வைஷ்ணவ லக்ஷணம் பற்றித் தெரிந்து கொள்ள பகவத் ராமானுஜரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் :
உடையவர் சஞ்சாரமாக எழுந்தருளியிருந்த போது, அவரை ஊருக்கு எழுந்தருளப்பண்ண பல தனிகர்கள் முன்வந்திருந்தனர். உடையவர் மற்றும் அடியார் குழாத்துக்கான ஏற்பாடுகள் குறித்துப் பார்த்து வர ஒரு ஶ்ரீவைஷ்ணவரை உடையவர் அனுப்பினார். சென்றவர் திரும்பி வந்து, ‘ஒரு ஶ்ரீவைஷ்ணவன் வந்துள்ளான் என்று தெரிந்துகொள்ளாத அளவிற்குத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆடம்பரமான பந்தல்களும், அலங்காரங்களும் என்று எங்கும் விழாக்கோலமாக உள்ளது,’ எனறு தெரிவித்தார்.
மறு நாள் உடையவர் தனது குழாத்துடன் அவ்வூருக்கு எழுந்தருள, ஊருக்குச் செல்ஷலும் பாதை இரண்டாகப் பிரியும் இடத்தில், அந்த ஊரை விட்டு விலகிச் செல்லும் பாதையில் சென்று அந்த ஊரில் உள்ள ஒரு குடிசையை அடைந்தார். அது பரம பக்தையான பருத்திக்கொல்லையம்மாள் என்னும் ஶ்ரீவைஷ்ணவருடையது.
ஆனால் கதவு திறக்கப் படவில்லை. உள்ளே அந்தப் பெண்மணி உடுத்திக்கொள்ள சரியான வஸ்த்ரம் இல்லாமையால் கதவைத் திறக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் விதமாகத் தானும் அந்தக் கதவை உள்ளிருந்து இருமுறை தட்டினாள்.
நிலைமையை உணர்ந்து கொண்ட உடையவர், தனது தலைல் இருந்த ஒரு காவி காஷாய வஸ்திரத்தை அவிழ்த்து வீட்டின் உள் எறிய, அதை உடுத்தியவண்ணம் அந்தப் பெண் உடையவர் குழாத்தை வரவேற்று இருப்பதைக் கொண்டு உபசரித்தாள்.
உடையவர் இருப்பிடத்தை அறிந்துகொண்ட தனிகர், அவசரமாக வந்து தனது விழாக்கோல வரவேற்பை ஏற்க வேண்ட, உடையவர் மறுத்து, ‘தனியாக வந்த சாதாரண ஶ்ரீவைஷ்ணவனை உணராத உங்கள் இடம் நமக்கு உகந்ததன்று’ என்று சாதித்தருளினார்.

ஶ்ரீவைஷ்ணவனது பார்வையில் பகட்டும், படாடோபமும் இருத்தலாகாது என்பதைத் தனது வாழ்வின் மூலம் உடையவர் சாதித்தருளினார் என்று குருபரம்பரையில் சொல்வதுண்டு.
பாரதத்தில் கண்ணன் விதுரனின் குடிசையை நாடியதை ஒத்திருப்பதாக உடையவரின் செயல் அமைந்துள்ளது.
கழுத்து முழுக்க ஜொலிக்கும் தங்கமும், கைகளில் பிரேஸ்லெட்டும், மோதிரமுமாகத் தோன்றும் ஆண்களைக் கண்டால் ஏனோ எனக்கு இந்த நிகழ்வு நினைவிற்கு வருகிறது.
Leave a comment