ஆப்த வாக்யம்’ – கருச் சொற்றொடர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’. இந்த சொற்றொடர் மனதில் வந்து புகுந்தது 2013 என்று தோன்றுகிறது. விஷ்ணுபுரம் படித்தபோது இருக்கலாம்.
ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை.
ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.
விடாமல் துரத்திய அச்சொல் ஒரு நாள் ‘அங் மோ கியோ’ நூலகத்தில் மனதில் விரிந்து விளங்கியது. பாதை புரிந்து பணியைத் துவங்கினேன்.
பெருவியப்பளிக்கும் நூல்களை அது காட்டிக்கொடுத்தது. மறைந்தொழிந்த ஆசான்கள் பலரை அது எனக்கு மட்டுமாகத் தோன்றச் செய்தது. எங்கும் எப்பொழுதும் அந்த நினைவே சூழ்ந்து நிறைந்தது.
பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது ‘நான் இராமானுசன்’ உருக்கொண்டு துலங்கி நிற்கிறது.
ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, ்நூல் உருக் கொண்ட கதை இதுவே.