ராசி பலன்

என் ராசி பலன். எனது எல்.கே.ஜி. காலத்தில் இருந்து ந்ருஸிம்மப்ரியாவில் வருவது.

1. ‘ஆகார விஷயங்களில் நியமம் தேவை’
2. ‘வித்தையில் அதிக கவனம் தேவை’

எப்போதாவது சிறிது மாற்றி, நல்லவிதமாகவும் எழுதுவார்கள். இப்படி:

1. ‘உடலில் உபாதை காட்டும்’
2. ‘வித்தையில் பலிதம் சுமார்’

சுமார் 20 ஆண்டுகள் கழித்து, ஒரு ஆர்வத்தில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று இன்று பார்த்தேன்.

1. ‘ஆகார விஷயங்களில் அக்கறை தேவை’
2. ‘உடலில் உபாதை காட்டும்’

‘வித்தை’யை விட்டுவிட்டார்கள். இனிமேலெல்லாம் வராது என்று தெரிந்துவிட்டது போல.

‘மாதொரு பாகனு’க்கு சாஹித்ய விருது கொடுக்கும் காலத்தில் வித்தையாவது ஒன்றாவது என்பதாக இருக்கலாம்.

பெருமாள்முருகன் சொல்ல வேண்டிய மந்திரம்

மாதொருபாகன்– இதை நான் படித்ததில்லை, படிப்பதாகவும் இல்லை.

தமிழகத்தின் முதுகெலும்பான வேளாண்மையின் மூல ஆணி வேர் போன்றவர்கள் வேளாளர்கள். அதிலும் கொங்கு வேளாளர்கள் கடும் உழைப்பாளிகள். நமது பாரத ஆன்மீகப் பாரம்பர்யத்தைக் கட்டிக்காப்பதில் பெரும் பங்காற்றியவர்கள்.

அத்தகைய மக்களை இழிவு படுத்தும் நூல், அவர்களை வருத்தப்படுத்தும் நூல் எவ்வளவு பெரிய இலக்கியமாக இருந்தாலும் அது எனக்குத் தேவையில்லை.

என் மக்களை இழிவு படுத்தும் முற்போக்குப் பாவனை எனக்குத் தேவையில்லை, பழைய பஞ்சாங்கமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

ஈயம் ஊற்றும் பெண்கள் எங்கே போனார்கள்?

எடுத்ததற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் பெண் ஈய வியாதிகள், மாதொருபாகன் விஷயத்தில் எங்கே போனார்கள்? அந்த நாவலில் பெண்கள் இழிவு படுத்தப்படவில்லையா?

சபரி மலையில் பெண்கள், சனீஸ்வரன் கோவிலில் பெண்கள் என்று தொலைக்காட்சி காமெராக்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தும் நவ நாகரீகப் பெண் உரிமையாளர்கள், மாதொருபாகன் விஷயத்தில் ‘கஜினி’ ஸ்டைலில் பெண்ணுரிமை மறந்துவிட்டார்கள் போல.

ஒரு வேளை கண்டாங்கி சேலை அணிந்து, முதுகொடிய வேளாண்மை வேலை பார்க்கும் திருச்செங்கோட்டுக் கொங்கு வேளாள மகளிருக்குக்கெல்லாம் பெண்ணுரிமை இருக்காதோ? ஜீன்ஸ் பேண்ட்டும், டாப்சும் அணிந்து ‘ஸ்டார்பக்ஸ்’ல் காப்பி குடித்தால் தான் பெண்ணுரிமை வருமோ என்னவோ! பகுத்தறிவுப் பகலவன்களுக்கும் , இடதுசாரி இரண்டும் கெட்டான்களுக்குமே வெளிச்சம்.
பெருமாள் முருகனுக்கு (FoS – Freedom of Speech) கிடையாதா? பேச்சுரிமை கிடையாதா? என்கிறார்கள்.

கிடையாது என்றே சொல்வேன்.

எப்படி நமது முஸ்லீம் சகோதாரர்களையும் அவர்களது புனித நூலையும் இழிவுபடுத்த சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலானவர்களுக்கு உரிமை இல்லையோ, ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்த வெண்டி டோனிகர், எம்.எப்.ஹுசைன் முதலானவர்களுக்கு உரிமை இல்லையோ, அது போல பெருமாள்முருகனுக்கும் நமது வேளாண் சமூகத்தையும் அவர்களது வழிபாட்டையும் இழிவுபடுத்த உரிமை இல்லை.

‘பேச்சுரிமை கட்டற்றதல்ல’ என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. வரைமுறைகளுக்கு உட்பட்டே உரிமைகளை உறுதி செய்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம்.

தர்க்கம் நமது பண்பாட்டுக் கட்டுக்குள் உள்ளது. வாதம் நமது பாரத ஞான மரபின் அம்சம். அவை தத்துவ அளவில் பல ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்று வந்துள்ளன. எனது ‘நான் இராமானுசன்’ நூலிலும் தத்துவ விவாதம் உள்ளது. ஆனால் அது இனங்களை இழிபடுத்தும் அளவு செல்ல அனுமதிக்க முடியாது.

மாதொருபாகன் நூலுக்குப் பின் உள்ள அரசியலை நாம் கவனிப்போம்.

திருச்செங்கோடு கோவில் தேர்த்திருவிழா பிரசித்திபெற்றது. 14 வகையான கொங்கு வேளாள மக்களின் குடும்ப விழாவாக இது இருக்கிறது. நாட்டுக் கவுண்டர், மொளசி கண்ணன் கோத்திர கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், வன்னியர், வஸ்வகர்மா, முதலியார் என்றெல்லாம் பல சமூகங்கங்கள் ஒன்றிணைந்து தங்களது மண்டபங்களில் கட்டளைகள் மூலம் செய்யும் திருவிழா இது. சமூக ஒற்றுமை இதனால் வலுப்படுகிறது. இந்த விழாவில் பெண்கள் பெருமளவில் பங்கு பெறுகின்றனர்.

ஆனால் மாதொருபாகன் நூல் சர்ச்சைக்குப் பின் பெண்கள் இந்த விழாவில் பங்கெடுக்கத் தயங்கினர். அவர்களிடம் பேசி அவர்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டியது பற்றி எடுத்துரைக்க வேண்டியிருந்தது.

ஒற்றுமையான சமூகத்தைக் குலைக்க வேண்டிய அவசியம் யாருக்கு இருக்கமுடியும்?

இவர்கள்:

அந்நிய மத மாற்றுச் சக்திகள், அவர்களிடம் கூலி பெற்று நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இடதுசாரி, போலி பகுத்தறிவு திராவிட இயக்கங்கள், இவர்களின் கையிலிருந்து வாங்கி உண்டு முற்போக்கு எழுத்தாளர் போர்வையில் உலாவரும் சமூகக் கொலைஞர்கள்.

வயிறு நிறைய உணவு உண்டபின் ‘அன்னதாதா சுகீ பவ’ என்று சொல்வது நமது பாரம்பரியம். ‘இந்த அன்னத்தை அளித்தவன் நலமாக வாழட்டும்,’ என்று மனம் நிறைந்து வாழ்த்துவது பாரத மரபு.

ஆனால் பெருமாள்முருகனும் அவரது ‘முற்போக்கு’ நண்பர்களும் சொல்ல வேண்டிய மந்திரம் வேறு:

‘நாம் சாப்பிடும் இந்த அரிசியில் நாம் இழிவு படுத்திய வேளாளப் பெருங்குடி மக்களின் குருதியும் வியர்வையும் கலந்துள்ளன. இருந்தாலும் பரவாயில்லை. பிழைப்பு என்று வந்துவிட்ட பிறகு, யாருடைய குருதியோ யாருடைய வியர்வையோ. எதுவாக இருந்தாலும் அதையே உண்டு அவர்களுக்கே துரோகம் செய்வோம். ஏனெனில் இதுதான் எமது இடதுசாரி, போலி பகுத்தறிவுவாத சித்தாந்தம். அந்த சித்தாந்தம் வாழக் கடவது.’

பாரதி சொன்னான் : ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ .

நான் சொல்கிறேன்: சமூக ஒற்றுமையை, மக்கள் மானம் மரியாதையை, நாட்டின் நன்மையைக் குலைப்பவர்கள், அவர்கள் என்ன முற்போக்காக இருந்தாலும், பெரும் போக்கில் போவார்கள்.

காற்றில் கரைந்து காணாமல் போவது எப்படி ?

காற்றில் கரைந்து காணாமல் போவது எப்படி ? ஐந்து நாடகங்கள் மூலம் பார்க்கலாம்.

நாடகம் 1

பெருமாள் முருகனின் நூல் ‘மாதொருபாகன்’ தடை செய்யப்பட வேண்டும் சென்று சில ‘அறிவாளிகள்’ கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அதனை எரித்தும் உள்ளனர். அது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்பது இவர்களது குற்றச்சாட்டு.

தடை செய்யக்கூடாது என்பது ஆ.. பக்கங்களின் வாதம். என்னதான் இருந்துவிடப் போகிறது அந்த நூலில் ? குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியினர் ஒரு பழைய சம்பிரதாயத்தின் வழியில் குழந்தை பெறுகின்றனர். இது புதுமையான சம்பிரதாயம் கூட அல்ல. கிட்டத்தட்ட இதே முறையில் மகாபாரதத்தில் குழந்தை பிறப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நூலை எரிக்க வேண்டும் என்றால் மகாபாரதத்தையும் எரிக்கலாமா ? இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் கம்பராமாயணம், ஆண்டாள் பாசுரங்கள், சீறாப்புராணம் என்று பலவற்றை அழிக்க வேண்டும்.

நூல் தடை கோருவது முட்டாள்தனமானது. ஓரிரு நூல்களால் இந்துமதம் அழியக்கூடியது என்று நம்புகிறார்களா இவர்கள் ? 700 ஆண்டுகால இஸ்லாமிய தாக்குதல்களால் அழியாதது இந்த வாழ்க்கை வழிமுறை. 250 ஆண்டுகால ஆங்கில ஆட்சியில் அழியாதது இது. இந்த ஒரு நூல் தான் இதனை அழிக்கப்போகிறதா ? நாடகம் நன்றாக இருக்கிறது.

நூல் எரிப்புக்கு எதிராகத் தமிழ்ப் ‘போராளிகள்’ ஒன்று திரண்டனர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ‘இந்து பாசிசத்திற்கு’ எதிராக அணி திரண்டனர். கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும் என்று பெருங்குரல் எழுப்பினர். ‘முற்போக்கு’ என்ற அணியில் இவர்கள் பாசிசத்தை எதிர்த்தனர். இந்த நாடகமும் நன்றாக நடந்தேறியது.
இந்த நாடகம் இருக்கட்டும். இன்னொரு நாடகம் பற்றிப் பார்ப்போம்.

நாடகம் 2

2013ம் ஆண்டு அமினா வதூத் என்ற அமெரிக்கப் பெண் அறிஞர் சென்னைப் பல்கலையில் பேச இருந்தார். அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதற்காக சென்னை வந்த அவர் பேசாமலேயே திரும்பினார். அவர் ஏன் பேசவில்லை ? அவர் இஸ்லாமியப் பெண்ணீயவாதி, அறிஞர். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பேசி வருபவர். அவர் சென்னைப் பல்கலையில் பேசினால் ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சினை ஏற்படும் என்று காரணம் கூறி அவரது பேச்சு நிறுத்தப்பட்டது.

ஆனால் பாவம் அமினா வதூத். அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ‘போராளிகள்’ வரவில்லை. ஏனினில் அப்போது ‘தமிழ்ப் போராளிகள்’ காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.

நாடகம் 3

இத்துடன் இன்னொரு நாடகமும் நடந்தது. சாஹித்ய அக்கதெமி பரிசு பெற்ற ஜோ டி குரூஸ் அவர்களின் தமிழ் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயற்கப்பட்டது. நூல் வெளியாவதற்கு முன் அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசினார். உடனே ‘நவயானா’ பதிப்பகம் நூலை வெளியிட மறுத்துவிட்டது. ஒரு நூலாசிரியருக்கு அவருக்கென்ற ஒரு தனிக்கருத்து இருக்கக் கூடாதா ? அவருக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்று ‘முற்போக்கு’ எழுத்தாளர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கவில்லை. ஏனெனில் அவர்கள் காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.

நாடகம் 4

பல ஆண்டுகள் முன்னர் ‘சாத்தானின் வேதம்’ என்ற சல்மான் ருஷ்டியின் நூலைத் தடை செய்தது இந்திய அரசு. அப்போதும் இந்த ‘முற்போக்கு முத்தண்ணாக்கள்’ தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் அப்போதும் காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.

நாடகம் 5

சில ஆண்டுகள் முன்பு இடது சாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்திலிருந்து பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போதும் இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.

ஆக,  நீங்களும் காற்றில் கரைந்து காணாமல் போய்த் தேவையானபோது மட்டும் தோன்றும் ஆற்றல் பெற விரும்பினால், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேருங்கள்.

%d bloggers like this: