பொக்கிஷம்

10 வருஷங்களுக்கு முன் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் தாயார சன்னிதியில் பூமியில் புதைக்கப்பட்ட உண்டியலில் பல ஆயிரம் வருஷ வைர வைடூரியங்கள் இருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் புரளி கிளப்பி விட, அது வரை அப்படி ஒரு கோவில் இருப்பதையே அறியாத இந்து அற நிலையாத்துறை உயிர்த்தெழுந்து ஆ.டி.ஓ, ரெவென்யூ இன்ஸ்பெக்டர், போலீஸ் மற்றும் அவர்கள் பரிவாரங்கள் புடைசூழ மத்தளம் கொட்ட, விரிசங்கம் நின்றூத, ‘பொக்கிஷத்தை’ கைத்தலம் பற்றக் கனாக்கண்டு ஜீப், கார் முதலிய ரத கஜ வாஹனங்களின் வந்து சேர்ந்தார்கள். ஊர் மக்களைக் காட்டிலும் இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்க, நான்கு பேருக்கு மேல் பார்த்தறியாத ஊரின் பைரவர்கள் ( நாய்கள் ) அரண்டு அடித்துக்கொண்டு கோவிலுக்குப் பின்னால் நந்தவனத்தில் ஓடி ஒளிந்து கொண்ட நல்ல நாளில் ஆர்.டி.ஓ. தலைமையில் உண்டியல் உடைக்கலாம் என்று முடிவானது..

எதற்கும் இருக்கட்டுமே என்று பாம்பாட்டிகளையும் உடன் அழைத்து வரச் செய்தார்கள்.

உண்டியல் லேசில் அசையவில்லை. பெரிய கடப்பாரைகள் கொண்டுவந்து ஆறு பேர் சேர்ந்து பூமியில் இருந்து பெயர்த்து எடுத்தார்கள். அது ஒரு மிகப்பெரிய கருங்கல் பத்தாயம் போல் இருந்தது. அதன் உள் என்ன இருக்குமோ என்ற கவலையில் மக்களை நகர்ந்து நிற்கச் செய்து அதனுள் மெதுவாக ஒரு கம்பியை இறக்கினார்கள். ‘ணங்’ என்ற ஒலி கேட்டதும் ஆர்.டி.ஓ. குதூகலமடைந்தார். சோழ ரத்தினங்கள் அவர் கண் முன் தோன்றின.

கிணறு இறங்குபவர்கள் இருவரை அழைத்து உள்ளே இறங்கிப் பார்க்கச் சொல்லலாம் என்று முடிவானது. அதற்குள் ஏன் அதை ஒரு பக்கமாக சாய்த்துப் பார்க்க்லாமே என்று பெரியவர் ஒருவர் சொன்னார். 4 பேர்  அந்தக் கருங்கல் பேழையை நகர்த்தி ஒரு பக்கமாக சாய்க்க முயற்சித்தனர்.

ஊரே ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது.

‘படீர்’ என்று என்று ஒரு சப்தம். மக்கள் அலறி அடித்து ஓடினர். பேழையை நகர்த்தியவன் ஒருவன் கை தவறி விட்டுவிட்டான்.

ஆயிரம் காலப் பேழை என்று நம்பப்பட்ட அந்தக்கருங்கல் பத்தாயம் உடைந்து விழுந்தது. உள்ளேயிருந்து ‘கல கல’ என்று பல நாணயங்கள் தெறித்து விழுந்தன. சில சங்கிலிகள், சில கொலுசுகள், வளையல்கள், உடைந்த பென்சில், சில ரப்பர், சிலேட்டுக் குச்சி. மஞ்சள் கலர் ரிப்பன், மூக்குக்கண்ணாடியில் ஒரு பக்க கம்பு முதலியன அவற்றுள் சில.

அப்படியே அள்ளிக்கொண்டு சென்றது துறை. பொக்கிஷங்களாம்.

அரைமணி நேரம் கழித்து சன்னிதி வாசலில் நானும் செங்கமலவல்லித் தாயரும் உடைந்த அந்தக் கருங்கல் பேழையைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

நம்மாழ்வார் ஒதுக்கப்பட்டாரா ?

இலக்கிய வட்டக் கூட்டத்தில் இன்று பேரா.முருகரத்னம் ‘வள்ளுவரை அறிவோம்’ என்ற தலைப்பில் பேசினார். கூட்டம் வழக்கம் போல் இல்லாமல் பெரும் கலந்துரையாடலாக அமைந்தது. வள்ளுவர் சமய சார்பற்றவர் என்பதை நிறுவப் பலர் முயன்றனர். நான் கீழ்காணும் சான்றுகளைக் கூறி அவர் சைவ, வைணவ, வைதீக சமயத்தவர் என்று வாதிட்டேன்.

1. ‘இந்திரனே சாலும் கரி’
2. அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’
3. மஹாலக்ஷ்மி பற்றிய குறிப்பு
4. ஊழ் ( விதி ) பற்றிய குறிப்பு ( ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்..)
5. ஏழு பிறப்புகள் – ‘எழுமைக்கும் ஏமாப்புடைத்து’.)
6. தாமரைக் கண்ணன் உலகு..’
7. ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்..’
8. ‘ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்..’ – பசு, அந்தணர் பற்றிய குறிப்பு
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்..’ எட்டு குணங்களை உடைய சைவ சித்தாந்தக் கடவுள்.

ஆனால் வள்ளுவரை எம்மதமும் சாராதவர் என்று காட்ட வேண்டிய கட்டாயம் இருந்ததாகவே இன்றைய விவாதங்கள் எனக்குக் காட்டின.

நம்மாழ்வாரை வைதீகர்கள் ஒதுக்கி வைத்தனர் என்றும், அவரை வைத்துத் தான் தென்கலை, வடகலை பேதங்கள் ஏற்பட்டன என்றும் பேராசிரியர் கூறினார். இது குறித்து Friedhelm Hardy என்னும் ஆங்கில அறிஞர் எழுதிய Nammazhwar – The untouchable saint என்னும் நூலில் இப்படிக் கூறியுள்ளார் என்றும் பேசினார். அதைத் தொடர்ந்து ‘நம்மாழ்வாரும் வள்ளுவரும்’ என்று ஒரு நூல் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.

என் கேள்விகள் :

நம்மாழ்வாரை யார் ஒதுக்கி வைத்தார்கள் ? திருமால், மஹாலக்ஷ்மி அதன் பின்னர் சடகோபன் என்கிற நம்மாழ்வார் என்றே வைணவ சம்பிரதாயம் வைத்துள்ளது.

‘என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே அவர்குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் ந்ம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமாள் திருவடிகள் அடைகின்றேனே’ என்று வழிபடு முறையை ‘அதிகாரசங்கிரகம்’ என்னும் நூல் சொல்கிறது.

சடகோபன் என்கிற நம்மாழ்வாருக்குப் பின்னரே லட்சுமி குறிப்பிடப் படுகிறாள்.

அத்துடன், நம்மாழ்வார் வேளாளர். அவரையே தெய்வமாகப் போற்றிய இன்னொரு ஆழ்வார் மதுர கவி ஆழ்வார்.  இவர் அந்தணர். ஆனாலும் ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று நம்மாழ்வாரைப் பற்றி மதுரகவி சொல்கிறார். ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே  இருப்பேன்’ என்று சொல்கிறார்.

அந்தணரான மதுரகவி, வேளாளரான நம்மாழ்வாரை இவ்வாறு போற்றி இருக்கிறார். திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் ( நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.

மார்க்கட நியாயம், மார்ஜார நியாயம் என்று குரங்கு, பூனை நோக்கு என்கிற அடிப்படையில் தான் வடகலை, தென்கலைப் பிரிவுகள் உள்ளனவே ஒழிய, நம்மாழ்வாரை ஏற்றுக்கொள்வதனாலோ, கொள்ளாததனாலோ அல்ல.

நம்மாழ்வார் 7-9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். தென்கலை, வடகலைப் பிரிவுகள் 13-ம் நூற்றாண்டில் துவங்கின. தென்கலைக்குப் பிள்ளைலோகாச்சாரியாரும், வடகலைக்கு வேதாந்த தேசிகரும் தலைமை ஏற்றனர்.

இதுவும் தவிர், தமிழைத் தீட்டு மொழி என்று வைணவர்கள் சொன்னதில்லை. நம்மாழ்வாரின் பாசுரங்கள் வேதத்தின் சாரம் என்று ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படுகிறார்.

11-ம் நூற்றாண்டின் நாத முனிகள் எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களையும் தொகுத்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் இயற்றுகிறார். பிரபந்தங்கள் பாடாத வைணவக் கோவில்கள் உண்டா ?

அத்துடன் ஆழ்வார்களில் அந்தணரல்லாத ஆழ்வார்களே அதிகம். இப்படி இருக்க, நம்மாழ்வாரை மட்டும் ஒதுக்கினார்கள் என்று சொல்வது என்ன நியாயம் ?

உண்மை இப்படி இருக்க, வெள்ளையர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நம்மாழ்வாரை வைதீகர்கள் ஒதுக்கி வைத்ததாகப் பெரியவர்கள் சொல்வது வருத்தம் அளிக்கிறது.

பெருமாளைக் காக்க வாருங்கள்

நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பெருமாள் சேவை கிடைத்த விதம் பற்றி இங்கே எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பெருமாள் பற்றி இன்னும் சில விஷயங்கள் பேசலாம் என்று இந்தப் பதிவு.

என்ன பயன் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யாராவது இந்தப் பெருமாள் எந்த ஊர் என்று தெரிவிக்கலாம். 50-60 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தின் கோவில் உடைக்கப்பட்டு பெருமாள் சிலை திருடு போயிருக்கலாம். அதைக் காவல் துறை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். அல்லது உங்கள் கிராமத்தை விட்டே நீங்களோ உங்கள் பெற்றோரோ வெளியேறி அந்தத் திருட்டு உங்களால் மறக்கப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அதனை மீண்டும் நினைவு படுத்திப் பாருங்கள். உங்கள் உற்றார் உறவினர் யாராவது இந்த மாதிரியான கிராமங்களில் இருந்தால் அவர்களிடம் பகிருங்கள். அவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படி எல்லாம் செய்து இப்பெருமாள் எந்த ஊர்க்காரர் என்று தெரிந்தால் எந்த ஊரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டார் என்று தெரிந்தால் அரசு மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்று முயன்று பார்க்கலாம். நான் மத்திய அரசைச் சொல்கிறேன்.

Perumal Face

பல ஊர்களில் பெருமாள் உற்சவர் விக்ரகம் புன்முறுவல் பூத்தபடி இருக்காது. வெகு சில ஊர்களில் மட்டுமே இவ்வாறு அமையும். எங்கள் தேரழுந்தூர்ப் பெருமாள் சிரித்தபடி இருக்கிறார். நியூ யார்க் அருங்காட்சியகப் பெருமாளும் புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறார். ஆக புன்முறுவல் சிரிப்பு கொண்ட உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று விசாரிக்கலாம்.

காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருமலை முதலிய ஊர்களில் உள்ள உற்சவர் விக்ரஹங்கள் முகங்களில் தழும்புகள் இருக்கும். ‘அம்மை வடு’ என்று சொல்வது உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல ஆயிரம் முறைகள் திருமஞ்சனம் என்னும் அபிஷேகங்கள் நடந்துள்ளபடியால் அவ்வாறு ஆவது உண்டு.

ஆனால் நியூ யார்க் பெருமாள் அப்படி இல்லை. கி.பி. 10ம் நூற்றாண்டு என்று எழுதி வைத்துள்ளார்கள். ஒன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு அவருக்கு அவ்வளவாக திருமஞ்சனங்கள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது புதைந்த நிலையில் பல நூறு ஆண்டுகள் இருந்து, பின்னர் கண்டெடுக்கப்பட்டு / திருடப்பட்டு அமெரிக்க செல்வந்தருக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது பல நூறு ஆண்டுகளாகவே கோவிலில் இருந்தும் வழிபாடுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் ; கிராமத்தில் வேலை இல்லாமல் ஊர் மக்கள் கிராமத்தைக் காலி செய்தவுடன் பெருமாள் திருடப்பட்டிருக்க வேண்டும். இந்த ஏதாவது ஒரு காரணத்தால் அவர் இன்னும் சற்று இளமையாகவே தெரிகிறார்.

இளமையாகத் தெரிந்தாலும் முகம் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒருவித சமன்பாட்டுடன் தெரிகிறது. ‘அபயஹஸ்தம்’ என்னும் அருள் வழங்கும் கையில் ரேகைகள் தெரியவில்லை. வழவழப்பாக இருக்கிறது. எனவே மிகப் பழமையானவர் தான்.

பெருமாளின் இடது நெற்றியில் ஒரு காயம் காணப்படுகிறது. அது சிலையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும் / கடத்தும் போது ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்கெனவே காயம் இருந்தால் ‘பின்னம்’ என்று சொல்லி கோவிலிலேயே ஓரமாக வைத்து விடுவர்கள் அப்படி உங்களுக்குத் தெரிந்த எந்தக் கோவிலிலாவது நடந்ததா என்று ஆராயலாம்.

Pin sevai

பெருமாளின் பின்சேவை ( பின்புறம் )யில் சடை முடி தெரிகிறது. ஒருவேளை இவரது பெயர் ‘சௌரிராஜன்’ என்று இருந்திருக்கலாம். எனவே ‘சௌரிராஜப் பெருமாள்’ கோவில்களில் ஏதாவது சிலைகள் திருடப்பட்டனவா என்று நீங்கள் ஆராயலாம்.

பெருமாளின் பெயர் ‘கேசவன்’ என்று கூட இருக்கலாம். ‘கேசம்’ என்றால் தலை முடி என்று பொருள். ‘ஆதி கேசவன்’, ‘கேசவன்’ என்ற பெயர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏதாவது திருட்டு நடந்துள்ளதா என்று ஆராயலாம்.

அவரது இரண்டு கைகளிலும் சிற்பங்கள் தென்படுகின்றன. அவவை ‘நாக பாச’மாக இருக்கலாம். நாக பாசம் உள்ள உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று கணக்கிட்டால் சில துப்புகள் கிடைக்க வழியுண்டு.  அவை மகாலக்ஷ்மி போலவும் தெரிகின்றன. அதை வைத்தும் தேடலாம்.

Perumaal Nagapaasam

புறப்பாடு செய்வதற்கு ஏற்றபடி பீடத்தில் வளையங்கள் தெரிகின்றன. இவை எல்லா ஊர்களிலும் இல்லை. இதையும் தேடுவதற்கு ஒரு விஷயமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

purappaadu

இவை எல்லாம் நம் கையில் உள்ள ஆயுதங்கள். செய்தியைப் பரப்பிப் பாருங்கள். ஏதாவது ஊருக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச் செல்லும் போது அங்குள்ள பெரியவர்களிடம் 50-60 ஆண்டுகளில் பெருமாள் சிலை திருட்டு ஏதாவது ஏற்பட்டதா என்று கேட்டுப் பாருங்கள். முக்கியமாக ஸ்தபதிகள், அர்ச்சகர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கலாம். யாருக்காவது பொறி தட்டலாம். அதன் மூலம் சிலை திருட்டை நிரூபித்துப் பின்னர் நியூ யார்க் அருங்காட்சியகத்திற்கு அரசு மூலம் எழுதலாம்.

ஏதாவது செய்வோம். நம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்

நியூ யார்க் அருங்காட்சியகம் சென்றிருக்க வேண்டாம் தான். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவரச் சென்றேன். சிட்டி வங்கி ஊழியன் என்பதால் இலவசமாக அனுமதி அளித்தார்கள்.

எகிப்திலிருந்து வந்திருந்த பல பண்டைய மன்னர்களின் மம்மி உருவங்கள், சமாதிக் கல்லறைகள் முதலியன தாண்டி சீன வரலாற்றுப பொருட்கள் கடந்து இந்தியக் கலைப் பொருட்கள் இருந்த இடம் நோக்கித் திரும்பினேன். அந்த அறை இருட்டாக இருந்தது. உள்ளே மனித நடமாட்டம் இல்லை. ஆனாலும் பேச்சுக்குரல் கேட்டமாதிரி இருந்தது. இருக்கட்டும் என்று உள்ளே சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடன் வரலாற்றில் கால் வைத்தது போல் இருந்தது. அறை இருளில் சில இடங்களில் மட்டும் ஒளியூட்டல் இருந்தது. ஒளியூட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அழகு திருமேனிகள். செப்புச் சிலைகள் அல்லது வெண்கலச் சிலைகள். எல்லாம் சோழர் கால வார்ப்புகள்.

Gnaanasambandhar

பார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்றேன். திருஞானசம்பந்தர் திரு உருவம். அம்மையிடம் ஞானப்பால் குடித்த அந்தக் குழந்தை இன்று அமெரிக்காவில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆடை இல்லாமல் நின்ற திருக்கோலம். தவக்கோலம் பூண்ட திருமேனியின் இன்றைய கோலம் அலங்கோலம். சிரித்த முகம். இடது கையில் பாலாடை என்னும் பால் புகட்டும் பாத்திரம் போல் தெரிந்தது. ‘செம்மொழி எல்லாம் வளர்த்த நீங்கள் இந்தப் பால யோகியை மறந்தீரே’, என்று கேட்டது போல் இருந்தது. கன்னத்தில் ஓர் அறை விழுந்த மாதிரி இருந்தது.

பால சன்னியாசிக்கு அருளமுதம் ஊட்ட வேண்டி அன்னை பார்வதியும் அருகிலேயே இருந்தாள். கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்த அவள் அபிராமி பட்டர் தற்போது தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா வந்துவிட்டேன் என்றாள்.

Siva & Parvathi

அம்மை இருந்தால் அப்பன் இல்லாமலா? அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன ? அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா ? முருகனும் இருக்கிறான் இருவருக்கும் இடையில்.

அட, மூத்த மகன் இல்லையா என்றால் அவன் சற்று தள்ளி நிற்கிறான். என்ன இருந்தாலும் இளைய பிள்ளை செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒரு மகானுபாவன் 10 சென்ட் நாணயம் வைத்துச் சென்றிருக்கிறான். அதற்கு சந்தோஷப்பட்டுப புன்னகையுடன் நிற்கிறான் கணபதி.

தெய்வங்கள் இருந்தால் அடியார் இருக்கமாட்டாரா ? தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் ? அவரும் இருக்கிறார்.

Kaaraikkaal Ammaiyaar

இவர்கள் அனைவரையும் கவனித்தபடி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் எம்பெருமான் நாராயணன்.Perumaal

‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’, சங்கோடும் சக்கரத்தோடும் அபய ஹஸ்தத்தோடும் சாந்த மூர்த்தியாய் நிற்கிறான் தனியாக. மூன்று வேளை ஆராதனமும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வருடாந்திர உற்சவங்களும் காணாமல், ஒரு வேளை கூட அமுது இன்றி இன்னும் நின்றுகொண்டிருக்கிறான் எம்பெருமான்.

வார்ப்பில் தெரிகிறது இவன் எங்கள் ஊர்ப்பக்கம் தான் என்று. பிற்கால சோழர் வார்ப்பு. பிரயோக சக்கரம் உபயோகத்திற்குத தயாராகத தெரிகிறது. ஆனால் என்ன ஊர் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திவ்ய தேசமாக இருக்கலாம். ஏதோ திவ்யதேசத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் இவர். சிலையின் கீழ் உற்சவங்களின் போது புறப்பாடு செய்யப் பயன்படும் வகையில் பீடம் அமைந்துள்ளது.

purappaadu

வேலைக்காக பட்டாச்சாரியார்களும் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போனதால் பெருமாளும் அவர்களைத் தேடிக்கொண்டு நியூ யார்க் வந்து விட்டானோ என்று நினைத்தேன். ஆனால் பெருமாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதே மௌனம் தான். ஏதோ கோபம் போலும் தெரிந்தது.

கோவில் ஒழுகில் இராமானுசர் என்ன உற்சவங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரோ அவற்றில் ஒன்று கூட இல்லாமல், ஒரு வேளை தளிகை கூட இல்லாமல் தனியாகப் பல நூறு ஆண்டுகளாக நின்றுகொண்டிருப்பதால் கோபம் வராமல் என்ன செய்யும் ? என்றும் நினைத்தேன். ஆனால் மனம் தாளவில்லை. ஒரு காரியம் செய்தேன்.

Me with Lordஆவது ஆகட்டும் என்று பெருமாள் அருகில் நின்றுகொண்டேன். கையைக் கூப்பிக்கொண்டு தேரழுந்தூர் பாசுரங்கள் ( ‘தேமருவு பொழிலிடத்து.., செங்கமலத் திருமகளும் புவியும்…, திருவுக்கும் திருவாகிய செல்வா.., தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ … ) பாடி னேன். கண் திறந்த போது என்னைச் சுற்றி ஒரு சிறு கூட்டம். சீனர்கள், அமெரிக்கர்கள் என்று 7-8 பேர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பழியைத துடைத்த பெருமிதம் எனக்கு. பெருமாளைப் பார்த்தேன். புன்முறுவல் போல் தெரிந்தது. எந்த நூற்றாண்டில் இவர் இப்பாசுரங்கள் கேட்டாரோ தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டில் கேட்டுவிட்டார். நானும் ஆழ்வாரானேன். அமெரிக்காவும் திவ்யதேசமாகியது.

கூட்டம் என்னையே பார்த்தது. நான் பெருமாளைப் பார்த்தேன். ‘என்னால் உன்னைப பாரதம் கொண்டு செல்ல முடியாது. கையாலாகாத பாவி நான். என்னால் முடிந்தது பாசுரம் பாடுவது தான். எனவே என்னை மன்னித்தருள்வீர் பெருமாளே’, என்று வேண்டியபடி நின்றிருந்தேன். ஒரு அமெரிக்கர் படம் எடுத்தார்.

Yoga Narasimharகூட்டம் ஒரே இடத்தில் இருப்பது பார்த்த அருங்காட்சியக அதிகாரி ஒருவர் விசாரிக்க வந்தார். அதற்குள் நான் ‘யோக நரசிம்மர்’ சந்நிதிக்குச் சென்று விட்டேன். ஆமாம் அவரும் இங்கு தவக்கோலத்தில் இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில் இருந்து ‘சாணிலும் உளன் ஓர் அணுவைச சத கூரிட்ட கோணிலும் உளன்..’ என்ற பாடலையும், ‘ஆடியாடி அகம் கரைந்து ..’ என்ற திருவல்லிக்கேணி பாசுரத்தையும் பாடினேன். அதிகாரியும் பார்த்தபடி நின்றிருந்தார்.

விட்டு வைப்பானேன் என்று சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடம் சென்று ‘பொன்னார் மேனியனே..’ பதிகம் பாடினேன். அதிகாரி ஒன்றும் சொல்லவில்லை.

அந்த அதிகாரியிடம் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒரு திருமால் சிலையில் சக்கரம் இடம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்தச் சிலையையும் வெண்கலப் பெருமாள் சிலையையும் ஒப்பிட்டுக்காட்டி விளக்கினேன். அவர் குறித்துக் கொண்டார். ‘I am not an authority on these sculptures. But as you are a native of India, I take note of this and would make a report to the authorities’, என்று எழுதிச் சென்றார்.

அனாலும் பெருமாளின் இந்த இழி நிலை மனதை விட்டு நீங்க வில்லை. மீண்டும் ஒரு முறை வலம் வந்து பல படங்கள் எடுத்தேன். இதைக் காண்பவர்கள் யாராகிலும் உங்கள் ஊரில் பெருமாள் சிலைகள் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதா என்று சரி பார்க்க வேண்டுகிறேன். இந்தச் சிலையை John D.Rockfeller ( ராக் பெலலர் ) என்னும் அமெரிக்க பெருஞ்செல்வந்தர் இவ்வருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. நம்மூரில் பெருமாளை விற்றவர் யார் என்று பார்த்தால் 40 ஆண்டுகளுக்குள் பதவியில் இருந்தவர்களில் யாராவது ஒருவராக இருப்பார்கள்.

40 வருட திராவிடக் கட்சிகளின் அழிச்சாட்டியத்தில் நமது பாரம்பரியம் கொள்ளை போனது. நமது வரலாறு நம் கண் முன்னே மெள்ள மூழ்கி அழிந்தது. நாம் மௌன சாட்சிகளாக இருந்தோம். வரலாறு அழிக்கப்பட்ட போது வேறு பக்கம் பார்த்தோம். ஒன்றும் நடவாதது போல் சினிமாவில் மூழ்கி இருந்தோம். சரோஜா தேவியும் தேவிகாவும் நமது இச்சைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் காதல் செய்ய விட்டு நமது சுய இச்சைகளை நிவர்த்தித்துக் கொண்டோம். ஆண்மை இழந்து நிற்பதை ஒரு பெருமையாகப் பேசினோம். அதற்கு ‘பகுத்தறிவு’ என்று பெயர் வைத்தோம். அல்லது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டு மூலையில் முடங்கினோம். ஆங்கிலக் கல்வி பயின்று அடிமாடுகளாக நிற்பதை ‘செக்யூலரிசம்’ என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டோம்.

ஜெயமாலாக்களின் மேனி வனப்பின் சூடு தணியும் முன்னர் சில சிலுக்குகளுக்குத் தாவினோம். ‘நேத்து ராத்திரி அம்மா’வைப பிள்ளைகள் முனகியபடி பாடக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தோம். வடிவேலுவின் உடல் சேட்டைகளையும் வட்டார வழக்கையும் நாம் பயன் படுத்துவதை ஒரு பெருமையாகப் பறை சாற்றினோம். நமீதாவின் உடலை அளவு எடுத்துக்கொண்டிருந்த போது அளவில்லாத நமது கலைச் செல்வங்கள் கொள்ளை போனது தெரியவில்லை. நயன்தாராவின் தொடர்புகளை ஆராய்ந்த போது நமது முன்னோருடன் நமக்கிருந்த தொடர்புகளை சிலைகள் திருட்டின் மூலம் இழந்தோம். சிம்ரனின் திருமணத்தில் நமக்கிருந்த அக்கறை சிலைகள் திருடுபோவதைத தடுப்பதில் இல்லை. குஷ்பூவிற்குக் கோவில் கட்டும் மும்முரத்தில் நமக்குக் காமாக்ஷியம்மன் கோவில் களவு போனது தெரியவில்லை. தமன்னாவின் கொள்ளை அழகால் நமது திருமால்கள் கொள்ளை போனது தெரிந்தும் வாய் மூடி இருந்தோம்.

‘கோமளவல்லி’ தாயார் நிலை தெரியாமல் ‘கோச்சடையான்’ பற்றிக் கவலை கொண்டோம். பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பாராமல் ‘விஸ்வரூபம்’  பிரச்சினை பற்றி அங்கலாய்த்தோம். 40 ஆண்டுகளாக மெதுவாக நபும்சகத் தன்மை ஊறப் பெற்றோம்.

இந்தக் காமாக்ஷிகளும், திருமால்களும் நியூ யார்க்கில் அடைக்கலம் தேடினர். இன்று நான் அவர்களை சந்தித்தேன். ஆறுதல் கூறிப பதிகம் பாடினேன்.

தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் : நியூ யார்க் வரும் போது உங்கள் மதம், சாதி முதலியன தூர வைத்துவிட்டு சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வாருங்கள். நமது தெய்வங்கள் முன்னர் சிறிது நேரம் நின்று மௌனமாக ஒரு பாசுரமோ பதிகமோ பாடுங்கள்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்.

பெயரில்லாப் பெருமகன்

20140529-214518-78318509.jpg
பெயரில்லாப் பெருமகன்

இந்த முறை தேரழுந்தூர் சென்ற போது கவனிப்பாரற்ற பழைய சிலை ஏதாவது கிடைக்கிறதா என்று சற்று கண்களை அகல விரித்துக்கொண்டு பார்த்தேன்.

நல்ல பௌர்ணமி இரவு அது. கோவிலில் என்னையும் என் தம்பியையும் தவிர ஓரிருவரே இருந்தனர். அவனும் என்னைப்போல் ஒரு வரலாற்றுக் கிறுக்கன். பொழுது போகாவிட்டால் பழையாறை சென்று ஏதாவது சோழர்காலப் பள்ளிப்படை இருக்கிறதா என்று பார்த்து வருவான்.

பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு படி இறக்கத்தில் உள்ள பழைய கல் தூணில் இந்த மானுடனின் வடிவம் தென்பட்டது. நேராகப் பார்ர்க முடியாமல் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் விதமாக உள்ளது. தூணின் மிக அருகில் கைப்பிடிச் சுவர் ஒன்று கட்டியுள்ளதால் இந்தச் சிலை இருப்பது அதுவரை தெரியவில்லை.

முன்னம் பல முறை, அதே இடத்தில் அமர்ந்து ஆமருவியப்பன் கோவிலின் கட்டடக் கலையை வியந்து பேசியதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் மிக அருகில் இருந்த இந்தத் தூண் சிற்பம் கண்களில் படவில்லை.

கண்கள் மூடியிருப்பது போலும், கைகள் கூப்பி இருப்பது போலவும் தெரிகிறது இந்த வடிவத்தைப் பார்த்தால். உடலில் ஆபரணங்கள் அதிகம் இல்லை. ஆனால் முகத்தில் ஒரு பெரிய அமைதி தெரிகிறது. ஏதோ எல்லாவற்றையும் அறிந்து அதனால் வேறு எதுவும் வேண்டாம், இறை அனுபவம் மட்டுமே போதும் என்பது போன்ற ஒரு பேரமைதி இந்த ஆடவரது முகத்தில் தெரிகிறது.

இவர் யார் என்று விசாரித்தேன். அப்படி ஒரு தூண் சிற்பம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.

அவரது கைகளில் ஆயுதம் இல்லை. உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லை. அதிக ஆபரணங்கள் இல்லை. இடையிலும் பெரிய ஆடைகள் எல்லாம் இல்லை. ஒரு துண்டு போல் ஏதோ ஒன்றை அணிந்துள்ளார். கால் பாதங்கள் தெரியவில்லை. எனவே தண்டை முதலியன அணிந்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.

யாராக இருக்கலாம் இவர் ?

ஆமருவியப்பன் கோவில் கட்டிய யாராவது மன்னனாக இருக்கலாமா ? முதலாம் பராந்தக சோழன் கட்டியது என்று அறிகிறேன். ஆனால் அரசனுக்கு உரிய எந்த அலங்காரமும் இல்லை.

அரசன் ஏதாவது போரில் வெற்றி பெற உதவிய போர் வீரனாக இருக்கலாமோ ?  ஆனால் ஆயுதங்கள் எதுவும் இல்லை.

அல்லது கோவிலை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்கும் வேலையில் தன் உயிர் இழந்த வீரனாக இருக்கலாமோ ?

அல்லது கோவிலை நல்ல முறையில் கட்டிய ஸ்தபதியாக இருக்கலாமோ ?

கவிச் சக்கரவர்த்தி கம்பர் இந்த ஊர்க்காரர் தான்.

கம்பர் இந்தக் கோவிலில் இருந்து தான் கம்ப இராமாயணம் எழுதியுள்ளார். எனவே அவனது உருவமாக இருக்குமோ ? இருக்கலாம். ஆனால் சற்று இளமையாகத் தெரிகிறது. ஆகவே இருக்க வாய்ப்பு குறைவு. அத்துடன் அவ்ருக்கும் அவரது மனைவிக்கும் தனியாக சன்னிதி உள்ளது. எனவே அவராக இருக்க முடியாது.

ஒருவேளை கம்பனின் மகன் அம்பிகாபதியாக இருக்கலாமோ ? சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்த அம்பிகாபதியாக இருக்கலாமோ ? ஆனால் அவனது உருவத்தை இந்தக் கோவிலில் வடிக்க வேண்டிய காரணமென்ன ?

ஒருவேளை அருகில் உள்ள பழையாறையில் இருந்த குந்தவை நாச்சியாரின் அபிமானம் பெற்ற சிற்ப வேலைக்காரராக இருக்கலாமோ ? குந்தவை தான் பல கோவில்களையும் கற்றளிகளாக மாற்றினாள். அவளது ஆசியுடன் இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்த சேனாதிபதி அல்லது ஊழியராக இருக்குமோ ?

இப்படிப் பலவாறு எண்ணிக்கொண்டிருந்தேன்.

அந்த இரவு அமைதியாக இருந்தது. நான் கல் தூண் சிலை முன் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.

எத்தனை ஆயிரம் தலைமுறைகள் இவர் கண் முன்னால் கடந்து சென்றிருக்கும் ?

எத்தனை செறுக்கு மாந்தர்கள் அழிவை இவர் பார்த்தபடி நின்றிருந்திருப்பார் ?

என்னைப் போல் இந்த ஆயிரம் வருடங்களில் எத்துணை பேர் இவரைப் பார்த்தும் பார்க்காமலும் சென்றிருப்பர் ?

இவர் செய்த தியாகம் என்னவோ ? கோவிலுக்கும் கலைக்கும் இவரது பங்களிப்பு என்னவோ ?

எந்த ஒரு பதிலும் பேசாமல் மௌனியாக இதுவரை கடந்து சென்றுள்ள வரலாறுகளுக்கும் வர இருக்கின்ற நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இவர் நின்றுகொண்டிருக்கிறார்.

எத்தனை நேரம் அவர் முன் நின்றிருப்பேன் என்று தெரியவில்லை.

‘இந்த ஆயிரம் ஆண்டுகளில் ஏதோ நீயாவது என்னைப் பற்றி நினைத்தாயே’, என்று அவர் நினைப்பது போல் உணர்ந்தேன்.

வெகு அருகில் யாரோ நன்றியுடன் பெருமூச்சு விடுவது போல் பட்டது.

திடீரென்று என் உடம்பு சில்லிட்டது போல் உணர்ந்தேன்.

சுற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. ஒரு வௌவால் மட்டும் பறந்து சென்றது.

வானில் நிலா மட்டும் காய்ந்துகொண்டிருந்தது. நிலா வெளியில் நானும் இந்தப் பெயர் தெரியாப் பெருமகனும் ஒரு மௌன சம்பாஷணை நிகழ்த்திக்கொண்டிருந்தோம்.

என் மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

‘நீங்கள் யாரோ எவரோ. இத்தனை ஆண்டுகள் இந்தக் கோவில் எனும் கலைப் பொக்கிஷத்தைக் காவல் காத்தபடி நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீரே காவல் வீரர் ஆகுக. நீரே இதன் சிற்பி ஆகுக. நீரே இந்தப் பரந்த சோழ ராஜ்ஜியத்தின் காவலன் ஆகுக.

இத்தனை ஆண்டுகள் பத்திரமாகக் காத்திருந்து, காவல் இருந்து இந்த வரலாற்றுத் தொன்மத்தை எங்கள் தலைமுறை வரை காத்து வந்துள்ள உமக்கு எனது நன்றிகள்’.

The 'Little' God

 

Krishna 1Krishna 2

Lo and behold this child. Or should I say Child with a Capital ‘C’ ?

This little child epitomizes the eternal dance of the divine. With a leg lifted and an arm calling out to somebody for some more ‘butter’ and another arm covering his ears, it seems he is calling out to a person located far off, probably his mother who is busy churning curd to get butter but is safely located at a distance so that the child is not able to come over and usurp the churned butter.

The child is seen having a flute strapped to his waist belt. The intricacies of this copper masterpiece are so delicate that even the bulges on the child’s belly region, signifying the more than enough padding due to butter consumption, are clearly visible. The attention to detail that the sculptor had had simply amazes one beyond ones’ imagination.

The ‘Little Krishna’  that is hardly 15 cm tall is seen in the Ahobila Mutt premises, Therazhundhur.

This image was buried in the multitude of divine relics and idols that are used in everyday worship until recently when its splendor became visible to worshipers.

Nobody seems to know the origins of the little Krishna. The divine idol has been in worship since time immemorial. Upon inquiries with the 90 year old priest in the village, we come t know that it is likely tht some child-less couple could have donated the idol to the Mutt some many hundreds of years ago in anticipation of begetting a child.

The unique skill displayed in the carvings n the idol and the immaculate attention to detail on every ornament that a child used to wear during those times points to a minimum of 500 years’ lineage.

500 years is indeed a long time – half a millennial period. I was lost in thoughts n the number fi people who would have prayed to this ‘little god ‘ in anticipation of a child in the last 500 years.

The child god would have been witness to those great times of plenty during the reign of Krishna Deva Raya as also the great famines of the 18th century during the British regime. He would also have been witness to the mass exodus of people from the village in search of better opportunities elsewhere due to the great droughts of the past, the mass migration of people from other regions of the country to the village from even more drought hit villages in search of water and livelihood – all these would have happened befoer His very eyes.

He would have seen many children born as a result of His benign grace and also would have witnessed the very same children grow up in front of him. He would also have seen the children play around the Mutt’s large pillars while their parents prayed to Him. And He would have also seen the very same children grow up, age and pass on the mantle to their children in a continuous cycle of births and deaths.

Not only these.

He would also have been witness to the time when the huge temple chariot was burnt by ‘supposedly’ miscreants. And now He is also witness to the new chariot that has been built recently to fill the vacuum created 55 years ago.

One thing though has not changed, signifying the most widely known but least acknowledged fact – men might come and men might go but certain heavenly beings are the only ones that would continue to exist even after hundreds of generations are gone.

In all these years, the little Lord has not changed his posture. He has brought about all the changes to the outside world but has not changed himself. And He stands as the only witness to the events of the bygone era.

‘But why does He smile?’, one is forced to ask.

Probably He reminisces the past events that had occurred due to human avarice and pride and therefore smiles at teh humans’ continuation of such vile despite knowing from history that such vile had actually resulted in the doom of even eminently powerful people – the kings and the emperors.

Probably He sees a pattern in the current events which might have reminded Him of the past. And as He knows what has happened in the past, he probably just anticipates the same for the current and hence smiles with all-knowing silence.

The Little Krishna stands still, in eternally captivating all knowing smile, ready to be witness to the events that are likely to unfold in the future.

%d bloggers like this: