இலக்கிய வட்டக் கூட்டத்தில் இன்று பேரா.முருகரத்னம் ‘வள்ளுவரை அறிவோம்’ என்ற தலைப்பில் பேசினார். கூட்டம் வழக்கம் போல் இல்லாமல் பெரும் கலந்துரையாடலாக அமைந்தது. வள்ளுவர் சமய சார்பற்றவர் என்பதை நிறுவப் பலர் முயன்றனர். நான் கீழ்காணும் சான்றுகளைக் கூறி அவர் சைவ, வைணவ, வைதீக சமயத்தவர் என்று வாதிட்டேன்.
1. ‘இந்திரனே சாலும் கரி’
2. அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’
3. மஹாலக்ஷ்மி பற்றிய குறிப்பு
4. ஊழ் ( விதி ) பற்றிய குறிப்பு ( ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்..)
5. ஏழு பிறப்புகள் – ‘எழுமைக்கும் ஏமாப்புடைத்து’.)
6. தாமரைக் கண்ணன் உலகு..’
7. ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்..’
8. ‘ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்..’ – பசு, அந்தணர் பற்றிய குறிப்பு
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்..’ எட்டு குணங்களை உடைய சைவ சித்தாந்தக் கடவுள்.
ஆனால் வள்ளுவரை எம்மதமும் சாராதவர் என்று காட்ட வேண்டிய கட்டாயம் இருந்ததாகவே இன்றைய விவாதங்கள் எனக்குக் காட்டின.
நம்மாழ்வாரை வைதீகர்கள் ஒதுக்கி வைத்தனர் என்றும், அவரை வைத்துத் தான் தென்கலை, வடகலை பேதங்கள் ஏற்பட்டன என்றும் பேராசிரியர் கூறினார். இது குறித்து Friedhelm Hardy என்னும் ஆங்கில அறிஞர் எழுதிய Nammazhwar – The untouchable saint என்னும் நூலில் இப்படிக் கூறியுள்ளார் என்றும் பேசினார். அதைத் தொடர்ந்து ‘நம்மாழ்வாரும் வள்ளுவரும்’ என்று ஒரு நூல் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
என் கேள்விகள் :
நம்மாழ்வாரை யார் ஒதுக்கி வைத்தார்கள் ? திருமால், மஹாலக்ஷ்மி அதன் பின்னர் சடகோபன் என்கிற நம்மாழ்வார் என்றே வைணவ சம்பிரதாயம் வைத்துள்ளது.
‘என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே அவர்குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் ந்ம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமாள் திருவடிகள் அடைகின்றேனே’ என்று வழிபடு முறையை ‘அதிகாரசங்கிரகம்’ என்னும் நூல் சொல்கிறது.
சடகோபன் என்கிற நம்மாழ்வாருக்குப் பின்னரே லட்சுமி குறிப்பிடப் படுகிறாள்.
அத்துடன், நம்மாழ்வார் வேளாளர். அவரையே தெய்வமாகப் போற்றிய இன்னொரு ஆழ்வார் மதுர கவி ஆழ்வார். இவர் அந்தணர். ஆனாலும் ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று நம்மாழ்வாரைப் பற்றி மதுரகவி சொல்கிறார். ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே இருப்பேன்’ என்று சொல்கிறார்.
அந்தணரான மதுரகவி, வேளாளரான நம்மாழ்வாரை இவ்வாறு போற்றி இருக்கிறார். திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் ( நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.
மார்க்கட நியாயம், மார்ஜார நியாயம் என்று குரங்கு, பூனை நோக்கு என்கிற அடிப்படையில் தான் வடகலை, தென்கலைப் பிரிவுகள் உள்ளனவே ஒழிய, நம்மாழ்வாரை ஏற்றுக்கொள்வதனாலோ, கொள்ளாததனாலோ அல்ல.
நம்மாழ்வார் 7-9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். தென்கலை, வடகலைப் பிரிவுகள் 13-ம் நூற்றாண்டில் துவங்கின. தென்கலைக்குப் பிள்ளைலோகாச்சாரியாரும், வடகலைக்கு வேதாந்த தேசிகரும் தலைமை ஏற்றனர்.
இதுவும் தவிர், தமிழைத் தீட்டு மொழி என்று வைணவர்கள் சொன்னதில்லை. நம்மாழ்வாரின் பாசுரங்கள் வேதத்தின் சாரம் என்று ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படுகிறார்.
11-ம் நூற்றாண்டின் நாத முனிகள் எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களையும் தொகுத்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் இயற்றுகிறார். பிரபந்தங்கள் பாடாத வைணவக் கோவில்கள் உண்டா ?
அத்துடன் ஆழ்வார்களில் அந்தணரல்லாத ஆழ்வார்களே அதிகம். இப்படி இருக்க, நம்மாழ்வாரை மட்டும் ஒதுக்கினார்கள் என்று சொல்வது என்ன நியாயம் ?
உண்மை இப்படி இருக்க, வெள்ளையர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நம்மாழ்வாரை வைதீகர்கள் ஒதுக்கி வைத்ததாகப் பெரியவர்கள் சொல்வது வருத்தம் அளிக்கிறது.
Leave a comment