பன்மொழி கற்போம் வாரீர்

மூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.

மாணவர்களே, தற்போது தமிழ்மொழிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது போன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பேசிவருவதை நீங்கள் கண்டிருக்கலாம்.

ஒரு மொழியில் பூரண தேர்ச்சி பெற்றவர்களால் பிறிதொரு மொழியை வெறுக்கவியலாது. மாறாக, தேர்ச்சி பெற்ற மொழியின் வழி மற்ற மொழிகளையும் அறிந்துகொள்ள தீவிர முனைப்பே ஏற்படும். அவற்றில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது பூரணமான கல்வியின் அறிகுறி.

நான் ஆங்கில வழியில் படித்தேன். தமிழ் இரண்டாம் மொழி. இந்தியும் பயின்றேன். பிற்காலத்தில் மராத்தி கற்றுக் கொண்டு பேச முடிந்தது. ஜப்பானிய மொழியில் பேசினால் புரியும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவிற்கு எழுதியதைப் படிக்கவும் முடிந்தது. (தற்போது பழக்கம் விட்டுப் போய்விட்டது). ஈராண்டுகள் முன்பு சீனம் பயில முயன்றேன். ரொம்பவும் கடினம். முடியவில்லை. விட்டுவிட்டேன். பல மொழிகளை அறிந்ததால் நான் பெற்ற பலன்கள் ஏராளம்.

ஆனாலும் தமிழ் தவிர இன்ன பிற மொழிகளைப் பயின்றதால் எனது தமிழறிவு மழுங்கிவிடவில்லை. தமிழில் இரு நூல்கள் எழுதினேன். ஆங்கிலத்தில் ஒன்று.

பல மொழிகள் தெரிவதால் மொழிகளின் சிறப்பையும் அழகையும் உணரமுடிகிறது. சுய புராணம் நிற்க.

எனது காலஞ்சென்ற பெரியப்பா ஸ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார் அவர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கம்பனில் ஊறியவர். 18 நூல்கள் எழுதியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் போதிய பாண்டித்யம் பெற்றவர். ஆங்கிலத்தைப் பட்டறிவால் அறிந்துகொண்டவர். மணிப்பிரவாளத்தைத் தனது சொந்த முயற்சியால் தெளிந்தவர்.

தனது இராமாயண உபன்யாசத்தில் வால்மீகி, கம்பன், ஆழ்வார்கள், ஆங்கில உரையாசிரியர்களின் கருத்துகள் முதலியவற்றை ஒப்பிட்டுப் பேசி வந்த அவர், துளசி ராமாயணம் புரியவேண்டும் என்பதற்காகத் தனது 55வது வயதில் இன்னொரு ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனது உரைகளில் துளசி, கபீர் தாசர் என்று அவர்களையும் கொண்டு வந்தார். ‘மிதிலையில் மூவர்’ என்னும் தலைப்பில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் காட்டும் மிதிலை நிகழ்வுகளை அருமையாகச் சித்தரிப்பார். பின்னர் ‘திரிவேணி இராமாயணம்’ என்றும் ஒப்பாய்வு உரைகளை நிகழ்த்தினார்.

இவை போதாதென்று, தியாகையர் கிருதிகள் புரிய வேண்டும் என்பதால் அவ்வப்போது தெலுங்கு பேசும் வைஷ்ணவப் பெரியவர்களிடம் பேசி, தெலுங்கு கீர்த்தனைகளின் பொருளை உள்வாங்கிக் கொண்டார். தியாகராஜ கீர்த்தனைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் நீண்ட நாட்கள் படித்துக் கொண்டிருந்தார்.

தனது இறுதி நாட்கள் வரை சம்ஸ்க்ருதத்தில் முனைவர் பட்டம் வாங்கவில்லை என்கிற ஏக்கம் இருந்தது தெரியும். அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. இறுதிவரை வால்மீகி, நாராயண பட்டத்ரி, கம்பன், ஆழ்வார்கள் என்றே அமரரானார்.

‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்’ என்று திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்க்காரர்களைப் பற்றிச் சொன்னதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் அப்பெரியவர்.

மூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.

தனித்து நிற்பதால் தாழ்மையுணர்ச்சி ஏறபடுகிறது. இல்லாததை எல்லாம் கற்பனை செய்ய வைக்கிறது. இதில் இருந்து விடுபடுவது மாணவர்களாகிய உங்களுக்கு நல்லது. அதற்கு மூன்றாவது மொழியாகக் ஹிந்தியை வாசியுங்கள்.

மூன்றாவதாக இந்திய மொழியே வேண்டாம் என்றால், வழி இருக்குமாமால் சீனம் பயிலலாம். என்னுடைய விருப்பம் ஜாப்பானிய மொழி. தமிழுடன் பல வகைகளில் ஒத்திருப்பதாக எனது சிற்றறிவிற்குப் படுகிறது.

ஆக, மொழி வெறி ஆகாது. மொழியின் பால் தூய காதல் இருப்பின், மற்ற மொழிகளை வெறுக்கவியலாது. தனது தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தை, பிறிதொரு தாயை வெறுப்பதுண்டோ ?

கேள்விகள் இருப்பின் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

#TNNEEDSHINDI

தமிழரும் மலைப்பாம்பும்

ஹிந்தியில் சமூக வலைதளச் செய்திகள் அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வந்தாலும் வந்தது, உலகளாவிய தமிழர் பொங்கி எழுந்தனர். சிங்கப்பூர், மலேசியா, கனடா என்று கோபால் பல்பொடி விற்கும் இடங்களில் எல்லாமிருந்து கிளம்பியது பேரொலி. ஆஹா, என் தாய்த் தமிழை அழிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு என்று கிளம்பியது அலை ஓசை. முக நூல் போராளிகள் தூக்கினர் தங்கள் கீபோர்ட் ஆயுதத்தை.

எல்லாப் பக்கங்களில் இருந்தும் வாங்கியுள்ள அடியின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் பரிதவித்த கருணாநிதி,’ஹிந்தியை முன்னேற்ற சிந்தனை செய்யாதீர், இந்தியாவை முன்னேற்ற சிந்தனை செய்வீர்’ என்று அறிக்கை விட்டார். ( இந்த இடம் எழுதும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை ).

ஆனால் ஒன்று. கருணாநிதி கொஞ்சம் அடக்கித்தான் வாசித்துள்ளார் என்று தோன்றுகிறது. 2ஜி, கனிமொழி, தயாளு என்று ஏகப்பட்டது இருக்கிறது. எதற்குப் பகைத்துக் கொள்வானேன் என்று இருக்கலாம். அதைவிட சிந்தனைச் சிற்பி குஷ்பூ வேறு விலகிவிட்டார். இனிமேல் டி.வி.யில் ஆங்கிலத்தில் பேச யாரை அனுப்புவது என்ற குழப்பமாக இருக்கலாம்.

‘தூங்கும் சிறுத்தையை இடராதீர்’ என்று முழங்கினார் வைகோ. ‘புலி’ என்று சொல்லாமல் சிறுத்தை என்று சொன்னது ஏனோ என்று தெரியவில்லை. பகுத்தறிவுக் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். கூடங்குளமும் தற்போது முழு மூச்சில் செயல்படத் துவங்கி விட்டதால் அவருக்கும் ஏதாவது பேச வேண்டாமா ? இல்லைஎன்றால் ஏதாவது தமிழ் இலக்கியச் சொற்பொழுவு ஆற்றச் சொல்கிறார்கள். அவற்றில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் தொடாமல் பேச முடிவதில்லை. என்னதான் செய்வது ? கிடைத்தது இந்த ஹிந்திச் செய்தி.

இராமதாசு, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அன்புமணியின் பிற்கால நலனைக் கருத்தில் கொள்ள வேண்டாமா ?

காவிரி அன்னை அம்மா வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார். தனது பங்கிற்குத் திராவிட மானம் காக்க வேண்டாமா ?

ப.சிதம்பரம் கூட பேசியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமைச்சர் வேலை இல்லை என்றால் எத்தனை நாள் தான் சும்மா இருப்பது ? அமைச்சராக இருந்தபோதே அப்படித்தானே இருந்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அப்போது அவர் சும்மா இல்லை. சிங்கப்பூர் வந்தார். மலேசியா சென்றார். பன்னாட்டு வங்கிகளுடன் பேசினார். குஜராத்தைத் திட்டித் தான் பணியை ஆற்றினார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன ?  மோடி அரசி ஹிந்தி தான் தகவல் மொழி என்று அறிவித்து விட்டதா ? அப்படி அறிவுக்க முடியுமா ?

முடியாது. 1963-ல் நேரு கொண்டு வந்த சட்டத்தின் படி, ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாத வரையில், ஹிந்தியை ஒரே தேசீய மொழியாக ஆக்க சட்டத்தில் வழி இல்லை. அது வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகவே தொடரும். என்னைப் பொறுத்தவரை இந்த நிலை மாறப் போவதே இல்லை.

சரி. இது தமிழக அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா ? என்று கேட்கலாம்.

அவர்களுக்கும் தெரியும். ஆனால் எப்போதுமே ஒரு பயம் காட்டிக்கொண்டே இருந்தால் தான் மக்களைத் தொடர்ந்து பயம் கலந்த மயக்க நிலையில் வைத்திருக்க முடியும். அதன்மூலம் இவர்கள் தொடர்ந்து காலட்சேபம் செய்ய முடியும். அதனால் தான் இந்த ‘அறிக்கை’ப் போர்கள். அக்கப்போர்கள் என்றும் சொல்லலாம்.

சரி. பா.ஜ.க. அரசு என்னதான் சொன்னது ? சமூக இணைய தளங்கள் மூலம் பேசும் போது அரசாங்க விவரங்களை ஹிந்தியில் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலம் பயன் படுத்தலாம் என்பதே அந்த அறிவுறுத்தல். இதன் மூலம் அரசு அறிவிப்புகள் ஹிந்தி மட்டுமே பேசும் பெரும்பாலான மக்களைச் சென்றடைய ஏதுவாகும். ஆனால் இதனால் அரசாணைகள், கெஜெட் (Gazette )  முதலியன பாதிக்கப்படாது.

இந்த உண்மை நிலை தெரியாதவர்களா தமிழர்கள் ?

நான் ஜப்பானிய மொழி கற்ற போது எனக்கு ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்கள். ஒரு ஆசிரியர் மட்டுமே ஜப்பானியர். ஜப்பானிய நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் இளைஞர்கள் பலர் ஜப்பானிய மொழி பேசுகிறார்கள். அதனால் தமிழ் அழிந்து விட்டதா ? தோக்கியொவில் என் உடன் பணியாற்றிய அனைத்துத் தொழில் நுட்ப வல்லுனர்களும் தமிழர்களே. அவர்கள் தோக்கியோ வந்த போது பெருமுயற்சி செய்து ஜப்பானிய மொழி கற்றார்கள்.

பிழைக்க உதவி செய்யும் எந்த மொழியையும் கற்கவே தமிழன் மட்டுமல்ல யாரும் விரும்புவர். சிங்கையில் நல்ல தமிழ் பேசும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் தனது பெயரை ‘பரணி’ என்று சொல்கிறார். தமிழ் கற்றதால் அவருக்கு ஆங்கிலம் மறந்துவிட்டதா ? அல்லது அவரது தாய் மொழி அழிந்து விட்டதா ?

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதி சொன்னானே. அவன் தமிழ் தவிர வேறு 7 மொழிகளில் விற்பன்னன். அவனது தமிழ் அழிந்ததா ?

ஒன்று சொல்லலாம். தற்போது கணினித் துறையில் ‘மலைப்பாம்பு’ என்று ஒரு மொழி உள்ளது. அதன் நிஜப்பெயர் Python  என்பது. அது போல் இன்னும் பல மொழிகள் C, C++, Java, SQL, C# என்று பலதும் உள்ளன. ஆக இவை அனைத்தையும் கற்பதை விட்டு விடலாமா  தமிழர்கள் ? மீண்டும் கற்காலம் செல்ல வேண்டியது தான்.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்களையும், கோவில்களையும், கல்வெட்டுக்களையும் காப்பதற்கு வக்கில்லை; கல்வெட்டுக்களைத் தலைகீழாக வைத்து சிமெண்ட் பூசுகிறார்கள். இவற்றைக் கேட்க நாதியில்லை; குஷ்புவிற்குக் கோவில் கட்டிய மூத்த குடி அல்லவா ? அதனால் தான் வந்துவிட்டார்கள் தமிழைக் காக்க.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி சொன்னான். தேவை துவேஷம் இல்லை. விவேகம்.

%d bloggers like this: