தெய்வத்தின் அனுக்கிரகத்தால் அடியேனின் ‘பழைய கணக்கு’ நூலில் உள்ள ‘ஸார் வீட்டுக்குப் போகணும்’ சிறுகதை இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புத்தக வாரியத்தின் (National Book Trust) ‘புது எழுத்து’ என்னும் தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது.
இந்திய அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி அவர்கள் இந்த நூலை தில்லியில் உலகப் புத்தகத் திருவிழாவில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் ஐந்திணைகளைக் குறிக்கும் விதமான கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தேர்வு செய்து தொகுத்த சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் தனது வலைப்பக்கத்தில் சொல்கிறார்:
‘இந்தத் தொகுப்பிற்காகத் தமிழகத்தின் இளம் படைப்பாளர்களின் சிறுகதைகளைத் தொகுக்க நேர்ந்த போதும் இதே பரவசம் என்னுள்… பல்வேறு நிலப் பரப்பின் கதைமாந்தர்கள் ரத்தமும், சதையுமாக என்னருகே வந்து என் தோளோடு தோளுரசித் தங்களது இருப்பை, பண்பாட்டை எனக்குச் சொல்லாமல் சொல்லிச் சென்றார்கள். படைப்பாளர்களுக்கு நன்றி.
முடிந்தவரை அனைத்து நிலப்பரப்பின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. போதிய கால அவகாசம் இல்லாமை என்ற சவாலை எதிர்கொண்ட போதிலும், இது போன்றதொரு அரிய வாய்ப்பில் இளம் தமிழ் படைப்பாளர்களை இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்ற உந்துதலே, இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றது.
ஒரு வாசகன், சரியான தளத்தில் இந்தக் கதைகளுள் ஊடாடும் அறத்தை, வாழ்தலின் உணர்தலை தரிசிப்பானேயானால் அதுவே இம் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பேன்.
அவருக்கும் அவர் தம் குழுவினருக்கும், மனித வள அமைச்சுக்கும், இதுவரை ஆதரவளித்த வாசகர்களுக்கும், இனிமேல் படிக்கவிருக்கும் வாசகர்களுக்கும் என் நெகிழ்ச்சியான நன்றி.
அறத்தின் அடிப்படையில் வாழ்ந்து முடித்த பல வாழ்க்கைகள் வரலாற்றில் எழுதப்படாமலேயே போவது நிதர்ஸனம். அது நிகழாமல் முடிந்தவரை பழைய கணக்கில் இந்த ‘அறம்’ என்னும் பழைய கணக்கையும் பதிவு செய்திருந்தேன். வாழ்ந்து முடித்த அற நெறியாளர்கள் மேலுலகில் இருந்து வாழ்த்தியிருப்பார்கள் போலும். அது இந்த அங்கீகாரமாய் ஒளிர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
அடியேனின் முதல் நூலிற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் வாசகர் வட்ட நண்பர்களுக்குக் காணிக்கை.
என் நூலை வாங்க அமேசானில் கிளிக்கவும்.
For news item in Dinamani on this, click here