அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்

‘புரியற மாரி சொல்லணும். ‘நினைக்கப்படும்’நு சொன்னா என்னய்யா அர்த்தம்? வள்ளுவன் தான் கொளப்பறான்னா நீரும் ஏன் கொளப்பறீரு?’ போனில் கடுகடுத்தார் அண்ணாச்சி.
‘புரியல அண்ணாச்சி, அண்ணி திட்டினாங்களா’ என்றேன் கேள்வியாய்.
‘கும்மோணம் திமிரு கெடந்து செளம்புதீரு. நாங்கள்ளா தின்னவேலி தெனாவட்ட காட்டுனா பூமி தாங்காதுவே’ குரலில் கொஞ்சம் உண்மையான கடுப்பு.
‘சரி சொல்லுங்க, என்ன விஷயம்? வாட்ஸப்லயும் திட்டு வாங்கணும்னு எழுதியிருக்கு,’ என்றேன் பவ்யமாய்.
‘மனசுல வெச்சுக்காதேயும் அய்யரே. வள்ளுவர் பத்தி பேஸ்புக்குல எளுதினீரே, அதுல ‘நினைக்கப்படும்னு’ போட்டிருக்காம்லா. உம்ம வெளக்கம் புரியலயே,’ என்றார்.
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
செவ்வியான்கேடும் நினைக்கப் படும்’ அதானே பிரச்னை?’ என்றேன்.
‘விளக்கம் சொல்லுவே. புரியற மாரி,’ அண்ணாச்சி.
‘நல்லவங்க கஷ்டப்படறதும் கெட்டவங்க நல்லா வாழறதும் பத்தியும் யமன் நினைச்சுப் பார்ப்பாராம்,’ என்றேன், மேலும் அர்ச்சனைகளை எதிர்பார்த்து.
‘ஐயா சாமி, இது தெரியுது. அதென்ன ‘நினைக்கப்படும்’? யாரு நினைப்பான்? கெட்டவங்க நல்லா இருக்கறத யமன் நினைச்சா என்ன, கட்டைல போனா என்ன? வள்ளுவரு என்னதான் சொல்ல வறாரு?’
கோபத் தொனியில் அண்ணாச்சி.
மனதில் வெகுளி சிறிதும் இல்லையென்பதை நான் அறிவேன்.
‘அண்ணாச்சி, ஊழ் வினையால ஒருத்தன் நல்லா இருப்பான், நாசமாப் போவான். ஆனாலும் இந்த ஜென்மத்துல நல்லது செஞ்சவன் கஷ்டப்படறதும், கெட்டது செஞ்சவன் நல்லா இருக்கறதும் பத்தி யமன் சிந்திச்சு நல்லது கெட்டது செய்வான்,’ இதான் பொருள்.
‘பொறுமைய கெளறாதீரும். வேகமாச் சொல்லும்,’ அண்ணாச்சி.
‘ப்ராரப்த கர்மா, சஞ்சித கர்மா தெரியுமில்லையா? அதைத் தான் சொல்றாரு வள்ளுவரு. மொத்த சேமிப்புல இருக்கற கர்மா சஞ்சித கர்மா. இப்ப வந்திருக்கற வேலை ப்ராரப்த கர்மா. இது முடிஞ்சுடும். பிறகு சஞ்சித கர்மா எவ்வலவு இருக்குன்னு யமன் பார்ப்பான். இப்படி ஒரு பொருள் இருக்கு பாருங்க,’ என்றேன்.
‘நல்லாத்தான் இருக்கு. ஆனா, வள்ளுவர் எதுக்கு ‘நினைக்கப்படும்னு’ குழப்பணும்? வெட்டு ஒண்ணுனு ‘இதாண்டா படுவா. யமன் கணக்கு பாக்கான்’ அப்டின்னு சொல்லலாம்ல,’ என்றார் மகிழ்ச்சியுடன்.
‘வள்ளுவரு மட்டுமா தெரிஞ்சே தனக்குத் தெரியாத மாதிரி சொல்றார்?  நம்மாழ்வாரும் அப்டியே சொல்றார்,’ என்றேன்.
‘அதான பார்த்தேன். அய்யங்கார் ஆழ்வாரத் தொடாம இருக்க மாட்டாரேன்னு.. சொல்லும், மேல சொல்லும்,’ என்றார். குதூகலம்.
‘நரஸிம்மரோட பெருமைய சொல்லிண்டே வறார். திடீர்னு அவரோட பெருமைய யாரால சொல்ல முடியும். ஆராய வேணும்’ அப்டீன்னு பொட்டுனு முடிச்சுடறார். அதுல அவருக்கு ஒரு திருப்தி. படிக்கறவன் ஆராஞ்சு பார்க்கட்டும்னு விட்டுடறார்,’ என்றேன்.
‘என்னய்யா பாட்டு அது?’ அண்ணாச்சி.
‘எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
 
அண்ணாச்சி தழுதழுத்தவாறே, ‘இவ்ளோ எல்லாம் சொல்றீரே, அந்த குறளுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்க பார்ப்போம்,’ என்றார் குறும்புடன்.
 
“புதிய ‘பாரத ரத்னா'” என்றேன் பணிவுடன்.

தனி நாடு அடைவது எப்படி?

தனி நாடு அமைத்தே தீருவோம்.

தேரழுந்தூரைத் தலை நகராகக் கொண்ட கம்ப நாட்டை அமைத்தே தீருவோம். கம்பருக்குத் தீங்கிழைத்த, தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட சோழ நாட்டின் மீது படை எடுப்போம். இதற்காகத் தேரழுந்தூரின் வடக்குவீதி அரசின் பிரதமர் ஆதரவையும், தேரழுந்தூர் சர்வமான்ய அக்ரஹார அரசின் ஜனாதிபதியின் ஆதரவையும் பெறத் தயங்க மாட்டோம்.

இவ்வளவு ஏன்? கும்பகோண அரசின் முதல் மந்திரியுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இனி கும்பகோணத்தின் படைகளுடன் சேர்ந்துகொண்டு, தஞ்சையை நோக்கித் தேரழுந்தூர்ப் படைகள் எந்நேரமும் முன்னேறும்.

கம்பன் என்றால் அவ்வளவு இளக்காரமா? கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற ஶ்ரீரங்கத்தில் எவ்வளவு எதிர்ப்பு? மறக்க மாட்டோம் அநீதியை. ஆழ்வார் பாசுரங்களைப் பாடலாமாம், கம்பன் எழுத்தைப் பாடக் கூடாதா? கம்பனும் இராமனைப் பற்றித்தானே பாடியுள்ளான்?

கம்பன் மீதுள்ள காழ்ப்பால் அவனது மகன் அம்பிகாபதியைச் சோழன் எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளான்? இதற்கெல்லாம் தீர்வு கம்ப நாடென்னும் தனி நாடு தான்.

என்ன கேட்டோம்? கம்பனின் பாடலை அங்கீகரிக்கச் சொன்னோம். தேரழுந்தூர் என்றால் இளக்காரமா? எங்களைக் கண்டால் தஞ்சை சோழப் பேரரசுக்கு அவ்வளவு இளக்காரமா?

இன்னும் என்ன கேட்டோம்? திருமங்கையாழ்வார் பாடலுக்கு நம்மாழ்வார் பாடலுக்கு உள்ள ஏற்றத்தைத் தாருங்கள் என்றோம். கொடுத்தார்களா சோழ அரச வஞ்சகர்கள்? பாண்டிய நாட்டின் நம்மாழ்வாருக்கும், பெரியாழ்வாருக்கும் உள்ள அந்தஸ்தை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுக்க மனம் இல்லையே உங்களுக்கு?

‘நாயக-நாயகி பாவ’த்தில் திருமங்கை ஆழ்வாரும் தான் பாடியிருக்கிறார். அதென்ன பாண்டிய நாட்டு ‘நாயக-நாயகி பாவ’ பாசுரங்களுக்கு மட்டும் ஏற்றம்? பராங்குச நாயகி என்றால் இங்கே பரகால நாயகி. வண்டு முதற்கொண்டு தூது விட்டுப் பாடியுள்ளார் திருமங்கை. ‘தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை’ பாசுரத்துக்கு ஈடாகுமா உங்கள் பாண்டியப் பாசுரங்கள்?

என்னதான் காரணம்?

ஏனென்றால், திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்ப்பக்கம். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்குறையலூர். என்ன இருந்தாலும் உங்களுக்கு வேற்று நாட்டுக் காரரின் பாசுரங்கள் தான் உசத்தி. அதனால் தானே பாண்டிய நாட்டுப் பெரியாழ்வாரையும், நம்மாழ்வாரையும் கொண்டாடுகிறீர்கள் ?

இதற்கு ஒரே தீர்வு தனி நாடு தான். கம்ப நாடு. இது கம்பனுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் குரல் கொடுக்கும் ஒரே தேசம்.

வெற்றி வேல், வீர வேல். படை எழுக, திரை விலக, கம்பன் புகழ் ஓங்க. போர், போர், தனி நாட்டுக்கான போர்.

‘பரத் ராம். அப்பா தூக்கத்துல ஏதோ உளர்றார பார். ஏஸி போடணுமா கேளூ. தமிழ் நாட்டுல கண்ட அசடுகளும் பேசறதெல்லாம் படிக்காதீங்கோன்னா கேட்டாதானே’

என் வழி, தனி வழி-கோதை காட்டும் பாதை

andal
ஆண்டாள்

‘நெய்யிடை நல்லதோர் சோறும்..’ என்கிறார் பெரியாழ்வார்.

இரண்டு வியாக்கியானங்கள் சொல்கிறார்கள். ‘நெய் அளவு சோறு’ என்று கொண்டால் சோற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். கார்போஹைரேட் அளவு குறைவாக உண்ண வேண்டும் என்பதாக வைக்கலாம். ஆனால் அவ்வளவு குறைவாகவா உண்பார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.

‘சோற்றின் அளவு நெய்’ என்று கொண்டால் பயமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சம அளவில் அதுவும் அதிகமாக உண்டால் என்னாவது?

‘நெய் நிறையவும், நெய்யின் இடையே சோறு’ என்று கொண்டாலும் இக்கால அளவில் ஆபத்து தான். தற்காலத்தில் செலவு அதிகம் ஆகும் என்பதை விட, மருத்துவ பயம் கூடுதலாக இருக்கிறது.

ஆனால் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் அப்படிச் செய்யவில்லை. விரதம் இருக்கிறாள். ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்..’ என்கிறாள். அப்படி விரதம் இருந்து, முடிவில் ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார..’ என்று முழங்கையில் நெய் வடியும் வகையில் உண்போம் என்கிறாள். தானாக உண்ண மாட்டாளாம், கூடியிருந்து அனைவருமாய் உண்போம் என்கிறாள்.

அது சரி. இவ்வளவு பாலும் நெய்யும் சாத்தியமா? அவளே விடையும் அளிக்கிறாள்:

‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ இருக்கும் வரை நெய்யும் பாலும் கிடைக்காதா என்ன? அத்துடன் அவளிடம் ‘நீங்காத செல்வம் நிறைந்து’ கிடக்கிறது.  இத்தனை பாலும் நெய்யும் சாத்தியமே.

அப்படி என்ன செல்வம் அவளிடம் இருந்தது? பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் மகளிடம் அப்படி என்ன செல்வம் இருந்துவிட முடியும்?

கோதை காட்டும் பாதையில் சென்று நாமும் பார்ப்போம்.

பெரியாழ்வாரும் பகுத்தறிவும்

‘சார் சாமி தரிசனம் ஆளுக்கு பத்து ரூபாய். சாமியை கிட்டே காமிப்போம். தர்ம தரிசனம் இருக்கு. நாப்பது அடிக்கு முன்னே நிக்க வப்போம். அங்கேருந்து சாமி பாத்துக்குங்க, எப்படி வசதி ?”

இது திருப்பதி திருமலையில் நடந்த சம்பாஷணை அல்ல. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நடந்தது.

ஆக, காசு கொடுத்தால் இறைவனின் கிட்டே அனுமதிப்பார்கள் – சுமார் ஐந்து அடி தூரத்தில், தொட்டுவிடும் தூரத்தில் இறைவன். ஆனால் பணம் இல்லை என்றால் விலக்கி வைத்துவிடுவார்கள். தூரத்தில் இருந்தே இறை அருள் பெற வேண்டியது தான்.

விசேஷம் என்னவேன்றால் விமானத்தில் வேறு இரு பெருமாள்கள் உள்ளனர். சனிக்கிழமைகளில் அவரைத் தரிசிக்க தனியாக இருபது ரூபாய் தர வேண்டும்.

அரசின் கொள்ளையில் இது விசேஷக் கொள்ளை.

இதற்கும் திரைப்படத்திற்கும் ஒரு ஒற்றுமையும் ஒரு வேற்றுமையும் உள்ளன. இரண்டிலும் உள்ளே இருப்பதைப் பார்க்கப் பணம் வசூல் செய்கிறார்கள். இது ஒற்றுமை. வேற்றுமை பின்னால் வருவது. திரைப்படம் பார்க்க அதிகப் பணம் கொடுத்தால் தூர அமர்ந்து பார்க்கலாம். கோவிலில் அதிகப் பணம் கொடுத்தால் பெருமாளைக் கிட்டே இருந்து பார்க்கலாம்.

ஒரு கோவில் பாழ்பட்டுக் கிடந்தால் அரசின் அற நிலையத் துறை அருகில் எட்டிக் கூடப் பார்க்காது. ஆனால், அதனை  நல்லவர்கள் நான்கு பேர் சேர்ந்து பாடுபட்டுப் புனரமைத்தால் அதன் பின் சிறிது கூட்டம் வந்தால் உடனே ‘ஆமை புகுந்த வீடு’ போல் அரசு  நுழைந்துவிடும். “கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல” என்று கூறுவது கூட சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படித்தான் தேரழுந்தூர் என்னும் ஊரில் கோவிலின் புஷ்கரணி (குளம்) பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவே சில பத்து ஆண்டுகள் இருந்தது. பின்னர் நல்லவர்கள் சிலர் சேர்ந்து புஷ்கரணியைச் சீரமைத்தனர். தண்ணீர் நிரம்பியது. பாசியையும் அழுக்குகளையும் நீக்க மீன் வாங்கி விட்டனர். நீரும் சுத்தமானது. அக்கம்பக்கத்து வீடுகளில்  நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது.

இது வரை சரி. பிறகு தான் வந்தது வினை.

அரசு நுழைந்தது. மீன் ஏலம் விட வேண்டும் என்றும், கோவில் தங்களது ‘அற நிலையத் துறை’ கட்டுப்பாட்டில் இருப்பதால் மீன் ஏலம் நடத்தவும் அதன் வருவாயும் அரசுக்குச் சொந்தமானது என்றும் கூறினர்.

எப்படி இருக்கிறது கதை ? “காத்திருந்தவன் மனைவியை நேற்று வந்தவன் அடைந்த கதை” உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.

சரி.தேரழுந்தூருக்கும் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கும் என்ன தொடர்பு ?

இரண்டும் ஆழ்வார் பாடிய திவ்யதேசங்கள். அது தவிர இன்னொறு ஒற்றுமை – அரசு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரியாழ்வார் மதுரை வந்தார். அப்போது கூடல் அழகர் பெருமாள் உற்சவம் நடந்துகொண்டிருந்தது. பெருமாள் கம்பீரமாக வாகனத்தில் எழுந்தருளிக்கொண்டிருந்தார்.

நாமாக இருந்தால் ‘எனக்கு சென்னைக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும், கோச்சடையான் வெளிவர வேண்டும், நயந்தாரா நன்றாக இருக்க வேண்டும்’ என்று நாட்டுக்குத் தேவையானதை வேண்டிக்கொண்டிருப்போம்.

ஆனால் அவர் பெரிய ஆழ்வார் அல்லவா ?

எனவே “நன்றாக இருக்க வேண்டும், பல நூற ஆண்டுகள் வாழ வேண்டும்” என்றெல்லாம் வேண்டிக்கொண்டார்.

இதில் என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா ?

அவர் வேண்டிக்கொண்டது தனக்காக அல்ல; தான் நன்றாக இருக்க வேண்டும் என்று அல்ல.

“இவ்வளவு அழகாக எழுந்தருள்கிறீர்களே பெருமாளே, யார் கண்ணும் படாமல் நீங்களும், உங்கள் சங்கு, சக்கரம் முதலிய ஆயுதங்களும் உங்கள் திருமார்பில் வாழும் இலக்குமியும் நன்றாகப் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதனை ஒரு பாடலின் மூலம் பதிவும் செய்தார். “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு..” என்று தொடங்கும் பாசுரத்தில் பதிவு செய்தார். இன்றும் வைணவத் திருத்தலங்களில் முக்கியமாகப் பாடப்படும் பாடல் இது.

இப்போதைய ‘கவிஞர்களாக’ இருந்திருந்தால் தங்களுக்கு ஒரு அரசவைக் கவிஞர் பதிவியோ வேறு ஒன்றும் இல்லை என்றால் ஒரு வாரியத் தலைவர் பதவியாவது கேட்டிருப்பார்.

என்ன செய்வது, பெரியாழ்வாரது பகுத்தறிவு அவ்வளவு தான்.

பிழைக்கத் தெரியாத மனுஷன் அவர்.

%d bloggers like this: