங்கள் உண்டு என்பதால் வாய்மூடி மௌனியாக தலித் இயக்கங்கள் இருந்தால், இதே டெம்பிளேட் கசக்கத் துவங்கும். அளவுக்கு மிஞ்சினால்..diminishng value.

விடுதலை சினிமாவிற்கு வருவோம்.

வெற்றிமாறன் நல்ல கதை சொல்லி. சந்தேகமே இல்லை. இந்தப் படத்தில் இயற்கைக் காட்சிகள் அபாரம். நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட சூரியின் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஒரு நகைச்சுவை நடிகர் இம்மாதிரி நடிக்க முடியும் என்பதை அனுமானித்து, அவரை அந்த வேடத்தை ஏற்கச் சொல்லி நடிக்கவும் வைத்து, பெரும் வெற்றி கண்டுள்ள வெற்றி மாறன் பாராட்டுக்கு உரியவர்.

தமிழர் விடுதலைப் படையின் தமிழரசனின் கதை, கலியபெருமாளின் கதை என்றால் பொன்பரப்பி கிராமத்தில் தமிழரசன் என்ன செய்தார், அவருக்கு என்ன நடந்தது என்பதையும் காட்ட வேண்டும். அத்துடன் மார்க்ஸீய லெனினீய இடது சாரி இயக்கங்களிடையே நடந்த பிரச்னைகள், ஒரு குழுவிற்கு எதிராக மற்றொன்று செயல்பட்டது ஏன், ஈழப் போரை மனதில் கொண்டு இந்த இயக்கங்கள் இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய நோக்கில் சென்று சீரழிந்த கதை என்று முழுவதையும் சொல்ல வேண்டும்.

விடுதலை பாகம் 2 வருகிறது என்கிறார்கள். அதில் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

படத்தின் மற்றுமொரு மைல்கல் – இளையராஜாவின் பாடல் மற்றும் இசை. இசை தேவன் இளையராஜா. வேறென்ன சொல்ல ?

விசும்பில் ஒரு துரும்பு

பூமியில் இருந்து எடுத்த Time Lapse காணொளியின் பின்னணியில் பால் மண்டலம் தெரிகிறது. கார்ல் சேகன் என்னும் அறிவியலாளர் இப்படிச் சொல்கிறார் ‘பூமி என்பது யாது? நினைக்க முடியாத அளவு பெரியதான பிரபஞ்சத்தில், இறந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் நிரந்தரமற்ற ஒளியில் யதேச்சையாக ஒளிரும் சிறு துரும்பு’. 

“The aggregate of our joy and suffering, thousands of confident religions, ideologies, and economic doctrines, every hunter and forager, every hero and coward, every creator and destroyer of civilization, every king and peasant, every young couple in love, every mother and father, hopeful child, inventor and explorer, every teacher of morals, every corrupt politician, every “superstar,” every “supreme leader,” every saint and sinner in the history of our species lived there–on a mote of dust suspended in a sunbeam.”

பூமியே அவ்வளவுதான். அதில் நாடு, ஊர், மொழி, மனிதன் இதெல்லாம் என்ன? ஏற்றத்தாழ்வு, வேற்றுமைகள் இவை எல்லாம் என்ன ஒரு பொருட்படுத்தத் தகாத விஷயங்கள் அன்றோ ?

பூமி மட்டுமில்லை. மற்ற எல்லாமே, நாம் அனைவருமே வெடித்துச் சிதறிய ஏதோ ஒரு நட்சத்திரத்தின் ஒரு துகளின் பிள்ளைகள். ஆக மொத்தம் சாம்பல். அவ்வளவுதான். 

‘ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை, பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே’ என்கிறார் குமரகுருபரர். 

பசு மாட்டின் வாலில் உள்ள ஒரு மயிரின் நுனியை நூறில் ஒரு பங்காக்கி, அதில் ஒரு பங்கை எடுத்து அதிலும் நூறில் ஒரு பங்கை எடுத்து, அதை மனதளவில் நூறாக ஆக்கினால் அதில் உள்ள ஒரு பங்கு அளவே ஆத்மாவின் அளவாகும் என்று அஹோபில படம் 44ம் பட்டம் ஶ்ரீமத் அழகியசிங்கர் தனது உபன்யாசத்தில் சொல்கிறார்.

ஶ்ரீமத் அழகியசிங்கர் சொல்வதையும் கார்ல் சேகன் சொல்வதையும் ஒன்றிணைத்துப் பார்ப்பது புதிய திறப்பைத் தருகிறது. கார்ல் சேகன் சொல்வது ‘spec of dust’ என்னும் துரும்பின் ஒரு சிறு பகுதி. ஆத்மா என்பதன் அளவும் அத்தகையதாகவே இருப்பதாகச் சொல்கிறார் ஜீயர் என்று சிந்தித்துப் பார்த்தால் மனிதன் என்னும் மிகச்சிறிய அல்ப வஸ்துவைக் கண்டு கழிவிரக்கமே தோன்றுகிறது.

ஆக, வேதாந்தமும், அறிவியலும், விஞ்ஞானமும் மெய்ஞானகும் ஒரே விஷயத்தை வேறு வேறு மொழிகளில் சொல்கின்றன. இரண்டு முறைகளுமே மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தின் பிரும்மாண்டத்தையும் பூமி மற்றும் அதில் வாழும் உயிர்களின் மிகச் சிறிய, பொருட்படுத்த முடியாத தன்மையையும் ஒருங்கே கூறி வியக்க வைக்கின்றன.

விஞ்ஞானத்தயோ மெய்ஞானத்தையோ முழுதும் அறிந்தவனால் தான் என்னும் அகம்பாவம் கொள்ளவும், ‘நான் பெரியவன், என் வழியே சிறந்தது’ என்று கொள்ள வழியே இல்லை.

உங்கள் கருத்து என்ன ? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் ?

பால்வெளியைப் பின்புலத்தில் கொண்டு, பூமிச் சுழற்சியைக் காட்டும் ஒரு காணொலி.

தம்பட்டம் 3

ஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.

மாணவர்களே,  பம்பாயில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அங்கு ஜப்பானியக் கம்பெனிக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம்.

எதைப் பார்த்து மென்பொருள் எழுதுவது? Functional Specifications என்று ஒரு ஆவணம் கொடுப்பார்கள். அதில் உள்ள தேவைகளின் படி மென்பொருள் எழுத வேண்டும். ஒரு விஷயம் மட்டுமே கடினமாக இருக்கும். அந்த ஆவணம் ஜப்பானிய மொழியில் இருக்கும்.

ஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.

ஆகவே ஜப்பானிய மொழி பயிலத் துவங்கினேன்.

முழுவதும் பயில இயலவில்லை. ஓரளவிற்கு அடிப்படையாகப் பேச வந்தது. ஜப்பானிய நிறுவனத்தார் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பக்க அளவிற்கு எழுத முடிந்தது ( தவறுகள் இருந்தன என்பது  வேறு விஷயம்).

சில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, ஜப்பான் சென்றேன். அங்கு சாட்சிக்குக் கூட ஆங்கிலம் இல்லை. மேலாளர் ஜப்பானிய மொழியிலேயே பேசுவார். மொழி மாற்றிக் கருவி கொடுத்தார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள். இருந்தாலும் சரளமாகப் பேச முடியவில்லை.

ஜப்பானில் பகுதி நேரமாக சிறு பள்ளியில் சேர்ந்து படித்தேன். 2 மாதங்களில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் தாய்மொழியில் அவர்கள் பேசும் போது அவர்கள் அளவிற்கு என்னால் பேச முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அதிக அளவு புரியத் துவங்கியது.

பணி அழுத்தம் காரணமாக மேலும் ஜப்பானியம் பயில முடியவில்லை. ஆனால், சாதாரணமாகப் பேசும் போது ஜப்பானிய மொழியில் 4 வரிகள் பேசிவிட்டு, அவர்கள் ஆச்சரியம் அடந்தவுடன் ஆங்கிலத்திற்கு மாறுவது என்று ஒரு உத்தியைக் கையாண்டேன். தங்களது மொழியில் அன்னியன் பேச முயல்வதை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவறுகளைத் திருத்தினார்கள். ‘நீ பேசுவது குழந்தை பேசுவது போல் உள்ளது’ என்று சொன்னார்கள். (கொதமோதாச்சி)

ஜப்பானிய மொழி எனக்குத் திறந்துவிட்ட கதவுகள் பல.

தற்போது 12 ஆண்டுகளாக அம்மொழியுடன் தொடர்பில் இல்லை. ஆகையால் தற்போது மொழி என்னைவிட்டு விலகிவிட்டது. மேலோட்டமாகவே புரிகிறது. மீண்டும் பயிலலாமா என்று யோசித்து வருகிறேன். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இலக்கண முறையில் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. யாராவது மொழியியலாளர்கள் ஆராயலாம்.

இதற்கிடையில் சிங்கப்பூரில் சீனம் பயில முயன்று தோற்றேன். கடினமான மொழி. எனக்கு வயதும் ஆகிவிட்டது என்று புரிந்தது.

ஜப்பானியத்தாலும் எனது தமிழறிவு அழியவில்லை. மேலும் மெருகேறியது என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு மொழியும் சிறந்த அனுபவங்களுக்கான கதவே. நாம் தட்ட வேண்டும். உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

அதிகக் கதவுகளைத் தட்டுங்கள். உலகெங்கிலுமிருந்து தென்றல் உங்களைத் தழுவட்டும்.

வாழ்த்துக்கள். #மொழி

பி.கு.: சென்னையில் ஜப்பானிய மொழி பயில ABK AOTS DOSOKAI என்று தேடிப்பாருங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..

ஊழியர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டாலோ, வேறூ ஏதாவது பேசினாலோ முதலில் அவர்கள் பேசும் வார்த்தைகளை உற்று கவனிப்பேன். கொஞ்சம் புரிந்தால் இந்தி, ஒன்றுமே புரியவில்லை என்றால் மராத்தி என்று ஒரு கணக்கு. புரிந்தால் உடைந்த ஹிந்தியில் பேசி, சமாளித்து அனுப்புவேன். புரியவேயில்லை, மராத்தியென்றால் என்ன செய்வது?

மாணவர்களே,

பம்பாயில் வேலைக்குச் சேர்ந்த போது இந்தி பேசினால் ஓரளவு புரியும். எழுதப் படிக்கத் தெரியும்.

Voltasல் பணிமனை(Workshop)ல் முதல் சுற்று. TATA கம்பெனிகளில் அனைத்து பொறியாளர்களும் எல்லாத் துறைகளிலும் சிறிது காலம் பணியாற்ற வேண்டும். மின் பொறியியலாளனான என்னை மின் தூக்கி/ மின் மாற்றி (Transformer/Switchgear) உற்பத்தி செய்யும் பணிமனைக்கு அனுப்பினார்கள்.

பூராவும் மராத்திய தொழிலாளர்கள். சிவ சேனை யூனியன் அங்கத்தினர்கள். தென்னிந்தியா என்றால் அப்போது அவ்வளவாக ஆகாது. இவர்களை நான் மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பணியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக அவர்களுடன் நான் பேசியே ஆக வேண்டும். அங்குள்ள சூபர்வைசர்கள் டிப்ளமா படித்தவர்கள். ஓரளவு ஆங்கிலம் புரியும். பெரும்பாலும் மராத்தி, இந்தி, கொஞ்சம் குஜராத்தி.

ஊழியர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டாலோ, வேறு ஏதாவது பேசினாலோ முதலில் அவர்கள் பேசும் வார்த்தைகளை உற்று கவனிப்பேன். கொஞ்சம் புரிந்தால் இந்தி, ஒன்றுமே புரியவில்லை என்றால் மராத்தி என்று ஒரு கணக்கு. புரிந்தால் உடைந்த ஹிந்தியில் பேசி, சமாளித்து அனுப்புவேன். புரியவேயில்லை, மராத்தியென்றால் என்ன செய்வது?

சூபர்வைசர் சாளுங்கே என்னும் மராத்தியரிடம் சென்று ‘எனக்கு மராத்தி தெரியாது. இந்தியில் சொல்லுங்கள்’ என்பதை மராத்தியில் எப்படிச் சொல்வது என்று கேட்டுக்கொண்டேன். ஆச்சரியம் அவருக்கு. ‘எனக்கு மராத்தி தெரியாது’ என்பதை மராத்தியிலேயே சொன்னதால் ஊழியர்கள் ஆச்சர்யத்துக்குள்ளானார்கள். இந்த வழிமுறை ஊழியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்னொரு உத்தியையும் கையாண்டேன்.

மதிய உணவை ஊழியர்களுடன் சேர்ந்து உண்டேன். மேனேஜர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அங்கெல்லாம் சாதி வேறுபாடு உண்டு. எனக்குக் கவலை இல்லை. ஒரு மாதம் இப்படிச் சென்றது.

ஒரு மாதத்தில் மராத்தியில் அடிக்கடி பயன்படும் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். பயன் படுத்துவதற்கன்று. அவையே அதிகமாகப் புழங்கியவை.

இரண்டு மாதங்களில் ஊழியர்கள் சகஜமாகப் பழகத் துவங்கினார்கள். அடிக்கடி OT – Overtime – கேட்பார்கள். ஓரிரு முறை கொடுப்பேன். பின்னர் மறுக்கத்துவங்கினேன். ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் போது மற்ற ஊழியர்களுடன் அவர்களது பேருந்திலேயே சென்று வந்தேன். முடிந்தவரை மராத்தியிலேயே பேச முயன்றேன். மொழி ஓரளவு கைகூடியது.

மதிய உணவு இடைவேளையில் அவர்களுடன் அமர்ந்து சிவ சேனையின் பத்திரிக்கையான சாம்னா படிக்கத் துவங்கினேன். அப்போது பால் தாக்கரே தலையங்கம் எழுதுவார். பெரும்பாலும் எளிமையாகவே இருக்கும். ஒரு கட்டத்தில் ஊழியர்கள் எனக்காகவென்று சாம்னா எடுத்து வந்தார்கள். நானும் சாம்னா படிக்கிறேன் என்பதால் இன்னமும் ஒன்றிப்போனார்கள்.

வந்த புதிதில் அவர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டது ‘யெ மதராஸி சாப் நஹி, சாம்ப் ஹை’ ( இவன் மதராசி ஆபீசர் இல்லை, மதராசிப் பாம்பு). அதே ஊழியர்கள் 2-3 மாதங்களில் சொன்னது ‘இக்கட யே மதராஸி சாஹேப். துமி அத்த மராதி மானுஸ் ஆஹெ. துமி ஃக்த பஸா. அமி காம் கர்தோ, துமி பகா’  ( இங்க வாங்க மதராசி ஆபீசர். இப்ப நீங்க மராத்தி மனிதர், சகோதரர், இங்க வெறுமெனே உக்காருங்க, நாங்க வேலை செய்யறோம், நீங்க பாருங்க’ ).

இத்தனைக்கும் நான் அவர்களுக்கு ஒன்றும் அதிகப்படியாகச் செய்யவில்லை. அவர்களின் மொழியைப் படித்தேன். அவ்வளவு தான்.

இரண்டு ஊழியர்கள் மிகவும் நெருக்கமானார்கள். தங்கள் வீடுகளின் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள். அதில் ஒருவர் பின்னாளில் சிவசேனை சார்பில் ஏதோ அரசுப் பதவியும் பெற்றார் என்று தெரிந்துகொண்டேன்.

6 மாதங்களில் வேறு பணிமனைக்கு மாற்றினார்கள். ஊழியர்கள் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.

சிவசேனை அலுவலகங்கள் (ஷாகா) எனப்டும். அனேகமாக பேட்டைக்கு இரண்டு இருக்கும். விடுமுறை நாட்களில் அங்கும் சென்று பேச்சுக் கொடுப்பேன் – மொழியறிவு பெற வேண்டி. ‘மி நாதுராம் கோட்ஸே போதோயே’ என்ற மராத்திய நாடகம் பார்த்தேன். பிரமிப்பு தான். தமிழ் நாடகம் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.

நான் பம்பாயில் பணியாற்றியது மூன்றாண்டுகளே. இந்தி சரளமாகவும், மராத்தி சமாளிக்கக் கூடிய அளவிலும், குஜராத்தி ரொம்பவும் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடிய அளவிலும் கற்றுக் கொண்டேன். தற்போது குஜராத்தி மறந்துவிட்டது. ஆனாலும் மராத்தி நினைவில் உள்ளது. ‘அஸ்து’ என்னும் மராத்தி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனமும் எழுதியிருக்கிறேன். சிங்கப்பூரிலும் மராத்திய நண்பர்களிடம் திக்கித் திணறி மராத்தியில் பேச முயல்கிறேன். அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

மராத்தி கற்றுக் கொண்டதால் தமிழ் மறந்துவிடவில்லை. குறுஞ்செய்திகள் முதற்கொண்டு தமிழிலேயே அனுப்புகிறேன். எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழியைப் பயன்படுத்த முடியுமே அங்கங்கே அவற்றைப் பயன் படுத்துகிறேன். மிக அதிகமாகத் தமிழ் உபன்யாசங்களைப் பம்பாயிலேயே கேட்டிருக்கிறேன்.

எந்த மொழியுமே அழகானது தான். அதன் இலக்கண அமைப்பு என்னை வசீகரப்படுத்தியே உள்ளது. ஒன்றினது அமைப்பைப் பிறிதொரு மொழியுடன் பொருத்திப் பார்த்தால் போதும். மொழி கைகூடிவிடும்.

மாணவர்களே, மொழிகளைக் காதலியுங்கள். அவை உங்களைக் கைவிடா.

ஜப்பானிய மொழி கற்றுக் கொண்ட விஷயத்தைப் பின்னர் ஒருமுறை சொல்கிறேன்.

தம்பட்டம் 1

தினத்தந்தி நிருபர் வந்திருந்தபோது சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.

மாணவர்களே, இன்று கொஞ்சம் சுய சரிதை. பயன்படும் என்று எண்ணுகிறேன்.
1988ல் நடுவணரசுப் பாடத்திட்டத்தில் (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் ஆங்கிலத்தில் முதலாவதாக வந்தேன். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி என்று போட்டோவெல்லாம் வந்தது. பேட்டியெடுத்தார்கள். தூர்தர்ஷன் பேட்டி கண்டது. (இப்ப நிறுத்தறியா இல்லியா என்று சொல்வது புரிகிறது. நிறுத்திக்குவோம்).
விஷயம் இதுவன்று.
தினத்தந்தி நிருபர் வந்திருந்தபோது சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.
தூக்கிவாரிப் போட்டது. “ஏன் இங்கிலீஷ்க்கு தர மாட்டாங்களா? நான் தமிழ் மாணவன் தானே? இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா?” 16 வயதில் உலகம் புரியாமல் கேட்டேன்.
நான் தெரிந்துகொண்டது: தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தால் மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். வேறு எந்த மொழியில் இந்திய அளவில் முதலிடம் வகித்தாலும், தமிழ் நாட்டு மாணவனேயாகிலும் மாநில அரசு கண்டுகொள்ளாது. அதைப் போலவே மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பலன்கள் அதிகம். மற்ற மொழிப் பாடங்களில் கிடையாது.
இது என்ன கொடுமை என்று எண்ணியபோது ராஜீவ் காந்தி ஆபத்பாந்தவனாக வந்தார். டில்லிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார். மத்திய மந்திரி தினேஷ் சிங் விருது வழங்கினார். CBSE என் கல்லூரிப் படிப்பு வரை ஊக்கத்தொகை வழங்கியது. ஹிந்து நாளிதழ் ரூ 1000 அளித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈராண்டுகளுக்கு மாதம் ரூ 110 அளித்தது. அன்னாட்களில் அவை மிகப்பெரிய தொகை.
பின்னர் தெரிந்துகொண்டது : அகில இந்திய அளவில் தமிழில் முதல் இடம் பெற்றது சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர். என்னைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தார்.
இப்ப என்ன சொல்ல வர்ற ? அதானே கேட்கிறீர்கள்?
நான் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மூன்றையும் பயின்றேன். எந்தவொரு மொழியினாலும் பிறிதொரு மொழி பாதிப்படையவில்லை. ஹிந்தியால் தமிழோ, தமிழால் ஆங்கிலமோ கெடவில்லை. மாறாக ஒரு மொழி இன்னொன்றுக்கு உதவியது என்றே சொல்வேன். ஒரு மொழியின் வாயிலாகவே பிறிதொரு மொழியை நாம் அறிந்துகொள்ள முடியும். நான்காவதாக சம்ஸ்க்ருதம் பயில வாய்ப்பிருந்திருந்தால் அதையும் செய்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.
இளம் வயதில் எத்தனை மொழிகளைக் கற்க வாய்ப்புள்ளதோ அத்தனையையும் கற்றுக் கொள்ளுங்கள்.
பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து பம்பாயில் Voltas கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றிய போது கற்றுக் கொண்ட மொழிகள் பற்றி இன்னொரு தரம் சொல்கிறேன்.
(தொடரும்) #மொழி

பன்மொழி கற்போம் வாரீர்

மூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.

மாணவர்களே, தற்போது தமிழ்மொழிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது போன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பேசிவருவதை நீங்கள் கண்டிருக்கலாம்.

ஒரு மொழியில் பூரண தேர்ச்சி பெற்றவர்களால் பிறிதொரு மொழியை வெறுக்கவியலாது. மாறாக, தேர்ச்சி பெற்ற மொழியின் வழி மற்ற மொழிகளையும் அறிந்துகொள்ள தீவிர முனைப்பே ஏற்படும். அவற்றில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது பூரணமான கல்வியின் அறிகுறி.

நான் ஆங்கில வழியில் படித்தேன். தமிழ் இரண்டாம் மொழி. இந்தியும் பயின்றேன். பிற்காலத்தில் மராத்தி கற்றுக் கொண்டு பேச முடிந்தது. ஜப்பானிய மொழியில் பேசினால் புரியும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவிற்கு எழுதியதைப் படிக்கவும் முடிந்தது. (தற்போது பழக்கம் விட்டுப் போய்விட்டது). ஈராண்டுகள் முன்பு சீனம் பயில முயன்றேன். ரொம்பவும் கடினம். முடியவில்லை. விட்டுவிட்டேன். பல மொழிகளை அறிந்ததால் நான் பெற்ற பலன்கள் ஏராளம்.

ஆனாலும் தமிழ் தவிர இன்ன பிற மொழிகளைப் பயின்றதால் எனது தமிழறிவு மழுங்கிவிடவில்லை. தமிழில் இரு நூல்கள் எழுதினேன். ஆங்கிலத்தில் ஒன்று.

பல மொழிகள் தெரிவதால் மொழிகளின் சிறப்பையும் அழகையும் உணரமுடிகிறது. சுய புராணம் நிற்க.

எனது காலஞ்சென்ற பெரியப்பா ஸ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார் அவர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கம்பனில் ஊறியவர். 18 நூல்கள் எழுதியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் போதிய பாண்டித்யம் பெற்றவர். ஆங்கிலத்தைப் பட்டறிவால் அறிந்துகொண்டவர். மணிப்பிரவாளத்தைத் தனது சொந்த முயற்சியால் தெளிந்தவர்.

தனது இராமாயண உபன்யாசத்தில் வால்மீகி, கம்பன், ஆழ்வார்கள், ஆங்கில உரையாசிரியர்களின் கருத்துகள் முதலியவற்றை ஒப்பிட்டுப் பேசி வந்த அவர், துளசி ராமாயணம் புரியவேண்டும் என்பதற்காகத் தனது 55வது வயதில் இன்னொரு ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனது உரைகளில் துளசி, கபீர் தாசர் என்று அவர்களையும் கொண்டு வந்தார். ‘மிதிலையில் மூவர்’ என்னும் தலைப்பில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் காட்டும் மிதிலை நிகழ்வுகளை அருமையாகச் சித்தரிப்பார். பின்னர் ‘திரிவேணி இராமாயணம்’ என்றும் ஒப்பாய்வு உரைகளை நிகழ்த்தினார்.

இவை போதாதென்று, தியாகையர் கிருதிகள் புரிய வேண்டும் என்பதால் அவ்வப்போது தெலுங்கு பேசும் வைஷ்ணவப் பெரியவர்களிடம் பேசி, தெலுங்கு கீர்த்தனைகளின் பொருளை உள்வாங்கிக் கொண்டார். தியாகராஜ கீர்த்தனைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் நீண்ட நாட்கள் படித்துக் கொண்டிருந்தார்.

தனது இறுதி நாட்கள் வரை சம்ஸ்க்ருதத்தில் முனைவர் பட்டம் வாங்கவில்லை என்கிற ஏக்கம் இருந்தது தெரியும். அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. இறுதிவரை வால்மீகி, நாராயண பட்டத்ரி, கம்பன், ஆழ்வார்கள் என்றே அமரரானார்.

‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்’ என்று திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்க்காரர்களைப் பற்றிச் சொன்னதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் அப்பெரியவர்.

மூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.

தனித்து நிற்பதால் தாழ்மையுணர்ச்சி ஏறபடுகிறது. இல்லாததை எல்லாம் கற்பனை செய்ய வைக்கிறது. இதில் இருந்து விடுபடுவது மாணவர்களாகிய உங்களுக்கு நல்லது. அதற்கு மூன்றாவது மொழியாகக் ஹிந்தியை வாசியுங்கள்.

மூன்றாவதாக இந்திய மொழியே வேண்டாம் என்றால், வழி இருக்குமாமால் சீனம் பயிலலாம். என்னுடைய விருப்பம் ஜாப்பானிய மொழி. தமிழுடன் பல வகைகளில் ஒத்திருப்பதாக எனது சிற்றறிவிற்குப் படுகிறது.

ஆக, மொழி வெறி ஆகாது. மொழியின் பால் தூய காதல் இருப்பின், மற்ற மொழிகளை வெறுக்கவியலாது. தனது தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தை, பிறிதொரு தாயை வெறுப்பதுண்டோ ?

கேள்விகள் இருப்பின் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

#TNNEEDSHINDI

சிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை

இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?

‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – சிங்கப்பூர் கிளை’ என்று போட்டிருக்கலாம் என்று தமிழக எழுத்தாளரொருவர் ஒட்டுமொத்த சிங்கப்பூர் இலக்கியக் கழகங்களின் தரத்தையும் சேதப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளதை நண்பர் ஒருவரின் பதிவில் கண்டேன். தமிழக எழுத்தாளரின் பதிவில் என்னால் எழுத இயலவில்லை. எனக்கு அனுமதியில்லை. ஆகவே தனிப்பதிவு.

முதலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற ஒன்று சிங்கப்பூரில் இல்லை என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரத்தை சிங்கப்பூரில் உள்ள எவ்வளவு பேர் வாசித்தார்கள் என்று தெரியவில்லை. இரட்டைப் படையில் இருக்கலாம். ( நான் வாசித்தேன், ஆய்வுக் கட்டுரை எழுதினேன் என்பது எனது தனிப்பட்ட அனுபவம்). சில பகுதிகளைத் தவிர, விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இதையே தெரிவித்திருந்தேன்.

மாலன் ஒருமுறை சிங்கப்பூர் வந்திருந்தபோது சிங்கப்பூர் இலக்கியம் வளரவும், சிங்கப்பூரில் இருந்து இன்னமும் சிறப்பான சிறுகதைகள் வரவும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார். காரணம் இலக்கியம் என்பது வாழ்வாதாரத்தை வேண்டி மக்கள் அல்லல் படும் போது எழுவது. சிங்கப்பூரில் அம்மாதிரியாக, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த அல்லலுற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே அவர்கள் அத்தேவைக்கான போராட்டத்தை இலக்கியமாக வடிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லியிருந்தார். 2010ம் ஆண்டு என்று நினைவு. தேசிய நூலகத்தில் நடந்த கூட்டமொன்றில் இதைத் தெரிவித்திருந்தார். நான் அப்போதே இதைப் பதிவும் செய்திருந்தேன்.

பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராமல் அதனால் ஏற்படும் அல்லல்கள், எம்.ஆர்.டி. வண்டி தினமும் காலதாமதமாக வருவதால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகள், அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் பல மைல்கள் நடந்தே சென்று குடிநீர் கொணர்வது, பெண்கள் இரவில் தனியாக வரும் போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், சாதி ரீதியிலான கொடுமைகள், அரசாங்க அதிகாரிகளின் மெத்தனம் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கடை நிலையில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவன் போதிய நிதி வசதி இல்லாததால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் போவது என்பது போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இருந்தால் அதை வைத்து இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று ஒப்பாரிக் காவியம் செய்யலாம். விருதுகள் வாங்கலாம்.

ஆனால், மேற்சொன்ன எதுவும் நடக்கவில்லையென்றால் என்னதான் இலக்கியம் படைப்பது? தினமும் எம்.ஆர்.டி. ரயில் குறித்த நேரத்தில் இயங்குகிறது, ஒரு வேளை ஒரு மணி நேரம் பழுதானால் நிறுவனத்தின் தலைவருக்கு வேலை போய்விடுகிறது அல்லது நிறுவனம் பெருத்த தண்டனைக்கு உள்ளாகிறது, மின் தட்டுப்பாடு இல்லை, ஒரு மின் நிறுவனத்தின் மீது அதிருப்தி என்றால் அடுத்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம், வானில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படுகிறது, அமைச்சர்களையும், எம்.பி.க்களையும் எளிதில் சந்தித்துப் பேசலாம், அரசு நிறுவனங்களில் ஊழல் இல்லை, அரசு அலுவலகங்களில் குறித்த நேரத்தில் வேலைகள் நடைபெறும் என்று இருந்தால் எப்படித்தான் இலக்கியம் செய்வது?

இருக்க வீடில்லை என்று குடிசைகளில் வாழ வேண்டிய பிரஜைகள் இல்லை. அனைவருக்கும் வீடுகள் கொடுத்துவிட்டார்கள். பிரஜைகளுக்கு அரசுப் பள்ளிக் கல்வி அனேகமாக இலவசமாக உள்ளது. போராட்டம் கரகாட்டம் என்று ஜல்லியடிக்க நேரமில்லை, வழியுமில்லை, தேவையுமில்லை. அப்புறம் இலக்கியம் என்று உலகத் தரத்தில் ஒப்பாரிக் காவியம் படைக்க மக்களால் எப்படித்தான் இயலும்?

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தைத் ‘தமிழ் மொழி மாதம்’ என்று வகுத்து, அம்மாதம் முழுவதும் தமிழ் மொழி வளர்வதற்கான நிகழ்வுகள் அனைத்தையும் செய்து வரும் தேசம் சிங்கப்பூர். தீவு முழுவதும் தமிழ் விழாக்கள், வாசிப்புப் பட்டறைகள், பயிலரங்குகள் என்று ஊரே விழாக் கோலம். விழா என்றதும் போஸ்டரெல்லாம் கிடையாது, வெறும் அறிவிப்புகள், பள்ளி கல்லூரிகளில் பரப்புரைகள், உணவகங்களில் அறிவிப்புப் பதாகைகள், ஒளிவழியில் ஓரிரு அறிவிப்புகள், இலக்கிய வட்டங்களில் செய்திகள். அவ்வளவே.

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ என்று இருந்தால் அப்புறம் இலக்கியம் வழியாக எதற்கான தீர்வைத் தேடுவது?

‘தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் நாடு செய்ய வேண்டியதனைத்தையும் சிங்கப்பூர் செய்துவருகிறது. எங்களால் இதற்கு மேல் செய்ய முடியாது. முடிந்தவரை தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் தனது பெயரை வெளியிட விரும்பாத சிங்கப்பூர்ப் பேராசிரியர் ஒருவர்.

யூனிகோட் முறையில் இணையத்தில் / கணினியில் தமிழில் எழுதுபவர்கள் / வாசிப்பவர்கள் சிங்கப்பூருக்கு நெஞ்சார நன்றி கூற வேண்டும். யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துரு உருவாகப் பெரிய காரணம் சிங்கப்பூர். infitt என்று தேடிப்பாருங்கள். இணையவழித் தமிழுக்குச் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் இணைந்து செய்துள்ள உதவிகள் தெரியவரும். இத்தனைக்கும் தமிழர் எண்ணிக்கை குறைவாக உள்ள தேசம்.

இதெல்லாம் போகட்டும். பேட்டைக்குப் பேட்டை நூலகம் வைத்துள்ளார்கள். எந்த நூலகத்திலும் இரவு 9 மணி வரை நூல் எடுக்கலாம். நாள் முழுவதும் திரும்ப ஒப்படைக்கலாம். அதிகாரத்துவ நான்கு மொழிகளிலும் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. விடுமுறை என்றால் மட்டும் என்றில்லாமல், வேலை நாட்களிலும் மாலை நேரங்களில் நூலகத்தில் பிள்ளைகளைக் காணலாம். தனியாகச் செயலி கொண்டு நூல்களைப் படிக்கவும் உதவுகிறது நூலக வாரியம். அதன் சேவைகளை முழுவதும் பயன்படுத்தியவன் இதை எழுதிக்கொண்டிருக்கிறான்.

மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், தமிழில் நல்ல நூல்கள் வெளியாக வேண்டும், தமிழ் வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் வாசகர்கள் / எழுத்தாளர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழில் பேசவே தேவை இல்லாத சூழலில், பேசாமலே இருந்தால் மொழியின் பயன்பாடு குறைந்து விடுமே என்கிற அக்கறையில் ‘தாய் மொழிச் சேவைகள்’ என்று தனியாக ஒரு பிரிவையும் நூலக வாரியம் நடத்துகிறது.

இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?

உண்மையில், தமிழகத்தில் இருந்து வெளியாகும் போராட்ட இலக்கியம், அழுகாச்சி இலக்கியம், எதிர்மறை இலக்கியம், இடது சாரி இலக்கியம் முதலியவைகளால் நவீன சிங்கப்பூரர்களை உள்ளிழுக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வில் இந்த அழுகாச்சிகளை எந்த விதத்திலும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதுவும் மில்லினியல்ஸ் எனப்படும் இணைய இளையர்கள் மத்தியில் தமிழ் நாட்டின் அதிர்ச்சி + அழுகை இலக்கியம் எடுபடவில்லை. இது நான் கண்டது.

எனவே தமிழக எழுத்தாளரின் கவலை நியாயமானதே. சிங்கப்பூரின் இலக்கியத் தரம் அதலபாதாளத்திலேயே உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் அழுமூஞ்சி இலக்கியங்கள் அங்கு எடுபடவில்லை. சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்தில் தமிழகத்தின் தாக்கம் இருப்பதால் அவ்வெழுத்தில் எனக்கு ஒவ்வாமை உண்டு. ஆனாலும் அவ்வகையான தாக்கங்களில் இருந்து வெளிப்பட்டு, மீண்டு, சிங்கப்பூருக்கேயான எழுத்தைப் பல எழுத்தாள நண்பர்கள் செய்துகொண்டெ இருக்கிறார்கள். சித்துராஜ் பொன்ராஜ், மாதங்கி, ஜெயந்தி சங்கர், அழகுநிலா, ஷாநவாஸ் போன்ற, சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதும் தற்கால எழுத்தாளர்களால் சிங்கைத் தமிழ் இலக்கியம் சிறப்புறும். இவர்களைத்தவிர இன்னும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இன்னமும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தற்கால வாசகனைப் பூரணமாகச் சென்றடைய முடியவில்லை என்பதையும் நான் கண்டுள்ளேன்.

ஆக, சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் என்றொரு இயக்கம் உள்ளது. அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கான வாசகர்கள் உள்ளூரில் உள்ளனர். சிங்கப்பூரைக் கருவாகக் கொண்ட எழுத்துக்களை அவ்வாசகர்கள் வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர். அவர்களுக்கு ஒப்பாரி இலக்கியம் தேவையில்லை. சிங்கப்பூரின் இலக்கியம் அங்கிருந்தே உருவாகட்டும். மற்ற நாட்டு மாரடிக்கும் அழுகைகள் அங்கு வேண்டாம். அதற்கான தேவையும் அங்கு இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். தேடிப்பிடித்து வாசிக்கும் தேர்ந்த வாசகர்களும் உள்ளனர். நான் அறிந்தவரையில் இவர்களில்  சிலர் ஒன்று சேர்ந்து கூட்டு வாசிப்பும் நடத்துவதுண்டு. ஜெயமோகனின் மஹாபாரதத்தைக் கூட்டு வாசிப்பு முறையில் அனுபவித்தவர்களை நான் அறிவேன்.

சில மாதங்களுக்கு முன் வாரந்தோறும் நூலகம் செல்லும் (பள்ளிக்குச் செல்லும்) என்  மகனிடம் அவன் தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லையே என்று வருத்தப்பட்டேன். ‘Show me a Harry Potter equivalent, Rick Riordan equivalent in Tamil’ என்றான்.

இதைத் தமிழக எழுத்தாளரின் நையாண்டிக்கான பதிலாக எடுத்துக் கொண்டேன்.

ஸார்' வீட்டுக்குப் போகணும்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இறங்கி ‘ஸார்’ வீட்டுக்குப் போகணும்’ என்றால் வண்டிக்காரர்கள் மறு பேச்சு பேசாமல் உங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். ஸார் வீட்டிற்குப் போகணும் என்றால் பேரம் கூட பேச மாட்டார்கள்.

ஸார் – அப்படித்தான் அவரை அழைப்போம். எங்கள் தமிழ் ஆசிரியர் அவர். சக ஆசிரியர்கள் கூட அவரை ‘ஸார்’ என்று தான் அழைப்பார்கள். ஏனோ அப்படி அமைந்துவிட்டது.

அவரது வகுப்பு வரும் நாளில் ரொம்பவும் சேட்டை செய்யும் ரங்கு கூட அமைதியாக இருப்பான். நெற்றியில் விபூதி இட்டுக்கோண்டு வருவான்.

கடைசியாக போன வருஷம் தான் அவரைப் பார்த்திருந்தேன். ஒவ்வொரு வருஷம் லீவில் இந்தியா வரும்போதும் அவரைப் பார்க்காமல் இருந்ததில்லை. நேற்று தான் லண்டனிலிருந்து வந்தேன். ஸாரைப் பார்க்க இன்று வந்துவிட்டேன்.

அவரிடம் பாடம் கேட்டது என்னவோ இரண்டு வருஷம் தான். 11, 12ம் வகுப்புக்கு மட்டும் அவர் வருவார். ஆனால் பள்ளி முடிந்து இந்த இருபது வருஷம் ஆன பின்னும் ‘ஸார்’ என்றால் என் நினைவில் அவர் மட்டுமே வருகிறார்.

அன்று ரங்கு ஏதோ சேட்டை செய்திருந்தான். ஸார் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கிளாஸ் முடிந்தவுடன் ரங்கு அழுதபடியே அவரின் பின்னால் சென்று மன்னிப்புக் கேட்டான். ரங்கு மன்னிப்பு கேட்டது அவன் வாழ் நாளில் அவர் ஒருவரிடம் தான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.

வகுப்பில் அவர் வந்தவுடன் எல்லாரும் எழுந்து நின்று ‘உலகம் யாவையும்..’ என்ற கம்பராமயண கடவுள் வாழ்த்துப் பாடல் பாட வேண்டும். பிறகு தான் வகுப்பு துவங்கும். ஆனால் பக்கத்துக் கிளாசில் ‘ஆய கலைகள்..’ என்று தொடங்கும் சரஸ்வதி பற்றிய கம்பன் பாடல் பாடச் சொல்வார். இது பற்றி நாங்கள் அவரிடமே கேட்டோம். பரம வைஷ்ணவரான அவர் சொன்ன பதில் எல்லாரையும் வாயடைக்கச் செய்தது. ‘இதோ பாருங்கோ, ‘ஆய கலைகள்..’ சரஸ்வதியப் பத்தி மட்டும் குறிப்பிட்டு இருக்கு. இந்த கிளாசுல 30 பேர் இருக்கிறீர்கள். உங்களோட காதர் பாட்சாவும் இருக்கான். அவனுக்கு ‘ஆய கலைகள்..’ பாடறது சிறிது சங்கடம். அவா சம்பிரதாயத்துல அல்லா ஒருத்தரத் தவிர வேற யாரையும் சேவிக்க மாட்டா. ‘உலகம் யாவையும்..’ பாட்டு பொதுவானது. கம்பன் எழுதினது தான். ஆனாலும் எந்தக் கடவுளையும் குறிப்பிடல்ல இல்லையா? பக்கத்து கிளாசுலே எல்லாரும் இந்துக்கள். அங்கே ‘ஆய கலைகள்..’ பாடறதுல பாதகம் இல்லை”, என்றார்.

மனிதர் இத்தனை உன்னிப்பானவரா என்று வியந்தோம்.

அவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுவது ஒரு 20 நிமிஷம் இருக்கும். மிச்ச 30 நிமிஷம் இலக்கிய உரை. கம்பன், வள்ளுவர், இளங்கோ, பிசிராந்தையார், நச்செள்ளையார் தொடங்கி பாரதியார் வரை எல்லாரும் வந்து சென்று விடுவார்கள். வகுப்பு முடிந்த பின்னும் ஒரு வித மயக்கத்தில் பலமுறை இருந்திருக்கிறேன். இவ்வளவு ஞானம் இருந்தும் இவர் ஏன் இன்னும் பள்ளியில் வேலை செய்கிறார் என்று. அவரிடமே ஒரு முறை கேட்டு விட்டேன். ‘சின்னப் பசங்கள்ளாம் அர்ஜுனன் மாதிரி. புத்தி தடுமாறுகிற வயசில் நல்ல விஷயங்களை அவர்கள் காதில் போட்டுவிட வேண்டும். விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு ஆயிரம் விஷயத்தில் ஒரு அஞ்சு அவன் காதுக்குள்ளே போகும். ஒண்ணு ரெண்டு அவன் புத்தியை எட்டும். அவன் வாழ்க்கை சிறப்படையும். குறைந்த பட்சம் தப்பு செய்யாமல் இருப்பான். அதுக்குத்தான் பள்ளிக்கூடமே சரின்னு இருந்துட்டேன்”, என்று சொல்லிவிட்டு , ‘வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா கேள்வி ஞானம் பத்தி ?”, என்று தொடர்ந்தார்.

அவர் வகுப்பு பலருக்கு வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவியுள்ளது. சொர்ணலட்சுமி என்று ஒரு மாணவி. செட்டியார் வீட்டுப் பெண். நல்ல பெரிய இடம். ஆனால் திருமண வாழ்வு சரியாக இல்லை. சில முறை தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஸார் நடத்திய ‘அசோக வனத்தில் சீதை பட்ட கஷ்டங்கள்’ பற்றிய பாடம் நினைவுக்கு வந்து அவளைக் காப்பாற்றியுள்ளது. பாடத்தில் ஒன்று இரண்டு பாடல்கள் தான் இருக்கும். ஆனால் ஸார் தனது பாண்டித்யத்தால் கம்பன், வால்மீகி என்று பலரது பார்வையில் சீதை பட்ட துன்பங்களை எங்கள் கண் முன் நிறுத்தியுள்ளார்.

நன்றாக நினைவு உள்ளது. கண்ணகி பற்றிய அவரது ஒரு வகுப்பு. ‘தேரா மன்னா செப்புவது உடையேன்..’ என்று சிலப்பதிகாரப் பாடல் பாடி அவர் வகுப்பு நடத்திய போது எங்கள் கண் முன் கண்ணகி நிற்பதைக் கண்டோம். அவ்வளவு உணர்ச்சியுடன் நாங்கள் ஒரு பாடத்தைக் கவனித்ததில்லை.

அவருக்கு இருந்த ஆழ்ந்த படிப்பு அவருக்கு வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர் உதவித் தலைமை ஆசிரியராகவே கடைசியில் ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன். நன்றாக நினவு இருக்கிறது. அவரை விட அனுபவம் குறைவான ஒரு ஆசிரியரைத் தலைமை ஆசிரியராகப் பணி அமர்த்தியது அரசு. அவர் கண்டு கொள்ளவில்லை.

என் தந்தை இது பற்றி அவரிடன் கேட்ட போது, “இப்போ எச்.எம். பதவி வராம இருக்கறதே நல்லது. ‘அஷ்டப்பிரபந்தத்தில் ஆழ்வார்களின் தாக்கம்’ என்று ஒரு டாக்டரேட் பண்ணிண்டு இருக்கேன். அதுக்கு இது இடைஞ்சலா இருக்கும்’, என்று கூறியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்னர் டாக்டரேட் முடித்தார். ‘மனுஷன் கீழே விழற வரைக்கும் படிச்சுண்டே இருக்கணும்’ என்று அடிக்கடி கூறுவார்.

ஒரு சீசனில் ‘துளசிதாஸ் ராமாயணம்’ புரிய வேண்டும் என்பதற்காக 50 வயதில் இந்தி கற்றுக் கொண்டார். ஆனாலும் அவரது இளமைப் பருவம் குறித்து எனக்குத் தெரியாமலேயே இருந்தது.

மெடிக்கல் காலேஜ் சேர்ந்த போது அவரிடம் சொல்லிவரச் சென்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ‘படிச்சுட்டு நம்ம ஊருக்கே டாக்டரா வந்துடுப்பா’ என்றார் வெகுளியாக.

95-ல் மும்பையில் எனக்கு ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அப்போது பார்த்து அவர் ஒய்வு பெற்று ஒரு மார்கழி மாதம் மும்பைக்கு ‘திருப்பாவை’ பற்றி உபன்யாசம் செய்ய வந்திருந்தார். ‘தனியா இருக்கேன். நீ முடிஞ்சா நான் இங்கே இருக்கற வரைக்கும் என்னோடயே தங்கிக்கோயேன்’ என்று கேட்டார். அந்த வாய்ப்பு எனக்குப் பல படிப்பினைகளைத் தரப்போவதை நான் உணர்ந்திருக்கவில்லை.

விடியற்காலை அவரது திருப்பாவை’ உபன்யாசம். வழக்கம் போல ஆண்டாள் முதல் அனைத்து ஆழ்வார்களும், சங்கப் புலவர்களும், வள்ளுவரும், பாரதியும், நாராயண பட்டத்ரீயும் அவரது நாவில் வந்து வெளுத்து வாங்கினர். மக்கள் அந்த மாதிரி மழையில் நனைந்தது இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஒரு நாள் இரவு அவருடன் அறையில் தங்கியிருந்த போது தான் அவரது இளமைப் பருவம் பற்றிப் பேசினார்.

“என்ன எப்பவும் போல ஒரு ஏழைப் பிராம்மணக் குடும்பம். அப்பா வேத பாராயணம். சொற்ப வருமானம். ரெண்டு தம்பி ஒரு தங்கை. ஒரு பருவத்துக்கு அப்புறம் தருமபுரம் தமிழ்க் கல்லூரில ‘புலவர்’ பட்டத்துக்காக படிச்சேன். அப்பா தவறிட்டார். ஆதீனத்துல தங்கறதுக்குக் காசு கிடையாது. சாப்பாடும் போட்டா. தமிழ் படிச்சேன். பல நேரங்கள்ளே சமயல்காரன் சாப்பாடு இல்லேன்னுடுவான். ஆதீனக் குளத்துத் தண்ணீர் தான் அன்னிக்கி.

பசங்க ஒண்ணா இருந்தா படிக்க முடியாதுன்னு அரை மைல் தள்ளி ஒரு அரச மரம் அடியிலே படிச்சிண்டிருப்பேன். வந்து பார்த்தா சாப்பாடு இருக்காது. வடிச்ச கஞ்சி மட்டும் இருக்கும். அன்னிக்கி அது தான் ஆகாரம். தம்பி முனிசிபல் பள்ளியில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தான். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று ஹாஸ்டலில் போடும் பொங்கலும் வடையும் கொண்டுவந்து தருவான். தான் சாப்பிட மாட்டான். அவனும் வாரச் சாப்பாடுதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ( வாரம் முழுவதும் ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவது, ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு படிப்பது ).

ஆனால் எனக்கு வாழ்க்கை குடுத்தது ஆதீன காலேஜ் தான். படிச்சு பரீட்சை எழுதினேன். மாகாணத்துலே முதல்லே வந்துட்டேன்ன்னு சொன்னா. நான் நம்பல்லே. அப்புறம் பேப்பர்லே வந்தது. அப்புறம் வாத்தியார் வேலை. பிறகு பி.ஏ., எம்.ஏ, அப்புறம் பி.எச்.டின்னு போயாச்சு.

ஆனா சரஸ்வதி உன் நாக்குலே இருக்காடா என்று அகோர தீக்ஷிதர் சொன்னார். அது போலவே எது படிச்சாலும் ஒரு தடவையிலேயே பதிஞ்சுது. நன்னா பேசவும் வந்துது.

ஒரு தடவை ஸ்கூல் லீவு. மத்தியானம் கொஞ்சம் கண்ணை மூடிண்டிருந்தேன். ஒரு குழந்தை வந்து வந்து ‘நாக்கை நீட்டு, நாக்கை நீட்டுன்னு சொல்றமாதிரியே இருந்தது. குழந்தை தலைலே மயில் தோகை வெச்சிண்டிருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு மலையாள நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். சுவற்றில் ஒரு படம் இருந்தது. குருவாயூரப்பன் அப்பிடின்னு சொன்னார். குழந்தை முகம் அப்படியே. அப்பத்தான் குருவாயூரப்பன்னு ஒரு தெய்வம் இருக்கறதே தெரியும்.

அந்த வாரமே குருவாயூர் போனேன். முதல் முறையா ‘நாராயணீயம்’ பாராயணம் பண்ணினேன். இது ஏதோ தெய்வ சங்கல்பம்னு தோணித்து. அதுலேர்ந்து இன்னிக்கி வரை சுமார் ஒரு ஆயிரம் முறை பாராயணம் பண்ணியிருப்பேன்”, என்றார். உடல் நிலை சரி இல்லாதவர்கள் வீட்டுக்குப் போய் நாராயணீயம் பாராயணம் செய்வார். அவர்கள் உடல் நலமடைவதை நேரில் கண்டுள்ளேன்.

அது மட்டும் அல்ல, அவருக்கு வால்மீகி ராமாயணம், கம்பன், துளசி ராமாயணம் என்று பலதும் தெரிந்திருந்தது. ஊரில் எந்தப் பட்டி மன்றம் என்றாலும் இவரைத்தன் நடுவராகப் போடுவார்கள். கம்பனில் ஆழ்ந்த ஆர்வம் இருந்ததால் தான் பிறந்த தேரழுந்தூரில் கம்பனுக்குக் கோட்டம் கட்ட வேண்டும் என்று அரசிடம் போராடி அதனைக் கட்ட வைத்தார்.

வருடம் தோறும் அந்த ஊரில் கம்பன் விழா நடத்தி மு.மு.இஸ்மாயில், கீரன், செல்வகணபதி முதலியோரை அழைத்துப் பட்டிமன்றம் நடத்தினார். கீரனும் இவரும் ஆதீனக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

மேலும் தொடர்ந்தார்,” என்ன, அங்கீகாரம் இல்லை. வருஷத்துக்கு ஒரு புஸ்தகம் போடுவேன். எல்லாம் கம்பன் பத்தித் தான். போட்ட புஸ்தகத்தை எடுத்துண்டு நான் உபன்யாசம் பண்ற எடத்துலே எல்லாம் தூக்கிண்டு போவேன். ஆனா விக்காது. போட்ட முதல் நஷ்டம் தான். நாம தெரிஞ்சுண்டது நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் பட்டுண்டிருக்கேன். இப்போ ரிடையர் ஆகியாச்சு. இப்பவும் புஸ்தகத்தைத் தூக்கிண்டு போறேன். எனக்குப் பணம் வேண்டாம். புஸ்தகம் விக்கற பணத்துலே 75 % தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் திருப்பணிக்குன்னு வெச்சிண்டிருக்கேன்”, என்று சொல்லி சற்று நிறுத்தினார்.

புஸ்தகங்கள் அனைத்தும் ஆராய்ச்சி நூல்கள். ‘பரகாலன் கண்ட பரிமள அரங்கன்’, ‘அருள்மாரி கண்ட ஆமருவியப்பன்’, ‘வைணவம் தந்த வளம்’ – என்று பல வகையான ஆராய்ச்சி நூல்கள். ஆனால் வாழ்வின் எல்லாத் தரப்பும் பரிபூரணமாக வணிக மயமான நிலையில், மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வெறும் பணத்தை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் அவர்களால் இந்த ஆய்வுகளைப் படிக்க முடியாது தான். அதனால் புஸ்தகங்களைக் கொள்வார் இல்லை. இருந்தாலும் விடாது அவர் புஸ்தகங்களுடன் உபன்யாசம் செய்துகொண்டிருந்தார்.

ஒருமுறை ‘தமிழ் சாரல்’ என்று ஒரு அமைப்பு அவரை ‘பரமக்குடி’ வரச்சொல்லி அழைத்திருந்தது. அன்று அமாவாசை. முந்தைய நாள் இரவே கிளம்பி பரமக்குடி சென்று சேர்ந்தார். கூடவே கட்டுக் கட்டாகப் புஸ்தகம். ஒரு வழியாக ‘தமிழ் சாரல்’ எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்துள்ளார். அமாவாசை என்பதால் குளித்து முன்னோர் கடன் ( தர்ப்பணம் ) செய்யாமல் எதுவும் சாப்பிடுவதில்லை. நேரம் மதியம் ஆகிவிட்டது. கடைசியாக வீட்டைக் கண்டுபிடித்தார். அது ஒரு ஒதுக்குப் புறமான ஓட்டு வீடு. வாசலில் ‘தமிழ் சாரல்’ என்று ஒரு ஒற்றைப் பலகை தொங்கியது. உள்ளே இருந்து கைலி கட்டிக்கொண்டு ஒரு நடுத்தர வயது ஆள் ‘என்னா வேணும்?’ என்று கேட்டபடி வந்துள்ளார். விபரம் சொன்னதும், ‘ஓ, நீங்களா ? ஒரு அரை மணி இருங்க. வரேன்’, என்று சொல்லிச் சென்றார். பின்னர் வந்து ‘வாங்க, போகலாம்’ என்று கூட்டம் ஏற்பாடு ஆகியிருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார். கடற்கரை ஓரம் வெற்றுத் திடல். வெயில் தகிக்கிறது.

‘இதான் சாமி, இங்கேதான் பேசப் போறீங்க. அதோ பாருங்க ஸ்பீக்கர் கட்றான் பாருங்க”, என்றார். சுற்று முற்றும் யாருமே இல்லை. தர்ப்பணம் செய்யவில்லை. சாப்பிடவில்லை.  அப்படியே மாலை ஆகியுள்ளது. கூட்டம் துவங்க வேண்டிய நேரம். எண்ணி நான்கு பேர் வந்துள்ளனர். ‘ஐயா, நேரம் போகப் போக ஆள் வரும்’ என்று விழா நடத்துபவர் கூறியுள்ளார். ஸாருக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்துள்ளது. நாள் முழுவதும் சாப்பிடாததால் தலை சுற்றியுள்ளது. அரை மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு அடுத்த பஸ் ஏறி மறுநாள் ஊர் வந்து சேர்ந்துள்ளார். சரியாக 36 மணி நேரம் பட்டினி. இப்படியாகிலும் கம்பன் புகழ் பரப்ப அலைய வேண்டுமா என்று கேட்டேன். ‘ஏதோ ‘தமிழ்ச் சாரல்’னு பேர் சொன்னான். சரி ஏதோ இலக்கியத் தொடர்பா இருக்கும்னு நினைச்சு அமாவாசைன்னு கூட பார்க்காம ரொம்ப கஷ்டப்பட்டுப் போனேன். சாப்பாடு இல்லே. ‘சரி, உங்கடவங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லி சந்த்ரஹாசன்னு ஒருத்தர் வீட்டுக்குக் அழைச்சுண்டு போறேன்னான். வேண்டாம்ப்பா, ஆளை விடுன்னு சொல்லி பஸ் பிடிச்சு வந்துட்டேன். புஸ்தகம் போட்டாச்சு நாலு பேர் கிட்டே போய்ச் சேர வேண்டாமா?’, என்றார்.

இது கூட பரவாயில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. நல்ல தமிழ்ப் பேராசிரியர்கள் தேவைப்பட்டுள்ளனர். வைணவம் குறித்து குறிப்புக்கள் பெற இவரிடம் வந்த பலர் நல்ல நிலையில் இருந்தாலும் இவரது பெயர் அனுப்பபட்டபோது முன் எடுத்துச் செல்லவில்லை. பல காரணங்கள் கூறினார்கள். உண்மையான காரணம் இவர் சார்ந்த சாதி என்று அவர் அறிந்திருந்தார். சாதி காரணமாகத் தமிழ் நாட்டில் பல வாய்ப்புகள் இவருக்கு அளிக்கப்படவில்லை.

தமிழ் நாட்டில் மட்டும் தான் அப்படி. பரோடா, மைசூர், நாக்பூர், தில்லி என்று பல இடங்களில் இவருக்கு நல்ல மரியாதை இருந்தது. இவரது உபன்யாசத்திற்கு தமிழ் நாடு சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் தவறாமல் வருவார்கள்.

‘ஜாதியால கௌவரம் கிடைக்கல்லேன்னு சொன்னா அது சரியா இருக்காது. ஜாதிக்குள்ளேயும் அப்பிடித்தான். அதல்லாம் உள்ளே போனா ரொம்ப நன்னா இருக்காது’, என்று நிறுத்திவிட்டார்.

வைணவர்களுக்குள் இருந்த தென்கலை, வடகலை பேதத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியும். இவர் எழுதிய ஒரு புஸ்தகத்தை ஒருமுறை காஞ்சிப் பெரியவர் முழுவதும் படித்து ஆசீர்வதித்தார் என்று கூறி ஆனந்தப்பட்டார்.
காஞ்சி ஆச்சாரியார் அந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளதால் அதில் குற்றம் கண்ட சில பெரியவர்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

‘இவா யாருக்குமே ஆன்மீகம்னா என்னன்னே தெரியல்ல’, என்று மனம் வருந்திப் பேசினார். “ராமாயணம் பத்தி பேசும்போது எதுக்கு ‘நாராயணீயம்’ எல்லாம் போகணும்னு கேக்கறா ? குருவாயூர் பத்திப் பேசக்கூடாதாம். ஏன்னா அது ஆழ்வார் பாடினது இல்லையாம். இங்கே ஆழ்வார் பாடின கோவில்கள் ஒரு விளக்கு ஏத்தற வசதி கூட இல்லாம இருக்கு. அங்க குருவாயூரப்பனை மலையாளம் பேசறவா எல்லாம் எப்படி கொண்டாடறா தெரியுமா ? இங்கே ‘ராமானுச தயா பாத்ரம்’ பாடினா தென்கலை சண்டைக்கு வரான். ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்’ பாடினா வடகலை சண்டைக்கு வரான். இவனுன்கள்ளாம் கோவிலுக்கு வர்ரதே சண்டை போடத்தான் போல இருக்கு. ஒரே துவேஷம். அப்பிடி இருக்கலாமாம் ஆனா குருவாயூரப்பன் பத்திப் பேசக்கூடாதாம்.

இன்னொண்ணு தெரியுமா ? திருக்குறள் பரம வைஷ்ணவமான புஸ்தகம். அதை நம்மவா படிக்கறதே இல்லை. நாஸ்தீகாள்ளாம் அது பத்திப் பேசறதால அதுவும் நாஸ்தீகப் புஸ்தகம்னு நினைச்சுக்கறா. வள்ளுவர் சொன்னதை விட யாரும் வைஷ்ணவம் பேசல்லே’ என்று திருக்குறள் பற்றி புதிய பரிணாமம் கொடுத்தார். உபன்யாசங்களில் அடிக்கடி திருக்குறள் வரும். தமிழ் ஆசிரியர் அல்லவா ? சரளமாக வரும்.

மனித வாழ்வின் பல அர்த்தமற்ற செயல்களை ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு தீர்க்க முனைந்தார். அதனால் பல பெரிய புள்ளிகளின் எதிர்ப்புக்கு ஆளானார். தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகமாக ஆழ்வார் பாசுரங்களையும், திருக்குறளையும் பயன் படுத்தியதால் சம்பிரதாயம் சார்ந்த வைணவக் குழுக்களில் புறக்கணிக்கப்பட்டார். தமிழுக்கு இவ்வளவு செய்கிறாரே என்று தமிழ் அமைப்புக்கள் போற்றியதா என்றால் அங்கே அவர்கள் ஜாதி பார்த்தார்கள். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் ஆனது அவரது கதை.

1992-ம் ஆண்டு எப்படியோ ‘நல்லாசிரியர்’ விருது கொடுத்துவிட்டார்கள். அவருக்கே ஆச்சரியம் தான்.

அந்த வருடம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தன் மகனுக்கு ‘தமிழ்ச் சான்றோருக்கான’ இட ஒதுக்கீட்டில் பொறியியல் இடம் கிடைக்க வேண்டி அவரும் அவரது தம்பியும் இனி ஏறாத படியில்லை. கடைசிவரை இழுத்தடித்து இறுதியில் ரூ.25,000 கேட்டார்கள். அவரிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதை விட தான் அவமானப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தார்.

அந்த இடம் அரசியல் பின்புலம் உள்ள ஒரு ‘தமிழ்’ அறிஞர்’ பேரனுக்குக் கொடுக்கப்பட்டது என்பது வேறு கதை.

அவரது உபன்யாசங்கள் எங்கு நடந்தாலும் ஏதாவது புதுமையாகச் சொல்வார். சென்னையில் ஒருமுறை ‘குரு’ என்ற பதத்திற்கு விளக்கம் அளித்தார். குரு என்பவன் நம் உடலின் இடைப் பகுதி போன்றவர். இடுப்புக்கு மேல் பரமாத்மா; இடுப்புக்கு கீழே உள்ளது ஜீவாத்மா; ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பது இடைப் பகுதி; குரு என்பவர் அப்படி இடை போன்றவர்கள்; கீதையை உபதேசித்த கண்ணனும் ஒரு குருவே; அவனை ‘கீதாசார்யன்’ என்று அழைக்கிறோம் என்று கூறி ஒரு நிமிடம் நிறுத்தினார்.

‘இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். கண்ணன் இடையர் குலம். இங்கே இடையர் என்றால் சாதி அல்ல; குரு, ஆச்சாரியன் என்ற அளவில் பார்க்கவேண்டும். இதற்கு சமீப கால உதாரணம் கூட உண்டு. ‘எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நான் என்றான்’ என்று பாரதி இந்த நூற்றாண்டில் இதையே கூறினார்’, என்று பேசினார். கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.

மும்பையில் மாதுங்காவில் ஒரு சிறந்த சொற்பொழிவு. ‘பகுத்தறிவு இல்லாதவர்கள்’ பற்றி ஒரு வித்தியாசமான விளக்கம் கொடுத்தார். ‘உலக வாழ்வு சார்ந்து பொருள் தேடும் முயற்சிக்கு மட்டுமே தனது அறிவைப் பகுத்து அளித்துவிட்டு ஆன்மீகத் தேடலுக்குத் தேவையான அறிவில்லாதவன் எவனோ அவனே பகுத்தறிவில்லாதவன்’, என்று கூறி அசத்தினார். அப்போது தான் ‘பகுத்தறிவு’ பற்றி சில தமிழகத் தலைவர்கள் வாய் கிழிந்து கொட்டியிருந்தார்கள்.

அதே உபன்யாசத்தில் ஆண்டாள் திருப்பாவை பற்றிய ஒரு பேச்சு வந்தது. ‘மார்கழித் திங்கள்..’ என்று தொடங்கும் பாடல் பற்றிப் பேசத் துவங்கினார். அதில் ‘பறை’ என்ற ஒரு சொல் வந்தது. அதற்கான விளக்கம், அந்தச் சொல் திருப்பாவையில் வேறு எங்கெல்லாம் வருகிறது, வேறு எந்த ஆழ்வார்களெல்லாம் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார்கள், அவற்றின் பொருள், ஒவ்வொன்றின் வரலாறு என்று பல விஷயங்கள். கூட்டம் வாய் பிளந்து ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தது.

ஒருமுறை பள்ளியில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பாராட்டுவிழா நடந்தது. அதில் இவர் பேசியுள்ளார். ‘வீடு வரை உறவு’ பாடல் பட்டினத்தார் பாடல் தழுவிக் கவிஞர் எளிமையாகப் பாடினார் என்று பேசினார். கூட்டத்தில் சலசலப்பு. ஏற்புரை ஆற்றிய கண்ணதாசன், ‘இதுவரை நான் பட்டினத்தார் பாடலை அடியொட்டியே எழுதினேன் என்று யாருக்கும் தெரியாது. இம்மாதிரி ஒரு ஆசிரியர் உங்கள் பள்ளியில் இருப்பது பள்ளிக்குப் பெருமை’ என்று பாராட்டியுள்ளார்.

இப்படிப் பல சம்பவங்கள்.

அடுத்த முறை அவரை நான் சந்தித்தபோது,” என்னப்பா நீ லண்டன்லேயே வேலைல இருக்கியாமே? ஏன் இங்கே மாயவரத்துல எல்லாருக்கும் உடம்பு நன்னா இருக்கா?” என்று கேட்டது ரொம்ப நாள் மனதில் இருந்தது. மாயவரத்தில்

ஒரு கிளினிக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வேலை, திருமணம், குழந்தைகள் என்று சில வருடங்கள் அவருடன் தொடர்பில் இல்லை.

போன வருடம் வந்திருந்த போது அவருக்குப் பக்கவாதம் வந்திருந்தது. வைத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் அவரால் வாய் பேச முடியவில்லை. வலது கை வர வில்லை. பதினெட்டு நூல்கள் எழுதிய கை எழுதவில்லை; பல பல்கலைக்கழகங்களில், ஆன்மீக மேடைகளில் இறைவன் புகழையும் தமிழின் அருமையையும் பேசிய நாக்கு பேசவில்லை.

அப்போதுதான் அவர் ஐந்து வருடம் முயன்று ஒரு மகத்தான நூல் ஒன்று எழுதியிருந்தார். ‘திருமால் திகழும் 108 திவ்யதேசங்கள்’ என்று 108 திவ்யதேசம் பற்றிய ஆழ்வார்கள் பாடல்கள் கொண்ட ஆய்வு நூல். பெரு முயற்சி செய்து எழுதியிருந்தார். ஆனால் பதிப்பாளர் வெறும் 15,000 ரூபாய்க்கு காப்புரிமையை எழுதி வாங்கிக்கொண்டுவிட்டார் என்று தெரிந்து கொண்டேன். ‘பெருமாள் என்ன கொடுக்கறாரோ அதை வாங்கிக்க வேண்டியது தான்’ என்று தனது நிலைப்பட்டைக் கூறியிருந்தார் என்று தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி அவரிடம் கேட்டேன். புரிந்துகொண்டார். இடது கையை ஆட்டி ,’இது ஒரு விஷயமே இல்லை’ என்பது போல் ஏதோ சொன்னார்.

அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இவரது தம்பி கடும் முயற்சி செய்து காஞ்சீபுரத்தில் ஏற்பாடாகியிருந்தது. ‘ஹிந்து நாளிதழில்’ அழைப்பெல்லாம் கூட வந்து விட்டது. விழாவிற்கு இரண்டு நாள் முன்பு பக்கவாதம் ஏற்பட்டு அப்பொல்லொ மருத்துவமனியில் சேர்க்கப்பட்டார். விழா நடக்கவில்லை.

அதன் பிறகு இப்போதுதான் பார்க்க வருகிறேன்.

வீட்டின் உள்ளே நுழைந்த என்னை அவரது மகன் வரவேற்றார். ‘ஸார் எப்படி இருக்கார்?’ என்று கேட்டேன்.

‘சந்தோஷமாத்தான் இருப்பார்னு நினைக்கிறேன். ரூம்லெ போய்ப் பாருங்கோ’, என்றார் அவர் மகன்.

உள்ளே சென்றேன்.

உண்மை தான். ஸார் சந்தோஷமாகவே தெரிந்தார்.

சிரித்தபடியே இருந்தார் மாலை போட்ட படத்தில்.

இப்போதெல்லாம் மயிலாடுதுறையில் ‘ஸார்’ என்றால் வண்டிக்காரர்களுக்குத் தெரிவதில்லை.

%d bloggers like this: