உங்களுக்குக் ‘கௌரவம்’ இருக்கிறதா ? கௌரவமானவ்ர் தானா நீங்கள் ?
பயப்படாதீர்கள். உங்களைக் கேட்கவில்லை. கௌரவம் என்னும் சொல் இப்போது ‘மரியாதை’ என்கிற பொருளில் பயன்படுகிறது. ஆனால் இதன் உண்மைப் பொருள் என்ன ?
‘குரு’விற்கு உரியது என்று பொருள் படுவதாக பழைய நூல்களில் தெரிகிறது. அதாவது கௌரவம் குருவினுடையது என்று தெரிகிறது. அப்படியென்றால் ‘குரு’ என்பவர் யார் ? சற்று ஆராய்வோம்.
‘குரு’ என்பது தற்போது ஆசிரியர், வாத்தியார், பெரியவர், வழி காட்டுபவர் என்னும் பொருள்களில்
புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் ஆசிரியர் என்பவர் குருவா ? இதனை ஆராய ‘ஆசிரியர்’ என்ற சொல்லின் மூலம் பற்றிப் பார்க்கவேண்டும்.
தற்காலத்தில் ஆசிரியர் என்பது கல்வி கற்பிப்பவர் என்னும் பொருளில் மட்டும் அறியப்படவில்லை. அத்துடன், கதை எழுதுபவர், பத்திரிக்கையின் தலைமைப் பொருப்பில் இருப்பவர் என்னும் பொருள்களிலும் வருகிறது. ஆனால், எழுத்து, கல்வி முதலியவற்றுடன் தொடர்புடையதாகவே தெரிகிறது.
ஆசிரியர் என்னும் சொல் ‘ஆச்சாரியர்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்துள்ளது என்று அறியப்படுகிறது. ஆக, ஆச்சாரியர் என்பவர் யார் ? குருவிற்கும் அவருக்கும் தொடர்பென்ன ? அவர் தான் ‘வாத்யாரா’ ?
மேலே சொன்ன பல சொற்களையும் பார்க்கும் முன், நாம் காண வேண்டிய சொல் ‘வாத்யார்’ என்பது. ஆனால் அதற்கும் முன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ‘அத்யாயம்’ என்னும் சொல்லைப் பற்றியே.
கதைகளிலும், நாவல்களிலும் அத்தியாயம் என்னும் சொல் பயன்படுவது நாம் அறிந்ததே. தொடர்புடைய செய்திகளை உள்ளடக்கிய ஒரு பகுதியே அத்தியாயம் என்பது. அத்யாயம் என்பது ஒரு பிரிவு, ஒரு பகுதி. அது போலவே காண்டம், கண்டம், அங்கம், ப்ரகரணம், ஸ்கந்தம் என்று ஒரு நூலின் பல உட்பிரிவுகள் உள்ளன. ‘ அயோத்தியா காண்டம் ‘, ‘பால காண்டம் ‘ என்று கம்பன் பிரித்திருப்பது நினைவில் கொள்க.
அது போல் வேதத்தை வாய்மொழியாகவே பயின்ற அக்காலத்தில், ‘அத்யாயம்’, ‘அத்யயனம்’, ‘அத்யயம்’ என்ற சொல்லாடல்கள் இருந்துவந்தன. இன்றும் கூட முழுமையாக வேதம் படித்த ஒருவரை ‘பூர்ண அத்யாயி’ என்று அழைப்பது உண்டு.
அதே வரிசையில் வேதத்தில் ஒரு அத்யாயத்தை சொல்லித் தருபவரை ‘அத்யாபகர்’ என்று அழைத்தனர். ‘அத்யாயர்’ என்றும் அழைக்கப்படார் அவர். அவருக்கு உதவியாக இருந்த சற்று குறைவான கல்வி பெற்ற இன்னொருவர் உப-அத்யாயர் என்று அழைக்கப்பட்டார் ( ஜனாதிபது, உப-ஜனாதிபதி, தலைவர், உப-தலைவர் என்பது போல). இந்த உப -அத்யாயர் என்பவர் நாளடைவில் ‘உபாத்யாயர்’ என்று மாறினார். இன்று திருமணம் மற்றும் சடங்குகளை நடத்தி வைக்கும் பிரிவினர் செய்யும் தொழில் ‘உபாத்யாயம்’ என்று அழைக்கப்படுகிறது.
அது போலவே, அத்யாயர் நாளடைவில் ‘வாத்யார்’ ஆனார்.
இதில் ஒரு வேற்றுமை உள்ளது. அத்யாயர் தான் கற்றுக் கொடுக்கும் கல்விக்குப் பணம், பொருள் பெறக் கூடாது. பணம் பெற்றுக் கொண்டு செய்வது கேவலம் என்று கருதப்பட்ட காலம் அது. அப்படிச் செய்பவர் அத்யாயர், அத்யாபகர் என்னும் பெயர் கொள்ள மாட்டார். அவரை உப-அத்யாபகர், உபாத்யாயர் என்றே கொள்வர். அவருக்குத் தானங்களில் கடைசி இடமே. அவருக்கு மரியாதை இல்லை. வேள்வி முதலியன செய்யும் போது அவருக்கு முக்கிய இடம் தரக் கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
‘ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்காந்யபிவா புந:
யோ (அ)த்யாபயதி வ்ருத்யர்த்தம் உபாத்யாய: ஸ உச்யதே’
அதாவது கல்விச் செல்வம் வழங்குவதை உயர்வாகக் கொண்டிருந்தத காலம் அது.
அத்யாபகரை விட மேலானவர் ‘ஆச்சாரியர்’ என்பவர். அவர் இலவசமாகக் கல்வி கற்பிப்பது மட்டும் அல்ல, மாணவனை அவருடனேயே அவரது இல்லத்திலேயே வைத்துக் கொண்டு அவனைப் பல வழிகளிலும் மேம்மடுத்த வேண்டும்.
இத
ப்பற்றியும் மனுஸ்மிருதி கூறுவது :
‘உபநீய து ய: சிஷ்யம் வேதம் அத்யாபயேத் த்விஜ:
ஸகல்பம் ஸரஹஸ்யம் ச தம் ஆசார்ய ப்ரசக்ஷதே’
அக்கால நியதிப்படி, மாணவனுக்கு உப-நயனம் செய்வித்து ( பூணூல் போட்டு ), வேதம் தொடங்கி, தனுர் சாஸ்திரம் என்னும் போர்க்கலை, ஆயுர் வேதம் என்னும் மருத்துவ சாஸ்திரம் முதலியன சொல்லிக்கொடுத்து அவருடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அது. அப்படிச் செய்பவர் ‘ஆச்சார்யார்’ என்று கொள்ளப்படுவர். ( அனைத்துப் பிரிவினரும் கல்வி பயின்ற காலம் அது என்பதை நினைவில் கொள்க.)
ஆனால் அவரை விட மேலானவர் ‘குரு’ என்ப்படுபவர்.
‘குரு’ என்பதற்குச் சிறப்பான விளக்கங்கள் தெரிகின்றன. எனக்குப் பிடித்த இரண்டை மட்டும் அளிக்கிறேன் : ‘கு’ என்பது இருட்டு. ‘ரு’ என்பது களைதல். அறியாமை என்னும் இருளைக் களையும் பணி செய்வதால் ‘குரு’ எனப்பட்டனர்.
இன்னொன்று ‘குணமும் ரூபமும்’ இல்லாத ஒன்று ப்ரப்பிரும்மம் ( கடவுள் ) என்பது. ஆகவே அதனை அறிந்துகொள்ள அப்பரப்பிரும்மமே குணமும் ரூபமும் ( உருவம் ) கொண்டு ‘குரு’ என்ற வடிவத்தில் வருகிறது என்று கொள்ளப்பட்டது. எனவே ‘குரு’ என்பவர் தெய்வத்தன்மை கொண்டவராக அறியப்பட்டார். எனவே தான் நாம் ‘சங்கர குரு’ என்று ஆதி சங்கரரை அறிகிறோம்.
‘ஆதி குரு’ என்று தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது இந்திய மரபு. கல்விக்குக் கடவுளாகவும் அவரைக் கொள்கிறோம்.
எனக்குக் கல்வி பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் குருவாக பாவித்து இந்த ஆசிரியர் தினத்தில் எனது பணிவான நன்றியறிதல்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் எனக்குக் கொடுத்துள்ள கல்விச்செல்வம், அதன் அளவு முதலியன பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களது தன்னிகரில்லாத் தொண்டின் பெருமையை நினைந்து உருகி வணங்குகிறேன்.

குறிப்பாக நெய்வேலியில் ஜவகர் பள்ளியில் எனக்குக் குருக்களாக இருந்த திருமதி. உலகம்மாள் ( தமிழ்), திரு.கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்), திரு. ராமானுஜம் ( ஆங்கிலம்), திருமதி. ஸ்ரீதேவி பத்மநாபன் (ஆங்கிலம்), திருமதி. ஷியாமளா வேணுகோபாலன்( ஆங்கிலம் ), திரு வெங்கடேசன் (பொருளியல்),திரு.பட்டாபிராமன் ( சமஸ்கிருதம் ) – இவர்கள் மனித உருவில் நடந்த தெய்வங்கள். இவர்களை வெறும் ஆசிரியர்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் ‘குரு’ ஸ்தானத்தில் வைத்து வழிபடப்பட வேண்டியவர்கள்
பொதுவாக ‘உற்சவம்’ என்பது இறைவனுக்குச் செய்யும் திருவிழா என்ற பொருளில் அறிகிறோம். இறைவனுக்கு நிகரான குருவிற்கு ‘உற்சவம்’ செய்தல் என்பது சரிதானே !
எனது குருமார்களுக்கு ‘குரு உற்சவ’ அஞ்சலிகள்.
பி.கு: ‘குரு’ பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘தெய்வத்தின் குரல்’ வாசிக்கவும்.
Like this:
Like Loading...