Sri Vaishnava Brahmins of Tamil Nadu – review

Sri Vaishnava Brahmins of Tamil Nadu
Sri Vaishnava Brahmins of Tamil Nadu

வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும்  நூல் வடிவம் 2014லிலும்  நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.

வரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

நூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.

நூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.

பி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.

Inhaling history @ Therazhundhur

The car stopped abruptly in front of the gate. From the front seat, I was able to see history unfold in the form of a 9th century temple. The Govindaraja Swami temple is located on the banks of a small lake called Alli Kulam in Therazhundhur. The place is so serene and calm that if you don’t look up, you wouldn’t notice human dwellings in the region.

The temple is definitely old. The main deities are made of stucco. The temple has a shrine for Manavaala Maamuni, the thenkalai saint. The priest, a computer science graduate who chose to serve the Lord rather than serve the MNC masters in the US, tells me that the temple was originally owned by his family and was later taken over by the government. Now that the temple is under HR&CE, any development needs to be endorsed by the powers that be at the government offices.

Fifty years ago the madappalli-the temple kitchen used to prepare one bag of rice per day as offering to the Lord and prasad to the visitors and devotees. Currently the temple’s annual income is 10 bags of rice. And the priest is paid Rs 40 per month as salary. This priest has chosen not to receive the salary as he needs to pay a larger cheque clearing fee to cash the cheque.

The temple, for sure, had seen better times. The kitchen was a large one then as it had to cater to thronging devotees. With dwindling bhakthas and income, the kitchen also has shrunk in size pointing to a sign of times. With people immersed in T.V. serials, who has the time to visit these historical shrines for solace?

The history of the temple, as elucidated by the priest Mr.Gosakan, is different from the one that is popularly known. The way the Thirumangai Azwar pasuram is represented to include Lord Govindaraja and Lord Ranganatha into the Divyadesa deities, is not endorsed by the many that I spoke to later. This, they say, is an attempt to include the temples into the more popular history of Lord Amaruviappan.

In any case, Lord Govindaraja is as enchanting as Lord Amaruviappan. Better to visit the temple during the day and inhale some history.

Related links on Therazhundhur:

Yakshi Pasi

The story the dog told me

தென்கலை * வடகலை – ஸ்டார்ட் மீஸிக்

திருமழிசையாழ்வார் தென்கலை சம்பிரதாயத்தை வலியுறுத்துகிறார் என்று சொல்கிறேன்.  கொஞ்சம் கொளுத்திப் போடலாம் என்று எண்ணம். எதிர் வினைகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம் என்று தோன்றியது.

நான்முகன் திருவந்தாதி என்னும் பாடல் தொகுப்பை எழுதினார் திருமழிசையாழ்வார். அதில் ஒரு அந்தாதிப் பாடல் :

“வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து”

இறைவன் பக்தி உழவன். அவனது நிலத்தில் நாம் ஒரு விதையையும் இட வேண்டாம். அவனே நம்மைப் பார்த்துக் கொள்வான். இவ்வாறு இப்பாசுரத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது. வடிவேலு பாஷையில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்கிறார்கள்.

ஜீவாத்மாக்களான நாம் இறைவனை அடைய எந்த முயற்சியையும் செய்ய வேண்டியதில்லை. அவனே நம்மை அழைத்துக்கொள்வான். அது அவனது கடமை என்பதாகப் பொருள் படுகிறது.

இதனை மார்ஜால நியாயம் என்று சொல்கிறார்கள் – அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதன் தாயே அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச் செல்லும். தென்கலை சம்பிரதாயம் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பது தென்கலையாரரின் மார்ஜால நியாயம்.

வடகலையார் மர்க்கட நியாயம் என்னும் நியதியின் அடிப்படையில் இருப்பவர்கள் – அதாவது குரங்கின் நியாயம். குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக்கொள்ள வேண்டும். தாய் குட்டியைத் தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்காளன நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை என்பதாக வடகலையார் நெறி உள்ளது.

திருமழிசை ஆழ்வார் சொல்வது கொஞ்சம் தென்கலையார் பக்கம் இருப்பது போல் தோன்றவில்லை ? என்ன நினைக்கிறீர்கள் ?

குரங்கோ பூனையோ, இரண்டும் இன்று சாஃப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்ஸனம்

என் வேலை முடிந்தது. ஸ்டார்ட் மீஸிக்.

பி.கு.: திருமழிசை ஆழ்வார் 5-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர். தென்கலை வடகலை பேதங்கள் இராமானுசருக்குப் பின் 13-ம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்த இரு பிரிவுகளின் முன்னோடிகளாக முறையே மணவாள மாமுனிகளும் வேதாந்த தேசிகரும் இருந்தனர் என்பது வரலாறு.

குளியல்

குளிக்கறதா வாணாமா ?

ஒவ்வொரு தபா சவாரி போக சொல்ல இதே ரோதனை தான். போன வருஷம் வரிக்கும் அம்மா இருக்க சொல்ல, ‘ சவாரி போற, நல்லா குளிச்சிட்டு ரீஜன்டா போ’ ன்னு சொல்லும்.

அது சரி இப்போ குளிக்கறதா வாணாமா ? குளிக்காம போனா கால் டாக்ஸி கெளம்பாதா என்னா ? இல்ல சவாரி தான் ஏற மாட்டானா ?

காலைல அஞ்சு மணிக்கி அடையாறு போய் கஷ்டமர பிக்கப் பண்ணினு, அப்டியே மாம்பலத்துல கஷ்டமரோட அண்ணனையும் இட்டுகினு சுண்ணாம்பு கொளத்தூர் போய்வரணும். நல்ல சவாரி தான். ஆனா குளிக்கணுமா ?

குளிக்காட்டா இன்னா ஆவும் ? ஒடம்பு சுத்தம் இருக்காது. அது சரி. மெட்றாஸ் வெய்யில்லே குளிச்சா என்ன குளிக்காட்டா என்ன ? ஒரு வழியா சவாரி போய் வந்து பொறவு குளிக்கலாம்.

அட இன்னாபா காலங்காலைல அடையாறுல இம்மாங்கூட்டம் ? மூணாவது தெருதானே சொன்னாங்க ? ஆங்.. அதோ அந்த தனி ஊடு தான். பார்ட்டி பெரிய பார்ட்டியா இருக்கும் போல. அடையாறுல தனி ஊடு வெச்சிருக்காங்கன்னா பெரிய கைதானே.

அட அய்யிரா ? ஏதோ விசேஷம் போல. தார்பாச்சி வேட்டி கட்டியிருக்காங்களே. அம்மிணியும் மடிசார் கட்டி வராங்க. நல்ல சகுனம் தான்.

ஆறு மணிக்கு மாம்பலத்துல என்ன கூட்டம் ? இந்த ஊர்ல எல்லாருமே மாம்பலத்துலதான் இருக்காங்களோ ?

‘இன்னா சார், குளிக்கலையான்னு கேக்கறீங்களா ? ஆமாம் சார். விடிகாலைல தண்ணி வர்ல. அதான் குளிக்கல. வேணும்னா சென்ட் அடிக்கட்டுமா சார் ?’

அட ராமா. இவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சே.

‘இன்னும் அரை மணி தான் சார். தாம்பரம் வந்துடும். பொறவு கால் மணில சுண்ணாம்பு கொளத்தூர் போயிடலாம் சார்’.

இன்னா கண்றாவிடா இது ? அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கறானுங்க ? நல்ல விஷயத்துக்குப் போறானுங்க. ஏதோ கெரப்பிரவேசம் போல. ஆனா புது ஊடு கட்டினவங்களப்பத்தி இப்பிடி பேசுறாங்களே.

‘இதான் சார் அந்த தெரு. அதோ தெரிது பாருங்க அது தான் சார் அந்த ப்ளாட்டு. வாழை மரமெல்லாம் கட்டியிருக்காங்களே ’

அண்ணனும் தம்பியும் வீட்டுக்குள்ள போயிட்டாங்க. கொஞ்சம் காத்தாட வெளில நிக்கலாம்.

இந்த அய்யமார் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. வெளிலயே நின்னுக்கணும். எதுனா சொல்லுவானுவ. நமக்கு புரியாது. சாடையா சொல்லுவானுவ. வெளங்காத பயலுவ. அதான் எல்லா பேரும் அமெரிக்கா போயிட்டனுவ. ஒருவேள வெள்ளக்காரங்கிட்ட தீட்டு பாப்பானுங்களோ ?

ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினாங்க காருக்குள்ள? ஏதோ இந்த வீட்டுக்காரங்க கடன் வாங்கினாங்களாம். ஆனா இப்ப வீடு வாங்கறாங்களாம். ஏக பொகச்சல் போல.

அட என்னப்பா ? போன வேகத்துல திரும்பி வராங்க. பின்னால ஓடி வார அம்மிணி இவுங்க போலவே இருக்கே. ஒரு வேள அக்கா, தம்பியா இருக்கலாம். ஆனா அழுவுது ?

‘வந்தவாள வாங்கோன்னு சொல்ல வக்கில்ல. அப்புறம் எதுக்குக் கூப்ட?’

‘இல்லடா கண்ணு தெரியல்லே. யார் வந்திருக்கான்னு புரியல்ல. வரச்சொல்லிட்டு வாங்கோன்னு சொல்ல மாட்டேனா?’

‘ஆமா ஆமா. கண்ணு தெரியாது, காது கேக்காது. பணம் வந்திருக்கோனோ, அதான் கண்ண மறைக்கறது’.

‘அட நாராயணா ! நான் தான் பாக்கல்லே, பின்னாடி நின்னுண்டிருந்தேன்னு சொல்றேனோனோ ? இவ்வளவு தூரம் வந்துட்டு இப்பிடிப் பேசாதேடா’.

‘இப்போ நாங்கள்லாம் உங்களுக்கு வேண்டாம். பணம் வந்துடுத்து. அடையார்லேர்ந்து வரோம். வந்தவாள வாங்கோன்னு சொன்னா பெருமை கொறஞ்சுடுமா ? இருக்கட்டும்.’

‘தோ பார்ரா, நான் முடியாம இருக்கேன். ஏதோ பிள்ளை வாங்கியிருக்கான் வீடு. வந்து ஆசீர்வாதம் பண்ணுவியா இப்பிடி  விடுவிடுன்னு போனா நன்னா இல்லே.’

‘எது நன்னா இருக்கு, எது நன்னா இல்லன்னு அவா அவாளுக்குத் தெரியும். நாங்க வறோம்’.

‘டே வேண்டாம்டா. எங்க சம்மந்தில்லாம் வந்திருக்காடா. எல்லாரும் பாக்கறாடா. அக்காவாத்துக்கு வரதுக்கு எதுக்குடா வரவேற்பெல்லாம்? நான் தான் பாக்கல்லேன்னு சொல்றேனே’.

‘உங்க சம்மபந்திக்கு முன்னாடி எங்கள அவமானப் படுத்தணும்னே தானே இப்பிடிப் பண்ணினே நீயும் அத்திம்பேரும். நன்னா இருங்கோளேன், யாருக்கு வேணும் உங்க மரியாத எல்லாம்.’

உள்ள போனவங்கள வான்னு கூப்பிடல போல. அந்தம்மா கண்ணு தெரியலேங்குது. இவுனுங்க கத்திட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் நல்ல காத்துல நிக்க முடியுதா ? என்ன பொழப்பு இது ?

‘என்னா சார் ? ரேடியோவா சார். யாரோ அய்யிரு சாமி பேசறாருங்க. வெக்கவா சார்?’

‘வேளுக்குடி கிருஷ்ணன் என்னமா சொல்றார் ? விசிஷ்டாத்வைத தத்வ ரத்னாகரம்னு பட்டம் குடுக்கலாம். உடம்பு வேற, ஆத்மா வேற. சுகம், துக்கம், சோகம், சம்ஸ்காரம், மரியாதை, அவமரியாதை எல்லாம் உடம்புக்குதான், ஆத்மாவுக்கு இல்லை. உடம்பு சாஸ்வதம் இல்லை. ஆத்மா தான் சாஸ்வதம். ஆகையால இந்த உலகத்துல நடக்கற காரியங்களால பாதிப்படையாம ‘ஸ்திதப் ப்ரக்ஞன்’ அப்பிடிங்கற ஸ்தானத்த நாம எல்லாரும் அடையணும்’ அடாடா என்ன வியாக்யானம். என்ன ஸ்பஷ்டம்?’

ஒண்ணும் பலன் இல்ல. குளிக்க வாணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

பெருமாளைக் காக்க வாருங்கள்

நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பெருமாள் சேவை கிடைத்த விதம் பற்றி இங்கே எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பெருமாள் பற்றி இன்னும் சில விஷயங்கள் பேசலாம் என்று இந்தப் பதிவு.

என்ன பயன் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யாராவது இந்தப் பெருமாள் எந்த ஊர் என்று தெரிவிக்கலாம். 50-60 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தின் கோவில் உடைக்கப்பட்டு பெருமாள் சிலை திருடு போயிருக்கலாம். அதைக் காவல் துறை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். அல்லது உங்கள் கிராமத்தை விட்டே நீங்களோ உங்கள் பெற்றோரோ வெளியேறி அந்தத் திருட்டு உங்களால் மறக்கப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அதனை மீண்டும் நினைவு படுத்திப் பாருங்கள். உங்கள் உற்றார் உறவினர் யாராவது இந்த மாதிரியான கிராமங்களில் இருந்தால் அவர்களிடம் பகிருங்கள். அவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படி எல்லாம் செய்து இப்பெருமாள் எந்த ஊர்க்காரர் என்று தெரிந்தால் எந்த ஊரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டார் என்று தெரிந்தால் அரசு மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்று முயன்று பார்க்கலாம். நான் மத்திய அரசைச் சொல்கிறேன்.

Perumal Face

பல ஊர்களில் பெருமாள் உற்சவர் விக்ரகம் புன்முறுவல் பூத்தபடி இருக்காது. வெகு சில ஊர்களில் மட்டுமே இவ்வாறு அமையும். எங்கள் தேரழுந்தூர்ப் பெருமாள் சிரித்தபடி இருக்கிறார். நியூ யார்க் அருங்காட்சியகப் பெருமாளும் புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறார். ஆக புன்முறுவல் சிரிப்பு கொண்ட உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று விசாரிக்கலாம்.

காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருமலை முதலிய ஊர்களில் உள்ள உற்சவர் விக்ரஹங்கள் முகங்களில் தழும்புகள் இருக்கும். ‘அம்மை வடு’ என்று சொல்வது உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல ஆயிரம் முறைகள் திருமஞ்சனம் என்னும் அபிஷேகங்கள் நடந்துள்ளபடியால் அவ்வாறு ஆவது உண்டு.

ஆனால் நியூ யார்க் பெருமாள் அப்படி இல்லை. கி.பி. 10ம் நூற்றாண்டு என்று எழுதி வைத்துள்ளார்கள். ஒன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு அவருக்கு அவ்வளவாக திருமஞ்சனங்கள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது புதைந்த நிலையில் பல நூறு ஆண்டுகள் இருந்து, பின்னர் கண்டெடுக்கப்பட்டு / திருடப்பட்டு அமெரிக்க செல்வந்தருக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது பல நூறு ஆண்டுகளாகவே கோவிலில் இருந்தும் வழிபாடுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் ; கிராமத்தில் வேலை இல்லாமல் ஊர் மக்கள் கிராமத்தைக் காலி செய்தவுடன் பெருமாள் திருடப்பட்டிருக்க வேண்டும். இந்த ஏதாவது ஒரு காரணத்தால் அவர் இன்னும் சற்று இளமையாகவே தெரிகிறார்.

இளமையாகத் தெரிந்தாலும் முகம் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒருவித சமன்பாட்டுடன் தெரிகிறது. ‘அபயஹஸ்தம்’ என்னும் அருள் வழங்கும் கையில் ரேகைகள் தெரியவில்லை. வழவழப்பாக இருக்கிறது. எனவே மிகப் பழமையானவர் தான்.

பெருமாளின் இடது நெற்றியில் ஒரு காயம் காணப்படுகிறது. அது சிலையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும் / கடத்தும் போது ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்கெனவே காயம் இருந்தால் ‘பின்னம்’ என்று சொல்லி கோவிலிலேயே ஓரமாக வைத்து விடுவர்கள் அப்படி உங்களுக்குத் தெரிந்த எந்தக் கோவிலிலாவது நடந்ததா என்று ஆராயலாம்.

Pin sevai

பெருமாளின் பின்சேவை ( பின்புறம் )யில் சடை முடி தெரிகிறது. ஒருவேளை இவரது பெயர் ‘சௌரிராஜன்’ என்று இருந்திருக்கலாம். எனவே ‘சௌரிராஜப் பெருமாள்’ கோவில்களில் ஏதாவது சிலைகள் திருடப்பட்டனவா என்று நீங்கள் ஆராயலாம்.

பெருமாளின் பெயர் ‘கேசவன்’ என்று கூட இருக்கலாம். ‘கேசம்’ என்றால் தலை முடி என்று பொருள். ‘ஆதி கேசவன்’, ‘கேசவன்’ என்ற பெயர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏதாவது திருட்டு நடந்துள்ளதா என்று ஆராயலாம்.

அவரது இரண்டு கைகளிலும் சிற்பங்கள் தென்படுகின்றன. அவவை ‘நாக பாச’மாக இருக்கலாம். நாக பாசம் உள்ள உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று கணக்கிட்டால் சில துப்புகள் கிடைக்க வழியுண்டு.  அவை மகாலக்ஷ்மி போலவும் தெரிகின்றன. அதை வைத்தும் தேடலாம்.

Perumaal Nagapaasam

புறப்பாடு செய்வதற்கு ஏற்றபடி பீடத்தில் வளையங்கள் தெரிகின்றன. இவை எல்லா ஊர்களிலும் இல்லை. இதையும் தேடுவதற்கு ஒரு விஷயமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

purappaadu

இவை எல்லாம் நம் கையில் உள்ள ஆயுதங்கள். செய்தியைப் பரப்பிப் பாருங்கள். ஏதாவது ஊருக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச் செல்லும் போது அங்குள்ள பெரியவர்களிடம் 50-60 ஆண்டுகளில் பெருமாள் சிலை திருட்டு ஏதாவது ஏற்பட்டதா என்று கேட்டுப் பாருங்கள். முக்கியமாக ஸ்தபதிகள், அர்ச்சகர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கலாம். யாருக்காவது பொறி தட்டலாம். அதன் மூலம் சிலை திருட்டை நிரூபித்துப் பின்னர் நியூ யார்க் அருங்காட்சியகத்திற்கு அரசு மூலம் எழுதலாம்.

ஏதாவது செய்வோம். நம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள்.

நான் இராமானுசன் – பகுதி 11

பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலான நூல்களின் மேல் நம்பிக்கை இல்லையா ? அவற்றில் உள்ள வேள்விகள் பற்றிய ஞானம் தேவை இல்லையா ? அவை எதுவுமே வேண்டாமா ? அவை இல்லாமலேயே மோக்ஷம் கிட்டுமா ? என்றெல்லாம் கேட்டிருந்தார் ஸ்ரௌதிகள்.

மீமாம்ஸங்கள் எல்லாம் இருக்கட்டும். அவற்றில் என்ன இருக்கின்றன என்ற ஞானம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது ? அவற்றில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் பரப்பிய புரளிகள் எத்தனை ? அவற்றை சங்கரர் களைந்த விதம், ஆழ்வார்கள் செய்த தொண்டு , அவர்கள் வழி காட்டிய மோக்ஷப் பாதை, அதன் பின் வந்த நாதமுனிகள் ஆற்றிய பணி – இப்படி எவ்வளவோ தூரம் கடந்து விட்டோம். ஆனாலும் இவர்கள் மீமாம்ஸங்களிலேயே உள்ளனரே ? என்று எண்ணினேன்.

மீமாம்ஸங்களுக்குள் போவதற்குள் பாரத சிந்தனை வெளியில் எவ்வளவு ஆழம் உள்ளது என்று நம் மக்கள் அறிந்துள்ளனரா என்று எனக்கு சந்தேகம் உண்டு. வேதங்கள் மட்டுமே பிரமாணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று நம்மில் யாராவது கேட்டுள்ளனரா என்றும் எனக்குச் சந்தேகம் உண்டு. அவ்வாறு கேட்ட பௌத்தமும் ஜைனமும் ஸார்வாகமும் போன இடம் தெரியவில்லையே என்று கேள்வி எழுப்பியவர்கள் எத்தனை பேர் ?

ஏதோ ஒரு தீர்க்கதரிசி ஒரு பாதையைக் காண்பித்தால் அதனையே பின்பற்றிக்கொண்டு செல்வதும், சில நாட்கள் கழித்து அவரை விடுத்து இன்னொரு தீர்க்கதரிசியின் பின்னால் செல்வதும் தான் ஆன்மீக விழிப்புணர்வா என்றும் இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரியவில்லை.

கேள்விகள் ஒரு காலத்தில் எழுப்பப்பட்டன. அதன் மூலமே உபநிஷதங்கள் தோன்றின. அவற்றின் மூலம் வேதங்கள் சொல்லும் ஆழ்ந்த பிரபஞ்ச அறிவில் சில வெளிச்சங்கள் தென்பட, மேலும் ஆழ விசாரித்தால் பல உண்மைகள் புலப்பட்டன. மேலும் மேலும் தோண்டிப் பார்த்து அவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ஆதியினை உணர முற்படுவது விஞ்ஞானம். அந்த ஆதியே பிரும்மம் என்றோ, இந்தப் பிரபஞ்சம் என்ற பருப்பொருளின் உணர்வு வடிவே பிரும்மம் என்ற எண்ணமோ ஏற்படுமாயின் அதுவே தத்துவ விசார வெற்றி, ஆன்மீகம்.

ஸ்ரௌதிகள் கேட்ட இன்னொரு கேள்வி என்னைத் தைத்தது. ‘ஸார்வாகன் நாஸ்திகன் இல்லையா?’ என்பதே அது.

நாஸ்திகன் என்பவன் யார் ? பிரும்மம் இல்லை என்பவனா ? அல்லது பிரும்மம் என்பது ஸர்வ வல்லமை படைத்தது என்று நம்ப மறுப்பவனா ? பிரும்மம் இல்லை என்பது வேறு; அது தேவை இல்லை என்பது வேறு அல்லவா ? ஆக எது நாஸ்திகம் ?

நாஸ்திகம் என்பது இருக்கட்டும். முதலில் ஆஸ்திகம் என்பது என்ன ? பிரும்மத்தை நம்புவதா ?

ஆஸ்திகம் என்பதன் வேர்ச்சொல் அஸ்தி என்பது அல்லவா ? ‘அஸ்தி’ என்றால் ‘இருப்பது’ என்பது. ‘இருப்பதை’ நம்புவது ஆஸ்திகம். ‘இருப்பதை’ உணர்வது ஆன்மீகம்.

இருப்பதை நம்பாதது ஒருபுறம் நாஸ்திகம் என்றால் இருப்பதை அறிய முடியாதது என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? அறிய வேண்டிய தேவை இல்லை என்பது அல்ல அது. அறிய முடியாது என்று நம்புவது அது. இருக்கிறது என்பதை உணர்வதும் ஆனால் இருப்பதை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வதும் தேடலின் ஒரு வழி தானே.

ஆனால் ஸார்வாகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ‘இருப்பது என்பதே இல்லை’ என்ற கொள்கை உடையவர்கள். கண்களுக்குத் தெரியும் இருப்பே இருப்பு. தெரியாதது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? கண்களுக்குத் தெரிந்து, உணர முடிந்து இருக்கும் பூதங்களின் கலவையினால் ஏற்படும் மாற்றங்கள் இந்த உலகப் பொருட்கள். அவையே சாஸ்வதம். அவை அழிந்தபின் இருப்பது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே கண்களுக்குத் தெரியாதவை நமக்குத் தேவை இல்லாதவை என்பதை விட அவை இல்லை என்பதே உண்மை. இது அவர்கள் சார்பு நிலை.

ஸார்வாகர்களின் நிலை ரொம்பவும் எளிமையானது. ஆனால் அந்த நிலை பௌதீக வாதம் மட்டுமே. கண்களுக்குத் தெரியாததால் சில விஷயங்கள் இல்லை என்றாகிவிடுமா?

பசும்பால் இருக்கிறது. அதிலிருந்து மோர், தயிர் முதலியன கிடைக்கின்றன. எனவே பாலைப் பார்த்து இதில் மோர் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது மோரையோ, தயிரையோ பார்த்து இதில் பால் இல்லை என்று சொல்ல முடியுமா ? அல்லது அவற்றினுள் நெய் இல்லை என்று ஆகுமா ? நெய் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் தயிரில் வெண்னெய், நெய் முதலியன இல்லை என்று தான் கூற முடியுமா ?

பால் காரணம். மோர், தயிர் முதலியன காரியம். அதே போல் தயிர் காரணம். வெண்ணெய் அதன் காரியம். வெண்ணெய் காரணம், நெய் காரியம். அது போல் இந்த உலகில் மனிதன் மற்ற உயிர்கள் மற்றும் ஜடப் பொருட்கள் காரியம் என்றால், காரணம் என்ன ?

தயிர் கடைந்தபின் வெண்ணெய் கிடைக்கிறது என்பதால் தயிர் இல்லை என்று சொல்ல முடியாதது போல மனித, மிருக உயிர்களும், ஜடப்பொருட்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கான காரணமும் இருந்தாக வேண்டும் அல்லவா ?

ஆக, ஸார்வாகர்களின் தத்துவம் முழுமையானதல்ல. ஒரு அளவிற்கு மேல் நம் சிந்தனை செல்லவில்லை என்பதால் சிந்தனைக்கு அப்பால் அறிவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆகுமா ?

உலகம் என்ற பருப்பொருள் உண்மை என்பதால் அதை நாம் உணர்வதால் அதனைக் காரியம் என்று கொள்வோம். உலகம் என்பது நம் அனைவரையும் சேர்த்தே சொல்கிறேன். ஆக, உலகம் காரியம். அதன் காரணம் என்ன ? ஸார்வாகர்கள் தத்துவப்படிப் பார்த்தால் காரணம் நம் சிந்தனைக்கு அப்பால் உள்ளது எனவே காரணம் என்பது இல்லை என்று கொள்ளலாமா ? அப்படிக் கொள்வது தவறு இல்லையா ?

அப்படியென்றால் பிரபஞ்சம் என்பது இல்லையா ? பிரபஞ்சம் பற்றிய நமது சிந்தனை விரிவு அடையவில்லை என்பதால் பிரபஞ்சம் என்பது இல்லை என்று ஆகிவிடுமா ?

பிரபஞ்சம் பற்றி நம்மால் முழுமயாக அறியவும், அதன் குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நமது சிந்தனைச் சக்தி போதாமையால், பிரபஞ்சத்தின் உருவகமாக ‘பிரும்மம்’ என்று கொள்கிறோம். பிரபஞ்சம் என்பது இன்ன அளவு கொண்டது என்று நம்மால் அறிய முடியாததால் பிரும்மத்திற்கு ‘அதை அளவிட முடியாது’ என்று ஒரு குணத்தைக் கற்பிக்கிறோம்.

பிரபஞ்சம் நமது பூமியையும் மற்ற கிரகங்களையும், சூரியனையும், மற்ற சூரியர்களையும், அனைத்து நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதால் அதற்குப் பேராற்றல் இருக்க வேண்டும் என்று எண்ணி பிரபஞ்சத்தின் உருவகமான பிரும்மத்திற்கு அளப்பறிய ஆற்றல் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதை பிரும்மத்தின் ஒரு குணம் என்று பிரஸ்தாபிக்கிறோம்.

இந்த சிந்தனை மரபே நமது தத்துவ ஞானம்.  இந்த ஞானத்தை அடைவதையே நமது பிறப்பின் குறிக்கோளாகக் கொள்கிறோம். கொள்ள வேண்டும்.

ஞானத் தேடல் இப்படி இருக்கையில், ஸ்ரௌதிகள் ஸார்வாகரை ‘நாலாம் வர்ணத்தவன்’ என்று இளக்காரமாகக் கூறியது என்ன வகையில் ஞானத்தின் வெளிப்பாடு என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.

‘ஸ்வாமி, தேவரீர் சரீரம் அஸக்தமாக இருக்கிறதா ?* சற்று ஸ்ரம பரிகாரம்* செய்துகொள்ளத் திருவுள்ளமோ ?’, என்று என் சிந்தனையைக் கலைத்தார் கூரத்தாழ்வார்.

———————————————————————–

சரீரம் அஸக்தமாக – உடல் நிலை சரி இல்லாமல்

ஸ்ரம பரிகாரம் – ஓய்வு எடுத்துக்கொள்ளுதல்

‘நான் இராமானுசன்- பகுதி 10’

‘நான் இராமானுசன்- பகுதி 9’

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7’

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5’

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3’

‘நான் இராமானுசன்- பகுதி 2’

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

நான் இராமானுசன் பகுதி 9

ஸார்வாகர்களின் தலைவர் கேட்ட கேள்வி கூட்டத்தை நிதானமிழக்கச் செய்தது. சிறிது சலசலப்புக்கள் தோன்றின.

ஸார்வாகர்கள் சித்தாந்தம் அப்படியானது. அவர்கள் மரபுப்படி கண்ணால் காண்பது மட்டுமே உண்மை. மற்றது பற்றிப் பேசுவது எல்லாம் வீண்.

இந்த சித்தாந்தக்காரர்கள் இன்று நேற்று அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது தேசத்தில் உள்ளனர். இந்தப் பரந்த பரத கண்டத்தில் யாருக்கும் இடம் உண்டு. யாரும் எந்தக் கொள்கையும் கொண்டிருக்கலாம். ஏனெனில் நமது சித்தாந்தம் அப்படிப்பட்டது. உடல் வேறுபாடு உடையதே தவிர ஆன்மா வேறுபாடு இல்லாதது. அனைவரது ஆன்மாவும் ஒன்றே. அவற்றிடம் உயர்வு தாழ்வு இல்லை. இதுவே நமது விசிஷ்டாத்வைதம்.

ஸார்வாகர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினேன்.

‘ஸார்வாகர்களே, பஞ்ச பூத சேர்க்கைவாதிகளே, உங்களுக்கு என் வந்தனங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்வி நியாயமானது. வெற்றிலை பச்சை நிறம் உடையது. சுண்ணாம்பு வெள்ளை நிறம் கொண்டது. ஆனால் இரண்டையும் சேர்த்து உண்டால் சிகப்பு நிறம் உருவாகிறது. அதைப்போல பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிர்கள் உண்டாகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு, ஆத்தும விசாரம் என்ற போர்வையில் வீண் விவாதம் என்பது உங்கள் கேள்வி.

இந்தக் கேள்விகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும். வேறு பெயர்களில் இதே கேள்வியைக் கேட்பார்கள்.

ஸார்வாகரே, நீங்கள் எப்போதாவது ‘நமக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வேறுபாடு?’ என்று யோசித்ததுண்டா ? அவையும் உணவு உண்கின்றன, இனப் பெருக்கம் செய்கின்றன, சண்டையிடுகின்றன, செத்து மடிகின்றன. நாமும் அப்படியே தானா ?

உலகமே பஞ்சபூத சேர்க்கை மட்டும் தான் என்றால் ஆடு மாடுகளுக்கும் அவற்றைவிடக் கீழான உயிர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லையா  என்று நினைத்துப்பார்த்ததுண்டா ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு தளத்தில் நல்லவர்கள் துன்பம் அடைவதும், தீயவர்கள் நன்மை அடைவதும் ஏன் என்றும் எண்ணிப்பார்த்ததுண்டா ?

மனிதர்கள் உடலினால் செய்யும் தீமைகள் அவர்களது தற்கால வாழ்க்கையைப் பாதிப்பதில்லை என்று நீங்கள் பார்த்ததில்லையா ?

ஆகவே, இக்காலத்தில் மனிதர்கள் செய்யும் செயலால் அவர்களுக்குப் பாதிப்பில்லை என்றால் வேறு ஏதோ காலத்தில் அவர்கள் செய்த செயலால் தற்போது பாதிக்கப் படுகிறார்கள் என்று தானே அர்த்தம் ?

ஆக, தற்காலத்தில் மனிதனின் வாழ்க்கைக்கும் முன் எப்போதோ அவன் செய்த செயலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பது புரிகிறதா ?

ஆனால் உடல் அழிவு அடையுமே ? உடல் அழிந்தபின் அவனது செயல்களும் அழிய வேண்டுமே ? ஆனால் செயல்கள் அப்படி அழியாமல் மனிதனைப் பின்தொடர்கின்றனவே. அது எப்படி ?

எனவே மனித உடலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு தொடர்பு தெரிகிறதா ? அதையே நாங்கள் ஆன்மா என்கிறோம்.

ஒரு உடலுக்கும் அது அழிந்தபின் ஏற்படும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பு ஆன்மாவினால் ஏற்படுவது. உடல் ஒரு அங்கவஸ்திரம் போன்றது. அங்கவஸ்திரம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதை அணியும் மனிதன் மாறுவதில்லை.

அது போல் ஆன்மா அழிவதில்லை. அது அணியும் அங்கவஸ்திரமாகிய உடல் மாறும், அழியும், தோன்றும். அழிந்த ஒரு உடலுக்கும் பிறக்கும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பே ஆன்மா என்பது. இதனாலேயே ஒரு உடல் ஒரு பிறவியில் செய்யும் காரியம் ஆன்மாவில் தங்கி அந்த ஆன்மா இன்னொரு உடலில் இருக்கும்போது பலன் அளிக்கிறது. நல்லவர்கள் துன்பம் அடைவது, தீயவர்கள் சுக போகங்களில் திளைப்பது இதனால் தான்.

ஆக, பஞ்ச பூத சேர்க்கை தவிர வேறு ஏதோ ஒன்று உள்ளது என்பது புலனாகிறது அல்லவா ?’, என்று கூறி நிறுத்தினேன்.

‘அப்படியென்றால் ஆடு மாடுகள் நம்மைவிட தாழ்ந்தவை என்று கூறுகிறீரா ? உங்கள் சித்தாந்தத்தின்படி அனைத்து உயிர்களும் சமம் அல்லவா ?’, என்று கேள்வி எழுப்பினார் ஸார்வாகர்.

‘உடல் அளவில் மனிதனுக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆன்ம அளவில் அனைத்தும் ஒன்றே. உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இல்லை. வேற்றுமை என்பது உண்டு ஆனால் அனைத்து உயிர்களும், ஏன் ஜடப் பொருட்களும் கூட சமானமானவையே. தத்துவ த்ரையம் என்பது அது தானே. சத், சித், ஈசன் மூன்றும் உண்மை. இதோ இந்தத் ‘த்ரி தண்டம்’  இருக்கிறதே – அது உணர்த்தும் பொருள் அது தானே’, என்று கூறி என் கையில் இருந்த ‘த்ரி தண்டம்’ என்னும் மூன்று மூங்கில் கழிகளின் ஒன்றாகப் பிணைந்த நிலையை உணர்த்தினேன்.

ஸார்வாகர்கள் மேலும் பேசவில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் பேசாமலே இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை என்பது தெரிகிறது. ஸார்வாகர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இந்த என் எழுத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போதும் ஸார்வாகர்கள் இருப்பார்கள். ஆனால் வேறு பெயரில், வடிவத்தில் இருப்பார்கள். ஆனால் எப்போதும் இருப்பார்கள். இப்படியாகக் கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள். சில நூறு ஆண்டுகள் கழித்து பாரசீகம் தாண்டி மிலேச்ச ராஜ்யங்களில் இருந்து சில பண்டிதர்களின் பேச்சும் இப்படியே இருக்கும். அவர்களின் உந்துதலால் பல ராஜ்ஜியங்கள் மாறும். அந்த இடங்களில் எல்லாம் ஸார்வாக சித்தாந்தம் பரவும். ஆனால் சில வருஷங்களிலேயே அவை அழியும். இப்படியாக எனக்குத் தென்படுகிறது.

ஆனால் ஒன்று. ஸார்வாகர்கள் நமது தத்துவ வெளியில் ஒரு சிறந்த படித்துறை போன்றவர்கள். அவர்களது கேள்விகள் விகாரமாகத் தோன்றினாலும் நமது பாரத தேசத்தின் சிந்தனையைத் தூண்டி விடுபவை. நமது சித்தாந்தங்கள் தெளிவான குளத்தின் நீர் போன்றவை. படித்துறை போன்ற ஸார்வாக தத்துவக் கேள்விகளின் வழியே நமது அத்வைத, விஸிஷ்டாத்வை சித்தாந்தங்களில் மூழ்க நமது பாரத கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள வழிமுறை இது.

இந்த ஸார்வாகத் தனமான் கேள்விகள் எக்காலத்திலும் இருக்கப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வைதீக மதஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு, ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலைத் தவறாகப் புரிந்துகொண்டு அவற்றின் சத்தான உட்கருத்தை விட்டுவிட்டு மேலோட்டமான சில சடங்குகளை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கும் வைதீக சம்பிரதாய மரபினர் வரப்போகிறார்கள். அவர்களினால் இந்த அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களின் ஆழத்தை உணர முடியாது. எனவே அவற்றை மற்றவரிடமும்  எடுத்துரைக்க முடியாது. இதன் காரணமாக இந்த சம்பிரதாயங்கள் கேலிப்பொருட்களாகும். இதன் காரணமாக ஸார்வாகம் சிறந்த ஒரு மார்க்கம் போல் தோற்றமளிக்கும்.

ஆன்மீகம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயற்சி செய்யாத ஒரு வைதீகக் கூட்டம் ஏற்படும். அதன் காரணமாகவும், வெறும் சோறு மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று மக்களைத் திசை திருப்பும் மிலேச்ச அரசுகளின் காலம் ஏற்படும். அப்போது இந்த வைதீகக் கூட்டம் தன் இயல்பு மறந்து, தனது அறிவை உணவுக்கு அடகு வைத்து, வெறும் சடங்குகள் மட்டுமே ஆன்மீகம் என்று நம்பி அந்த வழியே வாழும் காலம் துவங்கும். அப்போது இந்த தேசத்தின் கலாச்சார வீழ்ச்சி அதிவேக அளவில் எற்படும்.

ஆன்மீகம் என்பது தளைகளிலிருந்து விடுபடுதல் என்ற பொருள் போய், வெற்று சடங்குகளின் அணிவகுப்பு என்ற கருத்து வலுப்படும் காலம் ஒன்று வரப்போகிறது. அப்போது ஸார்வாகம் மேலும் ஸ்திரப்படும். இப்படியாக என் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது.

‘ஸ்வாமி, தேவரீர் அத்வைதம் விடுத்து இப்போது ஸார்வாகம் சென்றுவிட்டீரே’, என்று சற்று புன்னகையுடன் கூறி மீண்டும் வாதப் பொருளுக்கு அழைத்து வந்தார் யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள்.

ஆண்டாள் – ஒரு பார்வை

வைணவ சிந்தனையில் ஆகச் சிறந்த பங்காற்றியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பன்னிருவர். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. இவர்கள் இராமானுசர் காலத்திற்கு முற்பட்டவர்கள். சங்கம் மருவிய காலம் முடிந்து பக்தி இயக்கக் காலமே ஆழ்வார்களின் காலம்.  ஆழ்வார்களின் பங்களிப்பைக் காணும் முன் ஆண்டாளைப் பற்றியும் அக்கால நடைமுறை வழக்கங்கள் பற்றியும் சிறிது ஆராய்வோம்.

மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களுக்குப் புனிதமானதே. திருமாலும் தான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். பகுத்தறிவாளர் உடனே இறைவன் எல்லா மாதங்களுக்கும் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பலாம். மார்கழி மாதம் முழுவதும் இறை தொடர்பான எண்ணங்களுடனே இருந்து சில நோன்புகள் பூண்டு விரதம் முதலியவற்றைப் பேணுவது என்றும் அம்மாதத்தில் திருமணம் முதலிய சமூக நிகழ்வுகள் நடவாமல் மக்கள் மனம் முழுவதும் இறை பற்றியே இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படை என்று கொள்ள முடிகிறது.

இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும் இறைத் தொடர்பான சிந்தனைகளுடனே அம்மாதம் முழுதும் செலவிடுகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது. கிறித்தவர்களுக்கும் ‘லென்ட்’ (Lent) என்று நோன்பு இருக்கும் மாதம் உள்ளது என்று அறிகிறேன். ஆக மாதம் முழுவதும் நோன்பிருப்பது மனித சமூகம் முழுவதுமே இருக்கும் ஒரு பழக்கம் என்பதும் இறை தொடர்பான எண்ணங்கள் வளர இம்மாதிரி நோன்புகள் பயன்படுகின்றன என்பதும் வெளிப்படை.

நோன்பிற்கும் ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு ?

ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ என்னும் முப்பது பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களால் பாடப்படுகின்றன. அப்பாடல் வரிகளின் மூலம் ஆண்டாள் தனது தோழிகளைத் துயில் எழுப்புவது பற்றியும், நோன்பிருந்து இறைவனை அடையவேண்டியது பற்றியும் கூறுவதை அறிகிறோம். இவை மட்டும் அல்லாமல் அக்கால வாழ்க்கை முறை பற்றியும், சில இயற்க்கை நிகழ்வுகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாம் ‘அறிவியல்’ பூர்வமாகக் ‘கண்டுபிடித்தவை’ என்று பறை சாற்றிக்கொள்ளும் சில உண்மைகளும் ஒரு சாதாரண நிகழ்வு போல் ஆண்டாளால் பதிவு செய்யப் படுகிறது. ( “ஆழி மழைக் கண்ணா..” என்று தொடங்கும் பாசுரத்தில் மழை பொழியும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. கடலில் இருந்து நீர் ஆவியாகி, மேகமாகி மலைகளில் முட்டுவதால் மழை பொழிகிறது என்ற பொருளில் அமைந்துள்ளது இப்பாசுரம்)

ஆண்டாள் காலத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுள் முன்பு ( கி,மு.200 -300) தமிழ் மக்கள் இனக்குழுக்களாக இருந்த நேரத்தில் ( சங்க காலம் துவங்குவதற்கு முன் என்று கொள்ளலாம்) ‘பாவை நோன்பு’  என்ற ஒரு தொன்மையான வணக்க முறை இருந்துள்ளது. அப்போது தாய் வழிச் சமூகமாக இருந்துள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாவை நோன்பும் பெண்கள் கடை பிடிப்பதாகவே காட்டப்படுகிறது. இது குறித்துச் சங்கப் பாடல்களும் தெரிவிக்கின்றன.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இந்த வணக்க முறைகள் வேளாண் பயிர் சிறந்த முறையில் விளைய வேண்டும், வெள்ளம் முதலிய இயற்கை நிகழ்வுகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டும் என்று அந்தந்த நிலங்களின் தெய்வங்களிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையாக இவை பெண்கள் செய்யும் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. பெண்களே ‘வளர்ச்சி’, ‘ உற்பத்தி’ முதலியனவற்றிற்குக் குறியீடாக வைக்கப்பட்டிருந்தனர் என்றும் உணர முடிகிறது. . ‘இந்திர விழா’ என்று தொல்காப்பியம் அழைக்கும் மருத நிலம் தொடர்பான விழாவும் இந்த நோன்பு வகைகளில் ஒன்றே.

இந்த விழாக்களில் சிறப்பானது ‘பசுவன்’ என்று மண்ணினால் பசு மற்றும் அதன் கன்று போன்ற பிம்பங்கள் செய்து அதற்குத் தினமும் தானியங்கள், புல் முதலியன படைத்து வழிபடுவது. முப்பது நாட்களுக்குப் பின் அந்தப் பசுவன் வடிவத்தை ஒரு சிறுமியின் மடியில் அமர்த்தி வழிபட்டுப் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது என்று இருந்தது. அப்போது பாடி ஆடும் மகளிர் நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், தானியங்கள் நிறைய விளைய வேண்டும் என்ற பொருள் படும்படிப் பாடுகிறார்கள் என்று இந்திர விழா குறித்த குறிப்புகள் கூறுகின்றன.

பெண்கள் தொடர்பு படுத்தியே இவ்வகை நோன்புகள் இருந்தன என்பது ‘பரிபாடல்’, ‘அக நானூறு’ முதலிய நூல்களில் இருந்து தெரிவதாக ‘ வைணவமும் ஆழ்வார்களும்’ என்னும் நூலில் திரு.தேவராஜன் தெரிவிக்கிறார். தற்காலத்தில் கூட ‘ஔவையார் நோன்பு’, ‘ காரடையான் நோன்பு’, ‘வர லக்ஷ்மி விரதம்’ முதலிய நோன்புகள் பெண்கள் பற்றியதாகவே  உள்ளது நோக்கத்தக்கது. இன்றைய காலத்தில் கூட மதுரை மாவட்டங்களில் அம்மன் கோவில் திரு விழாக்களின் போது ‘முளைப்பாரி’ எடுப்பது என்னும் நோன்பு நடக்கிறது. திருவிழா நடக்கும் பத்து நாட்களும் பெண்கள் தானியச் சட்டிகளுக்கு பூசை செய்து, பயிர் சிறிது முளை விட்டதும் பத்தாம் நாள் அதனை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் வலம் வந்து ஆற்றில் கரைப்பது என்று உள்ளதையும் நோக்க வேண்டும்.

இந்த வகையான நோன்புகளும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகளும் ‘தாந்திரீகம்’ என்னும் சங்க கால வழிபாட்டு முறைகளாம். இந்தத் தாந்திரீக முறைகள் ‘பாஞ்ச ராத்ரம்’ என்னும் இராமானுசர் வகுத்த ஆகம முறையில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.

சங்க கால நோன்பு முறை போன்றே ஆண்டாளும் பிற கன்னிப்பெண்கள் புடை சூழப் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடுவது என்று பொருள் படும்படித் திருப்பாவையில் பாடுகிறாள். திருப்பாவை என்பதே ‘பாவை’ என்ற நோன்பின் அடியொற்றியே அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

“… நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ..” என்னுமிடத்தில் தாங்கள் ‘பாவை’ உருவ பிம்பங்களுக்குச்  செய்யும் சடங்குகளைக் கேட்பீர்களோ என்று கூறிவது நோக்கத்தக்கது.

ஆண்டாளின் பாடல்களிலும் வேளாண்மை குறித்த நிகழ்வுகளும் அதற்குத் தேவையான அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. நாங்கள் நோன்பு நோற்கிறோம், எங்களுக்கு நல்ல மழை தாருங்கள், பயிர்கள் செழிக்கட்டும், பால் வளம் பெருகட்டும் போன்ற வேண்டுதல்கள் தெரிகின்றன.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து அதனால் நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் வளம் கொழிக்கும் நேரம் அது.  மழை பற்றியும், நீர் நிலைகள் பற்றியும் பல இடங்களில் தனது நோன்பின் நோக்கம் பற்றியும் ஆண்டாள் கூறுகிறாள். சில பின் வருவன :

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ..”
“மாரி மழை முழைஞ்சில்..”
“சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய்..”

ஆநிரைகள் வளத்தின் அடையாளம். ஆண்டாள் அவை பற்றியும் பாடுகிறாள். அவை:

“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ..”
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு ..”
“கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து..”
“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் ..”

மேலே சொன்ன பயன்கள் கிட்ட பாவை நோன்பு நோற்கிறார்கள். அதன் செயல் வடிவம் என்ன ? பின் வருபவை அவை :

“வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்…”

நெய், பால் முதலியன உண்ணாதிருத்தல், விடியற்காலமே எழுந்து நீராடுதல், மை தீட்டிக்கொள்ளாதிருத்தல், மலர் சூட்டிக்கொள்ளாதிருத்தல், செய்யக் கூடாதனவற்றைச் செய்யாதிருத்தல், தீமை தரும் சொற்களைச் சொல்லாதிருத்தல் ( புறங்கூறாமை என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார் ) முதலியன நோன்பின்  அடையாளங்கள் போலே.

வைணவ பக்தி முறையில் சில ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து திருமாலை நோக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக நினைத்து ஒரு தாய் தனது குழந்தையை நடத்தும் விதமாகக் கண்ணனைப் பாடி இருக்கிறார். திருமங்கை ஆழ்வார் தன்னைப் ‘பரகால நாயகி’ என்ற பெண் நிலையிலும், நம்மாழ்வார் தன்னைப் ‘பராங்குச நாயகி’ என்னும் நிலையிலும் உருவகித்து, திருமாலைக் காதலனாகப் பாவித்துப் பாடல்கள் புனைந்துள்ளனர். இவ்வகை ஆழ்வார் பாடல்கள் ‘நாயக நாயகி பாவம்’ என்னும் வைணவ உறவு நிலையைக் குறிப்பன.

இவை ஆணின் உடலில் உள்ள பெண் தன்மையை எழுப்பும் ‘குண்டலினி’ யோக முறையின் கீழ் நிலையை உணர்த்துகின்றன என்று பேரா.தோத்தாத்திரி தெரிவிக்கிறார்.

பக்தி இயக்க காலத்தில் ஆண்டாளின் நோன்பு நிகழ்வுகள் அவை சங்க காலத் தமிழ் மக்களின் நோன்பு வகைகளை ஒத்து அமைந்துள்ளன என்று காண்பது வியப்பளிக்கிறது. இந்த மாதிரியான நோன்புகளை சங்க காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாள் மேற்கொண்டாள் என்று நினைக்கும்போது கால அளவுகளைத் தாண்டிய ஒரு உன்னதமான கலாச்சாரத் தொடர்பு  பிரமிக்க வைக்கிறது.

பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று நமது பண்டைய வணக்க முறைகளைப் பழிக்கும் ‘முற்போக்காளர்கள்’, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் இயற்றிய ஒரு பெண்ணைத் தெய்வமாகவே நினைத்து வழிபட்டுள்ள உயர்ந்த பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

வைணவம் காட்டும் உறவு நிலைகள்

இராமானுசரது வைணவ சித்தாந்தம் வழி இறைவனுக்கும் ( பரமாத்மாவுக்கும் ) உயிரினங்களுக்கும் (ஜீவான்மாக்களுக்கும்) இடையே உள்ள உறவு நிலை சிறப்பானது. பல மதங்களில் உள்ளது போல் இறைவனைக் காப்பவனாக மட்டுமே விசிட்டாத்வைதம் பார்ப்பதில்லை . இறைவனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று கூறுகிறது. இதனை ‘நவ வித சம்பந்தம்’ என்று சம்ஸ்க்ருதம் கூறுகிறது.

  1. காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )
  2. தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )
  3. ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )
  4. கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )
  5. அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )
  6. உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )
  7. உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )
  8. தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )
  9. அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

இந்த உறவு நிலைகளை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆழ்வார்கள் இராமானுசருக்கு முந்நூறு ஆண்டுகள் முற்பட்டவர்கள். இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என்று ஒரு முறையை நெறிப்படுத்தும் முன்பே அத்தத்துவத்தின் கூறுகளை ஆழ்வார் பாசுரங்களில் காண்கிறோம். இது ஒரு வியப்பே.

காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளா காதலநோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே”

மருத்துவன் வாளால் அறுத்துச் சுடுவது நோயாளனுக்கு நன்மை செய்யத்தான். அதுபோல் இறைவன் நமக்குச் சில சமயங்களில் சோதனைகள் தருவதும் நம்மைத் திருத்திப் பணி கொள்வதற்காக மேற்கொள்ளும் ரட்சகக் காரியமே என்று குலசேகர  ஆழ்வார் கூறுகிறார்.

தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )

நம்மாழ்வார் பாசுரம் பின்வருமாறு :

“என்னப்பன் எனக்காய் இகுளாய்  என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்…”

இந்தப் பாசுரத்தில் இறைவனை தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்.

ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )

இந்த ஆண்டான் அடிமை உறவு நிலை குறித்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்றாலும் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுவது அருமையானது. இறைவனை ‘ஆரா அமுதே’ என்று அழைப்பது தமிழின் அழகையும் உணர்த்துகிறது. ( வைணவர்களில் ‘ஆராவமுதன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது சில காலம் முன்பு வரை பிரபலம். அப்பெயர் மருவிப் பல சமயம், ‘ஆராமுது’ என்றும் ‘ஆமுடு’ என்றும்  அழைக்கப்படுவது வேடிக்கை.)

பாசுரம் இங்கே:

“வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊரா உனக்காட் படும் அடியேன் இன்னம் உழல்வேனோ”

இப்பாசுரத்தில் ‘ஆண்டாய்’ என்பதால் ஆண்டான் தன்மையும் ‘உனக்காட்படும்’ ( உன்னுடைய ஆளுமைக்கு உட்படும் ) என்பதால் அடிமைத்தனத்தையும் ஆழ்வார் காட்டுகிறார்.

கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )

கணவன் மனைவி நிலையில் திருமாலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் விதமாக குலசேகராழ்வார் பாசுரம் :

“கண்டா ரிகழனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்
விண்டோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே”

குலமகள் கணவனைக் கை விடாமல் எந்நிலையிலும் அவனுடன் இருப்பாள் என்னும்போது ஆழ்வார் தன்னை மனைவியாகவும் திருமாலைக் கணவனாகவும் கொண்டு பாடுகிறார்.

அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )

“பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்
தருமனையே நோக்கும்மொண் தாமரையால் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு”

பொய்கையாழ்வார் பாசுரம் கூறுவது : ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே. அறிபவர்கள் நாம்.

உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )

“தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தொடித் தொடுகடலே
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே”

கடல் உடையது. ஆறுகள் கடலின் உடைமை. கடலைச் சேர்ந்து தான் ஆறுகள் சிறப்புப் பெறுகின்றன. அதுபோல் தலைவனாகிய திருமாலைச் சேர்ந்தே நாம் சிறப்படையே இயலும் என்று இறைவனை உடையவன் என்றும் நம்மை அவனது உடைமை என்றும் கூறுகிறார் குலசேகர ஆழ்வார்.

உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )

“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசைபடர்பொருள் முழுவது மாயவை யவைதொரும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்”

என்னும் நம்மாழ்வார் பாசுரத்தில் “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறைவது போல் இறைவன் மறைந்திருந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்”  என்று உயிர் – உடல் உறவை விளக்குகிறார்.

தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )

குலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த உறவை விளக்குகிறது.

“எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே யல்லால்
எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே”

எங்கும் கடலாக உள்ளது. ஆகவே பறவை நான்கு திசைகளிலும் பறக்க முடியவில்லை. திரும்பவும் எப்படி கடலில் உள்ள மரக்கலத்தில் வந்து அப்பறவை சேருமோ அப்படி உன் பாதங்களில் என்னைத் தாங்குபவனாகிய உன்னிடம் நான் சரண் அடைந்து கிடக்கிறேன் என்று ஆழ்வார் இறைவனைத் தாங்குபவனாகவும் தன்னைத் தாங்கப்படுபவராகவும் கூறுகிறார்.

அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

உயிர்களை உண்ணப்படும் பொருளாகவும் இறைவனை உண்பவனாகவும் கொள்வது இந்த உறவு நிலையின் விளக்கம். இந்த உறவு நிலையை  விளக்கும் விதமாக நம்மாழ்வாரும் குலசேகரரும் பலவாறு பாடியுள்ளார்கள்.

நம்மாழ்வாரின் “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்..” என்று தொடங்கும் பாசுரமும் குலசேகரரின் “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் …” என்று தொடங்கும் பாசுரமும் விளக்குகின்றன.

உறவு நிலை சரி. ‘நாராயணா’ என்பதன் பொருள் என்ன ? வைணவர்கள் யார் ? அவர்களுக்கு மிக முக்கியமான ‘மூன்று’ என்ன ? அடுத்த பதிவில் பார்ப்போம்.

வைணவ லட்சணம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற வழக்கு நாம் அறிந்ததே. அதுபோல் ஒரு வைணவனின் அக லட்சணங்கள் அவனது நடத்தையில், புறத்தில் தெரியும் என்று கொண்டால் அவை என்ன என்ன என்று நாம் அறிந்துகொள்ள இராமானுசர் வழி வந்த சில ஆச்சாரியார்களின் வியாக்கியானங்கள் நமக்கு வழி செய்யும். அவர்களின் உரைகளில் பல புதிய அருமையான உவமைகள் அடங்கி இருக்கும். படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்விடத்தில் லட்சணங்கள் என்பது புற அடையாளங்கள் என்பது மட்டும் அல்ல; ஒரு வைணவன் நடந்துகொள்ள வேண்டிய முறை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.

இராமானுசர்  வழி வந்த ஆச்சாரியார்கள் பலர் இராமானுசர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளனர். அவை ‘வியாக்கியானம்’ என்ற பிரிவில் அடங்கும். அவை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் கலந்த ‘மணிப்பிரவாள’ நடையில் அமைந்திருக்கும். இந்த மொழி நடை தற்போது வழக்கொழிந்து விட்டது. இதனை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே. வைணவ குரு பரம்பரை விளக்கமும் இந்த நடையிலேயே அமைந்துள்ளது.

சிலவற்றைப் பார்ப்போம்.

வைணவப் பண்பாடு என்பது என்ன? ஒருவரிடம் வைணவத்துவம் அமைந்துள்ளது என்று எப்படிக் கண்டுகொள்வது என்று நஞ்சீயர் என்ற ஒரு ஆச்சாரியாரிடம் கேட்கப்பட்டது. அவரது பதிலை மணிப்பிரவாள நடையில் அவரது வாக்கிலேயே தருகிறேன்:

“பிறர் அனர்த்தம் கண்டால் ஐயோ என்று இரங்குவான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும், இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு என்று இருந்தான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும்”

தமிழில் : “மற்றவனது துன்பம் கண்டவுடன் மனம் இரங்குபவன் இறைத் தொடர்புள்ள வைணவன்.அவர் நிலை கண்டு இரங்காதவன் வைணவன் அல்லன்”.

இதற்கு ஒரு சமீப கால உதாரணம் ஒன்றும் உண்டு. மகாத்மா காந்திக்குப் பிடித்தமான “வைஷ்ணவ ஜனதோ ..” என்ற பாடல் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் ஆரம்ப வரிகளின் பொருளைக் அமரர் கல்கி அவர்கள் தனது ‘தியாக பூமி’ நூலில் இப்படிக் கூறுகிறார்:

“எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.”

சற்று பின்னே சென்று வைஷ்ணவ குருபரம்பரை நிகழ்வு ஒன்றைக் காண்போம். இராமானுசரது சீடர் குழாமில் ‘பராசர பட்டர்’ என்றொரு அறிஞர் இருந்தார். அவரது சீடர் ஒருவர்,  அனந்தாழ்வான் என்னும் இன்னொரு ஆச்சாரியாரை அணுகி “வைஷ்ணவன் என்பவன் எப்படி இருப்பான்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் பதில் மிகவும் விளக்கமானது; அதே சமயம் எளிதானது.

அனந்தாழ்வான் கூறுகிறார்: “வைஷ்ணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழிபோல் இருப்பான்; உப்பைப்போல் இருப்பான்; உம்மைப்போல் இருப்பான்” என்று ஒரு சூத்திரம் போல் வரையறுக்கிறார்.

ஒரு கொக்கு தனக்குத் தேவையான நீருள்ள இடங்களின் அருகில் வசிக்கும்.அதுபோல் வைணவன் தனக்குத் தோதான பகவத் பாகவத சந்நிதிகளின் அருகில் வசிப்பான். கோவில்கள், மடங்கள் இவற்றின் அருகில் வாசிப்பான். ( ஸ்ரீரங்கம் நினைவில் கொள்ளத் தக்கது).

மேலும் கொக்கு தனக்கு விருப்பமான ஆறுகளைத் தேடிப்போக அதற்குத் தேவையாக இரண்டு சிறகுகள் பெற்றிருக்கும். அதுபோல் வைணவன் தனக்குத் தேவையான வீடுபேறு அடைய ஞானம், அனுஷ்டானம் என்ற இரண்டு சிறகுகளைப் பெற்றிருப்பான். ஞானம் மட்டும் இருந்து அது  காட்டும் வழியில் செல்லும் அனுஷ்டானம் இல்லாவிட்டால் பயன் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘நிற்க அதற்குத் தக’ என்று கூறுவது இவ்விடம் நோக்கத்தக்கது.

கொக்கு வெண்மை ந
றம் உடையது. அதுபோல் வைணவன் உள்ளும் புறமும் சுத்த சுவாபவம் கொண்டவனாக இருக்க வேண்டும். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற வள்ளலாரின் வாக்கு நோக்கத் தக்கது.

கொக்கு தன் வாய்க்கு அடங்காததை விடுத்து , கொள்ளும் அளவே உண்ணும். அதுபோல் வைணவன் பல விஷயங்கள் கற்றாலும், அறிந்துகொண்டாலும் தனக்குத் தேவையானதை மட்டுமே கொள்வான். தனக்குத் தேவையான மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் தன்மை கொண்டவன் வைணவன் என்றும் கொள்ளலாம். 

அதுபோல் வைணவன் கோழி போல் இருப்பான் என்பதும் நோக்கத்தக்கது. கோழியானது குப்பையைச் சீய்த்துச் சீயத்துத் தனக்கு இரை இல்லாததைத் தள்ளிவிட்டு தனக்குச் சாரமான தானியங்களை மட்டுமே கொள்ளும். அது போல் வைணவன் பிறரிடம் உள்ள குற்றங்களைத் தள்ளிவிட்டு நல்லதையே கொள்வான்.

இதுவரை சரி. வைணவன் உப்பைப்போல் இருப்பான் என்பது எவ்வகையில் பொருந்தும்? அனந்தாழ்வான் கூறுகிறார்: உப்பு தான் உருமாறி அழிந்து உணவுகளுக்கு சுவை அளிக்கும்.வைணவன் தன்னை மறைத்துப் பிறருக்குப் பயன்படுபவனாக இருப்பான். அகம் அழிந்திருத்தல் என்று இதனைக் கொள்ளலாம்.

இவ்வாறு விளக்கம் பெற்ற அந்த வைணவரை அனந்தாழ்வான் உணவு உண்ணும் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்குள்ள பந்தியில் முன்னே அமரச் செய்தார். வைணவர் தயங்கினார். பின்னர் பந்தியின் நடுவில் வேறொருவரை எழுப்பி அமரச்செய்தார். மறுபடியும் அந்த வைணவ சீடர் தயங்கினார். பின்னர் அவரைப் பந்தியின் இறுதியில் அமரச் சொன்னார். வைணவரும் மனமுவந்து அமர்ந்தார்.

அப்போது அனந்தாழ்வான் ” ‘வைணவன் உம்மைப் போல் இருப்பான்’ என்று நாம் சொன்னது இதுதான். அடியார்க்கு அடியாராகவும், அகங்காரம் அற்ற நிலையிலும் நீர் உள்ளீர். எனவே நீரே ஒரு வைணவருக்கு உதாரணம். எனவே வைணவன் உம்மைப்போல் இருப்பான் என்பது சரியே” என்று உவப்புடன் அருளியுள்ளார்.

இந்த ‘அடியார்க்கும் அடியார்’, ‘தொண்டர் அடிப்பொடி’, ‘ அடியேன்’ , ‘ தாசன்’ முதலான வார்த்தைகள் வைஷ்ணவ பரிபாஷையில் அதிக அளவில் அமைந்துள்ளன. தற்கால திருமண ஆழைப்பிதழ்களில் கூட ‘அடியேன் தாசன்’, ‘ அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விக்யாபனம்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருப்பதைக் காணலாம்.

%d bloggers like this: