வைஷ்ணவ எழுத்து

பேஸ்புக்கில் திரு.ராம் ராமச்சந்திரன் அவர்கள் ‘வைஷ்ணவ எழுத்தாளர்கள் பிரபந்தம், வைஷ்ணவம் பற்றியே எழுதுகிறார்கள்’ என்றது எனக்குப் புதிய பார்வையை அளித்தது. ( நவீன எழுத்தில் ‘புதிய திறப்பை உருவாக்கியது, புதிய புரிதலை ஏற்படுத்தியது’ என்றெழுத வேண்டும்)

அது என்ன பார்வை என்று நோக்கும் முன், கொஞ்சம் பின்னோக்கிப் பயணம்.

ஆழ்வார்கள், நாதமுனிகள், உடையவர், பிரபந்த உரையாசிரியர்கள், தேசிகன், மாமுனிகள், பின்னர் வந்த தாசர்கள் வரை எல்லாரும் வலியுறுத்தியதை இந்த ஸ்லோகத்தில் சுருக்கலாம் :

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்

அவன் பெயரைக் கேட்பது, அவன் பெயரைப் பாடுவது, அவனையே நினைத்திருப்பது, அவன் திருவடிக்குச் சேவை செய்வது, பூக்களால் அர்ச்சிப்பது, அவனுக்கு தாசனாய் இருப்பது, அவனுக்கே தன்னை அர்ப்பணிப்பது என்பதாக நவ-வித வழிபாடுகளையே சொல்கிறார்கள்.

குறிப்பாக, தற்போது ஆண்டாளைப் பேசுவதே சிறப்பாதலால் அவள் சொல்வதும் இவற்றை ஒட்டியே வருகின்றன –

  1. ‘தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்’
  2. ‘நாட்காலே நீராடி வந்தோம்’
  3. ‘தூயோமாய் வந்து நாம், தூமலர் தூவித் தொழுது’
  4. ‘அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து’
  5. ’கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தி’
  6. ’பாடிப் பறை கொண்டு’
  7. ’தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்’
  8. ‘நாமம் பலவும் நவின்று’
  9. ‘நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்’
  10. ‘முகில் வண்ணன் பேர் பாட’
  11. ‘மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்’
  12. ‘கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்’
  13. ‘பங்கயக் கண்ணானைப் பாடேலோ’
  14. ‘மாயனைப் பாடேலோ’
  15. ‘உன் மைத்துனன் பேர் பாட’
  16. ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’
  17. ‘அருத்தித்து வந்தோம்’
  18. ‘உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’
  19. ‘சிறு பேர் அழைத்தனவும்’
  20. ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’

மதுரகவிகளும் ‘நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன், மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே’ என்று பெருமாளைச் சொல்லாவிட்டாலும் நம்மாழ்வாரைச் சொல்கிறார்.

ஆனால், ஒருவரும் எழுதி வழிபடச் சொல்லவில்லை. ‘புதிய ஏற்பாடாகத் தற்கால வைஷ்ணவர்கள் பிரபந்தம் பற்றியும், வைஷ்ணவம் பற்றியும் எழுதி எழுதியே வழிபடுகிறார்களோ?’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. காஞ்சி பரமாச்சார்யரும் ‘ஶ்ரீராமஜெயம்’ எழுதச் சொன்னார் என்பதும் இதனுடன் ஒன்றி வருகிறது போல் உணர்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

வங்கக் கடல் கடைந்த

‘வங்கக் கடல் கடைந்த’ பாசுரத்தில், இறுதியாகத் தான் யாரென்று உணர்த்துகிறாள் ஆண்டாள். பின்னாட்களில் அறிவிலிகள் தோன்றக்கூடும் என்பதால் தனது குலம், தனது தந்தை, அவர் வாழ்ந்த ஊர் என்று பலதையும் சொல்லி முடிக்கிறாள் #ஆண்டாள்.

எப்படிச் சொல்கிறாள் : ‘அணி புதுவைத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை’ என்று தன்னை வெளிப்படுத்துகிறாள். அந்தணர்களுக்குத் தாமரை மாலை அணியவென்று ஒரு விதி இருக்கிறபடியால் அவ்வாறு மாலை அணிந்த பட்டராகிய வில்லிபுத்தூர் விட்டுசித்தன் வழி வந்த கோதையாகைய நான்’ என்பதாகப் பொருள்.

பெரியாழ்வார் தனது ஆச்சார்யனும் கூட என்பதாலும் ‘பட்டர் பிரான் கோதை’ என்று அவரையும் தன் பெயருக்கு முன் சேர்த்துக் கொண்டுள்ளாள் என்று காலட்சேபக்காரர்கள் சொல்வதுண்டு. ஏனெனில், மற்றைய ஆழ்வார்கள் தங்களைப் பற்றிச் சொல்லும் போது, ‘குருகூர்ச் சடகோபன் சொன்ன’ என்றும்,  ‘தொண்டரடிப்பொடி சொன்ன சொல்’ என்றும், ‘கலியன் சொன்ன சொல்’ என்றும், ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்’ என்றே அமைந்துவருகின்றன. ஆனால் ஆண்டாள் மட்டுமே தனது தந்தையாரின் பெயரையும் சேர்த்துத் தன்னைப் பற்றித் தெரிவிக்கிறாள். ஆண்டாளைப் போலவே தனது ஆச்சார்யனைச் சேர்த்துச் சொன்ன மற்றுமொரு ஆழ்வார் மதுரகவிகள். ‘தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்’  என்பது அவரது ‘கண்ணினும் சிறுத்தாம்பு’ பாசுரத்தில் வருவது.

தான் இயற்றிய 30 பாசுரங்களையும் (சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே)  பாடுபவர்கள் சிவந்த கண்களை உடைய திருமாலின் அருளினால், எல்லாப் பிறவிகளிலும்  எல்லாச் செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ்வர் என்று ஆசீர்வதித்துத் தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்.

அதென்ன சிவந்த கண்கள்? திருப்பாவையில் பல இடங்களில் சிவந்த கண்கள் வருகின்றன. ‘கார்மேனிச் செங்கண்’, ‘பங்கயக் கண்ணன்’, ‘செங்கண் சிறுச் சிறிதே’ என்று கண்ணனின் சிவந்த கண்கள் சுட்டப்படுகின்றன. ‘கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வார் தனது ‘அமலனாதிபிரான்’ பாசுரத்தில் தெரிவிக்கிறார். ஆகவே ஆண்டாள் ‘செங்கண்’ உடையவன் என்று அரங்கனைக் குறிப்பிட்டது சரியே.

கோதை வில்லிபுத்தூரில் தான் வசித்தாள், அவள் பெரியாழ்வாரின் மகள்தான் என்று வேறு யாராகிலும் சொல்லியுள்ளனரா என்று பார்க்கையில் :

வேதாந்த தேசிகன் (கி.பி.1268 – 1369)

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

மணவாளமாமுனிகள் (கி.பி.1370) பாடியுள்ளார்:

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்

பி.கு.: கடந்த 30 நாட்களில்  திருப்பாவை விஷயமாக அடியேன் படித்தது, அடியேனின் பெரியப்பா தேரழுந்தூர் ஶ்ரீ.உ.வே.ராமபத்திராச்சாரியாரின் உபன்யாசங்களில் கலந்துகொண்டு எழுதிவைத்துக் கொண்ட சில செய்திகள், சில காலட்சேபங்களில் கலந்துகொண்டதனால் அறிந்துகொண்டவை, முக்கூர் ஶ்ரீமதழகியசிங்கரின் உபன்யாசங்களில் கேட்டது என்று, அடியேனின் அறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். பிழைபொறுத்து ஆற்றுப்படுத்துவீர். பிழை என்னுடையது, பெருமை ஆண்டாளுடையது.

சிற்றஞ் சிறு காலே

‘சிற்றஞ் சிறு காலே’ பாசுரத்தில் திடீர்த் திருப்பம் ஒன்று நிகழ்கிறது.

28 பாடல்களில் ‘பறை வேண்டும்’ என்று கேட்ட ஆய்ச்சியர் இப்போது ‘பறை வேண்டும் என்பதற்காகவா வந்தோம்? இல்லையில்லை. உன் சேவடிக்குச் சேவை செய்யவே வந்தோம்’ என்று பேசும் இடம் இது.

முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’காரம் போட்டு மோக்ஷம் தரப்போவது யார் என்பதை உறுதி செய்த ஆண்டாள், இப்போது ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்கிறாள். இங்கும் ‘ஏ’காரம் இருக்கிறது. ‘உன்னைத்தவிர யாரிடமும் கையேந்த மாட்டோம்’ என்பதாக, பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது. ‘மறந்தும் புறந்தொழா மாந்தர்’ –

‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம்’ என்னுமிடத்தில் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ‘எற்றைக்கும்’ என்பது வைகுண்டத்தை, பரமபதத்தைக் குறிக்கிறது. ‘ஏழேழ் பிறவி’ என்பது 49 பிறவிகளைக் குறிக்கிறது. ‘ஒருவேளை நீ எங்களுக்கு மோக்ஷம் அளித்தால் (‘பறை தருதியாகில்’) எற்றைக்கும் பரமபதத்தில் உனக்குக் கைங்கர்யம் செய்து வருவோம். ஒருவேளை நீ அங்கிருந்து கிளம்பி வேறு அவதாரங்கள் எடுத்தால், 49 பிறவிகளிலும் எங்களையும் கூட அழைத்து வா’ என்கிறார்கள். ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்னும் நம்மாழ்வார்ப் பாசுரம் நினைவிற்கு வரலாம். தற்போது 10 அவதாரங்கள் முடிந்துள்ளன. இன்னும் 39 இருக்கிறதோ என்கிற தோற்ற மயக்கத்தை இப்பாசுரம் அளித்தால் அதுவும் ஒரு சுவையே.

‘ஏழு பிறவிகள்’ என்பது தமிழர்களின் நினைவடுக்குகளில் ஆழப்பதிந்த ஒன்று. ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ என்னும் வள்ளுவரின் வரிகளையும் நினைவில் கொள்வோம்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் உயர்வானவை. இப்பாசுரத்தில் பகவத் கைங்கர்யம் பேசப்படுகிறது. ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் ‘வயிற்காப்போன்’, ‘ கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போன்’ என்று இரு பாகவதர்கள் ( ஆச்சார்யர்கள்) போற்றப்படுகிறார்கள். எனவே அப்பாசுரம் பாகவத கைங்கர்ய விசேஷத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது ஒரு சுவை.

‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து’ என்னுமிடத்தில், ‘பொழுது விடிவதற்குள் வந்து உன்னைத் தொழுதோம்’ என்னும் பொருள் தெரிகிறது. ஆனால் இதுவரை, ‘பொழுது புலர்ந்துவிட்டது, பறவைகள் கத்துகின்றன, ஆனைச்சாத்தன் கூவுகிறான்’ என்று சொன்னதெல்லாம் பொய்யுரையோ?’ என்னும் எண்ண மயக்கம் ஏற்படலாம். கண்ணனைச் சேர்ந்து, அவனது திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற அவாவினால் பொழுது புலர்வதற்கு முன்னரே நடுநிசியிலேயே ஆய்ச்சியர் எழுந்து வந்துவிட்டனர் என்பதாகப் பொருள் கொள்ளவும் இடமளிக்கும் பாசுரம் இது.

வைணவ மரபில், பெருமாளுக்கு அனைத்து வழிபாடுகளும் முடிந்தபின், அவனது மனதிற்கு இதமளிகும் வகையில் ‘சாற்றுமுறை’ என்று தமிழ்ப்பாசுரங்களைச் சேவிப்பார்கள். அவ்வழக்கின்படி  ‘சிற்றஞ்சிறு காலே’, ‘வங்கக்கடல் கடைந்த’ – இந்த இரு பாசுரங்களையும் சொல்வது இன்றும் நடைபெறும் வழக்கம்.

கறவைகள் பின் சென்று

‘கறவைகள் பின் சென்று’ பாசுரம் ஆய்ச்சியர் தம் அஞ்ஞானத்தைப் பறை சாற்றித் தங்களுக்குச் சரணாகதி அளிக்க வேண்டும் என்று கேட்பதாக அமைகிறது.

வைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சுவைகாகச் சொல்வதுண்டு:

‘கூடாரை வெல்லும்’ பாசுரத்தில் அணிகலன்கள் வேண்டும், பாற்சோறு உண்போம், புத்தாடை உடுப்போம் என்று ஆய்ச்சியர் கண்ணனிடம் கூறினர். அதற்குக் கண்ணன் ‘இம்மாதிரியான சரீர வஸ்துக்களுக்காகவா நீங்கள் என்னிடம் வந்தீர்கள்?’ என்று பரிகாசம் செய்தானாம். அதற்கு ஆய்ச்சியர்,’ மன்னிக்க வேணும், நாங்கள் கல்வியறிவில்லாத, அறிவு குறைந்த ஆய்ச்சியர். எனவே தவறாகக் கேட்டுவிட்டோம். எங்களுக்கு வீடுபேறு வேண்டும். ஆனால், உன்னிடமுள்ள அன்பினால் நாங்கள் உன்னைப் பல செல்லப் பெயர்களாலும், ஒருமையிரும் அழைத்துள்ளோம். இதனால் நீ கோபமுறாமல், எங்களைக் காப்பாயாக’ என்று வேண்டினார்களாம்.

‘உந்தன்னோடு நமக்கு இங்கு உறவு ஒழிக்க ஒழியாது’ என்பதால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமான பிரிக்க முடியாத உறவு பேசப்படுகிறது.

ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் நவ-வித சம்பந்தம் என்று சொல்வர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்  ஒன்பது வகையிலான உறவு நிலைகள் உள்ளன என்பது கோட்பாடு. அவை பின்வருமாறு:

  1. ரக்ஷ்ய் – ரக்ஷ்யக (காப்பவன் – காக்கப்படுபவன்)
  2. பிதா – புத்ர (தந்தை – மகன்)
  3. சேஷ – சேஷி (ஆண்டான் – அடிமை)
  4. பர்த்ரு – பார்யா (கணவன் – மனைவி)
  5. ஞாத்ரு – ஞேய (அறிபவன் – அறியப்படுபவன்)
  6. ஸ்வ – ஸ்வாமி (உடையவன் – உடைமை)
  7. சரீர – சரீரி (உடல் – உயிர்)
  8. ஆதார – ஆதேய (தாங்குபவன் – தாங்கப்படுபவன்)
  9. போக்த்ரு – போக்ய (அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன்)

உன்றன்னைப் பிறவி பெறுந்தனை’,  உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது’,’அன்பினால் உன்தன்னைச் சிறு பேரழைத்தனவும்’ என்று மூன்று முறை இப்பாசுரத்தில் ஆய்ச்சியர் கண்ணனை முன்னைலையில் குறிப்பிடுகின்றனர் (Second Person Singular). இது நேரடியான பேச்சை உணர்த்துவதாயும், ஜீவாத்மா – பரமாத்மாவிற்கிடையில் உள்ள அணுக்கத் தொடர்பை உணர்த்துவதாயும் உள்ளது.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ பாசுரத்தில் ஆய்ச்சியரின் நோன்பு முடிவடைவது குறிக்கப்படுகிறது. நோன்பு முடிந்தமைக்கான அடையாளங்கள் சொல்லப்பட்டன.

இரண்டாம் பாசுரத்தில் (‘வைத்து வாழ்வீர்காள்’) நோன்பு நோற்பதால் செய்யும் கிரியைகள் சொல்லப்பட்டன. இன்றைய பாசுரத்தில் அவை விலக்கப்படுகின்றன. இன்று பாற்சோறு உண்கிறார்கள், நெய் முழங்கை வழியாக ஓடும் அளவிற்கு அக்கார அடிசில் உண்கிறார்கள், புத்தாடை அணிகிறார்கள், சூடகம், பாடகம், தோடு, செவிப்பூ முதலிய பல அணிகலன்களை அணிகிறார்கள். இவை நோன்பு முடிந்ததற்கான அடையாளங்கள்.

இப்பாசுரத்தில் ‘கூடாரை’ என்னும் சொல் உற்று நோக்கத்தக்கது. ‘கூடார்’ என்பவர் எதிரிகள் / பகைவர் என்பது வெளிப்படை. நான்கு வகையான பகைவர்கள் உள்ளார்களாம்.

  1. கண்ணனை அறியாதவர்கள்
  2. அறிந்தும் வந்து அடி சேராதவர்கள்
  3. அறிந்தும் மனம் குழம்பி, அடியார் குழாத்தில் சேராதவர்கள்
  4. அறிந்தும் வேண்டுமென்றே எதிர்ப்பவர்கள் / சேராதவர்கள்

இவர்கள் அனைவரையும் அன்பினால் வென்று தன்னிடம் சேர்த்துக் கொள்பவன் கண்ணன் என்னும் பொருள்பட வருகிறது இச்சொல்.

இது சொல்லாமல் சொல்லும் பொருளும் உண்டு. ‘கூடாரை வெல்லும்’ என்றால், ‘எதிர்ப்பவரை வென்று’ என்று பொருள் படுகிறது. ஆக, ‘கூடியவரிடம் தோற்று’ என்கிற மறைபொருளும் வருகிறது என்பார் உரையாசிரியர். அடியாரின் அன்பினால் அவர்களிம் தோற்று நிற்கிறான் என்கிறாள் ஆண்டாள்.

நெய், சோறு, பால் விஷயத்தில் மகளும் தந்தையும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். பெரியாழ்வார் பாசுரத்தைப் பாருங்கள்.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல

பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

வைஷ்ணவ சித்தாந்தத்தின் படி, இப்பாசுரத்தில் வரும் பொருட்கள் குறிப்பனவாகப் பெரியோர்கள் / காலட்சேபக்காரர்கள் உரைப்பவை:

  1. பறை – பகவத் கைங்கர்யம் / சரீர , புஷ்ப கைங்கர்யம்
  2. கூடாரை வெல்லும் – கண்ணனின் குணங்களான சவுந்தர்யம், சவுசீல்யம், சவுர்யம்
  3. சூடகம் , தோள்வளை – சங்கு சக்கரப் பொறி
  4. செவிப்பூ – த்வயம் என்னும் பக்தி
  5. பாடகம் – காலில் அணியப்படும் அணிகலன் = சரணாகதி
  6. பல்கலன் – அடியாருக்குத் தேவையானபக்தி, ஞானம், வைராக்யம்
  7. ஆடை – ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது என்று உணர்ந்திருத்தல்

இப்பாசுரத்தில் ‘பாடகம்’ என்பது ‘பாத கடகம்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு.

மாலே மணிவண்ணா

‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில் ஜீவாத்மா பரமாத்மாவைச் சேறும் இறுதி நிலை தெரிகிறது. அதற்கான நோன்பிற்குத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

‘நாங்கள் மோக்ஷம் பெற அவாவுடன் தயாராக உள்ளோம். இதற்குத் தேவையான பொருட்களை அருள்வாயாக. உலகை நடுங்க வைக்கும் ஒலி எழுப்பும் பாஞ்சசன்னியம் போன்ற பல சங்குகள், எங்களின் வருகையை அறிவிக்கும் பறை, விடியற்காலையாகையால் ஒளியூட்ட அழகிய விளக்கு, பனியிலிருந்து காக்க விதானம் போன்ற துணிக்குடை, அனைத்திற்கும் மேல் வாழ்த்துப் பாடுவதற்குப் பண்ணிசைப்பார், நாங்கள் வருவதை அறிவுக்கும் கொடி (வேறு எங்கிருந்து வந்து சேர்வோரும் தெரிந்துகொள்ள) என்று அருள்வாயாக,’ என்பதாகப் பொருள்படுகிறது பாசுரம்.

‘பல்லாண்டிசைப்பாரே’ என்பதால் இவ்விடம் ‘பல்லாண்டுப் பாசுரம்’ பாடிய பெரியாழ்வார் குறிப்பிடப்படுகிறார் என்றும் ஒரு பார்வை உண்டு. ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன்’ என்று பின்னர் குறிப்பிடப்போவதை முன்னரே இவ்வாறு சொல்கிறாள் #ஆண்டாள் என்பது ஒரு சுவை.

‘மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்’ என்னும்போது பெரியோர் செய்தவைகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது. முன்னர் ‘செய்யாதன செய்யோம்’ என்று சொன்னது நினைவிருக்கலாம். முன்னோர் செய்யாதன செய்யோம் என்ற பொருளில் இன்றைய பாசுரத்தின் ‘மேலையார்’ விசேஷமான பொருள் தருகிறது. முன்னோர் செய்தவற்றைப் பெருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

‘இத்தனை பொருள்களையும் நான் எப்படித் தர முடியும் இந்த அதிகாலை வேளையில்?’ என்று கண்ணன் கேட்க, அதற்கு ‘நீ பிரளய காலத்தில் ஆலின் இலையில் மிதந்தவன். ஆனால் அச்சிறிய வயிற்றுக்குள் உலகங்களைச் சுமப்பவன். ஆகையால் இவற்றையெல்லாம் தருவிப்பது உனக்கு ஒரு பெரிய செயல் அல்ல’ என்று ஆய்ச்சியர் கூறினார்கள் என்பது காலட்சேபங்களில் சேவிக்கப்படுவது.

ஒருத்தி மகனாய்

‘ஒருத்தி மகனாய்’ பாசுரத்தில் ‘ஒருத்தி’ என்னும் சொல் இருமுறை வந்து, முதல் முறை தேவகியையும், பின்னர் யசோதையையும் குறிப்பதாய் வருகிறது. கண்ணனுடன் ஒரு இரவு மட்டுமே கூட இருந்த தாய்க்கும், இளமைப்பருவம் முழுதும் வளர்த்த தாய்க்கும் ஒரே பெயரிட்டு அழைக்கிறாள்.  பெற்ற தாயும், வளர்த்த தாயும் ஒரு நிறை சமானமானவர்கள் என்பதை உணர்த்தவே ஒரே சொல்லைப் பயன்படுத்தினாள் ஆண்டாள்.

கண்ணனைக் கண்ட ஆய்ச்சியர் அவனது விருத்தாந்தங்களைச் சொல்லத் துவங்குகிறார்கள். ‘நீ கம்சனின் வயிற்றில் நெருப்பென்ன நின்றாய்’ என்கிறார்கள். இதைச் சொல்ல வேண்டிய தேவை என்ன? ‘நீ யாரென்பதை உணர்ந்துகொள். நீயே ஊழி முதல்வன். ஆனாலும் இவ்வவதாரத்தில் பல செயல்களைச் செய்ய வந்தாய். அவற்றுள் ஒன்று கம்ஸ வதம். செய்துவிட்டாய். ஆனால், நீ வந்த காரியம் இன்னும் முடிவுறவில்லை. எங்களுக்குப் பறை கொடு’ என்று நினைவூட்டுகிறார்களாம்.

‘அருத்தித்து வந்தோம்’ என்று சொல்கிறார்களே ஆனால் ஒரு அர்ச்சனையும் செய்யவில்லையே என்றால், சென்ற பாசுரத்தில், ‘தென் இலங்கைக் கோமானைச் செற்றாய் திறல் போற்றி, சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கழல் போற்றி, வேல் போற்றி, குணம் போற்றி’ என்று பல வகையான அர்ச்சனைகள் செய்தார்களே, அதைச் சொல்கிறார்கள். அதையும் நினைவூட்டுகிறார்கள். போற்றிப் பாடலும் முடிந்தது, ஆகவே பறையை நினைவில் கொள்க’ என்று பார்ப்பது ஒரு சுவை.

‘அருத்தித்து வந்தோம், ஆகையால் பறை தா’ என்று கேட்கவில்லை. ‘அவ்வாறு வந்தோம், பறை தருவதாக இருந்தால் கொடு, இல்லையேல் உன் சேவையே ( கைங்கர்யமே) எங்களுக்குப் போக்யம்,’ என்கிற பொருளில் ‘பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி ‘ என்று சொல்கிறார்கள் ஆய்ச்சியர்.

வைஷ்ணவர்களுக்கு மோக்ஷமே பிரதானம். அதையும் விட முக்கியமானது கைங்கர்யம் என்கிற சம்பிரதாய நெறி முன்னிறுத்தப்படுகிறது இப்பாசுரத்தில்.

 

அன்றிவ்வுலகம்

‘அன்றிவ்வுலகம் அளந்தாய்’ #பாசுரம், துயில் எழுந்த கண்ணனைத் துதிப்பதாய் அமைந்துள்ளது. துதியுடன் பெருமாளின் அவதாரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

‘உலகம் அளந்தாய் என்பதால்’ திரிவிக்கிரம அவதாரமும், ‘தென் இலங்கைச் செற்றாய்’ என்பதால் இராமாவதாரமும், ‘குன்று குணிலா வெறிந்தாய்’, ‘கன்று குடையாவெடுத்தாய்’ என்பதால் கிருஷ்ணாவதாரமும் குறிக்கப்படுகின்றன. ‘மாரி மலை’ பாசுரத்தில் நரசிம்மாவதாரம் குறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இப்பாசுரத்தின் மூலம் உணர்த்தப்படுவன:

  1. திருவடியின் சிறப்பு-  உலகம் அளந்தது
  2. இறைவனின் திறன் – இராவணன் அழிப்பு
  3. பெருமாள் புகழ் – சகடம் உதைத்தது
  4. கண்ணனின் ஆற்றல் – கன்றினை விளவின் மீது எறிந்தது
  5. கண்ணனின் குணம் – குன்றைக் குடையாய் எடுத்து ஆநிரைகளைக் காத்தது

முதலில் திருவடியின் பெருமை, பின்னர் திருக்கைகளின் பெருமை என்பதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

‘பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்னுமிடத்தில் திடீரென்று வேல் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழலாம். முதல் பாசுரத்தில் ‘கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்’ என்று வேல் உடைய நந்தகோபனின் மகன் என்று கண்ணனைக் குறிக்கிறாள். எனவே கண்ணனிடத்தில் வேல் இருந்தது நியாயமே.

திரிவிக்கிரமாவதாரம் பேசப்படும் இப்பாசுரம் போலவே ‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்திலும், ‘அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த’ என்று இன்னொரு பாசுரத்திலும் அதே அவதாரம் பேசப்படுவது ஒரு சுவை. தனது அனைத்துப் பாசுரங்களின் வழியாகவும் பெருமாளின் பல அவதாரங்களைப் பேசுகிறாள் ஆண்டாள்.

ஒவ்வொருவராக எழுப்பி, திருமகளையும் எழுப்பி, அவளை முன்னிட்டு எம்பெருமானை அடைந்து, அவனையும் எழுப்பி ( நரசிம்ம அவதாரத்தின் மூலமாக), அவன் எழுந்தவுடன் பறை வேண்டி, அவனைத் துதிக்கத் துவங்குகிறார்கள். இது சரணாகதிக்குப் பின் நாம் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உணர்த்துவதாக உள்ளது.

‘என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் வந்தோம்’ என்பதால், ‘வேறு ஒன்றும் தேவை இல்லை, உன் கைங்கர்யமே பிரதானம்’ என்பது உணர்த்தப்படுகிறது.

மாரி மலை முழைஞ்சில்

ஶ்ரீவைஷ்ணவ சரணாகதித் தத்துவத்தின் குறியீடு இப்பாசுரம்.

‘மாரி மலை முழைஞ்சில்’ பாசுரத்தில் பெருமாள் எழுப்பப்பட்டுக் கண்விழிக்கிறார் என்பது பொதுப்பொருள். எவ்வாறு எழுந்து வருகிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்ச்சியர் விரும்புகிறார்கள் என்பது இப்பாசுரத்தில் தெளிகிறது.

விடாது பெய்யும் மழையின் காரணகாகக் குகைக்குள் கிடந்து உறங்கும் ஆண் சிங்கம், மழை நின்றவுடன், சோம்பல் முறித்து, பிடரி மயிர் சிலிர்க்க, கண்களில் தீப்பொறி பறக்க எழுந்து வருவதைப்போல் கண்ணனே நீ எழுந்து வருக. அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்றவாறு அருள்வாயாக என்று ஆய்ச்சியர் வேண்டுவதாய் அமைந்துள்ள இப்பாசுரத்தில் திருமாலின் முக்கிய அவதாரமான நரசிம்மாவதாரம் சுட்டப்படுவது ஒரு சுவை.

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாய் வளர்ந்து, விளையாடி, வாலிபம் எய்தி, பின்னர் பாரதப் போரில் பெரும் பங்காற்றி நீதியை நிலைநாட்டுகிறான்.  இராமாவதாரமும் அப்படியே. ஆனால், நரசிம்மாவதாரத்தில் பெருமாள் தோன்றி, உடனே பேருருக்கொண்டு, இரணியனை அழித்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்து சென்றான். தோற்றத்தின் காரணம் மிகச்சிறிய காலத்திலேயே நிறைவடைகிறது. அதுபோல், நீ இராமனாகவோ, கண்ணனாகவோ எழுந்து வராமல், நரசிம்மனாய் வந்து, உடனே சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்று. கால தாமதம் வேண்டாம் என்று ஆய்ச்சியர் வேண்டுவது போல் அமைந்துள்ளது பாசுரம்.

இன்னொரு சுவை, கொடிய சீற்றத்துடன் துலங்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் அன்புடனே இருக்கும். அதுபோல், கொடிய இரணியனை வதம் செய்யும்போது கடுஞ்சினத்துடன் இருந்த நரசிங்கம், பிரகலாதனைப் பார்த்தவுடன் மனம் கனிந்துருகி அவனுக்கு அருள் மாரி பொழிந்து நின்றது. அதுபோல் நீயும் எங்களுக்கு அருள் புரிவாய் என்று ஆய்ச்சியர் வேண்டுகிறார்கள்.

ஆண்டாள் கண்ணனை நரசிம்மமாகவே பார்க்கிறாள் என்பது திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே தெரிகிறது. ‘ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனை அழைக்கிறாள்.

‘மாரி மலை’ பாசுரத்தில் ‘மன்னிக் கிடந்து உறங்கும்’ என்னுமிடத்தில் ‘மன்னி’ ( பொருந்தி இருந்து ) என்னும் பயன்பாடு உற்று நோக்கத்தக்கது. பல ஆழ்வார்களுக்கு இந்த ‘மன்னி’யின் பால் ஒரு ஈர்ப்பு உள்ளது.

தேரழுந்தூர்ப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் ‘அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன்’ என்றும், நம்மாழ்வார் ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்றும் பாடுகிறார்கள்.

எழுந்து வந்த சிங்கம் நீதி பரிபாலனம் செய்வது போல் அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து என்ன செய்ய வேண்டும்? ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ’ என்று ‘எமது சரணாகதி விஷயமான விண்ணப்பத்தைச் சற்று ஆராய்ந்து முடிவெடுப்பீர். பிரகலாதனின் பக்திக்கு இரங்கி அவனுக்கு அருள் புரிந்தது போல், எமக்கும் அருள்வீர்’ என்று ஆய்ச்சியர் வேண்டுகின்றனர்.

என்னதான் ஆசார்யர்கள், திருமகள் என்று இவர்களை முன்னிட்டு சரணாகதி செய்துகொண்டாலும், பெருமாள் தானும் ஆராய்ந்தே முடிவெடுக்கிறான் என்பது போல் அமைந்துள்ள இப்பாசுரம் ஶ்ரீவைஷ்ணவ சரணாகதி தத்துவத்தின் குறியீடு.

அங்கண் மாஞாலத்து அரசர்

‘அங்கண் மாஞாலத்து அரசர்’ பாசுரத்தில் நோன்பு நோற்பவர்கள் கண்ணனைச் சென்று சேர்ந்து, ‘எங்களைக் கடாக்ஷித்தருள வேணும்’ என்று வேண்டுகிறார்கள் என்பது பொதுப்பொருள். சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது என்பது வெளிப்படை.

இப்பாசுரத்தில் உள்ள சில சொற்கள் ஆழ்ந்த பொருளுடையவை. சிலவற்றைப் பார்ப்போம்.

‘அங்கண்’ என்னும் சொல்லை இருமுறை பயன்படுத்துகிறாள் ஆண்டாள். பெரிய இடத்தை உடைய உலகம் என்னும் பொருளிலும், அழகிய கண்கள் என்னும் பொருளிலும் வந்து ‘அங்கண்’ அழகு சேர்க்கிறது.

‘உலகின் பல இடங்களிலும் அரசாட்சி செய்யும் அரசர்கள் தங்கள் கர்வத்தை விட்டொழித்து உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்து நிற்கிறோம்’ என்பது ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் அடி நாதத்தைத் தொடுகிறது. பெருக்காரணை ஸ்வாமி என்னும் வைணவ அடியாரின் திருப்பாவை காலட்சேபத்தில் எட்டு வகையான கர்வங்களை / குற்றங்களைச் சொல்கிறார். ‘இவை அனைத்தையும் விட்டு உன்னிடம் நாங்கள் வந்து சரணாகதி செய்துகொண்டுள்ளோம்’  என்று ஆய்ச்சியர் வடிவிலான அடியார்கள் தெரிவிக்கிறார்கள் என்கிறார்.

எட்டு வகையான குற்றங்கள்:

  1. உடலும் ஆத்மாவும் ஒன்றே என்ற எண்ணம்
  2. ஜீவாத்மாக்கள் சுதந்திரமானவர்கள் என்கிற எண்ணம்
  3. திருமால் தவிர ஏனைய தெய்வங்களால் / தேவதைகளால் மோக்ஷம் அளிக்க முடியும் என்கிற எண்ணம்
  4. திருமாலைத் தவிர இன்னொருவரிடம் நாம் அடிமைகளாய் இருக்கலாம் என்னும் எண்ணம்
  5. சரணாகதி தவிர மற்றைய வழிகளிலும் மோக்ஷம் பெறலாம் என்பது
  6. சிற்றின்பத்தில் ஈடுபாடு
  7. நமது சுய சக்தியாலேயே நாம் செயல்படுகிறோம் என்கிற எண்ணம்
  8. திருமால் அடியாருக்கு உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்துவது

‘நாங்கள் அகந்தை அழிந்து, தூயோமாய், தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்தித்தபடியே உன் வாசல் வந்து விட்டோம். எனவே அழகிய, சிவந்த உன் கண்களை மெல்லத் திறந்து எங்களைக் காண்பாய் ( ‘செங்கண் சிறுச்சிறுதே எங்கள் மேல் விழியாவோ’)’ என்கின்றனர் ஆய்ச்சியர். பெருமாளின் கண்ணொளி பூரணமாய்த் தங்கள் மேல் பட்டால் அதன் அருள் வெள்ளத்தைத் தாங்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எங்களைக் கடா‌க்ஷித்து அருள வேணும்’ என்று ஆய்ச்சியர் கூறுகிறார்கள் என்பர் உரையாசிரியர்.

பாசுரத்தில் இன்னும் சில சுவைகள் உள்ளன.

‘திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், சூரியனும் சந்திரனும் போன்ற உன் இரு கண்களாலும் எங்களை நோக்குக என்று வேண்டுகிறார்கள் என்று கொள்வது ஒரு சுவை. ‘கதிர் மதியம்’ என்று அவனது முகத்தை இன்னொரு பசுரத்தில் சொல்கிறாள் ஆண்டாள்.

‘ஒரே நேரத்தில் சூரியனும், சந்திரனும் எழுந்தால் சிவந்த தாமரை மலர் தனது இதழ்களை முழுவதும் திறவாமலும் அதே நேரம் முழுவதும் மூடாமலும், பாதி திறந்து பாதி மூடிய வகையில் இருக்கும். அதைப் போல்,உன்னுடைய  கரியவாகிப் புடை பறந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்கள் (அமலனாதிபிரான்) பாதி திறந்த நிலையிலும் பாதி மூடிய நிலையிலும் இருக்கும் வகையில் எங்களைக் கண்டு அருள் புரிவாய். ஏனெனில் உன் முழுப் பார்வையையும் நாங்கள் தாங்க மாட்டோம்’ என்பதாகக் கொள்வது இன்னொரு சுவை.

பெரியாழ்வாரும் கண்ணன் தனது மகளைத் (ஆண்டாள்) திருமணம் செய்துகொண்டதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு ‘செங்கண் மால் கொண்டு போனான்’ என்கிறார்:

‘ஒரு மகள் தன்னை உடையேன்  உலகம் நிறைந்த புகழால் 
திருமகள் போல வளர்த்தேன்  செங்கண் மால் தான் கொண்டு போனான்’

கண்ணனின் பாதி மூடிய கண்கள் அடியார்களின் குற்றங்களைக் காணாத நிலையையும், பாதித் திறந்த கண்கள் அடியாரின் பக்தி / சரணாகதி இவற்றை மட்டும் கண்ணுறும் நிலையிலும் இருக்கின்றன என்று கொள்வது இன்னொரு சுவை. ‘குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்னும் வள்ளுவர் பார்வையும் ஈண்டு நோக்கத்தக்கது.

கண்ணன் அடியாரை ஏன் நோக்க வேண்டும்? சென்ற பாடலில் திருமகள் வழியாகக் கண்ணனை அடைந்தாகிவிட்டது. மீதம் இருப்பது கண்ணனின் அருள் பெறுதல் மட்டுமே. சரணாகதிக்கான அத்தனை கிரியைகளையும் செய்தாகிவிட்டது. ஆச்சார்யர்கள எழுப்பி. திருமகளையும் வேண்டி இவர்களை முன்னிட்டு ‘பறை’ கேட்டாகிவிட்டது. இனி கண்ணன் அருள் / மோக்ஷம் மட்டுமே கிட்ட வேண்டும். அதற்குக் கண்ணன் துயில் எழ வேண்டும். துயில் எழுவதற்கு அடையாளமாக அவன் கண்களைத் திறக்க வேண்டும். அதே நேரம் கண்களை முழுதுமாகத் திறந்துவிடவும் கூடாது. ‘செங்கண் சிறுச் சிறுதே எம்மேல் விழியாவோ’ என்று சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். அதற்கான பாசுரம் இது.

‘பள்ளி’ என்னும் சொல்லும் கவனிக்கத்தக்கது. ஜைனத் துறவியர் உண்டு, உறங்கிக் கல்வி போதித்த இடங்கள் பள்ளி என்று அறியப்பட்டன. உறங்குதல் என்னும் பொருளில் ‘பள்ளிக் கட்டின் கீழே’ என்று ஆண்டாளும் பாடுகிறாள். ( நமது பள்ளிகளில் நாம் உறங்குவதும் இதனால் தானோ?)

பி.கு.: எங்கும் உள்ள கடவுளைக் காணக் கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? விஸ்வரூப தரிசனம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு இப்பாடலைக் காட்டலாம். கோவிலுக்குப் போவது நாம் பெருமாளைப் பார்க்க அல்ல, அவன் நம்மைப் பார்க்க. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குப் ‘பகுத்தறிவு’ தடுக்கிறது. ஹூம்.

%d bloggers like this: