ஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்

‘சீக்கரம் போங்கோ. க்யூ பெருசா இருக்கு’ வெள்ளை கோபுர வாசலில் நின்றிருந்த ஸ்வாமி அவரசரப்படுத்தினார்.

பிப் 23, 2020. காலை 6:30 மணி. அமாவாசை.

பஞ்சகச்சம் மற்றும் ஶ்ரீவைஷ்ணவ அடையாளங்களுடன் கோபுர தரிசனத்துடன் நுழைகிறேன்.

ஆச்சார்யனிடம் அனுமதி பெற்றுப் பெருமாளைச் சேவிக்க எண்ணி உடையவர் சன்னிதிக்குச் சென்றோம். பரம காருண்ய சீலராக எம்பெருமானார் எழுந்தருளியிருந்தார். ‘ஏதோ எழுதுகிறான்’ என்று சிலர் சொல்லக் கூடிய அளவில் என்னை நிற்கவைத்த பெருமகனார் புன்முறுவல் பூத்தபடி எழுந்தருளியிருந்தார். ஒருகணம் மெய் சிலிர்த்தது. பகுத்தறிவு, புண்ணாக்கு என்று கேலி எழுத்துக்களையே செய்துகொண்டிருந்த அடியேனைத் தமிழில் தன்னைப் பற்றி எழுதவைத்து (‘நான் இராமானுசன்’) வாழ்க்கையையே மாற்றியருளிய பெரும்பூதூர் மாமுனி மோனத்தவத்தில் அமர்ந்திருந்தார்.

வெளியேறி, இலவச தரிசன வரிசையில் நப்பாசையில் நிற்கிறேன் (எதுக்கு HR & CEக்கு நம்ம காசு போகணும்? என்னும் என் தர்க்கம் + அதற்கான நறுக் பதில் மனைவியிடமிருந்து).

இலவச வரிசை என்னும் சொல் காயப்படுத்துகிறது. பெருமாள் எல்லாருக்கும் இலவசம் இல்லையா? அதென்ன பணம் கொடுத்து சேவிப்பது? அவன் என்ன இறைக்காட்சிச் சாலையில் உள்ள நோக்கத்தக்க  பொருளா? அரை மணி கழிந்த பின் அதே இடத்தில் நிற்பதை உணரும் தருணம். ‘கவர்மெண்டோ யாரோ, பெருமாளுக்கு கொஞ்சமாவது செய்வாளோனோ? 50 ரூபா வரிசைல போகலாம் என்னும் மனையாள் வாக்குப் பரிபாலகனாய் வெளியேறினால், 50 ரூபாய் வரிசை இன்னமும் நீளமானதாகத் தோன்ற, ‘இப்பிடியே நின்னுண்டிருந்தா யாரையும் சேவிக்க முடியாது’ என்னும் ஆசீர்வாதவாணிக்கு ஆட்பட்டு 250ரூபாய் வரிசையில் நின்று, சில கட்டுகளைத் தாண்டி அரங்கனின் காயத்ரி மண்டபத்தின் முன் இலவச மற்றும் ஐம்பதுகளுடன் ஐக்கியமானோம். இறைவன் முன்னிலையில் அனைத்தும் ஒன்றல்லவா?

ஒருவழியாகக் காயத்ரி மண்டபத்தினுள் நுழைந்தோம். பிரபஞ்ச அளவுக்கான நிசப்தத்தில் துயில் கொண்டிருக்கும் அரங்கனைச் சேவிக்க எண்ணி நிமிர்ந்தால் அரங்கனின் அருந்துயில் கெடும் அளவிற்குக் கூச்சல். ‘நிற்காதீர்கள், நகருங்கள்’ என்பதைப் பலர் பல மொழிகளில் கத்திக்கொண்டிருந்தனர். ஊழியர்கள், சீருடை அணிந்த ஊழியர்கள், பட்டர்கள், பட்டர்கள் சொரூபத்தில் இருந்த இன்னும் சிலர், இஸ்கான் நிறுவனத்தைச் சார்ந்தவர் போன்று தோற்றம் அளித்த இன்னொருவர் என்று பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டும், உரத்து சிரித்துக்கொண்டும், பக்தர்களை நகர்த்த உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தனர். இவை எதையும் கண்டுகொள்ளாமல் ஆழ்துயிலில் இருந்தான் அரங்கன். உறங்காவில்லியைத் தன் கண் அழகால் ஆட்கொண்டவனும், தன்னைக் கண்டால் பிறிதொன்றைக் காணத் தோன்றாத கண் அழகை உடையவனுமான அரங்க நகர் மேயவப்பன் புன்சிரிப்புடன் பள்ளிகொண்டிருந்தான். ‘இந்த சத்தத்தில் எப்படியப்பா படுத்திருக்கிறாய்?’ என்று மானசீகமாகக் கேட்டேன். பஞ்சகச்சம், திருமண் காரணத்தால் ‘ஸ்வாமி, சற்று தள்ளி நின்று சேவிக்கலாமே’ என்று மரியாதையாகச் சொன்னார்கள்.

காயத்ரி மண்டபம் துவங்கி அரங்கனின் கருவறைக்குள் செல்லும் வரை ‘அமலனாதிபிரான்’ சொல்லவேண்டும், திருப்பாணாழ்வார் கொண்டிருந்த மன நிலையை அடைய, மீட்டுருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று பல முறைகள் முயன்றேன். கூச்சல், அதட்டல் அதிகம் இருந்ததாலும், மக்கள் கூட்டமும் சற்று கட்டுப்பாட்டுடன் இல்லாதிருந்ததாலும் என்னால் முடியவில்லை. இறையுரு முன் அகமிழந்த நிலையில் ஓரிரு மணித்துளிகள் நின்றவாறு உறங்காவில்லி பெற்ற அனுபவத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்னும் என் எண்ணம் ஈடேறவில்லை. பெரும் வருத்தம்.

கூட்டத்தில் நசுங்கி, பணமும் கொடுத்து, பெருமாளைக் கண்டு மனக்குறைகளை இறக்கி வைக்க வரும் பல மொழி பேசும் பக்தர்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் அரங்கனுடன் தனிமையில், ஒலிகள் அற்ற பெரு மவுனத்தில், எகாந்தத்தில் திளைத்துத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு செல்லவே. அதற்கான வசதியை, சூழலை ஏற்படுத்தித் தருவது கோவிலார் கடன். ஏதோ வேண்டா வெறுப்பாகச் செய்யாமல் மனம் ஒன்றி மவுனம் கடை பிடித்தல் மிக மிக அவசியம். உள்ளே சயனத்தில் இருப்பவனுக்கே கூட தங்களது இரைச்சல் பொறுக்காது என்பதை அவர்கள் உணர வேண்டும். உணர மறுப்பவர்கள் காயத்ரி மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும். இதை நிர்வாகம் உடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவிலாரும், பட்டர்களும் இன்ன பிறரும் வேறொன்றும் செய்ய வேண்டாம். பேசாமல் இருந்தாலே போதும். செல்பேசி கூடாது என்று அறிவிப்பு உள்ளது போன்று வாய்பேசியும் கூடாது என்று எழுதி வைக்க வேண்டும். அருமையான இறை அனுபவத்தைப் பக்தர்களுக்கு வழங்குவது கோவிலார் கடன்.

பின்னர் தாயார் சன்னிதியிலும் இவ்வாறே. பிரபஞ்சம் முழுமைக்குமாக வீற்றிருக்கும் தாயின் கருவறை முன், முகமது துக்ளக் படையெடுப்பால் பூமிக்குள் சென்று மீண்டு திரும்பிய தாய், அவள் வருவதற்கும் தோன்றிய புதிய தாய் என்று இருவரையும் அமைதியாக ஒருசேரக் கண்டு , ஓரிரு மணித்துளிகள் அமைதியான நின்று அந்தக் கொடிய வரலாற்றுத் தருணங்களை அசைபோட்டு, ‘இவ்வளவு தியாகங்கள் புரிந்து, மீண்டு வந்து எங்களுக்காகக் காட்சியளிக்கும் தாயே, உன் கருணைக்கு என்னிடம் கைம்மாறு இல்லையே’ என்று கசிந்துருகி வெறும் இரு மணித்துளிகள் கூட நிற்க வழி இல்லை என்பது மன்னிக்க முடியாத துன்பியல் நிகழ் யதார்த்தம். அதைவிடக் கொடுமை வெளியில் இருந்து பார்த்தால் தாயார் தெரிந்துவிடுவார் என்பதாலோ என்னவோ தாயார் சன்னிதியின் வாயிலில் வெள்ளை நிறத்தில் படுதா கட்டியிருந்தார்கள். அப்போது தளிகை கண்டருளப்பண்ணும் சமயமும் இல்லை. (இப்படிப் படுதா கட்டுவதை எதிர்த்து காஞ்சி பரமாச்சாரியார் ஒருமுறை அரசாங்கத்திற்கு எழுதியிருந்தார் என்று எங்கோ வாசித்த நினைவு).

தூண்கள் தோறும் மன்னர்களும், அரசிகளும், ஆச்சார்ய புருஷர்களுமாக நின்றிருந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் நின்று சற்று நேரம் நன்றி தெரிவித்தேன். ஓரிருவரது பெயர்கள் தெரியும். மற்றையோரையும் தெரிந்துகொண்டு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்த வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

திடீரென்று உறைத்தது : துலுக்க நாச்சியார் என்னும் பீபி நாச்சியார் எங்கே? தரிசிக்காமல் வந்துவிட்டோமே என்னும் கழிவிரக்கம். ‘ஆமாம், பெருமாளையும் ஆச்சார்யாளையும் சேவிச்சாச்சோனோ,  துலுக்க நாச்சியார் இன்னொரு தடவை பார்த்துக்கலாம்’ என்ற அறிவுரையைப் புறந்தள்ளி விசாரித்தேன். சிலர் குழப்பினர். நுழைவாயிலில் அமர்ந்திருந்த அனுபவஸ்தரான தமிழகக் காவல் துறை அதிகாரி விபரமாக வழி காட்டினார். மீண்டும் வந்த வழியே சென்றேன். அரங்கனின் விமானத்திற்கு அருகில் அமைந்துள்ள அர்ச்சுன மண்டபத்தில் நான் எதிர்பாராத மவுனத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தாள் பீபி நாச்சியார், சுவரில் சித்திர வடிவில். அறை பூட்டப்பட்டிருந்தாலும் மெல்லிய எண்ணெய் விளக்கொளியில் சித்திர வடிவில் நின்ற பீபி நாச்சியார் பேசினாள். கூச்சல், குழப்பம், அதிகாரத் தோரணைகள், ‘நகருங்கோ நகருங்கோ’ நாமஸ்மரணைகள் எதுவும் இல்லாமல் சுமார் 10 மணித்துளிகள் பீபி நாச்சியாரைத் தியானித்து மனதிற்குள் கைகூப்பினேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவள் அருள் வழங்கினாள் என்பதை உணரக் கூடிய அமைதி அந்த சன்னிதானத்தில் இருந்தது.

வெள்ளை கோபுரம் வழியாக மீண்டும் வெளியே வரும் வழியில் லக்சும்பெர்க் நாட்டில் இருந்து இரு சுற்றுலாப்பயணியர் கோபுரத்தை நோக்கி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘இந்தக் கோபுரம் மட்டும் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று பேசிக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டேன். புன்முறுவலுடன் ஒப்புக்கொண்டனர். வெள்ளாயி என்னும் தேவரடியாரின் வரலாற்றைச் சொன்னேன். முகமது பின் துக்ளக்கின் ஶ்ரீரங்கப் படையெடுப்பின் போது வெள்ளாயி செய்திருந்த பெரும் தியாகத்தையும், அதற்கு அரங்கன் அவருக்குச் செய்திருந்த சன்மானத்தையும் கூறினேன். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரில் ஒரு பெண்மணியின் கண்களில் நீர். ‘இத்தனைத் தியாகங்களைக் கடந்து இந்த சம்பிரதாயம் தழைத்து வந்துள்ளது’  என்று சொல்லி முடிக்கும் போது என் நா தழுதழுத்தது என்று சொல்லவேண்டியதில்லை.  ‘Enjoy your stay in the splendid spiritual grandeur of Srirangam’ என்று சொல்லி விடைபெற்றேன்.

மாலை வேளை காட்டழகியசிங்கர் கோவில், பின்னர் ஶ்ரீமான் வீரராகவன் சம்பத் நடத்திவரும் கோசாலை, மணவாள மாமுநிகள் பிருந்தாவனம் என்று கழிந்தது. பன்னீராயிரவர் தாங்கள் மடிந்து காத்தருளிய ஶ்ரீரங்கம், என்னால் விட்டுக் கிளம்ப முடியாத ஒரே இடம்.

பி.கு.: காலையில் உடையவர் சன்னிதியில் எழுந்த பக்திக் கிளர்ச்சியில் உடையவரைப் பற்றிக் கூரத்தாழ்வான் அருளிச்செய்த ‘யோ நித்யமச்சுதபதாம்’ தனியனை வாய்விட்டுச் சொல்லப்போக, அர்ச்சகர் ‘மனசுக்குள்ள சொல்லிக்கோங்கோ’ என்றது, ‘நான் இராமானுசன்’ எழுதக் காரணமான கலை விவகாரத்தை நினைவுபடுத்தியது. எத்தனை நூல்கள் வந்தாலும்….ஹும்.

பசுக்களின் மருத்துவர்

ஶ்ரீரங்கத்தில் ஒரு நவீன வீவேகானந்தர், பசுப்பாதுகாவலர்.

 

‘அப்பா, கண்ணு ப்ரவுன் கலர்ல இருக்குமே அதுப்பா’

‘எந்தக் கண்ணுமே ப்ரவுன் கலர்ல இருக்காது. எல்லாமே வெள்ளையா தான் இருக்கு’

‘இல்லப்பா, பேர் கூட புதுசா இருக்குமேப்பா’

‘ரங்கநாயகியா?’

‘இல்லப்பா, லட்சுமணன்?’

‘ஏய், லட்சுமணன் தோல் தாண்டா ப்ரவுன். கண் எங்கடா ப்ரவுன்?’

‘சரி போப்பா. அப்ப சீதாவா?’

‘சீதா கலரே வெள்ளைதானடா?’

‘பரமசாமி?’

‘சும்மா பொய் சொல்லாத. பரமசாமி வெள்ளையும் கருப்பும் இல்லையா?’

‘போப்பா, நீ சீட் பண்ற.’

பலராமன் (எ) வேத நாராயணன் (எ) யதீந்திர சரணன்  என்னும் பெயர்களால் அழைக்கப்படும் ஐந்துவயதுக் கிருஷ்ணன் கேட்க, அவனது தந்தை வீரராகவன் பதில் சொல்ல, நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது ‘அழகிய மணவாளன் ஆநிரைக் கூட’த்தில் வாழ்ந்துவரும் உடல் ஊனமுற்ற பசு / காளை மாடுகளைப்பற்றி. 

வீரராகவன் என்னும்  இளைஞர் ஶ்ரீரங்கத்தில் மேற்சொன்ன பெயரில் கோசாலைகளுக்கெல்லாம் கோசாலை நடத்தி வருகிறார். அதென்னவென்று கேட்கிறீர்களா? அவர் நடத்துவது கோசாலை அன்று. கோ-சானிடோரியம். காயம் பட்ட, உடல் ஊனமுற்ற, சொந்தக்காரர்களால் கைவிடப்பட்ட ஆநிரைகளை வைத்து அவைகள் உடல் சொஸ்தம் ஆகும் வரையிலும் வைத்துப் பாதுகாக்கிறார். உடல் நலம் அடைந்தவுடன் சொந்தக்காரர்கள் கேட்டால் மாடுகளைத் திருப்பித் தந்துவிடுகிறார். சில நேரங்களில் உடல் நலமில்லா மாடுகளுக்குப் பதிலாக நல்ல நிலையில் உள்ள மாடுகளையும் அளிக்கிறார். ‘மாடுகள்ளாம் கோசாலைல இருக்கலாமா? வீடுகள்ல தான் இருக்கணும்’ என்று பஞ்ச் டயலாக் வேறு. 

இந்த நவீன விவேகானந்தர் படிப்பு வராமல், வேறு வழி இல்லாமல் இந்த வேலையைச் செய்யவில்லை. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பயின்று, வேலை செய்து, தர்ம பரிபாலனமே உயர்வானது என்பதை உணர்ந்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் திரும்பிக் கோசம்ரக‌ஷணை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவருக்குத் தற்போது வயது 30.    

அன்னாருடன் ஒரு நாள் செலவிட எண்ணி ஶ்ரீரங்கம் சென்றிருந்தேன். பெருமாள் சேவை முடியும் முன்னர் கைப்பேசியில் அழைப்பு. ஶ்ரீரங்கத்திற்கு அருகில் மேலூர் சாலையில் ஒரு தோப்பில் பசுமாடு ஒன்றுக்கு முன்னங்கால்கள் இரண்டும் முறிந்துவிட்டன, உடனே வரவும் என்று செய்தி. விரைந்தோம். 

நெஞ்சை உலுக்கும் காட்சி. முன் கால்கள் இரண்டும் முறிந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் பசு வெயிலில் படத்திருக்கிறது. அச்சமின்றித் தொட்டுத் தூக்குகிறார். உடனே அப்பகுதியில் கால் நடை  மருத்துவரை அழைக்கிறார். அவரும் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு வந்து மாட்டைக் கவனிக்கிறார். வலி குறைய ஊசி போடுகிறார். ‘இதுக்கு வைத்யம் நாமக்கல் காலெஜில தான் முடியும். ஒரு கால்னா ப்ளேட் வைக்கலாம். ரெண்டும் போயிருச்சு. வெட்டிட்டு கட்டைக் கால் வெக்கணும்’ என்று அறிவுரை வழங்கும் அவர், மாட்டுச் சொந்தக்காரர் தந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல் செல்கிறார். இத்தனைக்கும் அரசு மருத்துவர். அடுத்த சில நிமிடங்களில் மாடு உறங்குகிறது. கன்று பால் குடிக்க மடியில் வாய்வைக்கிறது. நம் மனம் வலிக்கிறது.

அடுத்த அரை மணி நேரத்தில் 25 செல் பேச்சுகள். பலரையும் தொடர்புகொண்டு மறு நாள் காலையில் பசுவை நாமக்கல்லுக்கு ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்கிறார். மாட்டின் சொந்தக்காரர்களையும் அதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார். ‘எங்க வீட்டுல ஒரு உறுப்பினர்ங்க மாடு. அதுக்கு என்ன வேணா செய்யலாம்’ என்று கண்ணிர் மல்கக் கைகூப்புகிறார் சொந்தக்காரர்.

மாடு படுத்திருக்கிறது. நீர் வைக்கிறார்கள். அருந்த மறுக்கிறது. வெயிலின் கொடுமை வேறு. கன்று தாயை நக்கிக் கொடுக்கிறது. தாய் கன்றைக் கருணையுடன் பார்க்கிறது. மவுனப் பரிமாற்றம் நடக்கிறது.

நான் அவருடன் வீடு திரும்புகிறேன். உணவுக்குப் பின் என் நண்பரும் நாட்டு மாடுகளின் காதலருமான திருச்செங்கோடு கொக்கராயன் பேட்டை சசிகுமாரை அழைக்கிறேன். அடுத்த 3 மணி நேரத்தில் ஶ்ரீரங்கத்தில் வந்திறங்குகிறார் சசிகுமார். அவருடன் கோசாலை செல்கிறோம். மணவாள மாமுநிகள் திருவரசை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் உள்ளது கோசாலை.

‘திமில்’ நூலில் ஆசிரியரான சசிகுமார், வீரராகவனைப் பேட்டியெடுக்கிறார். நான் குறிப்பெடுக்கிறேன். 

வீரராகவன் சொல்வது: 

‘மாடுகள் தாமாகச் சென்று மேய்ந்து வர 4-5 ஏக்கர் மேய்ச்சல் நிலம். மாடுகளை ஒரே இடத்தில் அமர்த்தி உணவு கொடுத்தால் அவற்றுக்கு மேலும் உடல் உபாதைகளே வரும். அவை நடை பயில வேண்டும். இதுவரை 120 மாடுகளைக் காப்பாற்றியுள்ளோம். சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு ஊனம் அடையும் மாடுகள் அதிகம் காப்பாற்றப் பட்டுள்ளன. வீடுகளில் உள்ள மாடுளுக்கு நோய் ஏற்பட்டால், அவற்றைக் கவனிக்கச் சொந்தக் காரர்களால் இயலவில்லையென்றால் அவற்றையும் நாங்கள் பாதுகாக்கிறோம். வெட்டுக்குப் போகாத வகையில் மாடுகளின் இறுதிவரை காப்பாற்றுகிறோம். 

மாடுகளிடம் இருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. பால் கறப்பதில்லை. ஒருவேளை மாடுகள் பால் கறக்கும் நிலையில் இருந்தால் அவற்றின் கன்றுகளே அவற்றைக் குடிக்கின்றன. நாங்கள் பால் வியாபாரம் செய்வதில்லை.

வேத அத்யயனம், கோ சம்ரட்சனை – இவை நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள். வேத அத்யயனம் செய்யவில்லை. மாடுகளையாவது பாதுகப்போமே என்று செயல்பட்ட வருகிறேன்.

முடியாத மாடுகள் தாமாக இறக்கும் வரை பாதுகாக்கிறேன். இவை அனைத்தும் ‘www.vedics.org’ என்னும் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.’

நாம் செய்யக் கூடியவை யாவை? 

வீரராகவன் நம் ஹிந்து சமுதயத்தின் முக்கிய ஒளி. அந்த ஒளிக்கு நாம் எண்ணெய் வார்க்க வேண்டும். சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. ‘நான் இராமானுசன்’ நூல் விற்பனையில் ஒரு பகுதியை வேத சம்ரக்ஷணத்துக்கும், மீதியை இவரது கோசாலைக்கும் அளித்திருந்தேன். இன்னும் ஒரு முறை அவ்வாறு செய்திருந்தேன். சிறிய கைங்கர்யம் தான் என்பதை உணர்கிறேன். இதைப் படிப்பவர்கள் மேலும் உதவிகள் செய்யலாம். நூலாசிரியர்கள் தங்கள் நூல்களின் விற்பனைத் தொகையில் ஒரு பகுதியை கோசாலைக்கு அளிக்கலாம். மாதத்திற்கு இவ்வளவு என்று ஒதுக்கி, ஆண்டின் இறுதியில் ஒரு பெரும் தொகையாக அளித்து உதவலாம். வைக்கோல், புண்ணாக்கு, வேப்பெண்ணெய் என்று தந்து உதவலாம்.

அவரது மாடுகளுக்கு மேய்ச்சல் வெளி தேவை. நிலம் இருப்பவர்கள் அளிக்கலாம். குறைந்த விலைக்கு விற்கலாம்.  தங்களின் பிறந்த நாள், பிள்ளைகளின் பிறந்த நாள் என்று கணக்கு வைத்து மாடுகளுக்கான செலவைத் தந்து உதவலாம். பெரியோரின் ஈமக்கிரியைகளில் கோதானம் என்று உண்டு. அதனை இவரது கோசாலைக்கு அளிக்கலாம்.  விடுமுறைகளில் பிள்ளைகளை அவரது கோசாலைக்கு அழைத்துச் சென்று கன்றுகளுடன் பழகவிடலாம். நமது பாரம்பர்யத்தின் தொடர்ச்சிக்கான முதல் படி அது.

இவர் www.pracharam.in என்ற தளத்தின் மூலம் சம்பிரதாயம் செழிக்க நூல்கள் வெளியிடுகிறார். குழந்தைகளுக்கு வகுப்புகள், ஒன்றிணைவுகள் செய்துவருகிறார். இவரை அழைத்து Summer Camp முதலிய செய்யலாம். 

இவரே முன்னர் அடியேனுடன் ஜடேரிக்குப் பயணித்து அங்குள்ள திருமண் தயாரிப்பாளர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து திருமண் பெற்று, விற்பனை செய்து, லாபத்தை ஜடேரி மக்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

சில காணோளிகள் இங்கே: 

 

 

 

பி.கு.: 1. தனது கணவரின் இந்தப் பெரும் சேவைக்கு உறுதுணையாக உள்ள ஶ்ரீமதி. ஜானகி வீரராகவன் நமது வணக்கங்களுக்கு உரியவர். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவரும் கோசம்ரக்‌ஷணத்தில் ஈடுபட்டிருப்பது போற்றுதலுக்குறியது. 

2. நாமக்கல் கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளதால், பசுமாட்டைத் தனது கோசாலையிலேயே வைத்து அறுவை சிகிச்சையும் செய்துள்ளார் அவர். முன்னங்கால்கள் இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. தற்போது மாடு தேறிவருகிறது.

வீரராகவனை இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம்:  +91 9655219245

பிற சுட்டிகள்:

Home

ஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்

சொல்லொணாத் துயரம் வரழைத்த நிகழ்வு. கடும் கண்டனமும் தண்டனையும் அளிக்கப்பட வேண்டிய செயல். கன்னியாஸ்திரீகள் ஶ்ரீரங்கம் கோவிலுகுக்குள் சென்று ஜெபம் செய்ய முயன்றுள்ளார்கள் என்னும் செய்தி உண்மையெனில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டின் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.சமூக,மத நல்லிணக்கம் ஒருபோதும் ஒருகை ஓசையன்று.

சென்ற வாரம் தஞ்சையில் பெருவுடையார் கோவில் உற்சவத்தில் கலகம்,இன்று இவ்வாறு ஒரு நிகழ்வு.எஸ்றாசற்குனம் முதலான அரசியல் ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.அப்பேச்சுக்களைஉண்மையென நம்பி சாதாரண மக்கள் செயலில் இறங்கினால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கே.

கோவிலில் யாராகிலும் இவர்களிடம் (உணர்ச்சி மேலீட்டால்)வன்முறையில் இறங்கியிருந்தால், பெண்களிக்கெதிரான வன்முறையென்ற பழி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக விரோதக் கும்பல்கள் நினைத்திருக்கலாம்.கலகத்தால் குளிர் காயும் கயவர் நிறைந்த பூமியாகத் தமிழகம் மாறிவருவது வேதனையே.

32085064_211754902962830_4386972728205246464_nஶ்ரீரங்கம் நிகழ்வில் கோவில் என்று தெரியாமல் வந்துவிட்டோம் என்பதாக அப்பெண்கள் சொல்லியிருக்க மாட்டார்களாஎன்று ஒரு பக்கம் மனம் விரும்புகிறது.ஆனால் எஸ்றாசற்குணம் முதலான சமூக விரோத நபர்களைத் தலைமைப் பீடத்தில் கொண்ட சமூகம் ஆழம் பார்க்கப் பயன்படுத்தப் படுகிறதோ என்கிற எண்ணம் உள்ளத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சமய நல்லிணக்கம் தேவையென்பதால் கன்னியாஸ்திரீகள் கோவிலின் உள்ளே சென்றால் என்ன என்று பகுத்தறிவாளர் கேட்கலாம்.துலுக்க நாச்சியார் சன்னிதி இருப்பது உண்மைதான்.ஆனால் அது பக்தியால்,தியாகத்தால் ஏற்பட்ட சன்னிதி.அதற்கு நெடியதொரு வரலாறு உண்டு. துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் கைலி உடுத்திக்கொண்டு,ரொட்டி கண்டருளப் பண்ணுவது என்று ஒரு உற்சவமும் உண்டுதான்.ஆனால் அதில் தன்னைஅர்ப்பணித்த தியாகம் உள்ளது,ஆச்சாரியர்களின் அனுமதியுடன் ஆயிரம் ஆண்டுகளாக அது நடந்து வருகிறது.

இன்றைய கன்னியாஸ்திரிகள் செயல் அவ்வாறானதன்று. மதத் தலைவர்கள்,மிகுந்த பொறுப்புடனும்,எச்சரிக்கையுணர்வுடனும்,சமூக நலனில் அக்கறைகொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.

பல்சமய சகிப்புத் தன்மையைச் சோதித்துப் பார்க்கும் நேரம் இதுவன்று.

சிங்கப்பூரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு-Racial harmony was not attained in a day. பல தலைவர்கள் பல்லாண்டுகள் உழைத்து மக்களிடம் ஒற்றுமையையேற்படுத்தினார்கள்.ஆனால் சிறு பொறியும் பெரும் தீயாகப் பிடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு என்பதால் பெரும் பதவிகளிலும்,அதிகாரத்திலும்,சமயத் தலைமைஇடங்களிலும் இருப்பவர்கள் அளப்பரிய பொறுப்புடன் பேசுவார்கள்,நடந்துகொள்வார்கள். ஏனெனில் ஒற்றுமை,அமைதி இல்லையெனில் பெரும் வீழ்ச்சியேஏற்படும் என்பதைஅனைவரும் உணர்ந்திருப்பதால்.ஒரு சமூகம் முன்னேற இதுபோன்ற அணுகுமுறைஅவசியம்.இது தமிழகத்திற்கும் பொருந்தும்.

மாநிலத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவதற்குச் செய்ய வேண்டிய செயல்கள் பலதுண்டு.கலகம் விளைவிக்க ஓரிரு செயல்களே போதுமானது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,நம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.

%d bloggers like this: