தேரழுந்தூரில் சிங்கம்?

நாயக நாயகி  பாவம் தாற்காலிகமாக நீங்கப்பெற்ற திருமங்கை மன்னன்  மனதில் ‘ஆமருவியப்பனை அதிகமாக கோபித்துக் கொண்டோமோ’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. ‘போன புனிதர்’ என்று கோபத்துடனான பிரேமை நிலையில் அவனைச் சொன்னதை நினைத்துச் சற்றே வருத்தம் கொள்கிறார்.

தேவாதிராஜனின் கோவிலில் கருவறைக்குள் நுழையும் முன்னர் வலதுபுறத்தில் உள்ள யோக ந்ருஸிம்ஹனின் சன்னிதி தென்படுகிறது போல. ‘அடடா, கோஸகன் எங்கே சென்றான்? அவன் விரைவாக வருபவன் அன்றோ? பக்தன் அழைத்தவுடன் எந்த யோசனையும் இன்றி உடனே வந்தவன் அல்லவோ அவன்?’ என்னும் எண்ணம் தோன்றப்பெற்றவராய் சற்று நிதானித்து நிற்கிறார்.

‘இவன் ‘போன புனிதர்’ அன்றே? வந்தவன் அல்லவா? எப்படிப்பட்டவன் இவன்? இரணியனின் மிடுக்கையும் கம்பீரத்தையும் தனது கரங்களால் இரண்டாகப் பிளக்கும் விதமாக அவனது மார்பைப் பிளந்தவன் அன்றோ? இவன் அன்றோ தனது இடக்கையில் சங்கையும், வலக்கையில் சுதர்சன சக்கரத்தையும் கொண்டுள்ளவன்?

அப்படிப்பட்டவன் எழுந்தருளியுள்ள ஊர் எப்படிப்பட்டது? செக்கச்செவேல் என்று உள்ள தாமரைப் பூவைப் போன்ற பிரம்மனை ஒத்த அந்தணர் வாழும் ஊர். அவ்வாறான திருவழுந்தூரை விட்டு நீங்காது, அவ்வூரில் நிலையாக நின்றுகொண்டிருக்கும் ஆமருவியப்பனை நான் கண்டுகொண்டேன்’ என்கிறார் ஆழ்வார்.

இந்த யோக ந்ருஸிம்ஹனின் முன்னர் அமர்ந்தே, தேரழுந்தூர்க்காரனான கம்பன் இராம காதை இயற்றியுள்ளான். ந்ருஸிம்ஹ பக்தனான அவன் வால்மீகியின் இராமாயணத்தில் இல்லாத ‘இரணிய வதைப் படல’த்தைக் கம்பராமாயணத்தில் வைத்தான் என்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம். ( கம்பன் என்பதே கம்பத்தில் இருந்து தோன்றிய திருமாலின் பெயராம்).

யோக நரசிம்மர் Uதேரழுந்த்
யோக ந்ருஸிம்ஹன்

சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே

ஆழ்வாரோ ‘அந்தணர்கள் பிரம்மனைப் போன்று சிவந்து தெரிகிறார்கள்’ என்கிறார். அவர்கள் வேதத்தை ஓதி ஓதி முகம் சிவந்து காணப்பட்டனர் என்று காட்சிப்படுத்திக் கொள்ளலாம். திருவள்ளுவர் ‘மற்றெவ்வுயிர்க்கும் செண்தன்மை பூண்டொழுகலான்’ என்று அந்தணர்க்கு இலக்கணம் கூறுகிறார். முகம் சிவந்திருக்கலாம், ஆனால் உள்ளம் சிவந்திருக்கவியலாது என்று புரிந்துகொள்கிறோம். மற்றவர்க்கு ஒரு துன்பம் என்றால் மனம் இரங்குபவன் எவனோ அவனே ஸ்ரீவைஷ்ணவன் என்பது வழக்கில் உள்ள எண்ணம். ஒரு வேளை கருணையினால் மனம் சிவந்திருக்கலாம் என்பதால் உடலும் உள்ளமும் சிவந்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்ப்பது ஒரு சுவையே.

 

 

தேரழுந்தூர் செல்லும் வழி

திருமங்கையாழ்வார் கனவு நிலையில் இருந்து விடுபடுகிறார். பரகால நாயகி நிலையில் இருந்து மீண்டு, திருமங்கை மன்னனாக, ஆழ்வாராக உணர்கிறார்.

மாற்றம் நிகழ்ந்தவுடன் ஊரின் வயல்வெளிகள் கண்ணில் படுகின்றன. வளம் மிக்க தேரழுந்தூர் அல்லவா? மன்னி முது நீர்க் கழனிகள் கொண்ட ஊரன்றோ? வியந்தவண்ணம் ஊரின் வெளியில் வருகிறார். அப்போது தேரழுந்தூருக்கு வழி கேட்டு யாத்ரீகன் ஒருவன் வருகிறான்.

ஸ்வாமி, திருவழுந்தூர் செல்லும் வழி யாது ?

அடடா, நான் அவ்வூரில் இருந்தே வருகிறேன். எனவே வழி கூறுகிறேன் கேளுங்கள். நான் வந்த இந்தப் பாதையிலேயே செல்லுங்கள். ஊர் வந்துவிடும்.

திருவழுந்தூரை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?

சுலபம், யாத்ரீகரே. மன்னி முது நீர்க் கழனிகள் நிறைந்து இருக்கும், வயல்களில் வாளை மீன்கள் துள்ளும். அதுதான் திருவழுந்தூர்.

மன்னிக்கவும் ஸ்வாமி. இந்தப் பிராந்தியத்தில் எல்லா ஊர்களிலுமே பழைய நீர்க் கழனிகளும், வயல்களும் உள்ளனவே. ஆகவே தேரழுந்தூரை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஆம். உண்மை தான். சோழ தேசம் அல்லவா? நீர் வளம் நிறைந்து தான் இருக்கும். ஊரின் அடையாளத்தைச் சொல்கிறேன் கேளும். வயல்களில் குவளை மலர்கள் பூத்து நின்று, பெருமானின் கண்களைப் போன்ற தோற்றம் அளிக்கும். வயல்களின் அருகில் உள்ள நீர் நிலைகளில் செவ்வல்லிப் பூக்கள் மிகுந்து, பெருமானின் உதட்டைப் போன்ற தோற்றத்துடன் விளங்கும். இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால், உற்றுப் பாருங்கள், நீர் நிலைகளில் உள்ள தாமரைப் பூக்கள் பெருமானின் முகத்தைப் போன்று அழகுடன் விளங்கும். இவ்வாறான ஊர் எதுவோ அதுவே தேரழுந்தூர்.

அடடா, அருமையாக வழி சொன்னீர் ஐயா. தாங்கள் யாரோ ?

பூக்கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் அவற்றின் உள்ளிருந்து குயில்கள் கூவும் திருமங்கை என்னும் நாடு உள்ளதன்றோ? யாம் அன்னாட்டின் அரசன் திருமங்கை மன்னன் என்னும் பரகாலன்.

வந்தனம் ஆழ்வீர். தங்களைக் கண்டுகொண்டேன். தாங்கள் தேரழுந்தூரைப் பற்றிப் பாடியுள்ள இப்பத்துப் பாடல்களைப் பாடினால் பயன் யாதோ?

அடியேன் வாக்கில் இருந்து, திருவருளால் பொலிந்து வந்துள்ள இத்தமிழ் மாலையைச் சொன்னால் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.Tank Photo

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே

ஆழ்வார் குவளை, அல்லி, தாமரை முதலியவற்றைத் தேரழுந்தூர்ப் பெண்களின் கண், உதடு, முகம் முதலியவற்றிற்கே உவமையாகச் சொல்கிறார். ஆனால், ஆழ்வார் பாசுரங்களைப் பக்தர்கள் தம் உள்ளக் கிடக்கைக்கு ஏற்ப அனுபவிக்கலாம் என்பதால் எம்பருமானார் தாமே வியாக்யானம் எழுதாமல், திருக்குருகைப் பிரான் பிள்ளானிடம் வியாக்யானம் எழுதச் சொன்னதைப் பின்பற்றி, மேற்கண்ட பாடலில் உவமையை பெருமாளின் கண், உதடு, முகம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன். வழிப்போக்கருடன் ஏற்பட்ட பேச்சுக்களும் கூட அடியேனின் கற்பனையே. (அறிஞர் பெருமக்கள், பிழை இருப்பின் பொறுத்தருளவும்).

குவளை, அல்லி, தாமரை மலர்களைக் கொண்டு அடையாளம் சொல்லப்பட்ட தேரழுந்தூர் பின்னாளில் கம்பன் பிறந்த ஊர் என்று அடையாளம் கண்டது.

தற்போது, ஊர் வேறு ஒரு காரணத்திற்காக அறியப்படுகிறது. மனம் வலிக்கும் காரணம் அது.

வண்டு பாட, அன்னம் ஆட..

மன்னிய நீர் நிலைகள், அவற்றால் ஏற்பட்ட வளமான வயல்கள், தாமரை மல்கள், அவற்றில் தேன் பருகிப் பாடும் வண்டினங்கள்… #தேரழுந்தூர்.

தேரழுந்தூரின் வீதிகளில் மட்டுமே ஆடல் ஓசை கேட்கவில்லையாம். திருமங்கையாழ்வாரின் காதுகளில் வேறொரு இசையும் நாட்டியமும் கேட்கின்றனவாம்.

தேரழுந்தூரில் மிகப்பழையதான குளங்கள் உள்ளனவாம் (தற்போதும் உள்ளன). அவற்றில் மிக நெடுங்காலமாகவே நீர் நீறைந்து இருப்பதால் அருகில் உள்ள வயல்கள் வளமாக உள்ளன. குருகினங்கள், வாளை மீன்கள் முதலியனவற்றை முன்னரே பார்த்தோம். தற்போது நீர் நிலைகளின் மிகுதியால் அவற்றில் தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன.

தாமரைப் பூக்களில் தேன் அதிகம் இருப்பதால் அவற்றை அளவிற்கு அதிகமாகப் பருகிய வண்டினங்கள் போதை ஏறி, அதனால் சுரம் தவறாமல் பாடுகின்றனவாம். பாடல் ஒலியால் உந்தப்பட்ட அன்னப்பறவைகள், அருகில் உள்ள வயல்களில் இறங்கி, ஆணும் பெண்ணும் இணையாக நடனத்தில் ஈடுபடுகின்றனவாம். நாதம், அதன் பின் பரதம் என்று ஏற்பட்டது போல், வண்டுகளின் ரீங்கார இசை, அதனால் ஏற்பட்ட அன்னங்களின் நடனம் என்று களை கட்டிய வயல்களை உடைய ஊராக உள்ளது தேரழுந்தூர்.

DSC01624ஆண், பெண் அன்னங்களின் கூட்டுக் களியாட்ட நடனத்தைக் கண்ட திருமங்கையாழ்வார், மீண்டும் கனவு நிலைக்குச் செல்கிறார். அவருக்குத் தான் பரகால நாயகியாக, ஆமருவியப்பனிடம் பெற்ற பேரானந்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. ‘ஆனந்த அனுபவங்களை அளித்துவிட்டு, என் இடையில் உள்ள ஆடைகள் நெகிழுமாறு என் அழகுகள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டு என்னைவிட்டுப் பிரிந்து சென்ற தேவாதிராஜன் வசிக்கும் ஊரன்றோ இந்தத் தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்?’ என்று கனவு நிலையில் இருந்து கேட்கிறார் பரகால நாயகியான திருமங்கையாழ்வார்.

ஆமருவியப்பன் நீங்கியதால் தனது ஐம்புலன்களும் தன்னைவிட்டு நீங்கிவிட்டன என்கிறார் ஆழ்வார். பரமாத்மா அன்றி ஜீவாத்மா ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கிறார் ஆழ்வார்.

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே

ஆமருவியப்பன் தன்னை விட்டு நீங்கினாலும் அவரைப் ‘புனிதர்’ என்று பரகால நாயகி அழைக்கிறாள். இது அவள் ஊடலால் ஏற்பட்ட கோபத்தால் சொல்கிறாள் என்கின்றனர் உரையாசிரியர்கள்.

‘மன்னு முது நீர்’ என்னும் பயன்பாட்டால், தேரழுந்தூரில் மிகப் பழங்காலத்தில் இருந்தே நல்ல நீர் நிலைகள் உள்ளதை அறிய முடிகிறது.

ஆதி நாள் முதல் நீர் தேங்கியுள்ள குளங்கள், அவற்றால் வளம் பெற்ற, வாளை மீன்கள் நிரம்பிய  வயல்கள், தாமரைப்பூக்களில் நிரம்பியுள்ள தேனைக் பருகிப் போதையில் பாடும் வண்டுகள், அதைக் கேட்டு நடனமாடும்  அன்னப் பறவைகள் என்று இருந்த ஊர் என்பதை எண்ணும் போது தற்போதைய தேரழுந்தூரின் நிலை கண் முன் தோன்றி மறைவதைத் தவிர்க்க இயலவில்லை.

பெருமாள் கைகூப்புகிறானா?

ஆம், முதலில் பஞ்சணையில், அருகில் அமர்ந்தான். பரமானந்தப் பேரின்பத்தை அளித்தன். பின்னர் இப்போது கைகூப்பி நிற்கிறான். காரணமென்ன? என்று கனவு நிலையில் கேட்கிறாள் பரகால நாயகி.

நாயகி பாவத்தில் இருந்த திருமங்கையாழ்வார், கனவு நிலையில் சஞ்சரிக்கிறார். திடீரென்று நனவு நிலைக்கு வருகிறார். தேரழுந்தூரின் வீதிகளில் இருந்து பேரிரைச்சல் மீண்டும் கேட்கிறது.

என்ன இரைச்சல் என்று கூர்ந்து நோக்குகிறார். பஞ்சு போன்று மென்மையான பாதங்களை உடைய நற்குடிப் பெண்கள் பொன்னாலான சிலம்பணிந்து, பேரிரைச்சல் ஏற்படும்படியாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பேரிரைச்சலாம். இப்படிப்பட்ட ஊரில் வாழும் ஆமருவியப்பனைப் பற்றி எண்ணத் துவங்குகிறார். மீண்டும் பரவச நிலைக்கு, கனவு நிலைக்குச் சென்றுவிடுகிறார் ஆழ்வார்.

அடடா, ஆலிலைக் குழந்தை என்று எண்ணிக் கருணையோடு நோக்கினால், ஆமருவியப்பன் புன்முறுவலுடன் அருகில் அமர்ந்து, நெஞ்சத்துள்ளும், கண்ணுள்ளும் குடியேறிவிட்டான். இப்போது என்னை நோக்கிக் கைகூப்பி நிற்கிறானே? ஏன் இப்படி நிற்கிறான் ?

ஆம், முதலில் பஞ்சணையில், அருகில் அமர்ந்தான். பரமானந்தப் பேரின்பத்தை அளித்தன். பின்னர் இப்போது கைகூப்பி நிற்கிறான். காரணமென்ன? என்று கனவு நிலையில் கேட்கிறாள் பரகால நாயகி.

கண்ணன் வெண்ணையை முழங்கையால் எடுத்து உண்டுகொண்டிருக்கும் போது யசோதை தாம்புக்கயிற்றால் அடிக்க வர, அவளை நோக்கிக் கண்களைக் குவித்து, இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக் கோரினான் அல்லவா? அதைப்போன்றே என்னிடமும் கைகூப்புகிறானே? ஓ, காரணம் புரிந்துவிட்டது. பேரின்ப அனுபவத்தைக் கொடுத்ததால் வஞ்சிக்கொடி போன்ற என் இடை நோவு எடுத்தது என்பதால் கைகூப்புகிறான் கண்ணன் என்று கனவு நிலையில் நினைக்கிறாள் நாயகியான ஆழ்வார்.

இப்படியான கனவு நிலையில் உள்ள பரகால நாயகி, திடீரென்று தெருவில் இருந்து எழும் சிலம்பு ஒலிகளால் கனவு நிலை நீங்கப்பெற்று மீண்டு எழுகிறாள்.

Therazhundur-Amaruviappan1

வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்

நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,

பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்

அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே

சிலம்புகள் ஒலிக்க ஆடும் தேரழுந்தூர்ப் பெண்களை ‘நற்பாவைமார்கள்’ என்று அழைக்கிறார்.  முந்தைய பாடல்களில் ‘அம்பு அராவும் மடவார்’ என்றார். இப்போது அவர்கள் நற்குடியைச் சேர்ந்தவர்கள், பாவையர்கள் என்கிறார்.

தங்கம் என்ற பொருளைத்தரும்  ‘ஹாடகம்’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல் மருவி, ‘ஆடகம்’ என்று பாடலில் வருகிறது.

கனவு நிலையும், நனவு நிலையும் மாறி மாறி வரும் நிலையில் ஆழ்வார் பேசுவது கண்ணன் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியையும், பரகால நாயகி வடிவத்தின் வழியே அவர் கொண்டுள்ள காதலையும் உணர்த்துவன. இந்த இரு நிலைகளையும் திருக்குறளின் காமத்துப் பாலில் உள்ள பல குறட்பாக்களில் காணமுடிகிறது என்பது ஒரு சிறப்பு.

மாளிகையைக் காணவில்லை

தேரழுந்தூரின் வயலையும், நீர் வளத்தையும், அனல் ஓம்பும் அந்தணரையும், தேன் ஒழுகும் கூந்தலை உடைய பெண்டிரையும் கண்ட திருமங்கையாழ்வார் ஊரின் வீதியைக் காண்கிறார். மலைத்து நிற்கிறார்.

கரைகளை உடைய பெரிய கடல் போல் அகலமானவையாக உள்ளனவாம் வீதிகள். வீதிகளைக் கண்டு பிரமித்தவர் அவ்வீதிகளில் உள்ள வெள்ளையடிக்கப்பட்டு உயர்ந்து நிற்கும் மாளிகைகளைக் காண்கிறார். அவற்றின் உயரம் என்னவென்று அறிந்துகொள்ள மேலே அண்ணாந்து பார்க்கிறார்.

வெள்ளைவெளேரென்று வானம் தொட நிற்கும் மாளிகைகளின் உச்சியைக் காண இயலவில்லையாம். ஏன் என்று உற்று நோக்கினால் மாளிகைகளின் உச்சியில் கரும் புகை குடிகொண்டுள்ளதாம். அப்புகை மாளிகைகளின் உண்மையான உயரத்தை மறைக்கின்றதாம்.

எங்கிருந்து வருகிறது புகை? தேரழுந்தூரில் அந்தணர் வழங்கும் ஆகுதியின் புகையோ என்று எண்ணிப் பார்க்கையில் அப்போது மதிய வேளையாதலால் வேள்விகள் நிறைவுபெற்றுவிட்டன. எனவே வேள்விப் புகை அன்று. பின்னர் வேறென்ன புகையாக இருக்கும் என்று சற்று நடந்து சென்று பார்க்கிறார். வீதிகளை அடுத்த தோட்டத்தில் கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பதற்காக, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் ஆலைகள் உள்ளனவாம். புகை அங்கிருந்து வருகிறதாம்.

ஆலைகள் கொண்டு வெல்லம் தயாரிக்கும் அளவிற்குத் தேரழுந்தூரில் கரும்பு விளைச்சல் மிகுதியாக இருந்துள்ளது தெரிகிறது. அப்படிப்பட்ட ஊரில் குடிகொண்டுள்ள இறைவனைப் பற்றி ஆழ்வாரின் எண்ணம் விரிகிறது.

மாலை நேரம் ஆகிவிட்டதால் இன்ப உணர்ச்சிகள் மேலிடுகின்றன. ஆழ்வார் பரகால நாயகியாகத் தன்னைக் காண்கிறார்( நாயக நாயகி பாவம்). ஆமருவியப்பன் தன் அருகில் வந்து புன்முறுவல் பூப்பது போலவும், பின்னர் தன் அருகில் வந்து பஞ்சணையில் அமர்வது போலவும், அதன் பின்னர் பேரின்பத்தை அளிப்பது போலவும் எண்ணுகிறார். இதைப் போன்றே நம்மாழ்வாரும் பராங்குச நாயகியாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு பாசுரங்கள் பாடியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் வேளையில் அவளிடம் சொல்லிச் செல்ல வரும் போது அவளைச் சாந்தப்படுத்த என்னென்ன செய்வானோ, சொல்வானோ, அவை அனைத்தையும் ஆமருவியப்பன் செய்தான் என்பதாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் விரிகிறது. இவ்விடத்தில் திருக்குறளின் காமத்துப் பாலின் பல குறட்பாக்கள் ஒத்து வருகின்றன.

அழகிய அந்தப் பாசுரம் இதோ:

மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்

நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக்

கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,

ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே

Thirumangai

மேற்சொன்ன பாடலில் ‘என் நீலக் கண்கள் பனிமல்க’ என்று திருமங்கை மன்ன சொல்வது போல் உள்ளது சிறப்பு. திருமங்கையாழ்வாருக்கு ‘நீலன்’ என்கிற பெயரும் உண்டு.

அயோத்தியில் நடைபெற்ற செயல்கள் / தொழில்கள் யாவை என்பதைப் பின்வரும் பாடலில் கம்பன் சொல்கிறான்

அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,
நகரின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்

அயோத்தியிலும் கரும்பு ஆலைகள் இருந்தன, அதிலிருந்து நல்ல நறுமணத்துடன் புகை கிளம்பியது என்கிறான். தேரழுந்தூரில் இருந்த கரும்பு ஆலைகளை அயோத்தி மீது ஏற்றிப் பாடுகிறான் என்று கொள்ள இடமுண்டு. ஏனெனில், கம்பன் தேரழுந்தூர்வாசியன்றோ?

வைணவ திவ்யதேசத்தில் சூலம்?

வைணவ திவ்யதேசத்தில் சூலமா? வியக்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் திகைத்து நிற்கிறார்.

தேரழுந்தூரின் அகன்ற வீதிகளில் உள்ள ஒரு மாட மாளிகையின் மேல் வானத்தைக் கீறும் அளவிற்கு ஒரு சூலம் எழுந்து நிற்கிறது. சூலம் என்ன செய்கிறது என்று பார்க்கிறார். அது வானத்தின் வயிற்றைக் கிழிக்கிறது. அதனால் வானம் கொண்டிருக்கும் மேகக்கூட்டங்களின் வாயிலாகத் தேரழுந்தூரில் மாமழை பொழிகிறது. ‘முந்தி வானம் மழை பொழியும்’ ஊரன்றோ தேரழுந்தூர்?

வானம் பொழிவது இருக்கட்டும். ஆனால் இடி இடிக்கும் ஓசையே கேட்கவில்லையே? என்று வியக்கிறார் ஆழ்வார். எப்படிக் கேட்கும் அவருக்கு? மாட மாளிகைகளின் தளங்களில் தேரழுந்தூர்ப் பெண்டிர் இடைவிடாமல் அபிநயம் பிடித்து ஆடும் நடனம் எழுப்பும் ஒலியில் இடியோசை கேட்கவில்லை.

இப்படியான ஊரில் வாழும் கண்ணன் சிலையாக மட்டும் நில்லாமல், தாமரை இதழ் விரியும் போது தோன்றும் பவளச்சிகப்பு நிறத்தில் புன்முறுவல் பூத்து நின்றபடி ஆழ்வாரின் மனம் புகுந்து நின்றான் ஆமருவியப்பன் என்னும் தேவாதிராஜன்.

முந்தைய பாடலில், ‘என் உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நின்றான்’ என்ற ஆழ்வார், தற்போது அவனது பவளச் சிகப்பான இதழ் தெரியும் வண்ணம் அவரது உள்ளத்தினுள் அமர்ந்துள்ளான் என்கிறார். ‘பவள வாய் கமலச் செங்கண்’ என்னும் திருவரங்கப் பாசுர வரிகள் நினைவிற்கு வரலாம்.

‘மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார்’ என்பதில் ‘மாடு’ என்பது ‘அருகில்’ என்னும் பொருளில் வருகிறது. நாம் இழந்துள்ள மற்றுமொரு அருந்தமிழ்ச் சொல் ‘மாடு’.

அருமையான பாசுரம் இதோ:

ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,

மாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,

நீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,

ஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.

cropped-dsc01624.jpg

தினமுமே மழை பொழிகிறதே..

என்ன இந்த ஊரில் எப்போதுமே கார் காலமோ? எப்போதுமே கரு மேகம் சூழ்ந்தே காணப்படுகிறதே என்று எண்ணி அண்ணாந்து பார்க்கிறார் திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் திகைக்கிறார்.

என்ன இந்த ஊரில் எப்போதுமே கார் காலமோ? எப்போதுமே கரு மேகம் சூழ்ந்தே காணப்படுகிறதே என்று எண்ணி அண்ணாந்து பார்க்கிறார்.

தேரழுந்தூரில் உள்ள மாளிகைகள் மீதுள்ள கொடிகள் அசைந்தாடுகின்றன. அக்கொடிகள் மழை மேகங்கள் உள்ள உயரத்திற்குத் தெரிகின்றன. ஊரின் அகண்ட வீதிகளில் எப்போது சென்றுகொண்டிருக்கும் தேர்களினால் ஏற்பட்ட தூசியும், அம்பை ஒத்த கண்களைக் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தல்களுக்கு நறுமணம் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தும் அகில் புகையும் சேர்ந்து உயரக் கிளம்பி, இன்னொரு கார்மேகப் படலமாகக் காட்சியளிக்கிறது என்பதை உணர்கிறார்.

அப்படியான ஊரில் எழுந்தருளியுள்ள தேவாதிராஜன், முன்னர் ஆலிலை மேல் குழந்தையாகக் கிடந்தவன் தன்னை வெளிப்படுத்தும் முகமாக,’ நான் குழந்தை என்று நினைத்துக் கலங்கினீரே ஆழ்வீர், நான் யார் தெரியுமா? இருளும் பகலும் யாமே ஆவோம். மண்ணுலகமும் விண்ணுலகமும் யாமே ஆவோம். இந்த உலகங்கள் அனைத்தும் யாமேயாதலால் குழந்தை உருவில் இருந்தாலும் எமக்குத் தீங்கு ஒன்றும் நேராது’ என்று உணர்த்தும் விதமாகப் பின்வரும் பாசுரம் அமைகிறது.

பகலு மிரவும் தானேயாய்ப்  பாரும் விண்ணும் தானேயாய்,

நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும்,

துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்,

அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.

பகலில் சூரியனாக ஒளியை அளிப்பவனும், இரவில் இருளாக நின்றும், அதே நேரம் ஒளி வழங்கும் சந்திரனாகவும் திருமாலே திகழ்கிறான். பகலை இரவாக்கவல்லவனும் அவனே. ஜெயத்ரதனைக் கொல்லப் பகலை இரவாக்கியவன் அன்றோ இந்த ஆமருவியப்பன்?

‘பாரும் விண்ணும் தானேயாய்’ என்னும் சொல்லாடலில், (விண்ணுலகம், பரமபதம் )நித்யவிபூதியும்,  (பாருலகம்)  லீலாவிபூதியும் சுட்டப்படுகின்றன.

எப்போதுமே கார்காலம் போன்று தோற்றம் அளிக்கும் வீதிகளை உடைய தேரழுந்தூர் என்பதில் நாம் காண வேண்டிய இன்னொரு சுவை உண்டு. முதல் பாடலில் ( தந்தை காலில் பெருவிலங்கு) தினமும் மூன்று முறை அக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்களது நித்யகர்மாக்களின் பலனாக முன்னதாகவே மழை பொழிகிறது என்றார் ஆழ்வார். அந்தி மூன்றும் அனல் ஓம்புதல் காரணம். மழை காரியம். ஆனால் காரியம் முதலிலேயே நடந்துவிடுகிறது. ஏனெனில் அந்தணர்கள் சளைக்காமல் தினமும் மும்முறை  நித்யகர்மாவைச் செய்கின்றனர். அதை நினைவில் கொண்டால், ஒரு வேளை முடிந்து அடுத்த வேளை துவங்கும் முன்னர், ஒரு நித்ய கர்மா முடிந்து அடுத்த கர்மாவிற்கான நேரம் வரும் வரை மழை பொழிந்துகொண்டே இருக்க வேண்டும். எனவே எப்போதும் கருமேகங்கள் சூழ்ந்த ஊராகவே உள்ளது தேரழுந்தூர் என்று எண்ணிப்பார்ப்பது சுவையானது.

‘நிகரில் சுடரா இருளாகி’ என்னும் சொற்கோவை இன்று (05-ஏப்ரல்-2020) விசேஷமாகிறது. இன்று இரவு 9.00 மணிக்கு நாம் விளக்கேற்றினோம், இருளையும், பிணியையும் அகற்ற வேண்டி.

 

சேற்றில் மீன் தேடுவது ஏன்?

முந்தைய பாடல்களில் இராமனையும் கண்ணனையும் அவர்களின் வீரத்திற்காகக் கொண்டாடிய ஆழ்வார், அவன் தனது உள்ளத்தில், மனதில், கண்ணில் நின்றான் என்று கூறவில்லை. ஆனால் மேற்சொன்ன மூன்றாம் பாடலில் மட்டுமே ‘ என் மனம் புகுந்து, உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நிற்கிறான்’ என்கிறார்.

ஊரையும், வீதியையும், வயலையும்,  வீதி வாழ் மறையோரையும், ஊரில் உள்ள அம்பு போன்ற கண்களை உடைய பெண்களையும்  பாடிய திருமங்கை மன்னன், இப்போது மீண்டும் கழநியைப் பாடுகிறார். ஊர் அவரைத் திக்குமுக்காட வைத்துள்ளது போல. திடீரென்று பெரு மகிழ்ச்சியும், அது தொடர்பான மாந்தர்களும், தகுந்த சூழ்நிலையும் ஏற்பட்டால், அளவு கடந்த மகிழ்ச்சியில் பல செய்திகள் ஒரே நேரத்தில் தோன்றுவது போல் திருமங்கையாழ்வார் தேரழுந்தூரின் சூழலையும், மாந்தரையும், தேவாதிராஜனையும் ஒரு சேரக் கண்டு பேரானந்தத்தில் திளைக்கிறார் போலும்.

தன் குஞ்சிற்கு இரை தேட ஆண்பறவை தனது பெண் துணையையும் அழைத்துக் கொண்டு தேரழுந்தூரின் வயல்களுக்கு வருகிறதாம். வயல்களில் சேறால் நிரம்பி வழிகின்றனவாம். அச்சேற்றில் இறங்கி, சிறிய மீன்கள் அகப்படுமா என்று பார்க்கின்றனவாம் தாய்ப் பறவையும் தந்தைப் பறவையும். அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த ஊரில் உள்ள தேவாதிராஜன் எழுந்தருளியுள்ளான். அவன் யாரென்றால், பிரளய காலத்தின் போது சிறு ஆலிலை மேல் பள்ளிகொண்டிருந்த, தன் கால் விரலைத் தானே சுவைத்துக்கொண்டிருந்த, குழந்தை வடிவிலான, பெருங்கருணையுடைய திருமால் ஒருவன் இருந்தானே, அவனே என் கண்ணுள்ளும், உள்ளத்துள்ளும் மனத்திலுள்ளும் புகுந்துகொண்டு உறைகிறானல்லவா, அவனே இத்தேரழுந்தூரில் நின்றுகொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.

வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என்

உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும்,

அள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே

Therazhundhur Fertile Landமுன்னர் வந்த பாடல்களில் ஊரின் வயல்களில் நீர் நிரம்பி வழிகிறது என்றும், வாளை மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன என்றும் சொன்ன ஆழ்வார், இப்போது தன் குஞ்சுகளுக்கு இரை தேட சேற்றில் இறங்க வேண்டிய காரணம் யாது? என்று சிந்திக்க விழைவது இயற்கையே. ஆனால் வியாக்யானம் செய்த பெரியவாச்சான் பிள்ளை நம்மைப் புள்ளபூதங்குடி திவ்ய தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவ்வூரின் பாடல் : ‘பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய், புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ள பூதங் குடிதானே’ என்பது. இவ்விடத்தில் ‘குஞ்சினால் பெரிய மீன்களை உண்ண முடியாது என்பதால் சேற்றில் சிக்கியுள்ள சிறிய மீன்களைத் தேடுகின்றன புள்ளினங்கள்’ என்று வியாக்கியானம் அமைகிறது. இதையே நமது தேரழுந்தூர்ப் பாசுரத்திற்கும் கொள்ளலாம் என்கிறார் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா ஶ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார், தனது பேருரையில். ஆக, தேரழுந்தூரில் சேற்றில் இறங்கி மீன் தேடிய பறவை ஏன் அவ்வாறு செய்தது என்பது புரிகிறது.

முந்தைய பாடல்களில் இராமனையும் கண்ணனையும் அவர்களின் வீரத்திற்காகக் கொண்டாடிய ஆழ்வார், அவன் தனது உள்ளத்தில், மனதில், கண்ணில் நின்றான் என்று கூறவில்லை. ஆனால் மேற்சொன்ன மூன்றாம் பாடலில் மட்டுமே ‘ என் மனம் புகுந்து, உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நிற்கிறான்’ என்கிறார். என்ன இருந்தாலும் இராமனும், கண்ணனும் சற்று வயதானவுடன் வீரத்தைக் காண்பித்தான். கண்ணனாவது பிள்ளைப் பிராயத்தில் காண்பித்தான். ஆனால் ஆலிலை மேல் வந்த மாலவன் சிறு குழந்தை. தான் உண்ணத் தகுந்தது யாது என்று அறியாமல் தனது கால் கட்டைவிரலையே எடுத்துச் சுவைக்கும் அளவிற்குச் சிறு பிராயம். அத்துடன் பிரளய காலத்தில் ஆலிலை மேல் வருகிறான். ஆகவே குழந்தை வடியில் என் உள்ளத்திலும், கண்ணிலும், மனத்திலும் குடிகொண்டான் என்கிற எண்ணம் போலும்.

ஆண்பறவை தனியே சென்று குஞ்சிற்கு உணவு சேகரிக்காதா? பெண் பறவையுடன் சேர்ந்து தான் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். இவ்விடத்தில் ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் வெளிப்படுகிறது. ஜீவர்கள் தாங்கள் மோக்‌ஷம் பெற ஆசார்யன் வழியாகச் சென்றாலும், திருமகளே பெருமாளிடம் அதற்குப் பரிந்துரைக்கிறாள். எனவே, தாயும் தந்தையுமாகவே திருமகளும் திருமகள் கேள்வனும் ஜீவாத்மாக்களாகிய நமக்கெல்லாம் அருள்கிறார்கள் என்னும் நிலையை உணர்த்துகின்றன இப்பறவைகள் என்று பார்ப்பது ஒரு சுவையே.

( ‘புள்’ என்னும் அருமையான தமிழ்ச் சொல்லை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘புள்ளும் சிலம்பின காண்’ என்னும் ஆண்டாளின் பாசுர வரியையும் ஒப்பு நோக்கலாம்).

தேரழுந்தூரில் ராமன்

பெண்களின் கண்கள் அம்பு போல் இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார் (அபம்பராவும் கண் மடவார்). இதனால் தானோ என்னவோ பின்னாளில் வந்த தேரழுந்தூர்க்காரனான கம்பன் சீதையை வர்ணிக்கும் போது அவளின் கண்களை வேலுக்கு (அம்பு) இணையாகச் சொன்னான்.

வயலையும், வீதியையும் விவரித்த திருமங்கையாழ்வார், மூன்றாம் பாடலில் ஊரை விவரிக்கிறார். அத்துடன் இன்று ராமநவமியாதலால்(02-04-2020), இப்பாடலில் இராமனைச் சுட்டுகிறார் போலும்.

இலங்கை பொன்னாலான மதில்களால் சூழப்பட்டது. அதன் தலைவன் பத்துத் தலைகளை உடைய ராவணன். அவனைது தலைகளைத் தனது தேவரருலக அம்பினால் கொய்த இராமன் தேரழுந்தூரில் எழுந்தருளியுள்ளான்.

ஊரும் சாதாரண ஊரன்று. அவ்வூரில் குருக்கத்தி மரங்கள் அடர்ந்துள்ளன. அவை நிறைய கிளைகளையும் தழைகளையும் கொண்டுள்ளன. செருக்கு மிக்க வண்டுகள் அம்மரங்களில் உள்ள கிளைகளையும் தழைகளையும் கோதி, பிரித்து, மறைந்திருக்கின்ற குருக்கத்தி மலர்களில் உள்ள தேனை உண்கின்றன. மிகுதியாக உண்டு பசியாறிய பின்னர், இரவு தங்குவதற்கு ஏற்ற இடம் எதுவென்று தெரியாமல் மயங்குகின்றன. பின்னர் தேரழுந்தூரில் உள்ள அம்பை ஒத்த கண்களை உடைய பெண்களின் கருங்கூந்தலில் சென்று தங்குகின்றன. இதனால் அப்பெண்டிர் கூந்தலில் இருந்து தேன் ஒழுகுகிறது. அவ்வாறான பெண்கள் நிறைந்த ஊரே தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்.

செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,

உம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும்,

கொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்,

அம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே.

Ramar in Therazhundhurஆழ்வார் குருக்கத்தி மரத்திற்குப் பயன்படுத்திய சொல் ‘மாதவி’ என்பது. ஆண்டாளும் ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று திருப்பாவையில் சொல்கிறாள்.

பிரம்மாஸ்திரத்தை ‘உம்பர் வாளி’ என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தற்காலத்தில் ‘ஏவுகணை’ என்னும் சொல்லிற்குப் பதிலாக ‘வாளி’ என்னும் அருந்தழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

பெண்களின் கூந்தல் என்பதை ‘ஐம்பால்’ என்ற சொல்லால் அழைக்கிறார் ஆழ்வார். அது ஐவகைக் குணங்களைக் கொண்டதாம். சுருண்டிருத்தல், நீண்டிருத்தல், கறுத்திருத்தல், நறுமணத்துடன் இருத்தல் மற்றும் அடர்ந்திருத்தல் – இவையே ஐவகைக் குணங்களாம். தேன் உண்ட வண்டுகள் குடியிருந்ததால் அவர்களது கூந்தல் நறுமணத்துடன் இருந்திருக்கலாம்.

பெண்களின் கண்கள் அம்பு போல் இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார் (அபம்பராவும் கண் மடவார்). இதனால் தானோ என்னவோ பின்னாளில் வந்த தேரழுந்தூர்க்காரனான கம்பன் சீதையை வர்ணிக்கும் போது அவளின் கண்களை வேலுக்கு (அம்பு) இணையாகச் சொன்னான்:

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;சொல்லல் ஆம் உவமை உண்டோ?
“நெல் ஒக்கும் புல்” என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!

கம்பனைக் கற்ற கண்ணதாசனும் ‘அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினா தானோ?’ என்று கேட்டதை நினைவில் கொள்ளலாம்.

பி.கு.: கம்பனும் திருமங்கையாழ்வாரும் அந்தக் காலப் பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுதல் நன்று.

 

எப்படி இருந்தோம், இன்று இப்படி ?

தேரழுந்தூர்க் காட்சிகள் -2. எப்படி இருந்த நாம், இன்று இப்படி ? #தேரழுந்தூர்

தேரழுந்தூர் வந்த திருமங்கையாழ்வார் பெருமாளைப் பாடியதை விட ஊரைப் பாடியுள்ளார்.

நெல் வயலில் மீன் பிடித்து உண்ண வேண்டிக் குருகு என்னும் பறவைகள் வயலிற்கு வருகின்றன. பொன்னியின் கருணையால் வயல்களில் நீர் தளதளத்து நிற்கிறது. குருகு என்பது அதிக உயரம் பறக்க முடியாத பறவை. பெரும்பாலும் சிறிய செடிகளில் வாழும் அப்பறவை தனது அளவிற்கு ஏற்றது போல் ‘ஆரல்’ என்னும் சிறிய மீனைக் கவ்விக்கொண்டு, மேலும் மீன் கிடைக்குமா என்று பார்க்கிறது.

அப்போது வயல் நீரில் இருந்து பெருத்த வாளை மீன் ஒன்று பெரும் பூரிப்புடன் ஒரு துள்ளல் துள்ளி மேலெழும்புகிறது. அதைப் பிடித்து உண்ணலாம் என்று எண்ணும் குருகு அதன் அருகில் சென்று பிடிக்க முயல்கையில் வாளை மீனின் பெரிய உருவம் கண்டு அச்சமுற்றுப் பின்வாங்குகிறது. இப்படிப்பட்ட வளம் மிக்க ஊரான திருவழுந்தூரில் பாரதப் போரில் தேரோட்டியதன் மூலம் எதிரிப்படைகளை அழித்த கண்ணன் எழுந்தருளியுள்ளான்.

அந்தப் பாடல் இதோ:

பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை மாள,

பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும்,

நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள்,

ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!

TZR Templeஊருக்குக் கொடுத்த விளக்கத்தின் அளவு பெருமாளுக்கு இல்லையே என்று எண்ண வேண்டாம். அங்குதான் வியாக்யானகர்த்தர்கள் வருகிறார்கள். குறிப்பாகப் பெரியவாச்சான் பிள்ளை.

கண்ணன் தேரோட்டினான். தேரோட்டுவதன் மூலம் எதிரிகளை அழித்தான். ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும் அழித்தான். ஆயுதம் ஏந்தவில்லை என்றாலும் அவனை அழிக்க எதிரிகள் சூழ்ச்சி செய்தனரே. அப்படியிருந்தும் அவன் தேரோட்டி வென்றான். சரி, அவன் தேரோட்ட வேண்டிய காரணம் யாது?

கூரத்தாழ்வார் உடையவரின் சீடர். வயோதிகர். பெரும் ஞானி. அவர் தனது தள்ளாத வயதில் சீடன் ஒருவனுக்குப் பாடம் சொல்லுகிறார். கண் தெரியாததால் சுவடியைச் சீடனின் கையில் கொடுத்து வாசிக்கச் செய்து தான் பொருள் கூறுவார். ஆக, சுவடி வைத்துள்ளவன் சீடன். ஆனால், சீடனுக்கோ தான் பாடம் கற்பதைப் பிறர் கண்டால் நகைப்பர், தன்னைச் சிறியவனாக எண்ணுவர் என்று கவலை. இக்கவலையைக் கூரத்தாழ்வான் அறிந்தேயிருந்தார்.

ஒரு நாள் பாடம் நடக்கும் வேளையில் சீடனைக் காண அவனது நண்பன் வருகிறான். இதை உணர்ந்த கூரத்தாழ்வான் சீடன் கையில் இருந்த சுவடியத் தான் வாங்கிக் கொள்கிறார். தான் சீடனிடம் பாடம் கற்பது போலவும், சீடனே குரு என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். சீடன் மகிழ்கிறான். ஆனாலும் குரு கூரத்தாழ்வான் தான். பாடம் கற்பவன் சீடன் தான். தன் நிலையைக் குறைத்துக் கொண்டாவது பாடம் சொல்லிக்கொடுப்பது நல்லாசிரியனின் இயல்பு. அவ்வாறே, கீதாசார்யனான கண்ணன், தன் நிலையைக் குறைத்துக் கொண்டு, தேரோட்டியாக அமர்ந்து, சீடனான அர்ச்சுனனுக்குப் பாடன் எடுத்தான், போரில் வெற்றி பெற உதவினான்.

பாடலில் முதல் இரண்டு வரிகளுக்கும் பின்னர் வரும் இரு வரிகளுக்கும் என்ன தொடர்பு? தேரோட்டுவதற்கும், வாளை மீன், குருகினங்கள் முதலியவற்றுக்கும் தொடர்பு யாது?

பீஷ்மர், துரோணர் முதலிய மாரதர்கள் கண்ணனை, ‘ஒரு தேர்ப்பாகனுக்குக் கூடவா ஈடு கொடுக்க முடியாது?’ என்கிற எண்ணத்தில் அணுகுகின்றனர். ஆனால் வீழ்த்த முடியவில்லை. இவ்விடத்தில் கண்ணன் வாளை மீன் போலவும், பீஷ்ம துரோணாச்சாரியார்கள் குருகினங்கள் போலவும் தோன்றுகின்றனர். எனவே உவமை, உவமேயம் என்பதாக பின்னிரண்டு வரிகளும், முன்னிரண்டு வரிகளும் முறையே அமைந்துள்ளன. திருமங்கையாவார் என்ன சாதாரணமானவரா? உண்மையில் கவிப்பேரரசு என்னும் பட்டம் பெற இவர் ஒருவரே தகுதியானவர்.

இப்பாடலில் ‘தேவ தேவன் ஊர் போலும்’ என்பது கவனிக்கத்தக்கது. பெருமாளின் பெயர் ‘தேவாதிராஜன்’.  இதையே தேவ தேவன் என்கிறார் ஆழ்வார்.

வாளை, குருகினம் என்பதெல்லாம் உயர்வு நவிற்சி என்று கடந்து சென்றுவிடலாம் தான். ஆனாலும் மூன்றில் ஒரு பங்காவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஊரின் சுபிட்சம் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்களேன். ‘அலைத்து வரும் பொன்னி வளம்’ என்று பிறிதொரு பாசுரத்தில் சொல்கிறார் ஆழ்வார். எனவே நீர் வளம், அதனால் மீன் வளம், குருகு முதலிய பறவைகள் முதலியன பெருகியிருந்திருக்க வழியுண்டு.

வயல்களை விட்டுவிடுவோம், பிளாட் போட்டது போக, மீதமுள்ள இடத்தில் நெல் பயிராகிறது. போர்வெல் மூலம் நீர் இறைக்கிறார்கள். கோவில் புனருத்தாரணத்துக்குப் பின்னர், 10 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ள நிலையில், தற்போது மழை பெய்தாலும் புஷ்கரணியில் நீர் நிற்பதில்லை. அந்தி மூன்றும் அனல் ஓம்பும் வேதியர் வேள்வி செய்ததால் வானம் முன்னரே பொழிந்தது என்று முதல் பாசுரத்தில் கண்டோம். இப்போது மழை பெய்தாலும் புஷ்கரணியில் நீர் இல்லை. காரணம் புரிகிறதா?

எப்படி இருந்திருக்கிறோம். இன்று எப்படி இருக்கிறோம்? சன்னிதித் தெருவில் ஒருமுறை நடந்தாலே நாம் தற்போது  இருக்கும் அழகு தெரிந்துவிடும்.

%d bloggers like this: