நான் இராமானுசன் பகுதி 12

ஸரீரம் அஸக்தமாக இருப்பதாகவே நானும் உணர்ந்தேன். ரொம்ப நாழிகை வார்த்தை சொல்லியாகிவிட்டது. தத்துவ விசாரம், பாரத ஞான மரபுத் தேடல்கள் என்றால் நேரம் போவதே தெரிவதில்லை.

கூட்டம் கலைந்தது. மீண்டும் அடுத்த பௌர்ணமி அன்று ஸதஸ் * வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் அபிப்ராயப்பட்டனர். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதனால் ஒரு அறிவிப்பு செய்தேன்..

‘அடுத்த ஸதஸில் நாம் பாரத ஞான ஸம்பிரதாயத்தை மேலும் ஆராய்வோம். அது வரை பண்டிதர்கள் நமது மடத்திலேயே தங்கியிருந்து மடத்தின் ஓலைச் சேகரிப்பு பண்டாரத்தில் இருந்து வேண்டிய ஓலைச் சுவடிகளைப் பார்த்துக்கொள்ளலாம். பொது மக்களும் தங்கள் சந்தேகங்களை முன்னமேயே தெரிவிக்கலாம். பண்டிதர்கள் அவை குறித்தும் தயாராவார்கள். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் மற்றும் அவரது பரிவாரத்தினர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருக்கலாம்’.

ஸ்ரௌதிகள் தான் அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார்.

சாயங்கால அனுஷ்டானங்கள் முடிந்து அவற்றின் பின் ஸ்ரம பரிகாரம் செய்துகொண்டிருந்த போது கூரத்தாழ்வார் வந்திருந்தார்.

‘தேவரீர் ரொம்பவும் வருத்திக்கொள்கிறது. இந்த விவாதங்கள் இப்போது முடியப்போவதில்லை. சற்று ஓய்வாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று சொன்னார்.

‘சொல்வது சரிதான். ஆனால் ஆசார்யன் என்று ஒரு ஸ்தானம் வைத்துக்கொண்டு வழி சொல்லாமல் இருந்தால் எப்படி ? வேண்டிய மட்டும் அனைவரும் என்னிடமிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு நானே தடையாக் இருக்க முடியாதே கூரா..நாளை கருட சேவை. அரங்கன் கருட வாகனத்தில் எழுந்தருளப் போகிறான். இந்த வருஷம் நான் சேவிக்கிறேன். அடுத்த வருஷம் எப்படியோ. எனவே இருக்கும் போதே முடிந்தவரை எல்லார் சந்தேகங்களையும் தீர்த்துவிட வேண்டும்’, என்று சொன்னேன்.

கூரன் விழுந்து ஸேவித்துச் சென்றார்.

நெடு நேரம் உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் வந்து சென்றன. அத்வைத ஸித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதி சங்கரர் பௌத்த தத்துவத்தைஉம் தரிசனத்தையும் ஆழக் கற்று அதன் அடிப்படையிலேயே பௌத்த மதஸ்தருடன் வாதிட்டு பௌத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’ யில் பௌத்த மத கோப்புகள் உள்ளன. ‘சங்கர பாஷ்யம்’ பௌத்த ஸம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தது. இவரை ‘பிரஸன்ன பௌத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர்.

இளம் வயதில் என் முதல் ஆச்சார்யர் யாதவப் ப்ரகாஸர் அத்வைதியே. பெரும் ஞானஸ்தர். ஆனால் கொஞ்சம் முன்கோபி. ஆச்சாரிய நிந்தனை கூடாது தான். ஆனால் அவரது எண்ணங்கள் சரியானவை அல்ல. தனது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்பதில் அவர் உறுதியாயிருந்தார். ஆனால் நமது ஸம்பிரதாயம் எப்போதுமே வாதம், பிரதிவாதம், ஞான விசாரம் முதலியனவற்றை ஆதரித்தே வந்துள்ளன. ஒருபோதும் ஒரே கருத்தே முழுமை, உண்மை என்பது தவறு. உண்மை என்று தோன்றுவது சிறிது காலம் கழித்து உண்மை இல்லை என்று நிரூபணமாகும். பிறிதொரு தத்துவம் தோன்றும். பின்னர் அதுவும் மறையும். ஆனால் பிரும்மம் ஒன்று மட்டுமே மாறாது. இதுவே நமது பாரத சம்பிரதாயம்.

இன்று நடந்த ஸம்பாஷணைகள் மனதில் தோன்றின. ‘மீமாம்ஸை’ பற்றிக் கவனம் திரும்பியது. ஸ்ரௌதிகள் ‘ மோக்ஷம் பெற மீமாம்ஸங்களில் உள்ள வேள்விகள் தேவை இல்லையா?’ என்று கேட்டிருந்தார். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு ? மீமாம்ஸையில் எந்தெந்த பலன் வேண்டி எந்தெந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. எல்லாமே வேள்விகள் தான். மனிதனுக்கு என்ன தேவை என்றாலும் ஏதாவது ஒரு வேள்வி செய்தால் அந்த வேள்விக்குரிய தெய்வம் பிரத
யட்சம் ஆகும். அந்தந்த பலன்களை அளிக்கும். தெய்வங்களும் யாகத்துக்குக் கட்டுப்பட்டவை. அப்பலன்கள் ‘அபூர்வம்’ என்று அழைக்கப்படும். அபூர்வம்’ என்பது ‘பூர்வம் இல்லாதது’, ‘ முன்னே இல்லாதது’ என்று அர்த்தப்படும். ஆக, பலன்கள் வேண்டி செய்ய வேண்டிய யாகங்களைச் செய்தால் அந்தந்த தெய்வங்கள் அபூர்வமான பலன்களை அளிக்கும். இதுவே மீமாம்ஸையின் சாரம்.

இதற்கும் அத்வைதத்திற்கும் சம்பந்தம் என்ன ? ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ? ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் ? அவச்யமே இல்லையே. எனவே மீமாம்ஸை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்களுக்கு ?

இந்த தெய்வங்கள் எல்லாம் தேவை என்றால் அப்புறம் அத்வைதம் என்ன ? ஓருண்மை என்ன ?  ஏகான்ம வாதம் என்ன ? அதெப்படி தத்துவம் ஒன்றாகவும் வழிமுறை வேறாகவும் இருக்க முடியும் ? தத்துவம் என்னவென்றால் ஓருண்மை, இரண்டில்லாதது என்பது. ஆனால் நடைமுறையோ பல தெய்வ வழிபாடு, இவ்வுலகத் தேவைகளுக்காகப் பல தெய்வ வேண்டுதல்கள், அதற்காக மீமாம்ஸை வேறு வேண்டுமாம்.

மீமாம்ஸை சொல்வது என்ன ? கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் – இவை தானே மீமாம்ஸைகளில் உள்ளவை ? செயல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன ? அவற்றின் தெய்வங்கள் யாவர் ? வேள்விகளின் போது ஓதவேண்டிய மந்திரங்கள் என்ன ? பலன்கள் என்ன ? இவை தானே பூர்வ மாமாம்ஸை என்பது ?

செயல்கள் அவற்றின், மூலம் நாம் அடையும் பலன்கள் – இவற்றை வலியுறுத்துவதால் இதன் பெயர் கூட ‘கர்ம மாமாம்ஸை’ என்று வழங்கப்படுகிறதே. பலன்கள் இந்த உலகத்தில் கிடைப்பதால் அந்தப் பலன்களும் மாயை தானோ ? மாயை என்பதால் அந்தப் பலன்களே தேவை இல்லையே. பலன்கள் தேவை இல்லை என்றால் அவற்றிற்கான தெய்வங்கள் தேவை இல்லை,வேள்விகள் தேவையே இல்லையே. இவை எதுவுமே தேவை இல்லை என்றால் பூர்வ மீமாம்ஸையே தேவை இல்லையே.

மீமாம்ஸையில் பிரும்மத்திற்கே ஏற்றம் இல்லை. அத்வைதியானால் மீமாம்ஸகராக இருக்க முடியாது; மீமாம்ஸகரானால் அத்வைதியாக இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க, அத்வைதிகள் மீமாம்ஸை பின்னர் செல்வது ஏன் ?

அடிப்படையே ஆட்டம் காண்கிறதே !

இப்படியே பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

கூரன் வந்து எழுப்பியவுடன் தான் பொழுது விடிந்து இருப்பதை உணர்ந்தேன்.

————————————————————————————

ஸதஸ் — கூட்டம், சபை, வாதம் நடக்கும் இடமும் வாதமும்.

நான் இராமானுசன் பகுதி 11

‘நான் இராமானுசன்- பகுதி 10′

‘நான் இராமானுசன்- பகுதி 9′

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7′

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5′

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3′

‘நான் இராமானுசன்- பகுதி 2′

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

ஆண்டாள் – ஒரு பார்வை

வைணவ சிந்தனையில் ஆகச் சிறந்த பங்காற்றியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பன்னிருவர். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. இவர்கள் இராமானுசர் காலத்திற்கு முற்பட்டவர்கள். சங்கம் மருவிய காலம் முடிந்து பக்தி இயக்கக் காலமே ஆழ்வார்களின் காலம்.  ஆழ்வார்களின் பங்களிப்பைக் காணும் முன் ஆண்டாளைப் பற்றியும் அக்கால நடைமுறை வழக்கங்கள் பற்றியும் சிறிது ஆராய்வோம்.

மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களுக்குப் புனிதமானதே. திருமாலும் தான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். பகுத்தறிவாளர் உடனே இறைவன் எல்லா மாதங்களுக்கும் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பலாம். மார்கழி மாதம் முழுவதும் இறை தொடர்பான எண்ணங்களுடனே இருந்து சில நோன்புகள் பூண்டு விரதம் முதலியவற்றைப் பேணுவது என்றும் அம்மாதத்தில் திருமணம் முதலிய சமூக நிகழ்வுகள் நடவாமல் மக்கள் மனம் முழுவதும் இறை பற்றியே இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படை என்று கொள்ள முடிகிறது.

இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும் இறைத் தொடர்பான சிந்தனைகளுடனே அம்மாதம் முழுதும் செலவிடுகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது. கிறித்தவர்களுக்கும் ‘லென்ட்’ (Lent) என்று நோன்பு இருக்கும் மாதம் உள்ளது என்று அறிகிறேன். ஆக மாதம் முழுவதும் நோன்பிருப்பது மனித சமூகம் முழுவதுமே இருக்கும் ஒரு பழக்கம் என்பதும் இறை தொடர்பான எண்ணங்கள் வளர இம்மாதிரி நோன்புகள் பயன்படுகின்றன என்பதும் வெளிப்படை.

நோன்பிற்கும் ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு ?

ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ என்னும் முப்பது பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களால் பாடப்படுகின்றன. அப்பாடல் வரிகளின் மூலம் ஆண்டாள் தனது தோழிகளைத் துயில் எழுப்புவது பற்றியும், நோன்பிருந்து இறைவனை அடையவேண்டியது பற்றியும் கூறுவதை அறிகிறோம். இவை மட்டும் அல்லாமல் அக்கால வாழ்க்கை முறை பற்றியும், சில இயற்க்கை நிகழ்வுகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாம் ‘அறிவியல்’ பூர்வமாகக் ‘கண்டுபிடித்தவை’ என்று பறை சாற்றிக்கொள்ளும் சில உண்மைகளும் ஒரு சாதாரண நிகழ்வு போல் ஆண்டாளால் பதிவு செய்யப் படுகிறது. ( “ஆழி மழைக் கண்ணா..” என்று தொடங்கும் பாசுரத்தில் மழை பொழியும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. கடலில் இருந்து நீர் ஆவியாகி, மேகமாகி மலைகளில் முட்டுவதால் மழை பொழிகிறது என்ற பொருளில் அமைந்துள்ளது இப்பாசுரம்)

ஆண்டாள் காலத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுள் முன்பு ( கி,மு.200 -300) தமிழ் மக்கள் இனக்குழுக்களாக இருந்த நேரத்தில் ( சங்க காலம் துவங்குவதற்கு முன் என்று கொள்ளலாம்) ‘பாவை நோன்பு’  என்ற ஒரு தொன்மையான வணக்க முறை இருந்துள்ளது. அப்போது தாய் வழிச் சமூகமாக இருந்துள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாவை நோன்பும் பெண்கள் கடை பிடிப்பதாகவே காட்டப்படுகிறது. இது குறித்துச் சங்கப் பாடல்களும் தெரிவிக்கின்றன.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இந்த வணக்க முறைகள் வேளாண் பயிர் சிறந்த முறையில் விளைய வேண்டும், வெள்ளம் முதலிய இயற்கை நிகழ்வுகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டும் என்று அந்தந்த நிலங்களின் தெய்வங்களிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையாக இவை பெண்கள் செய்யும் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. பெண்களே ‘வளர்ச்சி’, ‘ உற்பத்தி’ முதலியனவற்றிற்குக் குறியீடாக வைக்கப்பட்டிருந்தனர் என்றும் உணர முடிகிறது. . ‘இந்திர விழா’ என்று தொல்காப்பியம் அழைக்கும் மருத நிலம் தொடர்பான விழாவும் இந்த நோன்பு வகைகளில் ஒன்றே.

இந்த விழாக்களில் சிறப்பானது ‘பசுவன்’ என்று மண்ணினால் பசு மற்றும் அதன் கன்று போன்ற பிம்பங்கள் செய்து அதற்குத் தினமும் தானியங்கள், புல் முதலியன படைத்து வழிபடுவது. முப்பது நாட்களுக்குப் பின் அந்தப் பசுவன் வடிவத்தை ஒரு சிறுமியின் மடியில் அமர்த்தி வழிபட்டுப் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது என்று இருந்தது. அப்போது பாடி ஆடும் மகளிர் நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், தானியங்கள் நிறைய விளைய வேண்டும் என்ற பொருள் படும்படிப் பாடுகிறார்கள் என்று இந்திர விழா குறித்த குறிப்புகள் கூறுகின்றன.

பெண்கள் தொடர்பு படுத்தியே இவ்வகை நோன்புகள் இருந்தன என்பது ‘பரிபாடல்’, ‘அக நானூறு’ முதலிய நூல்களில் இருந்து தெரிவதாக ‘ வைணவமும் ஆழ்வார்களும்’ என்னும் நூலில் திரு.தேவராஜன் தெரிவிக்கிறார். தற்காலத்தில் கூட ‘ஔவையார் நோன்பு’, ‘ காரடையான் நோன்பு’, ‘வர லக்ஷ்மி விரதம்’ முதலிய நோன்புகள் பெண்கள் பற்றியதாகவே  உள்ளது நோக்கத்தக்கது. இன்றைய காலத்தில் கூட மதுரை மாவட்டங்களில் அம்மன் கோவில் திரு விழாக்களின் போது ‘முளைப்பாரி’ எடுப்பது என்னும் நோன்பு நடக்கிறது. திருவிழா நடக்கும் பத்து நாட்களும் பெண்கள் தானியச் சட்டிகளுக்கு பூசை செய்து, பயிர் சிறிது முளை விட்டதும் பத்தாம் நாள் அதனை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் வலம் வந்து ஆற்றில் கரைப்பது என்று உள்ளதையும் நோக்க வேண்டும்.

இந்த வகையான நோன்புகளும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகளும் ‘தாந்திரீகம்’ என்னும் சங்க கால வழிபாட்டு முறைகளாம். இந்தத் தாந்திரீக முறைகள் ‘பாஞ்ச ராத்ரம்’ என்னும் இராமானுசர் வகுத்த ஆகம முறையில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.

சங்க கால நோன்பு முறை போன்றே ஆண்டாளும் பிற கன்னிப்பெண்கள் புடை சூழப் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடுவது என்று பொருள் படும்படித் திருப்பாவையில் பாடுகிறாள். திருப்பாவை என்பதே ‘பாவை’ என்ற நோன்பின் அடியொற்றியே அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

“… நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ..” என்னுமிடத்தில் தாங்கள் ‘பாவை’ உருவ பிம்பங்களுக்குச்  செய்யும் சடங்குகளைக் கேட்பீர்களோ என்று கூறிவது நோக்கத்தக்கது.

ஆண்டாளின் பாடல்களிலும் வேளாண்மை குறித்த நிகழ்வுகளும் அதற்குத் தேவையான அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. நாங்கள் நோன்பு நோற்கிறோம், எங்களுக்கு நல்ல மழை தாருங்கள், பயிர்கள் செழிக்கட்டும், பால் வளம் பெருகட்டும் போன்ற வேண்டுதல்கள் தெரிகின்றன.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து அதனால் நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் வளம் கொழிக்கும் நேரம் அது.  மழை பற்றியும், நீர் நிலைகள் பற்றியும் பல இடங்களில் தனது நோன்பின் நோக்கம் பற்றியும் ஆண்டாள் கூறுகிறாள். சில பின் வருவன :

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ..”
“மாரி மழை முழைஞ்சில்..”
“சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய்..”

ஆநிரைகள் வளத்தின் அடையாளம். ஆண்டாள் அவை பற்றியும் பாடுகிறாள். அவை:

“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ..”
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு ..”
“கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து..”
“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் ..”

மேலே சொன்ன பயன்கள் கிட்ட பாவை நோன்பு நோற்கிறார்கள். அதன் செயல் வடிவம் என்ன ? பின் வருபவை அவை :

“வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்…”

நெய், பால் முதலியன உண்ணாதிருத்தல், விடியற்காலமே எழுந்து நீராடுதல், மை தீட்டிக்கொள்ளாதிருத்தல், மலர் சூட்டிக்கொள்ளாதிருத்தல், செய்யக் கூடாதனவற்றைச் செய்யாதிருத்தல், தீமை தரும் சொற்களைச் சொல்லாதிருத்தல் ( புறங்கூறாமை என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார் ) முதலியன நோன்பின்  அடையாளங்கள் போலே.

வைணவ பக்தி முறையில் சில ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து திருமாலை நோக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக நினைத்து ஒரு தாய் தனது குழந்தையை நடத்தும் விதமாகக் கண்ணனைப் பாடி இருக்கிறார். திருமங்கை ஆழ்வார் தன்னைப் ‘பரகால நாயகி’ என்ற பெண் நிலையிலும், நம்மாழ்வார் தன்னைப் ‘பராங்குச நாயகி’ என்னும் நிலையிலும் உருவகித்து, திருமாலைக் காதலனாகப் பாவித்துப் பாடல்கள் புனைந்துள்ளனர். இவ்வகை ஆழ்வார் பாடல்கள் ‘நாயக நாயகி பாவம்’ என்னும் வைணவ உறவு நிலையைக் குறிப்பன.

இவை ஆணின் உடலில் உள்ள பெண் தன்மையை எழுப்பும் ‘குண்டலினி’ யோக முறையின் கீழ் நிலையை உணர்த்துகின்றன என்று பேரா.தோத்தாத்திரி தெரிவிக்கிறார்.

பக்தி இயக்க காலத்தில் ஆண்டாளின் நோன்பு நிகழ்வுகள் அவை சங்க காலத் தமிழ் மக்களின் நோன்பு வகைகளை ஒத்து அமைந்துள்ளன என்று காண்பது வியப்பளிக்கிறது. இந்த மாதிரியான நோன்புகளை சங்க காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாள் மேற்கொண்டாள் என்று நினைக்கும்போது கால அளவுகளைத் தாண்டிய ஒரு உன்னதமான கலாச்சாரத் தொடர்பு  பிரமிக்க வைக்கிறது.

பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று நமது பண்டைய வணக்க முறைகளைப் பழிக்கும் ‘முற்போக்காளர்கள்’, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் இயற்றிய ஒரு பெண்ணைத் தெய்வமாகவே நினைத்து வழிபட்டுள்ள உயர்ந்த பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

வைணவம் காட்டும் உறவு நிலைகள்

இராமானுசரது வைணவ சித்தாந்தம் வழி இறைவனுக்கும் ( பரமாத்மாவுக்கும் ) உயிரினங்களுக்கும் (ஜீவான்மாக்களுக்கும்) இடையே உள்ள உறவு நிலை சிறப்பானது. பல மதங்களில் உள்ளது போல் இறைவனைக் காப்பவனாக மட்டுமே விசிட்டாத்வைதம் பார்ப்பதில்லை . இறைவனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று கூறுகிறது. இதனை ‘நவ வித சம்பந்தம்’ என்று சம்ஸ்க்ருதம் கூறுகிறது.

  1. காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )
  2. தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )
  3. ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )
  4. கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )
  5. அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )
  6. உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )
  7. உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )
  8. தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )
  9. அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

இந்த உறவு நிலைகளை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆழ்வார்கள் இராமானுசருக்கு முந்நூறு ஆண்டுகள் முற்பட்டவர்கள். இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என்று ஒரு முறையை நெறிப்படுத்தும் முன்பே அத்தத்துவத்தின் கூறுகளை ஆழ்வார் பாசுரங்களில் காண்கிறோம். இது ஒரு வியப்பே.

காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளா காதலநோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே”

மருத்துவன் வாளால் அறுத்துச் சுடுவது நோயாளனுக்கு நன்மை செய்யத்தான். அதுபோல் இறைவன் நமக்குச் சில சமயங்களில் சோதனைகள் தருவதும் நம்மைத் திருத்திப் பணி கொள்வதற்காக மேற்கொள்ளும் ரட்சகக் காரியமே என்று குலசேகர  ஆழ்வார் கூறுகிறார்.

தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )

நம்மாழ்வார் பாசுரம் பின்வருமாறு :

“என்னப்பன் எனக்காய் இகுளாய்  என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்…”

இந்தப் பாசுரத்தில் இறைவனை தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்.

ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )

இந்த ஆண்டான் அடிமை உறவு நிலை குறித்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்றாலும் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுவது அருமையானது. இறைவனை ‘ஆரா அமுதே’ என்று அழைப்பது தமிழின் அழகையும் உணர்த்துகிறது. ( வைணவர்களில் ‘ஆராவமுதன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது சில காலம் முன்பு வரை பிரபலம். அப்பெயர் மருவிப் பல சமயம், ‘ஆராமுது’ என்றும் ‘ஆமுடு’ என்றும்  அழைக்கப்படுவது வேடிக்கை.)

பாசுரம் இங்கே:

“வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊரா உனக்காட் படும் அடியேன் இன்னம் உழல்வேனோ”

இப்பாசுரத்தில் ‘ஆண்டாய்’ என்பதால் ஆண்டான் தன்மையும் ‘உனக்காட்படும்’ ( உன்னுடைய ஆளுமைக்கு உட்படும் ) என்பதால் அடிமைத்தனத்தையும் ஆழ்வார் காட்டுகிறார்.

கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )

கணவன் மனைவி நிலையில் திருமாலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் விதமாக குலசேகராழ்வார் பாசுரம் :

“கண்டா ரிகழனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்
விண்டோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே”

குலமகள் கணவனைக் கை விடாமல் எந்நிலையிலும் அவனுடன் இருப்பாள் என்னும்போது ஆழ்வார் தன்னை மனைவியாகவும் திருமாலைக் கணவனாகவும் கொண்டு பாடுகிறார்.

அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )

“பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்
தருமனையே நோக்கும்மொண் தாமரையால் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு”

பொய்கையாழ்வார் பாசுரம் கூறுவது : ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே. அறிபவர்கள் நாம்.

உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )

“தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தொடித் தொடுகடலே
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே”

கடல் உடையது. ஆறுகள் கடலின் உடைமை. கடலைச் சேர்ந்து தான் ஆறுகள் சிறப்புப் பெறுகின்றன. அதுபோல் தலைவனாகிய திருமாலைச் சேர்ந்தே நாம் சிறப்படையே இயலும் என்று இறைவனை உடையவன் என்றும் நம்மை அவனது உடைமை என்றும் கூறுகிறார் குலசேகர ஆழ்வார்.

உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )

“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசைபடர்பொருள் முழுவது மாயவை யவைதொரும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்”

என்னும் நம்மாழ்வார் பாசுரத்தில் “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறைவது போல் இறைவன் மறைந்திருந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்”  என்று உயிர் – உடல் உறவை விளக்குகிறார்.

தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )

குலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த உறவை விளக்குகிறது.

“எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே யல்லால்
எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே”

எங்கும் கடலாக உள்ளது. ஆகவே பறவை நான்கு திசைகளிலும் பறக்க முடியவில்லை. திரும்பவும் எப்படி கடலில் உள்ள மரக்கலத்தில் வந்து அப்பறவை சேருமோ அப்படி உன் பாதங்களில் என்னைத் தாங்குபவனாகிய உன்னிடம் நான் சரண் அடைந்து கிடக்கிறேன் என்று ஆழ்வார் இறைவனைத் தாங்குபவனாகவும் தன்னைத் தாங்கப்படுபவராகவும் கூறுகிறார்.

அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

உயிர்களை உண்ணப்படும் பொருளாகவும் இறைவனை உண்பவனாகவும் கொள்வது இந்த உறவு நிலையின் விளக்கம். இந்த உறவு நிலையை  விளக்கும் விதமாக நம்மாழ்வாரும் குலசேகரரும் பலவாறு பாடியுள்ளார்கள்.

நம்மாழ்வாரின் “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்..” என்று தொடங்கும் பாசுரமும் குலசேகரரின் “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் …” என்று தொடங்கும் பாசுரமும் விளக்குகின்றன.

உறவு நிலை சரி. ‘நாராயணா’ என்பதன் பொருள் என்ன ? வைணவர்கள் யார் ? அவர்களுக்கு மிக முக்கியமான ‘மூன்று’ என்ன ? அடுத்த பதிவில் பார்ப்போம்.

வைணவ லட்சணம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற வழக்கு நாம் அறிந்ததே. அதுபோல் ஒரு வைணவனின் அக லட்சணங்கள் அவனது நடத்தையில், புறத்தில் தெரியும் என்று கொண்டால் அவை என்ன என்ன என்று நாம் அறிந்துகொள்ள இராமானுசர் வழி வந்த சில ஆச்சாரியார்களின் வியாக்கியானங்கள் நமக்கு வழி செய்யும். அவர்களின் உரைகளில் பல புதிய அருமையான உவமைகள் அடங்கி இருக்கும். படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்விடத்தில் லட்சணங்கள் என்பது புற அடையாளங்கள் என்பது மட்டும் அல்ல; ஒரு வைணவன் நடந்துகொள்ள வேண்டிய முறை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.

இராமானுசர்  வழி வந்த ஆச்சாரியார்கள் பலர் இராமானுசர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளனர். அவை ‘வியாக்கியானம்’ என்ற பிரிவில் அடங்கும். அவை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் கலந்த ‘மணிப்பிரவாள’ நடையில் அமைந்திருக்கும். இந்த மொழி நடை தற்போது வழக்கொழிந்து விட்டது. இதனை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே. வைணவ குரு பரம்பரை விளக்கமும் இந்த நடையிலேயே அமைந்துள்ளது.

சிலவற்றைப் பார்ப்போம்.

வைணவப் பண்பாடு என்பது என்ன? ஒருவரிடம் வைணவத்துவம் அமைந்துள்ளது என்று எப்படிக் கண்டுகொள்வது என்று நஞ்சீயர் என்ற ஒரு ஆச்சாரியாரிடம் கேட்கப்பட்டது. அவரது பதிலை மணிப்பிரவாள நடையில் அவரது வாக்கிலேயே தருகிறேன்:

“பிறர் அனர்த்தம் கண்டால் ஐயோ என்று இரங்குவான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும், இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு என்று இருந்தான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும்”

தமிழில் : “மற்றவனது துன்பம் கண்டவுடன் மனம் இரங்குபவன் இறைத் தொடர்புள்ள வைணவன்.அவர் நிலை கண்டு இரங்காதவன் வைணவன் அல்லன்”.

இதற்கு ஒரு சமீப கால உதாரணம் ஒன்றும் உண்டு. மகாத்மா காந்திக்குப் பிடித்தமான “வைஷ்ணவ ஜனதோ ..” என்ற பாடல் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் ஆரம்ப வரிகளின் பொருளைக் அமரர் கல்கி அவர்கள் தனது ‘தியாக பூமி’ நூலில் இப்படிக் கூறுகிறார்:

“எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.”

சற்று பின்னே சென்று வைஷ்ணவ குருபரம்பரை நிகழ்வு ஒன்றைக் காண்போம். இராமானுசரது சீடர் குழாமில் ‘பராசர பட்டர்’ என்றொரு அறிஞர் இருந்தார். அவரது சீடர் ஒருவர்,  அனந்தாழ்வான் என்னும் இன்னொரு ஆச்சாரியாரை அணுகி “வைஷ்ணவன் என்பவன் எப்படி இருப்பான்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் பதில் மிகவும் விளக்கமானது; அதே சமயம் எளிதானது.

அனந்தாழ்வான் கூறுகிறார்: “வைஷ்ணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழிபோல் இருப்பான்; உப்பைப்போல் இருப்பான்; உம்மைப்போல் இருப்பான்” என்று ஒரு சூத்திரம் போல் வரையறுக்கிறார்.

ஒரு கொக்கு தனக்குத் தேவையான நீருள்ள இடங்களின் அருகில் வசிக்கும்.அதுபோல் வைணவன் தனக்குத் தோதான பகவத் பாகவத சந்நிதிகளின் அருகில் வசிப்பான். கோவில்கள், மடங்கள் இவற்றின் அருகில் வாசிப்பான். ( ஸ்ரீரங்கம் நினைவில் கொள்ளத் தக்கது).

மேலும் கொக்கு தனக்கு விருப்பமான ஆறுகளைத் தேடிப்போக அதற்குத் தேவையாக இரண்டு சிறகுகள் பெற்றிருக்கும். அதுபோல் வைணவன் தனக்குத் தேவையான வீடுபேறு அடைய ஞானம், அனுஷ்டானம் என்ற இரண்டு சிறகுகளைப் பெற்றிருப்பான். ஞானம் மட்டும் இருந்து அது  காட்டும் வழியில் செல்லும் அனுஷ்டானம் இல்லாவிட்டால் பயன் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘நிற்க அதற்குத் தக’ என்று கூறுவது இவ்விடம் நோக்கத்தக்கது.

கொக்கு வெண்மை ந
றம் உடையது. அதுபோல் வைணவன் உள்ளும் புறமும் சுத்த சுவாபவம் கொண்டவனாக இருக்க வேண்டும். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற வள்ளலாரின் வாக்கு நோக்கத் தக்கது.

கொக்கு தன் வாய்க்கு அடங்காததை விடுத்து , கொள்ளும் அளவே உண்ணும். அதுபோல் வைணவன் பல விஷயங்கள் கற்றாலும், அறிந்துகொண்டாலும் தனக்குத் தேவையானதை மட்டுமே கொள்வான். தனக்குத் தேவையான மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் தன்மை கொண்டவன் வைணவன் என்றும் கொள்ளலாம். 

அதுபோல் வைணவன் கோழி போல் இருப்பான் என்பதும் நோக்கத்தக்கது. கோழியானது குப்பையைச் சீய்த்துச் சீயத்துத் தனக்கு இரை இல்லாததைத் தள்ளிவிட்டு தனக்குச் சாரமான தானியங்களை மட்டுமே கொள்ளும். அது போல் வைணவன் பிறரிடம் உள்ள குற்றங்களைத் தள்ளிவிட்டு நல்லதையே கொள்வான்.

இதுவரை சரி. வைணவன் உப்பைப்போல் இருப்பான் என்பது எவ்வகையில் பொருந்தும்? அனந்தாழ்வான் கூறுகிறார்: உப்பு தான் உருமாறி அழிந்து உணவுகளுக்கு சுவை அளிக்கும்.வைணவன் தன்னை மறைத்துப் பிறருக்குப் பயன்படுபவனாக இருப்பான். அகம் அழிந்திருத்தல் என்று இதனைக் கொள்ளலாம்.

இவ்வாறு விளக்கம் பெற்ற அந்த வைணவரை அனந்தாழ்வான் உணவு உண்ணும் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்குள்ள பந்தியில் முன்னே அமரச் செய்தார். வைணவர் தயங்கினார். பின்னர் பந்தியின் நடுவில் வேறொருவரை எழுப்பி அமரச்செய்தார். மறுபடியும் அந்த வைணவ சீடர் தயங்கினார். பின்னர் அவரைப் பந்தியின் இறுதியில் அமரச் சொன்னார். வைணவரும் மனமுவந்து அமர்ந்தார்.

அப்போது அனந்தாழ்வான் ” ‘வைணவன் உம்மைப் போல் இருப்பான்’ என்று நாம் சொன்னது இதுதான். அடியார்க்கு அடியாராகவும், அகங்காரம் அற்ற நிலையிலும் நீர் உள்ளீர். எனவே நீரே ஒரு வைணவருக்கு உதாரணம். எனவே வைணவன் உம்மைப்போல் இருப்பான் என்பது சரியே” என்று உவப்புடன் அருளியுள்ளார்.

இந்த ‘அடியார்க்கும் அடியார்’, ‘தொண்டர் அடிப்பொடி’, ‘ அடியேன்’ , ‘ தாசன்’ முதலான வார்த்தைகள் வைஷ்ணவ பரிபாஷையில் அதிக அளவில் அமைந்துள்ளன. தற்கால திருமண ஆழைப்பிதழ்களில் கூட ‘அடியேன் தாசன்’, ‘ அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விக்யாபனம்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருப்பதைக் காணலாம்.

வைணவம் – சில பார்வைகள்

வைணவம் குறித்து எழுத வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான் தென்கலை வடகலை வேறுபாடுகள் பற்றியும் அவை ஒன்றுமே இல்லாதவை என்பது பற்றியும் பதிவிட்டவுடன் ஒரு வாசகர் நிறைகளைப் பற்றியும் எழுதலாமே என்று கடிதம் இட்டிருந்தார்.

அதற்காகத் தென்கலை வடகலை என்ற பிரிவுகள் பற்றி மேலும் தோண்டிக்கொண்டிருந்த போது “வைணவம் – ஒரு மார்க்சீயப் பார்வை” என்ற நூல் கண்ணில் பட்டது. அதில் வைணவத்தைப்பற்றி ஒரு இடதுசாரி நோக்கில் தோத்தாத்திரி என்னும் பேராசிரியர் எழுதியிருந்தார். அவரது பார்வை தத்துவங்களின் அடிப்படையில் ஓரளவே இருந்தது ஆனால் வைணவத்தை அவர் ஒரு சமுதாய நோக்கில் அணுகியது சிலிர்ப்பூட்டியது.

உண்மையில்  இடதுசாரி மனிதர் ஒருவர் செய்துள்ள ஆராய்ச்சி மற்றும் முயற்சி என்னை வெட்கப்படச் செய்தது. இத்தகைய ஒரு முயற்சி நம்மிடம் இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்டது உண்மை. அந்த நூல் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அதன் பின்னர் வைணவம் குறித்து மேலும் தோண்டிப் பார்க்கலாமே என்று ஒரு  எண்ணம்.

மேலும் தோண்டியபோது பல அறிமுகங்களும் கருவூலங்களும் கிடைத்தன. இதுநாள் வரை சேகரித்த செவி வழிச் செய்திகள்,  பெரிய ஆராய்ச்சிகளின் பலனாகச்  சில பெரியவர்கள் எழுதிய நூல்கள்,  சில அனுபவங்கள், சில தத்துவத் தேடல்கள், சில கருத்துப்பறிமாற்றங்களில்  பார்வையாளனாக இருந்த நேரடி அனுபவம் — இவை என்னை “மார்க்சீய நோக்கில் மட்டும் பார்ப்பானேன்? மற்ற பல திசைகளிலிருந்தும் நோக்கலாமே”, என்று திசை திருப்பின.

இதனால் வைணவத்தை நான் கரைத்துக் குடித்துவிட்டேன் என்று யாரும் எண்ண வேண்டாம் என்று நான் கூறவேண்டிய அவசியமில்லை.  இவை எல்லாமே நான் ஒரளவு அனுபவித்தது, சில கண்டது, சில கேட்டது, ஆனால் பெரும்பாலும் படித்தது. இப்படியாக அறிந்துகொண்டது தான்.

அவற்றின் பலன் : இனி வரவிருக்கும் வைணவம் பற்றிய ஒரு தொடர்.

வைணவம் ஒரு சமயம் என்பதால் இந்தத் தொடரில்  வெறும் சமயம் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டுமே இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வைணவம் பற்றி ஒரு சில திசைகளிலிருந்து பார்த்து, அதில் எனக்குப் புரிந்தவற்றை எழுதலாம் என்று எண்ணம்.

ஒரு சமயத்தைப் பரப்புவதற்காகவோ, உயர்த்திப் பேசுவதற்காகவோ எழுதப் படுபவை அல்ல இவை. வைணவமும் தமிழும், தமிழ் நாடும், மக்கள் வாழ்வும், வாழும் முறைகளும், அவை தொடர்பான பல தத்துவங்களும் அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள நிலை குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் ஒரு தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அது மற்றதிலிருந்து எப்படி வேறு பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே வைணவத்தின் சமகாலத்திலும் , அதற்கு முன்னரும் இருந்த தத்துவங்கள் பற்றியும் எழுதவேண்டியுள்ளது அவசியம்.

எனவே, சில பகுதிகள் சுலபமாக இருக்கும். சில சற்று தூக்கம் வரவழைக்கும். தத்துவங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி தேவை.  இருந்தாலும், கடினம் போல் தோன்றுவதை எவ்வளவு எளிதாக்கமுடியுமோ செய்கிறேன்.( எனக்கே புரிகிறது என்றால் யாருக்கும் புரியும் ).

அக்கால சமுதாய நிலை,  சமயங்களின்  நிலைகள் , சில ஆச்சாரியர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆழ்வார்கள் மற்றும் அவர்களது  தத்துவங்களைக் கடந்து சென்ற பின், ஆண்டாளின் பாசுரங்களின் விளக்கங்களுடன் முடிக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது மார்கழி மாதம் ( 15 – December – 14-January ) துவங்கியிருக்கும். இறையருளும் குருவருளும் வாசகர் ஊக்கமும் வேண்டித் துவங்குகிறேன்.

முதலில் ‘அந்தணர்’ என்னும் தலைப்பில் சில பதிவுகள் காண்போம். ஏனெனில் அவர்களின் நிலையையும், அவர்களைப்பற்றிய சில செய்திகளும் வைணவத்தை ஒரு குறிப்பிடும் அளவில் அறிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

எப்போதும்போல் தொடரினூடே வாசகர் கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன. அவையே அடியேனை ஆற்றுப்படுத்தும் வழி காட்டிகள்.

(கம்பன் பற்றிய தொடரும் அவ்வப்போது இடம்பெறும். தப்பித்துவிட்டதாக நினைக்கவேண்டாம். பொழுதுபோகாமலும் தூக்கம் வராமலும் தவிப்பவர்கள் எனது ஆங்கல தளத்தைப் பார்வையிடலாம்.அது –  https://amaruvi.wordpress.com)

கம்பன் சுவை – நாடும் அரசும்

கம்பன் தன் காவியத்தில் பல அறங்களையும் ஒழுக்கங்களையும் கூறியிருந்தாலும், ஒரு நாடும் அதன் அரசுகளும் இருக்க வேண்டிய முறை பற்றியும், மன்னன் ஆட்சி செய்ய வேண்டிய முறை, அமைச்சர்கள் தகுதி, அவர்கள் பணிகள் என்று பலவற்றையும் பற்றிக் கூறுவது நம்மை வியக்க வைக்கிறது.

இராமராஜ்யம் என்பது ஒன்று இருக்குமேயானால் நாடும் அரசும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துச் சென்றுள்ளான் கம்பன். 1200 ஆண்டுகளுக்கு முன் அவன் இயற்றிய இராமகாதையில் கூறப்படும் அரசு முறைமை, நாட்டின் பண்பு, மக்களின் பண்புகள் முதலியன,  “அட, ஒரு நாடு இப்படியல்லவோ இருக்க வேண்டும்!” என்று நினைக்கத் தூண்டுகிறது.  இவை பற்றி இம்முறை பார்ப்போம்.

கம்பன் காட்டும் நாடு பற்றிப் பார்த்துவிட்டு அதனை ஆள்பவர்களையும் அவனது அமைச்சர்களைப்பற்றியும் பார்ப்போம்.

கோசல நாட்டு மக்கள் எப்படி இருந்தார்கள் ?  கம்பன் கூறுவது :

’வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மையில்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்’

(மக்களிடத்தில் பொறாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் வறுமை இல்லை.அனைவரிடமும் பொருட்செல்வம் இருந்தது. அறியாமை இல்லை; ஏனெனில் அவர்களிடம் கல்வி இருந்தது. அந்நாட்டில் உண்மை இல்லை; ஏனெனில் அவர்களிடம் பொய் இல்லை)

கவனிக்கவேண்டியது இது. அந்நாட்டில் உண்மை இல்லை என்கிறார். ஆக அனைவரும் பொய்யர்களா? இல்லை. உண்மை என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை. பொய் இருந்தால் தானே அதற்கு மாற்றாக உண்மை என்ற ஒன்று தேவை ? பொய்யே இல்லை என்றால் உண்மை என்பதும் இல்லை. அனைத்தும் ஒரே நிலை தானே !

சரி. மக்கள் இப்படி உத்தமர்களாக இருப்பதால்  அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் இல்லை ?

“கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்;
ஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே”

(கோசல நாட்டு மக்களிடம் கூற்றுவன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனெனில் மக்களிடத்தில் குற்றங்கள் இல்லை. அவர்கள் தூய்மையான உள்ளம் கொண்டர்கள்; ஆதலால் அவர்களிடம் சினம் இல்லை. சினம் இல்லாததால் குற்றங்கள் இல்லை. அவர்கள் நல்ல அறங்களையே செய்ததால் தவறுகள் இல்லை; எனவே அவர்களுக்குப் புகழ் மட்டுமே உண்டு ).

முதல் பாடலில் கல்வி பெருகியுள்ளது தெரிகிறது. கல்வியினால் நல்ல பண்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் என்ற தீய பண்புகள் மக்களிடம் இல்லை. அதனால் சண்டை, சச்சரவுகள் இல்லை. அதனால் அவர்களுக்குப் புகழே தவிர வேறெதுவும் இல்லை.

ஒரு முன்மாதிரியான நாட்டையும் மக்களையும் காண்கிறோம்.

சரி. இம்மக்கள் யார் ? இவர்கள் இருப்பிடம் எப்படிப்பட்டது ?

“தங்குபேர் அருளும் தருமமும் துணையாத்
தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர்
யாவர்க்கும் புகல் இடம் ”

( என்றும் குன்றாமல் நிறைந்திருக்கும் கருணையுள்ளவர்கள்; அறத்தை மறவாதவர்கள்; இவைகளைத் துணையாகக் கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர்கள்; உயர்ந்த தவத்தையும் அறிவையும் உடையவர்கள்; உலகப்பற்றை விட்டவர்களான முனிவர்கள் யாவர்க்கும் புகலிடமாக விளங்குவது அயோத்தி மாநகரம் )

இப்படிப்பட்ட அயோத்தியில் வாழும் மக்கள் வாழ்க்கை முறை என்ன ? எத்தகைய தொழில்கள் நடைபெற்றன ?

கம்பன் கூறுவதைப் பாருங்கள் :

“அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,
நகரின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்”

(அகில்கட்டைகளிலிருந்து வரும் புகை, வீடுகளிலிருந்து உணவு  தயாரிப்பால் எழும் சமையல் புகை, கரும்பாலைகளிலிருந்து வரும் புகை, நான்கு வேதங்களின் முறைப்படி செய்யப்படும் வேள்விகளிலிருந்து வரும் வேள்விப்புகை இவை அனைத்தும் சேர்ந்து மேகத்தைப்போன்று எங்கும் பரவியுள்ளன )

இதன்மூலம், கரும்பு முதலிய ஆலைகள் இருந்தன என்பதும், அந்தணர்கள் வேள்விகள் இடைவிடாது செய்துவந்தனர் , அவர்களுக்கு உதவும் கொடையாளர்கள்  நிறைந்திருந்தனர் என்பதும் தெரிகிறது.

கம்பர் மட்டுமே இவ்வாறு கூறுகிறாரா என்றால் இல்லை. அவருக்குப் பல நூற்றாண்டுகள் முன் தோன்றிய வள்ளுவர் கூறுவது இது :

“தள்ளாவினையுளும் தக்காரும் தாழ் விலாச்
செல்வரும் சேர்வது நாடு ”

( நீங்காத விளைவும், அறவோர் திறவோர் ஆகிய சிறந்தவர்களும், குறைவற்ற செல்வம் உடையவர்களும் சேர்ந்திருப்பதே நாடு)

அந்தணர்கள் வேதத் தொழில் செய்யாவிட்டால் நாடு நன்றாக இல்லை என்று ஆகுமா ? அந்தணர் நான்மறை வழி வேள்விக்கும் நாட்டு நலத்திற்கும் என்ன தொடர்பு ? அதற்கு வள்ளுவனைத் தொடுவோம் :

“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் ”

( ஒரு அரசன் நல்லாட்சி செய்யவில்லை என்று அறிய ஒரு வழி உள்ளது. அந்நாட்டில் பசுமாடுகள் பா ல் வளம் குன்றும். ஆறு தொழில் செய்யவேண்டிய அந்தணர்கள் தங்கள் நூலை ( வேதம் ) மறந்திருப்பர் )

சரி.மக்களும் நாடும் இப்படி இருக்க வேண்டுமென்றால், அரசன் எப்படி இருக்க வேண்டும் ?

புறநானூற்றுக் காலங்களில் மன்னனை வைத்தே நாடு இயங்கியது.  “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று புறநானூற்றின் ஒரு பாடல் கூறுகிறது.  குடிமக்களுக்கு அவ்வளவு பெருமை இல்லை. ஆனால் கம்பன்  காலமான 12-ம் நூற்றாண்டில் மன்னராட்சியே இருந்துவந்தாலும் குடிமக்களுக்கே பெருமை என்பதுபோல் தெரிகிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் மன்னனால் சரியான அரசாட்சி செய்ய இயலாது என்பதாகக் காட்டுகிறார் கம்பர்.

“வய்யம் மன்னுயிராக, அம்மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு
அய்யம் இன்றி அறம்கடவாது அருள்
மெயின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ ”

(மன்னன் உலகத்தின் அனைத்து உயிர்களைய்ம் உயிராகக்கொண்டு தான் ஒரு உடலாக மட்டுமே செயலாற்ற வேண்டும். அவ்வாறு இயங்கும் மன்னனை விட்டு விலகாது அறம் உடன் இருக்கும். இவ்வாறு இரக்கத்துடனும், உண்மையுடனும் இருக்கும் அரசன் வேள்வி செய்யவும் வேண்டுமோ ?)

அரசனை வெறும் உடல் போல இருக்க வேண்டும் என்றும், அனைத்து உயிர்களும் அவனது உயிர் என்றும் கூறுகிறார் கம்பர். இப்படி ஒரு அரசன் இருந்தால் அவன் இறை வழிபாடு கூட செய்ய வேண்டியதில்லை என்றும் அறத்தின் தேவதை அவனுடன் இருப்பாள் என்றும் கூறுகிறார். மக்களே உயர்ந்தவர், அரசன் வெறும் கருவிதான் என்று அன்றே காட்டிவிட்டார் கம்பர்.

அரசனின் ஆட்சி எப்படியிருக்க வேண்டும் ? கம்பர் கூற்று :

“மண்ணிடை உயிர்தோறும் வளர்ந்து தேய்வின்றி
தண்ணிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தம் குடைமதி அமையும், ஆதலால்
விண்ணிடை மதியினை மிகை இது என்னவே”

(உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இனிய நிழலைத் தருவது தசரதனின் வெண்குடை நிழல். அறியாமை இருளை அகற்றவல்லது அதுவே. உலக உயிர்களுக்குப் போதுமானது அவன் ஆட்சியின் நிழல்.இது தவிர வானத்தில் சந்திரனின் நிழல் தேவை இல்லை)

அவன் ஆட்சி சரி. அவன் எப்படி நாட்டைக் காக்கிறான் ?

“வய்யகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய்எனக் காத்து இனிது அரசு செய்கிறான்”

( ஒரு சிறிய அளவிலான நிலத்தை உடைய உழவன் தன் நிலத்தை எப்படிப் பாதுகாப்பானோ அப்படி தசரதன் தன் நாட்டைப் பாதுகாத்தான் )

மன்னனின் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும்?

“இனிய சொல்லினான், ஈகையன், எண்ணினன்
வினையன்,தூயன்,விழுமியன்,வென்றியன்
நினையும் நீதி நெறிகடவான் எனின்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ”

(இனிய மொழி, ஈகைக்குணம், ஆழ்ந்த சிந்தனை, வினை செய்யும் வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், செயலிலே வெற்றி அடையும் திறன், நீதிநெறி வழுவாமை  – இந்தக் குணங்களை அரசன் கொண்டிருந்தால் அவனுக்கு எக்காலத்திலும் யாராலும் அழிவில்லை )

அரசன் மட்டுமே எவ்வாறு நன்றாகச் செயல்பட முடியும்? எவ்வளவு வலிமை உடையவனாக இருப்பினும் மேலே சொன்ன குணங்கள் இருந்தாலும் தனித்துச் செயல்பட முடியாதே ?

இராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ள பாடல் இப்படி வருகிறது :

“வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும்,
தீமைதீர் ஒழுக்கின் வந்ததிறத்தொழில் மறவரோடும் ..”

( உண்மையை ஆராய்ந்து உணரும் அறிவுள்ள அமைச்சர்களோடும், குற்றமற்ற ஒழுக்கத்துடன் திறமையாக நிர்வாகத்தை நடத்தும் வீரர்களோடும் ஆலோசித்துப் பின்னர் செயல் ஆற்ற வேண்டும் ..)

ஆக அரசனுக்கு உரிய குணங்கள், அவன் நல்ல அறிவுள்ள அமைச்சர்களோடு சேர்ந்து செயலாற்ற வேண்டியது முதலியன கம்பனால் சுட்டிக் காட்டப்பட்டது.

அமைச்சன் அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் போதுமா? அவனது குணங்கள் என்ன?

“உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்,
மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்;
பிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும் கற்றவர் ;
மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் ”

(நடந்த நிகழ்ச்சியைக்கொண்டு இனி வருவது உரைக்கும் ஆற்றல் பெற்றவர்; முன் வினையால் நேர்ந்த தீமையாக இருந்தாலும் அதை மாற்றும் வல்லமை கொண்டவர்; ஒழுக்கமுள்ள குடியில் பிறந்தவர்கள்; சிறந்த நூல்களை எல்லாம் நன்கு கற்றறிந்தவர்கள்; தன் உடலின் ஒரு மயிர் இழப்பினும் உயிர் துறக்கும் கவரிமான்போல்  மானத்தில் சிறந்தவர் – இவர்களே நாட்டின் அமைச்சர்கள் )

மேலே கண்டது அமைச்சர்களின் தேர்வுக்கான குணங்களாகக் கொண்டால், அவர்கள் எப்படிச் செயலாற்றவேண்டும் என்று கம்பன் கூறுகிறான் என்று பார்த்தால் மெய் சிலிர்க்கிறது :

“தம் உயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்டபோதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்
செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்”

(தனக்கு மட்டுமே நன்மை  வேண்டும் என்று கருத மாட்டார்கள்; அரசன் சினம் கொண்டாலும் தாங்குவார்கள்; நீதியை விடாது பின்பற்றுவார்கள்; அரசனையும் நீதியை விட்டு விலகாதபடி அறிவுறுத்துவார்கள்; மூன்று காலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டு உண்மையே, தாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதுவதையே உரைக்கும் தன்மை உள்ளவர்கள்)

கம்பன் மட்டுமே இவ்வாறு அமைச்சர் பற்றிக் கூறினானா ? அதற்கு உரைகல் எது ? வழக்கம் போல் வள்ளுவன் தான் :

“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையார்
சொல்லலும் வல்லது அமைச்சு”

(செய்தே ஆக வேண்டிய செயல்களை ஆய்ந்து அறிதல், செயல் செய்யவேண்டிய வழிகளை நன்கு ஆய்ந்து உறுதியாகத் தம் கருத்தை முன்வைத்தல் – இவற்றில் வல்லவனே  நல்ல அமைச்சன் ).

ஆக, நாட்டு மக்கள் நன்றாக இருக்க அவர்களுக்குக் கல்வி வேண்டும், குற்றம் இல்லாமல் இருக்க நாட்டில் செல்வம் வேண்டும், அச்செல்வம் மக்களிடம் சரியான அளவில் இருக்க வேண்டும், பல வகையான மக்கள் வேறுபாடின்றி ஒருங்கே இருக்க வேண்டும், இவை அனைத்தையும் நடத்த நல்ல மன்னன் வேண்டும், அவன் ஆட்சி குளுமையாக இருக்க வேண்டும், அவன் மக்களைத் தன் உயிர் போல் கருத வேண்டும், அப்படி ஆட்சி செய்ய நல்ல அமைச்சர்கள் வேண்டும் மற்றும் அந்த அமைச்சரகள் இவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று நாடு இருக்க வேண்டிய நிலையையும், அதற்கு மன்னன் தரம், அவனது அமைச்சின் தரம் என்ற பல நோக்கில் கம்பன் காட்டும் நாடாளும் வழிமுறை நம்மை அவ்வாறான ஒரு நாட்டு நிலைமை ஏற்படாதா என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது.

வாசகர் கடிதம் – ஒரு விளக்கம்

பொதுவாக வாசகர் கடிதங்களை நான் வெளியிடுவது இல்லை. ஆனால் இம்முறை கிருஷ்ணகுமார் என்ற கற்றறிந்த ஒரு வாசகரின் கடிதம் அந்த விலக்கு பெறுகிறது. “குரங்குகள் சண்டையிடுவதில்லை” என்னும் எனது முந்தைய ( தென்கலை வடகலை பற்றிய) பதிவைப்பற்றியது. அக்கடிதமும் அதற்கு என் பதிலும் :

திரு.கிருஷ்ணகுமாரின் கடிதம்:

அன்பார்ந்த ஸ்ரீமான். உ.வே……அவர்களுக்கு.

நான் சிறு வயதில் முதலில் கேட்ட காலக்ஷேபம் உ.வே.ஸ்ரீ.முக்கூர் லக்ஷ்மி ந்ருஸ்ம்ஹாசார்ய ஸ்வாமி அவர்களுடையது. நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்லன். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பாலும் மிகவும் மதிப்புடையவன்.

வைஷ்ணவம் என்றாலே என் நினைவுக்கு வரும் விஷயம்.

கொக்கைப் போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப் போல் இருப்பான் என்று முக்கூர் ஸ்வாமி சொல்லியது. வ்ருத்தாந்தம் நினைவில் உள்ளது. ஆனால் யாரைப் பற்றி என்று நினைவில் இல்லை.

வடகலை தென் கலையார் தங்கள் தங்கள் சித்தாந்த வித்யாசங்களைப் பேணுவதில் ஹாஸ்யமான விஷயம் ஏதுமில்லை என்பது சிறியேனின் அபிப்ராயம். சித்தாந்த வித்யாசங்கள் இருக்கின்றன தானே.

ஆம். நீங்கள் சொல்லும் விஷயங்களை வாசிக்கையில்…. யானைக்கு எந்த நாமம் போடுவது…..ப்ரபந்தங்களை அடுத்தவர் காதில் தெளிவாக விழாத படிக்கு ஒருவரை ஒருவர் முந்தி உரக்கச் சொல்ல முயற்சித்தல்…..இத்யாதிகள் நான் வைஷ்ணவம் என்று மிக உயர்வாக மதிக்கும் விஷயத்திலிருந்து வித்யாசமாகவே தெரிகிறது. பின்னும் ஹரிபக்தர்கள் பால் தோஷாரோபணம் செய்ய மனம் மறுக்கிறது.

ஒருக்கால் எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் (ஓதுவித்தவர் கூலிகொடாதவர்)

ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர் தமை இகழ்வோர்கள்

நரகுழல்வாரே

என்று இடித்துறைத்தமை ஹேதுவாக இருக்கலாம்.

தோஷங்கள் மட்டிலும் தென்பட்டால் குணங்கள் தென்படாதே.

குணங்களைப் போஷித்து தோஷங்களைச் சான்றோர்கள் வெளிப்படையாக உணர்த்தாது குறிப்பாலுணர்த்திப் பாமரர்களை உத்தாரணம் செய்வர் என்று கேட்டிருக்கிறேன். தேவரீர் வடகலை தென் கலையார் தோஷங்களைப் பெரிசாகச் சொல்லி குணங்களை சொல்லாது விட்டீர்கள் என்று சிறியேனுக்குத் தோன்றுகிறது.

இருவரிடமும் உள்ள போற்றத் தகுந்த குணங்களைத் தேவரீர் தனியொரு வ்யாசமாக சமர்ப்பித்தால் வைஷ்ணவத்தின் மீது மதிப்புடைய சிறியேன் போன்றோர் உகப்புடன் வாசித்து எங்கள் வைஷ்ணவ அபிமானத்தை அபிவ்ருத்தி செய்து கொள்ளலாமே.

ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேன் சரணம்.

————————————————-

திரு.கிருஷ்ணகுமார், உங்கள் கடிதத்திற்கு நன்றி.

தென்கலை வடகலை சம்பிரதாய வித்யாசங்கள் பற்றி ஒரு அறிமுகமாக அடியேன் இன்னொரு பதிவு செய்திருந்தேன். அதையும் பார்க்கவும். “வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்” என்பது தலைப்பு.

http://ammanji.wordpress.com/2013/06/15/catandmonkey/

மிக உயர்ந்த வேதாந்த விசாரங்களில் தேர்ந்தவர்களான வைணவப் பெரியவர்கள் தங்கள் நிலை தாழ்ந்து வெறும் புறவயமான வேறுபாடுகளை மேலோங்கச்செய்வதிலும் அது தொடர்பான வீண் வாதங்களிலும் ஈடுபடுவதை நேரில் பல முறை கண்டு மனம் நொந்து, அப்படி என்னதான் இருக்கிறது இந்த வித்தியாசங்களில் என்று ஆராயத் தொடங்கினேன். காலஞ்சென்ற முனைவர்.ராமபத்ராச்சாரியார் அவர்களின் உபன்யாசங்களில் இவை பற்றி அவர் பல முறை குறிப்பிட்டுள்ளார். வேறுபாடுகள் இல்லை. உயர்வு தாழ்வு இல்லை. Philosophical Differences – சம்பிரதாய வேற்றுமைகள் அந்தந்த ஆச்சாரியார்களின் விசிட்டாத்வைத அணுகுமுறைகளில் இருந்தது. ஆனால் அடிப்படை ஒன்றே. பரத்துவம் ஒன்றே. சேஷன் ஒருவனேசேஷிகள் அனேகம்பேர் இருந்தாலும் உள்ளே உள்ள ஆத்மாவில் வேறுபாடு இல்லை. எனவே இந்த சம்பிரதாய அலங்கார வேற்றுமைகளினால் ஒரு பயனும் இல்லை. ஆண்டாள்  “கூடி இருந்துக் குளிர்ந்து” என்று கூறுவதுபோல் ஒன்றாக ஆத்ம விசாரம் செய்வோம் என்ற நோக்கில் அவரது உபன்யாசங்கள் இருந்தன. அவை என்னை ஆற்றுப்படுத்தின.

இன்னும் பிற பெரியவர்களின் நூல்களில் சில காலம் நுழைந்ததன் விளைவாக, “அடடா, நாம் எவ்வளவு ஒரு மகோன்னதமான சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ?” என்ற வியப்பு ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் நாகரீகம் இன்றி ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டிருந்த எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் நமது முன்னோர் ஆத்மாவின் ஒருமைப்பாடு பற்றியும், அன்னமய கோசம், பிராணமாயகோசம் என்று அறிவுரீதியான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். வேதம் சொல்வதைப் போலே,

“ஜன்மனா ஜாயதே சூத்திர: சம்ச்காரேர் த்விஜ உச்சதே”

( பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே. சம்ஸ்காரங்களைச் செய்வதினால் அவன் பிராம்மண நிலை அடைகிறான்) போன்ற உயர்ந்த அறிவு நிலையில் இருந்துகொண்டு, அது தொடர்பான விசாரணையில் ஆழ்ந்து உலகம் உய்ய வேண்டிப் பல நல்ல செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு சமூகம்,

“நாலு கால் பிராணிகள் நலமாக இருக்கட்டும்; இரண்டு கால் பிராணிகள் நன்றாக இருக்கட்டும்; செடி கொடிகள் நன்றாக வளரட்டும்..” என்கிற ரீதியில் தன் மந்திரங்களினால் தினமும் வேண்டிக்கொள்ளும் ஒரு சமூகம்,

இராமானுசர் என்ற ஒரு சமய / சமூகப் புரட்சியாளர் வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சமூகம்,

அவரது வழியையே இரு பிரிவாகப் பிரித்து, அதை மேலும் பல உட்பிரிவுகளாக ஆக்கி, மேலும் மேலும் தங்கள் பார்வையைச் சுருக்கிக் கொண்டு கடைசியில் இரு பிரிவினருக்குமுள்ள வித்தியாசங்களைத் தீர்க்க 1795ல், இந்த மாதிரியான ஆத்தும விசாரங்களில் கொஞ்சம் கூட ஊற்றம் இல்லாத வெள்ளைக்கார அரசாங்கத்திடம் முறையிட்டு நின்ற நிலை என்னை மிகவும் பாதித்தது.  அன்றிலிருந்து அடிப்படையில் ஒன்றேயான ஒரு சிந்தனையும் முற்போக்கான கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சமூகம், கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் தாங்களே உருவாக்கிக்கொண்ட வேறுபாடுகளை மேலும் விஸ்தரித்து அது விஷயமாக வழக்கு மன்றங்களில் நேரத்தைச் செலவழிப்பதைப் பார்க்கும்போது என் மனம் கூசியது.

அனைவரும் சமம், எல்லாரும் ஒன்றாக நாராயணன்பால் பக்தி செய்வோம் என்று திருக்கோஷ்டியூரில் சமூக, பக்திப் புரட்சி செய்து, நமது கலாச்சாரத்தைக் காத்த மகானின் வழி நடப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் தங்களுக்குள்ளேயே வேற்றுமை பாராட்டிப் பொன்னான நேரத்தையும், மனித வளத்தையும் வீணடித்ததைக் கண்டு பேசாமல் இருக்க முடியவில்லை.

முந்நூறு ஆண்டுகள் ! இத்தனை ஆண்டுகள் சம்பிரதாய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தால் இன்னொரு இராமானுசரோ, வேதாந்த தேசிகரோ, மணவாள மாமுநிகளோ கூட வெளிப்பட்டிருப்பார்கள்.

நினைவில் கொள்ள வேண்டும்: கடந்த முந்நூறு ஆண்டுகளில்  உலகையே மாற்றிப்போட்ட நிகழ்வுகள் பல நடந்துவிட்டன. சமூகப் பொருளாதார மாற்றங்கள் நினைக்கவேமுடியாதபடி நடந்துவிட்டன.

ஆனால் வைணவ அன்பர்கள் செய்தது என்ன?  வீண் சண்டைகள், வெற்று அலங்காரங்கள், அர்த்தமில்லாத கோஷங்கள், பல நேரங்களில் கை கலப்புக்கள் கூட.  மனதளவில் முன்னேறிய ஒரு சமூகம் செய்யும் செயலா இவை ?

தேசிகனும், மாமுனியும் என்ன கூறினார்கள்  என்பது முக்கியமாகப்படவில்லை. அவர்களது நெற்றியே முக்கியமாகப்பட்டது. “பாதுகா சஹாஸ்ரம்” விடுத்து அதை எழுதிய தேசிகனுக்கு அவரது பிறந்த நாளில் திருவரங்கத்தில் மரியாதை கூடாது என்றோம். எனெனில் திருவரங்கம் தென்கலையார் கோவில்.

திருவஹீந்திரபுரத்தில் மாமுனிகளின் சந்நிதிக்குமுன் திரை போட்டபடி சென்றோம். காரணம் திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாள் வடகலையாம்.

காஞ்சிபுரத்தில் தென்கலை சம்பிரதாயம் ஆடும் ஆட்டம் ஊர் அறிந்தது.

இதில் எங்காவது பக்தி உள்ளதா? அல்லது இப்படிச்செய்யும் அன்பர்கள் தேசிகனும் மாமுனியும் இறைவனை அடையும் வழியில் எந்த வழியில் வேறுபடுகிறார்கள் என்று அறிந்துள்ளார்களா? அதைப்பற்றிய எந்த ஒரு சிந்தனையாவது உள்ளதா? படிப்பு உள்ளதா ?

ஆழ்வார்களில் யார் எந்தக் கலை என்று யாருக்காவது தெரியுமா? அவர்கள் காலத்தில் இந்த வேறுபாடே இல்லை. ஏன், ஆழ்வார்கள் காலத்தில் இராமானுசரே இல்லை. ஆக, இராமானுசருக்குப் பல நூற்றாடுகள் கழித்துத்தோன்றிய இந்த வித்யாசங்களினால் என்ன பயன்? வழிபடும் முறை வேறா என்றால் அதுவும் இல்லை. பாடும் பாசுரங்களில் வேறுபாடு இல்லை. ஆனால் ராகத்தில் வேறுபாடு.

நாராயணன் ஒருவனே பரதெய்வம் என்பதில் ஒருமைப்பாடு. ஆனால் அவனைத் துதிப்பதில் வேறுபாடு. அதில் என்ன துவேஷம்? ( “நாராயணனே நமக்கே பறை தருவான் ” என்று ஆண்டாள் கூறியுள்ளது நோக்கத்தகாது  ).

மகாலக்ஷ்மியை வடகலையார் ஒரு ஆச்சாரியனாகக் கருதுகிறார்கள்.  “இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே..” என்பது பாடல். தென்கலையார் திருமகளை ஆச்சாரியனாக ஒப்புக்கொள்வதில்லை. எழுந்தருளியிருந்த பல ஆச்சாரியார்களில் திருமகள் ஒருவர் என்று கொள்வது என்ன அவ்வளவு பெரிய தவறா? அத்துடன்,  சண்டையிடும் அளவுக்கு இந்த விஷயம் ஒரு பொருட்டா?

இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், கோவில்களில் வடகலை திருமண் இருந்தால் அதனைச் சிதைத்துத் தென்கலைத் திருமண் ஆக்குவது என்னும் அளவிற்கு உள்ளது. வடகலை ஆச்சாரியார்கள் ஒரு தென்கலையார் கோவிலுக்கு மங்களாசாசனம் செய்யச் சென்றால் அவமரியாதைக்கு ஆளாகும்படி நேரிடுகிறது.

இப்படி ஒன்றுமில்லாத ஒரு வேறுபாட்டை இவ்வளவு தூரம் எடுத்துச் சென்று மேலும் மேலும் துவேஷம் வளர்ப்பது, முந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நூற்றாண்டிலும் நடப்பது  வேதனையானது. இவற்றைக் களைய வைணவப் பெரியோர்கள் முன்வரவேண்டும் என்ற ஆதங்கமே மேலோங்கியுள்ளது அடியேனுக்கு.

ஒரு சிறிய செப்புக்காசு அளவு கூட மதிப்பில்லாத இந்த வித்தியாசங்களைப் பெரிதுபடுத்துவது, மிருகங்கள் மீது திருமண் வேறுபாடுகளைத் திணிப்பது, முன்னோடிகளான ஆச்சாரியார்களைப் பழிக்கும் அளவுக்குச் செல்வதையும் பொறுக்க முடியாததே என்னை இவற்றை சற்றே நையாண்டி செய்யச் செய்தது.

தற்போது கம்பன் பற்றிய தொடர் எழுதிக்கொண்டிருப்பதால் சம்பிரதாயம் பற்றி இன்னும் விரிவாக சிறிது காலம் கழித்து எழுதுகிறேன்.

தொடர்ந்து படித்து ஆற்றுப்படுத்துங்கள்.

%d bloggers like this: