ஹிந்தியில் சமூக வலைதளச் செய்திகள் அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வந்தாலும் வந்தது, உலகளாவிய தமிழர் பொங்கி எழுந்தனர். சிங்கப்பூர், மலேசியா, கனடா என்று கோபால் பல்பொடி விற்கும் இடங்களில் எல்லாமிருந்து கிளம்பியது பேரொலி. ஆஹா, என் தாய்த் தமிழை அழிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு என்று கிளம்பியது அலை ஓசை. முக நூல் போராளிகள் தூக்கினர் தங்கள் கீபோர்ட் ஆயுதத்தை.
எல்லாப் பக்கங்களில் இருந்தும் வாங்கியுள்ள அடியின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் பரிதவித்த கருணாநிதி,’ஹிந்தியை முன்னேற்ற சிந்தனை செய்யாதீர், இந்தியாவை முன்னேற்ற சிந்தனை செய்வீர்’ என்று அறிக்கை விட்டார். ( இந்த இடம் எழுதும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை ).
ஆனால் ஒன்று. கருணாநிதி கொஞ்சம் அடக்கித்தான் வாசித்துள்ளார் என்று தோன்றுகிறது. 2ஜி, கனிமொழி, தயாளு என்று ஏகப்பட்டது இருக்கிறது. எதற்குப் பகைத்துக் கொள்வானேன் என்று இருக்கலாம். அதைவிட சிந்தனைச் சிற்பி குஷ்பூ வேறு விலகிவிட்டார். இனிமேல் டி.வி.யில் ஆங்கிலத்தில் பேச யாரை அனுப்புவது என்ற குழப்பமாக இருக்கலாம்.
‘தூங்கும் சிறுத்தையை இடராதீர்’ என்று முழங்கினார் வைகோ. ‘புலி’ என்று சொல்லாமல் சிறுத்தை என்று சொன்னது ஏனோ என்று தெரியவில்லை. பகுத்தறிவுக் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். கூடங்குளமும் தற்போது முழு மூச்சில் செயல்படத் துவங்கி விட்டதால் அவருக்கும் ஏதாவது பேச வேண்டாமா ? இல்லைஎன்றால் ஏதாவது தமிழ் இலக்கியச் சொற்பொழுவு ஆற்றச் சொல்கிறார்கள். அவற்றில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் தொடாமல் பேச முடிவதில்லை. என்னதான் செய்வது ? கிடைத்தது இந்த ஹிந்திச் செய்தி.
இராமதாசு, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அன்புமணியின் பிற்கால நலனைக் கருத்தில் கொள்ள வேண்டாமா ?
காவிரி அன்னை அம்மா வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார். தனது பங்கிற்குத் திராவிட மானம் காக்க வேண்டாமா ?
ப.சிதம்பரம் கூட பேசியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமைச்சர் வேலை இல்லை என்றால் எத்தனை நாள் தான் சும்மா இருப்பது ? அமைச்சராக இருந்தபோதே அப்படித்தானே இருந்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அப்போது அவர் சும்மா இல்லை. சிங்கப்பூர் வந்தார். மலேசியா சென்றார். பன்னாட்டு வங்கிகளுடன் பேசினார். குஜராத்தைத் திட்டித் தான் பணியை ஆற்றினார்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? மோடி அரசி ஹிந்தி தான் தகவல் மொழி என்று அறிவித்து விட்டதா ? அப்படி அறிவுக்க முடியுமா ?
முடியாது. 1963-ல் நேரு கொண்டு வந்த சட்டத்தின் படி, ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாத வரையில், ஹிந்தியை ஒரே தேசீய மொழியாக ஆக்க சட்டத்தில் வழி இல்லை. அது வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகவே தொடரும். என்னைப் பொறுத்தவரை இந்த நிலை மாறப் போவதே இல்லை.
சரி. இது தமிழக அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா ? என்று கேட்கலாம்.
அவர்களுக்கும் தெரியும். ஆனால் எப்போதுமே ஒரு பயம் காட்டிக்கொண்டே இருந்தால் தான் மக்களைத் தொடர்ந்து பயம் கலந்த மயக்க நிலையில் வைத்திருக்க முடியும். அதன்மூலம் இவர்கள் தொடர்ந்து காலட்சேபம் செய்ய முடியும். அதனால் தான் இந்த ‘அறிக்கை’ப் போர்கள். அக்கப்போர்கள் என்றும் சொல்லலாம்.
சரி. பா.ஜ.க. அரசு என்னதான் சொன்னது ? சமூக இணைய தளங்கள் மூலம் பேசும் போது அரசாங்க விவரங்களை ஹிந்தியில் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலம் பயன் படுத்தலாம் என்பதே அந்த அறிவுறுத்தல். இதன் மூலம் அரசு அறிவிப்புகள் ஹிந்தி மட்டுமே பேசும் பெரும்பாலான மக்களைச் சென்றடைய ஏதுவாகும். ஆனால் இதனால் அரசாணைகள், கெஜெட் (Gazette ) முதலியன பாதிக்கப்படாது.
இந்த உண்மை நிலை தெரியாதவர்களா தமிழர்கள் ?
நான் ஜப்பானிய மொழி கற்ற போது எனக்கு ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்கள். ஒரு ஆசிரியர் மட்டுமே ஜப்பானியர். ஜப்பானிய நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் இளைஞர்கள் பலர் ஜப்பானிய மொழி பேசுகிறார்கள். அதனால் தமிழ் அழிந்து விட்டதா ? தோக்கியொவில் என் உடன் பணியாற்றிய அனைத்துத் தொழில் நுட்ப வல்லுனர்களும் தமிழர்களே. அவர்கள் தோக்கியோ வந்த போது பெருமுயற்சி செய்து ஜப்பானிய மொழி கற்றார்கள்.
பிழைக்க உதவி செய்யும் எந்த மொழியையும் கற்கவே தமிழன் மட்டுமல்ல யாரும் விரும்புவர். சிங்கையில் நல்ல தமிழ் பேசும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் தனது பெயரை ‘பரணி’ என்று சொல்கிறார். தமிழ் கற்றதால் அவருக்கு ஆங்கிலம் மறந்துவிட்டதா ? அல்லது அவரது தாய் மொழி அழிந்து விட்டதா ?
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதி சொன்னானே. அவன் தமிழ் தவிர வேறு 7 மொழிகளில் விற்பன்னன். அவனது தமிழ் அழிந்ததா ?
ஒன்று சொல்லலாம். தற்போது கணினித் துறையில் ‘மலைப்பாம்பு’ என்று ஒரு மொழி உள்ளது. அதன் நிஜப்பெயர் Python என்பது. அது போல் இன்னும் பல மொழிகள் C, C++, Java, SQL, C# என்று பலதும் உள்ளன. ஆக இவை அனைத்தையும் கற்பதை விட்டு விடலாமா தமிழர்கள் ? மீண்டும் கற்காலம் செல்ல வேண்டியது தான்.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்களையும், கோவில்களையும், கல்வெட்டுக்களையும் காப்பதற்கு வக்கில்லை; கல்வெட்டுக்களைத் தலைகீழாக வைத்து சிமெண்ட் பூசுகிறார்கள். இவற்றைக் கேட்க நாதியில்லை; குஷ்புவிற்குக் கோவில் கட்டிய மூத்த குடி அல்லவா ? அதனால் தான் வந்துவிட்டார்கள் தமிழைக் காக்க.
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி சொன்னான். தேவை துவேஷம் இல்லை. விவேகம்.
Like this:
Like Loading...