மசாலா தோசையும் பார்ப்பன ஏகாதிபத்தியமும்

நீங்கள் மசாலா தோசை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் இப்படிப் பேசலாம். ‘மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல. சாலா என்பது இந்தி. மச்சான் என்னும் பொருள்படும். ‘ம’ என்பது மலையாளத்தைக் குறிக்கிறது. தோசை என்பது தமிழாக இருந்தாலும், அதற்கு மலையாளமுன் இந்தியும் சேர்ந்த அடைமொழி தேவைப்படும் அளவிற்கு

எல்லாவற்றிற்கும் ஒரு யூனிபார்ம் இருக்கிறது. இவரிவர் இப்படி இப்படித்தான் உடை, அலங்காரத்துடன் இருக்க வேண்டும் என்று இருக்கிறது.

தேர்தல் வருகிறது. அதனால் முற்போக்குவாதிகள், பேச்சாளர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்னும் கேள்வி உங்கள் மனதில் இருப்பது தெரிகிறது. முடிந்தவரை உங்களை முற்போக்குவாதியாக ஆக்க கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுகிறேன்.

பெண்ணாக இருந்தால் தலையைப் பரத்திவைத்து, இந்துவாக இருந்தாலும் பொட்டில்லாமல் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் வாராத தலையும் குறுந்தாடியுமாக இருக்க வேண்டும். கருப்புக் கலரில் சோடா புட்டி கண்ணாடி அணிந்திருந்தால் இன்னும் விசேஷம். இப்படி நீங்கள் பொது விழாக்களில் காட்சியளித்தால் உங்களை முற்போக்காளர்கள் என்று கண்டுகொள்ளலாம். இதெல்லாம் இல்லை, வெள்ளையும் சொள்ளையுமாகவும் மீசை, தாடி முதலான அலங்காரங்கள் இல்லாமலும் இருப்பேன், ஆனாலும் முற்போக்கு என்று அறியப்பட வேண்டும் என்றால் நீங்கள் ஹிந்து நாளிதழ் தொடர்பில் இருக்க வேண்டும்.

தீவிர முற்போக்கு என்று அறியப்படவேண்டும் என்றால் கருப்புக் கலரில் துண்டு அல்லது கருப்பு சட்டை அணிந்திருக்க வேண்டும். ஒரு வாக்கியம் பேசி முடித்தபின் ‘பார்ப்பான் ஒழிக’ என்று ஒருமுறை சொல்லவேண்டும். ‘பார்ப்பனீயம்’ என்கிற பதப் பிரயோகம் மிக அவசியம். 30 நிமிடப் பேச்சில் 10 முறை ‘பார்ப்பனீயம்’ வர வேண்டும்.

உதாரணமாக நீங்கள் மசாலா தோசை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் இப்படிப் பேசலாம். ‘மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல. சாலா என்பது இந்தி. மச்சான் என்னும் பொருள்படும். ‘ம’ என்பது மலையாளத்தைக் குறிக்கிறது. தோசை என்பது தமிழாக இருந்தாலும், அதற்கு மலையாளமுன் இந்தியும் சேர்ந்த அடைமொழி தேவைப்படும் அளவிற்கு இந்த பார்ப்பன ஏகாதிபத்தியம் இன்று நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதெல்லாம் பார்ப்பனீயத்தின் அடக்குமுறை வழிகள்’ என்று சொன்னால் பேச்சு எடுபடும்.

மசாலா தோசைக்கும் பார்ப்பனீயத்திற்கும் என்ன தொடர்பு என்று கேல்வி கேட்கும் அளவிற்கு யாருக்கும் மண்டைகுள் மசாலா இருக்காது. அப்படி யாராவது அந்தக் கூட்டத்தில் இருந்தால், கேள்வி கேட்டால், இருக்கவே இருக்கிறது தெளிந்த பதில் :’ இது ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளின் கேள்வி. ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதம் தமிழகத்தில் வேறூன்ற ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்று அண்ணா அன்றே சொன்னார்’ என்று ஒரு போடு போட்டால் ஒரு பயல் வாய் திறக்க மாட்டான்.

இடதுசாரி என்று அறியப்பட வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறைகள் உள்ளன. முதலில் தலையில் எண்ணெய் இருக்கக்கூடாது. மூச்சுக்கு முன்னூறு நடவை ‘செங்கொடி’, ‘புரட்சி’, ‘லெனின்’, ‘மார்க்ஸ்’ என்று ஜபம் செய்யவேண்டும். மன்னிக்கவும். ஜெபம் அல்ல. செபம். மறந்தும் ‘ஸ்டாலின்’ பெயர் வரக் கூடாது. வந்தால் உங்களை ‘தி.மு.க.’ என்று எண்ண வழி பிறந்துவிடும். தி.மு.க.விலேயே யாரும் அவர் பெயரைச் சொல்வது கிடையாது. 60 வயதானாலும் ‘இளைய தளபதி’ தான். ‘மார்க்ஸ்’ ஜெபம் முடிந்தவுடன், காங்கிரஸை முதலில் சாட வேண்டும். ஒரு நிமிடம் மட்டும் தான் சாடலாம். பின்னர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். என்று நிறைய கத்த வேண்டி இருக்கிறது. பேச்சு யாருக்கும் புரியக்கூடாது, ஆனால் தமிழில்தான் பேசுகிறார் என்று தெரியவேண்டும்.

உதாரணமாக: காவி பயங்கரவாதம் பற்றி மார்க்ஸ் சொன்னாரே, மாவோ சொன்னாரே, காஸ்ட்ரோ சொன்னாரே, செ குவேரா சொன்னாரே அப்போதெல்லாம் வாய் மூடி இருந்த மோடி அரசு, நாங்கள் சொல்லும்போது மட்டும் வாய் திறபப்து ஏன்? வள்ளுவர் சொன்ன ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதைத் தானே எங்கள் புரட்சிவீரர் லெனின் சொன்னார்? ஆகவே சொல்கிறோம் – இந்திய ஏகாதிபத்தியம் முடிய வேண்டும்; இலங்கையில் வாடும் மீன்களுக்கு இரை வேண்டும். இவை கிடைக்கும் வரை போராடுவோம்.’

அதாவது, எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டும், ஆனால் எதுவும் தெளிவாக இருக்கக் கூடாது. இது கம்யூனிசத்தின் முதல் பாடம். இரண்டு வாக்கியங்களுக்கு ஒரு முறை ‘லெனின்’, ‘மாவோ’ என்று இருக்க வேண்டும். அவ்வளவுதான். இனிமேல் நீங்கள் தான் சார் இடதுசாரி. மறந்தே போய்விட்டேன். ‘அவர் சொன்னாரே, இவர் சொன்னாரே’ என்றுதான் சொல்லவேண்டுமே தவிர என்ன சொன்னார் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் பின்னர் நமக்குத் தோன்றியதைச் சேர்த்து ‘லெனின் சொன்னார்’ என்று சொல்லிக்கொள்ளலாம். லெனினிடம் கேட்கவா போகிறார்கள்?

தி.மு.க. பேச்சாளர் என்றால் ஒரே தகுதி இருந்தால் போதும். ‘மாநில சுயாட்சி’. இந்தத் தாரக மந்திரம், மன்னிக்கவும், முக்கிய சொல், உங்கள் பேச்சில் முழுவதும் இடம்பெறுமாறு இருக்க வெண்டும். ‘ஊழல்’ என்னும் சொல் வரக்கூடாது; கேட்பவர்கள் தி.மு.க. பற்றிப் பேசுவதாக நினைத்துக்கொள்வார்கள். ‘ராணியைப் பதவி இறக்குவோம்’ என்றும் சொல்லலாம். எதற்கும் ‘தமிழகத்தில்’ என்று சேர்த்துச் சொல்லவும். யாராவது ‘தில்லி’ என்று நினைக்கக் கூடாது. இது தவிர கனிமொழி, ராசா, பகுத்தறிவு, அண்ணா இதெல்லாம் வரக்கூடாது. ஓட்டு வாங்க எது பயன்படுமோ அதை மட்டும் தான் சொல்லவேண்டும். முடிக்கும் போது, ‘நாங்கள் இறைவனுக்கு எதிர் இல்ல; இறையீயத்திற்குத் தான் எதிர்’ என்று சொல்ல வேண்டும். உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை. கேட்பவர்களுக்கும் புரியாது. எனவே குழப்பமில்லை.

தி.மு.க. பேச்சாளர் என்றால் இன்னொரு கடமையும் இருக்கிறது. அது ‘பார்ப்பனீயம்’ பற்றியது. ‘நாங்கள் பார்ப்பனீயத்துக்குத் தான் எதிர்; பார்ப்பனர்களுக்கு அல்ல’ என்று சொல்ல வேண்டும். இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை. இதுவரைக்கும் சொன்னவர்கள் யாரும் புரிந்தா சொன்னார்கள்? ஆனால் இதைச் சொல்ல வேண்டியது கடமை, ஒரு சாங்கியம், சடங்கு. பகுத்தறிவு சாங்கியங்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக யாரும் கேட்க மாட்டார்கள். அப்படி யாராவது ஆர்.எஸ்.எஸ். காரன் கேட்டால் என்ன செய்வது? சோ, தந்தி டி.வி. இப்படி யாராவது புறம்போக்குகள் கேட்பார்கள். ஆ..பக்கங்கள் என்று ஒரு வம்புக்காரன் இருக்கிறான். அவன் கேட்பான். அதற்காக இதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.

‘பார்ப்பனீயம் என்பது பார்ப்பனன் + ஈயம் என்று பிரிக்க வேண்டும். அதாவது ஈயத்தில் ஒரு வகை அது. இந்த ஈயம் கொஞ்சம் பள பளவென்று இருக்கும். நீங்கள் பேசினால் பதில் பேசாது. பொதுவாக ‘ஏ ஐயிரே..!’ என்றால் பதில் சொல்லாமல் வாய் மூடிப் போகும். இது சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஈரோடில் ஒரு சமூக விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உலோகம் Brahmin Lead என்று ஆங்கிலத்தில் அறியப்படும். BrPB என்பது இதன் கெமிக்கல் பெயர். மெண்டலீவ் பீரியாடிக் டேபிளில் இடம் அளிக்காமல் பார்ப்பன ஐரோப்பிய விஞ்ஞானிகள் சதி செய்து விட்டார்கள். எனவே இது தமிழ் பீரியாடிக் டேபிளில் மட்டும் இடம் பெற்றுள்ளது. நியாயமாகப் பார்த்தால் இதற்கு நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால் ஐரோப்பிய ஆங்கிலேய பார்ப்பன சதியாளர்கள் தலையீட்டால் ஈரோட்டுத் தமிழனுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை.’

இப்படி ஒரு விளக்கம் தயார் செய்து கொள்ளவும். கொஞ்சம் டெக்னிக்கல் வார்த்தைகள் சேர்த்துக்கொண்டால் தமிழர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். இன்னும் முக்கியமான சடங்கு ஒன்று உள்ளது. ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புத்த ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, ஒபாமா ஜெயந்தி என்று எல்லா நாட்களுக்கும் ஒரு வாழ்த்துச் செய்தி தயாராக இருக்க வேண்டும். தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி முதலியன இந்தியப் பண்டிகைகள் இல்லை என்பதாலும், செவ்வாய்க் கிரக மாந்தர்கள் மட்டுமே கொண்டாடுவதாலும் அவற்றிற்கு வாழ்த்து தெரிவிக்கக்கூடாது. அது பகுத்தறிவுக்கொள்கையின் தற்கால விதி.

நீங்கள் அ.தி.மு.க பேச்சாளர் என்றால் முதலில் நீங்கள் அன்று அந்தக் கட்சியில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளவும். பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சென்னையில் இருந்து ஏதாவது அறிக்கை வந்துள்ளதா என்று ஜெயா டி.வி.யைப் பார்த்தபடியே பேச வேண்டும். எந்த நேரத்திலும் ‘கட்சி விரோத நடவடிக்கை’க்காக நீங்கள் நீக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் வாங்கும் மாமூல் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போகவில்லை என்று பொருள் கொண்டு அமைதியாக ஊருக்குப் போய் கோழிப் பண்ணை வைத்துப் பிழைத்துக்கொள்ளவேண்டும். மாறாக தி.மு.க. பக்கம் போவது போல் தெரிந்தால் அப்புறம் உங்கள் மனைவி உங்களை போட்டோவில்தான் பார்க்க முடியும். அது இதய தெய்வப் பகுத்தறிவுப் பாதை.

இதையும் தாண்டி நீங்கள் கட்சியில் இன்னும் இருந்தால், கைவசம் சில நூறு ஸ்டிக்கர்கள் வைத்திருக்கவேண்டும். அது அக்கட்சியின் அடிப்படைத் தகுதி. ஸ்டிக்கர் இல்லாததால் கட்சியில் இருந்து நீக்கம் என்று சொல்ல முடியாததால் ‘கட்சி விரோத செயல்’ என்று சொல்லி நீக்குவார்கள். அடிக்கடி உங்கள் சட்டைப் பையைத் தொட்டுப் பார்க்கவும். கைவசம் ஸ்டிக்கர் எண்ணிக்கை தெரிந்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் பேச்சாளராக இருக்க ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். நீங்கள் இந்தி பேசுபவராக இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற பம்பாய் நடிகையாக இருத்தல் அவசியம். இரு வாக்கியங்களுக்கிடையில் ‘மேலிடம்’ என்கிற பதப் பிரயோகம் இருக்க வேண்டும். மற்றபடி பேச ஒன்றும் இருக்காது. சத்திய மூர்த்தி பவனில் தினமும் நடக்கும் கைகலப்புகளில் ஏடுபட்டு ஆனாலும் அடி வாங்காமல் இருக்க வேண்டும்.

தே.மு.தி.க. பேச்சாளர் எனில்.. சரி. சரி. அப்படி இருக்க வாய்ப்பில்லை. அக்கட்சியில் பேசுவது ஒருவர் தான். உங்களுக்குப் பேச வாய்ப்பிருக்காது. பேச வேண்டும் என்றாலும் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாது. எப்போது யாருடன் நண்பராக, யாருடன் எதிரியாக இருப்பது என்பது அக்கட்சியின் தலைவர்களுக்கே தெரியாத நிலையில் நீங்கள் பேசுவது சரியாக இருக்காது. ஆனால் ஒன்று. உங்கள் தலைவரின் கை படும் தூரத்தில் இல்லாமல் இருப்பது உங்கள் உடம்புக்கு நல்லது.

ம.தி.மு.க. பேச்சாளராக இருந்தால்.. மன்னிக்கவும். அந்தக் கட்சியில் பேசுவது ஒருவர் தான். ஏனெனில் அங்கு இருப்பது ஒருவர் தான். ஒரு கட்சி ஒரு உறுப்பினர் ஒரு தலைவர் ஒரு பேச்சாளர் – அனைத்தையும் செய்யும் ஒருவர் மட்டுமே உள்ள அக்கட்சிக்கு அறிவுரை சொல்ல எனக்குத் தகுதியில்லை.

பா.ம.க. பேச்சளர் எனில் முதலில் எத்தனை மரம் வெட்டினீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கில் வீக் என்றால் பா.ம.க. உங்களுக்கு ஏற்ற இடம் அல்ல.

பா.ஜ.க. பேச்சாளர் என்றால் ? நல்ல கேள்வி. அங்கு பேச்சாளர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டில் தான் யாரும் இல்லை. இருப்பவர்கள் நாகரீகம், மரியாதை என்று பிற்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இராமாயணம், மஹாபாரதம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இப்போதைக்கு விளங்கப்போவதில்லை. எனவே அக்கட்சியின் பேச்சாளராக ஆக முயல வேண்டாம். ஆனாலும் உங்களை யாரும் முற்போக்குவாதிகள் என்று சொல்லப்போவதில்லை. பண்டாரப் பரதேசிகள், காவிகள் என்று அடைமொழிகள் கிடைக்கும். இது உங்களுக்குத் தேவையா?

பார்த்து சூதனமாக நடந்துகொள்ளுங்கள்.

நன்றி
அசட்டு அம்மாஞ்சி

கமலஹாசன் பெற்றுள்ள பேரறிவு

கமலஹாசனின் முற்போக்கு மேதாவிலாசத்தைப் புகழுங்கள். ஆனால் அதற்கு முன் இதைப் படியுங்கள்.

அந்தணரையும் ஆவினங்களையும் ஒன்றாகவே நமது சமூகம் கண்டு வந்துள்ளது.

இறைவனுக்கு ‘ஆவுடையப்பன்’, ‘ஆமருவியப்பன்’ என்று பெயரிட்டுள்ளார்கள். கோசகன், கோபாலன் என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கிறார்கள்.

சம்பந்தர் தேவாரம் கூறுகிறது :

“வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

அந்தணர் வாழ்க, தேவர் வாழ்க, பசுக்கூட்டங்கள் வாழ்க, மழை பொழிக, அதனால் வேந்தன் வாழ்க, தீயவை எல்லாம் அழிக …இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக என்று வாழ்த்துகிறது.

இதில் காணவேண்டியது, அந்தணர்களைப் பற்றிக்கூறும் போது பசுக்களைப் பற்றியும் கூறப்படுகிறது. அந்தணர் வேள்வி செய்வதால், ஆநிரைகள் வளரும், மழை பெய்யும், மக்களும் மன்னனும் வாழ்வார்கள் என்று அந்நாளில் நம்பினர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அக்கினி தேவனிடம் சொல்கிறாள் :

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும்..”

ஆகிய இவர்களை விடுத்து மற்றதை எரிப்பாயாக என்று ஆணை இடுகிறாள். இங்கும் அந்தணரும் பசுக்களும் ஒருங்கே கூறப்பட்டுள்ளனர்.

“கோ-ப்ராம்மணஸ்ய..” என்ற சமஸ்கிருத பதமும் பசுவையும் அந்தணர்களையும் ஒருசேரக் கூறுகிறது. ஒரு வேளை பசு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு வேள்வி செய்வதால் பசுமாடுகளையும் அந்தணர்களையும் ஒருங்கே கருதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..

வள்ளுவர், ஒரு மன்னன் நல்லாட்சி செய்யவில்லை என்பதை அறிய இரண்டு சகுனங்களைச் சொல்கிறார்.

  1. நாட்டில் பால் வளம் குறையும்.
  2. அந்தணர் வேதம் ஓதுவதை மறந்துவிடுவர்.

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்’

நாயக்க மன்னர்களின் கல்வெட்டுச் சாசனங்கள் கூட இறுதியில் ‘இந்த தருமத்தை அழிப்பவன் காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவான்’ என்றே சொல்கின்றன ( ‘தஞ்சை நாயக்கர் வரலாறு’ – குடவாயில் பாலசுப்பிரமணியம் )

நிலைமை இப்படி இருக்க, ‘பிராமணர் மாட்டிறைச்சி உண்ணும்படி புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது’ என்று சொல்வது என்ன பகுத்தறிவு என்று புரியவில்லை.

ஒருவேளை எல்லா அறிவிற்கும் அப்பாற்பட்ட கமலஹாசனுக்குத் தெரிந்திருக்கலாம்.

ஐயா கமலஹாசரே,

தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நியூக்ளியர் சயின்ஸிலிருந்து, ஜீனோம் வரை எல்லாவற்றிலும் கரை கண்டவர் நீங்கள். ஆனால் ‘இந்துக்களின் புனித நூல்’  என்று கூறியுள்ளீர்கள். கீதை, உபநிஷதங்கள், பாசுரங்கள், திருமுறைகள், வேதங்கள், அதிலும் பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்னும் பிரிவுகள், இவற்றீற்கான பாஷ்யங்கள் என்று சில நூறு நூல்கள் உள்ளன. அதிலும் சங்கர பாஷ்யம், இராமானுஜ பாஷ்யம், மத்வ பாஷ்யம் என்று வேறு பல வகைகள்.

இவை அனைத்துமே உங்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு என்பது எனக்குத் தெரியும். ஆகவே, இவற்றில் எந்த நூலில் இப்படி மாடு தின்னலாம் என்று சொல்லியுள்ளார்கள், எந்த சுலோகம் என்று தேவரீர் தயை கூர்ந்து கடாட்சித்து அருள வேண்டுகிறேன்.

அசட்டு அம்மாஞ்சி ஆமருவி

பகுத்தறிவு பல் இளிக்கிறது

பகுத்தறிவு பற்றி எழுதக் கூடாது என்று எத்தனை நாள் தான் பொறுமையாக இருப்பது ? நாட்டில் நடப்பவை நம்மை எழுத வைத்து விடுகின்றன. ஒரு காமெடி என்றால் அது பற்றி எழுதாமல் எப்படி இருப்பது ?

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வந்தது இது. விஷயம் இவ்வளவு தான். நேற்று திருச்சியில் தி.மு.க. மாநாடு துவங்கியுள்ளது. சனிக்கிழமை காலை 9:00 – 10:30 ராகுகாலம் என்பதால் ‘தலைவர்’ அவர்கள் 10:40 மணிக்குக் கொடி ஏற்றியுள்ளார். ‘ராகு காலம்’ தவிர்க்க வேண்டி அப்படி செய்யப்போகிறோம் என்று மூத்த தலைவர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அதே போல் ஜனவரி 6-ம் தேதி கட்சி அலுவலகம் திறந்துள்ளார் ஸ்டாலின். அன்று திங்கள் என்பதால் 10:30- 12:00 ராகுகாலம். அதனைத் தவிர்த்து 12 மணிக்கு மேல் திறந்துள்ளார்.

ஏற்கெனவே 2ஜி வழக்கில் சனி பகவான் பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஜாபர் சேட், கனிமொழி உரையாடல்கள் வெளியாகியுள்ளன. அழகிரி வேறு ஆட்டம் போடுகிறார். தேர்தல் வேறு நெருங்குகிறது. கூட்டணி ஒன்றும் இதுவரை அமையவில்லை. இந்தக் களேபரத்தில் எதற்கு ராகுவைப் பகைத்துக்கொள்வானேன் என்று நினைத்திருக்கலாம். பெரியார் வழியில் நடப்பவர்கள் அல்லவா ?

இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டி ( பல் இளிக்கும் பகுத்தறிவு)

பா.ஜ.க.வின் பரிணாம வீழ்ச்சி

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ரூபாயின் வீழ்சசி பற்றிப் பேசும் காலத்தில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி பற்றிப் பேசுவதா? அதுவும் “பகுத்தறிவு” இல்லாத இந்த அம்மாஞ்சியா என்று நீங்கள் நினைக்கலாம்.

நேரில் நடப்பதைக் கண்டும் காணாமலும் போக நான் ஒன்றும் பகுத்தறிவுவாதி அல்லவே. மனதில் பட்டதைப் பேசும் ஒரு யதார்த்தவாதி என்ற பில்டப் இருக்கிறதே.. காப்பாற்ற வேண்டாமா ?

விஷயத்திற்கு வருவோம்.

பாராளுமன்றத்தில் “பிரதமர் திருடர்” என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. அதனால் களேபரம் ஏற்பட்டுள்ளது. எழுப்பியவர்கள் ப.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியினர்.

பிரதமர் என்பது ஒரு மனிதக் குறிப்பு அல்ல. இந்திய ஜனநாயகத்தின் ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டை இப்படி சாலையில் நின்று கத்தும் கோஷ்டியினர் போல் தாக்கிப் பேசுவது அநாகரீகம் மட்டும் அல்ல இந்தியா என்னும் மாபெரும் ஒரு மக்கள் சக்தியின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு அவச் சொல்.

மனமோகன் சிங் தவறான முடிவுகள் எடுத்தார் என்று சொல்வது சரி தான். ஆனால் பிரதமர் திருடர் என்று கூறுவது எந்த விதத்திலும் சரி இல்லை. பிரதமர் தனியாக முடிவு எடுப்பது இல்லை. கேபினட் என்ற அமைப்பு சேர்ந்து செய்யும் முடிவுக்குப் பிரதமர் தலை அசைத்தார் என்று சொல்லலாம். முடிவு தவறாக இருக்கலாம். ஆனால் தவறு என்பது கோர்ட்டுகளில் நிரூபணமாகாதவரை “திருடர்” என்ற பதம் அதுவும் பாராளுமன்றத்தில் சொல்லப்படுவது மன்ற அங்கத்தினர்களின் ஒழுக்க வீழ்ச்சி. ஆகவே நமது ஒழுக்க வீழ்ச்சியும் கூட.

இடது சாரி, சமாஜ்வாடி, லாலு கட்சி முதலான “முற்போக்கு” அங்கத்தினர்கள் கத்துவது அவர்கள் வாடிக்கை. அது அவர்களது “சமூக நீதி”. தமிழ் நாட்டில் சட்ட சபையில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுப்பது தி.மு.க.வின் “தமிழ்ப் பண்பாடு”. பெரியார் வழியில் நடந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் பா.ஜ.க. அங்கத்தினர்கள் இந்தக் கத்தலில் ஈடுபடுவது ஏற்க முடியாதது. கட்சித் தலைமை உறுதியுடன் செயல்பட்டு அந்த அங்கத்தினர்களைக் கண்டிக்க வேண்டும்.

பிரதமர் தவறு செய்யவில்லையா, ஊழல் நடக்கவில்லையா, அவர் வாய் மூடி மௌனியாக இருக்கவில்லையா என்றெல்லாம் கேட்கப்படலாம்?

இதெல்லாம் சரி தான். ஆனால் அவர் என் பிரதமர். என் நாட்டின் இறையாண்மையின் பிரதிநிதி. அவரைக் கண்ணியக்குறைவாகப் பேசுவது என்னைப் பேசுவதாகும். என்னைப்போன்ற சாதாரண குடிமக்களைப் பேசுவதாகும். கண்ணியமான விமர்சனங்களும், வாதங்களும் செய்யுங்கள். மதுபானம் அருந்திய சமூக விரோதிகளைப்போல் கத்தவேண்டுமேன்றால், தில்லிக்குச் செல்வானென்? சென்னையில் அரசே கடை திறந்துள்ளது. அங்கு “உற்சாக பானம்” அருந்தி வீதிகளில் கத்துங்கள்.

நேருவும், சியாமா பிரசாத் முகர்ஜியும், சாஸ்திரியும், ராஜாஜியும், அண்ணாதுரையும், சமீபத்தில் வாஜ்பாயும், அருண் ஷோரியும் பேசியுள்ள அரங்கத்தை  உங்கள் அழுச்சாட்டியங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

காங்கிரஸ் கத்தவில்லையா என்று கேட்கலாம். மணி ஷங்கர் ஐயர் கத்துவதில்லையா என்று கேட்கலாம். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.என்ற ஆளுமையின் வழி நடப்பவர்கள் அல்ல. பாக்கிஸ்தானியர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மாட்சிமை பற்றி என்ன கவலை? அவர்கள் அப்படித்தான். தங்கள் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியையே குறை கூறும் வல்லமை கொண்ட, நாகரீகம் அறிந்த, தமிழ் நாட்டின் “அறிவாளி” நிதியமைச்சர் அந்தக் கட்சியில் உள்ளார்.  அவர்களுக்கு ஜனாதிபதியின் மாட்சிமை குறித்து கூட அக்கறை இல்லை. முன்னாள் ஜனாதிபதியின் தேர்வே இதைப் புரியவைக்கவில்லையா? எனவே அவர்கள் அப்படித்தான் கத்துவார்கள்.

ஆனால் நீங்கள் வாஜ்பாயின் கட்சினர் அல்லவா? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணியத்தின், கருத்தின், கவித்துவத்தின் உருவாக விளங்கிய வாஜ்பாய் எங்கே, காட்டுக்கத்தல் கத்தும் நீங்கள் எங்கே? அறிவே உருவாக தர்க்கவாதம் புரிந்த அருண் ஷோரி எங்கே,  மறை கழன்றவர்கள் போல் கத்தும் நீங்கள் எங்கே?

உங்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.

“தனித்துவமான” கட்சி என்று பறை சாற்றிய நீங்கள் இப்படியே போனால் இந்திய மக்களால் தனித்து விடப்படுவீர்கள். எச்சரிக்கை !

%d bloggers like this: