இராமானுசர் வந்திருந்த போது

கோபுர வாசல் சுவர்
கோபுர வாசல் சுவர்

என்ன அப்படியே நின்றுவிட்டீர்கள் ? மதிலைப் பார்த்து மலைத்துவிட்டீர்களா ? உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.

பிராகாரம்
பிராகாரம்

இது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.

குதிரை மண்டபம்
குதிரை மண்டபம்

இதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.

அதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.

புரந்தர தாசர்
புரந்தர தாசர்

இவர் யார் என்று பார்க்கிறீர்களா ? புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.

அட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே ! அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ! ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு !

அங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் ? குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது ? இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா ! அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் !

இல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.

நீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே ! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் ? அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் ? இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.

சுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .

அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்
அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்

‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் ! அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.

மேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் ! சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்
ஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.

ஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன ?

மூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.

சூக்ஷ்ம சொரூபமா ? என்ன பேச்சு இது ?

இராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா ? நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.

வயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே ? நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா ? அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது  வைணவம்.

தங்க விமானம்
தங்க விமானம்

என்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ?  சரி, எழுந்திருங்கள்.

என்ன நினைவு இது ? என்ன அருகில் யாரையும் காணோம் ? இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது ? நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே ? இராமானுசர் எங்கே? தேசிகர் எங்கே ? திருக்கச்சி நம்பிகள் எங்கே ? மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்களா ? அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா ? எந்த நூற்றாண்டு இது ?

திடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.

மெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.

கூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.

ஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ ?

கோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்
சேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…

சே, என்ன ஒரு ஹலூசினேஷன்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்

நியூ யார்க் அருங்காட்சியகம் சென்றிருக்க வேண்டாம் தான். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவரச் சென்றேன். சிட்டி வங்கி ஊழியன் என்பதால் இலவசமாக அனுமதி அளித்தார்கள்.

எகிப்திலிருந்து வந்திருந்த பல பண்டைய மன்னர்களின் மம்மி உருவங்கள், சமாதிக் கல்லறைகள் முதலியன தாண்டி சீன வரலாற்றுப பொருட்கள் கடந்து இந்தியக் கலைப் பொருட்கள் இருந்த இடம் நோக்கித் திரும்பினேன். அந்த அறை இருட்டாக இருந்தது. உள்ளே மனித நடமாட்டம் இல்லை. ஆனாலும் பேச்சுக்குரல் கேட்டமாதிரி இருந்தது. இருக்கட்டும் என்று உள்ளே சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடன் வரலாற்றில் கால் வைத்தது போல் இருந்தது. அறை இருளில் சில இடங்களில் மட்டும் ஒளியூட்டல் இருந்தது. ஒளியூட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அழகு திருமேனிகள். செப்புச் சிலைகள் அல்லது வெண்கலச் சிலைகள். எல்லாம் சோழர் கால வார்ப்புகள்.

Gnaanasambandhar

பார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்றேன். திருஞானசம்பந்தர் திரு உருவம். அம்மையிடம் ஞானப்பால் குடித்த அந்தக் குழந்தை இன்று அமெரிக்காவில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆடை இல்லாமல் நின்ற திருக்கோலம். தவக்கோலம் பூண்ட திருமேனியின் இன்றைய கோலம் அலங்கோலம். சிரித்த முகம். இடது கையில் பாலாடை என்னும் பால் புகட்டும் பாத்திரம் போல் தெரிந்தது. ‘செம்மொழி எல்லாம் வளர்த்த நீங்கள் இந்தப் பால யோகியை மறந்தீரே’, என்று கேட்டது போல் இருந்தது. கன்னத்தில் ஓர் அறை விழுந்த மாதிரி இருந்தது.

பால சன்னியாசிக்கு அருளமுதம் ஊட்ட வேண்டி அன்னை பார்வதியும் அருகிலேயே இருந்தாள். கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்த அவள் அபிராமி பட்டர் தற்போது தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா வந்துவிட்டேன் என்றாள்.

Siva & Parvathi

அம்மை இருந்தால் அப்பன் இல்லாமலா? அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன ? அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா ? முருகனும் இருக்கிறான் இருவருக்கும் இடையில்.

அட, மூத்த மகன் இல்லையா என்றால் அவன் சற்று தள்ளி நிற்கிறான். என்ன இருந்தாலும் இளைய பிள்ளை செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒரு மகானுபாவன் 10 சென்ட் நாணயம் வைத்துச் சென்றிருக்கிறான். அதற்கு சந்தோஷப்பட்டுப புன்னகையுடன் நிற்கிறான் கணபதி.

தெய்வங்கள் இருந்தால் அடியார் இருக்கமாட்டாரா ? தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் ? அவரும் இருக்கிறார்.

Kaaraikkaal Ammaiyaar

இவர்கள் அனைவரையும் கவனித்தபடி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் எம்பெருமான் நாராயணன்.Perumaal

‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’, சங்கோடும் சக்கரத்தோடும் அபய ஹஸ்தத்தோடும் சாந்த மூர்த்தியாய் நிற்கிறான் தனியாக. மூன்று வேளை ஆராதனமும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வருடாந்திர உற்சவங்களும் காணாமல், ஒரு வேளை கூட அமுது இன்றி இன்னும் நின்றுகொண்டிருக்கிறான் எம்பெருமான்.

வார்ப்பில் தெரிகிறது இவன் எங்கள் ஊர்ப்பக்கம் தான் என்று. பிற்கால சோழர் வார்ப்பு. பிரயோக சக்கரம் உபயோகத்திற்குத தயாராகத தெரிகிறது. ஆனால் என்ன ஊர் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திவ்ய தேசமாக இருக்கலாம். ஏதோ திவ்யதேசத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் இவர். சிலையின் கீழ் உற்சவங்களின் போது புறப்பாடு செய்யப் பயன்படும் வகையில் பீடம் அமைந்துள்ளது.

purappaadu

வேலைக்காக பட்டாச்சாரியார்களும் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போனதால் பெருமாளும் அவர்களைத் தேடிக்கொண்டு நியூ யார்க் வந்து விட்டானோ என்று நினைத்தேன். ஆனால் பெருமாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதே மௌனம் தான். ஏதோ கோபம் போலும் தெரிந்தது.

கோவில் ஒழுகில் இராமானுசர் என்ன உற்சவங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரோ அவற்றில் ஒன்று கூட இல்லாமல், ஒரு வேளை தளிகை கூட இல்லாமல் தனியாகப் பல நூறு ஆண்டுகளாக நின்றுகொண்டிருப்பதால் கோபம் வராமல் என்ன செய்யும் ? என்றும் நினைத்தேன். ஆனால் மனம் தாளவில்லை. ஒரு காரியம் செய்தேன்.

Me with Lordஆவது ஆகட்டும் என்று பெருமாள் அருகில் நின்றுகொண்டேன். கையைக் கூப்பிக்கொண்டு தேரழுந்தூர் பாசுரங்கள் ( ‘தேமருவு பொழிலிடத்து.., செங்கமலத் திருமகளும் புவியும்…, திருவுக்கும் திருவாகிய செல்வா.., தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ … ) பாடி னேன். கண் திறந்த போது என்னைச் சுற்றி ஒரு சிறு கூட்டம். சீனர்கள், அமெரிக்கர்கள் என்று 7-8 பேர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பழியைத துடைத்த பெருமிதம் எனக்கு. பெருமாளைப் பார்த்தேன். புன்முறுவல் போல் தெரிந்தது. எந்த நூற்றாண்டில் இவர் இப்பாசுரங்கள் கேட்டாரோ தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டில் கேட்டுவிட்டார். நானும் ஆழ்வாரானேன். அமெரிக்காவும் திவ்யதேசமாகியது.

கூட்டம் என்னையே பார்த்தது. நான் பெருமாளைப் பார்த்தேன். ‘என்னால் உன்னைப பாரதம் கொண்டு செல்ல முடியாது. கையாலாகாத பாவி நான். என்னால் முடிந்தது பாசுரம் பாடுவது தான். எனவே என்னை மன்னித்தருள்வீர் பெருமாளே’, என்று வேண்டியபடி நின்றிருந்தேன். ஒரு அமெரிக்கர் படம் எடுத்தார்.

Yoga Narasimharகூட்டம் ஒரே இடத்தில் இருப்பது பார்த்த அருங்காட்சியக அதிகாரி ஒருவர் விசாரிக்க வந்தார். அதற்குள் நான் ‘யோக நரசிம்மர்’ சந்நிதிக்குச் சென்று விட்டேன். ஆமாம் அவரும் இங்கு தவக்கோலத்தில் இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில் இருந்து ‘சாணிலும் உளன் ஓர் அணுவைச சத கூரிட்ட கோணிலும் உளன்..’ என்ற பாடலையும், ‘ஆடியாடி அகம் கரைந்து ..’ என்ற திருவல்லிக்கேணி பாசுரத்தையும் பாடினேன். அதிகாரியும் பார்த்தபடி நின்றிருந்தார்.

விட்டு வைப்பானேன் என்று சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடம் சென்று ‘பொன்னார் மேனியனே..’ பதிகம் பாடினேன். அதிகாரி ஒன்றும் சொல்லவில்லை.

அந்த அதிகாரியிடம் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒரு திருமால் சிலையில் சக்கரம் இடம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்தச் சிலையையும் வெண்கலப் பெருமாள் சிலையையும் ஒப்பிட்டுக்காட்டி விளக்கினேன். அவர் குறித்துக் கொண்டார். ‘I am not an authority on these sculptures. But as you are a native of India, I take note of this and would make a report to the authorities’, என்று எழுதிச் சென்றார்.

அனாலும் பெருமாளின் இந்த இழி நிலை மனதை விட்டு நீங்க வில்லை. மீண்டும் ஒரு முறை வலம் வந்து பல படங்கள் எடுத்தேன். இதைக் காண்பவர்கள் யாராகிலும் உங்கள் ஊரில் பெருமாள் சிலைகள் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதா என்று சரி பார்க்க வேண்டுகிறேன். இந்தச் சிலையை John D.Rockfeller ( ராக் பெலலர் ) என்னும் அமெரிக்க பெருஞ்செல்வந்தர் இவ்வருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. நம்மூரில் பெருமாளை விற்றவர் யார் என்று பார்த்தால் 40 ஆண்டுகளுக்குள் பதவியில் இருந்தவர்களில் யாராவது ஒருவராக இருப்பார்கள்.

40 வருட திராவிடக் கட்சிகளின் அழிச்சாட்டியத்தில் நமது பாரம்பரியம் கொள்ளை போனது. நமது வரலாறு நம் கண் முன்னே மெள்ள மூழ்கி அழிந்தது. நாம் மௌன சாட்சிகளாக இருந்தோம். வரலாறு அழிக்கப்பட்ட போது வேறு பக்கம் பார்த்தோம். ஒன்றும் நடவாதது போல் சினிமாவில் மூழ்கி இருந்தோம். சரோஜா தேவியும் தேவிகாவும் நமது இச்சைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் காதல் செய்ய விட்டு நமது சுய இச்சைகளை நிவர்த்தித்துக் கொண்டோம். ஆண்மை இழந்து நிற்பதை ஒரு பெருமையாகப் பேசினோம். அதற்கு ‘பகுத்தறிவு’ என்று பெயர் வைத்தோம். அல்லது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டு மூலையில் முடங்கினோம். ஆங்கிலக் கல்வி பயின்று அடிமாடுகளாக நிற்பதை ‘செக்யூலரிசம்’ என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டோம்.

ஜெயமாலாக்களின் மேனி வனப்பின் சூடு தணியும் முன்னர் சில சிலுக்குகளுக்குத் தாவினோம். ‘நேத்து ராத்திரி அம்மா’வைப பிள்ளைகள் முனகியபடி பாடக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தோம். வடிவேலுவின் உடல் சேட்டைகளையும் வட்டார வழக்கையும் நாம் பயன் படுத்துவதை ஒரு பெருமையாகப் பறை சாற்றினோம். நமீதாவின் உடலை அளவு எடுத்துக்கொண்டிருந்த போது அளவில்லாத நமது கலைச் செல்வங்கள் கொள்ளை போனது தெரியவில்லை. நயன்தாராவின் தொடர்புகளை ஆராய்ந்த போது நமது முன்னோருடன் நமக்கிருந்த தொடர்புகளை சிலைகள் திருட்டின் மூலம் இழந்தோம். சிம்ரனின் திருமணத்தில் நமக்கிருந்த அக்கறை சிலைகள் திருடுபோவதைத தடுப்பதில் இல்லை. குஷ்பூவிற்குக் கோவில் கட்டும் மும்முரத்தில் நமக்குக் காமாக்ஷியம்மன் கோவில் களவு போனது தெரியவில்லை. தமன்னாவின் கொள்ளை அழகால் நமது திருமால்கள் கொள்ளை போனது தெரிந்தும் வாய் மூடி இருந்தோம்.

‘கோமளவல்லி’ தாயார் நிலை தெரியாமல் ‘கோச்சடையான்’ பற்றிக் கவலை கொண்டோம். பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பாராமல் ‘விஸ்வரூபம்’  பிரச்சினை பற்றி அங்கலாய்த்தோம். 40 ஆண்டுகளாக மெதுவாக நபும்சகத் தன்மை ஊறப் பெற்றோம்.

இந்தக் காமாக்ஷிகளும், திருமால்களும் நியூ யார்க்கில் அடைக்கலம் தேடினர். இன்று நான் அவர்களை சந்தித்தேன். ஆறுதல் கூறிப பதிகம் பாடினேன்.

தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் : நியூ யார்க் வரும் போது உங்கள் மதம், சாதி முதலியன தூர வைத்துவிட்டு சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வாருங்கள். நமது தெய்வங்கள் முன்னர் சிறிது நேரம் நின்று மௌனமாக ஒரு பாசுரமோ பதிகமோ பாடுங்கள்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்.

நான் இராமானுசன் பகுதி 12

ஸரீரம் அஸக்தமாக இருப்பதாகவே நானும் உணர்ந்தேன். ரொம்ப நாழிகை வார்த்தை சொல்லியாகிவிட்டது. தத்துவ விசாரம், பாரத ஞான மரபுத் தேடல்கள் என்றால் நேரம் போவதே தெரிவதில்லை.

கூட்டம் கலைந்தது. மீண்டும் அடுத்த பௌர்ணமி அன்று ஸதஸ் * வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் அபிப்ராயப்பட்டனர். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதனால் ஒரு அறிவிப்பு செய்தேன்..

‘அடுத்த ஸதஸில் நாம் பாரத ஞான ஸம்பிரதாயத்தை மேலும் ஆராய்வோம். அது வரை பண்டிதர்கள் நமது மடத்திலேயே தங்கியிருந்து மடத்தின் ஓலைச் சேகரிப்பு பண்டாரத்தில் இருந்து வேண்டிய ஓலைச் சுவடிகளைப் பார்த்துக்கொள்ளலாம். பொது மக்களும் தங்கள் சந்தேகங்களை முன்னமேயே தெரிவிக்கலாம். பண்டிதர்கள் அவை குறித்தும் தயாராவார்கள். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் மற்றும் அவரது பரிவாரத்தினர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருக்கலாம்’.

ஸ்ரௌதிகள் தான் அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார்.

சாயங்கால அனுஷ்டானங்கள் முடிந்து அவற்றின் பின் ஸ்ரம பரிகாரம் செய்துகொண்டிருந்த போது கூரத்தாழ்வார் வந்திருந்தார்.

‘தேவரீர் ரொம்பவும் வருத்திக்கொள்கிறது. இந்த விவாதங்கள் இப்போது முடியப்போவதில்லை. சற்று ஓய்வாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று சொன்னார்.

‘சொல்வது சரிதான். ஆனால் ஆசார்யன் என்று ஒரு ஸ்தானம் வைத்துக்கொண்டு வழி சொல்லாமல் இருந்தால் எப்படி ? வேண்டிய மட்டும் அனைவரும் என்னிடமிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு நானே தடையாக் இருக்க முடியாதே கூரா..நாளை கருட சேவை. அரங்கன் கருட வாகனத்தில் எழுந்தருளப் போகிறான். இந்த வருஷம் நான் சேவிக்கிறேன். அடுத்த வருஷம் எப்படியோ. எனவே இருக்கும் போதே முடிந்தவரை எல்லார் சந்தேகங்களையும் தீர்த்துவிட வேண்டும்’, என்று சொன்னேன்.

கூரன் விழுந்து ஸேவித்துச் சென்றார்.

நெடு நேரம் உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் வந்து சென்றன. அத்வைத ஸித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதி சங்கரர் பௌத்த தத்துவத்தைஉம் தரிசனத்தையும் ஆழக் கற்று அதன் அடிப்படையிலேயே பௌத்த மதஸ்தருடன் வாதிட்டு பௌத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’ யில் பௌத்த மத கோப்புகள் உள்ளன. ‘சங்கர பாஷ்யம்’ பௌத்த ஸம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தது. இவரை ‘பிரஸன்ன பௌத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர்.

இளம் வயதில் என் முதல் ஆச்சார்யர் யாதவப் ப்ரகாஸர் அத்வைதியே. பெரும் ஞானஸ்தர். ஆனால் கொஞ்சம் முன்கோபி. ஆச்சாரிய நிந்தனை கூடாது தான். ஆனால் அவரது எண்ணங்கள் சரியானவை அல்ல. தனது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்பதில் அவர் உறுதியாயிருந்தார். ஆனால் நமது ஸம்பிரதாயம் எப்போதுமே வாதம், பிரதிவாதம், ஞான விசாரம் முதலியனவற்றை ஆதரித்தே வந்துள்ளன. ஒருபோதும் ஒரே கருத்தே முழுமை, உண்மை என்பது தவறு. உண்மை என்று தோன்றுவது சிறிது காலம் கழித்து உண்மை இல்லை என்று நிரூபணமாகும். பிறிதொரு தத்துவம் தோன்றும். பின்னர் அதுவும் மறையும். ஆனால் பிரும்மம் ஒன்று மட்டுமே மாறாது. இதுவே நமது பாரத சம்பிரதாயம்.

இன்று நடந்த ஸம்பாஷணைகள் மனதில் தோன்றின. ‘மீமாம்ஸை’ பற்றிக் கவனம் திரும்பியது. ஸ்ரௌதிகள் ‘ மோக்ஷம் பெற மீமாம்ஸங்களில் உள்ள வேள்விகள் தேவை இல்லையா?’ என்று கேட்டிருந்தார். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு ? மீமாம்ஸையில் எந்தெந்த பலன் வேண்டி எந்தெந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. எல்லாமே வேள்விகள் தான். மனிதனுக்கு என்ன தேவை என்றாலும் ஏதாவது ஒரு வேள்வி செய்தால் அந்த வேள்விக்குரிய தெய்வம் பிரத
யட்சம் ஆகும். அந்தந்த பலன்களை அளிக்கும். தெய்வங்களும் யாகத்துக்குக் கட்டுப்பட்டவை. அப்பலன்கள் ‘அபூர்வம்’ என்று அழைக்கப்படும். அபூர்வம்’ என்பது ‘பூர்வம் இல்லாதது’, ‘ முன்னே இல்லாதது’ என்று அர்த்தப்படும். ஆக, பலன்கள் வேண்டி செய்ய வேண்டிய யாகங்களைச் செய்தால் அந்தந்த தெய்வங்கள் அபூர்வமான பலன்களை அளிக்கும். இதுவே மீமாம்ஸையின் சாரம்.

இதற்கும் அத்வைதத்திற்கும் சம்பந்தம் என்ன ? ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ? ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் ? அவச்யமே இல்லையே. எனவே மீமாம்ஸை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்களுக்கு ?

இந்த தெய்வங்கள் எல்லாம் தேவை என்றால் அப்புறம் அத்வைதம் என்ன ? ஓருண்மை என்ன ?  ஏகான்ம வாதம் என்ன ? அதெப்படி தத்துவம் ஒன்றாகவும் வழிமுறை வேறாகவும் இருக்க முடியும் ? தத்துவம் என்னவென்றால் ஓருண்மை, இரண்டில்லாதது என்பது. ஆனால் நடைமுறையோ பல தெய்வ வழிபாடு, இவ்வுலகத் தேவைகளுக்காகப் பல தெய்வ வேண்டுதல்கள், அதற்காக மீமாம்ஸை வேறு வேண்டுமாம்.

மீமாம்ஸை சொல்வது என்ன ? கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் – இவை தானே மீமாம்ஸைகளில் உள்ளவை ? செயல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன ? அவற்றின் தெய்வங்கள் யாவர் ? வேள்விகளின் போது ஓதவேண்டிய மந்திரங்கள் என்ன ? பலன்கள் என்ன ? இவை தானே பூர்வ மாமாம்ஸை என்பது ?

செயல்கள் அவற்றின், மூலம் நாம் அடையும் பலன்கள் – இவற்றை வலியுறுத்துவதால் இதன் பெயர் கூட ‘கர்ம மாமாம்ஸை’ என்று வழங்கப்படுகிறதே. பலன்கள் இந்த உலகத்தில் கிடைப்பதால் அந்தப் பலன்களும் மாயை தானோ ? மாயை என்பதால் அந்தப் பலன்களே தேவை இல்லையே. பலன்கள் தேவை இல்லை என்றால் அவற்றிற்கான தெய்வங்கள் தேவை இல்லை,வேள்விகள் தேவையே இல்லையே. இவை எதுவுமே தேவை இல்லை என்றால் பூர்வ மீமாம்ஸையே தேவை இல்லையே.

மீமாம்ஸையில் பிரும்மத்திற்கே ஏற்றம் இல்லை. அத்வைதியானால் மீமாம்ஸகராக இருக்க முடியாது; மீமாம்ஸகரானால் அத்வைதியாக இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க, அத்வைதிகள் மீமாம்ஸை பின்னர் செல்வது ஏன் ?

அடிப்படையே ஆட்டம் காண்கிறதே !

இப்படியே பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

கூரன் வந்து எழுப்பியவுடன் தான் பொழுது விடிந்து இருப்பதை உணர்ந்தேன்.

————————————————————————————

ஸதஸ் — கூட்டம், சபை, வாதம் நடக்கும் இடமும் வாதமும்.

நான் இராமானுசன் பகுதி 11

‘நான் இராமானுசன்- பகுதி 10′

‘நான் இராமானுசன்- பகுதி 9′

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7′

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5′

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3′

‘நான் இராமானுசன்- பகுதி 2′

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

நான் இராமானுசன் – பகுதி 11

பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலான நூல்களின் மேல் நம்பிக்கை இல்லையா ? அவற்றில் உள்ள வேள்விகள் பற்றிய ஞானம் தேவை இல்லையா ? அவை எதுவுமே வேண்டாமா ? அவை இல்லாமலேயே மோக்ஷம் கிட்டுமா ? என்றெல்லாம் கேட்டிருந்தார் ஸ்ரௌதிகள்.

மீமாம்ஸங்கள் எல்லாம் இருக்கட்டும். அவற்றில் என்ன இருக்கின்றன என்ற ஞானம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது ? அவற்றில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் பரப்பிய புரளிகள் எத்தனை ? அவற்றை சங்கரர் களைந்த விதம், ஆழ்வார்கள் செய்த தொண்டு , அவர்கள் வழி காட்டிய மோக்ஷப் பாதை, அதன் பின் வந்த நாதமுனிகள் ஆற்றிய பணி – இப்படி எவ்வளவோ தூரம் கடந்து விட்டோம். ஆனாலும் இவர்கள் மீமாம்ஸங்களிலேயே உள்ளனரே ? என்று எண்ணினேன்.

மீமாம்ஸங்களுக்குள் போவதற்குள் பாரத சிந்தனை வெளியில் எவ்வளவு ஆழம் உள்ளது என்று நம் மக்கள் அறிந்துள்ளனரா என்று எனக்கு சந்தேகம் உண்டு. வேதங்கள் மட்டுமே பிரமாணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று நம்மில் யாராவது கேட்டுள்ளனரா என்றும் எனக்குச் சந்தேகம் உண்டு. அவ்வாறு கேட்ட பௌத்தமும் ஜைனமும் ஸார்வாகமும் போன இடம் தெரியவில்லையே என்று கேள்வி எழுப்பியவர்கள் எத்தனை பேர் ?

ஏதோ ஒரு தீர்க்கதரிசி ஒரு பாதையைக் காண்பித்தால் அதனையே பின்பற்றிக்கொண்டு செல்வதும், சில நாட்கள் கழித்து அவரை விடுத்து இன்னொரு தீர்க்கதரிசியின் பின்னால் செல்வதும் தான் ஆன்மீக விழிப்புணர்வா என்றும் இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரியவில்லை.

கேள்விகள் ஒரு காலத்தில் எழுப்பப்பட்டன. அதன் மூலமே உபநிஷதங்கள் தோன்றின. அவற்றின் மூலம் வேதங்கள் சொல்லும் ஆழ்ந்த பிரபஞ்ச அறிவில் சில வெளிச்சங்கள் தென்பட, மேலும் ஆழ விசாரித்தால் பல உண்மைகள் புலப்பட்டன. மேலும் மேலும் தோண்டிப் பார்த்து அவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ஆதியினை உணர முற்படுவது விஞ்ஞானம். அந்த ஆதியே பிரும்மம் என்றோ, இந்தப் பிரபஞ்சம் என்ற பருப்பொருளின் உணர்வு வடிவே பிரும்மம் என்ற எண்ணமோ ஏற்படுமாயின் அதுவே தத்துவ விசார வெற்றி, ஆன்மீகம்.

ஸ்ரௌதிகள் கேட்ட இன்னொரு கேள்வி என்னைத் தைத்தது. ‘ஸார்வாகன் நாஸ்திகன் இல்லையா?’ என்பதே அது.

நாஸ்திகன் என்பவன் யார் ? பிரும்மம் இல்லை என்பவனா ? அல்லது பிரும்மம் என்பது ஸர்வ வல்லமை படைத்தது என்று நம்ப மறுப்பவனா ? பிரும்மம் இல்லை என்பது வேறு; அது தேவை இல்லை என்பது வேறு அல்லவா ? ஆக எது நாஸ்திகம் ?

நாஸ்திகம் என்பது இருக்கட்டும். முதலில் ஆஸ்திகம் என்பது என்ன ? பிரும்மத்தை நம்புவதா ?

ஆஸ்திகம் என்பதன் வேர்ச்சொல் அஸ்தி என்பது அல்லவா ? ‘அஸ்தி’ என்றால் ‘இருப்பது’ என்பது. ‘இருப்பதை’ நம்புவது ஆஸ்திகம். ‘இருப்பதை’ உணர்வது ஆன்மீகம்.

இருப்பதை நம்பாதது ஒருபுறம் நாஸ்திகம் என்றால் இருப்பதை அறிய முடியாதது என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? அறிய வேண்டிய தேவை இல்லை என்பது அல்ல அது. அறிய முடியாது என்று நம்புவது அது. இருக்கிறது என்பதை உணர்வதும் ஆனால் இருப்பதை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வதும் தேடலின் ஒரு வழி தானே.

ஆனால் ஸார்வாகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ‘இருப்பது என்பதே இல்லை’ என்ற கொள்கை உடையவர்கள். கண்களுக்குத் தெரியும் இருப்பே இருப்பு. தெரியாதது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? கண்களுக்குத் தெரிந்து, உணர முடிந்து இருக்கும் பூதங்களின் கலவையினால் ஏற்படும் மாற்றங்கள் இந்த உலகப் பொருட்கள். அவையே சாஸ்வதம். அவை அழிந்தபின் இருப்பது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே கண்களுக்குத் தெரியாதவை நமக்குத் தேவை இல்லாதவை என்பதை விட அவை இல்லை என்பதே உண்மை. இது அவர்கள் சார்பு நிலை.

ஸார்வாகர்களின் நிலை ரொம்பவும் எளிமையானது. ஆனால் அந்த நிலை பௌதீக வாதம் மட்டுமே. கண்களுக்குத் தெரியாததால் சில விஷயங்கள் இல்லை என்றாகிவிடுமா?

பசும்பால் இருக்கிறது. அதிலிருந்து மோர், தயிர் முதலியன கிடைக்கின்றன. எனவே பாலைப் பார்த்து இதில் மோர் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது மோரையோ, தயிரையோ பார்த்து இதில் பால் இல்லை என்று சொல்ல முடியுமா ? அல்லது அவற்றினுள் நெய் இல்லை என்று ஆகுமா ? நெய் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் தயிரில் வெண்னெய், நெய் முதலியன இல்லை என்று தான் கூற முடியுமா ?

பால் காரணம். மோர், தயிர் முதலியன காரியம். அதே போல் தயிர் காரணம். வெண்ணெய் அதன் காரியம். வெண்ணெய் காரணம், நெய் காரியம். அது போல் இந்த உலகில் மனிதன் மற்ற உயிர்கள் மற்றும் ஜடப் பொருட்கள் காரியம் என்றால், காரணம் என்ன ?

தயிர் கடைந்தபின் வெண்ணெய் கிடைக்கிறது என்பதால் தயிர் இல்லை என்று சொல்ல முடியாதது போல மனித, மிருக உயிர்களும், ஜடப்பொருட்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கான காரணமும் இருந்தாக வேண்டும் அல்லவா ?

ஆக, ஸார்வாகர்களின் தத்துவம் முழுமையானதல்ல. ஒரு அளவிற்கு மேல் நம் சிந்தனை செல்லவில்லை என்பதால் சிந்தனைக்கு அப்பால் அறிவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆகுமா ?

உலகம் என்ற பருப்பொருள் உண்மை என்பதால் அதை நாம் உணர்வதால் அதனைக் காரியம் என்று கொள்வோம். உலகம் என்பது நம் அனைவரையும் சேர்த்தே சொல்கிறேன். ஆக, உலகம் காரியம். அதன் காரணம் என்ன ? ஸார்வாகர்கள் தத்துவப்படிப் பார்த்தால் காரணம் நம் சிந்தனைக்கு அப்பால் உள்ளது எனவே காரணம் என்பது இல்லை என்று கொள்ளலாமா ? அப்படிக் கொள்வது தவறு இல்லையா ?

அப்படியென்றால் பிரபஞ்சம் என்பது இல்லையா ? பிரபஞ்சம் பற்றிய நமது சிந்தனை விரிவு அடையவில்லை என்பதால் பிரபஞ்சம் என்பது இல்லை என்று ஆகிவிடுமா ?

பிரபஞ்சம் பற்றி நம்மால் முழுமயாக அறியவும், அதன் குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நமது சிந்தனைச் சக்தி போதாமையால், பிரபஞ்சத்தின் உருவகமாக ‘பிரும்மம்’ என்று கொள்கிறோம். பிரபஞ்சம் என்பது இன்ன அளவு கொண்டது என்று நம்மால் அறிய முடியாததால் பிரும்மத்திற்கு ‘அதை அளவிட முடியாது’ என்று ஒரு குணத்தைக் கற்பிக்கிறோம்.

பிரபஞ்சம் நமது பூமியையும் மற்ற கிரகங்களையும், சூரியனையும், மற்ற சூரியர்களையும், அனைத்து நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதால் அதற்குப் பேராற்றல் இருக்க வேண்டும் என்று எண்ணி பிரபஞ்சத்தின் உருவகமான பிரும்மத்திற்கு அளப்பறிய ஆற்றல் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதை பிரும்மத்தின் ஒரு குணம் என்று பிரஸ்தாபிக்கிறோம்.

இந்த சிந்தனை மரபே நமது தத்துவ ஞானம்.  இந்த ஞானத்தை அடைவதையே நமது பிறப்பின் குறிக்கோளாகக் கொள்கிறோம். கொள்ள வேண்டும்.

ஞானத் தேடல் இப்படி இருக்கையில், ஸ்ரௌதிகள் ஸார்வாகரை ‘நாலாம் வர்ணத்தவன்’ என்று இளக்காரமாகக் கூறியது என்ன வகையில் ஞானத்தின் வெளிப்பாடு என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.

‘ஸ்வாமி, தேவரீர் சரீரம் அஸக்தமாக இருக்கிறதா ?* சற்று ஸ்ரம பரிகாரம்* செய்துகொள்ளத் திருவுள்ளமோ ?’, என்று என் சிந்தனையைக் கலைத்தார் கூரத்தாழ்வார்.

———————————————————————–

சரீரம் அஸக்தமாக – உடல் நிலை சரி இல்லாமல்

ஸ்ரம பரிகாரம் – ஓய்வு எடுத்துக்கொள்ளுதல்

‘நான் இராமானுசன்- பகுதி 10’

‘நான் இராமானுசன்- பகுதி 9’

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7’

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5’

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3’

‘நான் இராமானுசன்- பகுதி 2’

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

நான் இராமானுசன் பகுதி 10

ஸார்வாகர் தலைவர் மேலும் பேசவில்லை. அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார் என்று தெரிந்தது.

ஆனால் ஸார்வாகர் கேள்விகள் தொடரத்தான் போகின்றன. அவற்றில் நியாயமும் இருக்கும்.

‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர்கள் கட்சி என்ன ? ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ? ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது? ‘ என்பது அவர்கள் வாதம்.

ஸார்வாகர்கள் புன்முறுவல் பூத்தனர்.

‘ஸ்வாமி, நீங்கள் வைதீக மதஸ்தரானாலும் எங்கள் பக்க நியாயம் பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியே’, என்று பேசினார் ஸார்வாகத் தலைவர்.

ஜைனத் துறவிகளும், யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளும் வியப்புடன் பார்த்தனர். ஒருவேளை குழப்பம் அடைந்தனரோ என்று கூடதோன்றியது.

மேலும் தொடர்ந்தேன்.

‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர் பக்கம் நான் சாயவில்லை. ஆனால் அவர்கள் கேள்வியின் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

அவர்கள் நமது வேதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா ?

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வேள்விகள் எல்லாவற்றையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏன் என்று யோசித்ததுண்டா ?

ஸார்வாகர்களை தூஷிப்பதன்* மூலம் அவர்களது கேள்விகளின் நியாயத்தை மறைக்க முடியாது என்று உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

ஸார்வாகர்கள் எதிர்ப்பது என்ன ? பிம்ப வழிபாடும் அதன் தொடர்பான சடங்குகளும். இவற்றை அவர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் வேதங்கள் உபதேசிப்பது உருவ வழிபாடு இல்லையே ! அதனால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

பிம்பங்கள் வைத்து வழிபட்டு, அதற்குப் பல ஏற்பாடுகளையும் ஆராதனைகளையும் ஏற்படுத்தி அதன் வழியேயும் செல்கிறீர்கள். ஆனால் அந்த நேரத்திலேயே, பிம்பங்கள் எல்லாம் மாயை, நாமும் மாயை, பரமாத்மா மட்டுமே உண்மை எனவே நாம் நம்மை உணர்வதே உண்மை ஞானம் என்றும் சொல்கிறீர்கள். இப்படி ஞான மார்க்கம் பேசும் அதே சமயத்தில் உருவ வழிபாடும் செய்ய வற்புறுத்தினால் அது என்ன நியாயம் ? பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா ? என்றெல்லாம் ஸார்வாகர்கள் கேட்கிறார்கள்.

சித்தாந்த ரீதியாகப் பார்த்தால் அத்வைத சித்தாந்தத்தில் விக்ரஹ ஆராதனை இருப்பது கூடாது. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே என்பதும் அவர்களது கேள்வியின் காரணம்’, என்றேன்.

‘காடுகளில் வாழ்ந்து, கபால ஓடுகளில் பிக்ஷை எடுத்து, எரிந்த பிணங்களின் சாம்பலைப் பூசிக்கொண்டிருக்கும் ஒரு நாலாம் வர்ண ஸார்வாகன் கேட்டது உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா ? தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா ? அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா ? அவன் நாஸ்தீகன் இல்லையா ?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.

ஸார்வாகர்கள் நிதானம் இழந்தது போல் பட்டது. மக்கள் திரளில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது. ஜைனத் துறவிகள் கலவரம் அடைந்தது போல் பார்த்தனர்.

கூரத்தாழ்வார் அர்த்தத்துடன் பார்த்தார். பராஸர பட்டன் வேகமாக எழுதிக்கொண்டிருந்தான்.

இத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் ஸ்ரௌதிகள் இப்படிக் கேட்டது எனக்கு வியப்பளித்தது.

என் நீண்ட வியாக்யானத்தைத் தொடங்கினேன்.

‘ஸ்ரௌதிகள் க்ஷமிக்க* வேண்டும். தங்களது அடிப்படையே தவறு.

வர்ணம் பற்றிப் பேசியுள்ளீர். அது பற்றி விளக்குகிறேன். அதன் மூலம் தங்களது சித்தாந்த ரீதியிலான தவறை உணர்த்துகிறேன்.

தேவரீர் பிரும்மம் பற்றிப் பேசினீர். நானே பிரும்மத்தின் துளி, பிரதி பிம்பம் என்றால், ஒரு பிரதி பிம்பத்திற்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏது ? ஒரெ மாதிரியான பல பிம்பங்களுக்குள் வேற்றுமை ஏது ?

ஆக, வர்ண பேதங்கள் எங்கிருந்து வந்தன இங்கே ? ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது ? பிரும்மத்திற்குள் வேறுபாடு உண்டா என்ன ?

உயர்ந்த பிரும்மம் தாழ்ந்த பிரும்மம் என்று உண்டா என்ன ?

ஆக, ஒன்று உங்கள் வாதம் தவறு. அல்லது அனைவரும் ஒன்று’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஸ்ரௌதிகள் சற்று வியப்புடன் பார்த்தார்.

‘அப்படியென்றால் பெருச்சாளியின் தோலை ஆடையாகக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் வாழும் இந்த ஸார்வாகனும், நீங்களும் ஒன்றா ?’, என்று கேட்டார்.

‘ஸந்தேகம் என்ன ? அவரது ஆத்மாவும், எனது ஆத்மாவும் ஒன்றே’, என்றேன்.

‘ஆனால் தேவரீர் பிராம்மணர் அல்லவா? நீங்களும் அத்வைத சம்பிரதாயத்தில் வந்தவர் என்பதை மறக்கவேண்டாம் ‘, என்று சற்று வேகமாகச் சொன்னார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் பிராம்மணரா ?’, என்று கேட்டேன்.

‘நான் பிராம்மணன் தான். முறையாக உப-நயனம்* ஆகி, வேதக் கல்வி பயின்றவன். அது சரி. ஸார்வாகன் விஷயத்திற்கு வாருங்கள். அவன் எப்படி நமக்குச் சமமானவன்?’, என்று சற்று முன்பை விட வேகமாகவே கேட்டார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, உப-நயனம் ஆகி, வேதக் கல்வி பயின்ற ஒரே காரணத்தால் நீங்கள் பிராம்மணர் அல்ல. யார் பிராம்மணன் என்ற கேள்விக்குப் பிறகு வருகிறேன்.

யார் பிராம்மணன் என்னும் கேள்வி பல காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. இன்னும் பல காலம் கேட்கப்படும். பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்படும். அது போலவே யார் க்ஷத்ரியன் என்பதும், யார் வைஸ்யன் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

‘ஸார்வாகரும் சரி, யாராக இருந்தாலும் சரி, ப்ரபத்தி என்ற சரணாகதி செய்துகொண்டால் அனைவரும் ஒன்றே. அவருக்கும் மோக்ஷம் உண்டு. அத்துடன் அதற்கு முன்னரே ஆத்ம அளவில் அளவில் அனைவரும் ஒன்றே. இதுவே விஸிஷ்டாத்வைத தத்துவம்’, என்றேன்.

‘வேதத்தின் முக்கிய பாகங்களான பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலியனவற்றில் உள்ள வேள்விகள் முக்கியம் இல்லையா ? வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு ? யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா ? நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே?’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.

வாதம் வேறு திசையில் செல்வது போல் பட்டது. ஆனால் மிக அவசியமான விஷயங்களை நோக்கிச் செல்வதாக உணர்ந்தேன்.

—————————————————————————————

தூஷிப்பது – இழிவு படுத்துவது.

உப-நயனம் – பூணூல் அணிவிக்கும் சடங்கு.

க்ஷமிக்க – மன்னிக்க.

நான் இராமானுசன் – ஒரு தொடக்கம்

நான் இராமானுசன் – பகுதி 1

நான் இராமானுசன் – பகுதி 2

நான் இராமானுசன் – பகுதி 3

நான் இராமானுசன் – பகுதி 4

நான் இராமானுசன் – பகுதி 5

நான் இராமானுசன் – பகுதி 6

நான் இராமானுசன் – பகுதி 7

நான் இராமானுசன் – பகுதி 8

நான் இராமானுசன் – பகுதி 9

நான் இராமானுசன் பகுதி 9

ஸார்வாகர்களின் தலைவர் கேட்ட கேள்வி கூட்டத்தை நிதானமிழக்கச் செய்தது. சிறிது சலசலப்புக்கள் தோன்றின.

ஸார்வாகர்கள் சித்தாந்தம் அப்படியானது. அவர்கள் மரபுப்படி கண்ணால் காண்பது மட்டுமே உண்மை. மற்றது பற்றிப் பேசுவது எல்லாம் வீண்.

இந்த சித்தாந்தக்காரர்கள் இன்று நேற்று அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது தேசத்தில் உள்ளனர். இந்தப் பரந்த பரத கண்டத்தில் யாருக்கும் இடம் உண்டு. யாரும் எந்தக் கொள்கையும் கொண்டிருக்கலாம். ஏனெனில் நமது சித்தாந்தம் அப்படிப்பட்டது. உடல் வேறுபாடு உடையதே தவிர ஆன்மா வேறுபாடு இல்லாதது. அனைவரது ஆன்மாவும் ஒன்றே. அவற்றிடம் உயர்வு தாழ்வு இல்லை. இதுவே நமது விசிஷ்டாத்வைதம்.

ஸார்வாகர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினேன்.

‘ஸார்வாகர்களே, பஞ்ச பூத சேர்க்கைவாதிகளே, உங்களுக்கு என் வந்தனங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்வி நியாயமானது. வெற்றிலை பச்சை நிறம் உடையது. சுண்ணாம்பு வெள்ளை நிறம் கொண்டது. ஆனால் இரண்டையும் சேர்த்து உண்டால் சிகப்பு நிறம் உருவாகிறது. அதைப்போல பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிர்கள் உண்டாகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு, ஆத்தும விசாரம் என்ற போர்வையில் வீண் விவாதம் என்பது உங்கள் கேள்வி.

இந்தக் கேள்விகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும். வேறு பெயர்களில் இதே கேள்வியைக் கேட்பார்கள்.

ஸார்வாகரே, நீங்கள் எப்போதாவது ‘நமக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வேறுபாடு?’ என்று யோசித்ததுண்டா ? அவையும் உணவு உண்கின்றன, இனப் பெருக்கம் செய்கின்றன, சண்டையிடுகின்றன, செத்து மடிகின்றன. நாமும் அப்படியே தானா ?

உலகமே பஞ்சபூத சேர்க்கை மட்டும் தான் என்றால் ஆடு மாடுகளுக்கும் அவற்றைவிடக் கீழான உயிர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லையா  என்று நினைத்துப்பார்த்ததுண்டா ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு தளத்தில் நல்லவர்கள் துன்பம் அடைவதும், தீயவர்கள் நன்மை அடைவதும் ஏன் என்றும் எண்ணிப்பார்த்ததுண்டா ?

மனிதர்கள் உடலினால் செய்யும் தீமைகள் அவர்களது தற்கால வாழ்க்கையைப் பாதிப்பதில்லை என்று நீங்கள் பார்த்ததில்லையா ?

ஆகவே, இக்காலத்தில் மனிதர்கள் செய்யும் செயலால் அவர்களுக்குப் பாதிப்பில்லை என்றால் வேறு ஏதோ காலத்தில் அவர்கள் செய்த செயலால் தற்போது பாதிக்கப் படுகிறார்கள் என்று தானே அர்த்தம் ?

ஆக, தற்காலத்தில் மனிதனின் வாழ்க்கைக்கும் முன் எப்போதோ அவன் செய்த செயலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பது புரிகிறதா ?

ஆனால் உடல் அழிவு அடையுமே ? உடல் அழிந்தபின் அவனது செயல்களும் அழிய வேண்டுமே ? ஆனால் செயல்கள் அப்படி அழியாமல் மனிதனைப் பின்தொடர்கின்றனவே. அது எப்படி ?

எனவே மனித உடலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு தொடர்பு தெரிகிறதா ? அதையே நாங்கள் ஆன்மா என்கிறோம்.

ஒரு உடலுக்கும் அது அழிந்தபின் ஏற்படும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பு ஆன்மாவினால் ஏற்படுவது. உடல் ஒரு அங்கவஸ்திரம் போன்றது. அங்கவஸ்திரம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதை அணியும் மனிதன் மாறுவதில்லை.

அது போல் ஆன்மா அழிவதில்லை. அது அணியும் அங்கவஸ்திரமாகிய உடல் மாறும், அழியும், தோன்றும். அழிந்த ஒரு உடலுக்கும் பிறக்கும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பே ஆன்மா என்பது. இதனாலேயே ஒரு உடல் ஒரு பிறவியில் செய்யும் காரியம் ஆன்மாவில் தங்கி அந்த ஆன்மா இன்னொரு உடலில் இருக்கும்போது பலன் அளிக்கிறது. நல்லவர்கள் துன்பம் அடைவது, தீயவர்கள் சுக போகங்களில் திளைப்பது இதனால் தான்.

ஆக, பஞ்ச பூத சேர்க்கை தவிர வேறு ஏதோ ஒன்று உள்ளது என்பது புலனாகிறது அல்லவா ?’, என்று கூறி நிறுத்தினேன்.

‘அப்படியென்றால் ஆடு மாடுகள் நம்மைவிட தாழ்ந்தவை என்று கூறுகிறீரா ? உங்கள் சித்தாந்தத்தின்படி அனைத்து உயிர்களும் சமம் அல்லவா ?’, என்று கேள்வி எழுப்பினார் ஸார்வாகர்.

‘உடல் அளவில் மனிதனுக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆன்ம அளவில் அனைத்தும் ஒன்றே. உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இல்லை. வேற்றுமை என்பது உண்டு ஆனால் அனைத்து உயிர்களும், ஏன் ஜடப் பொருட்களும் கூட சமானமானவையே. தத்துவ த்ரையம் என்பது அது தானே. சத், சித், ஈசன் மூன்றும் உண்மை. இதோ இந்தத் ‘த்ரி தண்டம்’  இருக்கிறதே – அது உணர்த்தும் பொருள் அது தானே’, என்று கூறி என் கையில் இருந்த ‘த்ரி தண்டம்’ என்னும் மூன்று மூங்கில் கழிகளின் ஒன்றாகப் பிணைந்த நிலையை உணர்த்தினேன்.

ஸார்வாகர்கள் மேலும் பேசவில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் பேசாமலே இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை என்பது தெரிகிறது. ஸார்வாகர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இந்த என் எழுத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போதும் ஸார்வாகர்கள் இருப்பார்கள். ஆனால் வேறு பெயரில், வடிவத்தில் இருப்பார்கள். ஆனால் எப்போதும் இருப்பார்கள். இப்படியாகக் கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள். சில நூறு ஆண்டுகள் கழித்து பாரசீகம் தாண்டி மிலேச்ச ராஜ்யங்களில் இருந்து சில பண்டிதர்களின் பேச்சும் இப்படியே இருக்கும். அவர்களின் உந்துதலால் பல ராஜ்ஜியங்கள் மாறும். அந்த இடங்களில் எல்லாம் ஸார்வாக சித்தாந்தம் பரவும். ஆனால் சில வருஷங்களிலேயே அவை அழியும். இப்படியாக எனக்குத் தென்படுகிறது.

ஆனால் ஒன்று. ஸார்வாகர்கள் நமது தத்துவ வெளியில் ஒரு சிறந்த படித்துறை போன்றவர்கள். அவர்களது கேள்விகள் விகாரமாகத் தோன்றினாலும் நமது பாரத தேசத்தின் சிந்தனையைத் தூண்டி விடுபவை. நமது சித்தாந்தங்கள் தெளிவான குளத்தின் நீர் போன்றவை. படித்துறை போன்ற ஸார்வாக தத்துவக் கேள்விகளின் வழியே நமது அத்வைத, விஸிஷ்டாத்வை சித்தாந்தங்களில் மூழ்க நமது பாரத கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள வழிமுறை இது.

இந்த ஸார்வாகத் தனமான் கேள்விகள் எக்காலத்திலும் இருக்கப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வைதீக மதஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு, ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலைத் தவறாகப் புரிந்துகொண்டு அவற்றின் சத்தான உட்கருத்தை விட்டுவிட்டு மேலோட்டமான சில சடங்குகளை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கும் வைதீக சம்பிரதாய மரபினர் வரப்போகிறார்கள். அவர்களினால் இந்த அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களின் ஆழத்தை உணர முடியாது. எனவே அவற்றை மற்றவரிடமும்  எடுத்துரைக்க முடியாது. இதன் காரணமாக இந்த சம்பிரதாயங்கள் கேலிப்பொருட்களாகும். இதன் காரணமாக ஸார்வாகம் சிறந்த ஒரு மார்க்கம் போல் தோற்றமளிக்கும்.

ஆன்மீகம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயற்சி செய்யாத ஒரு வைதீகக் கூட்டம் ஏற்படும். அதன் காரணமாகவும், வெறும் சோறு மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று மக்களைத் திசை திருப்பும் மிலேச்ச அரசுகளின் காலம் ஏற்படும். அப்போது இந்த வைதீகக் கூட்டம் தன் இயல்பு மறந்து, தனது அறிவை உணவுக்கு அடகு வைத்து, வெறும் சடங்குகள் மட்டுமே ஆன்மீகம் என்று நம்பி அந்த வழியே வாழும் காலம் துவங்கும். அப்போது இந்த தேசத்தின் கலாச்சார வீழ்ச்சி அதிவேக அளவில் எற்படும்.

ஆன்மீகம் என்பது தளைகளிலிருந்து விடுபடுதல் என்ற பொருள் போய், வெற்று சடங்குகளின் அணிவகுப்பு என்ற கருத்து வலுப்படும் காலம் ஒன்று வரப்போகிறது. அப்போது ஸார்வாகம் மேலும் ஸ்திரப்படும். இப்படியாக என் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது.

‘ஸ்வாமி, தேவரீர் அத்வைதம் விடுத்து இப்போது ஸார்வாகம் சென்றுவிட்டீரே’, என்று சற்று புன்னகையுடன் கூறி மீண்டும் வாதப் பொருளுக்கு அழைத்து வந்தார் யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள்.

நான் இராமானுசன் பகுதி 8

ஜைன துறவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் துவங்கினேன். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் கேள்வி கேட்கத் துவங்கி, அதனால் வளர்ந்து கொண்டிருந்த அந்த வாதம் குறித்து சற்று எண்ணிப் பார்த்தேன். பல மதஸ்தர்களும் வந்து கேட்பார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. நாம் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்று என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் என்று தோன்றியது.

ஜைன சன்யாசியின் இந்த அத்வைத சம்பிரதாயம் தொடர்பான கேள்வி என் காலத்து நாட்டின் நிலையை உணர்த்தியது. அறிவுத் தேடல் என்பது ஒரு சமயம் சார்ந்த ஆராய்ச்சி மட்டும் அல்ல. அறிவானது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. எந்தத் திசையில் இருந்தும் அது நம்மை அடையும். ஆகவே நாம் நமது புலன்களைத் திறந்த படியே இருக்க வேண்டும். ஞானம் எங்கிருந்து வரும் என்பது தெரியாது. எனவே எந்தத் துவேஷமும் இன்றி அறிவுத் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தத்துவ விசாரத்தில் அறிவாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

‘ஜைனரே, இதோ விளக்குகிறேன்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.

‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம் இரண்டும் ஒன்றே. இவை அத்வைதத்தின் ஒரு விளக்க நிலை.

சந்திரன் ஒளி வீசுகிறதே பார்க்கிறீரல்லவா ? இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே ? அது இந்த உலகில் பல படிவங்களின் மீதும் விழுகிறது. அதனால் அது பல ஒளிகளாகத் தெரிகிறது. ஆற்றின் மீது விழும் ஒளி ஒரு மாதிரியும், கலங்கிய குட்டையின் மீது விழும் சந்திர ஒளி ஒரு மாதிரியும் தெரிகிறது. ஆனால் சந்திரன் ஒளி ஒன்றே.

அது போல் பிரும்மம் ஒன்று. அவித்யையினால் அது பலது போல் தெரிகிறது. நீரில் சந்திர ஒளி விழும் போது, நீர் அசைந்தால் சந்திர ஒளியும் அசையும். நீர் அசைவில்லாதிருந்தால் ஒளியும் அவ்வாறே இருக்கும். இதனால் இந்த இரண்டு ஒளியும் வேறு என்று ஆகுமோ ? ஒளி ஒன்று தானே ?

அது போல ஒவ்வொரு ஆன்மாவிலும் பற்றி இருக்கும் அவித்யையின் காரணமாக அவற்றின் இயல்புக்கு ஏற்ப ஆன்மாவின் இயல்பும் வேறுபடும். நீர் நிலைகள் அனைத்தும் அழிந்தால் சந்திரன் ஒன்றே என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவ்வாறே அவித்யை அழிந்தால் ஆன்மா ஒன்று என்பது நமக்குப் புலப்படும் இதுவே ஏகான்ம வாதம்.

‘சேதம்’ என்றால் பிரித்தல் என்பது பொருள். ஒரு பரமாத்மா பல ஜீவாத்மாக்களாகப் பிரிந்து காணப்படுகிறது. இதற்கு மாயை காரணம். இப்படி ‘சேதம்’ ஆனமாதிரி பரமான்மா தெரிவதால், பிளவு பட்டது போல் தெரிவதால் இதற்கு ‘அவச்சேத வாதம்’ என்று ஒரு பெயர் உண்டு.

ஒரு உதாரணம் சொல்லலாம். இதோ இந்த மண்டபத்தில் இருப்பது ஒரே வெளி தான். இங்கே இருக்கும் குடத்தின் உள்ளே இருப்பது இதே வெளி தான். குடத்தை மூடினாலும் அதனுள் இருக்கும் வெளியும் அதன் வெளியே உள்ள வெளியும் ஒன்று தான். குடம் இந்த ஒரே வெளியை இரண்டாகச் ‘சேத’ப் படுத்துகிறது. ஆனால் குடம் உடைந்தால் இரண்டு வெளியும் ஒன்றாகிறது. குடம் என்பது மாயை. இந்த மாயை விலகினால் மாயையால் சூழப்பட்ட வெளியும் புறத்தில் உள்ள வெளியும் ஒன்றாகும். இப்படி பிரும்மத்தை ‘சேத’ப்படுத்தி விளக்குவது அவச்சேத வாதம். இதுவும் அத்வைதமே’, என்று கூறினேன்.

ஜைன சன்யாசிகள் தெளிவு பெற்றது போல் தெரிந்தது.

‘இந்த விளக்கங்களில் தேவரீர் என்ன தவறு கண்டீர்? அத்வைதம் சரிதானே?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்வாமி, தவறு இங்கே தான் துவங்குகிறது’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஸ்ரௌதிகளும், ஜைனத் துறவியரும் மற்றவரும் ஆவலாக   நோக்கினார்கள்.

கூட்டத்தில் இருந்த ஸார்வாகர்கள்* போன்றவர்கள் மேலும் முன்னேறி வந்து அமர்ந்தார்கள். வைதீக தத்துவங்களில் ஏதாவது குறை காண வழி கிடைத்தால் ஸார்வாகர்களுக்கு ரொம்பவும் சந்தோஷம் தான். ‘உலகாயதம்’ என்ற தத்துவத்தின் படி வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். கண்களால் காணப்படுவதே மெய்; மற்றதெல்லாம் பொய் என்பதே அவர்களது வாதம்.

ஸார்வாகர்கள் இன்று நேற்று இருக்கவில்லை, திரௌபதியின் துகில் உரியப்பட்டதே ஹஸ்தினாபுர சபையில் ? அன்று அந்த சபையில் ஸார்வாகர்கள் இருந்தார்கள். இதைப்பற்றி திரௌபதியே மஹாபாரதத்தில் சொல்கிறாள்.

ஸார்வாகர்கள் ஏதோ கேள்வி கேட்க விரும்புவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றும் கேட்காமல் அப்படியே அமர்ந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள் என்று தோன்றியது.

‘ஸ்ரௌதிகளே, ஜைனத் துறவியரே, அத்வைத்தத்தின் மூன்று வகைகளைச் சொன்னேன். ஆனால் தவறு இந்த மூன்றின் உள்ளேயே  தான் உள்ளது.

இருப்பது ஒரு வெளி , அது இரண்டாகப் பிரிவது மாயை, அப்படிப்பிரிப்பது மாயை. இது அத்வைத சாரம்.

இருப்பது ஒரு ஒளி ஆனால் அது படும் இடம் பொறுத்து அதன் அளவும், பிரகாசமும் அமையும். அழுக்கான குளமானால் அழுக்கான ஒளியே பிரதி பிம்பமாகத் தெரியும். இதுவும் அத்வைத சாரம்.

நான் கேட்கிறேன். பிரும்மம் ஒன்று மட்டும் தானே உள்ளது ? அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது ? அவித்யை எங்கிருந்து வந்தது ? அறியாமையும் அவித்யையும் இருப்பதால் தானே ஜீவாத்மாக்கள் இருப்பது போலவும், ஜடப் பொருட்கள் இருப்பது போலவும் தோன்றுகிறது ?

ஆக, அவித்யையும், அறியாமையும் பிரும்மத்திடமே உள்ளனவா ? அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா ? பிரும்மம் அறியாமையின் நிலைக்களன் என்பது ஏற்கமுடியுமா ?

அறியாமை ஆத்மாக்களினால் உருவாகிறது என்பது தவறு இல்லையா ? அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் ? ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது ? அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே ?’, என்று கேட்டேன்.

மக்கள் சற்று தெளிவில்லாதது போல் தென்பட்டது.

மேலும் விளக்கினேன்.

‘இப்போது இங்கே கூரத்தாழ்வார் இருக்கிறார். அவரது மகன் பராசரன் அதோ அமர்ந்திருக்கிறான். கூரத்தாழ்வார் காரணம். அவரால் இந்த உலகிற்கு வந்தவன் பராசரன். கூரன் முன்னவர். பராசரன் பின்னவர். அப்படி இருக்க, பராசரனே கூரனின் நிலைக்களன் என்று சொல்ல முடியுமா ? காரணம் முன்னது. காரியம் பின்னது. காரணத்தால் காரியம் சாத்தியமாகிறது. காரியம் காரணத்தின் இருப்பிடம் என்பது சரி இல்லையே.

கூரன் இருப்பது உண்மை ஆனால் பராசரன் இருப்பது பொய் என்பது ஒப்புக்கொள்ள முடியவில்லையே.

இது போல் தான் உள்ளது அத்வைதமும். ஞான ஸ்வரூபம் பிரும்மம்; அப்பழுக்கில்லாதது. ஜீவன், ஜடப் பொருள் எல்லாம் பிரும்மத்தின் பிம்பம். ஆனால் அவை அறியாமையால், மாயையால் வேறு ஒன்றாகத் தெரிகின்றன என்பது உண்மை என்றால் அந்த அறியாமை எங்கிருந்து வந்தது ? பிரும்மத்திடமிருந்தா? பிரும்மம் தான் பரிபூரண ஞான ஸ்வரூபமாயிற்றே ?

ஆகவே அறியாமை, மாயை முதலியன பிரும்மத்தின் குணங்கள் இல்லை என்று ஆகிறது.

சரி, அறியாமையால் ஜீவன், ஜடப் பொருள் முதலியன தெரிகின்றன என்றால் ஜீவாத்மாக்களும் ஜடப்பொருட்களும் அறியாமையின் இருப்பிடமா ? காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே ? இதனால் தான் இந்த சித்தாந்தம் சற்று திடம் இல்லாதது என்று கூறுகிறேன்’, என்றேன்.

ஜைனத் துறவியர் சற்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டனர். விஷயங்களை கிரஹித்துக்கொள்வது போல் தெரிந்தது.

ஒன்று சொல்கிறேன். சங்கரர் விவர்த்த வாதி. காரணமாகிய பிரும்மம் உண்மை ஆனல் காரியமாகிய ஜீவன்களும், ஜடப்பொருட்களும் பொய் என்பது விவர்த்த வாதம்* தவிர வேறென்ன ?

ஆனால் அடியேன் விவர்த்த வாதி அல்ல. நான் பரிணாம வாதி. காரணமும் உண்மை; காரியமும் உண்மை; பிரும்மமும் உண்மை; ஜீவன்களும் உண்மை; உலகமும் உண்மை. தத்துவ த்ரயம் ( மூன்று உண்மைகள்)  என்பதே என் வாதம்’, என்று கூறி நிறுத்தினேன்.

கூட்டத்தில் பேரமைதி நிலவியது.  ஸார்வாகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; ஸ்ரௌதிகள் மௌனமானார்.

ஸார்வாகர்களின் தலைவர் போல் இருந்த ஒருவர் எழுந்தார்.

‘ஆத்மா, ஜீவன், பரமாத்மா என்றெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டுமா ? இதனால் என்ன பயன் ? உலகமே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் எற்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். எப்படி வெற்றிலை, சுண்ணாம்பு இரண்டும் சேர்ந்தால் அதுவரை இல்லாத சிவப்பு நிறம் உண்டாகிறதோ அது போல் பஞ்ச பூதங்கள் ஒரு விகிதத்தில் சேர்வதால் உயிர் உண்டாகிறது. சிவப்பு என்பது ஒன்று தனியாக இல்லை. சிவப்பு என்பது முக்கியமும் இல்லை.

அது போல் உயிர் என்பதும் முக்கியம் இல்லை. வெற்றிலையுடன் சேர்க்கை எற்படுவதால் சிவப்பு நிறம் உண்டாகிறது. சேர்க்கை முறிந்ததும் சிவப்பு இல்லை, பஞ்ச பூத வஸ்துக்களின்* சேர்க்கை விகிதம் முறிவதால் உயிர் இல்லாமல் ஆகிறது. அவ்வளவே வாழ்க்கை. இங்கு ஆத்மா எங்கு வந்தது ? பிரும்மம் எங்கே வந்தது?’, என்று சொல்லி வெற்றிக் களிப்புடன் கூட்டத்தைப் பார்த்தார்.

கூட்டத்தார் என்னை நோக்கினர்.

———————————————————————————————————————–

ஸார்வாகர் – ஒரு பிரிவினர். கடவுளை ஏற்காதவர்கள். தற்காலத்தில் இடது சாரிகள் போல் இருப்பவர்கள்.

விவர்த்த வாதம் – முன் பின் முரணான வாதம்.

வஸ்து – பொருள்

———————————————————————————————————————–

நான் இராமானுசன் பகுதி 7

வைஷ்ணவம் ஆரம்பத்தில் இப்படி இருந்ததில்லை என்று சொல்லிய நான் சற்று நிறுத்தினேன்.

இவருக்கு எங்கிருந்து துவங்குவது என்பதில் எனக்கு ஒரு சம்சயம்* இருந்தது.

வேதத்திலிருந்து துவங்கி யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளுக்கு விளக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ஆரியர்கள் என்றோரு இனத்தார் மாடு மேய்த்தபடி பாரசீகம் தாண்டியிருந்து வந்து திராவிட தேசத்தை அடிமைப்படுத்தினார்கள் என்று இன்னும் சில நூறு ஆண்டுகளில் பேசப்படப் போகிறது. அதுவே உண்மை என்றே பலராலும் ஒப்புக்கொள்ளப்படப் போகிறது. எனவே ஆரியர்கள் என்றொரு கூட்டத்தின் மேல் வன்மம் அவிழ்த்துவிடப் படப் போகிறது. அதனால் சரியான வரலாறு தெரியாமல் மிலேச்ச அரசர்கள் அளிக்கப் போகிற வரலாற்றை நம்பப்போகிறார்கள் மக்கள். இந்த என் எழுத்துக்களை நீங்கள் படிக்கும் காலத்திலும் அவ்வாறே மிலேச்ச அரசுகளின் தாக்கத்தால் உங்கள் வரலாறு தெரியாமல் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.

ஒரு வேளை நான் எழுதுவது உங்களுக்குக் கிடைத்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது அல்லவா ?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  இதிஹாசம் என்றாலே பரிகாசம் செய்யப் போகும் ஒரு காலமும் வரப் போகிறது என்று என்னவோ மனதில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இதிஹாசங்களே பொய் என்று ஒரு நீண்ட நெடிய பிரச்சாரம்  நடைபெரும். இதி ஹாசம் என்பது என்ன ? ‘இது நடந்தது’ என்பதே இதி ஹாசம் என்பதன் பொருள்.

இப்படி இதிஹாஸங்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை வேதங்கள். இவை எழுதப்படவில்லை. வேதங்கள் ரிஷிகளால் உணரப்பட்டன. உணரப்பட்டவை உபதேசிகப்பட்டன. ஆனால் எழுதப்படவில்லை. எனவே இவை ‘ஸ்ருதி’ என்று அழைக்கப்பட்டன ( ஸ்ருதி என்பது காதால் கேட்கப்படுவது என்று அர்த்தம்). தமிழில் கூட வேதங்களை ‘எழுதாக் கிளவி’ என்று சொல்வார்கள்.

இந்த வேதங்களின் சாரங்கள் உப-நிஷத்துக்கள் எனப்பட்டன. ‘உப-நிஷதம்’ என்றால் ‘அருகில் அமரவைத்தல்’ என்று பொருள். இவை கேள்வி- பதில் வடிவில் இருப்பன. பாரத கலாச்சாரத்தில் கேள்வி-பதில் என்பது ஆணிவேர். எதையும் கேள்வி கேட்கலாம். 108 உப-நிஷதங்கள் உள்ளன என்று தெரிகிறது.

‘ஸ்வாமி, தேவரீர் திடீரென்று வேதத்தின் அருகில் போகிறீரே, தங்கள் தத்துவம் என்ன ஆனது ?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள். ஜைனத் துறவிகளும் ஆவலுடன் தலை அசைத்தனர். ஒரு சேர ஜைனமும் அத்வைதமும் அணிதிரண்டு வருவது போல் உணர்ந்தேன். கூட்டத்தில் பௌத்தர்கள் யாராவது உள்ளனரா என்று பார்த்தேன். ஏனெனில் அவர்களும் இருந்தால் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடை அளிக்கலாம் அல்லவா ?

நமது மடத்திற்கு யாரும் வரலாம். ஆத்ம விசாரத்தில் ஈடுபட ஒரு வேகம் வேண்டும்; ஒரு உள் உணர்வு வேண்டும்; அறிவுத்தேடல் வேண்டும். அது மட்டுமே ஒரே தகுதி.

பதில் தொடர்ந்தேன்.

‘வேதம் பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதன் உள்ளே உள்ள விஷயங்கள் அனேகம் பேருக்குப் புரிவதில்லை. அதன் உண்மை ஒன்று தான். ‘ஒன்று’ என்பது தான் அந்த உண்மை. புரியவில்லையா ? பலது என்பதெல்லாம் இல்லை. இருப்பது ஒன்றே’, என்று சொல்லி நிறுத்தினேன்.

‘பார்த்தீர்களா , எங்கள் ஆதி சங்கரர் சொன்ன ‘ஒரு பிரும்மம்’ விஷயத்திற்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பிரும்மம் ஒன்று தான்’, வெற்றிக் களிப்புடன் சொன்னார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, சற்று பொறும். நானும் சங்கரரும் சொன்னது ஒன்று தான். நானும் அவரும் வேதம் என்ன சொன்னதோ அதைத்தான் சொன்னோம். ஆனால் வேறு விதமாகச் சொன்னோம். அதில் அவரது வாதத்தில் சிறிது தவறு உள்ளது.

வேதம் என்ன சொன்னது ? ஆறு அங்கங்கள் கொண்ட நான்கு வேதங்கள் சொன்னது ‘பிரும்மம் ஒன்று’ . அதைப் பலவாறு விளக்கியது உப-நிஷத்துக்கள். உப-நிஷத்துக்களின் சாரம் பிரம்ம சூத்திரம். நானும் சங்கரரும் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினோம். அதில் எங்கள் அணுகுமுறை வேறு. அனுமானங்கள் வேறு. ஆனால் உண்மை ஒன்று’.

‘ஆனால் நீங்கள் உண்மை மூன்று என்று ‘தத்துவ-த்ரயம்’ என்று எழுதியுள்ளீர்களே ?’, என்றார் ஸ்ரௌதிகள்.

‘ஆமாம். மூன்றும் உண்மை தான். ஆனால் அந்த மூன்றும் ஒன்று தான்’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஜைன சன்னியாசிகளும் சற்று குழம்பியதாகவே தெரிந்தது. ஸ்ரௌதிகளும் குழம்பியே காணப்பட்டார். கூரத்தாழ்வார் மட்டும் புன்னகைத்தபடி,’ இன்று எங்களுக்கு நல்ல பல காலக்ஷேப விஷயங்கள் அர்த்தமாகின்றன. நாங்கள் ரொம்பவும் தன்யர்களானோம்’, என்று கீழே விழுந்து சேவித்தார்.

கூரத்தாழ்வார் நம் சிஷ்யரானாலும் அவர் என்னை ஸேவிப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடம் தான். அவர் சிஷ்யர் என்றாலும் கைங்கர்யத்தில் உயந்தவர். சம்பிரதாயத்திற்காகத் தன் நேத்ரங்களை ( கண்களை ) இழந்தவர். சோழனின் சைவ மத ஈடுபாடு அப்படி இருந்தது.

உபன்யாசத்திற்கு வருகிறேன்.

‘சங்கர பகவத் பாதர் சொன்னது, பிரும்மம் மட்டுமே உண்மை. எனவே அவர் வேதத்தையும், உப-நிஷதத்தையும் ஒட்டி அதன் உண்மையைக் கூறுகிறார். ஆனால் வேறு ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார்.

நான் சொல்வது பிரும்மம் ஒன்று தான். அத்துடன் உயிர்களும், உலகமும் உண்மையே. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றே. ஏனெனில் நமது உயிருக்கு உடல் நமது உடம்பு. அது போல் நமது உயிரை இறைவன் தனது உடம்பாகக் கொள்கிறான். இது சரீர- சரீரி பாவம். நமது ஆத்மா சரீரம். அவன் சரீரி. அவன் இன்றி நமது உயிரும் இல்லை, நமது உடம்பும், ஜடப் பொருட்களும் இல்லை. எல்லா உடல்களிலும் உள்ள உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாய் இருக்கிறான். ஆகவே அவன் ஒருவனே உண்மை என்பது சரியே’, என்று சொல்லி நிறுத்தினேன்.

அனைவரும் புரிந்த மாதிரி சற்று தெளிந்த முகத்துடன் தென்பட்டனர்.

‘அத்வைத சித்தாந்தத்தில் ‘பிரதி பிம்ப வாதம், அவச்சேத வாதம், ஏகான்ம வாதம் என்றெல்லாம் படிக்கிறோமே, அவை பற்றி சிறிது சாதிக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று துவங்கினார் ஒரு ஜைன சன்யாசி.

அவர் அத்வைதம் பற்றியும் அதன் பல வாதங்கள் பற்றியும் கேட்டது ஆச்சர்யமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு தத்துவத்தின்படி வாழ்ந்தாலும், மற்ற தத்துவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, துவேஷ மனப்பான்மை இல்லாமல் தர்க்க ரீதியாக அணுகும் ஒரு மனப்பான்மை இந்தப் பாரத தேசத்தில் என் காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பரந்த நோக்கு அடியோடு அழிந்து போகும் காலம் இந்த தேசத்தில் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. ஒரு கையில் வாளையும் இன்னொரு கையில் மிலேச்ச மத புஸ்தகத்தையும் கொண்டு சாதாரண மக்களை நெருக்கும் காலம் வர இருக்கிறது. இன்னொரு புறம், நன்மை செய்கிறேன் என்ற போர்வையில் இன்னொரு மிலேச்ச மதத்தில் சேர்க்க அலையும் ஒரு கூட்டம் வரவிருக்கிறது. இவை எல்லாம் கலி காலத்தின் கோலங்கள்.

‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம், அவச்சேத வாதம் முதலியன அத்வைதத்தின் சாரத்தை விளக்க வந்த விளக்கப் பிரிவுகளே. இவையும் அத்வைதத்துக்குள் அடக்கம்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.

 

நான் இராமானுசன் பகுதி 6

எமது சித்தாந்தம் இது தான்.

சித்து, அசித்து, ஈசன் – இவை மூன்றுமே உண்மை. சித்து ஜீவாத்மாக்களைக் குறிக்கிறது. அசித்து ஜடப்பொருட்கள். ஈசன் – ப்ரும்மம். இந்த மூன்றுமே உண்மை தான்.

அனைவருமே மோட்சம் அடைய முடியும். அதனால் மேல் உலகிலும் இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. இது மட்டும் இல்லை.  உயிரற்ற ஜடப் பொருட்கள் உள்ளனவே , அவற்றுக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொன்னேன். ஏன் எனில் இந்த உலகம் ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் ஜடப்பொருட்களால் ஆனது என்பது எமது சித்தாந்தம்.

ஜீவாத்மாக்கள் அனைத்தும் பரமாத்மாவை அடைய முடியும். ஜீவாத்மாவும் உண்மை. பரமாத்மா மட்டுமே உண்மை என்பது தவறு. ஜடப்பொருட்களும் உண்மை. ஏனெனில் ஜடப்பொருட்கள் உண்மை என்றால் தான் ஜீவாத்மாக்கள் அவற்றைக்கொண்டு சிறந்த உபவாசங்கள், ஆராதனங்கள் செய்து பரமாத்மாவை அடைய முடியும்.

ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய பல உபாயங்கள் உள்ளன. அவற்றில் மிக சுலபமானதும், எல்லாராலும் அனுஷ்டிக்கப்படுவதும் பிரபத்தி என்னும் சரணாகதி. இதனைச் செய்பவன் பிரபன்னன்.

ஜீவாத்மா பஞ்ச சம்ஸ்காரம் என்னும் முறைப்படி தன் குருவினால் ஆற்றுப்படுத்தப் படுகிறான். பஞ்ச சம்ஸ்காரம் என்பது என்ன ?

பெருமாளின் சங்கு சக்கர முத்திரைகளைத் தம் தோளில் தரித்துக்கொள்ளுதல், பெருமாளின் பாதங்களைத் தம் நெறியில் சாற்றிக் கொள்ளுதல், பகவானுடைய தாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொள்ளுதல், குரு முகமாக அஷ்டாட்ஷர மந்திரம் ( ஓம் நமோ நாராயணாய ), த்வயம் , சரமசுலோகம் என்று அறிந்து கொள்ளுதல், குருவிடமிருந்து ஆராதனைக்கு சாளக்கிராமம் பெற்றுக்கொள்ளுதல் – இவையே பஞ்ச சம்ஸ்காரம் என்பது.

இவை போதுமா ஜீவாத்மா மோக்ஷம் பெற ? இல்லை. இவை இருந்தாலும் இவற்றுக்கு மேல் அவனது பூர்வ கர்ம பலன்கள் இருப்பதால் அவன் இன்னமும் மோக்ஷம் அடைய முடியாமல் தவிக்கிறான். எனவே அதனையும் போக்க குருவினிடம் சென்று தன் பூர்வ ஜென்ம கர்ம பலன்களை சமர்ப்பிக்கிறான். அதாவது தனது பாரத்தை குருவின் மேல் சுமத்துகிறான். இதற்கு ‘பார நியாஸம்’ என்று பெயர். பார நியாஸம் நடந்த பின் அவன் மோக்ஷத்திற்குத் தயாராகிறான்.

இதில் குல வித்யாசங்கள் இல்லை. யாரும் பார நியாஸம் செய்துகொள்ளலாம்.

பஞ்ச சம்ஸ்காரம் முடிந்த யாரும், பார நியாஸம் முடிந்த பின் ஒருவரே. ஜீவாத்ம நிலையில் ஒன்றே.

‘இதில் தேவரீருக்கு  ஆக்ஷேபம் என்ன ?’ என்று கேட்டேன்.

‘இருந்தாலும் அனைவரும் ஒன்று என்பது எப்படி ஸாத்யம் ஆகும்? நானும் நீங்களும் ஒன்றா?  அதோ அந்த மூலையில் அமர்ந்திருக்கும் வயோதிக விதவைப் பெண்மணியும்  நானும் ஒன்றா ?’ என்று தொடர்ந்தார் அவர்.

பிறகு சடந்த சம்பாஷணை இது தான்.

‘இப்போது எனது புஸ்தகம் என்கிறோம். அப்போது ‘எனது’ என்பது என்ன ?’, என்று கேட்டேன்.

‘எனது என்பது இந்த உடம்பு’, அவர் சொன்னார்.

‘அதாவது இந்த புஸ்தகம் உங்கள் உடம்பிற்குச் சொந்தம். அது தானே ?’ என்றேன்.

‘ஆமாம், என்னிடம் இருக்கும் வரை இந்தப் புஸ்தகம் இந்த உடம்பிற்குச் சொந்தம்’.

‘எனது கை என்றால் என்ன? கை யாருடையது?’ என்று கேட்டேன்.

‘கையும் இந்த உடம்பிற்குச் சொந்தம்’, என்றார் அவர்.

‘அப்படியென்றால் சரி. ‘எனக்கு உடம்பு சரி இல்லை’ என்றால் என்ன அர்த்தம்?’ என்றேன் நான்.

‘அப்படியென்றால் என்னுடைய உடம்புக்கு ஏதோ கோளாறு என்று பொருள்’, என்றார்.

‘ஆக, என்னுடைய உடம்பு என்னும் போது ‘என்னுடைய’ என்பதும் ‘உடம்பு’ என்பதும் வேறு என்று ஆகிறதா ? அப்படியென்றால் ‘என்னுடைய’ என்பது என்ன ?’, என்று கேட்டேன்.

ஸ்ரௌதிகள் சற்று மௌனமானார்.

சாராம்ஸம் இது தான். என்னுடைய உடம்பு என்பதில் என்னுடைய என்பது உடம்பைத் தவிர வேறு எதையோ குறிக்கிறது. ஆக உடம்பு என்பது வேறு; அதனுள் இருப்பது என்பது வேறு. ஆகவே, உடல் அளவில் வேறுபாடு உண்டு. ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா அளவில் வேற்றுமை இல்லை. எல்லா ஆன்மாவும் ஒன்றே. எனது ஆன்மா, உங்களது ஆன்மா, அந்த வயோதிகப் பெண்ணின் ஆன்மா, எல்லாம் ஒன்றே. உடல் அளவில் மட்டுமே வேறுபாடு. ஏனெனில் உடல் நாம் அணியும் ஆடை போன்றது. ஆண் உடல் என்றோரு ஆடை, பெண் உடல் என்றொரு ஆடை, பசு மாட்டின் உடை என்றோரு ஆடை. அவ்வளவே. உடல் அளவில் மட்டுமே வேற்றுமை உண்டு; ஆன்மா அளவில் இல்லை. அத்துடன் அனைத்து ஆன்மாக்களும் இறைவனை அடைய முடியும் என்பதால் இவ்வுலகிலும் மேல் உலகிலும் வேறுபாடு இல்லை. இது தான் நமது சித்தாந்தம்.

‘சங்கரரும் ஆத்மாவை ஒப்புக்கொள்கிறாரே?’, என்றார் ஸ்ரௌதிகள்.

உண்மை தான். ஆனால் ஜீவாத்மா என்பது உண்மை இல்லை என்கிறார் அவர். ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் பிம்பம் என்கிறார். இந்த உலகம் மாயை என்கிறார். உலகமும் அதனுள் இயங்கும் உயிர்களும் கானல் நீர் போன்றவை என்கிறார். அது தவறு என்கிறேன் நான். ஏனெனில் இந்த உலகில் வாழும் ஆத்மாக்கள், எந்த ரூபத்தில் இருந்தாலும், அவை ஜடப் பொருட்களின் உதவியுடன், அவற்றைக்கொண்டு பரமாத்மாவை அடைகின்றன. உதாரணமாக இதோ ஒரு தாமரை புஷ்பம் இருக்கிறதே. இதனைக்கொண்டு அர்ச்சனை செய்ய முடியும். அதன் மூலம் பிரபத்தி செய்ய முடியும். ஆனால் இந்தப் புஷ்பம் மாயை என்றால் அது எப்படி சாத்தியமாகும் ? எனவே தான் நான் ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாமே உண்மை என்கிறேன்.

வைஷ்ணவ சன்யாசிகள் மூன்று மூங்கில் கழிகள் கொண்ட ‘த்ரி தண்டம்’ எப்போதும் கையில் வைத்திருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா ? ‘உண்மைகள் மூன்று’ என்பதை உணர்த்துவதே இதன் பொருள். ஆனால் சங்கர மத சன்யாசிகள் ‘ஏக தண்டம்’ என்று ஒரு மூங்கில் கழியையே கொண்டுள்ளார்கள். ‘பிரும்மம் ஒன்று. மற்ற அனைத்தும் மாயை’ என்பதை விளக்கவே இந்த முத்திரைகள்.

என் சித்தாந்தத்தின்படி பொருள் முதல் வாதமும், கருத்து முதல் வாதமும் ஒரு சேர இயங்குவது சாத்தியமே. அதுவே விஸிஷ்டாத்வைதம்.

இதில் குலம், பிறப்பு, ஜாதி முதலிய வித்யாசங்கள் இல்லை. எல்லா ஆத்மாக்களும் ஒன்றே என்பதால் இந்த வைஷ்ணவ சித்தாந்தத்தில் பானைக்குக் கூட முக்தி உண்டு. ‘ததி பாண்ட உபாக்கியானம்’ என்று ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறதே. அதில் ஒரு தயிர்ப் பானை செய்பவன் முக்தி அடையும் நிலையில் இருக்கிறான். பெருமாளிடம் தன் பாண்டத்துக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறான். பெருமாள் கொடுக்கிறார். பானை என்னும் ஜடப் பொருளுக்கே முக்தி உண்டென்றால், மற்ற உயிர்களுக்கும், மற்ற குலத்தில் பிறந்த மக்களுக்கும் முக்தி கிடையாது என்ற சங்கர மத சித்தாந்தம் தவறில்லையா ?

அது மட்டும் அல்ல. கஜேந்திர மோக்ஷம்  நினைவிருக்கிறதா ? ஒரு யானைக்கு உதவிக்கு வந்தான் பெருமாள் என்று இருக்கிறதில்லையா ?

‘எல்லாரும் ஒன்றே, குலத் தாழ்ச்சி உயர்ச்சி என்பதெல்லாம் இல்லை என்பது எப்போது துவங்கியது வைஷ்ணவத்தில்?’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.

உபன்யாசம் வாதம் போல் ஆனதை உணர்ந்தேன். கூட்டத்தில் இரண்டு ஜைன சன்யாசிகளும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

‘வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போதும் இப்படி இல்லை ஸ்ரௌதிகளே. ஆழ்வார்கள் வரலாறு தாங்கள் அறிந்ததில்லையா ?’, என்றபடி மேலே தொடர்ந்தேன்.

நான் இராமானுசன் பகுதி 5

ஸ்ரௌதிகள் சற்று மௌனமானார். நான் மேலே தொடர்ந்தேன்.

அரசுகளும் ராஜ்ஜியங்களும் தோன்றின. அவற்றிற்கு உழைக்க ஆட்கள் தேவைப்பட்டனர். ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வதால் நல்ல பலன் கிடைத்து வந்தது. வாய்க்கால் வெட்டுபவன் அதே தொழில் செய்தான். பானை செய்பவன் அதில் மேலும் புதுமைகள் செய்தான் ; குறைந்த நேரத்தில் நிறைய பானைகள் செய்யக் கற்றுக்கொண்டான். அவனது தொழிலை வாரிசுகளுக்குப் புகட்டினான். இதே நிலை தான் இரும்புக் கொல்லர், தங்க வேலை செய்பவர், வயல் வேலை செய்பவர் என்று. பிரிவுகள் இப்படி உண்டாயின.

இந்தப் பிரிவுகள் அரசனுக்கு உதவின. விவசாயம் பெருக ஒரு தொழில் செய்பவர் மேலும் சிறப்பாகச் செய்தால் நல்லது என்று உண்டானது. தொழில் ரீதியிலான பிரிவு விரிவடைந்தது.

இதுவரை உற்பத்தி பற்றி மட்டுமே பார்த்தோம். இந்த உற்பத்தியாளர்கள் மேலும் மேலும் அதிக அளவில் உழைக்கத் துவங்கினர். பல புதிய அணைகள் கட்டப்பட்டன. மேலும் உற்பத்தி பெருகியது.

ஆனால் உற்பத்தி செய்பவர்கள் செழிக்கவில்லை. இவர்களிடம் பொருட்கள் வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்பவர்கள் நல்ல பலன் அடைந்தனர். அந்தக் குழுவினர் வியாபாரத் துறையில் அசைக்க முடியாதவர்களாக இருந்தனர்.

ஊற்பத்தி செய்பவர்கள் கிராமங்களில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தனர்; ஆனால் பலிதம் அவ்வளவாக இல்லை. ஆனால் வியாபரம் செய்வோர், வணிகர், நகரங்களில் அதிக சிரமங்கள் இல்லாமல் வாழ்ந்தனர். வசதியாகவும் இருந்தனர்.

இந்த வேறுபாடு நாளாக நாளாகப் பெரிதானது. இது இந்த இரு கோஷ்டிகளுக்குள்ளும் மோதலை உருவாக்கியது.

ஆனால் மோதல் பெரிதாகாமல் இருக்க அரசன் ஒரு சமன்பாட்டுக் கருவியாக இருந்தான்.

இந்தச் சமுதாய அமைப்பில் உற்பத்தி விவசாயிகள், உடல் உழைப்பாளர்கள் வசம் இருந்ததால் இவர்கள் பக்கம் அரசன் இருந்தான். ஆனால் இவர்கள் அரசனுக்கு அடங்கி இருக்க வேண்டி இருந்ததால் அவர்கள் மீது ‘பாதுகாப்பு’ என்ற போர்வையில் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய அரசாணைகள் உருவாயின. அரசனும் தெய்வமும் ஒன்று என்னும்படியான கருத்துக்கள் பரப்பப்பட்டன. சோழப் பேரரசுகள் இவ்வகையிலானவை.

இந்த அமைப்புக்கு ஒரு சகல சக்தி வாய்ந்த பரம்பொருள் தேவைப்பட்டார். அவர் சிவன் என்ற பெயருடன் ஸேவிக்கப்பட்டார். ஒரே பிரும்மம் என்னும் வாதம் நிலைக்க இந்த ‘அரசனும் இறைவனும் ஒன்று’ என்ற தத்துவம் உதவியது. பிரும்மம் ஒன்று; அது மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பிரும்மத்தின் பிரதிபலிப்பே. அது போல் அரசனும் ஒருவனே; சர்வ வல்லமை பொருந்தியவன்; மக்கள் அவனால் வாழ்பவர்கள். இந்தக் கருத்து வலுப்பெற்றது. இதனை முன் நிறுத்தியவர் ஆதி சங்கரர்.

ஆதி சங்கரர் வலுவடையும் முன்னரே திராவிடப் பிரதேசத்தில் சைவ சமயம் வேறூன்றி இருந்தது. ஆதி சங்கரர் தனது ஆளுமையால் சைவத்தைத் தனது ஷண்-மதங்களில் ஒன்றாக்கினார்.

ஆனால் வணிகர்கள் வாழ்ந்த இடங்களில், நகரங்களில், சோழனின் அரசு அவ்வளவாக செல்லுபடியாக வில்லை. அவர்கள் அரசனுக்கு எதிராக வேலை செய்தனர். இவர்கள் அரசனின் ஆளுமையை அவ்வளவாக விரும்பவில்லை. இவர்களது தத்துவத்தின் அடிப்படையில் சகல சக்திகளும் பொருந்திய ஒரு சக்தி அல்லது பிரும்மம் இல்லை; பௌத்தமும் அதையே சொல்லவும், அது வைதீக சங்கர மதத்திற்கு எதிராக இருந்ததாலும் வணிகர்கள் அதனை ஆதரித்தனர். வணிகர் மதமாக பௌத்தமும் சமணமும் அமைந்தன. அவர்களது கால நூல்களான மணிமேகலையும், சிலப்பதிகாரமும் வணிகர்களை உயர்த்தியும் அரசனைத் தாழ்த்தியும் பேசின. இதுவும் தாங்கள் அறிந்ததே’ என்று சொல்லி சற்று நிறுத்தினேன்.

ஸ்ரௌதிகள் பேசினார்,’ஸ்வாமி, தேவரீர் லௌகீக விஷயங்களை சங்கர மதத்துடன் இணைத்துப் பேசுவதில் சமர்த்தர் போல. ஆனால் இந்த நிகழ்வில் விஸிஷ்டாத்வைதம் வரவில்லையே, அது எங்ஙனம் ?’ என்று ஆக்ஷேபம் செய்தார்.

நான் இதை எதிர்பார்த்தேன். ஸ்ரௌதிகள் சிருங்கேரி, பூரி முதலிய அத்வைத மடங்களில் நல்ல பயிற்சி பெற்றவர். அங்கிருந்துதான் வருகிறார் என்று தெரியும். நல்ல சமர்த்த ஸ்மார்த்தராக இருப்பார் என்று நான் நினைத்தது சரி தான் என்று தெரிந்தது.

மேலும் சொன்னேன் :

‘சோழர் மற்றும் பிற்சங்க கால மன்னர் ஆட்சியில் மன்னனும் விவசாயிகளும் சைவ மதஸ்தர்களாகவே இருந்தனர்.  இந்த ஒரு பரம்பொருள், மற்றது அனைத்தும் பிம்பம் என்ற சங்கர தத்துவம் உட்புக இது ஏதுவாக இருந்தது. மன்னனும் இதனை ஆதரித்தான். மன்னனது ஆட்சி ஸ்திரப்பட்டது. அத்துடன் கூடவே அத்வைத சம்பிரதாயமும் வளர்ந்தது.

அத்வைத சம்பிரதாயத்திற்கு முன்னர் சைவம் இருந்தது என்று சொன்னேன் இல்லையா ? அந்த நேரத்தில் தான் வணிகர்கள் ஜைன பௌத்த மதங்களை ஆதரித்தனர். இவர்களுக்குள் போட்டி இருந்தது.

ஆனால் ஜைனமும் பௌத்தமும் கடுமையான விரதங்களை போதித்தன. ஜைனம் பல உபவாசங்களைக் கட்டாயப் படுத்தியது. தங்கள் தலை முடியைத் தாங்களே பிடுங்கிக் கொள்ள வேண்டும்; சமணப் பள்ளிகளில் பல காலம் தங்கிப் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்தின. உற்பத்திக்கு இது தடையானது. யாவரும் துறவு கொண்டால் யார் வேலை செய்வது ?

சைவம் இருந்த காலத்தில் சாதிக் கட்டுக்கள் அவ்வளவாக இல்லை.  500 வருஷங்களுக்கு முன்பு ( 6-ம் நூற்றாண்டு ) நாயன்மார்கள் தோன்றினார்கள். அவர்கள் சைவத்தை மேலெடுத்துச் சென்றனர். அக்காலத்தில் தான் சைவத்திற்கும் ஜைன-பௌத்த சமயங்களுக்கும் இடையே போராட்டம் நடந்தது.

ஆதி சங்கரரின் ஆளுமையாலும் அவரது ‘ஏக-பிரும்ம’ தத்துவத்தின் அரச அங்கீகரிப்பாலும் ஸ்மார்த்த அத்வைத சித்தாந்தம் வேறூன்றியது. ஜைன-பௌத்த மதங்கள் அழிந்தன.

ஆனால் அத்வைத ஸம்பிரதாயத்தில் ஒரு பெரும் குறை இருந்தது. அது உற்பத்தி செய்யும் விவசாயிகள், கைத்தொழில் விற்பன்னர்கள் முதலியோரை அரவணைத்துச் செல்லவில்லை. ‘ஏக-பிரும்ம’ தத்துவத்தின்படி அரசன் பெரும் வலிமை கொண்டவனாக இருந்தான். ஆனால் உற்பத்தியாளர்கள் அல்லல் பட்டனர். அதிக வரி வசூல் என்று இருந்ததால் இவர்களிடையே கசப்புணர்வு தோன்றியது.

அது மட்டும் அல்ல. சங்கரரது தத்துவத்தில் பிராம்மணன் மட்டுமே மோட்சம் அடைவான் என்று இருந்தது. மற்ற வர்க்கத்தினர் பல பிறவிகள் எடுத்துப் பின்னர் பிராம்மண ஜென்மத்தில் தான் மோட்சம் என்று இருந்தது பெருவாரியான மக்களுக்கு எதிராக இருந்தது. ‘வடமன் முற்றி வைஷ்ணவன்’ என்ற கோட்பாடு இருந்த காலம் அது. பல நிலைகளையும் கடந்து பின்னர் ஒரு பிறவியில் வடமன் என்ற ஸ்மார்த்தப் பிறவி அடைகிறான். அந்தப் பிறவி முடிந்ததும் வைஷ்ணவப் பிறவி பெறுகிறான். இதன் பின்னரே அவன் மோட்சம் அடைகிறான் என்ற கோட்பாடு மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

அதன் பின்னர் ஆழ்வார்களின் காலம். அவர்கள் அது நாள் வரை இருந்த ஆன்மீக சிந்தனையையே புரட்டிப்போட்டனர்.

அதன் பின் நாத முனிகள் என்ற வைஷ்ணவ ஸ்வாமி தோன்றினார். அவரும் அவரது பின்னவரான ஆளவந்தாரும் எடுத்துரைத்த தத்துவம் எனது ‘விஸிஷ்டாத்வைத’ தத்துவத்திற்கு அடிப்படையானது.

ஆளவந்தாரின் அருளால் அடியேன் ஆச்சாரிய பீடம் ஏற்றேன்.

வெகுஜன மக்களுக்கு ஆன்மீகம் போய்ச் சேர வேண்டுமானால் அது அவர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்தபடி இருக்க வேண்டும். இது என் முதல் செய்தி.

இரண்டாவது நான் ஆழ்வார்கள் பற்றித் தெரிந்துகொண்டது. அவர்கள் வாழ்ந்த காலமும் நாயன்மார்கள் காலமும் ஒன்றே. அத்வைத சித்தாந்தத்தை சங்கரர் பரப்பிக் காலூன்றிய நேரத்தில் ஆழ்வார்கள் இல்லை. பின்னர் வந்த அவர்கள் பிரும்மத்தை அடைய குலமோ, கடமைகளோ, குடிப்பிறப்போ தேவையில்லை என்றும், ஆழ்ந்த ஆசார அனுஷ்டானங்கள் தேவை இல்லை என்றும், பக்தி மட்டுமே போதும் என்றும் நிலை நிறுத்தினார்கள்.

எனது விஸிஷ்டாத்வைதமும் இதை அடியொற்றியதே.

பாமரர், கூலி வேலை செய்பவர், பஞ்சமர், புலையர், அந்தணர், அரசர், மண் பாண்டம் செய்பவர், பெண்கள் – இபப்டி அனைவரும் ஒரு தரமே. இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. இவர்கள் அனைவரும் ‘ பிரபத்தி ‘ என்ற சரணாகதி செய்வதன் மூலமே மோக்ஷம் அடைய முடியும்.

இப்படி ஒரு சம தர்ம சிந்தனையை நிறுவியதன் பலன் – மக்கள் அனைவரையும் நான் வைஷ்ணவனாக்கினேன். மக்களை ஒற்றுமைப்படுத்தினேன்.

‘அது எப்படி முடியும்? அனைவரும் ஒன்று என்பது எப்படி சாத்தியம்? வைஷ்ணவனாக்கினேன் என்றால் மத மாற்றம் செய்தீர் என்று கொள்ளலாமா?’, என்றார் ஸ்ரௌதிகள். அவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

‘அங்கு தான் தத்துவம் வருகிறது ஸ்ரௌதிகளே. இதுவரை நாம் லௌகீகமாக ஆராய்ந்தோம். தேவரீர் கூட ஆட்சேபித்தீர். இப்போது தான் கருத்தியல் என்னும் தத்துவத்தின் உள்ளே புக வேண்டியுள்ளது’, என்று நான் தொடர்ந்தேன்.

 நான் இராமானுசன் – ஒரு துவக்கம்

நான் இராமானுசன் – பகுதி 1

நான் இராமானுசன் – பகுதி 2

நான் இராமானுசன் – பகுதி 3

நான் இராமானுசன் – பகுதி 4

%d bloggers like this: