அனுமன் சொன்ன கதை

Hanuman Tzrதேர் கட்டியது போக மிச்சம் இருந்த மரக் கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். பழைய எரிந்த தேரின் சில மரச் சட்டங்களும் இருந்தன. பழைய தேரின் மர ஆணிகள் நன்றாக இருந்ததால் அவற்றில் சிலவற்றைப் புதிய தேரிலும் சேர்த்திருந்தோம். இரு தேர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கட்டும் என்று அவ்வாறு செய்திருந்தோம்.

பழைய மரக்கட்டைகளை எடுத்து விறகில் சேர்க்கலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தார் ராமு ஆசாரி. காலில் ஆணி குத்தியது போல் இருந்தது. குனிந்து எடுத்தேன். ஒரு மரக்கட்டையில் பழைய ஆணி போன்று இருந்தது. கட்டையை எடுத்துப் பார்த்தேன். பழைய உளுத்துப்போன கட்டையாக இருக்கும் என்று நினைத்து திருப்பிப் பார்த்தேன். அது ஒரு அனுமன் வடிவம். கை சஞ்சீவி மலை தூக்கிய நிலையில் இருந்தது.

சரி எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துச் சென்று வீட்டில் என் அலமாரியில் வைத்தேன்.

எதிர் வீட்டு கிச்சாமி ‘இது ஆயிரங்காலத்து அனுமன் வடிவம். தேரில் இருந்தது. வீட்டில் வைக்கலாமோ கூடாதோ’, என்று ஒரு குண்டு போட்டுச் சென்றான். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு அகல் விளக்கு எற்றி வைத்தேன்.

அப்போது தான் பார்த்தேன் அதை. அனுமன் கால் அடியில் சிறிய எழுத்துக்கள். தமிழ் போலவும் தெரிந்தது.ஆனால் வடிவங்கள் புரியவில்லை.

சட்டென்று உரைத்தது. வட்டெழுத்துக்கள். அட, இவை சோழர் கால எழுத்துக்கள் ஆயிற்றே என்று பட்டது.

உடம்பில் ஒருமுறை அதிர்ந்தது.

மனதில் பல சிந்தனைகள் ஒடின.

‘யார் செய்திருப்பார்கள் இந்தச் சிலையை ? ராஜ ராஜனின் தாத்தன் வழியில் கரிகாலன் கட்டிய கோவில் என்று தெரியும். ஆனால் தேரை யார் கட்டியது என்று தெரியவில்லை.ஒருவேளை கரிகாலன் காலத்துத் தேர்ச் சிற்பமா இந்த அனுமன் ? இவன் எத்தனை சாம்ராஜ்யங்களைக் கண்டிருப்பான் ? கரிகாலன் முதல், கண்டராதித்தன், ஆதித்த கரிகாலன், பராந்தகன், அரிஞ்சயன், ராஜ ராஜன், ராஜேந்திரன் என்று எவ்வளவு பேரைப் பார்த்திருப்பான் இந்த அனுமன் ?

அல்லது இந்தச் சிற்பம் கரிகாலனுக்கு முந்தையதோ ? அவன் அதன் அழகில் மயங்கி அப்படியே தேரில் பதித்து விட்டானோ ? அப்படியென்றால் என் வீட்டில் உள்ள சிற்பம் பல நூற்ராண்டுகளைக் கண்டிருக்குமே !

அனுமனே பழைய ஆள். திரேதா யுகம் அவனது காலம். ஆனால் யுகங்கள் பல தாண்டி இன்று அவன் வடிவம் என் கையில்.

இந்த அனுமனின் எதிரில் நான் யார் ? இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஒரு துளியில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தூசி. என் காலமே சில பத்து ஆண்டுகள் மட்டுமே. என் காலம் முடிந்த பின்னும் இந்த அனுமன் இருப்பான். அப்போது வேறொரு தூசியின் கையில்,அவனைப் பார்த்தபடி, அவனது அற்ப ஆயுளைக் கணக்கிட்டபடி மோனச் சிரிப்புடன்.

இவன் பார்த்துள்ள சம்பவங்கள் என்னவெல்லாம் இருக்கும் ? முகலாயர் ஆட்சி, வெள்ளையர் ஆட்சி, அதற்கும் முன்னர் நம்மவரின் பல வகையான ஆட்சிகள்.

இவன் இருந்த எரிந்த தேரின் வழியாக எவ்வளவு மாந்தர் சென்றிருப்பர் ? சில லட்சம் பேர் இருக்க மாட்டார்கள் ?

எத்தனை பஞ்ச காலங்களையும் வளம் கொழித்த காலங்களையும் கண்டிருப்பான் இவன் ? எதுவாக இருந்தாலும் அதே மோனப் புன்னகையுடன், நடக்கும் அத்துணை நிகழ்வுகளுக்கும் சாட்சியாக, மௌனமாக நின்றிருப்பான் இவன் ?

இவனுக்கு முன் நான் எம்மாத்திரம் ? வெறும் எண்பது ஆண்டுகள் வாழும் நான் இவனைப் பொறுத்தவரை ஒர் புழு. அவ்வளவே.

இப்படி புழுவாக இருந்தாலும் எத்தனை ஆட்டம் ஆடுகிறேன் நான் ? உசத்தி தாழ்த்தி என்ன , மேதாவி பாமரன் என்ன ? எத்துணை வெற்று ஏக்களிப்புகள் ?

இத்துணை யுகங்கள் கடந்து வந்துள்ள இவன் முன்னர் நான் எம்மாத்திரம் ?

எனக்கு முன்னர் இந்த ஊரில் இருந்த மாந்தர் கொக்கரித்த சொற்கள் என்னவாயின ? அவர்களே என்னவானார்கள் ? அவர்கள் இருந்த இடமே தெரியவில்லையே ?

சாதாரண மனிதர் இருக்கட்டும். எத்துணைத் தலைவர்கள் இருந்துள்ளனர் ? அவர்கள் இருக்கும் வரை அவர்களும் அவர்களது சூழமும் செய்யும் அளப்பரைகள் எத்துணை? இவனுக்கு முன்னர் அவர்கள் எல்லாம் யார் ?

சமுதாயத்தையே மாற்றியதாகக் கூறிக் கொண்ட அரசுத் தலைவர்கள் இப்போது இருக்கும் இடம் எங்கே ? அவர்கள் இருந்ததற்கான தடங்களே அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் இந்த அனுமன் என் கைகளில் நிற்கிறான்.

‘என்ன, நிலையாக இருக்கப்போவதாக எண்ணமோ? உன்னைப்போல் எத்துனை பேரைக் பார்த்திருக்கிறேன்?’என்று என்னைக் கேலி பேசுவதாகத் தோன்றியது.

அப்போதுதான் அது நடந்தது. பதுமை பேசியது.

“என்ன பார்க்கிறாய்? உன்னையும் எனக்குத் தெரியும், உன் பரம்பரையையே நான் அறிவேன். நான் அதற்கெல்லாம் முற்பட்டவன். உன் வாழ்வில் நீ பார்க்கப்போவது நான் பார்த்ததில் ஒரு நெல் மணி அளவு கூட இருக்காது.

நான் பார்த்ததில் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உன் தாத்தாவைப் பற்றியது. முக்கியமாக அவருக்கு என்னைப் பிடிக்கும். நான் இருந்த பழைய தேர் எரிந்த வருஷம் அவர் ரொம்பவும் மன வருத்தம் அடைந்தார். அவருக்குப் பல எதிரிகள் இருந்தனர்.

நல்ல மனுஷர் அவர். என்ன, ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவார்.பேசுவது போலவே நடக்கவும் வேண்டும் என்று சொல்லி வந்தார். இதனாலேயே அவருக்குப் பல எதிரிகள் உண்டாயினர்.

உன் தாத்தாவின் தந்தை கோவிலில் கைங்கைர்யம் செய்து வந்தார். மீத நாட்களில் வேறு ஊர்களுக்கு வேத பாராயணம் செய்யச் சென்று விடுவார். பூ கைங்கர்யம், தளிகை என்றால் கூட நன்கு கற்றிருக்க வேண்டும் அப்போதெல்லாம்.

ஒரு நாள் அவரால் தளிகை பண்ண மடப்பளிக்குள் செல்ல முடியவில்லை. அதனால் உன் தாத்தாவை தளிகை பண்ண அனுப்பினார். அப்போது அவருக்கு இருபது வயது இருக்கும். பதினான்கு வருடம் வேதப் பயிற்சி முடித்து அப்போதுதான் திருக்கண்ணபுரம் பாடசாலையிலிருது திரும்பி இருந்தார்.மடப்பளிக்குள் செல்ல நந்தவனம் வழியாகச் செல்ல வேண்டும். அப்போது தான் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும். நந்தவனத்திற்குள் இருப்பதால் ஆள் அரவம் இருக்காது.

கிணற்றடியில் ஊர் பெருந்தனக்காரர் நந்தவனக் காவல்காரன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டார். ஆனால் இருவரும் பேசிக் கொள்ள மட்டும் வரவில்லை என்று உன் தாத்தாவிற்குப் புரிந்தது.

பெருந்தனக்காரர் தான் ஊரில் ஆசார நியமங்களை வகுப்பவர். ஊரில் உற்சவத்தின் போது யாருக்கு முதல் மரியாதை என்பது முதல் அவர் வைப்பதே சட்டம். ஆனால் இவ்வளவு சட்டம் பேசும் அவர் காவல்காரன் மனைவியுடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது உன் தாத்தாவிற்கு வியப்பளித்தது.

ஆனால் உன் தாத்தா பார்த்ததை பெருந்தனக்காரர் பார்த்துவிட்டார். ஏதோ வேலை சொல்வது போல் அவளை அதட்டி அனுப்பினார்.அவரது அதட்டல் உண்மை இல்லை என்று உன் தாத்தாவிற்குத் தெரியும் என்று பெருந்தனக்காரர் அறிந்திருந்தார்.

என்ன தோன்றியதோ தெரிய்வில்லை உன் தாத்தா பெருந்தனக்காரரை ஓங்கி ஒரு அறை விட்டார். வயது சற்று கூடின பெருந்தனக்காரர் அப்படியே சுருண்டு விழுந்தார். ஒன்றுமே நடவாதது போல் உன் தாத்தா மடைப்பளி சென்றுவிட்டார்.

அதுவரை அரசல் புரசலாக இருந்தது வெளியே கசியத் துவங்கியது.

அந்த வருஷம் உற்சவம் அவ்வளவு சௌஜன்யமாக இல்லை. முதலில் இருந்தே தகராறு.

முதல் நாள் உற்சவம் அன்றே முதல் மரியாதை தனக்கே வர வேண்டும் என்று பெருந்தனக்காரர் பேசினார். எதிர்த்து யாரும் பேசவில்லை. சிறிது மௌனம் நிலவியது. யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா என்று சபையில் கேட்கப்பட்டது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. சபை தேர்முட்டி ‘வழி காட்டிப் பிள்ளையார்’ மண்டபத்தில் நடந்ததால் நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சபையின் ஓரத்தில் சிறிது சல சலப்பு கேட்டது. சில பெரியவர்கள் உன் தாத்தாவைக் கையைப் பிடித்து இழுத்து அமர வைக்க முயன்றனர். “அவனைப் பேச விடுங்கள்”, என்று தலைமை பட்டர் கூறினார்.

சபை அவர் பேச ஆமோதித்தது. ஆனால் பெருந்தனக்காரர் ஆட்சேபித்தார். ‘பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசுவது சாஸ்த்ர விருத்தம்”, என்று கூறினார் பெருந்தனக்காரர். உன் தாத்தா தன்னை எதிர்த்துப் பேசப் போகிறார் என்று ஒருவாறு ஊகித்துவிட்டார் பெருந்தனக்காரர்.

அப்போது உன் தாத்தா கூறியது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. அது ஒரு சிம்ம கர்ஜனை என்பேன்.

“பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் ஏக பத்தினி விரதர்கள் மட்டுமே சபையில் அமர வேண்டும் என்றும் சாஸ்த்ரம் கூறுகிறது என்று சபை முன் சமர்ப்பிக்கிறேன்”, என்று சூசகமாகக் கூறினார் உன் தாத்தா.

சபை நடுவர்களில் பல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர் யாரைச் சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வது போல் இருந்தது எனக்கு. பலர் ஏக-பத்தினிக் காரர்கள் அல்லர் என்பது அப்போது தெளிவாகியது.

உன் தாத்தா மேலும் சொன்னார்,” நான் யாரைச் சொல்கிறேன் என்று அவரவர்களுக்குத் தெரியும். எனவே முதல் மரியாதை பற்றிப் பேசுவதற்கு முன் ஒவ்வொருவரும் தாங்கள் இந்தச் சபைக்கே பொறுத்தமானவர்களா என்று கேட்டுக்கொள்வது நல்லது”, என்று மேலும் கூறினார்.

சபைக்காரர்களில் பலருக்கு முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ஏதோ தங்கள் வரை பிழைத்தோம் என்று நிம்மதி அடைந்தனர் போல் தெரிந்தது.

அத்துடன் சபை கலைந்தது. பின்னர் அந்த வருடம் பெருந்தனக்காரருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படவில்லை.

பெருந்தனக்காரர் அத்துடன் விடவில்லை. கறுவிக்கொண்டிருந்தார்,

ஒருமுறை வைகாசி உற்சவத்தின் போது ஒரு வெள்ளி சந்தனக்கிண்ணம் காணாமல் போனது. அது காணாமல் போகவில்லை. தேருக்குக் கீழே பெருந்தனக்காரரின் வேலையாள் போட்டு விட்டுச் சென்றது எனக்குத் தெரியும்.

கடைசியாக வேத விற்பன்னர்களுக்குச் சந்தனம் கொடுத்தது உன் தாத்தா தான் என்பதால் அவர் பேரில் சந்தேகம் எற்படச் செய்தார் பெருந்தனக்காரர். கிண்ணத்தைத் திருப்ப வேண்டும், அத்துடன் இரண்டு ஆண்டுகள் உற்சவங்களில் ஈடுபடக் கூடாது அல்லது கம்பத்தில் கட்டி வைத்து அடி வாங்க வேண்டும் என்பதே சபை அவருக்கு அளித்த தீர்ப்பு.

ஏழைச் சொல் அம்பலம் ஏறவில்லை. உன் தாத்தா குற்றவாளி என்று தீர்ப்பு எழுதினர். வெள்ளியைத் திருப்ப வழி இல்லை. தேர் எதிரில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தார்கள். பெருந்தனக்காரர் உட்பட நால்வர் அடிப்பது என்று முடிவானது.

தாத்தா கட்டி வைக்கப் பட்டார்.

அப்போது குடியானத் தெருவிலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. சுமார் இரு நூரு பேர் கையில் வேல் கம்புகளுடன் கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களில் நந்தவனக் காவல்காரனும் தென்பட்டான். இன்னொரு பக்கத்திலிருந்து சங்கர அக்ரஹாரத்திலிருந்து வக்கீல் ராமசுப்பையர் தனது ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.

அப்புறம் என்ன ? உன் தாத்தா அவிழ்த்து விடப்பட்டார். பெருந்தனக்காரர் மீது ராமசுப்பையர் வழக்கு போட்டார். பல வழக்குகளில் மாட்டி பெருந்தனக்காரர் தன் செல்வம் எல்லாம் இழந்தார். விரைவில் ஊரை விட்டு வெளியேறினார். சில நாட்களிலேயே காலமானார்.

ராமசுப்பையர் உன் தாத்தாவின் பால்ய நண்பர். அத்துடன் அவருக்கும் பெருந்தனக்காரரிடம் சில பழைய பகைகள் இருந்தன. எல்லாம் சேர்த்து பழி வாங்கிவிட்டார் ராமசுப்பையர் என்று பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இதெல்லாம் ஒரு அநீதியை சமன் படுத்தவே என்று எனக்குத் தெரியும்.

இது எல்லாம் நடந்த முப்பது ஆண்டுகள் கழித்து நான் இருந்த தேர் எரிக்கப்பட்டது. அதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் உன்னிடம் இருக்கிறேன்.’

“டேய், நான் தான் சொன்னேனே, ஆயிரம் வருஷம் பழசெல்லாம் வீட்டுலெ வெச்சுக்க வேண்டாம்னு. பாரு எவ்வளோ நாழியா அதையே பார்த்துண்டு நிக்கறே!”, என்று கிச்சாமி சொன்ன போது தான் சுய நினைவுக்கு வந்தேன்.

எத்தனை நேரம் நான் அப்படியே அனுமன் சிலையைப் பார்த்தபடி நின்றிருந்தேன் என்று தெரியவில்லை.

இது வரை பேசியது யார்? இந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மையா ? அல்லது என் பிரமையா ?

தெரியவில்லை. ஆனால் இவை அனைத்தையும் அனுபவித்தது போலவே இருந்தது.

இது போல் பல முறை நிகழப் போகிறது எனக்கு அப்போது தெரியவில்லை.

கம்பனுக்கு முன் இராமன் ?

இந்த முறை கம்பன் பற்றிப் பேசும் முன் ஒரு அரசியல் காலத்தையும் கண்டு செல்ல வேண்டியுள்ளது. அதன் தேவை இருப்பதால் ஒரிரு வரிகள்.

1930-களில் கம்ப ராமாயணத்திற்கு எதிரான பல குரல்கள் தமிழகத்தில் எழுந்தன. தனித் தமிழ் நாடு முதலிய இயக்கங்கள் துவங்கியபோது ஒரு பொது எதிரி தேவையாக இருந்தது. அவர்கள் ஆரியர்கள் என்ற குடையின் கீழ் திரட்டப்பட்டார்கள். அவர்களில் முதலாமவன் இராமன் என்று அன்றைய சில அறிவாளர்கள் கூறினார்கள். ஏனெனில் இராமன் வட நாட்டிலிருந்து தென்னாடு மீது படை எடுத்து வந்து ஆரிய ஆதிக்கத்தைத் துவக்கினான் என்று கூறி தென்னாட்டுத் தமிழர்களைப் பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அணி திரட்ட முயன்றார்கள். ( இந்த முயற்சிக்கு ஆங்கில அரசும் உடந்தை ).  இதற்காகக் கம்பனை இழிவு படுத்தத் துவங்கினார்கள். வசை மொழிகளை இத் தொடரில் எழுத வேண்டாம் என்பதால் அவர்கள் கூறிய வசைகளை எழுதவில்லை.

அவர்களது வசையின் சாராம்சம் இதுதான். கம்பன் தானும் வைதீகர்களால் ஒரு “ஆழ்வாராக” அறியப்பட வேண்டும் என்பதால் ராமனை மிகவும் உயர்வாகவும் , ராவணனைத் தாழ்த்தியும் தேவையில்லாமல் ஒரு வட நாட்டு வைணவக் “கடவுளை” தென்னாட்டில் நுழைத்தான். அதாவது இராமன் மற்றும் அவனது கதை தமிழ்த்தேசத்தில் இல்லை என்றும் கம்பன் தான் புகுத்தினான் என்பது தான் இவர்கள் கூற்று. ஆனால் இவை சரியா?  அப்படியானால் கம்பனுக்கு முன்பே தமிழ்த்தேசத்தில் இராமகாதை இல்லையா?

சில பழைய சான்றுகளைப் பார்ப்போம்.

கம்பன் காலம் பற்றிப் பல கருத்துக்கள் இருந்தாலும், அவன் கி.பி.11781208 ( மூன்றாம் குலோத்துங்க சோழன் ) காலத்தில் ராமாயணத்தை எழுதியிருக்க வேண்டும் என்று மா.ராசமாணிக்கனார் என்னும் தமிழறிஞர் கூறுகிறார். பொதுவாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காலம் இது.

அக நானூறு , புற நானூறு முதலான சங்க இலக்கியங்களின் காலம் குறைந்த பட்சம் கி.மு.வாகவாவது இருக்க வேண்டும். ஏனென்றால், அடியேன் அறிந்த வரை பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கைஆழ்வார்  என்னும் முதலாழ்வார்கள் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை. இவர்கள் செய்யுள் சற்று கடினமானது. பின்னர் 600 ஆண்டுகள் கழித்து வந்த திருமங்கை, குலசேகர, பெரியாழ்வார், ஆண்டாள் முதலானவர்களது பாசுரங்கள் சற்று சுலபமாகப் புரியும். அது போல் சங்க இலக்கியங்கள் முதலாழ்வார்கள் பாசுரங்கள் போன்றும் அதே பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. ஆக சங்க இலக்கியங்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கும்  முற்பட்டவை என்று அறியலாம்.

அப்படிப்பட்ட சங்க நூலான அகநானூறு இராம காதை பற்றி என்ன கூறுகிறது?

இராமன் ராவணனுடன் போர் செய்யச் செல்லும் வழியில் தனுஷ்கோடியில் ஒரு ஆல மரத்தடியில் வீரர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்கிறான்.மரத்தின் மேலிருந்த பறவைகள் ஆரவாரம் செய்கின்றன. ஆலோசனை தடை படுகிறது. ஆனால் ஆல மரம் கூச்சல்களை அடக்குகிறது. பின்னர் கூட்டம் நடக்கிறது. இக்கருத்து பின்வருமாறு :

“வென்வேல் கவுரியர் தொன்முதுகோடி

முழங்கு இரும்பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம்”

(வெல்லுகின்ற வேற்படையைக் கொண்ட பாண்டியனுடைய பழமையான தனுஷ்கோடியில் முழங்கிக்கொண்டிருக்கின்ற பெரிய கடல் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் கடல் துறையில், வெல்லுகின்ற போர்த்திறமுள்ள இராமன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது பறவைகளின் ஓசையை அடக்கிய பல விழுதுகளை உடைய ஆலமரம்)

அதே காலத்ததான புறநானூறு ,”விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் கழற்றி எறியப்பட்ட ஆபரணங்கள் நிலத்தில் வீழ்ந்து ஒளி வீசுகின்றன. இவற்றைச் சிவந்த முகங்களை உடைய குரங்குகள் கண்டன,” என்னும் பொருள் படும்படி பின்வருமாறு கூறுகிறது :

“கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெரும்கிளை”

சிவ பெருமான் வாழும் இமய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணன் கதை நாம் அறிவோம். அது சங்ககால நூலான கலித்தொகையில், “இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்”, என்னும் விதமாகப் பின்வருமாறு கூறுகிறது:

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக

ஐயிருதலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன்போல”

ஆக, சங்க காலத்திற்கு முன்னரே தமிழ் நாட்டில் ராமாயணக் கதை பரவியிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் சங்க இலக்கிய நூல்களில் அவை வருவதெப்படி?

பக்தி இலக்கியக் காலம் என்று கி.பி. 6௦௦-900 அறியப்படுகிறது. இக்காலத்தில் தோன்றியவை ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பாசுரங்கள் மற்றும் பதிகங்கள். இப்பாசுரங்களில் இராமாவதாரம் பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு சில :

காலஞ்சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் குரலில் “மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே..” என்று தொடங்கும் குலசேகர ஆழ்வார் பாசுரம் நம்மில் பலர் அறிந்ததே.( சில காலம் முன்பு வரை பல வைணவக் குடும்பங்களில் இந்தப் பாடல் இல்லாமல் சிறு குழந்தைகள் தூங்காது. இப்போது Cartoon பார்க்காமல் தூங்காது). இது போன்று பதினொரு பாசுரங்களில் ராமாயணத்தையே எழுதிவிட்டார் குலசேகர ஆழ்வார். 

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் ராமாயணத்தின் முக்கிய பாத்திரமான கும்பகருணனைத் தன் திருப்பாவை பாசுரத்தில் இப்படிக் குறிப்பிடுகிறாள் :

“கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும்உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ”

இராமாயணம் அக்காலத்தில் வழக்கத்தில் இல்லாதிருந்தால் கும்பருணன் என்ற ஒரு பாத்திரத்தை மட்டும் போகிற போக்கில் ஆண்டாள் குறிப்பிடுவது எங்ஙனம்?

ஆண்டாளின் தந்தையாகிய பெரியாழ்வார், சூர்ப்பனகை மூக்கறுபட்டதைக்குறிக்கும் விதமாக பின்வருமாறு பாடுகிறார் :

“தார்கிளந தம்பிக்கு அரசீந்து, தண்டகம்

நூற்றவள் சொற்கொண்டு போகி, நுடங்கிடைச்

சூர்ப்பண காவிச் செவியோடு மூக்கு அவள்

ஆர்க்க அறிந்தானைப் பாடிப் பற ..”

( தம்பிக்கு அரசினை வழங்கி, காடு போய், ஆங்கே காற்றுப் பட்டாலும் அசைகின்ற இடையை உடைய சூர்ப்பனகையைக் காதும் மூக்கும் அறுத்தவனைப் போற்றுக..)

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில், குகனை இராமன் குல வேற்றுமை பாராமல் தன் தம்பியாகச் சேர்த்துக்கொண்டதைப் பற்றிக் கூறும் விதமாக,

“ஏழை ஏதிலன் கீழ்மகன் என்னாது

இறங்கி, மற்றுஅவர்க்கு இன்னருள் சுரந்து

“மாமழை மடநோக்கி உன் தோழி, உம்பி எம்பி …

.. அணிபொழில் திருவரங்கத் தம்மானே” என்று பாடுகிறார்.

திருமங்கை ஆழ்வார் மேலும், வாலி, விராடன், கவந்தன் முதலியோர் இராமனின் வில்லுக்கு வீழ்ந்த கதையைப் பின்வரும் பாடலில் கூறுகிறார்:

“பைங்கண் விறல் செம்முகத்து வாளிமாளப்

படர்வனத்துக் கவந்தனோடும், படையார் திண்கை

வெங்கண் விறல் விராதன் உக விற்குனித்த

விண்ணவர்கோன் தாள் அணைவீர்”.

ஆழ்வார்கள் கம்பனுக்கு முற்பட்டவகள் என்று காட்டவே இவற்றைக் கூறினேன். ஆழ்வார்கள் திருமால் அடியார்கள். எனவே இராமனைப் பற்றி இவர்கள் எழுதுவது வியப்பில்லை.

ஆகவே நாயன்மார்கள் இராமாயணத்தைப் பற்றிக் கூறி இருப்பதைப் பார்ப்பது நல்ல முயற்சியாகத் தெரிந்தது.  சிவனடியார்களான  நாயன்மார்கள்  இருந்த காலமும் கி.பி. 500 – 900  என்று அறிகிறேன். இவர்களும் கம்பன் காலத்திற்கு முற்பட்டவர்கள். இவர்கள் கூறுவது இராமனைப்  போற்றும் விதமாக அமையாது. சிவனைப் பூசிப்பதாகவே அமையும்.இருப்பினும் இராமாயணக் குறிப்புகள் உள்ளன.

திருஞான சம்பந்தர்,

“எறியார் கடல் சூழ் இலங்கைக் கோன் தன்னை முறியார் தடக்கை அடர்த்த மூர்த்தி” என்றும் ,

திருநாவுக்கரசர்,

“தலைஒருபத்தும் தடக்கையது இரட்டிதான் உடைய அரக்கன் ஒன்கயிலை..” என்றும்,

சுந்தரர்,

“திண்தேர் நெடுவீதி இலங்கையர்கோன் திரள்தோள் இருப்பதும் நெரித்தருளி ..”,

என்றும் இராவணன் கைலாச மலையைப் பெயர்த்த கதையைக் கூறுகிறார்கள்.

இவர் தவிர , திருஞான சம்பந்தர் தேவாரத்தில் இராமன் இராவணனை அழித்துத் திரும்பியது பற்றிப் பின்வருமாறு பாடியுள்ளார் :

“மான் அன நோக்கி வைதேகி தன்னை ஓரு மாயையால்

கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்”

இவை இராமேசுவரம் பற்றிய பதிகத்தில் அமைந்துள்ளது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இராமன் பற்றிப் பல இடங்களில் கூறியுள்ளார்கள். மேலே பார்த்தவை சில சான்றுகளே.

இவைகளுக்கு முன்பே தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சிலப்பதிகாரமும் கூட ராம காதையைப் பேசுகின்றன. இதில் நோக்கவேண்டியது என்னவென்றால் சிலப்பதிகாரம் சமண காவியம், மணிமேகலை பௌத்த காவியம்.

இராமன் இராவணனை அழிக்கக் கடலில் பாலம் அமைத்தான் என்னும் கருத்தை விளக்கும் விதமாக மணிமேகலை “உலக அறவி புக்க காதை”யில்,

“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்

அணங்குடை அளக்கர் வயிறுபுக்கு”  என்கிறது.

(திருமால் பூவுலகில் இராமனாகத் தோன்றி இராவணனைக் கொன்று சீதையை மீட்க இலங்கைக்குப் போகும் பொருட்டு வலிமை சிறந்த கடலில் அணை போட்டான். அந்நாளில் அணை போடுவதற்காகக் குரங்குகள் வீசிய பெரிய மலைகள் எல்லாம் வருத்தத்தைத் தரும் கடலின் வயிற்றிலே புகுந்தன)

கோவலனும் கண்ணகியும் காவிரிப் பூம்பட்டிணத்தை விட்டுப் பிரிந்தவுடன் அந்த ஊர் மக்கள், அயோத்தியிலிருந்து இராமன் காட்டுக்குப் போனவுடன் அயோத்தி மக்கள் துன்புற்றதைப்போல், துன்பம் அடைந்தார்கள் என்று  சிலப்பதிகாரம்,

“அருங்கான் அடைந்த அரும்திறல் பிரிந்த அயோத்திபோல” என்பதன் மூலம்  கூறுகிறது.

மேலும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் இராமாயணத்தைப் பற்றிக் கூறுவதாக ஒரு பாடல் பின்வருமாறு:

“தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடும்துயர் உழன்தோன்

வேத முதல்வன் பயந்தோன் என்பது

நீ அறிந்திலையோ, நெடுமொழி அன்றோ ”

( தன் தந்தையின் ஆணைப்படி, மனைவியுடன் கானகம் சென்று, மனைவியைப் பிரிந்து கடுந்துன்பத்தை அடைந்த வேத முதல்வனின் கதையை நீ அறியாயோ? நெடுநாளாக வழங்கிவரும் வார்த்தை அல்லவா? )

ஆக சிலப்பதிகார காலத்துக்கு முன்னர் பல நெடுங்காலமாகவே வழங்கிவரும் ஒரு நிகழ்வுதான் இராமனின் கதை என்பது புலனாகிறது.

மேலும் சிலப்பதிகாரம் இராமனைப் போற்றும் விதமாக,

“தாவிய சேவடி செப்பத் தம்பியொடும் கான்போந்து

சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே ..”

(தன் பாதங்கள் சிவக்குமாறு தம்பியுடன் கானகம் போன, அசுரர்களின் நகரத்தைப் போரில் அழித்த சிறந்த வீரனின் பெயரைக் கேளாத காதுகள் என்ன காதுகள்?)

சிலம்பும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலம் என்னும் காலத்தில் ஏற்பட்டன. அக்காலம் சங்க காலம் மற்றும் பக்தி இலக்கியக் காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். எனவே ஆழ்வார், நாயன்மார் காலத்துக்கு முற்பட்டது. இந்தக் காலத்துக்கும் கம்பன் காலத்துக்கும் இடையே சுமார் எண்ணூறு ஆண்டுகள் உள்ளன.

இதன் மூலம் நாம் அறிவது : சங்க காலத்தில் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலியவற்றிலும், சங்கம் மருவிய கால இலக்கியங்களான சிலம்பு மற்றும் மணிமேகலையிலும், அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்துத் துவங்கிய பக்தி இலக்கியக் காலங்களான ஆழ்வார் நாயன்மார் காலப் பாடல்களிலும் இராம காதை அமைந்துள்ளது. கம்பன் அதன் பின்ன முந்நூறு ஆண்டுகள் கழித்தே இராமாயணம் எழுதுகிறான்.

ஆக கம்பன் காலத்திற்கு வெகு காலம் முன்பே இராம காதை தமிழகத்தில் இருந்துள்ளது என்று அறியப் பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை என்பது அடியேன் கருத்து.

அடுத்த பதிவில், சில கம்ப ராமாயணச் சுவைகளைப் பார்ப்போம்.

கம்பர் – ஒரு அறிமுகம்

தமிழ் நாட்டில் அரசுகளால் வெளியே காட்டப்படாத, முயற்சி செய்து மறைக்கப்பட்ட ஒரு கவிஞன் உண்டென்றால் அது கம்பன் தான் என்று அடித்துக் கூறலாம். ஏனென்றால் அவன் எழுதியவை அப்படிப்பட்டவை. மனிதனைத் தெய்வமாக்கும் அல்லது தெய்வ நிலைக்குத் தூண்டும் பல இலக்கியங்கள் அவன் செய்துள்ளான். நமக்குத் தெரிந்தது “கம்ப ராமாயணம்”. இன்னும் சில உள்ளன. அவை திருக்கை வழக்கம், ஏரேழுபது, சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி முதலியன.

நாம் கம்ப ராமாயணத்தை மட்டும் பார்ப்போம்.

“கம்ப ராமாயணம்” என்பதே தவறான சொல்லாக்கம். கம்பன் தனது காவியத்திற்கு வைத்த பெயர் “இராமாவதாரம்”. ஒருவேளை அதனால் தானோ என்னவோ நமது தமிழரசுகள் இது வெளியே தெரியவேண்டிய அளவு தெரியாமல் மழுங்கடிக்கச் செய்தன.

கம்பன் உண்மையில் யார்? கம்பன் என்பது அவனது இயற்பெயரா? இதற்கெல்லாம் சரியான பதில் இல்லை ஆராய்ச்சியாளர்களிடம். எங்கள் ஊர் தேரழுந்தூரில் கம்பன் பிறந்ததால் ஊரில் மிகவும் வயது முதிர்ந்த பலரிடம் பல வருடங்களாகவே பேசிப்பார்த்திருந்தேன். பெயர்க்காரணம் பல கிடைத்தன. சில பெயர்க்காரணங்கள் மட்டும் குறிப்பிடுகிறேன்.

கம்பர் “நாதசுரம்” வாசிக்கும் தொழில் பிரிவினர். கம்பினால் செய்யப்பட்ட நாதசுரம் வாசிப்பதால் அந்த இசை மரபினருக்குக் “கம்பர்” என்ற பொதுப்பெயர் வழங்கி வந்திருக்கிறது. நாளைடைவில் கம்பரது இயற்பெயர் மறைந்து தொழிற்பெயரே  நிலைத்துவிட்டது என்று ஒரு கருத்து உண்டு. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். தற்போது தேரழுந்தூரில் ஆமருவிப்பெருமாள் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் வசிக்கும் இடத்திற்கு சமீபத்தில் கம்பர் மேடு என்று கம்பர் வாழ்ந்த இடம் இருக்கிறது. இந்தக் காரணம் உண்மையாக இருக்கலாம். ( கம்பர் மேடு இன்று என்ன அழகில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப் படுகிறது என்று இங்கே பார்க்கவும் )

இதை விட நம்பத்தகுந்த விளக்கம் ஒன்று உள்ளது. கம்பர் நரசிம்ம பக்தர். அதனால் கம்பத்தின் ( தூணின்) உள்ளிருந்து வந்த பெருமாளை மனதில் கொண்டு தன் பெயரையும் “கம்பன்” என்று மாற்றிக் கொண்டார். இதற்கு ஆதாரம் கம்ப ராமாயணத்தில் உள்ளது. கம்பர் தான் எழுதிய ராமாயணத்தில் “இரணிய வதைப் படலம்” என்று நரசிம்மர் இரணியனைக் கொன்ற கதையை எழுதியுள்ளார். இந்த இரணியன் கதை வால்மீகத்தில் இல்லை. தான் ஒரு நரசிம்ம பக்தர் என்பதால் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மனை ராம காதையில் கொண்டு வந்தள்ளார்.

இரண்யன் பிரகலாதனிடம் அரியைக் காட்டு என்னும் விதமாக,

“உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் பரந்துகானைக்
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி காட்டிடாயேல்.. ”

என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதிலும் “கம்பத்தின் வழியே” என்று தூணைக் குறிக்கிறான்.

மேலும் வலு சேர்க்கும் விதமாக தேரழுந்தூரில் ஆமருவியப்பன் திருக்கோவிலில் கருவறையில் ஆமருவியப்பன் அருகில் பிரகலாதன் இருக்கிறார். எந்த வைணவக் கோவிலிலும் கருவறையில் பெருமாள் தவிர யாரும் இருப்பதில்லை. ஆனால் தேரழுந்தூரில் நரசிம்ம தொடர்புள்ள பிரகலாதன் எழுந்தருளியுள்ளார். இது ஒரு தொடர்பு என்றும் கொள்ளலாம். மேலும் சந்நிதியின் வெளியில் யோக நரசிம்ஹர் சந்நிதி உள்ளது. அவரது சிலை மிகவும் புராதமானது என்று பார்த்தாலே தெரிகிறது. கம்பன் மற்றும் அவரது மனைவியின் சிலைகள் ஆமருவியப்பனின் கோவிலில் ஒரு தனி சந்நிதியில் உள்ளன.

தேரழுந்தூரில் கம்பர்
ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பரும் அவர் மனைவியும்

வேறொரு விளக்கமும் உள்ளது. கம்பர் பிறந்தபோது பேச்சு வர வில்லையாம். குழந்தையைத் தற்போது கம்பர் மேடு இருக்கும் இடத்திற்கு மேற்கே உள்ள காளி கோவில் கம்பத்தின் முன் கிடத்தி இருந்ததாகவும் அதன் பின்னர் பேச்சு வந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. தற்போதும் அவ்விடத்தில் “கம்பர் காளி” என்று ஒரு காளி கோவில் இன்றும் உள்ளது.

சிவ பெருமானுக்குக் “கம்பன்” என்ற பெயர் உண்டு என்றும் சில தமிழ் அறிஞர்கள் கூறுவர். சுந்தரர் சிவ பெருமானைப் பாடும்போது ,”கண்ணும் மூன்றுடைக் கம்பன்”, “கங்கையாளின் கம்பன்”, ” கூத்தன் கம்பன்” என்று பாடுகிறார். சிவ பெருமானுக்கு ‘ஏகாம்பரன்” என்ற பெயர் உண்டு என்பதால் அது மருவி ‘ஏகம்பன்’ என்றும் “கம்பன்” என்றும் ஆனதாகக் கூறுகிறார் காலஞ்சென்ற தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளை.

கம்பர் இளமையில் கரும்புக் கொல்லையைக் கையில் கம்புடன் காத்ததால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்கிறார் செல்வ கேசவ ராய முதலியார் என்னும் தமிழ் அறிஞர்.

இப்படிப் பல கதைகள் , இலக்கியச்சான்றுகள் இருந்தாலும் இதுதான் உண்மை என்று அறியமுடியவில்லை.

கம்பர் எப்படி ராமாவதாரம் எழுதினர் ? 10,000 பாடல்களுக்கு மேல் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஒரு மனிதன் வேறு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு ஒரு மொழி சார்ந்த மூலக்கதையை எழுதவேண்டுமென்றால் அவனிடம் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் பற்றி எந்தக் கவலையும் இருந்திருக்க முடியாது. ஆக கம்பன் பெரும் செல்வந்தனா என்று ஆராய்ந்தால் அது இல்லை. “சோழ நாடு சோறுடைத்து” என்று சொன்னாலும் சோறு கிடைக்க வேண்டுமே!

கம்பனுக்கு அந்தக்காலத்திலேய ஒரு ஸ்பான்சர் கிடைத்தார். அவர் தேரழுநதூருக்கு சில மைல்கள் தொலைவில் இருந்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். பெயரைப் பார்த்தால் சைவராக இருந்திருக்க வேண்டு ( சடை சிவ பெருமானைக் குறிப்பது).இருந்தும் அவர் கம்பரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வைணவ நாயகனான ராமனைப் பற்றி ராமகாதை எழுதப் பொருளுதவி வழங்கியுள்ளார். இதைக் கம்பனே பின்வருமாறு கூறுகிறார்.

“தோமறு மாக்கதை சடையன் வெண்ணை நல்லூர் வியின் தந்ததே ”

( சடையப்ப வள்ளல் வாழ்ந்த வெண்ணை நல்லூரில் தங்கி இருந்து, குற்றமற்ற இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடித்தேன் )

சடையப்பர் சிவனைப் பற்றிப் பாடச் சொல்லி இருக்கலாமே! அந்நாளில் சைவ வைணவ பேதம் இருந்துள்ளது என்பது கம்பனின் இந்தப் பாடல் மூலம் தெரிகிறது

“அரன் அதிகன், உலகளந்த

அரி அதிகன்,  என்றுரைக்கும் 

அறிவில்லோர்க்குப் பரகதி அடைவரிய

 பரிசே போல் “

( சிவன் தான் பெரியவன்; இவ்வுலகை அளந்த திருமால்தான் பெரியவன்; என்று கூறுபவர்கள் அறிவற்றவர்கள்; அவர்கள் கடவுளையே வெறுப்பவர்கள்; அவர்களுக்கு உயர்ந்த கதி இல்லை; உயர்ந்த கதியை அடைய முடியாது )

கம்பனுக்கு ராம காதையைப் பாடவே விருப்பம். வால்மீகியால் உந்தப்பட்டான். எனவே கவியின் விருப்பத்திற்கிணங்க சடையப்பர் ராமாயணம் எழுத உதவியுள்ளார். ஆக, சமயம் சாராத ஒரு அணுகுமுறை சடையப்பரால் பின்பற்றப்பட்டது என்று அறிகிறோம். அக்கால மாந்தரின் வள்ளல்தன்மை வியக்க வைக்கிறது.

சரி, கம்பன் ஏன் ராமனைப் பாட வேண்டும் ? பணம் கிடைக்கும் என்பதற்காகவா ? இல்லை. அவனே கூறுகிறான் இவ்வாறு :

“ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்றுஇக்

காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ ”

( நான் ராமாயணத்தை யாருடைய தூண்டுதலின் பேரிலும் பாடவில்லை.குற்றமற்ற வெற்றியை உடைய இராமன் வரலாற்றில் உள்ள ஆசையினால் பாடினேன் )

தேரழுந்தூரில் பிறந்த கம்பன் வெண்ணை நல்லூரில் எழுதிய நூல் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருவரங்கன் சந்நிதி அருகில் நரசிம்மர் சந்நிதியில் பாடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அரங்கேறியபின் நரசிம்ம மூர்த்தியிடமிருந்து ஒப்புதல் போல் “ஆம்” என்ற சப்தம் வந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

இங்கேயும் நரசிம்ம பக்தனான கம்பன் தன் ராம காவியத்தை நரசிம்மர் முன்னே அரங்கேற்றினான். அவனது  பெயர்க்காரணத்திற்கு இது வலு சேர்க்கிறது.

கம்பன் அரங்கேற்றம் குறித்து ஒரு தனிப்பாடல் உள்ளது. அது பின்வருமாறு:

“எண்ணிய சகாத்தம் எண்ணூற்று

ஏழின்மேல், சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே, கம்ப நாடன்

பண்ணிய இராம காதை,

பங்குனி, அந்த நாளில்,

கண்ணிய அரங்கர் முன்னே

கவி அரங் கேற்றினானே”

( சடையப்ப வள்ளல் சிறந்து வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே இருந்து கம்ப நாடன் எழுதிய ராமகாதை, எண்ணப்பட்ட நூற்றாண்டு எண்ணூற்றேழிலே , பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரம் நிறைந்த நாளில் அரங்கன் முன் அரங்கேறியது ).

சரி. ஒரு வள்ளல் உதவி செய்தார். கம்பன் பாடினான். இதில் என்ன செய்தி ?

கம்பன் சடையப்பரை  மறக்கவில்லை. மேலே சொன்னபடி பல இடங்களில் சடையப்பரைப் போற்றுகிறான். “நன்றி மறப்பது நன்றன்று ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சடையப்பரை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைக்கிறான். முடிவாக, ராம ராவண யுத்தம் முடிந்து ராம பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அப்பாட்டில் கம்பன் கூறுவதைக் கேளுங்கள் :

“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி”

( ராம பட்டாபிஷேகத்தில், அனுமன் அரியணையைத் தாங்கினான்; அங்கதன் உடை வாள் ஏந்தி நின்றான்; பரதன் குடை பிடித்தான்;.. வெண்ணை நல்லூர்ச் சடையன் குலத்தில் தோன்றிய அவனது முன்னோர் ஒருவர் மணிமுடியை எடுத்துக் கொடுக்க, வசிஷ்டர் ராமனுக்கு முடிசூட்டினார் )

வட நாட்டில் அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தில் வெண்ணை நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் முன்னோர் எப்படிச் சென்றனர் ? இப்படிப் பகுத்தறிவுடன் கேட்கலாம். ஆனால் கம்பனின் உள்ளத்தைப் பார்க்க வேண்டும் இதில். தன்னை வாழ வைத்த சடையப்பரையும், அவரது குலத்தையும் அவரது முன்னோர்களையும் தன் ஒரு வரியினால் இன்றளவும் வாழ வைத்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான் கம்பன். நம் எல்லோருக்கும் வழி காட்டினான்.

அடுத்த பதிவில் “கம்பனுக்கு முன் ராமாயணம் தமிழகத்தில் இருந்ததா?” என்று பார்ப்போம்.

ஆழ்வாரைக் காணவில்லை …

திருமங்கை ஆழ்வார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தேரழுந்தூர் வந்தார். ஆமருவியாப்பனை சேவிக்க எண்ணி ஊரினுள் புகுந்தார்.

ஆனால் பெருமாள் கோவில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஊரில் வழியும் தெரியவில்லை. எங்கும் ஒரே புகை மயம். ஏன் என்று வினவினார்.

சந்நிதித் தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் அனனவரும் தத்தம் வீடுகளில் திருமாலை நோக்கி வேள்வி செய்தவண்ணம் இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் வேள்வி. ஊர் முழுவதும் வேத கோஷம்.

இந்த வேள்வியினால் எழுந்த புகை ஊர் முழுவதும் பரவி ஒரே இருள். அதனால் ஆழ்வாருக்கு வழி தெரியவில்லை. இதனால் கவரப்பட்ட ஆழ்வார் அதனை திவப்பிர்பந்தத்தில் இப்படிப் பாடினார் :

“அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர்”.

அப்படிப்பட்ட ஊரில் தற்போது சந்நிதித் தெரு எப்படி உள்ளது என்று ஆராய்வதில் பயனில்லை. மனம் வருத்தப்படும்.

அது இருக்கட்டும்.

தற்போது சில நாட்களாய் சிங்கப்பூரிலும் ஒரே புகை மூட்டம். வழி தெரியவில்லை. மூச்சு முட்டுகிறது. இந்தோனேசிய என்னும் அண்டை நாட்டில் வேள்வி செய்கிறார்கள் போல். ஆனால் காடுகளில் மரங்களை, உலர்ந்த பனை ஓடுகளைய்  ஆகுதியாய்  அளிக்கிறார்கள்.  அதனால் சிங்கப்பூர் என்னும் சிம்ஹபுரியில் ( 110-வது திவ்யதேசம் ) புகை மூட்டம். வழி தெரியாமல் திண்டாடுகிறோம்.

இரு வேள்விகளுக்கும் ஒரே வேறுபாடு தான்.

தேரழுந்தூர் வேள்வி உலகம் செழிக்க இறை அருள் வேண்டி இறைவனை நோக்கி ஆகுதியாக நெய் அளித்து நடத்தப்பட்டது.

இந்தோனேசிய வேள்வி உலகம் அழிய பணப் பேய் நோக்கி ஆகுதியாய் மனித வாழ்வை அளித்து நடத்தப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடத்தப்படும் வேள்வி. இந்த வேள்வி நடக்காமலிருப்பது உலகத்திற்கு நன்மை.

அதெல்லாம் சரி.

வேள்வி நடக்கிறது. ஆகுதி அளிக்கப்படுகிறது. புகை தெரிகிறது.

ஆனால் ஆழ்வாரையும் அந்தணர்களையும் தான் காணவில்லை.

PSI

ஒரு ஊரின் கதை

ஊர் கூடித் தேர் இழுப்பது என்று கூறுவர். தேரழுந்தூரில் 1950ல் ஊர்ப் பெயருக்குக் காரணமான தேர் எரிக்கப்பட்டது. புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்க சார்புடையவர்கள் இந்த மாபாதகச் செயலைச் செய்தார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.

எரித்தவர்கள் யார் என்று தெளிவாகத் தெரிந்தாலும் பெயருக்கு சிலர் கைது செய்யப்பட்டனர் என்று அறிகிறேன். அக்கால விபரம் அறிந்தவர்கள் தற்போது இல்லை.

ஆக தேர் எரிந்து போனது. மிஞ்சியது சில உருக்குலைந்த மரக் கட்டைகள் மற்றும் இரும்பு. பல நூறு ஆண்டு காலத் தேர் உருத்தெரியாமல் அழிந்து போனது.

வழக்கமாகத் தேர் நிற்கும் தேரடி ஆகிரமிப்புக்குள்ளானது. கோழி இறைச்சிக் கடை முதலியன தோன்றின. சில ஆண்டுகளில் அவை மின் இணைப்புப் பெற்ற கடைகளாக மாறின. இதனிடையில் மதமாற்றம் மற்றும் வீட்டு விற்பனைகள் மூலம் அக்ரஹாரம் இஸ்லாமியர் வசம் போனது. பார்ப்பனரின் பிழைப்பு கருதிய வெளி ஊர்க் குடி நுழைவு ஒரு முக்கிய காரணம்.

சன்னிதித் தெருவில் ஆமருவிப்பெருமாள் உற்சவ சமயங்களில் எழுந்தருளும்போது வரவேற்க இரண்டு மூன்று குடும்பங்களே இருந்தன.

அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறை கை விரித்ததால் உற்சவங்களும்   நின்று போயின.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் தேரழுந்துர் வந்த போது பெருமாள் கோவில் செல்ல முடியவில்லையாம். எங்கும் புகை மூட்டம். காரணம் “அந்தணர் தம் ஆகுதியின் புகை..” என்று அவரே சொல்கிறார்.

அந்தத் தேரழுந்தூரில் பெருமாளுக்கு உற்சவம் நின்று போனது 1980-களில். 40 வேலி நஞ்சை வயல் சொந்தக்காரரான ஆமருவிப்பெருமாள் அன்றாட உணவின்றித் தவித்தார். கோவில் ஊழியர்களுக்கு மாத வருமானம் அரசு வழங்கவில்லை. நிதிப் பற்றாக்குறை என்று கூறினர். அதே சமயம் ஆடம்பர விழாக்களுக்குப் பஞ்சமில்லை அரசாங்கத்தில்.

பெருமாளின் நிலை கண்டு அப்போது உருவானது தான் “கோசக பக்த சபா” – மூன்று பக்தர்களால் துவங்கப்பெற்றது. ஒரு ரூபாய், ஐம்பது பைசா என்று வசூல் செய்து தற்போது 30 ஆண்டுகளாய் வருடாந்திர உற்சவங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் சராசரி வயது 78. ( கோசகன் – ஆமருவி-யின் வடமொழி மூலம்)

இந்து சமய அற நிலையத் துறை தனது பொறுப்பைக் கை கழுவிவிட்டபின் கோவிலின் உற்சவங்கள் கோசக சபாவினால் தொடரப்பட்டன. பல நேரங்களில் கோவிலின் அன்றாட வேலைகள் கூட சபா செய்தது.

அப்படியாக ஆமருவியப்பனின் தேரையும் புதியதாகச் செய்ய ஒரு திட்டம் தீட்டியது சபா. ( அரசின் பங்களிப்பு ரூ.5 லட்சம். தேரின் 2004-ம் ஆண்டு செலவு ரூ.25 லட்சம் )

கொடையாளர் பணியாக (Donor Work) தேர் வேலைகள் தொடங்கின. கொடையாளர் சேர்க்கும் பணி தொடங்கியது. ஊரிலிருந்து வெளியெறி நல்ல நிலையில் இருக்கும் மக்களிடம் கொடை கோரப்பட்டது. பலர் ஆங்கிலம் பேசினர். நிர்வாகம் தொடர்பான வார்த்தைப் ப்ரயோகங்கள் , அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. ஒன்றும் கவைக்கு உதவவில்லை.

சபா களத்தில் இறங்கியது. அரசுடன் பல முறை பேச்சு வார்த்தை, கொடையாளருடன் ஒருங்கிணைப்பு என்று ஒரு புறம், மர வேலை செய்பவர், தேர் கட்டும் தொழிலில் இருப்பவர் என்று இவர்களுடன் ஒரு புறம், இலுப்பை மரம் விளையும் காடுகளைத் தேடி ஒரு புறம் என்று பல முனைகளில் வேலை.  சபாவின் உழைப்பின் பலனாகப் பல நல்ல உள்ளங்கள் கொடையாளர்களாக உறுவெடுத்தன ( ஒரு சில நெகிழ வைக்கும் சம்பவங்கள் பின்னர் ).

மரம் கோரி ஒப்பந்தப்புள்ளி (Tender ) வெளியீடு. அதை யாருமே எடுக்கவில்லை. எனவே ஒரு மரம் அறுப்பவர் காலில் விழுந்து அவரை எடுக்க வைத்தது, அவர் மரம் தராததல் தாமே மரம் வெட்டி அதை அவர் மரம் அறுக்கும் ஆலையில் தாமே அறுத்து தேர்த் தச்சனிடம் கொண்டு சேர்த்தது என்று சபாவிற்குப் பல வேலைகள் ( மரம் அளிக்காவிட்டலும் அவர் அளித்ததாக கணக்கு காட்ட வேண்டி இருந்தது வேறு கதை).

இரண்டு ஆண்டுகள் போராட்டம். பின்னர் தேரோட்டம். இடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது பற்றி எழுதினால் அது ஒரு “சிங்கம்” திரைப்படம் போல் 3 மணி ஓடும்.

அதன்பின்னர் 2006-ம் ஆண்டு கோவில் செப்பனிடும் பணி துவங்கியது சபா. அதுவும் கொடையாளர் பணி என்று அரசு தெரிவித்தது. எனவே சபா கொடையாளரைத் தேடி மீண்டும் பயணம்.

ஐந்து ஆண்டுகள் தீவிர வேலை. அற நிலையத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, வனத் துறை என்று அரசின் பல துறைகளுடனும் சேர்ந்து உழைத்ததன் பலன் – குடமுழுக்கு 2010ல் நடைபெற்றது.

சில பாடங்ள் :

கோவிலின் கொடி மரத்திற்குத் தேக்கு மரம் தேவைப்படும். கோவில் நந்தவனத்தில் இருக்கும் மரத்தைத் தர அற நிலையத்துறை தயங்கும். வெளியில் இருந்து கொண்டு வர வேண்டி காவல், வனத்துறை, அறம் என்று பலரது தயவு தேவை. வனத்துறை அனுமதி அவ்வளவு எளிது அல்ல.

அறநிலையத் துறை ஒப்புதல்கள் ஊர்ப்புறங்களில் இருந்து அவர்களது சென்னை அலுவலகலம் செல்ல பல நாட்கள் ஆகும். எனவே நாம் கூரியர் வேலையும் செய்ய வேண்டி இருக்கும, பலமுறை.

அறநிலையத் துறையில் ஒரு கோப்பு ( File) மேசை விட்டு மேசை நகர “சம்பாவனை” தேவை. அல்லது ஒருமையில் பேச்சு கேட்க வேண்டி வரும். அவ்விடத்தில் “நான் யார் தெரியுமா ? என்ன வேலை செய்தேன் தெரியுமா?” போன்ற வெட்டி வீரம் பயன் அளிக்காது. மேலும் தாமதம் உண்டாக்கும்.

அறநிலையத் துறையில் சில மிக நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் வாகனத்திற்குத் தாங்களே பெட்ரோல் போட்டுக் கொள்கிறார்கள்.

பஞ்சாயத்து, ஊராட்சி, “அண்ணன்-தம்பி”  என்று பல பரிவார / எல்லைக் காவல் தேவதைகளுக்கும் அவ்வப்போது பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம்.

இவை எல்லாவற்றையும் விட சமாளிக்க முடியாதது வைஷ்ணவத்தில் உள்ள “உள் குத்துக்கள்”. ராமானுசரே இன்னொறு முறை அவதரித்தாலும் கோபுரம் மேலேறித் தற்கொலை செய்துகொள்வார். சம்பிரதாயம் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் திருமண்ணின் ( நாமம் ) அமைப்பையும் அதன் வடிவத்தையும் மட்டுமே அறிந்து, சிறிதளவேனும் கூட தத்துவ அறிவு இல்லாத வறட்டு ஜாம்பவான்களின் பிடியில் சிக்கியுள்ளது வைஷ்ணவ சம்பிரதாயம் என்பதால் இந்த “உள் குத்தினால்” விளையும் கேடு ரொம்பவும் பெரியது. இந்தப் போலி வித்யாசங்களினால் பாதிக்கப்படுவது பெருமாள் கைங்கர்யம் என்று கூட எண்ணாமல் இருப்பவர் ஆன்மிகவாதி என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உதாரணம் : திவ்யப்ப்ரபந்தத்தில் எந்தப் பாசுரம் பாடுவது, நான்கு வீதிகளில் எந்த இடத்தில் எந்தப் பாசுரம் பாடுவது, யார் முதலில் தொடங்குவது, முதல் தீர்த்தம் யாருக்கு எந்த வரிசையில் அளிக்கப்பட வேண்டும், பாசுரத்தை எந்தத் தொனியில் , அளவில் பாடுவது  – இப்படி நாட்டுக்குத் தேவையான பல சண்டைகள் மனதை ரொம்பவும் பாதிக்கும். அதனால் கையில் ரத்த அழுத்த மாத்திரை வைத்துக்கொள்வது ரொம்பவும் அவசியம்.

தமிழரின் ஆதி சமயங்களில் ஒன்றான வைணவத்தையும் வைணவக் கோவில்களையும் அழிக்க திராவிடக் கட்சிகள் தேவை இல்லை. இந்தப் போலிப் “பெரியவர்”களே போதும். ( இந்த வைஷ்ணவ மோதல்கள் எல்லா ஊர்களிலும் உள்ளது ).

இந்த அனைத்து ரக இன்னல்களையும் கடந்து ஆமருவிப்பெருமாள் அருளால் தேரழுந்துர் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் தேர்த்திருப்பணியிலும், கோவில் திருப்பணியிலும் ஊர் மக்கள் காட்டியுள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு சாதி மதங்களைக் கடந்தது. தேர் வெள்ளோட்டத்தில் இஸ்லாமியர் தண்ணீர்ப் பந்தல் அமைத்தார்கள்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் :

அற நிலையத் துறை- இத் துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஒரு அலுவலர் / அதிகாரி பல கோவில்களுக்கும் பொறுப்பு. கோவில்கள் பல மைல்கள் தொலைவில் அமைந்துள்ளன.

காவல் :  தேரின் போது இவர்கள் சேவை தேவை.

மின்சாரம் : இது இல்லை என்றாலும், தேர் ஓடும்போது மின் கம்பிகளைக் கழற்றி மாட்ட வேண்டும்.

தீயணைப்பு : தேரின் போது இவர்கள் அவசியம்.

ஊர் மக்கள் : சாதி மத பேதம் இன்றி தேர் இழுக்கும் சாதாரண மக்கள்.

மேலும் தேரழுந்துர் பற்றி அவ்வப்போது பேசுவோம்.

பி.கு: இந்தக் கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள். இவற்றுக்கும் கோவிலார்கும், கோசக சபாவிற்கும் தொடர்பில்லை. ஒரு வெளியிருப்புக் கண்காணிப்பாளன் / பார்வையாளன் ( onlooker ) என்ற முறையில் பதிவு செய்திருக்கிறேன்.

%d bloggers like this: