‘எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்துஇங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்பஅங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றியசிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே‘
Tag Archives: பெரியாழ்வார்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்
தனி நாடு அடைவது எப்படி?
தனி நாடு அமைத்தே தீருவோம்.
தேரழுந்தூரைத் தலை நகராகக் கொண்ட கம்ப நாட்டை அமைத்தே தீருவோம். கம்பருக்குத் தீங்கிழைத்த, தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட சோழ நாட்டின் மீது படை எடுப்போம். இதற்காகத் தேரழுந்தூரின் வடக்குவீதி அரசின் பிரதமர் ஆதரவையும், தேரழுந்தூர் சர்வமான்ய அக்ரஹார அரசின் ஜனாதிபதியின் ஆதரவையும் பெறத் தயங்க மாட்டோம்.
இவ்வளவு ஏன்? கும்பகோண அரசின் முதல் மந்திரியுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இனி கும்பகோணத்தின் படைகளுடன் சேர்ந்துகொண்டு, தஞ்சையை நோக்கித் தேரழுந்தூர்ப் படைகள் எந்நேரமும் முன்னேறும்.
கம்பன் என்றால் அவ்வளவு இளக்காரமா? கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற ஶ்ரீரங்கத்தில் எவ்வளவு எதிர்ப்பு? மறக்க மாட்டோம் அநீதியை. ஆழ்வார் பாசுரங்களைப் பாடலாமாம், கம்பன் எழுத்தைப் பாடக் கூடாதா? கம்பனும் இராமனைப் பற்றித்தானே பாடியுள்ளான்?
கம்பன் மீதுள்ள காழ்ப்பால் அவனது மகன் அம்பிகாபதியைச் சோழன் எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளான்? இதற்கெல்லாம் தீர்வு கம்ப நாடென்னும் தனி நாடு தான்.
என்ன கேட்டோம்? கம்பனின் பாடலை அங்கீகரிக்கச் சொன்னோம். தேரழுந்தூர் என்றால் இளக்காரமா? எங்களைக் கண்டால் தஞ்சை சோழப் பேரரசுக்கு அவ்வளவு இளக்காரமா?
இன்னும் என்ன கேட்டோம்? திருமங்கையாழ்வார் பாடலுக்கு நம்மாழ்வார் பாடலுக்கு உள்ள ஏற்றத்தைத் தாருங்கள் என்றோம். கொடுத்தார்களா சோழ அரச வஞ்சகர்கள்? பாண்டிய நாட்டின் நம்மாழ்வாருக்கும், பெரியாழ்வாருக்கும் உள்ள அந்தஸ்தை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுக்க மனம் இல்லையே உங்களுக்கு?
‘நாயக-நாயகி பாவ’த்தில் திருமங்கை ஆழ்வாரும் தான் பாடியிருக்கிறார். அதென்ன பாண்டிய நாட்டு ‘நாயக-நாயகி பாவ’ பாசுரங்களுக்கு மட்டும் ஏற்றம்? பராங்குச நாயகி என்றால் இங்கே பரகால நாயகி. வண்டு முதற்கொண்டு தூது விட்டுப் பாடியுள்ளார் திருமங்கை. ‘தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை’ பாசுரத்துக்கு ஈடாகுமா உங்கள் பாண்டியப் பாசுரங்கள்?
என்னதான் காரணம்?
ஏனென்றால், திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்ப்பக்கம். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்குறையலூர். என்ன இருந்தாலும் உங்களுக்கு வேற்று நாட்டுக் காரரின் பாசுரங்கள் தான் உசத்தி. அதனால் தானே பாண்டிய நாட்டுப் பெரியாழ்வாரையும், நம்மாழ்வாரையும் கொண்டாடுகிறீர்கள் ?
இதற்கு ஒரே தீர்வு தனி நாடு தான். கம்ப நாடு. இது கம்பனுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் குரல் கொடுக்கும் ஒரே தேசம்.
வெற்றி வேல், வீர வேல். படை எழுக, திரை விலக, கம்பன் புகழ் ஓங்க. போர், போர், தனி நாட்டுக்கான போர்.
‘பரத் ராம். அப்பா தூக்கத்துல ஏதோ உளர்றார பார். ஏஸி போடணுமா கேளூ. தமிழ் நாட்டுல கண்ட அசடுகளும் பேசறதெல்லாம் படிக்காதீங்கோன்னா கேட்டாதானே’
என் வழி, தனி வழி-கோதை காட்டும் பாதை

ஆண்டாள்
‘நெய்யிடை நல்லதோர் சோறும்..’ என்கிறார் பெரியாழ்வார்.
இரண்டு வியாக்கியானங்கள் சொல்கிறார்கள். ‘நெய் அளவு சோறு’ என்று கொண்டால் சோற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். கார்போஹைரேட் அளவு குறைவாக உண்ண வேண்டும் என்பதாக வைக்கலாம். ஆனால் அவ்வளவு குறைவாகவா உண்பார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.
‘சோற்றின் அளவு நெய்’ என்று கொண்டால் பயமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சம அளவில் அதுவும் அதிகமாக உண்டால் என்னாவது?
‘நெய் நிறையவும், நெய்யின் இடையே சோறு’ என்று கொண்டாலும் இக்கால அளவில் ஆபத்து தான். தற்காலத்தில் செலவு அதிகம் ஆகும் என்பதை விட, மருத்துவ பயம் கூடுதலாக இருக்கிறது.
ஆனால் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் அப்படிச் செய்யவில்லை. விரதம் இருக்கிறாள். ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்..’ என்கிறாள். அப்படி விரதம் இருந்து, முடிவில் ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார..’ என்று முழங்கையில் நெய் வடியும் வகையில் உண்போம் என்கிறாள். தானாக உண்ண மாட்டாளாம், கூடியிருந்து அனைவருமாய் உண்போம் என்கிறாள்.
அது சரி. இவ்வளவு பாலும் நெய்யும் சாத்தியமா? அவளே விடையும் அளிக்கிறாள்:
‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ இருக்கும் வரை நெய்யும் பாலும் கிடைக்காதா என்ன? அத்துடன் அவளிடம் ‘நீங்காத செல்வம் நிறைந்து’ கிடக்கிறது. இத்தனை பாலும் நெய்யும் சாத்தியமே.
அப்படி என்ன செல்வம் அவளிடம் இருந்தது? பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் மகளிடம் அப்படி என்ன செல்வம் இருந்துவிட முடியும்?
கோதை காட்டும் பாதையில் சென்று நாமும் பார்ப்போம்.