உத்தமதானபுரம் தெரிகிறது தானே? உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்.
அந்த ஊருடன் சேர்த்து நான்கு அக்ரஹாரங்களைப் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் 17ம் நூற்றாண்டில் உருவாக்கினார். அவை கோபுராஜபுரம், அன்னிக்குடி மற்றும் திருமால்புரம்.
உத்தமதானபுரத்தில் ஸ்மார்த்த பிராமணர்கள் மற்றும் மூப்பனார் சமூகத்தவரையும், கோபுராஜபுரத்தில் ராயர் மற்றும் வன்னியர் சமூகத்தவரையும், அன்னிக்குடியில் தெலுங்கர் மற்றும் படையாச்சி சமூகத்தவரையும், திருமால்புரத்தில் வைஷ்ணவர்கள் மற்றும் அம்பலக்காரர்களையும் குடியமர்த்தினார் மன்னர். அக்கிரஹாரத்தின் மேற்குத் திக்கில் பெருமாள் கோவிலும், கிழக்குத் திக்கில் சிவன் கோவிலும் ஏற்படுத்தி, ஸ்மார்த்த, வைஷ்ணவ அந்தணர்கள் குடியிருந்து, வேதம், பிரபந்தம் என்று தழைக்க வழி செய்த மன்னர், நான்கு ஊர்களிலும் ஒரு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் கட்டுவித்து வைதீக நெறி தழைக்க வழி செய்தார்.
அத்துடன் நிற்காமல், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அக்ஷயதிருதி அன்று இந்த நான்கு கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் கோபுராஜபுரத்தில் உள்ள ஐயனார் குளத்திற்கு எழுந்தருளி உற்சவம் கண்டருள வேண்டும் என்று பணித்திருந்தார் அன்னாளைய மன்னர்.
கோட்டச்சேரி என்னும் கிராமத்தையும் நிர்மாணித்து, அங்கு வேத பண்டிதர்களைக் குடியமர்த்திய மன்னர், கோட்டச்சேரி வேத பண்டிதர்கள் அனைவரும் நான்கு ஊர்களிலும் உள்ள கோவில்களில் வேத பாராயணம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்கு முதல் தீர்த்தம் தரப்பட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்துவைத்திருந்தார்.
தற்போது ‘எல்லாரும் இன்னாட்டு மன்னர்’ என்னும் உயரிய கொள்கையால் கோவில்கள் மற்றும் அக்ரஹாரங்கள் அழிந்து, கோட்டச்சேரியில் வேத பிராமணர்கள் இல்லாமல் ஆகி, நான்கு அக்ரஹாரங்களிலும் மக்கள் ஊரை விட்டு வெளியேறி, கோவில் பாழானது.
திருமால்புரம் என்னும் ஊர் காலப்போக்கில் மால்புரம் என்று மாறி, தற்போது மாளாபுரம் என்று வழங்கி வருகிறது. பாபநாசத்திற்கு அருகில் உள்ளது இந்தச் சிற்றூர். மாளாபுரம் கோவில் பரசுராமரின் தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது. இதனைக் குறிக்கும் தனிப்பாடல் பாடல் ஒன்றும் உள்ளது:
அலைகடற் பிறந்த நங்கை
அணைகிலாப் பிறப்பில் மன்னர்
தலைமுறை இருபத்தொன்றும்
தகர்த்தற்கிரங்கி மாயோன்
கொலை பழி தீர்க்க எண்ணிக்
கோமள வல்லியோடும்
மலைநிகர் சான்றொர்ப் பேணி
மாளாபுரத்துள்ளானே
மாளாபுரம் அக்ரஹாரம் காலியாக, நிதி நிலைமை பாதாளத்தில் சரிய, கைங்கர்யம் செய்வதற்கும் ஆளின்றி, கோவில் செடிகள், புதர்கள் மண்டிய காடானது. இந்து அற நிலையத் துறையின் ‘ஒரு கால பூஜை’ திட்டத்தின் கீழ் தற்போது பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் நடந்து வருகின்றன.
பெருமாள் ஒரு பக்தையின் கனவில் தோன்றி, தன் கோவிலைக் கட்டுமாறு ஆணையிட, பல ஆண்டுகளாகச் சிதிலமாகவே இருந்த லக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோவில் தற்போது புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகிறது. உடையவருக்கும், ஆண்டாளுக்கும் தனியாக சன்னிதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கோவில் புனருத்தாரணத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
பக்தர்கள் தங்களால் இயன்ற அளவிற்குப் பொருளுதவி செய்யலாம்.



Malapuram Iraipani Mandram
2/85 Malapuram Agraharam,
Gopurajapuram, Papanasam Taluk,
Thanjavur Dist.
Account No. 500101012545963
City Union Bank, Kumbakonam Main Branch,
IFSC-CIUB0000004
SWIFT CODE: CIUBIN5M

Leave a comment