ஜடேரி – அனுபவங்கள்

‘நற்போதுபோக்கு’ என்று வைஷ்ணவர்கள் சொல்வதுண்டு. காலக்ஷேபம் கேட்பது, பெருமாளைச் சேவிப்பது, பாகவத கைங்கர்யம் என்று பலதும் இதில் அடங்கும். அவ்வகையில் நேற்று ஜடேரி சென்று வந்தோம்.

நண்பர்கள் வீரராகவன் சம்பத் மற்றும் பிரசன்னாவுடன் ‘ஆடியாடி அகம் கரைந்து’ என்னுமாபோலே ஒருவழியாக ஜடேரி சென்று சேர்ந்தோம். நுழைந்தவுடன் அன்புப் பிரவாகமாக ஊர் மக்கள் சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணர் பஜனை மடத்தில் அமர்ந்து பேசத்துவங்கினோம்.

‘இவர் தான் ஜடேரி பத்தி முதல்ல எழுதினார். அதுக்கப்புறம் நான் வந்தேன், இன்னும் பலர் வந்தாங்க’ என்று மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஊர் மக்கள் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்தனர். ‘உங்க மூலமா பெருமாள் எங்களுக்கு உதவினார்’ என்று கள்ளம் கபடம் அற்ற சகோதரர்கள் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஜடேரி பற்றிய அடியேனின் கட்டுரைக்குப் பின் ஹிந்து நாளிதழ், புதிய தலைமுறை என்று பலரும் வந்து பேட்டி கண்டு சென்றுள்ளனர் என்றார் பெரியவர் தெய்வசிகாமணி. நல்ல எண்ணத்தில், மன வருத்தத்துடன் எழுதியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது பெருமாள் அனுக்ரஹம் தான். நாம் வெறும் கருவி தான். செய்வது யாரோ.

திருமண் கல்
ஒரு டிராக்டர் மண் – பெரியவர் தெய்வசிகாமணி

பெரியவர் தெய்வசிகாமணி ‘நான் இன்னிக்கி நல்லா இருக்கறதுக்கு இந்த திருமண், எம்பெருமான் தான் காரணம்’ என்றார்.

IMG_1488
செக்கில் பொடியாகும் திருமண் கல்

பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமண் செய்முறையைக் காட்டினார்.

IMG_1493
குழியில் திருமண் வடிகட்டுதல்

ஒரு டிராக்டர் மண் ரூ.4000. அருகில் உள்ள ஊரில் இருந்து எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த மண்ணையும் கல்லையும் உடைத்து, செக்கில் வைத்துப் பொடியாக்குகின்றனர். அந்தப் பொடியை மண்ணில் உள்ள குழியில் கொட்டி, 24 லிட்டர் நீர் ஊற்றிக் கலக்குகின்றனர்.

IMG_1491
பல முறை சுத்திகரிப்பு

பின்னர் அழுக்குகளை நீக்க 2-3 முறைகள் வடிகட்ட வேண்டி இன்னொரு குழியில் இறைக்கின்றனர். முதுகு ஒடியும் வேலை. ஓரிரு நாட்கள் வடியவிட்டு, ஈர மண்ணை எடுத்துக் காயவைத்து, பின்னர் சிறிய கட்டை கொண்டு திருமண் கட்டிகளை உருவாக்குகின்றனர். இதில் செயற்கை விஷயங்கள் எதுவும் இல்லை.

IMG_1494
ஈரத் திருமண் , இறுதி வடிவம்

வெளி இடங்களில் உள்ளது போல் ரசாயனக் கலவைகள் எதுவும் சேர்ப்பதில்லை. எனவே திருமண் பளீரென்று வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையான திருமண் பளீர் வெள்ளை நிறத்ததன்று.

இம்மாதிரியாக உருவாக்கிய திருமண்ணை வெளியூர்களுக்கு ஏற்றி அனுப்புகிறார்கள். போக்குவரத்தில் இவை உடைந்து போகின்றன. ஆகவே, ஸ்ரீசூர்ணம், அதற்கான ஓலைப்பெட்டி என்று அனைத்தையுமே ஜடேரியிலேயே உற்பத்தி செய்தால் விற்பதற்கும், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கும் வசதியாக இருக்கும்.

திருமண் தயாரிப்பில் எவ்விடங்களில் இயந்திரங்களைப் பயன் படுத்தலாம், ஓலைப் பெட்டிகள் தயாரித்தல் என்று ஏதாவது உதவ முடியுமா என்று ஆராய்வதற்கென்று திரு. பிரசன்னா வந்திருந்தார். ஸ்ரீசூர்ணம் தயாரிக்க உதவவும், திருமண்ணின் தரத்தை உயர்த்த வழிகளை ஆராயவும் வீரராகவன் சம்பத் வந்திருந்தார்.

பின்னர் அருகில் இருந்த காலனிக்குச் சென்று, அங்கிருந்த கோவிலில் விழுந்து சேவித்து, அவர்களுக்கு ஒரு டோலக்கைப் பரிசாக அளித்து வெளியேறினோம். (டோலக் இல்லையாதலால் பஜனைகள் நடப்பதில்லை என்று தெரிந்து, வீரராகவன் தான் ஒரு டோலக்கை அளித்தார். அதை அடியேனை விட்டு மக்களிடம் அளிக்கச் செய்தார். பெரிய மனது அவருக்கு. நான் ஓசியில் குளிர் காய்ந்தேன்).

சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்னும் இளைஞர் வந்திருந்து மிருதங்கம், ஹார்மோனியம் என்று அளித்து, பஜனையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

திருமண் தயாரிக்க ஜடேரி மக்களுக்குத் தேவை :

1. கல் உடைக்கும் கருவி
2. மண்ணைச் சுத்திகரிக்கும் கருவி
3. ஓலைப் பெட்டி தயாரிக்கும் தொழில் திறன்
4. ஸ்ரீசூர்ணம் தயாரிக்கும் தொழில் முறை

வாழ்க்கையென்பது பல அனுபவங்களின் தொகுப்பு. அந்த அனுபவங்கள் நமது தேர்வைப் பொறுத்து அமையும். நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது நற்போதுபோக்கு. ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக இந்த நற்போதுபோக்கில் ஈடுபட அனைவரையும் அழைக்கிறேன்.

புதிய ஆங்கில ஆண்டில் நற்போது போக்குவோம் வாரீர்.

தொடர்புக்கு : வீரராகவன் சம்பத் (+91-9655-219245). (www.pracharam.in)

ஜடேரி பற்றிய முந்தைய பதிவுகள்:

ஜடேரி 1

ஜடேரி 2

ஜடேரி 3

திருமண் கிராமம் – அடுத்த கட்டம்

திருமண் இட்டுக் கொள்வதன் மூலம் ஜடேரி கிராம மக்களுக்கு நன்மை செய்யலாம் வாருங்கள்.

திருமண் தயாரிக்கும் கிராமம் ஜடேரியைப் பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து பலர் அந்தக் கிராமத்திற்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்களுக்கான ஆன்மீக உணவளிக்க முன்வந்துள்ளனர். இத்தனையும் தீபாவளி அன்று நடந்துள்ளது. 

இதைத் தவிர வேறு ஒரு செயலும் செய்யவேண்டியுள்ளது. 

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைஷ்ணவர்கள் திருமண் தரித்தே வந்துள்ளனர். இதில் பிராம்மணர்களும் அடக்கம். பல வைஷ்ணவ குலங்கள் – வன்னியர், தேவர், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், நாயக்கர் முதலானோரும் அவ்வாறே நித்யப்படி திருமண் காப்பு தரித்து, தங்கள் குடும்பத்தில் வழக்கத்தில் உள்ள அனுஷ்டானங்களையும் விடாது பின்பற்றியே வந்துள்ளனர்.

திராவிட இயக்கங்கள் என்னும் நச்சு நுழைந்தபின், திரைப்பட நடிகர்கள் நாட்டின் நாயகர்களாக ஆன பின், ஆங்கில அரசின் சூழ்ச்சிக் கல்வியால் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்கள் அதிகார வர்க்கங்களில் அதிகரித்த பின் திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் குறைந்துவிட்டது. திருமண் இட்டுக் கொள்வது ஏதோ பத்தாம் பசலித்தனம்  என்னும் எண்ணம் ஏற்பட்டு  அவ்வழக்கம் அடியோடு வழக்கொழிந்துவிட்டது.

தற்காலத்தில் கோவில் அர்ச்சகர்கள், உபாத்யாயம் பண்ணி வைப்பவர்கள் தவிர அனேகம் பேர் திருமண் இட்டுக் கொள்வது இல்லை. ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்க்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு, தற்போது அதுவும் குறைந்து வருகிறது.

திருமண் பெட்டி

ஜடேரி கிராமவாசிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமானால், திருமண்+ஶ்ரீசூர்ணம் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். Supply – Demand மூலமே இவர்களுக்கு நல்லது செய்ய முடியும். திருமண் இட்டுக்கொள்வது ஒரு ஆன்மீகச் சின்னம் தரித்தல் என்பது போக, அவ்வழக்கம் ஒரு Fashion Statement என்கிற அளவில் பவனி வர வேண்டும். இதற்கு வாரம் ஒரு நாளெனும் திருமண் தரித்துச் செல்வது என்று மக்கள் முன்வர வேண்டும்.

சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அடுத்த ஓராண்டுக்கு ஒருவருகொருவர் பரிசளிக்கும் போது, ஒரு திருமண் பெட்டியைப் பரிசளித்தால் என்ன? திருமண் பெட்டியுடன் #MeToo, #IamwithDharma, #Thiruman என்று ஹாஷ் டேகுகளில் சமூக ஊடகங்களில் படங்கள் வெளியிட்டால் என்ன? திருமண் இட்டுக் கொண்ட சுயப் படங்களை வெளியிட்டால் என்ன? கிழிந்த ஜீன்ஸ் அணிவது Fashion என்று உள்ளது. திருமண் இட்டுக்கொளது Fashion என்று ஆனால் ஜடேரி முதலிய கிராமங்கள், அங்கு வாழும் மக்கள் எல்லாருக்கும் நன்மை ஏற்படும். திருமண் தொழிலும் செழிக்கும்.

இம்முயற்சியால் மூன்று பிரிவினருக்கு  நன்மைகள் உண்டாகும்.

  • ஜடேரி மக்கள்
  • திருமண் பெட்டி என்று மரப் பெட்டிகள் தயாரிப்போர்
  • திருமண் வைத்துக் கொள்ளும் ஓலைப்பெட்டி தயாரிப்போர்          
ஓலைப் பெட்டி

    ஒரு ஐபோன் சுமார் 70 ஆயிரத்துக்கு விற்கிறது. ஒரு பட்டுப் புடவை சில ஆயிரங்கள். கார், பைக் முதலியன லட்சங்களில். மரத்தாலான திருமண் பெட்டி சுமார் ரூ 250 ஆகிறது. ஓலைப்பெட்டி இன்னமும் குறைவே. 

இனியொரு விதி செய்வோம். இந்த ஆண்டு முழுவதும் திருமண் + ஶ்ரீசூர்ணம்  உள்ள திருமண் பெட்டிகளை வாங்கிப் பரிசளிப்போம். திருமண் இட்டுக்கொள்வோம். திருமண் இட்டுக் கொள்வதைக் காப்பு என்பர் பெரியோர். எதிலிருந்து காக்கிறதோ இல்லையோ, அதைத் தரித்திருந்தால் தீய செயல்களில் நாம் ஈடுபடாமல் காக்கும் என்பது உறுதி.

அலுவலகங்களில் Ethnic Wear என்று சில நாட்களில் உடை உடுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது. அன்னாட்களில் அவ்வுடைகளுடன் திருமண்ணும் தரித்துச் செல்லலாம். உடை மட்டும் Ethnic என்றில்லாமல், நமது நெற்றியும் அவ்வறே இருக்கச் செய்யலாம். 

இது ஆண்களுக்கு மட்டுமானது அன்று. பெண்களும் நல்ல நாட்களில் கோதைத் திலகம் என்று சிறிய அளவில் இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்தது. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களும் கூட இதை ஒரு Fashion Attire என்பதாகவாவது பின்பற்றலாம். இதன்மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இதன் பயன்பாடு அதிகரிக்கும். முயற்சி செய்து பார்ப்போமே.  

ஶ்ரீரங்கத்தில் இருந்து திரு.வீரராகவன் சம்பத்  என்பார் மலிவான விலையில் திருமண் பெட்டிகளை அனுப்பி வைக்கிறார். இதற்கு அவர் ஜடேரி கிராமத்தில் இருந்து திருமண் கட்டிகளை வாங்கி, ஶ்ரீரங்கத்தில் ஶ்ரீசூர்ணம் தயாரித்து, பெட்டிகளில் வைத்து வேண்டுபவர்களுக்கு அனுப்புகிறார். ஜடேரி கிராமத்தில் தயாராகும் திருமண்ணின் தரத்தை அயோத்தியில் தயாராகும் திருமண்ணின் தரத்திற்கு உயரத்த முயன்றுவருகிறார். அன்னாரின் முயற்சிக்குத் தோள் கொடுப்போம். இவரைத் தொடர்புகொள்ள  +91 9655219245 Email: do@pracharam.in

திருமண் கிராமம்

தமிழ் நாட்டில் திருமண் தயாரிக்கும் கிராமம், அதன் இன்றைய நிலை.

உங்களுக்குத் திருமண் இட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளதா? இருந்தால் மேலே படியுங்கள். இல்லையென்றால் அவசியம் படியுங்கள்.

ஶ்ரீவைஷ்ணவச் சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது ‘பஞ்ச சம்ஸ்காரம்’ (5 சம்ஸ்காரங்கள்). அதில் முதலாவதாக வருவது திருமண் காப்பு (புண்ட்ரம்).   ஊர்த்துவ புண்ட்ரம் என்று உடலில் 12 இடங்களில் இட்டுக்கொள்ளப்படும். ஒவ்வொரு திருமண் காப்பிற்கும் ஒரு நாரயண நாமம். ஆக, பன்னிரண்டு பெயர்கள் ( அச்சுத, மாதவ, கேசவ…).

இந்தத் திருமண் தயாரிப்பில் தானே நேரடியாக ஈடுபட்டார் ஶ்ரீமத்இராமானுஜர் என்று குருபரம்பரை அறிவிக்கிறது.

செய்யாறு அருகில் ஜடேரி என்னும் கிராமத்தில் திருமண் தயாரிப்பையே தங்களது ஒரே தொழிலாகக் கொண்டு செய்துவருகின்றனர் ஊர் மக்கள். காரணம் அந்த ஊரில் உள்ள வெள்ளை மண். திருமண் தயாரிக்க அடிப்படையான மண் அது.

அவர்கள் 80-100 கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ 20ற்கு விற்கிறார்கள். வெளியூர்களில் அது ரூ 120 என்று விற்பனையாகிறது. மக்களுக்குப் பெரிய வருமானமெல்லாம் இல்லை.

ஊரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பூஜை வேண்டாம் ஐயா, ஒரு விளக்கேற்றக் கூட ஆஸ்திகர்கள் இல்லை. ஊர் மக்களே அவ்வப்போது சுத்தம் செய்து, விளக்கேற்றி வருகின்றனர். மனோரம் தாஸ் என்னும் ஆர்வலர் ஜடேரிக்குச் சென்று பார்த்து வந்தார். அன்று புரட்டாசி சனிக்கிழமை. சிறுவர்கள் கோவிலைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வைத்திருந்தனர்.

மக்கள் செய்யும் தொண்டைக் கண்டு மனம் உருகிய மனோரம் தாஸ் பண உதவி செய்ய முன்வந்தார். ஊர் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். ‘எங்களுக்குப் பெருமாள் ஏதோ படியளக்கறான். ஆனா, பெருமாளுக்குப் படியளக்க எங்களால முடியல்ல. முன்னெல்லாம் பக்கத்து ஊர்லேர்ந்து ஐயர் வந்து பூஜை பண்ணுவார். இப்ப வயசாயிட்டு. அதால வர்றதில்லை. நாங்களே ஏதோ முடிஞ்ச போது சுத்தம் பண்ணி விளக்கேத்தறோம்,’ என்று சொன்ன ஊர் மக்களைக் கண்டு மனமுருகி நிற்கிறார் தாஸ்.

 

ஊரில் உயர் நிலைப் பள்ளி இல்லை என்பதால் பிள்ளைகள் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று செய்யாறில் படித்து வருகின்றனர்.

ஊரில் ஒரு வயதானவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் சொன்னது: ‘நீங்க எல்லாம் சுத்த வேஸ்டங்க. எங்கியோ கோவில் கட்றேன்னு போறீங்க. பெரிய கோவிலா இருந்தா அங்க போறீங்க. எங்கள மாதிரி சின்ன ஊர்ல இருக்கற சாமியும் பட்னி நாங்களும் பட்னி.  நாங்க ஒண்ணும் கேக்கலை. எங்க பசங்களுக்கு நம்ம மதத்தோட கதைகளச் சொல்றதுக்கு ஆளில்ல. எங்களுக்கும் ரொம்ப தெரியாது. ஏதோ கூலி வேலைக்குப் போறோம், நாமக்கட்டி செய்யறோம், வயித்தக் கழுவிக்கறோம். ஆனா, எங்களுக்குப் பின்னால இந்த வேலை செய்யவும் ஆள் இருக்காது,’ என்று சொல்லி நிறுத்தினார். லேசாக விசும்பல் சப்தம்.

‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றார் நண்பர்.

‘இப்ப க்ரிஸ்டியன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. பைபிள் கதையெல்லாம் எங்க பசங்களுக்குச் சொல்றாங்க. எங்க காலத்துக்குப் பிறகு சிரமம் தான்’ என்றவரின் கண்களில் நீர்.

அதனால் என்ன? பரவாயில்லை. தேசிகப் பிரபந்தம் பாடலாமா கூடாதா, வடகலைப் புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும் என்று சாஸ்த்ரோக்தமான கேள்விகளை நாம் கோர்ட்களில் எழுப்பிக் கொண்டு நமது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவத் தொண்டு புரிவோம்.

இந்து முன்னணி, விச்வ ஹிந்து பரிஷத், சாயி மண்டலிகள், சேவா பாரதி முதலியவையாவது அவ்வப்போது இந்த கிரமத்திற்குச் சென்று பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால் அடுத்த தலைமுறைக்குத் திருமண் கிடைக்கிறதோ இல்லையோ கிருஷ்ணர் கோவிலில் விளக்கு எரியும்.

Screen Shot 2018-10-24 at 10.00.26 PMகாஞ்சிபுரத்தில் இருந்து 40 கி,மீ. தூரத்தில் உள்ளது ஜடேரி கிராமம். செய்யாறு சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் தீபாவளி அன்று சென்று கோவிலில் விளக்கேற்றி வாருங்கள். ஊர் மக்களும் அங்குள்ள கிருஷ்ணர்களும் சந்தோஷப்படுவர்.

மனோரம் தாஸ் அவர்களின் தொ.பே.எண்: +91-7758072388

 

 

"டேய் ஐயரு ராமம் போட்ருக்கார் டா. "

Image“டேய் பார்ரா நாமம், இங்கே வந்தும் போட்டுக்கிட்டுத் திரியறானுங்க” – என் அப்பாவை அழைத்துக்கொண்டு சிங்கபூர் ரயிலில் ஏறிய போது இரு இள வட்டங்கள் கேலி பேசியது காதில் விழுந்தது. ஓர் சீனப் பெண் எழுந்துகொண்டு கொடுத்த இடத்தில் அப்பாவை அமரச் செய்துவிட்டு குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

இந்திய இளைஞர்கள். சிங்கப்பூரர்கள் இல்லை. அவர்கள் உடையும் பேச்சின் சாயலும் அவர்கள் சென்னையிலிருந்து வந்துள்ள மாணவர்கள் என்று அறிவித்தன. சிங்கை தேசியப் பல்கலையில் பயில்பவர்கள் என்று ஊகித்தேன்.

சிங்கபூர்த் தமிழர்கள் கேலி பேசுவதில்லை, தமிழையும் கலாச்சாரத்தையும் மதிக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ள உடல் உழைப்புத் தொழிலாளர்களும் அமைதியாகவே உள்ளனர். தமிழக அதுவும் சென்னை மாணவர்கள் சிலர் தறி கேட்டு அலைவது சிலமுறை கண்டது தான். இருந்தாலும் இந்தமுறை சிங்கையில் நடந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

நெற்றிக்கு இட்டுக்கொள்வதை “திருமண் காப்பு” என்று அழைப்பர். திருமண் நம்மைப் பல இன்னல்களிலிருந்தும் காக்கும் என்பது ஒரு எண்ணம். அதனுடன் அதை அணியும் போது அதற்கு ஏற்றவாறு நடக்கவேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஏற்படும். அதுவே நம்மை கெட்ட வழிகளில் போகாமல் தடுக்கும் என்றும் கொள்ளலாம்.

நாமம் தரிப்பதை ( திருமண் இட்டுக்கொள்வதை )க்  கேலி பேசுவதும், நக்கல் செய்வதும் சாதி சொல்லி “டேய் அய்யர் போறான் பாருடா ” என்று வீதிகளில் அமர்ந்து காலிகள் கொக்கரிப்பதும் எனக்குப் பழக்கம் தான். நெய்வேலியில் இப்படி அடிக்கை நிகழும். வளரும் வயதில் இந்த அனுபவங்கள் ஏராளம்.

பள்ளி செல்லும் போது தினமும் திருமண் இட்டுக்கொண்டு செல்வது வழக்கம். வழியில் பல தரிதலைகள் விசில் அடிக்கும். பழகி விட்டதால் பல சமயம் கோபம் வருவதில்லை. வந்தாலும் ஒரு புண்ணாக்கு பயன் இல்லை என்பது வேறு விஷயம்.

ஒரு  முறை அப்பாவுடன் ஆவணி அவிட்டம் முடித்து சைக்கிளில் செல்லும்போது  ” டேய் பூணூல் பாருடா”, என்ற கத்தல் கேட்டு அப்பா சைக்கிளை நிறுத்தினார். ஒரு பார்வை தான். கேலி பேசிய இருவரையும் காணவில்லை.

இந்த நிகழ்வால் எனக்கு தைரியம் வந்தது. ஒரு முறை நெய்வேலி ஸ்டோர் ரோடு பிள்ளையார் கோவில் விழாவில் கலந்து கொள்ள சைக்கிளில் சென்றேன். நெய்வேலியின் அப்போதைய பிரதான வாஹனம் சைக்கிள் தான். எதிரில் வந்த ஒருவன் “டேய் ஐரே “, என்று கத்தினான். வயது பதினைந்து இருக்கும் எனக்கு., “டேய் ம..ரே “, என்று பதிலுக்குக் கத்திவிட்டு வேகமாக சைக்கிளை மிதித்தேன். உடம்பு ஒரு முறை அதிர்ந்தது. பக்கத்தில் அப்பா. அவர் அருகில் இருப்பதை உணராமல் கெட்ட வார்த்தை சொல்லிக் கத்திவிட்டேன். அப்பா இருவாரம் என்னுடன் பேசவில்லை.

ஆனால் என் தார்மீகக் கோபம் தணியவில்லை. அன்று முதல் வீட்டை விட்டுக் கிளம்பும் போது நன்றாகத் தெரியும்படி திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்டேன். வேண்டும் என்றே முகத்தை நெற்றி தெரியும்படி காட்டியபடி செல்வதை விரும்பி செய்தேன். பல முறைகள் “ஐரே .. ம..ரே” சவடால்கள் நடந்தன.அதில் ஒரு வெற்றிப் பெருமிதம் தான்.

ஆனால் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது என்னை விட வயதான ஒரு பையன் “எப்படி டா நாமம் போடறே ?” என்று கேட்டபடி உரசிச் சென்றான். விடவில்லை நான். துரத்தினேன். ஒருவழியாக அருகில் சென்று, ” இப்பிடித் தாண்டா “, என்று சைக்கிளால் அவன் சைக்கிளை மோதினேன். அவன் விழுந்தான். “ஏண்டா இடிச்சே?” என்று அழுதவாறு கேட்டான். எனக்குப் பாவமாகப் போய்விட்டது.அது முதல் கேலி பேசினால் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ளத் துவங்கினேன்.

கல்லூரியில் “ராகிங்” என்ற பெயரில் நடந்த அழுச்சாட்டியங்களில் ஒன்று ஒரு சீனியர்,” நீ இனிமேல் நாமம் போடக்கூடாது”, என்றது தான். மனதுக்குள் ஒரு அரசியலமைப்புச்சட்ட மேதை என்ற நினைப்பில், “Do you know the right to freedom of religion? It is one of the fundamental rights enshrined in the constitution“, என்று ஒரு முழு மூச்சில் முடித்தேன். ஓங்கி ஒரு அரை விழுந்தவுடன் சுய நினைவுக்கு வந்தேன். ஆனால் ஒரு எதிர்ப்பு காட்டவே தினமும் ஒற்றை நாமாம் ( ஸ்ரீ சூர்ணம் ) இட்டுக்கொள்ள மறந்ததில்லை.

இதில் விசேஷம் என் அப்பாவிற்கு “ஐயர் போறார் டா “, என்றால் கோபம் வரும். கேலி பேசுவதால் அல்ல. “என்னை ஒரு அய்யர்னு சொல்லிட்டானே”; என்று வருத்தப்படுவார். காரணம் தான் ஒரு தீவிர ஸ்ரீ வைஷ்ணவ ஐயங்கார். தன்னை ஒருவன் ஐயர் என்று சொல்லிவிட்டானே என்று ஒரு தார்மீகக் கோபம்.

இப்போதெல்லாம் இந்தியாவில் யாரும் இதற்குக் கேலி பேசுவதில்லை. யாருக்கும் இதற்கெல்லாம் நேரம் இல்லை. வேலை, பிழைப்பு என்று வந்த பிறகு இதிலெல்லாம் ஒரு நாட்டம் இல்லை யாருக்கும். அல்லது பா.ஜ.க.அரசு அமைந்த பின்னர் ஏற்பட்ட மாறுதலாகவும் இருக்கலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். ராமர் கோவில் இயக்கம் நடந்தபோது அதுவரை நெற்றிக்கு இட்டுக்கொள்ளாத பலரும் ஏதாவது இட்டுக்கொள்ளத் துவங்கியதைப்  பார்த்திருக்கிறேன். இதைப்பற்றியெல்லாம் கேலி பேசுவது பெரும்பாலும் வேலை இல்லாத திராவிடர் கழக ஆட்களாகவே இருக்கும்.

இதில் சில வேடிக்கைகள் உண்டு. சில அசடுகள் “, ஐரே ராமம் போற்றுக்கியா?” என்று கேட்டதுண்டு. பாவம். நான் ஐயரும் இல்லை. போட்டுக்கொள்வது ராமம் இல்லை நாமம் என்ற பகுத்தறிவுகூட இல்லாத நிலையில் இருப்பது ஒரு பரிதாபம்.

சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார் நாமம் ஏன் போட்டுக்கொள்கிறேன் என்று.

“என் சார், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ANTI VIRUS வைத்துக்கொள்வதில்லையா? அது போல் தான். யாரும் போடுவதற்கு முன்னால் நாமே போட்டுக்கொள்வது ஒரு பாதுகாப்பு தானே?” என்று சொன்னாலும் நாமம் போடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

இப்போதேல்லாம் நம் இளைஞர்கள் நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லை. “நீரில்லா நெற்றி பாழ்” என்று என் ஆசிரியர் கூறுவார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் “நீர்” என்பதற்கு “வேறு” பல அர்த்தங்கள் உள்ளன. அரசாங்கமே சில “நீர்” விற்பனைக் கடைகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண் பற்றிப் பேச வந்தவுடன் தென்கலை வடைகலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் அதைப்பற்றி ஏற்கெனவே வேறொரு பதிவில் சொல்லிவிட்டதால் இப்போது மறுபடியும் வேண்டாம். ஆனால் வடகலையை விட தென்கலைக் காரர்கள் கொஞ்சம் தடிமனாகவே திருமண் இட்டுக்கொள்கிறார்கள் என்பது என எண்ணம். தென்கலை சம்பிரதாயத்தின் மீதான பற்றாகவும் இருக்கலாம். வடகலையை வெறுப்பேற்றவும் இருக்கலாம். தெரியவில்லை.

ஒருமுறை ஜப்பானில் தோக்கியோ நகரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்த போது என் நிறுவனத் தலைவர் ( ஜப்பானியர் ) என்னைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார். “கோரே வா நான் தேசு கா?” ( இது என்ன? ) என்று நெற்றியைத் தொட்டுக்காட்டி க் கேட்டார். “அனோ இந்தோனோ கமிசமா னோ SYMBOL தேசு” ( இது இந்தியக் கடவுளின் சின்னம்” ) என்று எனக்குத் தெரிந்த ஜப்பானிய மொழியில் தடுமாறிச் சொன்னேன்.அது முதல் என் பெயர் “இந்தோனோ காமி சமா” ( இந்தியாவின் கடவுள் )  என்று வைத்துவிட்டார்.

மறுபடியும் சிங்கபூருக்கு வருவோம். ரயிலில் இருந்த தமிழ் இளைஞர்களை முறைத்துப் பார்த்தேனா? அவர்கள் இருவரும் அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டார்கள். இரு நிறுத்தங்கள் கழித்து இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் வேகமாக அடுத்த பெட்டியின் வாசலுக்குச் சென்று பார்த்தேன். அவர்களைக் கீழே இறக்கி டோஸ் விட எண்ணம். என்னைப் பார்த்தவுடன் அவர்கள் கூட்டத்தின் உள்ளே பதுங்கினார்கள். அவர்கள் பயந்து கொண்டது  தெரிந்தது.

அவர்களைக் கீழே இறக்கிப் போலீசில் சொன்னால் அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும். இது தமிழ் நாடு அல்ல எது நடந்தாலும் என்ன நடந்தாலும் போலீஸ் எல்லாம் முடிந்தபின் வருவதற்கும் மாமூல் வாங்கிச் செல்வதற்கும். பழைய பள்ளிப்பருவக் கோபங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை நாலு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது.

“பாவம் விட்டுடு டா. நம்மூர்ப்பசங்க மாதிரி தெரியறது. போனாப் போறது. தெரியாம சொல்லிருப்பாண்டா”, என்றார் அப்பா.

%d bloggers like this: